
இந்தியாவில் கிறிஸ்தவ கொண்டாட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட அரசு விடுமுறை நாட்கள் பெரிய வெள்ளி அல்லது புனித வெள்ளி மற்றும் கிறிஸ்து பிறப்புவிழா ஆகும். டிசம்பர் 24-ந் தேதி நள்ளிரவில் கிறிஸ்தவர்கள் ஆலயங்களுக்குச் சென்று திருப்பலியில் கலந்துகொண்டு நற்கருணை விருந்தில் பங்கேற்பர். கிறிஸ்து பிறப்பு விழாவுக்கு அடையாளமாக நாணல் போன்ற புல்லினால் குடில் கட்டி குழந்தை ஏசு, மரியாள், யோசேப்பு, இடையர்கள், ஞானிகள் செரூபங்களை வைப்பர். விண்மீன்களுக்கு அடையாளமாக காகிதத்தாலான விண்மீன்களை வண்ண விளக்குக்களால் அலங்கரிப்பர். வீடுகளில் விருந்து நடைபெறும்.
எல்லாரும் புத்தாடை அணிவர். நண்பர்களையும் உறவினரையும் சந்திக்கச் செல்வர். மேலும், இரவில் வாண வேடிக்கைகள் நடைபெறும். பல இடங்களில் கிறிஸ்துமஸ் பஜனை நடைபெறும். அப்போது பாடல் குழுவினர் அணியாகச் சென்று வீடுகளில் உள்ளவர்களை சந்தித்து கிறிஸ்துமஸ் பாடல்கள்(கரோல்ஸ்) இசைப்பார்கள். கிறிஸ்தவர்களோடு பிற சமயத்தவரும் இணைந்து இவ்விழவைக் கொண்டாடுகின்றனர். கிறிஸ்து பிறப்பு விழா மதநல்லிணக்கம் உருவாக உறுதுணையாக உள்ளது என்பதில் ஐயமில்லை.