search icon
என் மலர்tooltip icon

    கோவில்கள்

    சோட்டா நாராயணன் என அழைக்கப்படும் ராமலிங்க சுவாமி திருக்கோவில்
    X

    சோட்டா நாராயணன் என அழைக்கப்படும் ராமலிங்க சுவாமி திருக்கோவில்

    • இந்த கோவில் நெல்லை மாவட்டம் பணக்குடியில் அமைந்துள்ளது.
    • இக்கோவிலுக்கு என்று தலவிருட்சம் கிடையாது.

    வட இந்தியர்கள் சோட்டா நாராயணன் என அலைக்கும் பெருமாள் அமைந்திருக்கும் ராமலிங்க சுவாமி திருக்கோவில் குறித்து இங்கே காண்போம்.

    நெல்லை மாவட்டத்தில் பணக்குடியில் அமைந்துள்ளது ராமலிங்க சுவாமி திருக்கோவில். ராமபிரான் இந்த சிவலிங்கத்தை பூஜித்ததால் இவர் ராமலிங்க சுவாமி என அழைக்கப்படுவதாக கூறுகின்றனர். இங்கு மூலவர் லிங்க வடிவில் காட்சியளித்து அருள்பாலித்து வருகிறார்.

    இக்கோவிலுக்கு என்று தலவிருட்சம் கிடையாது. இக்கோவிலின் கட்டிடக்கலை முற்கால பாண்டியர்களின் காலத்தைச் சேர்ந்தவர் என பக்தர்கள் கூறுகின்றனர். ஆனால் அதற்குரிய கல்வெட்டுகள் ஏதும் இங்கு இல்லை.

    இக்கோவிலின் மூலவர் இங்கு கிழக்கு முகம் பார்த்து அமர்ந்துள்ளார். சிவகாமி அம்பாளும் இங்கு கிழக்கு நோக்கி அமர்ந்திருப்பது சிறப்பாகும். மகா மண்டபத்தில் மூலவரின் எதிரே நந்தி அமைந்துள்ளது. இதே மண்டபத்தில் நடராஜர் மற்றும் சிவகாமி அம்பாள் தெற்கு நோக்கி அமர்ந்துள்ளனர்.

    கோவிலின் வெளிப்பிரகாரத்தில் பலிபீடம் மற்றும் கொடிமரம் அமைந்துள்ளது. இக்கோவிலின் உட்பிரகாரத்தின் முகப்பில் இடது புறம் விநாயகரும், வலது புறம் சுப்பிரமணியர் வள்ளி தெய்வானையுடன் காட்சி தருகிறார்கள்.

    இக்கோவிலில் உள்ள மணிமண்டப தூண்களில் பாண்டிய அரசனின் அரசியல் செல்வங்கள் அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது. உள் பிரகாரத்தின் தென்பாக்கத்தில் சுரதேவர், சரஸ்வதி சப்த மாதர்கள் விநாயகர் கன்னி விநாயகர் தட்சணாமூர்த்தி ஆகியோரின் திரு உருவங்கள் அமைந்துள்ளன.

    மேற்கு பாகத்தில் காசி விஸ்வநாதர், விசாலாட்சி மற்றும் மீனாட்சி சுந்தரேஸ்வரர், சாஸ்தா திருவுருவங்கள் அமைந்துள்ளன. காலபைரவர் தெற்கு நோக்கி தனி சன்னதியில் காட்சியளிக்கிறார். இக்கோவில் தீர்த்தம் தெப்பக்குளம் ஆகும். இந்தக் குளம் கோவிலின் முன்புறம் அமைந்துள்ளது.

    கோவிலுக்கு ராஜகோபுரம் கிடையாது. ஆனால் ஆனால் சுவாமி மற்றும் அம்பாளுக்கு தனித்தனி விமானங்கள் உள்ளன. இக்கோவிலின் வெளிப்பிரகாரத்தின் தென் பகுதியில் நம்பி சிங்கப்பெருமாள் என்ற வைணவ தளம் உள்ளது. வட இந்தியர்கள் அதிகமாக வரும் இந்த கோவிலில் இங்குள்ள பெருமாள் சிறிய உருவில் காட்சியளிப்பதால் வட இந்தியர்கள் சோட்டா நாராயணன் என்று அழைக்கிறார்கள்.

    இக்கோவிலில் காலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு 5.30 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி நடக்கிறது. 10 மணிக்கு உச்சிகால பூஜையும், 12 மணிக்கு நடை சாத்தப்படுகிறது. பின்பு மாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு ஆறு மணிக்கு சாய்ரக்ச பூஜையும் 8.30 மணிக்கு அர்த்த ஜாம பூஜையும் நடத்தப்பட்டு நடை அடைக்கப்படுகிறது.

    இக்கோவிலில் பங்குனி மாத தேரோட்ட திருவிழாவும், தெப்பத் திருவிழாவும் வெகு விமர்சையாக நடைபெறும். இக்கோவிலின் வரலாற்றுச் சிறப்பும் சைவ சமயத்தின் மேன்மையும், மக்களின் ஒற்றுமையும் ஒருங்கிணைந்து சிறப்பாக காணப்படுகிறது.

    Next Story
    ×