search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்

    கிறிஸ்துமஸ் பண்டிகை
    X
    கிறிஸ்துமஸ் பண்டிகை

    கிறிஸ்துமஸ் பண்டிகை... சுவாரஸ்யமான தகவல்கள்...

    கிறிஸ்தவர்களால் மட்டுமல்லாது உலகம் முழுவதும் உள்ள பெரும்பாலான மக்களால் கொண்டாடப்படும் மகிழ்ச்சிப் பெருவிழா என்று கிறிஸ்துமஸ் பண்டிகையை குறிப்பிட்டுச் சொல்லலாம்.
    பண்டிகை என்றாலே உற்சாகம்தான். அதிலும் குளிர்காலத்தில் வருகின்ற கிறிஸ்துமஸ் பண்டிகை கூடுதல் உற்சாகத்தை தரும் என்பதை யாராலும் மறுக்க முடியாது..

    பளிச்சிடும் வண்ண வண்ண விளக்குகள், குழந்தை இயேசுவின் பிறப்பை சித்தரிக்கும் விதவிதமான குடில்கள், பலவகையான சுவையான கேக்குகள், பரிசுகளைச் சுமந்துவரும் அன்பான கிறிஸ்துமஸ் தாத்தா, கண்ணைக் கவரும் கிறிஸ்துமஸ் மரங்கள், வாழ்த்து அட்டைகள், பரிசுப் பொருட்கள்என அனைத்துமே மனதிற்குள் கூடுதல் குதூகலத்தை கொண்டுவரும். கிறிஸ்தவர்களால் மட்டுமல்லாது உலகம் முழுவதும் உள்ள பெரும்பாலான மக்களால் கொண்டாடப்படும் மகிழ்ச்சிப் பெருவிழா என்று கிறிஸ்துமஸ் பண்டிகையை குறிப்பிட்டுச் சொல்லலாம்.

    *டிசம்பர் 25 ஆம் தேதியில் இருந்து ஜனவரி 5ஆம் தேதி வரை ‘கிறிஸ்துமஸ்டைட்’ அல்லது ‘ பனிரெண்டு புனித நாட்கள்’ என்று கூறப்படுகிறது.

    *ஆங்கிலத்தில் கிறிஸ்துமஸ் என்ற வார்த்தையில் உள்ள X,கிரேக்கத்தில் ‘கிரைஸ்ட்’என்ற பொருளில் இருந்து வந்தது.

    *ஜெர்மனியில் பதினாறாம் நூற்றாண்டில்தான் முதன்முதலில் கிறிஸ்துமஸ் மர அலங்காரம் தோன்றியதாக நம்பப்படுகிறது.

    *கிறிஸ்துமஸ் மரத்தை வீடுகளில் அலங்கரிக்கும் பாரம்பரியமானது சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கியதாகக் கூறப்படுகிறது.

    * நார்ட்மேன்ஃபிர் எனப் பெயர் கொண்ட மரமே கிறிஸ்துமஸ் மரங்களின் தலைவர் என்ற பட்டத்தை பெற்றுள்ளது.

    *பத்தொன்பதாம் நூற்றாண்டின் போது ஜெர்மனியில் செயற்கை கிறிஸ்துமஸ் மரங்கள் உருவாக்கப்பட்டு பின்னர் அவை மற்ற நாடுகளில் பிரபலமடைந்தன.

    *2007 ஆம் ஆண்டு பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோவில் 85 மீட்டர் உயரமுடைய மிகப்பெரிய மிதக்கும் கிறிஸ்துமஸ் மரமானது மைக்ரோ விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டது.

    *கிறிஸ்துமஸ் மரமானது முதன்முதலில் ஆப்பிள் பழங்களை கொண்டுதான் அலங்கரிக்கப்பட்டதாக குறிப்புகள் உள்ளன. பின்னர் 1895ஆம் ஆண்டு முதல் கிறிஸ்துமஸ் மரமானது விளக்குகள்.மற்றும், மெழுகுவர்த்தி ஆகியவற்றைக் கொண்டு அலங்கரிக்கப்பட்டது.

    *டட்ச் புராணக் கதையின் வாயிலாக காலுறைகளை கிறிஸ்துமஸ் மரத்தில் தொங்கவிடும் மரபு துவங்கியது. செயின்ட் நிக்கோலஸ் என்பவர், வீதியில் வாழ்ந்த ஏழை மனிதரின் மூன்று மகள்களுக்கும் திருமணம் செய்ய பணம் இல்லாமல் தவித்ததைப்பார்த்து அவர்கள் நெருப்பூட்டும் இடத்தில் தங்க நாணயங்களைப் போட்டாராம்.அங்கு காய்ந்து கொண்டிருந்த காலுறைக்குள் தங்க நாணயங்கள் விழுந்தது.அதனால், வீதியில் வாழும் நிலை மாறி அந்த ஏழை தன்னுடைய மூன்று மகள்களுக்கும் திருமணத்தை நடத்தி வைத்தார். அதனை நினைவு கூறும் விதமாக இன்றளவும் காலுறைகளை கிறிஸ்துமஸ் மரத்தில் தொங்க விடும் பழக்கம் தொடர்கின்றது.

    *கிறிஸ்துமஸ் தாத்தா, நத்தார் தாத்தா, சாண்டா கிளாஸ், புனித நிக்கலஸ் என்று பல பெயர்களால் அழைக்கப்படும் கிறிஸ்துமஸ் தாத்தா என்பவர் தொன்ம வரலாறு, மற்றும் நாட்டார் பாடல்களில் வரும் ஒரு பாத்திரம் ஆகும் .இவர் கிறிஸ்துமஸ் நாளுக்கு முதல் நாள் இரவில் குழந்தைகளுக்கு அன்பளிப்புகளை கொண்டு வருபவராக குறிப்பிடப்படுகிறார்.

    *புனித நிக்கோலஸ் காலத்தில் பிஷப்புகள் அணிந்திருந்த சிவப்பு- வெள்ளை அங்கியே கிறிஸ்துமஸ் தாத்தாவின் உடையாகிவிட்டது. அப்போது முதல் உலகம் முழுவதும் அன்பின் திருவுருவமாக கிறிஸ்துமஸ் தாத்தா உலா வருகிறார்.

    *கிறிஸ்துமஸ் தாத்தாவை ‘ கனக லோகா’ என்று ஹவாயிலும்;க்ரிஸ் க்ரிங்கில் என்று ஜெர்மனியிலும்; லீ பெஃபனா இன்று இத்தாலியிலும்; பெரே நோயல் என்று பிரான்சிலும்; டியூஷ்கா மோரோஸ் என்று ரஷ்யாவிலும் அழைக்கிறார்கள்.

    *சாண்டா கிளாஸ் குறித்து டாக்டர் மூர் எழுதிய புகழ்பெற்ற கவிதை இன்றளவும் அமெரிக்காவில் மிக பிரபலமாக உள்ளது.

    *கடும் குளிர் நிறைந்த துருவப் பிரதேசங்களில் பறக்கும் மான் வகைகள் இருந்ததாகவும் இந்த பறக்கும் மான்களையே கிறிஸ்துமஸ் தாத்தா தனது வாகனமாக பயன்படுத்தினார் என்றும் கதைகள் கூறுகின்றன.

    * முதன்முதலில் கிறிஸ்துமஸ் குடில் அமைக்கும் முறையை தோற்றுவித்தவர் இத்தாலி நாட்டில் வாழ்ந்த’ புனித பிரான்சிஸ்’ என்ற துறவி ஆவார்.

    *இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஹென்றி என்ற தொழில் அதிபர் முதல் வாழ்த்து அட்டையை உருவாக்கியவர் என்ற பெருமையை பெறுகிறார். பத்தொன்பதாம் நூற்றாண்டில் வசித்த இவர், கிறிஸ்துமஸ் சமயத்தில் உறவினர்களுக்கு கடிதம் எழுத இயலாததால் அட்டையில் படத்தை அச்சிட்டு அனுப்பினார். அவர் ஆயிரம்பேருக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்து அட்டைகளை அனுப்பியதாகக் கூறப்படுகிறது. இதன்பிறகே கிறிஸ்துமஸ் சமயத்தில் வாழ்த்து அட்டைகள் அனுப்பும் பழக்கம் ஏற்பட்டது .

    *வில்லியம் மைனர் என்ற பிரிட்டிஷ் மாலுமி கிறிஸ்துமஸ் தினத்தன்று இந்திய பெருங்கடலில் உள்ள ஒரு தீவை கண்டு பிடித்தார். அதன் காரணமாகவே அந்த தீவிற்கு “கிறிஸ்துமஸ்” என்ற பெயர் சூட்டப்பட்டது.

    *“ஜிங்கிள் பெல்ஸ்” என்ற பிரபலமான கிறிஸ்துமஸ் பாடலை இசையமைத்தவர் அமெரிக்காவின், ஜேம்ஸ் பியர்பாண்ட் என்பவராவார்.

    *உலகின் பல நாடுகளிலும் கிறிஸ்துமஸ் சந்தைகள் பெரிய அளவில் நடத்தப்பட்டு வருகின்றன.

    *உதவும் மனநிலையை பிரதிபலிக்கும் விதமாக கொண்டாடப்படுவது தான் கிறிஸ்துமஸ் பண்டிகை. கிறிஸ்துமஸ் தினத்தை ஒட்டி தேவாலயங்களில் உண்டியல் பெட்டிகளை வைத்து விடுவார்கள். பணம் படைத்தவர்கள் ஏழை எளிய மக்களுக்கு உதவும் வகையில் அப்பெட்டிகளில் பணத்தை போட்டு வருவார்கள.. வருடத்துக்கு ஒருமுறை அப்பபெட்டியானது திறக்கப்பட்டு அதிலிருக்கும் பணமானது ஏழை எளிய மக்களின் பொருளாதாரத் தேவையை நிறைவேற்றுவதற்காக வழங்கப்படுகின்றது.
    Next Story
    ×