என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில்
    X
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில்

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் இன்று திருவூடல் திருவிழா

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் திருவூடல் திருவிழா இன்று இரவு நடக்கிறது. இன்று அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கலுக்கு அடுத்த நாள் திருவூடல் திருவிழா கொண்டாடப்படுகிறது.

    கோவில் தல வரலாறுபடி, பிருங்கி முனிவர் அண்ணாமலையாரை மட்டுமே வணங்கி வந்துள்ளார். ஒரு சமயத்தில் அண்ணாமலையாரும், அம்மனும் ஒன்றாக இருந்தபோது வண்டு உருவில் அண்ணாமலையாரை மட்டும் சுற்றி வந்து வணங்கி இருக்கிறார்.

    அதனால் அண்ணாமலையாருக்கும் அம்மனுக்கும் இடையே ஊடல் ஏற்பட்டு கூடல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் மனித வாழ்வில் கணவன்- மனைவிக்கு இடையே ஊடல் ஏற்பட்டு, பிறகு கூடல் ஏற்படுவதும் வாழ்வின் ஒரு நிலை என்பதை பக்தர்களுக்கு விளக்குவதும் திருவூடலாகும். திருவூடல் திருவிழா இன்று இரவு நடக்கிறது.

    விழாவை முன்னிட்டு அதிகாலையிலேயே அருணாசலேஸ்வரர் கோவில் நடை திறக்கப்பட்டு சாமி, அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனை செய்யப்பட்டது.

    அதைத்தொடர்ந்து மாட்டுப்பொங்கலை முன்னிட்டு நந்திகளுக்கு வடை, அதிரசம், முருக்கு, காய்கறிகளால் செய்யப்பட்ட மாலைகளைக் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. சாமி, அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகிய சாமிகள் திருவூடல் விழாவுக்கு புறப்பட்டனர்.

    அதிகாலையில் நந்திக்கு தரிசனம் கொடுத்து விட்டு திட்டி வாயிலில் சூரிய பகவானுக்கும் காட்சி கொடுத்து மாடவீதியில் எழுந்தருளினர்.

    அதைத்தொடர்ந்து இரவு 7 மணி அளவில் திருவூடல் தெருவில் திருவூடல் திருவிழா நடக்கிறது.

    பக்தர்கள் கொட்டும் பனியை பொருட்படுத்தாமல் கிரிவலம் சென்று வருகின்றனர். இன்று அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.
    Next Story
    ×