search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    கொல்கத்தா அணிக்கு புதிய பினிஷர் இவர்தான்- இந்திய வீரரை புகழ்ந்த ரசல்
    X

    கொல்கத்தா அணிக்கு புதிய பினிஷர் இவர்தான்- இந்திய வீரரை புகழ்ந்த ரசல்

    • கொல்கத்தா அணி கடைசி பந்தில் வெற்றி பெற்றது.
    • அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரசலுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

    கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 53-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப்- கொல்கத்தா அணிகள் மோதின. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டி செய்த பஞ்சாப் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 179 ரன்களை குவித்தது.

    பின்னர் 180 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய கொல்கத்தா அணி கடைசி பந்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் கொல்கத்தா அணியின் வெற்றிக்கு இரண்டு ஓவர்களில் 26 ரன்கள் தேவை என்ற நிலையில் ஆண்ட்ரே ரசல் மற்றும் ரிங்கு சிங் ஆகியோரது அதிரடி காரணமாக அந்த அணி திரில்லிங்கான வெற்றியை பெற்றது.

    அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரசலுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. இந்நிலையில் கொல்கத்தா அணிக்கு புதிய பினிஷர் கிடைத்து விட்டார் என ரசல் கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    இந்த போட்டியில் பனியின் தாக்கம் இருந்ததால் பவுலர்கள் கிரிப் செய்வது கடினமாக இருக்கும் என்று நினைத்தேன். அந்த வகையில் பவுலர்கள் லென்த்தை தவறவிட்டதால் எங்களால் சிக்சர்கள் அடிக்க முடிந்தது. அதோடு கடைசி இரண்டு ஓவர்களில் 30 ரன்கள் தேவை என்றால் கூட அடிக்க முடியும் என்று உறுதியாக இருந்தோம். நான் அடித்த சில சிக்ஸர்கள் இங்கு மிகவும் எளிதாகவே இருந்தது. அதனால் போட்டியை முடித்துக் கொடுக்க வேண்டும் என்று நினைத்தேன்.

    ஆனால் கடைசியில் நான் ரன் அவுட்டாகி வெளியேறி விட்டேன். இருந்தாலும் இந்த வருடம் எங்களுக்கு புதிய பினிஷராக ரிங்கு சிங் கிடைத்துள்ளார். நான் கடைசி ஓவரின் ஐந்தாவது பந்தை எதிர்கொண்ட போது பந்தை ஒருவேளை தவறவிட்டால் ஒரு ரன் ஓடி வாருங்கள் என்று ரிங்கு சிங் என்னிடம் சொன்னார். நானும் பந்தை அடிக்க நினைத்து தவறவிட்டதால் ஓடிவந்து ரன் அவுட் ஆகி விட்டேன்.

    இருந்தாலும் நிச்சயம் கடைசி பந்தில் ரிங்கு சிங் போட்டியை முடித்து விடுவார் என்ற நம்பிக்கை என்னிடம் இருந்தது. ஏனெனில் இந்த சீசன் முழுவதுமே அவர் விளையாடி வரும் விதம் மிகச் சிறப்பாக இருக்கிறது. இந்த சீசனில் அவர் எங்கள் அணியின் சிறந்த பினிஷராக இருந்து வருகிறார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×