search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    அங்காளம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றதையும், பக்தர்கள் சாமி தரிசனம் செய்ததையும் படத்தில் காணலாம்.
    X
    அங்காளம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றதையும், பக்தர்கள் சாமி தரிசனம் செய்ததையும் படத்தில் காணலாம்.

    மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்

    மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம் நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் உள்ள பிரசித்திபெற்ற அங்காளம்மன் கோவிலில் மாதந்தோறும் அமாவாசை அன்று ஊஞ்சல் உற்சவம் நடைபெறுவது வழக்கம். அதன்படி ஆனி மாத அமாவாசையான நேற்று முன்தினம் ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. இதையொட்டி அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு கருவறையில் உள்ள அம்மனுக்கு பால், பன்னீர், சந்தனம், குங்குமம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் அம்மனுக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டு, மகா தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து உற்சவ அம்மனுக்கு வைஷ்ணவி அலங்காரம் செய்யப்பட்டது.

    இரவு 11.40 மணிக்கு உட்பிரகாரத்தில் வைக்கப்பட்டிருந்த உற்சவ அம்மன் பம்பை மேள தாளம் முழங்க வடக்கு வாயில் வழியாக ஊஞ்சல் மண்டபத்துக்கு கொண்டு வரப்பட்டார். தொடர்ந்து அங்கிருந்த ஊஞ்சலில் அம்மன் எழுந்தருளினார்.

    பின்னர் பூசாரிகள் தாலாட்டு பாடல்கள் பாட அம்மனுக்கு ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. அப்போது அம்மன் ஊஞ்சலில் முன்னும், பின்னும் அசைந்தாடியபடி பக்தர்களுக்கு அருள்பாலிக்க மகா தீபாராதனை நடைபெற்றது. அப்போது அங்கு திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பக்தி கோஷங்களை எழுப்பியவாறு சாமி தரிசனம் செய்தனர். இரவு 12.45 மணிக்கு ஊஞ்சல் உற்சவம் நிறைவு பெற்றது.

    இதற்கான ஏற்பாடுகளை அறநிலையத்துறை உதவி ஆணையர்கள் மேல்மலையனூர் பிரகாஷ், விழுப்புரம் ஜோதி, அறங்காவலர்குழு தலைவர் ரமேஷ் பூசாரி, அறங்காவலர்கள் ஏழுமலை, கணேசன், செல்வம், சரவணன், மணி, சேகர், கண்காணிப்பாளர் வேலு, ஆய்வாளர் அன்பழகன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர். செஞ்சி துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன் தலைமையில் 500-க்கும் மேற்பட்ட போலீசார் ப ாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    முன்னதாக பக்தர்களின் வசதிக்காக அரசு போக்கு வரத்துக்கழகம் சார்பில் விழுப்புரம், சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், வேலூர், திருவண்ணாமலை, சேலம், கடலூர் மற்றும் புதுச்சேரியில் இருந்தும் மேல்மலையனூருக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. 
    Next Story
    ×