search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சீர்மிகு வாழ்வு தரும் சித்தானந்த சுவாமி கோவில்
    X
    சீர்மிகு வாழ்வு தரும் சித்தானந்த சுவாமி கோவில்

    சீர்மிகு வாழ்வு தரும் சித்தானந்த சுவாமி கோவில்- புதுச்சேரி கருவடிக்குப்பம்

    குரு சித்தானந்தர் தவமிருந்து பக்தர்களுக்கு அருள்வழங்கி இறைவனுடன் ஐக்கியமான தலம் புதுச்சேரி கருவடிக் குப்பத்தில் உள்ளது. அதன்பெயர் குரு சித்தானந்த சுவாமிகள் தேவஸ்தானம்.
    சித்தர்கள் தெய்வாம்சம் பொருந்தியவர்கள். அவர்களின் சக்தி மனிதர்களுக்கு கிடைத்தால் நோய்நொடிகள் அகலும், நாம் நினைத்த காரியங்கள் எல்லாம் ஈடேறும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. அந்த வகையில் குரு சித்தானந்தர் தவமிருந்து பக்தர்களுக்கு அருள்வழங்கி இறைவனுடன் ஐக்கியமான தலம் புதுச்சேரி கருவடிக் குப்பத்தில் உள்ளது. அதன்பெயர் குரு சித்தானந்த சுவாமிகள் தேவஸ்தானம். மேற்கிலும், கிழக்கிலும் இரண்டு ராஜகோபுரங்களைக்கொண்டு சிறப்பாக காட்சியளிக்கிறது. அக்கோபுரங்களில் குரு சித்தானந்த சுவாமிகளின் திருவுருவம் சிலை வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. பிரகாரத்தில் மூல முதற்கடவுளான விநாயகர் அருள்பாலிக்கிறார். சற்று திரும்பினால் குரு சித்தானந்த சுவாமிகளின் கருவறை ஒட்டி குரு தட்சணாமூர்த்தி சன்னதி உள்ளது.

    குரு பார்வை கோடி நன்மை என்பதற்கேற்ப சுவாமியை தரிசிக்கும்போது நம் சிந்தை மகிழ்கிறது. வலம் வந்து சுற்றிவரும்போது ஐயப்பன் சன்னதி தென்படுகிறது. அருகே சப்தகன்னிகள் சிறுகல் வடிவில் அருள்பாலிக்கிறார்கள். அவர்களின் பின்னால் அரசு, வேம்பு மரங்கள் அமைந்திருப்பது சிறப்பானது. வலதுபுறத்தில் சித்தானந்த சுவாமிகளின் தியான திருமேனிக்கு மேல் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரியில் எண்ணற்ற சித்தர்கள் ஜீவசமாதியாகி உள்ளனர். அவர்களை தரிசிக்க இயலாதவர்கள் இங்கு ஒருங்கே தரிசித்து அவர்களின் ஆசிகளை பெறுவது பெரும் பாக்கியமாகும். இவர்களை தரிசித்து வெளியே வரும்போது வளாகத்தில்  உள்ள அரசு, வேம்பு மரத்தின் அடியில் நாகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

    குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் தொட்டில் கட்டி வேண்டிக்கொள்கிறார்கள். குழந்தை பிறந்தவுடன் ஆனந்தன் அல்லது ஆனந்தி என்று பெயரிட்டு மகிழ்கிறார்கள். சித்தானந்த சுவாமிகளின் சன்னதி எதிரே நந்தி தேவர் உள்ளார். பிரதோஷ நாட்களில் நந்தி தேவருக்கு அபிஷேக ஆராதனைகள் சிறப்பாக நடத்தப்படுகிறது. நந்தி தேவரின் பின்னால் கொடிமரம் உள்ளது. கோயிலின் உள்ளே தியான மண்டபமும் உள்ளது. அதன் எதிரே திருக்குளம் உள்ளது. இதன் நடுவில் சித்தானந்த சுவாமிகள் சுதை வடிவம் தியான வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் கோயில் தூண்களில் அழகிய சுதை வடிவம் அமைக்கப்பட்டுள்ளது. இக்கோயிலுக்கு சென்று வருவதால் நம் உடலுக்கும், மனதிற்கும் இணையற்ற ஆற்றல் கிடைக்கிறது.

    இக்கோயிலில் மகாகவி பாரதி வந்து பாடல் பாடியுள்ளார். இதனால் பாரதிக்கும் இங்கு ஒரு சிலை அமைக்கப்பட்டுள்ளது. இக்கோயிலில் தினமும் பூஜைகள் நடைபெறுகிறது. ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் 108 சங்காபிஷேகம் நடைபெறுகிறது. மேலும் சிவராத்திரி விழாவும் பிரசித்தி பெற்றது. ஐப்பசி மாதம் அன்னாபிஷேகம், அன்னதானம் நடக்கிறது. மேலும் சித்தானந்தசுவாமிகளின் ஜீவன் முக்தி அடைந்த தினமான வைகாசி 15ம்தேதி குருபூஜை விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு வியாழக்கிழமையும் குரு தட்சணாமூர்த்தி சுவாமிகளுக்கு சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது. சித்தானந்தரை வழிபட்டால் சீர்மிகு வாழ்வு கிடைக்கும் என பக்தர்கள் நம்புகிறார்கள்.புதுச்சேரி சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் கருவடிக்குப்பத்தில் குரு சித்தானந்தசுவாமி கோயில் அமைந்துள்ளது. 24 மணிநேரமும் பேருந்து வசதி உள்ளது.
    Next Story
    ×