search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    வயலூர் முருகன் கோவில் தேரோட்டம் நடைபெற்ற போது எடுத்த படம்.
    X
    வயலூர் முருகன் கோவில் தேரோட்டம் நடைபெற்ற போது எடுத்த படம்.

    வயலூர் முருகன் கோவில் தேரோட்டம்

    வயலூர் முருகன் கோவில் தேரோட்டம் நடைபெற்றது. அப்போது மழை பெய்தது. கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
    திருச்சி அருகே உள்ள வயலூர் முருகன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் பிரசித்தி பெற்ற விழாக்களுள் வைகாசி விசாக திருவிழா சிறப்பு வாய்ந்ததாகும். இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 19-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதைத்தொடர்ந்து கோவிலில் தினமும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. அதேபோல பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா நடைபெற்று வருகிறது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று மாலை நடைபெற்றது. இதையொட்டி காலை 9.30 மணிக்கு மேல் வள்ளி தேவ சேனா சமேத சுப்பிரமணிசாமி ரதாரோகணம் நிகழ்ச்சி நடைபெற்றது. மாலை, அலங்கரிக்கப்பட்ட உற்சவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்ட பின்னர் தேரில் எழுந்தருளினார்.

    அதைத்தொடர்ந்து மாலை 4 மணி அளவில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் வயலூர், அதவத்தூர், அல்லித்துறை, சோமரசம்பேட்டை, எட்டரை, கோப்பு, நவலூர் குட்டப்பட்டு மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

    தேர் முக்கிய வீதிகளின் வழியாக சென்ற போது மழை பெய்தது. ஆனால், கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் நனைந்து கொண்டே தேரை வடம் பிடித்து இழுத்து சென்றனர். பின்னர் தேர் நிலையை அடைந்தது. அதைத்தொடர்ந்து இரவு சுப்பிரமணியசாமி தேர்க்கால் பார்க்க புறப்பட்டு செல்லும் வைபவமும் நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் பக்த பிரமுகர்கள், கிராம மக்கள் செய்திருந்தனர்.

    இன்று(திங்கட்கிழமை) காலை 8 மணிக்கு நடராஜர் தரிசனமும், 11.30 மணிக்கு தீர்த்தவாரியும், பிறகு பால் காவடி, அபிஷேகங்கள் ஆகியவை நடைபெறுகின்றன. இரவு வள்ளிதேவசேனா சமேத முத்துக்குமாரசாமி வெள்ளி கவச அலங்காரத்துடன் வெள்ளி விமானத்தில் காட்சி அளிக்கிறார். நாளை(செவ்வாய்க்கிழமை) மாலை சங்காபிஷேகமும், இரவு 8 மணிக்கு தெப்ப உற்சவமும் நடைபெறுகிறது. 30-ந் தேதி இரவு ஆளும் பல்லக்கு உற்சவம் நடைபெறுகிறது. 
    Next Story
    ×