என் மலர்
சினிமா

விஜய்
நடிகர் விஜய் வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை
சென்னையில் உள்ள நடிகர் விஜய்யின் வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
விஜய் நடிப்பில் கடந்தாண்டு வெளியான படம் பிகில். விஜய்-அட்லி 3-வது முறையாக கூட்டணி சேர்ந்த இப்படம் கலவையான விமர்சனங்களை சந்தித்தாலும், வசூலை வாரிக்குவித்ததாக திரையுலக வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது. இருப்பினும் பிகில் படத்தை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனம் தரப்பில் வசூல் குறித்த எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.
இந்நிலையில், இன்று ஏஜிஎஸ் நிறுவனத்துக்கு சொந்தமான 20 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் தீடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அதேபோல் இந்நிறுவனத்துக்கு கடன் வழங்கிய பைனான்சியர் அன்புச்செழியனின் வீடு மற்றும் அலுவலகங்களிலும் சோதனை நடத்தப்படுகிறது.

பிகில் படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் மாஸ்டர் படத்தில் விஜய் நடித்து வருகிறார். மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தில் இன்று நடைபெற்று வந்தது. அப்போது படப்பிடிப்பு தளத்துக்கு திடீரென வந்த வருமான வரித்துறை அதிகாரிகள், 'பிகில்' பட சம்பள விவகாரம் தொடர்பாக நடிகர் விஜய்யிடம் விசாரணை நடத்தினர். பின்னர் மேற்கொண்டு விசாரணைக்காக விஜய்யை அங்கிருந்து அழைத்து சென்றனர். இதனால் மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு பாதியிலேயே நிறுத்தப்பட்டது.
இந்நிலையில், சென்னை சாலிகிராமம் மற்றும் நீலாங்கரையில் உள்ள விஜய்யின் வீடுகளிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அடுத்தடுத்த இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருவது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Next Story






