search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    பகவத் கீதை படியுங்கள் - விஷ்ணு சகஸ்ரநாமம் கேளுங்கள்
    X

    பகவத் கீதை படியுங்கள் - விஷ்ணு சகஸ்ரநாமம் கேளுங்கள்

    பகவத் கீதை படியுங்கள். விஷ்ணு சகஸ்ரநாமம் கேளுங்கள். மிக எளிதாக புண்ணியத்தை சேர்த்து முக்தி பாதைக்கு வழிவகுத்து கொள்ளுங்கள்.
    பகவத் கீதை எந்த கால கட்டத்தில் தோன்றியது என்பதில் ஆராய்ச்சியாளர்களிடம் மாறுபட்ட கருத்து இருந்தாலும் அது அவதரித்த தினத்தில் எல்லோரும் ஒருமித்த கருத்துடன் இருக்கிறார்கள். எனவே நாளை 18-ந்தேதி பகவத் கீதைக்கு பிறந்த நாள் கொண்டாடப்படுகிறது. பகவத் கீதை ஒவ்வொருவரின் வீட்டிலும் இருக்க வேண்டிய மிக முக்கியமான நூல் ஆகும். பகவத் கீதை இருந்தால் உலகமே உங்கள் பக்கம் இருக்கும் பலம் வந்துவிடும்.

    இத்தகைய சிறப்புடைய பகவத் கீதை மாபெரும் காவியமான மகாபாரதத்தின் ஒரு பகுதியாக உள்ளது. பகவத் கீதை என்பதற்கு, “கடவுளின் பாடல்கள்” என்று அர்த்தம் ஆகும். பகவத் கீதை பிறந்ததற்கு அடிப்படையாக அமைந்தது எது தெரியுமா? மகாபாரதப் போர். இந்த போர் எப்போது, எப்படி, யார்-யாருக்கு இடையே நடந்தது என்பதைத் தெரிந்து கொண்டால்தான் “பகவத்கீதை” பிறந்த சிறப்பை நாம் உணர்ந்து கொள்ள முடியும்.

    அஸ்தினாபுரம் எனும் மாபெரும் சாம்ராஜ்ஜியத்தை குரு குலத்தினர் ஆட்சி செய்து வந்தனர். அந்த குலத்தில் பிறந்த அண்ணன்-தம்பியான திருதராஷ்டிரனுக்கும் பாண்டு வுக்கும் இடையே ஆட்சியை யார் நடத்துவது என்பதில் பிரச்சினை ஏற்பட்டது.

    பிறவிக் குருடரான திருதராஷ்டிரருக்கு காந்தாரி மூலம் துரியோதனன், துச்சாதனன் என 100 மகன்கள் பிறந்தனர். இவர்கள் கவுரவர்கள் என்று அழைக்கப்பட்டனர்.
    பாண்டுவுக்கு குந்தி மூலம் தர்மன், பீமன், அர்ச்சுனன், நகுலன், சகாதேவன் என 5 மகன்கள் பிறந்தனர். இவர்கள் பஞ்சபாண்டவர்கள் என்றழைக்கப்பட்டனர். இந்த 5 பேருக்கும் பொதுவான ஒரே மனைவியாக திரவுபதி இருந்தார்.

    துரியோதனனுக்கும், தர்மனுக்கும் இடையில் அடுத்து ஆட்சி செய்வது யார் என்ற பிரச்சினை எழுந்தது. அப்போது சகுனி செய்த சூழ்ச்சியால் சூதாட்டத்தில் நாட்டையும், மனைவியையும் இழந்த பஞ்ச பாண்டவர்கள் 12 ஆண்டுகள் வனவாசம் செல்ல வேண்டியதாயிற்று. 12 ஆண்டுகள் கழித்து நாடு திரும்பிய பஞ்ச பாண்டவர்கள் ஆட்சி உரிமையை கேட்டனர். ஆட்சியைக் கொடுக்க துரியோதனன் மறுத்தான். இதையடுத்து இருவரும் போருக்குத் தயாரானார்கள்.

    இருவருக்கும் பொது வானவராக இருந்தவர் கிருஷ்ணர். அதாவது இரு தரப்பினருக்குமே அவர் மாமா உறவில் வருபவர். அந்த உரிமையில் துரியோதனன், தர்மர் இருவரும் அவரிடம் சென்று போரில் தங்களுக்கு உதவுமாறு கேட்டனர்.

    அவர்களிடம் கிருஷ்ணர், “நான் மட்டும் வேண்டுமா? அல்லது லட்சக்கணக்கான வீரர்களைக் கொண்ட எனது படை வேண்டுமா? என்று கேட்டார்.

    துரியோதனன் கொஞ்சமும் யோசிக்கவில்லை. “லட்சக்கணக்கான வீரர்களைக் கொண்ட படைகளை தந்தாலே போதும்” என்றான். பஞ்ச பாண்டவர்களோ, தங்களுக்கு “பரமாத்மாவான கிருஷ்ணர் மட்டும் உதவியாக வந்தால் போதும்” என்றனர்.

    பாண்டவர்களுக்கும், கவுரவர்களுக்கும் மகாபாரத போர் தொடங்கியது. மொத்தம் 18 நாட்கள் போர் நடந்தது. இந்த போரின்போது வில் ஏந்திய அர்ச்சுனன் தனக்கு எதிராக நிற்பவர்களை பார்த்தான். பீஷ்மர், விதுரன், துரோணர், கிருபர் உள்ளிட்ட பங்காளிகள், உறவினர்கள், நண்பர்கள், குருமார்கள் என அனைவருமே தெரிந்தவர்களாக இருந்தனர். அவர்களை எதிர்த்து போர் புரிய அர்ச்சுனனுக்கு மிகவும் தயக்கமாக இருந்தது.

    சொந்த உறவுகளையும் நண்பர்களையும் எதிர்த்து எப்படி வில் எய்வது என்று மிகவும் யோசித்தார். அவரது மனம் சோர்ந்து போனது. போரை விட்டு விலகி விடலாமா? என்று கூட அர்ச்சுனன் மனம் நினைத்தது.

    அப்போது அவருக்கு தேரோட்டியாக இருந்த கிருஷ்ண பரமாத்மா நிறைய உபதேசங்களை செய்தார். “தர்மத்துக் காக போர் செய்யும்போது உறவு முறைகளை பார்க்கக் கூடாது” என்று அறிவுறுத்தினார். அந்த அறிவுறுத்தலில் நிறைய தத்துவங்கள், யோகங்கள், விளக்கங்கள் இடம் பெற்று இருந்தன.

    அந்த உரையாடல் தொகுப்பே பகவத் கீதையாகும்.

    அர்ச்சுனனின் சோர்ந்து போன மனத்தை சுறுசுறுப்பாக்கும் வகையில் கிருஷ்ணரின் உபதேசங்கள் இருந்தன. போர் களத்தில் பிறந்த இந்த உபதேசங்கள் சாதாரண மானவை அல்ல. ஒவ்வொருவரது வாழ்க்கையோடும் பின்னி பிணைந்தவை. எனவேதான் பகவத் கீதையில் கூறப்பட்டுள்ள ஒவ்வொரு உபதேசத்தையும், கோட்பாடுகளையும் வாழ்க்கை வழிகாட்டியாக எடுத்துக்கொண்டு வாழ்க்கையை நெறிப்படுத்த கடைபிடிக்க வேண்டும் என்று சொல்கிறார்கள்.

    யார் ஒருவர் பகவத் கீதை வழி நடக்கிறார்களோ அவர்களது ஆன்மா மேம்படும். சகல துக்கங்களில் இருந்தும் அவர்களால் மிக எளிதாக விலக முடியும். இதுதான் பகவத் கீதைக்கு உள்ள மிகப்பெரிய சிறப்பாகும். உண்மையில் பகவத் கீதையின் உண்மையான கருத்து என்பது, “காமம், குரோதம், சோம்பல், ஆணவம், சந்தேகம், கவலை போன்றவற்றை நீக்கி ஆன்மிகத்தை அடைய வேண்டும்” என்பதே ஆகும்.

    மொத்தம் 18 அத்தியாயங்களை கொண்ட பகவத் கீதையில் 700 ஸ்லோகங்கள் இடம் பெற்றுள்ளன. அவற்றில் ஸ்ரீகிருஷ்ணர் கூறிய வேதாந்த பார்வை, சுயதர்ம பார்வை, தர்ம யோக பார்வை, பக்தி யோக பார்வை, ஞானயோக பார்வை ஆகிய ஐந்தும் மிக முக்கியமானது ஆகும்.

    இதில் வேதாந்த பார்வையில், “ஆத்மா என்பது அழியாதது. அதை யாராலும் அழிக்க முடியாது. நீ அழிக்கப் போவது உடம்பைத்தான்” என்று கூறப்பட்டு உள்ளது. இந்த ஒரே தத்துவத்தின் அடிப்படையில்தான் முழு கீதையும் செயல்படுகிறது.

    கிருஷ்ணரின் போதனைகள் வாழ்நாள் முழுவதற்கும் பொருந்தும் வகையில் உள்ளது. குறிப்பாக கீதாச்சாரம் ஒன்றே போதும், நமது மனதை பக்குவப்படுத்த. இத்தகைய சிறப்புடைய பகவத் கீதை உலகின் பல்வேறு மொழிகளிலும் மொழி பெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது.

    மகாபாரத போர் நடந்த இடம்தான் பகவத் கீதை பிறந்த இடமாக கருதப்படுகிறது. இந்த போருக்கு குருஷேத்திர போர் என்ற பெயரும் உண்டு. மகாபாரதப் போர் நடந்த பெருமைக்குரிய அந்த இடம் அரியானா மாநிலம் குருஷேத்திரா மாவட்டத்தில் உள்ளது.

    இந்த இடம் சண்டிகர் நகரில் இருந்து சுமார் 80 கிலோ மீட்டர் தொலைவிலும், தலைநகர் டெல்லியில் இருந்து சுமார் 100 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது.
    பாண்டவர்களுக்கும், கவுரவர்களுக்கும் முன்னோடியாக திகழ்ந்த பரதகுலத்தில் பிறந்த குரு எனும் அரசன் இந்த தலத்தில் தவம் இருந்து சிறப்பு பெற்றான். இதனால் அந்த இடம் அந்த அரசனின் பெயராலேயே குருஷேத்திரம் என்று அழைக்கப்படுகிறது.

    பகவத் கீதையின் தாயக மாக திகழும் குருஷேத்திரத்தில் ஒவ்வொரு ஆண்டும் “பகவத் கீதை ஜெயந்தி விழா” பிரமாண்டமாக கொண் டாடப்பட்டு வருகிறது.
    இந்த ஆண்டுக்கான விழா நாளை 18-ந்தேதி கோலாகலமாக நடைபெற உள்ளது. இதையட்டி பல்வேறு தலைப்புகளில் கருத்தரங்கங்கள் நடைபெற உள்ளன.
    குருஷேத்திரம் நகரில் பார்க்க வேண்டிய இடங்கள் பல உள்ளன. அதில் முக்கியமானது பிரம்ம சரோவர் புனித குளம் ஆகும். இது இந்தியாவில் பழமை வாய்ந்த மிகப்பெரிய புனித குளமாக கருதப்படுகிறது.

    அந்த புனித குளத்தில் நீராடினால் உடலும் உள்ளமும் சக்தி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது. அந்த புனித குளத்தை உருவாக்கியவர் பிரம்மா ஆவார். மிகப்பெரிய வேள்வி ஒன்றை நடத்திய பிறகு அவர் இந்த குளத்தை உருவாக்கியதாக புராணங்களில் குறிப்பிடப்படப் பட்டுள்ளது.

    ஜோதிசர்:- இது அர்ச்சு னனுக்கு பகவான் ஸ்ரீகிருஷ்ணர் பகவத் கீதை அருளிய இடம். இந்த இடம் குருச்சேத்திரம் மாவட்டத்தில் குருச்சேத்திரம்- பெஹோவா சாலையையட்டி அமைந்துள்ளது. குருச்சேத்திர மாவட்டத்தில் உள்ள புனித தலங்களில் இதுவும் ஒன்றாகும்.

    இந்த இடத்தின் முழு பெயர் ஜோதிசர் தீர்த் என்பதாகும். இந்த இடத்தில்தான் அர்ச்சுனனுக்கு பகவத் கீதையை கிருஷ்ணர் உபதேசித்தார். இந்த இடத்தில்தான் அர்ச்சுனன் உற்சாகம் பெற்றார்.

    அங்குள்ள பெரிய ஆலமரத்தின் அடியில்தான் கீதா உபதேசம் நடந்ததாக சொல்கிறார்கள். அந்த ஆலமரம் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டதாகும். அந்த ஆலமரத்தை புனிதமாக கருதி கம்பிவேலி போட்டு பாதுகாத்து வருகிறார்கள். அந்த மரத்திற்கு கீழ் கிருஷ்ணரின் பாதங்கள் வைக்கப்பட்டுள்ளன. இதன் அருகில் கீதா உபதேச சிலை கண்ணாடி பெட்டிக்குள் வைக்கப்பட்டுள்ளது. அருகில் தீர்த்தமும் இருக்கிறது. கிரகணங்களின்போது இந்த தீர்த்தத்தில் பொதுமக்கள் நீராடி பித்ருதர்பணம் செய்து விட்டு செல்வார்கள்.

    இந்த தீர்த்தக் கரையோரம் அமர்ந்து பகவத் கீதை படிப்பது மிகுந்த பலன்களை தரும் என்பது மக்களிடம் நம்பிக்கையாக உள்ளது. இதே பகுதியில் பீஷ்மர் அம்பு படுக்கையில் இருக்கும் ஆலயம் உள்ளது. பீஷ்மரை சுற்றி பாண்டவர்கள் நிற்பது போல வடிவமைக்கப்பட்டுள்ளது. அங்கு செல்லும் பக்தர்கள் அந்த பகுதியில் விஷ்ணு சகஸ்ரநாமம் படிப்பதை வழக்கத்தில் வைத்துள்ளனர்.

    குருசேத்திர பகுதியில் நாம் பார்க்க வேண்டிய இடங்கள் வருமாறு:-

    * பிரம்ம சரோவர் குளக்கரையில் உலகின் மிகப்பெரிய ரதம் உள்ளது.
    * கிருஷ்ணா அருங்காட்சியகம்:- மகாபாரத காட்சிகள் கொண்ட அருங்காட்சியகம்.
    * பீஷ்ம குண்டம்:- இது பீஷ்மர் வீடுபேறு அடைந்த இடம்.
    * பிரம்ம குண்டம்:- இது அர்ச்சுனன் பீஷ்மருக்கு தண்ணீர் தாகம் தீர்க்க, தன் அம்பினால் பூமியை துளைத்து தண்ணீர் உண்டாக்கிய குளம்.
    * குருஷேத்திர அறிவியல் அருங்காட்சியகம்.

    இந்த தலத்தில் பகவத் கீதைக்கு ஆண்டு தோறும் விழா எடுக்கும் சமயத்தில் நாடு முழுவதும் பகவத் கீதை பிறந்த தின விழாவுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பகவத் கீதை படியுங்கள். விஷ்ணுசகஸ்ரநாமம் கேளுங்கள். மிக எளிதாக புண்ணியத்தை சேர்த்து முக்தி பாதைக்கு வழிவகுத்து கொள்ளுங்கள்.

    பகவத் கீதை புத்தகம் தானம் செய்யுங்கள்

    எப்படி வாழ வேண்டும்? குடும்ப உறவுகளிடம் எப்படி பழக வேண்டும்? எதிரிகளை எப்படி எதிர்கொள்ள வேண்டும்? ஆத்ம ஞானத்தை எப்படி மேம்படுத்திக் கொள்ள வேண்டும்? இறைவன் திருவடியை அடைய என்ன செய்ய வேண்டும் என்பன போன்ற அனைத்து விஷயங்களுக்கும் பகவத் கீதை வழி காட்டுகிறது.

    யார் ஒருவர் பகவத் கீதையின் சாராம்சத்தை உள் வாங்கிக் கொள்கிறாரோ, அவரது மனம் எதற்கும் சலனப்படாது, சஞ்சலம் அடையாது. ஆழ்ந்த அமைதியுடன் இருக்கும். பகவத் கீதை புத்தகத்தை வாங்கி தானமாக வழங்கலாம். பகவத் கீதை புத்தக தானம் மிகுந்த புண்ணியம் தரும்.

    Next Story
    ×