search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    பெருமாள்
    X
    பெருமாள்

    புன்னகை வாழ்வைத் தரும் புரட்டாசி சனிக்கிழமை விரதம்

    ‘மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன்’ என்று கீதையில் கிருஷ்ணர் கூறியிருந்தாலும், புரட்டாசி மாதத்தில் வரும் ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் அவருக்கு சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன. அதற்கான காரணங்களைப் பார்ப்போம்.
    தமிழ் மொழிக்கென தனியாக மாதங்கள் வகுக்கப்பட்டுள்ளன. அப்படி அமைந்த பன்னிரண்டு மாதங்களில், புரட்டாசிக்கு தனிச் சிறப்பு உண்டு. இது வழிபாட்டுக்குரிய மாதமாகவும், மகாவிஷ்ணுவுக்கு உகந்த மாதமாகவும் கருதப்படுகிறது. ‘மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன்’ என்று கீதையில் கிருஷ்ணர் கூறியிருந்தாலும், புரட்டாசி மாதத்தில் வரும் ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் அவருக்கு சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன. அதற்கான காரணங்களைப் பார்ப்போம்.

    புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாளை வழிபட்டால், எல்லாவிதமான கஷ்டங்களும் நீங்கி வளமான வாழ்வு கிடைக்கும் என்பது ஆன்மிகத்தை போதிக்கும் சான்றோர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக இருக்கிறது. நவக்கிரகங்களில், கல்வி, கேள்விக்கு அதிபதியான புதனை வழிபடவும் இந்த புரட்டாசி மாதம் உகந்ததாக உள்ளது. புதன் கிரகத்தின் அதிதேவதையாக மகாவிஷ்ணுவே அருள்கிறார். எனவேதான் விஷ்ணுவின் அருள்பெற உகந்த மாதமாக புரட்டாசி திகழ்கிறது.

    பெருமாளின் அம்சமாகவே கருதப்படும் புதனுடைய வீடு கன்னி ராசியாகும். இந்த கன்னி ராசியில் சூரியன் அமர்வது புரட்டாசி மாதத்தில்தான். ஆகவே இந்த மாதத்தில் பெருமாளுக்கான சிறப்பு வழிபாடுகள், பிரம்மோற்சவங்கள் நடத்தப்படுகின்றன. புதனுக்கு நட்பு கிரகமாக திகழ்பவர், சனீஸ்வரன். அதனால்தான் சனி பகவானுக்கு உகந்த சனிக்கிழமைகள், புரட்டாசி மாதத்தில் விசேஷமானதாக கருதப்படுகிறது.

    புரட்டாசி மாதத்தை ‘எமனின் கோரைப் பற்களுள் ஒன்று’ என்று அக்னி புராணம் குறிப்பிடுகிறது. எமபயம் நீங்கவும், துன்பங்கள் விலகவும், புரட்டாசி மாதத்தில் காத்தல் கடவுளான விஷ்ணுவை வணங்குவது சிறப்பு. ஒவ்வொரு மாதமும் சனிக்கிழமைகளில் விரதம் கடைப்பிடிப்பது நல்லது. அப்படி விரதம் மேற்கொள்ள முடியாதவர்கள், புரட்டாசி சனிக்கிழமைகளில் அவரவர் குடும்ப வழக்கப்படி மாவிளக்கு ஏற்றி, பெருமாளுக்குப் பூஜை செய்து வழிபட்டு, அன்னதானம் செய்து வந்தால் பெருமாளின் அருள் கிடைக்கும்.

    சனிக்கிழமைகளில் பொதுவாக பெரு மாளுக்கு விரதமிருப்பது வழக்கம்தான். இதில், புரட்டாசி மாத சனிக்கிழமைக்கென ஒரு விசேஷம் இருக்கிறது. புரட்டாசி சனிக்கிழமையில் தான் சனிபகவான் அவதரித்தார். அதன் காரணமாக, அவரால் ஏற்படும் கெடுபலன்கள் குறைய, காக்கும் கடவுளான திருமாலை வணங்குவது வழக்கத்தில் வந்தது. இந்த விரதத்தின் மகிமையை விளக்க கதை ஒன்று கூறப்படுகிறது. அது என்னவென்று பார்ப்போம்..

    பெருமாள் கோவில்களில் புகழ்பெற்றது, திருப்பதி வெங்கடாசலபதி கோவில். திருப்பதியில் பெருமாளின் மிகச் சிறந்த பக்தர் ஒருவர் இருந்தார். பீமன் என்ற பெயருடைய அவர், மண்பாண்டங்களைச் செய்யும் தொழிலைச் செய்து வந்தார். இவர் பெருமாள் மீதான பக்தியால், தன்னுடைய ஆயுள் முழுவதும் சனிக்கிழமை விரதம் இருப்பதாக சங்கல்பம் எடுத்துக்கொண்டவர். ஆனால், இவரது ஏழ்மையின் காரணமாக எந்நேரமும் தொழிலில் மூழ்கிக் கிடப்பார். சனிக்கிழமைகளில் கோவிலுக்கு போகக்கூட நேரம் இருக்காது. போனாலும் எப்படி வழிபடுவது என்று அவருக்குத் தெரியாது. ‘பெருமாளே, நீயே எல்லாம்’ என்ற வார்த்தையை மட்டும் சொல்லிவிட்டு வந்து விடுவார்.

    ஒருமுறை அவருக்கு மனதில் ஒரு எண்ணம் உதித்தது. ‘பெருமாளைப் பார்க்க கோவிலுக்கு போக நேரமில்லை. பெருமாளை இங்கேயே வரவழைத்தால் என்ன?’ என்று யோசித்தார். படபடவென களிமண்ணால் ஒரு சிலையைச் செய்தார். பூ வாங்கும் அளவுக்கு அவரிடம் பணம் கிடையாது. எனவே, தான் வேலை செய்து முடிந்ததும் மீந்து விடும் மண்ணை சிறு சிறு பூக்களாகச் செய்து, அதைக் கோர்த்து சிலையின் கழுத்தில் போட்டு வணங்கி வந்தார்.

    அந்த ஊரைச் சேர்ந்த அரசர் தொண்டைமானும் பெருமாள் பக்தர். அவர் சனிக்கிழமைகளில் ஆலயத்திற்கு வந்து இறைவனுக்கு தங்கப்பூ மாலை ஒன்றை அணிவிப்பார். ஒருமுறை இப்படி அணிந்து விட்டு, மறுவாரம் ஆலயம் வந்தார். பெருமாளின் கழுத்தில் மண் பூ மாலை கிடந்தது. ‘பட்டர்கள்தான் ஏதாவது தவறு செய்கிறார்களோ?’ என குழப்பத்தில் அரண்மனை திரும்பினார்.

    அன்று கனவில் தோன்றிய பெருமாள், நடந்ததைச் சொன்னார். அந்த குயவரின் இல்லத்திற்கு நேரில் சென்ற அரசர், அவருக்கு வேண்டிய அளவு பொருளுதவி செய்தார். அப்பொருளைக் கண்டு மயங்காமல், பெருமாள் பணியே செய்து வந்த குயவர் இறுதி காலத்தில் வைகுண்டத்தை அடைந்தார். பெருமாளின் ஆணைப்படி, அந்த பக்தரைக் கவுரவிக்கும் வகையில் இப்போதும், திருப்பதி ஏழுமலையானுக்கு மண்சட்டியில்தான் நைவேத்தியம் செய்யப்படுகிறது. புரட்டாசி மாதத்தில் வரும் திருவோணம் திதி தினமானது, திருப்பதி மலையப்ப சுவாமி தன்னை வெளிப்படுத்திக் கொண்ட தினம் ஆகும். அந்த சிறப்பு தினம் இந்த ஆண்டு வருகிற 27-9-2020 (ஞாயிற்றுக்கிழமை) அன்று வருகிறது.
    Next Story
    ×