search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    மாரியம்மன் கோவில் திருவிழாவில் ஆண்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலம்
    X
    மாரியம்மன் கோவில் திருவிழாவில் ஆண்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலம்

    துவரிமான் சக்தி மாரியம்மன் கோவில் திருவிழா: ஆண்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலம்

    துவரிமான் சக்தி மாரியம்மன் கோவில் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ஆண்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலம் வரும் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமானோர் கலந்துகொண்டு முளைப்பாரி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
    மதுரையை அடுத்த துவரிமான் கிராமத்தில் பிரசித்திபெற்ற சக்தி மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் 77-வது ஆண்டு திருவிழா 10 நாட்கள் நடைபெற்றது. திருவிழாவில் தினசரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் பூஜைகள் நடந்தன. மழை வேண்டி பெண்கள் திருவிளக்கு பூஜை நடத்தினர். அப்போது அம்மனுக்கு சந்தனக்காப்பு அலங்காரம் நடந்தது.

    சிறுவர்-சிறுமிகள் கோலாட்டம் நிகழ்ச்சியும் நடந்தது. தொடர்ந்து வைகை ஆற்றில் இருந்து சக்தி கரகம் எடுத்து வருதல், பால்குடம் மற்றும் அக்னிச்சட்டி எடுத்து வந்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ஆண்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலம் வரும் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமானோர் கலந்துகொண்டு முளைப்பாரி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    அதன்பிறகு பூக்குழி இறங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதையடுத்து பக்தர்கள் கோவில் முன்பாக பொங்கல் வைத்து மாவிளக்கு எடுத்து அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்தனர். மேலும் குழந்தைகள் கரும்புள்ளி, செம்புள்ளி குத்தி கோவிலை வலம் வந்தனர். தினசரி கிராமிய மற்றும் கலை நிகழ்ச்சிகளும், அன்னதான நிகழ்ச்சியும் திருவிழாவையொட்டி நடைபெற்றது.
    Next Story
    ×