search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்

    மாடத்தட்டுவிளை புனித செபஸ்தியார் ஆலய திருவிழாவில் தேர் பவனி நடந்த போது எடுத்த படம்.
    X
    மாடத்தட்டுவிளை புனித செபஸ்தியார் ஆலய திருவிழாவில் தேர் பவனி நடந்த போது எடுத்த படம்.

    மாடத்தட்டுவிளை புனித செபஸ்தியார் ஆலய திருவிழா தேர் பவனி

    வில்லுக்குறி மாடத்தட்டுவிளை புனித செபஸ்தியார் ஆலய திருவிழாவில் தேர் பவனி நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    வில்லுக்குறி மாடத்தட்டுவிளை புனித செபஸ்தியார் ஆலய திருவிழா கடந்த 11-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நேற்று வரை 10 நாட்கள் நடந்தது. கொடியேற்றத்தின் முன்தினம் மாலையில் புனித செபஸ்தியார் தத்துக்கிராம நற்செய்தி பணித்திட்டம் சார்பில் நற்செய்தி கூட்டம் நடந்தது.

    திருவிழாவின் முதல் நாளில் காலையில் மாடத்தட்டுவிளை பங்கில் பணியாற்றி இறந்த அருட்பணியாளர்கள், பங்கிற்கு நிலம் தானம் கொடுத்தவர்கள் நினைவு திருப்பலியும், மாலையில் கொடியேற்றமும், திருப்பலியும் நடந்தது.

    3-ம் நாள் காலையில் திருப்பலி, குழந்தைகளுக்கு திருமுழுக்கு வழங்குதல், மாலையில் ஜெபமாலை, நற்கருணை ஆசீர் நடைபெற்றது. 4-ம் நாளில் கத்தோலிக்க சேவா சங்கத்தின் பவளவிழா திருப்பலி கோட்டார் மறைமாவட்டம் முன்னாள் ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் தலைமையில் நடைபெற்றது.

    8-ம் நாள் விழாவில் மதியம் சமபந்தி விருந்தும், மாலையில் புகழ்மாலை, திருப்பலியும், இரவு 9 மணிக்கு தேர்ப்பவனியும், 9-ம் நாளான நேற்று முன்தினம் காலையில் முதல் திருவிருந்து திருப்பலியும், தொடர்ந்து புனித செபஸ்தியாரின் திருப்பண்டம் (எலும்புதுண்டு) முத்தமிடும் நிகழ்வும் நடந்தது. மாலையில் ஜெபமாலை, புகழ்மாலை, சிறப்பு மாலை ஆராதனையும், இரவு 9 மணி முதல் அதிகாலை 5 மணி வரை தேர் பவனி, சிறப்பு தவில் வாத்தியம், வாணவேடிக்கை போன்றவை நடைபெற்றது.

    விழாவின் இறுதி நாளான நேற்று அதிகாலை 5.30 மணிக்கு திருவிழா நிறைவு முதல் திருப்பலியும், காலை 8.30 மணிக்கு திருவிழா நிறைவு திருப்பலியும், மதியம் 1 மணி முதல் மாலை 6.30 மணிவரை தேர் பவனியும் நடைபெற்றது. தேர் பவனியின் போது பக்தர்கள் உப்பு, மிளகு, தென்னம்பிள்ளை, பூமாலை, வாழை தார் போன்றவற்றை நேர்ச்சை கடனாக வைத்து வழிபட்டனர். இதில் பங்கு மக்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    விழா ஏற்பாடுகளை மாடத்தட்டுவிளை பங்குத்தந்தை ஜி. ஜெயக்குமார், இணைப்பங்குத்தந்தை அ. அஜின் ஜோஸ், அருட்சகோதரிகள், பங்கு இறைமக்கள், துணைத்தலைவர் சகாய பால் ததேயு, செயலாளர் புஷ்பாஸ், துணைச் செயலாளர் ஆக்னல் வினு, பொருளாளர் பபியோன் ராஜ் ஆகியோர் செய்திருந்தனர்.
    Next Story
    ×