
பாளையங்கோட்டை தெற்கு பஜாரில் உள்ள சவேரியார் பேராலயத்தில் நேற்று நள்ளிரவு கத்தோலிக்க மறைமாவட்ட புதிய பிஷப் அந்தோணி சாமி தலைமையில் புத்தாண்டு சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதில் ஆலய பங்குத்தந்தை ராஜேஷ் மற்றும் இறை மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
இதேபோல் இலந்தைகுளம் புனித அந்தோணியார் ஆலயத்தில் பங்குத்தந்தை அந்தோணி குரூஸ் தலைமையில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. நெல்லை உடையார்பட்டி திருஇருதய ஆண்டவர் ஆலயம், டவுன் அடைக்கலமாதா ஆலயம், சீவலப்பேரி ரோடு அந்தோணியார் ஆலயம், சேவியர் காலனி அந்தோணியார் ஆலயம் உள்பட நகரில் உள்ள அனைத்து கிறிஸ்தவ ஆலயங்களிலும் புத்தாண்டு சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். பின்னர் ஒருவருக்கொருவர் புத்தாண்டு வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர். மேலும் புத்தாண்டு கேக் கொடுத்து மகிழ்ந்தனர்.
பாளையங்கோட்டை முருகன்குறிச்சி கதீட்ரல் பேராலயத்தில் அதிகாலையில் கிறிஸ்துமஸ் சிறப்பு ஆராதனை நடைபெற்றது. அனைத்து சி.எஸ்.ஐ. கிறிஸ்தவ ஆலயங்களிலும் அதிகாலையில் புத்தாண்டு ஆராதனை நடைபெற்றது. இதில் கிறிஸ்தவர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
புத்தாண்டையொட்டி, நெல்லை மாநகர பகுதியில் போலீஸ் கமிஷனர் தீபக் டாமோர் உத்தரவின் பேரில், துணை கமிஷனர்கள் சரவணன், மகேஷ்குமார் ஆகியோர் மேற்பார்வையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. நெல்லை வண்ணார்பேட்டை, பாளையங்கோட்டை, நெல்லை டவுன் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வாகன சோதனை நடத்தப்பட்டது.
மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்கள், வேகமாக மோட்டார்சைக்கிளில் சென்றவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும் போலீசார் நெல்லை மாநகர பகுதியில் வாகனங்களில் ரோந்து சுற்றி வந்தனர். கிறிஸ்தவ ஆலயங்கள் உள்ள பகுதியில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர்.