search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    அங்காளம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றதையும், பக்தர்கள் தரிசனம் செய்ததையும் படத்தில் காணலாம்.
    X
    அங்காளம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றதையும், பக்தர்கள் தரிசனம் செய்ததையும் படத்தில் காணலாம்.

    மேல்மலையனூரில் அமாவாசை விழா: அங்காளம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்

    மேல்மலையனூரில் அமாவாசை விழாவையொட்டி அங்காளம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் பிரசித்திபெற்ற அங்காளம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் மாதந்தோறும் அமாவாசை விழா நடைபெறுவது வழக்கம். அதன்படி ஐப்பசி மாதத்திற்கான அமாவாசை விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. இதையொட்டி அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு கருவறையில் உள்ள அம்மனுக்கு பால், தயிர், மஞ்சள், குங்குமம், இளநீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் நடந்தது. பின்னர் தங்க கவச அலங்காரத்தில் அம்மன், பக்தர்களுக்கு காட்சி அளித்தார். உற்சவ அம்மனுக்கு லிங்க பூஜை செய்வது போன்று அலங்காரம் செய்யப்பட்டு உட்பிரகாரத்தில் வைக்கப்பட்டிருந்தது.

    இரவு 11.30 மணிக்கு அங்கிருந்த அம்மன் பம்பை, மேளதாளம் முழங்க வடக்கு வாயில் வழியாக கொண்டு செல்லப்பட்டு ஊஞ்சல் மண்டபத்தில் ஊஞ்சலில் அமர்த்தினர். பின்னர் பூசாரிகள் பக்தி பாடல்கள் பாடினர். முக்கிய பிரமுகர்கள் மட்டும், அம்மனை தாலாட்டினர். முன்னும், பின்னும் அசைந்தாடியபடி அம்மன் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

    அப்போது அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீபம் ஏற்றியும், கற்பூரம் ஏற்றியும் அம்மனை வழிபட்டனர். இரவு 12.15 மணிக்கு அம்மனுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அத்துடன் ஊஞ்சல் உற்சவம் முடிவடைந்தது.

    விழாவையொட்டி சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், வேலூர், திருவண்ணாமலை, கடலூர், சேலம், விழுப்புரம், புதுச்சேரி உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து அரசு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

    விழாவிற்கான ஏற்பாடுகளை அறநிலையத்துறை உதவி ஆணையர்கள் மேல்மலையனூர் பிரகாஷ், விழுப்புரம் ஜோதி, திருவண்ணாமலை மோகனசுந்தரம், அறங்காவலர் குழு தலைவர் கணேசன் பூசாரி, அறங்காவலர்கள் ஏழுமலை, ரமேஷ், செல்வம், சரவணன், மணி, சேகர், கண்காணிப்பாளர் வேலு, ஆய்வாளர் அன்பழகன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர். செஞ்சி துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன் தலைமையில் 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
    Next Story
    ×