search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ஸ்ரீசக்கர பூஜை
    X
    ஸ்ரீசக்கர பூஜை

    ஸ்ரீசக்கரம் பூஜை செய்யும் போது சொல்ல வேண்டிய ஸ்லோகம்

    ஸ்ரீசக்கர வழிபாடு தொடங்கி யந்திரஸ்தாபனம் (பிரதிஷ்டை) செய்து கணபதி, நவகிரகங்கள், ராசி, நட்சத்திரத் தெய்வங்களின் துதிகளோடு மலர், குங்கும அர்ச்சனையும் செய்து வழிபட்டால் நலம் பெருகும்.
    ஸ்ரீசக்கரத்தை முறையாக தாமிரத் தகட்டில் வரைந்து கோணங்கள் தவறாமல் கோடுகளால் பூர்த்தி செய்து அமைத்து விதிமுறைப்படி வழிபடுவது அவசியம். எல்லோருடைய வீடுகளிலும் இந்தச் ஸ்ரீசக்கரம் இருப்பதைக் காணலாம். ஆனால், எல்லோருமே செல்வச் செழிப்புடன் நலமோடு இருக்கிறார்களா? இல்லையே! காரணம் ஸ்ரீசக்கர வழிபாட்டுக்கான விதிமுறைகளைச் சரியாகக் கடைப் பிடிக்காததுதான்.

    ஸ்ரீ சக்கரம் பூஜிக்கப்படும் வீடு சுத்தமாக நல்ல காற்றோட்டம் உடையதாக இருக்க வேண்டும். பூஜை அறையின் மேற்பகுதிகளில் மகாலட்சுமிக்கு உரிய மலர்கள், விருட்சங்களை வரைந்து அழகுபடுத்தி வைக்க வேண்டும். பசு, சிம்மம், சங்கு, சக்கரம், தாமரை, குதிரை, யானை, ஸ்வஸ்திகம் போன்ற குறிகளை அமைக்கலாம். பூஜை அறைக்குள் முன்னோர்கள் படத்தை மாட்டி வைக்காமல் வேறு சம்பிரதாயத்தைக் கடைப் பிடிக்கும் குருதேவர் படங்கள், பீடாதிபதிகள் தரும் பஸ்மம், குங்குமப் பிரசாதம் போன்றவற்றை ஸ்ரீசக்கரம் அருகில் வைக்கக் கூடாது.

    வெள்ளிக்கிழமை, அமாவாசை, பவுர்ணமி, அஷ்டமி, பூர நட்சத்திர நாள், பூஜை செய்பவருடைய ஜென்ம நட்சத்திர நாளில் ஸ்ரீ சக்கரத்துக்காக உபதேசிக்கப்பட்ட மந்திரத்தைத் தவறாமல் பூஜையுடன் ஜெபிக்க வேண்டும். வீட்டில் சிராத்தம் செய்வதாக இருந்தால், அன்று முன்னோர் வழிபாடு செய்த பிறகே ஸ்ரீசக்கர வழிபாடு செய்தல் வேண்டும். பூஜை அறையைச் சுத்தமாக வைத்துக் கொண்டு சுபயோக சுப தினத்தில் ஸ்ரீசக்கர வழிபாடு தொடங்கி யந்திரஸ்தாபனம் (பிரதிஷ்டை) செய்து கணபதி, நவகிரகங்கள், ராசி, நட்சத்திரத் தெய்வங்களின் துதிகளோடு மலர், குங்கும அர்ச்சனையும் செய்து வழிபட்டால் நலம் பெருகும்.

    ஸ்ரீ சக்கர பூஜையின்போது, முதலில் குரு வந்தனம் செய்து விநாயகரை வழிபட வேண்டும். ஆத்மதத்வம் சோதயாமி, வித்யா தத்வம் சோதயாமி, சிவதத்வம் சோதயாமி, சர்வ தத்வம் சோதயாமி என்று நான்கு முறை தீர்த்தம் உட்கொள்ள வேண்டும். அன்றைய திதி-வாரம்-நட்சத்திரம் சொல்லிக்கொண்டு, மம குடும்ப சௌபாக்ய தனவிருத்தியர்த்தம் ஸ்ரீலலிதா மகாதிரிபுர சுந்தரி அனுக்ரஹ ப்ரசாத சித்யர்த்தம் ஸ்ரீசக்ர பூஜாம் கரிஷ்யே என்று மலர் எடுத்து ஸ்ரீசக்கரத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
    அடுத்ததாக,

    தீபதேவி மகாதேவி சுபம் பவதுமே ஸதா
    யாவத் பூஜா ஸமாப்தி:ஸ்யாத் தாவத் ப்ரஜ்வல ஸஸ்திரா:

    என்று அருகில் உள்ள குத்துவிளக்கின் அடிப்பாகத்தில் மலர் சமர்ப்பிக்க வேண்டும். சுத்தமான தாம்பாளத்தில் ஸ்ரீ சக்கரத்தை வைத்து மஞ்சள் பொடி, அரிசி மாவுப்பொடி அபிஷேகப்பொடி, எலுமிச்சம்பழம், பால், தயிர், இளநீர், சந்தனம், பன்னீரால் அபிஷேகம் செய்து பட்டுத்துணியால் சுத்தம் செய்து, சந்தனம் குங்குமம் இட்டு, மலர்ச்சரம் சாற்றி தயாராக வைக்கவும். கைகளைக் கூப்பியபடி தியானம் செய்யவேண்டும்.

    அருணாம் கருணா தரங்கிதாக்ஷீம் த்ருத
    பாசாங்கு சபுஷ்பபாண சாபாம்
    அணிமாதிபி ராவ் ருதாம் மயூகை: அஹமித்யேவ விபாவயே பவானீம்
    மகாபத்ம வனாந்தஸ்தே தாரணா நந்த விக்ரணே
    சர்வபூத ஹிதே மாத: ஏகி யேகி பரமேஸ்வரி
    ஸ்ரீலலிதா மகா த்ரிபுர சுந்தரீம் சௌபாக்ய லக்ஷ்மி ஸ்வரூபிணீம் யந்திர ஸ்தானே
    ஆவாகயாமி ஸ்வாகதம் தர்ஸயாமி.
    சமஸ்த சக்ர சக்ரேசி யுதே தேவி நவாத்மிகே
    ஆராத்திக மிதம் துப்யம் க்ருஹாண மம சித்தயே -

    என்று சொல்லி வணங்கிய பிறகு, கைகளில் மலர் எடுத்துக்கொண்டு, குங்குமமும் சேர்த்து அர்ச்சனை செய்க. (ஸ்ரீ சக்கரத்தை முதலில் பிரதிஷ்டை செய்து வழிபட ஒன்பது ஆவரண பூஜை என்ற விதியில் அதிகமான மந்திரங்கள் இருப்பதால் அவற்றைத் தொகுத்து இலகுவான பூஜையாக இங்கே தந்துள்ளோம்)

    ஓம் ஹ்ருதய தேவ்யை நம;
    ஓம் சிரோ தேவ்யை நம:
    ஓம் சிகா தேவ்யை நம:
    ஓம் கவச தேவ்யை நம:
    ஓம் நேத்ர தேவ்யை நம:
    ஓம் அஸ்திர தேவ்யை நம:
    ஓம் காமேஸ்வர்யை நம:
    ஓம் பகமாலியை நம:
    ஓம் நித்யக்லின்னாயை நம:
    ஓம் பேருண்டாயை நம:
    ஓம் வன்னிவாசின்யை நம:
    ஓம் மகா வஜ்ரேஸ்வர்யை நம:
    ஓம் சிவதூத்யை நம:
    ஓம் த்வரிதாயை நம:
    ஓம் குலசுந்தர்யை நம:
    ஓம் நித்யாயை நம:
    ஓம் நீல பாதகாயை நம:
    ஓம் விஜயாயை நம:
    ஓம் சர்வ மங்களாயை நம:
    ஓம் ஜ்வாலாமாலின்யை நம:
    ஓம் சித்ராயை நம:
    ஓம் லலிதா மகாநித்யாயை நம:
    ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஐம் சௌம் லலிதா
    மகாதிரிபுர சுந்தரீ ஸ்ரீ சக்ர மாதாயை நம:
    நானாவித பத்ரபுஷ்பாணி சமர்ப்பயாமி

    என்று கூறி தேவியை துதித்து, தூபதீபம் காட்டியபின் பழம் வைத்து நிவேதித்து, வாசனை மலர்களில் சந்தனம் தெளித்து கையில் எடுத்துக்கொண்டு சௌந்தர்ய லஹரியை முழுவதும் பாடிய பலனைத் தரும் ஒரு துதியைக் கூறவும். ஸ்ரீசக்ரத்திற்கு உரிய விசேட நவாவர்ண பூஜையை சாரதா நவராத்திரி, வசந்த நவராத்திரி, தை, ஆடி, பவுர்ணமிகளில் கூட்டாகச் செய்யலாம்.
    Next Story
    ×