search icon
என் மலர்tooltip icon

    கோவில்கள்

    வேண்டுவோருக்கு வேண்டுவன அருளும் கரியகாளியம்மன்
    X

    வேண்டுவோருக்கு வேண்டுவன அருளும் கரியகாளியம்மன்

    • கோவிலின் முன் பகுதியில் கருட கம்பம் அமைந்துள்ளது
    • இந்த கோவில் சுமார் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்தது.

    திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி தாலுகா வெள்ளிரவெளியில் புகழ்பெற்ற கரியகாளியம்மன் கோவில் உள்ளது. சுமார் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோவிலில் கரியகாளியம்மன் பரிவார மூர்த்திகளுடன் வடதிசை நோக்கி அமர்ந்து பக்தர்களுக்கு அருளை வாரி வழங்கி வருகிறார். இந்த கோவிலானது வெள்ளிரவெளி, மயிலம்பாளையம், தேவனம்பாளையம், புளியங்காடு, பாப்பாவலசு, ரங்கநாயக்கனூர், வடுகபாளையம் ஆகிய 7 ஊர்களுக்கு பாத்தியப்பட்டது.

    கோவிலின் முன் பகுதியில் கருட கம்பம் அமைந்துள்ளது. கோவிலின் இடது புறத்தில் வடக்கு முகமாக கருப்பண்ணசாமி சன்னதி அமைந்துள்ளது. கோவில் உட்பிரகாரத்தில் கொடிக்கம்பமும், சிம்ம வாகனத்துடன் பலி பீடமும், வடமேற்கே 3 பெரிய குதிரை மற்றும் காளை சிலைகள் அமைந்துள்ளன. தென்மேற்கு மூலையில் கிழக்கு முகமாக விநாயகர் சன்னதியும், அர்த்தமண்டபத்தில் விநாயகரும், கருவறையில் கரியகாளியம்மனும் எழுந்தருளியுள்ளனர். கோவில் தலவிருட்சமாக வில்வ மரம் உள்ளது.

    இங்கு அம்மனிடம் வந்து மனமுருக வேண்டினால் வேண்டுவன நிறைவேறும் என்பது அனைத்து ஊர் மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது. இதேபோல் திருமண தடை உள்ளவர்கள் அம்மனை வணங்கினால் அவர்களுக்கு நிச்சயம் திருமணம் நடைபெறும் என்பதும் கண்கண்ட உண்மை என பக்தர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் நல்ல காரியங்கள் தொடங்கும் முன் கோவிலில் பூ போட்டு அம்மன் உத்தரவு கேட்பதும், இந்த கோவிலின் தனிச்சிறப்பாக உள்ளது.

    7 ஊர் திருவிழா

    இந்த கோவிலின் தேர் 200 வருடங்களுக்கு முன்பு பழுதடைந்து பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் சுமார் 12 வருடங்களுக்கு முன்பு ஸ்கை லார்க் நாவுக்கரசு குடும்பத்தினர், ஆண்டவர் ராமசாமி குடும்பத்தினர், கே.பழனிச்சாமி குடும்பத்தினர், சென்னியப்பா டெக்ஸ் சென்னியப்பன், கோவிந்தராஜ் குடும்பத்தினர், திருமால் டெக்ஸ் முருகேசன் குடும்பத்தினர், சந்த்ரு பிராசஸ் சதாசிவம் குடும்பத்தினர் இணைந்து ஏற்படுத்திய கரியகாளியம்மன் சேவா டிரஸ்ட் சார்பில் கோவிலுக்கு சுமார் 20 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய தேர் வழங்கப்பட்டு, கோவில் கோபுரம் அமைப்பதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டது.

    இவர்களுடன் 7 ஊர் பொதுமக்களும் தங்கள் பங்களிப்பை செலுத்தினர். இதை தொடர்ந்து தேர் கமிட்டி அமைக்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் தேர் மற்றும் குண்டம் திருவிழாவை மாங்குட்டை ஈஸ்வரன், கோவில் தர்மகர்த்தா மோகன்குமார் தலைமையிலும், வெள்ளிரவெளி நாட்டாமைக்காரர் பழனியப்ப முதலியார், புள்ளிக்காரர் ஆறுமுகம், தேர் கமிட்டியுடன் சேர்ந்து 7 ஊர் மக்கள் கொண்டாடி வருகின்றனர்.

    மாவிளக்கு ஊர்வலம்

    தற்போது 12-ம் ஆண்டு குண்டம், தேர்த்திருவிழா கடந்த 7-ந்தேதி தொடங்கியது. கொடியேற்றம் நேற்றுமுன்தினம் நடந்தது. நேற்று காலை அந்த பகுதியில் உள்ள மாரியம்மன் கோவிலில் இருந்து வெள்ளிரவெளி, மயிலம்பாளையம், தேவனம்பாளையம், புளியங்காடு, பாப்பாவலசு, ரங்கநாயக்கனூர், வடுகபாளையம் ஆகிய 7 ஊர்களை சேர்ந்த பெண்கள் கரியகாளியம்மன் கோவிலுக்கு மாவிளக்கு எடுத்து ஊர்வலமாக வந்தனர். அப்போது இளைஞர்களின் பெருஞ்சலங்கை ஆட்டமும் நடந்தது.

    பின்னர் பெண்கள் மாவிளக்குடன் கோவிலை சுற்றி வந்து அம்மனை வழிபட்டனர். முன்னதாக கோவிலில் சிறப்பு யாக பூஜை நடந்தது. அம்மன் சந்தன காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து மாலையில் பொங்கல் வைத்து, அம்மை அழைப்பு நடந்தது. மேலும் கோவிலில் பக்தர்கள் குண்டம் இறங்குவதற்காக கோவிலின் முன் குண்டம் அமைக்கப்பட்டுள்ளது. இரவு இதற்கான சிறப்பு பூஜைகளும் நடந்தது.

    குண்டம், தேரோட்டம்

    விழாவின் முக்கிய நிகழ்வான குண்டம் இறங்குதல், தேரோட்டம் ஆகியவை இன்று (வியாழக்கிழமை) நடக்கிறது. காலை 5 மணி முதல் பக்தர்கள் குண்டம் இறங்க உள்ளனர். இதில் சுற்றுவட்டார ஊர்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு குண்டம் இறங்குகிறார்கள். குண்டத்திற்கு பின் காலை 10.30 மணியளவில் தேரோட்டம் நடக்கிறது. தேர் வடம் பிடிக்கப்பட்டு மேற்கு திருப்பி நிறுத்தப்பட்ட பின் மீண்டும் மாலையில் வடம் பிடிக்கப்பட்டு மாரியம்மன் கோவில் அருகில் நிறுத்தப்படுகிறது. இரவு தங்கலுக்கு பின் 2-வது நாளாக நாளை (வெள்ளிக்கிழமை) மாலை 4 மணிக்கு தேரோட்டம் தொடங்கி தேர் நிலையை சென்றடைகிறது.

    வருகிற 24-ந்தேதி காலை 9 மணிக்கு மண்டப கட்டளையும், இரவு 8 மணிக்கு முத்துப்பல்லக்கு நடக்கிறது. 25-ந்தேதி மாலை 6 மணிக்கு மண்டப கட்டளையும், இரவு 8 மணிக்கு மாரியம்மனுக்கு அபிேஷகமும், 26-ந்தேதி மாலை 6 மணிக்கு மஞ்சள் நீராட்டு விழா மற்றும் மறுஅபிேஷக பூஜை, பொன்னூஞ்சல் நடக்கிறது. 28-ந்தேதி காலை 9 மணிக்கு கருப்பண்ணசாமிக்கு அடசல் பூஜையுடன் விழா நிறைவடைகிறது.

    தயார் நிலை

    தேரோட்டத்தையொட்டி தேர் அலங்கரிக்கப்பட்டு தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதேபோல் பக்தர்கள் நெரிசல் இன்றி குண்டம் இறங்குவதற்கு வசதியாக கோவிலின் முன் பகுதியில் மூங்கில் கம்புகள் கொண்டு தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது. குண்டம் மற்றும் தேரோட்டம் ஆகியவை நடப்பதால் அதிக அளவில் மக்கள் கூட்டம் இருக்கும் என்பதால் அதிக அளவிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    Next Story
    ×