search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    முதல் 20 இன்னிங்சில் யாரும் படைக்க முடியாத சாதனையை படைத்த ஷ்ரேயாஸ் அய்யர்
    X

    முதல் 20 இன்னிங்சில் யாரும் படைக்க முடியாத சாதனையை படைத்த ஷ்ரேயாஸ் அய்யர்

    • இந்த 2022-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரராக ஷ்ரேயஸ் ஐயர் உள்ளார்.
    • ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதுவும் சுழலுக்கு சாதகமான ஆடுகளங்களில் அற்புதமாக செயல்பட்டு வருகிறார்.

    வங்காள தேசம் - இந்தியா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் கேஎல் ராகுல் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார்.

    இதனையடுத்து தொடக்க ஆட்டக்காரர்களாக கேஎல் ராகுல் - சுப்மன் கில் ஜோடி களமிறங்கியது. 20 ரன்னில் சுப்மன் கில்லும் 22 ரன்னில் ராகுல் வெளியேற அடுத்து வந்த விராட் கோலி 1 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்.

    இந்நிலையில் புஜாரா-ரிஷப் பண்ட் ஜோடி சேர்ந்தனர். தன்னுடைய வழக்கமான ஸ்டைலில் வெளுத்து வாங்கிய ரிசப் பண்ட் 4-வது விக்கெட்டுக்கு 64 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து இந்தியாவை சரிவிலிருந்து மீட்டெடுத்த போது 6 பவுண்டரி 2 சிக்ஸருடன் 46 (45) ரன்களில் அவுட்டானார். இருப்பினும் அவருக்குப் பின் களமிறங்கிய ஸ்ரேயாஸ் ஐயர் நங்கூரமாக நின்று புஜாராவுடன் சேர்ந்து இந்தியாவை வலுப்படுத்தும் முயற்சியில் விளையாடி வருகிறார்.

    தற்போது 5-வது விக்கெட்டுக்கு 62 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்துள்ள இந்த ஜோடியில் ஷ்ரேயஸ் ஐயர் 41* (77) ரன்களும் புஜாரா 42* (116) ரன்களும் எடுத்திருந்த போது முதல் நாள் தேநீர் இடைவெளி வந்தது. அப்போது இந்தியா 174/4 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.

    முன்னதாக கடந்த டிசம்பர் மாதம் நியூசிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் கான்பூர் போட்டியில் அறிமுகமான ஷ்ரேயஸ் ஐயர் முதல் போட்டியில் சதமடித்து 105 ரன்கள் விளாசி அசத்தார். அதன் பின் 65, 18, 14, 27, 92, 67, 15, 19, 41* என தன்னுடைய முதல் 10 இன்னிங்ஸில் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாகி பெரிய அளவில் சொதப்பாமல் குறைந்தபட்சம் இரட்டை இலக்க ரன்களை எடுத்து வருகிறார்.

    இதன் மூலம் 90 வருட வரலாற்றை கொண்ட இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டில் தன்னுடைய முதல் 10 இன்னிங்ஸில் இரட்டை இலக்க ரன்களை எடுத்த முதல் வீரர் என்ற தனித்துவமான சாதனையையும் ஷ்ரேயஸ் ஐயர் படைத்துள்ளார்.

    இதற்கு முன் சச்சின் முதல் டோனி உட்பட வரலாற்றின் அத்தனை இந்திய பேட்ஸ்மேன்களும் தங்களுடைய முதல் 10 டெஸ்ட் இன்னிங்ஸில் தொடர்ந்து இரட்டை இலக்க ரன்களை பதிவு செய்ததில்லை. மேலும் என்ன தான் ஷார்ட் பிட்ச் பந்துகளில் தடுமாறும் பலவீனம் இவரிடம் இருந்தாலும் ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதுவும் சுழலுக்கு சாதகமான ஆடுகளங்களில் அற்புதமாக செயல்பட்டு வருகிறார்.

    அதன் காரணமாகவே அனைத்து வகையான கிரிக்கெட்டையும் சேர்த்து இந்த 2022ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரராகவும் சாதனை படைத்துள்ள ஷ்ரேயஸ் ஐயர் நம்பிக்கை நட்சத்திர வருங்கால வீரராக தன்னை அடையாளப்படுத்தி வருகிறார்.

    Next Story
    ×