search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    பெண்கள் முதல் டி20: இந்தியா- இங்கிலாந்து அணிகள் இன்று மோதல்
    X

    பெண்கள் முதல் டி20: இந்தியா- இங்கிலாந்து அணிகள் இன்று மோதல்

    • இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மும்பையில் இன்று நடக்கிறது.
    • இலங்கைக்கு எதிரான 20 ஓவர் தொடரில் 1-2 என்ற கணக்கில் தோற்ற நிலையில் இங்கிலாந்து அணி இந்த தொடரில் களம் இறங்குகிறது.

    மும்பை:

    ஹீதர் நைட் தலைமையிலான இங்கிலாந்து பெண்கள் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று 20 ஓவர் மற்றும் ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது. இதில் இந்தியா-இங்கிலாந்து பெண்கள் அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மும்பையில் உள்ள வான்கடே ஸ்டேடியத்தில் இன்று (புதன்கிழமை) நடக்கிறது.

    ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி கடந்த செப்டம்பரில் நடந்த ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற பிறகு பங்கேற்கும் முதல் போட்டி இதுவாகும். சமீபத்தில் சொந்த மண்ணில் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான 20 ஓவர் தொடரில் 1-2 என்ற கணக்கில் தோற்ற நிலையில் இங்கிலாந்து அணி இந்த தொடரில் களம் இறங்குகிறது.

    இந்திய அணியில் பேட்டிங்கில் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், ஜெமிமா ரோட்ரிக்ஸ், துணை கேப்டன் ஸ்மிர்தி மந்தனா, ஷபாலி வர்மாவும், பந்து வீச்சில் தீப்தி ஷர்மா, பூஜா வஸ்ட்ராகர், புதுமுக வீராங்கனைகள் ஸ்ரேயங்கா பட்டீல், சைகா இஷாக்கும் வலு சேர்க்கிறார்கள். இங்கிலாந்து அணியில் பேட்டிங்கில் நாட் சிவெர் புருன்ட், டேனி வியாட், கேப்டன் ஹீதர் நைட்டும், பந்து வீச்சில் சோபி எக்லெஸ்டன், சாரா கிளெனும் மிரட்டுவார்கள்.

    இங்கிலாந்துக்கு எதிராக 27 இருபது ஓவர் போட்டியில் விளையாடி இருக்கும் இந்திய அணி இதுவரை 7 ஆட்டங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. அந்த அணிக்கு எதிராக உள்ளூரில் 9 ஆட்டங்களில் ஆடியதில் 2-ல் மட்டுமே வெற்றி கண்டுள்ளது. எனவே இங்கிலாந்துக்கு எதிரான தங்களது முந்தைய மோசமான நிலையை மாற்ற இந்தியா எல்லா வகையிலும் முயற்சிக்கும். அதேநேரத்தில் தங்களது ஆதிக்கத்தை தொடர இங்கிலாந்து தீவிரம் காட்டும். எனவே இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது.

    இது குறித்து இங்கிலாந்து அணியின் கேப்டன் ஹீதர் நைட் கூறுகையில், '20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு கடைசியில் வங்காளதேசத்தில் நடக்க இருக்கிறது. அதுபோன்ற சீதோஷ்ண நிலை இங்கு நிலவுவதால் உலகக் கோப்பை போட்டிக்கு தயாராக இந்த தொடர் முக்கியமானதாகும். அதனை நாங்கள் சரியாக பயன்படுத்தி கொள்வோம்' என்றார்.

    இந்திய பெண்கள் அணியின் புதிய பயிற்சியாளர் அமோல் முஜூம்தார் கூறுகையில், 'நாங்கள் உலகக் கோப்பையை நோக்கி பயணிக்கிறோம். அதனால் ஒவ்வொரு தொடரும் முக்கியமானது. வீராங்கனைகளும் சாதிக்க ஆவலுடன் காத்திருக்கிறார்கள். நாம் அச்சமின்றி விளையாட வேண்டியது அவசியமாகும். பீல்டிங் மற்றும் உடல்தகுதிக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுக்கிறோம். இவற்றில் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை. இந்த தொடருக்கு பிறகு நிறைய பயிற்சி முகாம் நடத்த உள்ளோம்' என்றார்.

    இரவு 7 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்போர்ட்ஸ் 18 சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது. ஜியோ சினிமா செயலியிலும் பார்க்கலாம்.

    Next Story
    ×