search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    24 ஏகாதசிகளின் விரத பலன்கள்
    X

    24 ஏகாதசிகளின் விரத பலன்கள்

    ஏகாதசிகள் ஒவ்வொன்றின் சிறப்பையும் நாம் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு மாதத்திலும் வரும் இரண்டு ஏகாதசிகளுக்கு விரதம் இருந்தால் கிடைக்கும் பலன்களை அறிந்து கொள்ளலாம்.
    ஏகாதசிகள் ஒவ்வொன்றின் சிறப்பையும் நாம் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு மாதத்திலும் இரண்டு ஏகாதசிகள் வரும். கமலா என்ற ஏகாதசி அதிகமாக வரும். இதையும் சேர்த்து மொத்தம் இருபத்தைந்தாகும்.

    சித்திரை மாதத்தில் கிருஷ்ண பட்சத்தில் வரும் ஏகாதசி ‘பாப மோசனிகா’ என்று பெயர் கொண்டது. இதில் விரதம் இருப்பவர்கள் பாவங்கள் அனைத்தும் நீங்கப் பெறுவார்கள். இதே மாதத்தில் கிருஷ்ண பட்சத்தில் வரும் ஏகாதசிக்குக் ‘காமதா’ என்று பெயராகும். இந்த நாளில் விரதம் மேற்கொண்டால் கணவனின் பாவங்கள் நீங்கப் பெறுவார்கள்.

    வைகாசி மாதத்தில் கிருஷ்ண பட்சத்தில் வரும் ஏகாதசிக்கு ‘வரூதிதீ’ என்று பெயராகும். இந்த நாளில் விரதம் இருந்தால் எந்த விதமான குறையுமின்றி வாழ்நாள் முழுவதும் செல்வச் செழிப்புடன் வாழலாம்.

    கிருஷ்ண பட்சத்தில் வரும் ஏகாதசி ‘மோகினி’ என்று பெயரைக் கொண்டது. இந்த ஏகாதசி விரதம் மோகத்தை அகற்றி முக்தியைத் தருவதாகும்.
    ஆனி மாதத்தில் கிருஷ்ண பட்சத்தில் வரும் ஏகாதசி ‘அபரா’ என்ற பெயரைக் கொண்டது. இந்த நாளில் விரதம் மேற்கொண்டால் பாவங்கள் அனைத்தும் விலகும்.

    சுக்ல பட்சத்தில் வரும் ஏகாதசிக்கு ‘நிர்ஜலா’ என்பது பெயராகும். துன்பங்கள் அனைத்தையும் போக்கிவிடும் ஆற்றல் கொண்டது. ஆடி மாதம் கிருஷ்ண பட்சத்தில் வரும் ஏகாதசி ‘யோகிநீ’ என்ற பெயரைக் கொண்டது. இந்த நாளில் விரதம் மேற்கொண்டால் தொழுநோய் போன்ற கொடிய நோய்கள் குணமாகும்.
    இந்த மாதத்தில் சுக்ல பட்சத்தில் வரும் ஏகாதசிக்கு ‘சயிநீ’ என்பது பெயராகும். அகங்காஇரத்தையும், ஆணவத்தையும் அழித்து ஆனந்தத்தை அளிப்பதாகும்.
    ஆவணி கிருஷ்ண பட்சத்தில் வரும் ஏகாதசிக்கு ‘காமிகா’ என்று பெயர். இந்த நாளில் துளசித்தளத்தால் இறைவனை அர்ச்சனை செய்து வந்தால் மோட்சம் கிடைக்கும்.

    இந்த மாதத்தில் சுக்ல பட்சத்தில் வரும் ஏகாதசிக்கு ‘புத்ரதா’ என்று பெயர். புத்திர பாக்கியத்தை விரும்புபவர்கள் இந்த நாளில் விரதம் மேற்கொள்ள வேண்டும்.
    புரட்டாசி மாதம் கிருஷ்ண பட்சத்தில் வரும் ஏகாதசிக்கு ‘அஜா’ என்று பெயர். உயர்ந்த செல்வ வளத்தையும், சிறப்பையும் தரும். இதே மாதத்தில் சுக்ல பட்சத்தில் வரும் ஏகாதசி ‘பத்மநாபா’ என்ற பெயரைக் கொண்டதாகும். இந்த நாளில் விரதம் மேற்கொண்டால் செல்வச் செழிப்பும், நாட்டு வளமும் பெருகும்.

    ஐப்பசி கிருஷ்ண பட்சத்தில் வரும் ஏகாதசி ‘இந்திரா’ அன்று விரதம் இருந்து வந்தால் அவர்களின் முன்னோர் நற்கதியை அடைவார்கள். இந்த மாதத்தில் சுக்ல பட்சத்தில் வரும் ஏகாதசி ‘பாபாங்குசா’ என்ற பெயரைக் கொண்டது. எல்லா நன்மைகளும்-செல்வ வளம் கல்வி வளம் அனைத்தும் கிடைக்கும். கார்த்திகை மாதத்தில் கிருஷ்ண பட்சத்தில் வரும் ஏகாதசிக்கு ‘ரமா’ என்று பெயராகும். இந்த ஏகாதசியன்று முறைப்படி விரதம் இருப்பவர்கள் நிலையான இன்பங் களை பெறுவார்கள்.

    கார்த்திகை மாதத்தில் சுக்ல பட்சத்தில் வரும் ஏகாதசி ‘ப்ரபோதினி’ என்ற பெயரைக் கொண்டதாகும். இந்த ஏகாதசி விரதம் மேற் கொள்பவர்கள் மேலு லகத்தில் நற்கதியை அடைவார்கள்.

    மார்கழி மாதத்தில் கிருஷ்ண பட்சத்தில் வரும் ஏகாதசிக்கு ‘உற்பத்தி ஏகாதசி’ என்று பெயராகும். இந்த ஏகாதசி விரதம் இருப்பவர்கள் விண் ணுலகில் நற்கதியை அடைவார்கள்.

    இதே மாதத்தில் சுக்ல பட்சத்தில் வரும் ஏகாதசிக்கு ‘வைகுண்ட ஏகாதசி’ என்று பெயர். மோட்சம் அடைவதற்கு இந்த வைகுண்ட ஏகாதசியில் விரதம் இருக்க வேண்டும். இந்த நாளில் தான் எல்லாரும் விரதமிருந்து வருகிறார்கள். வைகுண்ட ஏகாதசி எல்லா வைணவ ஆலயங்களிலும் கொண்டாடப்படுகிறது. சிறப்பாக, ஸ்ரீரங்கம், திருப்பதி மற்றும் சென்னை பார்த்தசாரதி ஆலயங்களில் வெகு நன்றாக கொண்டாடுவதுண்டு. ஏராளமான பக்தர்கள் இறைவனை தரிசனம் செய்ய ஆவலுடன் திரண்டு வருகிறார்கள்.

    தை மாதம் கிருஷ்ண பட்சத்தில் வரும் ஏகாதசியை ‘பைலா’ என்று அழைப்பார்கள். முறைப்படி விரதம் மேற்கொண்டு இறைவனை வழிபடுபவர்கள் தெரிந்தோ தெரியாமலோ செய்த பாவங்கள் அனைத்திலிருந்தும் வடுதலை பெறுவார்கள்.

    இந்த மாதத்தில் சுக்ல பட்சத்தில் வரும் ஏகாதசிக்கு ‘புத்ரதா’ என்பது பெயராகும். இந்த ஏகாதசி விரதம் மேற்கொள்பவர்களுக்கு நல்ல பிள்ளைகள் பிறப்பார்கள். இதுவேதான் ‘பீஷ்ம ஏகாதசி’ என்று கூறப்படுவது. அதாவது பாரத யுத்தத்தில் ‘சரசயனத்தில்’ படுத்திருக்கும் பீஷ்ம பிதாமகர் சுக்பை ஏகாதசி அன்று தன் உயிரை உடலை விட்டு வேர்பட்ட ஏகாதசியாகும்.

    மாசி மாதத்தில் கிருஷ்ண பட்சத்தில் வரும் ஏகாதசி ‘ஷட்திலா’ என்று பெயரைக் கொண்டதாகும். இந்த விரதத்தை பெரும்பாலும் அனேகர் மேற்கொள்வார்கள். வறுமையற்ற நிலையைத் தருவதற்கு இந்த ஷட்திலா என்ற ஏகாதசி உதவுகிறது. எனவே, இதைக் கண்டிப்பாகக் கடைப்பிடிக்க வேண்டும்.

    இதே மாதத்தில் சுக்ல பட்சத்தில் வரும் ஏகாதசியின் பெயர் ‘ஜயா’ என்பதாகும். எடுத்த காரியங்கள் எல்லாம் வெற்றி பெறுவதற்கும் எதிரிகளை முறியடிப்பதற்கும் இந்த ஏகாதசி விரதம் துணை செய்யும்.

    பங்குனி மாதம் கிருஷ்ண பட்சத்தில் வரும் ஏகாதசி ‘விஜயா’ என்ற பெயராகும். துன்பம் எவ்வளவு தான் ஏற்பட்டாலும் அவைகளை முறியடித்து வாழ்வில் வெற்றி பெறுவதற்கு இந்த விரதத்தைக் கொள்ள வேண்டும்.

    சுக்ல பட்சத்தில் வரும் ஏகாதசி ‘ஆமலகீ’ என்ற பெயரைக் கொண்டது. இந்த விரதம் மேற்கொள்பவர்கள் பெரிய பெரிய புண்ணியங்களைப் பெறுவார்கள்.

    Next Story
    ×