search icon
என் மலர்tooltip icon

    இஸ்லாம்

    நன்மைகளின் பெட்டகம் ரமலான் நோன்பு
    X
    நன்மைகளின் பெட்டகம் ரமலான் நோன்பு

    நன்மைகளின் பெட்டகம் ரமலான் நோன்பு

    ‘புனித ரமலான் மாதத்தில் ஈமானையும், நன்மையையும் நாடி நோன்பு நோற்பவரின் முன் பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன’ என்று பெருமானார் நவின்றுள்ளார்கள்.
    இஸ்லாமிய மாதங்களில் மிகவும் சிறப்பு மிக்கது ரமலான் மாதம். இந்த மாதத்தில் தான் மனிதர்களுக்கு நேர்வழிகாட்டக்கூடிய திருக்குர்ஆன் அருளப்பட்டது. அதுமட்டுமின்றி இந்த மாதத்தை யார் அடைகின்றாரோ அவர்கள் நோன்பு நோற்க வேண்டும் என்றும் கட்டளையிடப்பட்டுள்ளது. இது குறித்து திருக்குர்ஆன் 2:185 கூறுவதாவது:-

    “ரமலான் மாதம் எத்தகைய மகத்துவமுடையது என்றால், அதில்தான் மனிதர்களுக்கு நேர்வழிகாட்டும் திருக்குர்ஆன் என்னும் வேதம் இறக்கப்பட்டது. அது நன்மை, தீமையைப் பிரித்தறிவித்து, நேரான வழியைத் தெளிவாக்கக்கூடிய வசனங்களை உடையதாகவும் இருக்கிறது.

    ஆகவே, உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ, அவர் அதில் நோன்பு நோற்கவும். ஆனால், அக்காலத்தில் உங்களில் யாராவது நோயாளியாகவோ அல்லது பிரயாணத்திலோ இருந்தால் ரமலான் அல்லாத மற்ற நாள்களில் விட்டுப்போன நாட்களின் நோன்பைக் கணக்கிட்டு நோன்பு நோற்று விடவும். அல்லாஹ் உங்களுக்கு இலகுவான கட்டளையைக் கொடுக்க விரும்புகிறானே தவிர கஷ்டத்தைக் கொடுக்க விரும்பவில்லை.

    மேலும் தவறிய நாள்களைக் கணக்கிடும்படி கட்டளையிட்டதெல்லாம், உங்கள்மீது கடமையாக உள்ள ஒரு மாத நோன்பின் எண்ணிக்கையை நீங்கள் முழுமை செய்வதற்காகவும்; அவ்வாறே அல்லாஹ் உங்களை நேரான பாதையில் நடத்தியதற்காக அவனை நீங்கள் பெருமைப்படுத்துவதற்காகவும்; நோய், பிரயாணம் போன்ற சந்தர்ப்பங்களில் நோன்பு நோற்காதிருக்க உங்களுக்கு அனுமதி வழங்கியதற்காக நீங்கள் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துவதற்காகவுமே ஆகும்”.

    புனித ரமலான் மாதம் குறித்து நபிகளார் கூறியதாவது:- ‘மக்களே! உங்களிடம் ஒரு மாதம் வந்துள்ளது. அது கண்ணியமிக்க மாதம். பொறுமைக்குரிய மாதம். உங்களில் ஒருவருக்கொருவர் அன்பு பாராட்டும் மாதம். இந்த மாதத்தில் உங்கள் வாழ்வாதாரங்களை இறைவன் உங்களுக்கு உயர்த்தித் தருகிறான்’.

    ரமலான் மாதம் பிறந்து விட்டால் வானத்தில் சொர்க்கத்தின் கதவுகள் திறக்கப்படுகின்றன. நரகத்தின் கதவுகள் மூடப்படுகின்றன. சைத்தான் விலங்கிடப்படுகின்றான். மனிதர்களின் பிழைகளை மன்னிக்க அல்லாஹ்வின் அருள் மழை பொழியும் மாதமாக, நன்மைகள் நிறைந்த பெட்டகமாக புனித ரமலான் மாதம் அமைந்துள்ளது. ரமலான் மாதத்தில் நாம் செய்யும் நற்செயல்களுக்கும், கூடுதல் வணக்கங்கள் போன்றவற்றுக்கும் 70 மடங்கு நன்மைகள் வழங்கப்படுகின்றன.

    ‘புனித ரமலான் மாதத்தில் ஈமானையும், நன்மையையும் நாடி நோன்பு நோற்பவரின் முன் பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன’ என்று பெருமானார் நவின்றுள்ளார்கள்.

    பாவங்களில் இருந்து மன்னிப்பு பெறவும், பாவங்களில் இருந்து தடுத்துக்கொள்ளவும் கேடயம் போல ரமலான் நோன்பு செயல்படுகிறது. எனவே சிறப்பு மிகுந்த ரமலான் நோன்பை நாம் கடைப்பிடித்து எல்லாம் வல்ல இறைவனிடம், நாம் அறிந்தும், அறியாமலும் செய்த பாவங்களுக்கு மன்னிப்பு தேடுவோம். மேலும் நோய்களில் இருந்து உடலையும், தீயவற்றில் இருந்து உள்ளத்தையும் காக்கும் கேடயமாக விளங்கும் நோன்பைக் கடைப்பிடித்து நன்மைகளை பெற்றுக்கொள்வோம்.

    காரணம் இன்றி ரமலான் நோன்பை விட்டுவிட்டால் இதற்கு ஈடாக எந்தப்பரிகாரமும் செய்ய முடியாது. இதுகுறித்து நபிகளார் கூறும்போது, “ஒருவர் தக்க காரணம் இன்றி ரமலானின் ஒரு நோன்பை விட்டுவிட்டு அதற்கு பதிலாக காலம் முழுவதும் நோன்பு நோற்றாலும், அது ரமலான் மாத நோன்புக்கு ஈடாகாது” என்று குறிப்பிட்டுள்ளார்கள்.

    எனவே அருள்மழை பொழியும் புனித ரமலான் மாதத்தில் முறையாக நோன்பு நோற்று, ஐந்து வேளை தொழுகை, தஹ்ஜத் மற்றும் தராவீஹ் தொழுகையை கடைப்பிடிப்போம். நோன்பாளிகள் மட்டுமே செல்லக்கூடிய ‘ரய்யான்’ என்ற சொர்க்கத்தின் வாசல் திறக்கப்படும் காலம் என்பதால் இந்த நோன்பு காலத்தில் அதிகமதிகம் திருக்குர்ஆன் ஓதுவோம், தான தர்மங்கள் செய்து இறைவனின் அருளைப்பெறுவோம்.

    பேராசிரியர் அ முகமது அப்துல் காதர், சென்னை.
    Next Story
    ×