search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    முனீஸ்வரர்
    X
    முனீஸ்வரர்

    தீராத நோய்களை தீர்க்கும், குழந்தை செல்வம் அருளும் ஸ்ரீவைர முனீஸ்வரர்

    கொல்லங்கரடு மலையில் உள்ள ஸ்ரீவைர முனீஸ்வரர் தீராத நோய்களை தீர்க்கும் வைத்தீஸ்வரனாகவும், குழந்தை செல்வத்தை அருளும் வேந்தனாகவும் பக்தர்களுக்கு காட்சி தருகிறார்.
    சேலம் மாவட்டம் இளம்பிள்ளையில் இருந்து சுமார் 7 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, திசவிளக்கு கிராமம். இங்குள்ள கொல்லங்கரடு மலையில், ஸ்ரீவைர முனீஸ்வரர் அருள்பாலித்து வருகிறார். 50 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்தக் கோவிலுக்கு சாதி, மத, இன வேறுபாடின்றி அனைத்து தரப்பினரும் சென்று வழிபட்டு வருகிறார்கள்.

    மற்ற கோவில்களில் முனியப்பன் பல்வேறு ஆயுதங்களுடன் கம்பீரமாக காட்சி தருவார். ஆனால் இந்தக் கோவிலில் மட்டும் குழந்தை வடிவத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார் ஸ்ரீவைர முனீஸ்வரர்.

    தீராத நோயால் அவதிப்படும் பக்தர்கள் சுவாமியின் எலுமிச்சை, திருநீறு ஆகியவற்றை பய பக்தியுடன் பெற்றுச்செல்கிறார்கள். வீட்டிற்கு சென்றவுடன் அவற்றை பால் அல்லது தண்ணீரில் கலந்து குடித்தால் அந்த நோய் குணமாகும் என்பது பக்தர்களின் அதீத நம்பிக்கையாகும். குழந்தைப்பேறு இல்லாத தம்பதிகள் 5 பவுர்ணமிக்கு கோவிலுக்கு வந்து சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்ட பாலை வாங்கி குடிக்கிறார்கள். மேலும் எலுமிச்சை மற்றும் சந்தனத்தை பிரசாதமாக வாங்கிச்செல்கிறார்கள். இதனை 3 முறை தொடர்ந்து குடித்து வந்தால் குழந்தைப்பேறு கிடைக்கும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாகும்.

    மூலவரான ஸ்ரீவைர முனீஸ்வரர் தீராத நோய்களை தீர்க்கும் வைத்தீஸ்வரனாகவும், குழந்தை செல்வத்தை அருளும் வேந்தனாகவும் பக்தர்களுக்கு காட்சி தருகிறார். இங்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக திருநீறு மற்றும் எலுமிச்சை மட்டுமே வழங்கப்படுகிறது. மேலும் குழந்தைப்பேறு வேண்டி கோவிலுக்கு வரும் தம்பதியினருக்கு ஸ்ரீவைர முனீஸ்வரருக்கு அலங்காரம் செய்யப்பட்ட சந்தனம் பிரசாதமாக வழங்கப்படுகிறது. இந்த பிரசாதத்தை பால் அல்லது தண்ணீரில் கலந்து குடித்து வந்தால் அந்த தம்பதியினருக்கு குழந்தைப்பேறு கிடைக்கும் என்ற நம்பிக்கை பக்தர்களிடம் உள்ளது. இதே போல் கால் வலி மற்றும் உடல் வலியால் அவதிப்படும் பக்தர்கள் சுவாமிக்கு அபிஷேகத்திற்கு பயன்படுத்திய எண்ணெயை வாங்கிச்செல்கிறார்கள். இந்த எண்ணெயை தங்களது உடலில் தேய்த்துக்கொண்டால் அந்த வலி காணாமல் போய்விடுகிறது என்பது இங்கு வந்து செல்லும் பக்தர்களின் அனுபவப்பூர்வமான உண்மையாகும்.
    Next Story
    ×