search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    இஸ்லாம் வழிபாடு
    X
    இஸ்லாம் வழிபாடு

    நேர்வழி காட்டும் திருக்குர்ஆன்

    ‘ரமலான் மாதம் அதில்தான் மனிதர்களுக்கு நேர்வழி காட்டியாகவும், தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும் (நன்மை-தீமைகளைப்) பிரித்தறிவிப்பதுமான திருக்குர்ஆன் இறக்கியருளப் பெற்றது’. (திருக்குர்ஆன் 2:185)
    புனித ரமலானுக்கு ‘ஷஹ்ரு நுஸூலுல் குர்ஆன்’ - திருக்குர்ஆன் இறங்கிய மாதம் எனும் தத்துவப் பெயரும் உண்டு. ரமலான் மாதம் புனிதமானது. புனிதத்திற்கு புனிதம் சேர்க்கும் வகையில் ரமலான் மாதத்தில் தான் அகிலத்தாருக்கு நேர்வழி காட்டும் திருக்குர்ஆன் இறங்கியது.

    ‘ரமலான் மாதம் அதில்தான் மனிதர்களுக்கு நேர்வழி காட்டியாகவும், தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும் (நன்மை-தீமைகளைப்) பிரித்தறிவிப்பதுமான திருக்குர்ஆன் இறக்கியருளப் பெற்றது’. (திருக்குர்ஆன் 2:185)

    புனித ரமலானுக்கு மேலும் ஒரு கூடுதல் சிறப்புண்டு. அது யாதெனில், அனைத்து இறைவேதங்களும் ரமலானில் தான் இவ்வுலகில் இறங்கியது.

    ரமலான் முதல் நாளில் இப்ராகீம் (அலை) அவர்களுக்கு இறைவனின் ஏடுகள் இறங்கின; ரமலானின் ஆறாம் நாளன்று மூஸா (அலை) அவர்களுக்கு ‘தவ்ராத்’ வேதம் இறங்கியது; ரமலானின் பனிரெண்டாம் நாளில் தாவூத் (அலை) அவர்களுக்கு ‘ஸபூர்’ வேதம் இறங்கியது. ரமலான் பதினெட்டாம் தினத்தில் தான் ஈஸா (அலை) அவர்களுக்கு ‘இன்ஜில்’ எனும் வேதம் வழங்கப்பட்டது. புனித ரமலானின் ‘லைலத்துல் கத்ர்’ அன்று தான் முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு திருக்குர்ஆன் வேதம் இறங்கியது.

    ‘நிச்சயமாக நாம் திருக்குர்ஆனை கண்ணியமிக்க (லைலத்துல்கத்ர்) எனும் இரவில் இறக்கினோம். மேலும் கண்ணியமிக்க இரவு என்ன என்பதை உமக்கு அறிவித்தது எது?, கண்ணியமிக்க இரவு ஆயிரம் மாதங்களை விட மேலானது. அதில் வானவர்களும், ஆன்மாவும் (ஜிப்ரயீலும்) தம் இறைவனின் கட்டளையின்படி இறங்குகின்றனர். சாந்தி அது விடியற்காலை உதயமாகும் வரை இருக்கும்.’ (திருக்குர்ஆன் 97:1-5)

    ‘ரமலானின் கடைசிப் பத்து நாட்களில் உள்ள ஒற்றைப்படை இரவுகளில் லைலத்துல் கத்ரைத் தேடுங்கள்’ என நபி (ஸல்) கூறினார்கள். (அறிவிப்பாளர்: ஆயிஷா (ரலி), நூல்: புகாரி)

    ‘அல்லாஹ்வின் தூதரே, லைலத்துல் கத்ர் எந்த இரவு என்பதை நான் அறிந்தால், அதில் நான் என்ன கூறவேண்டும்? என்று நீங்கள் நினைக்கிறீர்கள்’ என நான் கேட்டேன். அதற்கு நபி (ஸல்) ‘இறைவா, நீ மன்னிப்பவன், மன்னிப்பை விரும்புபவன். எனவே, என்னை மன்னித்துவிடு என்று கூறுவீராக’. (அறிவிப்பாளர்: ஆயிஷா (ரலி), நூல்: புகாரி)

    திருக்குர்ஆன் மூன்று கட்டங்களாக அருளப்பட்டது. முதல் கட்டமாக திருக்குர்ஆன் பாதுகாக்கப்பட்ட பதிவேட்டில் பதிவிறக்கம் செய்யப்பட்டது. அந்த பதிவேட்டிலிருந்து முழுக்குர்ஆனும் புனித லைலத்துல் கத்ர் இரவு அன்று கண்ணியம் நிறைந்த இடத்தில் இறைவனால் இறக்கப்பட்டது.

    பிறகு கொஞ்சம் கொஞ்சமாக மக்காவில் 10 ஆண்டுகளும், மதீனாவில் 13 ஆண்டுகளுமாக கிட்டத்தட்ட 23 ஆண்டுகளில் திருக்குர்ஆன் அருளப்பெற்று, நிறைவு பெற்றது. இதுகுறித்து திருக்குர்ஆன் குறிப்பிடுகையில், ‘இவர் மீது குர்ஆன் ஒட்டு மொத்தமாக இறக்கியருளப்படக்கூடாதா? என (நம்மை) மறுப்போர் கூறுகின்றனர். (முஹம்மதே) இப்படித்தான் இதன்மூலம் உமது உள்ளத்தைப் பலப்படுத்திட சிறிது சிறிதாகவே அருளினோம்’ (25:32) என்று தெரிவிக்கின்றது.

    சிறப்புகள் நிறைந்த திருக்குர்ஆனை இந்த ரமலானில் அதிகம் ஓதிடுவோம். நோன்பின் பலனுடன், திருக்குர்ஆன் ஓதிய பலனையும் பெற்றிடுவோம்.

    மவுலவி அ. செய்யது அலி மஸ்லஹி, பாட்டப்பத்து, திருநெல்வேலி டவுண்.
    Next Story
    ×