search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்

    புனித சவேரியார்
    X
    புனித சவேரியார்

    நம்பிக்கையோடு பாதுகாவலரிடம் சொல்லி மன்றாடுவோம்

    நமது புனித சவேரியார் பேராலயம் இந்திய தாய் திருநாட்டிற்கும், நமது கோட்டார் மறை மாவட்டத்திற்கும், நமது பேராலய பங்கு சமூகத்திற்கும் மிக முக்கியமானது.
    கேட்ட வரம் தரும் கோட்டார் புனித சவேரியார் பேராலயம் ஆயிரக்கணக்கான மக்களின் இதயங்களை ஒவ்வொரு நாளும் அற்புதங்களால் ஈர்த்து கொண்டிருக்கிறது. உலகில் புனித சவேரியாருக்கென்று முதன் முதலாக எழுப்பப்பட்ட ஆலயம் என்ற பெருமையுடன் கம்பீரமாக உயர்ந்து நிற்கும் இந்த பேராலயத்தின் அழகும், அற்புத அருளின் பொழிவும் பக்தர்களை ஆனந்த பரவசம் அடைய செய்கின்றது.

    புனித சவேரியாரே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் என்ற நம்பிக்கையோடு மன்றாடும் பலர் அன்றாடம் பல நன்மைகளைப் பெற்று மனநிறைவுடன் செல்கின்றனர். பல்வேறு வரலாற்று சிறப்புகளுடன் விளங்கும் கோட்டார் புனித சவேரியார் பேராலயம் சாதி, சமய வேறுபாடுகளின்றி எல்லா மக்களும் நாடி வரும் கோடி அற்புதங்கள் விளையும் புண்ணிய பூமியாக காட்சி அளிக்கிறது.

    ஒருவர் உலகமெல்லாம் தமதாக்கிக் கொண்டாலும் வாழ்வையே இழப்பாரெனில் அவருக்கு கிடைக்கும் பயன் என்ன (லூக்கா 9:25) என்ற வாக்கியம் புனித சவேரியார் வாழ்வுக்கு ஆதாரமாக அடித்தளமாக இருந்தது. மேலும் ஆழ்ந்த ஆன்மிக அனுபவமும் நற்செய்தி பணியாற்ற தூண்டியது. உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியை பறைசாற்றுங்கள் என்ற இறைவார்த்தையின் படி அனைத்து மக்களுக்கும் நற்செய்தி அறிவித்து அனைவரையும் இறையரசில் உட்படுத்த வேண்டும் என்ற ஆவல் இயேசு சபையை நிறுவிய புனித இஞ்ஞாசியாரின் உள்ளத்தில் மேலோங்கி நின்றது. இஞ்ஞாசியார் தன்னுடன் சில குருக்களையும் அழைத்துக் கொண்டு ரோமுக்கு சென்று திருத்தந்தை 3-ம் சின்னப்பரை சந்தித்து ஆன்மிக பணியாற்ற வாய்ப்பு தாருங்கள் என்ற விருப்பத்தை தெரிவித்தார்.

    போர்த்துக்கீசிய மன்னரின் ஆளுகைக்குட்பட்ட இந்தியாவின் சில பகுதிகளுக்கு மறைதூது அருட்பணியாளர்கள் தேவைப்பட்டனர். எனவே போர்த்துக்கீசிய மன்னர் 3-ம் ஜான் மன்னரது உதவியோடு புனித சவேரியார் தேர்வு செய்யப்பட்டு இந்தியாவிலேயே மறைதூது பணி செய்ய அனுப்பப்பட்டார்.

    இந்திய திருநாட்டின் தென்கோடியில் அமைந்திருக்கும் இயற்கை எழில் கொஞ்சும் குமரி மாவட்டம் மலைவளமும், வயல் வளமும், கடல் வளமும் கொண்ட ஒரு சிறிய அழகிய, இனிமையான, படித்தவர்கள் அதிகம் நிறைந்த மாவட்டம்.

    இங்கு அமைந்துள்ள கோட்டார் என்ற ஊர் வரலாற்று சிறப்புமிக்க ஊர். பன்னாட்டு வர்த்தகர்கள் மொய்க்கும் வர்த்தக பொருளகரமாக விளங்கியது. கோட்டார் வந்த சவேரியார் இந்த பகுதியில் சுற்றி வந்து மக்களை சந்தித்து மக்களுடைய அன்றாட வாழ்வோடு இணைந்தார். இவர் சாதி, சமய பேதமின்றி அனைத்து மக்களுக்கும் நற்செய்தி பணியாற்றினார். மேலும் நம்பிக்கையோடு முன்வந்த மக்களுக்கு திருமுழுக்கு வழங்கினார்.

    கோட்டார் பேராலயத்திற்கு இன்னுமொரு சிறப்பு இங்கு தான் மறைசாட்சி தேவசகாயம்பிள்ளையின் கல்லறை அமைந்துள்ளது. நமது புனித சவேரியார் பேராலயம் இந்திய தாய் திருநாட்டிற்கும், நமது கோட்டார் மறை மாவட்டத்திற்கும், நமது பேராலய பங்கு சமூகத்திற்கும் மிக முக்கியமானது. இங்கு தான் நமது புனித சவேரியார் தங்கியிருந்து திருப்பலி நிறைவேற்றினார். மக்களோடு மக்களாக கலாசாரத்திலும், பண்பாட்டிலும் ஒன்றாகினார். நம் பாதுகாவலரிடம் உரிமையோடும், அன்போடும், நம்பிக்கையோடும் நம் தேவைகளை எடுத்துச் சொல்லி மன்றாடுவோம்.

    பேரருட் பணி ஸ்டான்லி சகாய சீலன், பங்குதந்தை
    Next Story
    ×