search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    நேரடியாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெறுமா டெல்லி..? 139 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது உ.பி. வாரியர்ஸ்
    X

    தஹ்லியா மெக்ராத், ஸ்வேதா ஷெராவத்

    நேரடியாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெறுமா டெல்லி..? 139 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது உ.பி. வாரியர்ஸ்

    • தஹ்லியா மெக்ராத் 32 பந்துகளில் 8 பவுண்டரி, 2 சிக்சர்களுடன் 58 ரன்கள் குவித்தார்.
    • டெல்லி அணி தரப்பில் அலைஸ் கேப்சி 3 விக்கெட்டுகளும், ராதா யாதவ் 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.

    மும்பை:

    மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் இன்று இரவு மும்பை பிரபோர்ன் மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் உ.பி. வாரியர்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் விளையாடுகின்றன. டாஸ் வென்ற டெல்லி அணி பீல்டிங்கை தேர்வு செய்ய, உ.பி. வாரியர்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது.

    அதிரடியாக ஆடிய துவக்க வீராங்கனை ஸ்வேதா ஷெராவத் 19 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார். கேப்டன் அலிசா ஹீலி 36 ரன்கள் சேர்த்தார். அதன்பின்னர் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் சரிந்தன. சிம்ரன் ஷாயிக் 11 ரன்களிலும், கிரண் 2 ரன்னிலும், தீப்தி சர்மா 3 ரன்னிலும், ஷோபி ரன் எதுவும் எடுக்காமலும் விக்கெட்டை இழந்தனர்.

    அதேசமயம் மறுமுனையில் அதிரடியில் மிரட்டிய தஹ்லியா மெக்ராத் அரை சதம் கடந்தார். இதனால் 20 ஓவர் முடிவில் உ.பி. வாரியர்ஸ் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 138 ரன்கள் சேர்த்தது. தஹ்லியா மெக்ராத் 32 பந்துகளில் 8 பவுண்டரி, 2 சிக்சர்களுடன் 58 ரன்கள் (நாட் அவுட்) குவித்தார்.

    டெல்லி அணி தரப்பில் அலைஸ் கேப்சி 3 விக்கெட்டுகளும், ராதா யாதவ் 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர். இதையடுத்து 139 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி களமிறங்கியது.

    மும்பை இந்தியன்ஸ் அணி தற்போது புள்ளிப்பட்டியலில் 12 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது, அந்த அணியின் லீக் ஆட்டங்கள் நிறைவடைந்துவிட்டன. ஆனால் டெல்லி அணி இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்றால் 12 புள்ளிகளுடன் மும்பை அணியை சமன் செய்யும். இதில் ரன் ரேட் அடிப்படையில் முதலிடம் பிடிக்கும் அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும். எனவே, இன்றைய ஆட்டத்தில் டெல்லி அணி வெற்றி பெறுவதடன், மும்பை அணியைவிட அதிக ரன் ரேட் பெறவேண்டும்.

    Next Story
    ×