search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    தாயுமானசுவாமி கோவிலில் செட்டிப்பெண்ணுக்கு, சுவாமி மருத்துவம் பார்த்த ஐதீக நிகழ்ச்சி
    X

    தாயுமானசுவாமி கோவிலில் செட்டிப்பெண்ணுக்கு, சுவாமி மருத்துவம் பார்த்த ஐதீக நிகழ்ச்சி

    திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோவிலில் செட்டிப்பெண் ரத்தினாவதிக்கு, சுவாமி மருத்துவம் பார்த்த ஐதீக நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    தென்கயிலாயம் என்று போற்றப்படும் திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோவிலில், இறைவன் சுயம்பு மூர்த்தியாக மேற்கு பார்த்த நிலையில் மிகப்பெரிய சிவலிங்க வடிவில் எழுந்தருளியுள்ளார். ரத்தினாவதி என்ற பெண்ணுக்கு, அவளுடைய தாய் வடிவில் வந்து சிவபெருமான் சுகப்பிரசவம் செய்த தலம், ஆகையால் இங்கு எழுந்தருளியுள்ள இறைவன் தாயுமானசுவாமி என்று அழைக்கப்படுகிறார். இத்தனை சிறப்பு மிகுந்த மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவிலில் சித்திரை தேர் திருவிழா, கடந்த 10-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து சுவாமி, அம்பாள் ஒவ்வொரு நாளும் இரவில் ஒவ்வொரு வாகனத்தில் வீதி உலா வருகின்றனர்.

    திருவிழாவின் 5-ஆம் நாளான நேற்று காலை நூற்றுக்கால் மண்டபத்தில், சிவ பக்தியில் சிறந்த செட்டிப்பெண் ரத்தினாவதிக்கு சிவபெருமான் அவளது தாயாக (தாயுமானவராய்) வந்து மருத்துவம் செய்த ஐதீக நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் குழந்தையை தொட்டிலில் போட்டு தாலாட்டும் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். குறிப்பாக திருமணம் ஆகி குழந்தை பேறு இல்லாத தம்பதிகள் கலந்து கொண்டு, நிகழ்ச்சி முடிந்த உடன் கொடுக்கப்பட்ட மருந்தை பிரசாதமாக பெற்றனர். இந்த மருந்தை முறையாக சாப்பிட்டால், அந்த தம்பதிக்கு ஒரு வருடத்திற்குள் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

    மாலையில் அறுபத்து மூவர் முதலான பக்தகோடிகள் சூழ ரிஷபவாகனத்தில் சுவாமி, அம்பாள் எழுந்தருளி ரத்தினாவதிக்கு காட்சியளித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து இரவில் சுவாமியும், அம்பாளும் ரிஷப வாகனத்தில் வீதி உலா வருதல் நிகழ்ச்சி நடை பெற்றது.

    திருவிழாவின் 6-ம் நாள் நிகழ்ச்சியாக இன்று(திங்கட்கிழமை) மதியம் 12 மணிக்கு மேல் 1.30 மணிக்குள் சுவாமி அம்பாளுக்கு (சிம்ம வாகனத்தில்) நூற்றுக்கால் மண்டபத்தில் திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. தொடர்ந்து இரவில் சுவாமி யானை வாகனத்திலும், அம்பாள் பல்லக்கிலும் புறப்பாடு செய்யப்படுகிறது. வருகிற 18-ந்தேதி காலை 4.55 மணிக்கு மேல் 5.53 மணிக்குள் திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை மண்டல இணை ஆணையர் சுதர்சன், கோவில் உதவி ஆணையர் விஜயராணி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
    Next Story
    ×