என் மலர்
கிரிக்கெட் (Cricket)

பல விசயங்கள் ஏற்றுக் கொள்ள முடியாதது: அணி வீரர்கள் மீது ரிக்கி பாண்டிங் சாடல்
- டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி பந்து வீச்சாளர்கள் 17 வைடுகள் வீசினார்.
- குறிப்பிட்ட நேரத்திற்குள் பந்து வீச முடியாததால், கடைசி 2 ஓவரில் 4 வீரர்கள் பவுண்டரி லைனில் நிற்க முடிந்தது.
விசாகப்பட்டினத்தில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கெதிராக டெல்லி 106 ரன் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது. 20 ஓவர் முழுவதும் விளையாட முடியாமல் 17.2 ஓவரில் 166 ரன்னில் ஆல்அவுட் ஆனது.
இந்த தோல்வி குறித்து அந்த அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் "மோசமான நாட்களாக அமைவதில் இந்த நாளும் ஒன்று. பந்து வீச்சாளர்கள் இன்னும் சிறப்பாக வகையில் செயல்பட்டிருக்க வேண்டும்" எனத் தெரிவித்திருந்தார்.
ஆனால் அந்த அணியின் தலைமை பயிற்சியாளரான ரிக்கி பாண்டிங் அணியில் பல விசயங்களை ஏற்றுக் கொள்ள முடியாது எனத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ரிக்கி பாண்டிங் கூறியதாவது:-
தற்போதைய நிலையில் மதிப்பீடுவது மிகவும் கடினம். போட்டியின் முதல் பாதிலேயே நான் மிகவும் சங்கடத்திற்கு உள்ளானேன். நாங்கள் ஏராளமான ரன்கள் வாரி வழங்கி விட்டோம். நாங்கள் 17 ஓவர்கள் வீசியதால் இரண்டு மணி நேரம் எடுத்துக் கொண்டது. இதனால் கடைசி இரண்டு ஓவர்களில் பவுண்டரி லைனில் நான்கு வீரர்களுடன் பீல்டிங் செய்ய வேண்டியிருந்தது.
இந்த போட்டியில் ஏராளமான விசயங்கள் நடைபெற்றன. அவைகள் ஏற்றுக் கொள்ள முடியாதது. பல விசயங்கள் குறித்து பேச இருக்கிறோம். போட்டியில் முன்னோக்கி செல்ல அவற்றை உடனடியாக சரி செய்து கொள்ள வேண்டும். வெளிப்படையான ஆலோசனைகள் வீரர்கள் அறையில் நடப்பது உறுதி.
இவ்வாறு ரிக்கி பாண்டிங் தெரிவித்தார்.






