search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    மத்தேயு
    X
    மத்தேயு

    பைபிள் கூறும் வரலாறு: மத்தேயு

    விவிலியத்திலுள்ள நற்செய்தி நூல்களில் முதலாவதாக அமைந்துள்ள நூல் மத்தேயு. ‘மத்தேயு’ என்பதற்கு ‘கடவுளின் பரிசு’ என்பது பொருள்.
    விவிலியத்திலுள்ள நற்செய்தி நூல்களில் முதலாவதாக அமைந்துள்ள நூல் மத்தேயு. மத்தேயு ஒரு லேவியர் குலத்தைச் சார்ந்தவர். வரி வசூலித்துக் கொண்டிருந்த அவரை இயேசு அழைத்தார். உடனே அனைத்தையும் விட்டு விட்டு இயேசுவைப் பின்சென்றவர் இவர். இயேசு வின் பன்னிரண்டு திருத்தூதர்களில் இவரும் ஒருவர். ‘மத்தேயு’ என்பதற்கு ‘கடவுளின் பரிசு’ என்பது பொருள்.

    நற்செய்தி நூல்களில் அதிகம் பேசப்படாத அப்போஸ்தலர் இந்த மத்தேயு. நற்செய்தியை முதன் முதலில் எழுதியவர் மத்தேயு அல்ல. மார்க்.

    மார்க் நூலை மையமாகக் கொண்டு தான் மத்தேயு மற்றும் லூக்கா நூல்கள் கட்டமைக்கப்பட்டுள்ளன என்கின்றனர் விவிலிய ஆய்வாளர்கள். ஆனால் அவற்றைத் தாண்டி பல விஷயங்களை மத்தேயு தனது நூலில் இணைக்கிறார்.

    மத்தேயு மூன்று ஆண்டுகள் இயேசுவோடு தொடர்ந்து நடந்தவர் என்பதால் இயேசுவைப் பற்றி நிறைய விஷயங்களை நேரடியாகவே அறிந்து கொண்டவர். இயேசுவை “யூதர்களின் அரசர்” என முன்னிலைப்படுத்துவதே அவரது நற்செய்தியின் நோக்கமாக இருந்தது.

    கிழக்கிலிருந்து ஞானியர் வந்து இயேசுவைப் பணிவதை மத்தேயுவே எழுதினார். இறப்பில் கூட முள்முடியைச் சூட்டும் நிகழ்ச்சியை மத்தேயு விவரிக்கிறார். ‘யூதருக்கு அரசர்’ எனும் சிலுவை மொழியை குறிப்பிடுகிறார். இயேசுவை அரசராகக் காட்டும் பதிவுகளே இவை.

    பழைய தீர்க்கதரிசனங்களின் நிறைவேறுதலே இயேசுவின் பிறப்பு என்பதை நிறுவ விரும்புகிறார் மத்தேயு. அதனால் தான் பழைய ஏற்பாடு முடிந்தவுடன் மத்தேயு நற்செய்தி வருகிறது. இல்லையேல் முதலில் எழுதப்பட்ட மார்க் நூல் தான் வந்திருக்க வேண்டும்.

    புதிதாய் கிறிஸ்தவத்தை ஏற்றுக்கொண்ட மக்களுக்காய் மத்தேயு தனது நூலை மத்தேயு எழுதுகிறார். அதிலும் குறிப்பாக யூதர்களை மனதில் வைத்து எழுதுகிறார். அதனால் தான் இயேசுவின் பிறப்பு, வாழ்க்கை, மரணம் உட்பட எல்லாமே பழைய தீர்க்கதரிசனங்களின் நிறைவேறுதல் என ஒப்பிட்டுப் பேசுகிறார்.

    அதே போல ‘உலகெங்கும் சென்று நற்செய்தியை அறிவிக்கும்’ அறைகூவலையும் விடுக்கிறார்.

    நான்கு நற்செய்திகளிலுமே இயேசுவின் வாழ்க்கையை அதிகமாய்ப் பதிவு செய்த நூல் என மத்தேயுவைச் சொல்லலாம். இயேசுவின் வாழ்க்கையை விட, மரணத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார் மத்தேயு. இயேசுவின் வாழ்க்கையின் இறுதிக் கட்டத்தில் பதினான்கு வாக்கியங்களை மத்தேயு நற்செய்தி குறிப்பிடுகிறது.

    மத்தேயுவின் நற்செய்தி சற்றே மென்மைப்படுத்தப்பட்ட நடையில், கடினச் சொற்களையும், வீரியமான விவாதங்களையும் கொஞ்சம் கட்டுப்படுத்தி கட்டமைக்கப்பட்டுள்ளது.

    இவரது நூலில் பல விஷயங்கள் பழைய ஏற்பாட்டு மனநிலையோடு பொருந்திப் போகும் வகையில் அமைந்துள்ளது. உதாரணமாக மத்தேயு ஐந்து பிரசங்கங்களை குறிப்பிடுகிறார். மலைப்பிரசங்கம் மற்றும் நான்கு விண்ணரசு பிரசங்கங்கள். இவை பழைய ஏற்பாட்டின் முதல் ஐந்து நூல்களான தோராவுக்கு இணை எனலாம்.

    மத்தேயு இயேசுவின் மூதாதையரின் பட்டியலை யூதர்கள் அங்கீகரிக்கும் வண்ணம் பதினான்கு, பதினான்காய் மூன்று கட்டமாக கொடுக்கிறார். முதல் பதினான்கு ஆபிரகாம் முதல் தாவீது வரையும், அடுத்தது தாவீது முதல் நாட்டைவிட்டு வெளியேறும் காலம் வரையும், மூன்றாவது அதன் பின் இயேசுவின் காலம் வரையும் அமைகிறது. இது நீதித்தலைவர்கள், அரசர்கள், குருக்கள் எனும் கால இடைவெளியில் அமைவது குறிப்பிடத்தக்கது.

    தலைமுறை அட்டவணையையும் இயேசுவின் மண்ணகத் தந்தை யோசேப்பின் வழியில் மத்தேயு எழுதுகிறார். யூதர்களுக்கு ஆண்களின் வம்சாவழியே முக்கியம். மத்தேயு அந்த வழியில் இயேசுவை தாவீது மன்னனின் அரச பதவிக்கு தகுதியான வாரிசாய்க் காட்டுகிறார்.

    மத்தேயு நற்செய்தியின் கட்டமைப்பானது போதனைகள், செயல்கள் என மாறி மாறி வரும்படி அமைந்துள்ளது. இயேசு குற்றவாளியானதால் கொல்லப்படவில்லை, தீர்க்கதரிசன நிறைவேறலுக்காகவே கொல்லப்பட்டார் என்பதை மத்தேயு மிகத் தெளிவாகக் குறிப்பிடுகிறார்.

    இயேசுவின் இறப்புக்குப் பின் கல்லறை திறப்பதையும், இறந்தோர் எழுந்ததையும் மத்தேயு பதிவு செய்கிறார். அதே போல இயேசுவின் கல்லறைக்கு வீரர்கள் காவல் இருப்பதையும் மத்தேயுவே எழுதுகிறார். இயேசுவின் உயிர்ப்பு சந்தேகத்துக்கிடமின்றி நிரூபணமானது என்பதே மத்தேயுவின் நோக்கம். இயேசுவின் உயிர்ப்புக்குப் பிந்தைய நிகழ்வுகளையும் மத்தேயுவே அதிகம் எழுதுகிறார்.

    பழைய ஏற்பாட்டு வசனங்களை நேரடியாக 29 இடங்களிலும், மறைமுகமாக 121 இடங்களிலும் மத்தேயு குறிப்பிடுகிறார். வேறெந்த நற்செய்தியாளரும் இந்த அளவுக்குப் பயன்படுத்தவில்லை. இயேசு சட்டங்களை ஒழிக்க அல்ல, நிறைவேற்றவே வந்தார் என்பதையே மத்தேயு வலியுறுத்துகிறார். யூதர்களை முதன்மைப்படுத்தினாலும் பிற இன மக்கள் குறித்த நிகழ்வுகள், அறைகூவல்கள் போன்றவையும் அதிகமாக மத்தேயு நூலில் இருக்கின்றன.

    திருச்சபையைக் குறித்தும், விண்ணக வாழ்க்கையை மண்ணில் வாழ்வது குறித்தும் மிக தெளிவாகவும் அழகாகவும் மத்தேயுவே பதிவு செய்கிறார். ஆதிகால திருச்சபையில் மிகவும் அதிகமாகப் பயன்படுத்தப்பட்ட, வரவேற்கப்பட்ட நற்செய்தி நூல் மத்தேயு தான்.

    கிறிஸ்தவ விசுவாசத்துக்குள் நுழைய விரும்பும் யூதர்களையும், பிற இன மக்களையும் ஒரு சேர வசீகரிக்கிறது மத்தேயு நற்செய்தி.

    சேவியர்
    Next Story
    ×