search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    இஸ்லாம் வழிபாடு
    X
    இஸ்லாம் வழிபாடு

    இறைவனின் பாராட்டு வேண்டுமா?

    ‘உங்களிடம் ரமலான் வருகை புரிந்துள்ளது. அது மாதங்களின் தலைவன். எனவே, அது நல்வரவாகட்டும்! என நபி (ஸல்) கூறினார்கள்’. (நூல்: பைஹகீ)
    புனித ரமலான் மாதத்திற்கு ‘ஸய்யிதுஷ் ஷுஹூர்’ - ‘மாதங்களின் தலைவன்’ எனும் தத்துவப் பெயரும் உண்டு. இத்தகைய தத்துவப் பெயரைக் கொண்ட இம்மாதம் மகத்துவமிக்கது.

    நாட்களின் தலைவன் வெள்ளிக்கிழமை ஆகும். வெள்ளிக்கிழமைக்கென்று ஒரு தனிச்சிறப்பு உண்டு. இந்த தனிச்சிறப்பு மற்ற நாட்களுக்கு இல்லை. இவ்வாறே புனித ரமலானுக்கென்று தனிச்சிறப்பு உண்டு. இத்தகைய தனிச்சிறப்பு மற்ற மாதங்களுக்குக் கிடையாது.

    ‘நாட்களின் தலைவன் வெள்ளிக்கிழமை ஆகும். மேலும் அந்த தினம் இரண்டு பெருநாட்களை விட இறைவனிடம் மகத்துவமிக்கது ஆகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: அபூலுபாபா பின் அப்துல் முன்திர் (ரலி), நூல்: இப்னுமாஜா)

    ‘மாதங்களின் தலைவன் புனித ரமலான்; நாட்களின் தலைவன் புனித வெள்ளிதினம் ஆகும்’ என இப்னுமஸ்ஊத் (ரலி) தெரிவிக்கிறார்கள்.

    ஒரு தடவை நபி (ஸல்) அவர்கள் தமது அன்புத் தோழர்களிடம் உரையாற்றும் போது, ‘அடியார்கள் ரமலானில் இருக்கும் மகத்துவத்தை முழுமையாக தெரிந்து கொண்டால், ஆண்டு முழுவதும் புனித ரமலானாக இருக்க வேண்டுமே என எனது சமுதாயத்தினர் ஆசை கொள்வர்’ என குறிப்பிட்டார்கள். (அறிவிப்பாளர்: இப்னு மஸ்ஊத் (ரலி).

    மற்றொரு தடவை நபி (ஸல்) அவர்கள் குறிப்பிடுகையில், ‘ரமலானுக்காக வருட ஆரம்பத்திலிருந்து வருட நிறைவு வரைக்கும் சுவனம் அலங்கரிக்கப்படுகிறது. ரமலானின் முதல் நாள் துவங்கினால், இறை சிம்மாசனத்திற்கு கீழ் திசையிலிருந்து தென்றல் காற்று வீசுகிறது. அதனால் சுவனத்தின் மரக்கிளைகளும், இலைகளும் மெல்லிய சப்தத்தை ரீங்காரம் இடுகிறது. இதை சுவன பேரழகிகள் காட்சி காணுகிறார்கள். ‘இறைவா! இந்த மாதத்தில் நோன்பு நோற்கும் உனது அடியார்களை எனக்கு கணவனாக தேர்வு செய்வாயாக; எங்களின் மூலம் அவர்கள் கண்குளிர்ச்சி பெறட்டும்; அவர்களின் வழியாக நாங்களும் கண் குளிர்ச்சி அடையட்டும் என்று கூறுவார்கள்’ என்று நபி (ஸல்) தெரிவித்தார்கள்.

    புனித ரமலானில் லைலத்துல் கத்ர் எனும் ஓர் இரவு உண்டு. அது ஆயிரம் மாதங்கள் நன்மை செய்வதை விட சிறப்பானது. இந்த சிறப்பு வேறு எந்த மாதத்திலும் கிடையாது. புனித ரமலானின் ஒவ்வொரு இரவிலும் 6 லட்சம் நரக கைதிகள் விடுதலை செய்யப்படுகிறார்கள். ரமலானின் நிறைவு நாளில் ஒட்டு மொத்த மாதமும் விடுதலை செய்யப்பட்ட எண்ணிக்கை அளவு ஒரே நாளில் மட்டும் நரகத்தில் இருந்து விடுவிக்கப்படுகிறார்கள்.

    ‘உங்களிடம் ரமலான் வருகை புரிந்துள்ளது. அது மாதங்களின் தலைவன். எனவே, அது நல்வரவாகட்டும்! என நபி (ஸல்) கூறினார்கள்’. (நூல்: பைஹகீ)

    ‘உங்களிடம் ரமலான் வந்துள்ளது. அதில் உங்களில் போட்டி போடுவோரை இறைவன் உற்று நோக்குகிறான். மேலும் இறைவன் உங்களைப் பற்றி தமது வானவர்களிடம் பெருமை பாராட்டுகிறான். எனவே நீங்கள் அல்லாஹ்விடம் உங்களை சிறந்தவராக காட்டி விடுங்கள். பாக்கியமற்றவர் யாரென்றால், எவர் இறைவனது அருளை விட்டும் தடுக்கப்படுகிறாரோ அவரே ஆவார் என நபி (ஸல்) கூறினார்கள்’. (நூல்: தப்ரானீ)

    இத்தகைய பாக்கியம் நிறைந்த ரமலான் மாதத்தில் அதன் சிறப்புக்களை அடைய நாம் முயற்சிகள் செய்வோம், இறையருள் பெறுவோம்.

    மவுலவி அ. செய்யது அலி மஸ்லஹி, பாட்டப்பத்து, திருநெல்வேலி டவுண்.

    இப்தார்: மாலை 6.40 மணி

    நாளை சஹர் முடிவு: அதிகாலை 4.23 மணி
    Next Story
    ×