search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    இறுதிப்போட்டியில் சிஎஸ்கே தோல்வி? குழப்பத்தை ஏற்படுத்திய ராட்சத திரை
    X

    இறுதிப்போட்டியில் சிஎஸ்கே தோல்வி? குழப்பத்தை ஏற்படுத்திய ராட்சத திரை

    • தொடர்ந்து மழை பெய்ததால் ஆட்டம் கைவிடுவதாக இரவு 10.55 மணியளவில் நடுவர்கள் அறிவித்தனர்.
    • இன்றும் மழையால் பாதிக்கப்பட்டால் குஜராத் டைட்டன்ஸ் அணி ஐ.பி.எல் கோப்பையை கைப்பற்றும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

    16-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த மார்ச் 31-ந் தேதி தொடங்கியது. லீக் போட்டிகள் மே 21-ந் தேதியுடன் முடிந்தது. இதன் முடிவில் குஜராத், சென்னை, லக்னோ, மும்பை அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றன. 'பிளே ஆப்' சுற்று கடந்த 23-ந் தேதி தொடங்கியது.

    சேப்பாக்கத்தில் நடந்த முதல் தகுதி சுற்றில் (குவாலிபையர்-1) சென்னை சூப்பர் கிங்ஸ் 15 ரன் வித்தியாசத்தில் குஜராத்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு நேரடியாக தகுதி பெற்றது. 24-ந் தேதி சேப்பாக்கத்தில் நடந்த வெளியேற்றுதல் சுற்றில் (எலிமினேட்டர்) மும்பை அணி 81 ரன் வித்தியாசத்தில் லக்னோவை வீழ்த்தி வெளியேற்றியது.

    26-ந் தேதி அகமதாபாத்தில் நடந்த 'குவாலிபையர்-2' போட்டியில் குஜராத் அணி 62 ரன் வித்தியாசத்தில் மும்பையை தோற்கடித்து இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

    சென்னை சூப்பர் கிங்ஸ்-குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதும் ஐ.பி.எல். இறுதிப்போட்டி அகமதாபாத்தில் நேற்று இரவு 7.30 மணிக்கு தொடங்க இருந்தது. ஆனால் மழையால் இறுதிப்போட்டி பாதிக்கப்பட்டது. இதனால் ஆட்டத்தை கைவிடுவதாக இரவு 10.55 மணியளவில் நடுவர்கள் அறிவித்தனர்.

    இந்நிலையில் மைதானத்தில் ராட்சத திரையில் 'ரன்னர் அப் சென்னை சூப்பர் கிங்ஸ்' என்று எழுதியிருந்தது. இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியது. ஒருவேளை ஐபிஎல் போட்டிகள் சொல்லி வைத்து ஆடுவது போல என்று நினைக்கும் ரசிகர்களுக்கு, உண்மையிலேயே அப்படிதான் நடக்கிறதோ என்பது போல இருந்தது இந்த புகைப்படம்.

    போட்டி டாஸ் கூட போடாத நிலையில் ராட்சத திரையில் இப்படி வந்தது சிஎஸ்கே ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது.

    ஒவ்வொரு போட்டிக்கு முன்பும் திரை சோதனை, வழக்கமான பயிற்சியாக இருந்திருக்கலாம் என்று சிலர் கூறியுள்ளனர். குஜராத் டைட்டன்ஸ் அணிக்கும் இதேபோன்ற சோதனை நடத்தப்பட்டுள்ளது எனவும் கூறி வருகின்றனர்.

    இன்றைய இறுதிப் போட்டியும் ஒரு வேளை மழையால் பாதிக்கப்பட்டால் குஜராத் டைட்டன்ஸ் அணி ஐ.பி.எல் கோப்பையை கைப்பற்றும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×