என் மலர்tooltip icon

    தரவரிசை

    பிரபு சாலமன் இயக்கத்தில் ராணா, விஷ்ணு விஷால், ஜோயா ஹுசைன் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘காடன்’ படத்தின் விமர்சனம்.
    தங்களுக்கு சொந்தமான காட்டை அரசாங்கத்திடம் ஒப்படைத்து விடுகின்றனர் ராணாவின் குடும்பத்தினர். சிறுவயதில் இருந்தே அந்த காட்டில் வளரும் ராணா, அந்த காட்டின் பாதுகாவலராக இருக்கிறார். சரளமாக ஆங்கிலமும் பேசி அசத்துகிறார். அந்தக் காட்டுக்குள் வாழும் யானைகள், புலிகள் ஆகியவற்றுக்கு அவர் பாதுகாப்பாக விளங்குகிறார்.

    அந்தக் காட்டை அழித்து ஒரு குடியிருப்பை உருவாக்க ரியல் எஸ்டேட் நிறுவனம் முயல்கிறது. காட்டை அழித்து குடியிருப்பு கட்டினால் வனவிலங்குகள் வாழ்விடத்தை இழக்கும் அபாயம் ஏற்படும் என்பதனால் ராணா இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார். இதையடுத்து என்ன ஆனது?. இதனை ராணா தடுத்தாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.

    காடன் விமர்சனம்

    காடனாக நடித்துள்ள ராணா, கதாபாத்திரத்தின் தன்மையை உணர்ந்து தன்னுடைய வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். வனத்துக்கும், விலங்குக்கும், மனிதனுக்கும் உள்ள உறவை தன் நடிப்பின் மூலம் மிக அழகாக வெளிப்படுத்தி இருக்கிறார். 

    யானைப் பாகனாக நடித்துள்ள விஷ்ணு விஷால் குறைந்த அளவிலான காட்சிகளே வந்தாலும், கொடுத்த வேலைகளை கச்சிதமாக செய்திருக்கிறார். இவருக்கும் ஜோயா ஹுசைனுக்கும் இடையிலான காதல் காட்சிகள் ரசிக்கும்படியாக உள்ளன. பத்திரிகையாளராக வரும் ஸ்ரேயா பில்கனோகரும் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்.

    காடன் விமர்சனம்

    இயக்குனர் பிரபு சாலமன், அசாமின் காசியாபாத்தில் நடந்த உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் இந்தப் படத்தை எடுத்திருக்கிறார். காடுகள் அழிக்கப்பட்டால் அதன் விளைவுகள் என்னவாக இருக்கும் என்பதை சொல்லியுள்ள விதம் அருமை. காடுகளின் முக்கியத்துவத்தை பற்றி சொல்ல முயற்சித்துள்ள இயக்குனர், திரைக்கதையில் சற்று சுவாரஸ்யத்தை கூட்டியிருந்தால், காடன் இன்னும் சிறப்பானதாக இருந்திருக்கும்.

    காடன் விமர்சனம்

    ஏ.ஆர்.அசோக்குமாரின் ஒளிப்பதிவு படத்திற்கு மிகப்பெரிய பலம், காடுகளின் எழில் கொஞ்சும் அழகை நேர்த்தியாக காட்சிப்படுத்தி உள்ளார். ஷாந்தனு மொய்த்ராவின் இசையில் பாடல் இனிமை. பின்னணி இசையின் மூலம் காட்சிகளுக்கு விறுவிறுப்பை கூட்டி உள்ளார். ரசூல் பூக்குட்டியின் ஒலிக்கலவையும் சிறப்பாக அமைந்துள்ளது.
     
    மொத்தத்தில் ‘காடன்’ காட்டின் காதலன்.
    ஜெப்ரி இயக்கத்தில் விஷ்ணு மஞ்சு, காஜல் அகர்வால், சுனில் ஷெட்டி நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘அனு அன்ட் அர்ஜுன்’ படத்தின் விமர்சனம்.
    அக்கா, தம்பியான காஜல் அகர்வாலும், விஷ்ணு மஞ்சுவும் இரட்டையர்கள். நாயகன் விஷ்ணு மஞ்சு கால் சென்டரில் வேலை பார்த்து வருகிறார். அப்போது வாடிக்கையாளர்களின் தகவல்களை சட்ட விரோதமாக எடுத்து அதை வெளியே விற்று குறுக்கு வழியில் பணம் சம்பாதித்து வருகிறார். விஷ்ணு மஞ்சுவின் தில்லுமுல்லு வேலைகளை கண்டுபிடிக்கும் கால் சென்டர் முதலாளியான நவ்தீப், அவருடனே கூட்டு சேர்ந்து பெரிய அளவில் கொள்ளையடிக்க திட்டமிடுகின்றார்.

    இதற்காக தனியே ஒரு அலுவலகத்தை தொடங்கி, வெளிநாடுகளில் இருக்கும் பணக்காரர்களிடம் கொள்ளையடிக்கின்றனர். இதற்கு காஜல் அகர்வாலும் உறுதுணையாக இருக்கிறார். ஒரு கட்டத்தில் இவர்கள் அனைவரும் ஒரு பிரச்சனையில் சிக்குகிறார்கள். இதையடுத்து அவர்களுக்கு என்ன ஆனது? அந்த பிரச்சனையில் இருந்து தப்பித்தார்களா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.

    அனு அன்ட் அர்ஜுன் விமர்சனம்

    நாயகன் விஷ்ணு மஞ்சு, மிடுக்கான தோற்றத்துடன் திறம்பட நடித்திருக்கிறார். கொள்ளையடிக்க இவர் போடும் யுக்திகள், சிக்கிய பிறகு அதிலிருந்து தப்பிக்க முயல்வது என ரசிக்கும்படி நடித்துள்ளார். இவரின் அக்காவாக வரும் காஜல் அகர்வால், புத்திசாலி பெண்ணாக நடித்துள்ளார். அழகு பதுமையுடன் வந்து கொடுத்த வேலையை கச்சிதமாக செய்துள்ளார். 

    கால் சென்டர் முதலாளியாக வரும் நவ்திப்பின் நடிப்பும் அட்டகாசம். போலீஸ் அதிகாரியாக வரும் சுனில் ஷெட்டி, வில்லனாக வரும் நவீன் சந்திரா ஆகியோர் சரியான தேர்வு, நேர்த்தியாக நடித்துள்ளனர்.

    அனு அன்ட் அர்ஜுன் விமர்சனம்

    இயக்குனர் ஜெப்ரி, ஐடி துறையில் நடந்த மிகப்பெரிய மோசடியை மையமாக வைத்து இப்படத்தை இயக்கி உள்ளார். கதாபாத்திரங்கள் தேர்வு கச்சிதமாக உள்ளது படத்திற்கு பலம். விறுவிறுப்பான திரைக்கதை படத்திற்கு மிகப்பெரிய பிளஸ் ஆக அமைந்துள்ளது.

    சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார். டப்பிங் படம் என்பதால் பாடல்கள் சுமார் தான். ஆனால் பின்னணி இசை மூலம் படத்திற்கு விறுவிறுப்பை கூட்டி உள்ளார். புரூஸ் மற்றும் ஷெல்டனின் ஒளிப்பதிவில் காட்சிகள் பளிச்சிடுகின்றன.

    மொத்தத்தில் ‘அனு அன்ட் அர்ஜுன்’ விறுவிறுப்பு.
    எஸ்.பிரான்சிஸ் இயக்கத்தில் நிகேஷ் ராம், பெர்லின், கோவை சரளா, தம்பி ராமய்யா நடிப்பில் வெளியாகி இருக்கும் மைக்கேல்பட்டி ராஜா படத்தின் விமர்சனம்.
    மைக்கேல்பட்டியில் இருக்கும் நிகேஷ் ராம், ஊரில் நடக்கும் அநியாயங்களை தட்டி கேட்பதால் அப்பா சுந்தர்ராஜனின் கோபத்துக்கு ஆளாகிறார். தவறே செய்ய முடியாத நாட்டுக்கு அனுப்புகிறேன் என்று சுந்தர்ராஜன் அவரை அரபு நாட்டுக்கு அனுப்புகிறார். 

    அங்கே வேலை பார்க்கும் இடத்தில் நல்ல பெயர் எடுக்கும் நிகேஷ் ராமை, ஒரு பேய் தொல்லை செய்கிறது. யார் அந்த பேய்? நிகேஷ் ராமுக்கும் அந்த பேய்க்கும் என்ன தொடர்பு? என்பதை கலகலப்பாக சொல்லி இருக்கிறார்கள்.

    மைக்கேல்பட்டி ராஜா விமர்சனம்

    நாயகனாக நிகேஷ் ராம் காதல், பாசம், ஆக்‌ஷன், காமெடி என அனைத்தையும் வெளிப்படுத்த வேண்டிய கதாபாத்திரம். ஊரில் இருக்கும்போது இயல்பாக வருபவர், அரபு நாட்டுக்கு சென்ற பிறகு காமெடியில் அசத்துகிறார். தம்பி ராமய்யா, மொட்ட ராஜேந்திரன், அம்பானி சங்கருடன் சேர்ந்து இவர் அடிக்கும் லூட்டி ரசிக்க வைக்கிறது. 

    அரபு அழகு பதுமையாக வரும் பெர்லின் தமிழுக்கு நல்ல வரவு. கதையின் திருப்புமுனை பாத்திரம் என்பதை உணர்ந்து சிறப்பாக நடித்துள்ளார். 

    தம்பி ராமய்யா, கோவை சரளா, ஆர்.சுந்தர்ராஜன், ரவி மரியா, மொட்ட ராஜேந்திரன் என கதாபாத்திர தேர்விலேயே கலகலப்பாக்கி விட்டார் இயக்குனர் பிரான்சிஸ். கலகலப்பான குடும்ப படமாக அமைந்துள்ளது. அரபு நாட்டுக்கு சுற்றுலா சென்ற திருப்தி, காட்சிகளில் ஏற்படுகிறது. கிளைமாக்ஸில் உணர்வுபூர்வமாக முடித்துள்ளார்கள்.

    மைக்கேல்பட்டி ராஜா விமர்சனம்

    சுதீப், அஷ்வமித்திரா கூட்டணியின் இசை, கமர்சியல் படத்துக்கான இசையை அளித்துள்ளது. மனோஜ் பிள்ளையின் ஒளிப்பதிவில் மைக்கேல்பட்டி கிராமத்தின் பசுமை, அரபு நாட்டின் செழுமை இரண்டுமே சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டு உள்ளது. பாலைவன காட்சிகள் பிரம்மிக்க வைக்கின்றன. ராஜா முகம்மதுவின் படத்தொகுப்பும் கச்சிதம்.

    மொத்தத்தில் ‘மைக்கேல்பட்டி ராஜா’ கலகலப்பு.
    நல்.செந்தில்குமார் இயக்கத்தில் மகேந்திரன், மியாஸ்ரீ நடிப்பில் வெளியாகி இருக்கும் நம்ம ஊருக்கு என்னதான் ஆச்சு படத்தின் விமர்சனம்.
    கிராமத்தில் வாழ்ந்து வருகிறார் நாயகன் மகேந்திரன். இவர் இருக்கும் ஊரில் கோவில் திருவிழா நடக்க இருக்கிறது. இதற்காக ஒவ்வொரு குடும்பத்தினரிடம் 1500 ரூபாய் வசூல் செய்யப்படுகிறது. இதில் ஊரில் இருக்கும் ஒருவர் எதிர்ப்பு தெரிவிக்கிறார். மேலும் திருவிழா நடக்கும் போது மதுபோதையில் ரகளையும் செய்கிறார்.

    இந்நிலையில் எதிர்ப்பு தெரிவித்தவர் மறுநாள் இறந்து கிடக்கிறார். இதனால் திருவிழா நிறுத்தப்படுகிறது. மேலும் இறந்தவர் இரவு நேரத்தில் ஆவியாக வருவதாக பலரும் கூறுகிறார்கள். இறுதியில் அந்த ஊருக்கு என்னதான் ஆச்சு? ஆவியாக வந்து பயமுறுத்த என்ன காரணம்? நாயகன் மகேந்திரன் இதை கண்டுபித்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.

    விமர்சனம்

    படத்தில் நாயகனாக நடித்திருக்கும் மகேந்திரன், வழக்கம்போல் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார். எந்த வேலையாக இருந்தாலும் காசு கொடுத்தால்தான் செய்வேன் என்கிற இவருடைய கதாபாத்திரம் ரசிக்க வைக்கிறது. நாயகியாக வரும் மியாஸ்ரீ, மகேந்திரனை காதலிப்பது, பாடல்களுக்கு என்று வந்து செல்கிறார். ஆர்.சுந்தர்ராஜன், மனோஜ் குமார், பசங்க சிவக்குமார், அப்புக் குட்டி, தவசி, பெஞ்சமின், லொள்ளு சபா உதயா ஆகியோர் திரைக்கதை ஓட்டத்திற்கு உதவி இருக்கிறார்கள்.

    விமர்சனம்

    சின்ன கதையை சஸ்பென்ஸ், திரில்லர் கலந்து சொல்லி இருக்கிறார் இயக்குனர் நல்.செந்தில்குமார். கதாபாத்திரங்களிடையே சிறப்பாக வேலை வாங்கி இருக்கிறார். கிராமத்தில் நடக்கும் அமானுஷ்ய விஷயங்கள் ஒரு பக்கம் நடக்கும் போது, தேவையில்லாத காட்சிகள் படத்திற்கு வந்து செல்வது பலவீனமாக அமைந்திருக்கிறது. 3 மணிநேர படத்திற்காக தேவையில்லாத விஷயங்களை திணித்தது போல் இருக்கிறது. திரைக்கதையில் கவனம் செலுத்தி இருந்தால் கூடுதலாக ரசித்திருக்கலாம்.

    ஜே.ஆர்.கே.வின் ஒளிப்பதிவும், ஸ்ரீகாந்த் தேவாவின் இசையும் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது. 

    மொத்தத்தில் ‘நம்ம ஊருக்கு என்னதான் ஆச்சு’ சுவாரஸ்யம் குறைவு.
    அருள், காசிமா ரஃபி, அகிலா நாராயணன், சர்ஜுன், நிம்மி, பூஜிதா, சௌமியா ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘காதம்பரி’ படத்தின் விமர்சனம்.
    நாயகன் அருள், தனது காதலி, தங்கை உள்பட 4 பேருடன் ஒரு காட்டுப்பகுதிக்கு காரில் செல்கிறார். செல்லும் வழியில் கார் விபத்துக்குள்ளாகிறது. அந்த சமயத்தில் மழை பெய்ததால், அருகில் உள்ள பங்களாவில் ஓய்வெடுக்க செல்கின்றனர். அனைவரும் பங்களாவை சுற்றிப்பார்த்துக் கொண்டிருக்கும் சமயத்தில், ஒரு குழந்தை அழும் சத்தம் கேட்கிறது. அப்போது நாயகனின் தங்கை, அது என்னவென்று சென்று பார்க்கிறார்.

    அங்கு ஒரு அறையில் குழந்தை ஒன்று இருப்பதை பார்க்கிறார். இதையடுத்து அந்த அறையில் இருந்து குழந்தையை காப்பாற்றுகிறார். அந்த குழந்தையை காப்பாற்றிய பிறகு சில அமானுஷ்யமான விஷயங்கள் அந்த பங்களாவில் நடக்கிறது. இதையடுத்து என்ன ஆனது? அவர்கள் அந்த பங்களாவில் இருந்து தப்பித்தார்களா? இல்லையா? அந்தக் குழந்தை ஏன் அங்கு அடைத்து வைக்கப்பட்டிருந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.

    விமர்சனம்

    இப்படத்தின் இயக்குனர் அருள்தான் நாயகனாகவும் நடித்திருக்கிறார். இதுதான் அவருக்கு முதல் படம் என்பதை அவரின் நடிப்பே காட்டி விடுகிறது. கதாநாயகியாக நடித்துள்ள காசிமா ரஃபி மற்றும் முக்கிய கதாபாத்திரங்களில் வரும் அகிலா நாராயணன், சர்ஜுன், நிம்மி, பூஜிதா, சௌமியா என அனைவருமே புதுமுகங்கள் தான். இவர்களும் நடிப்பில் பெரிதாக சோபிக்கவில்லை.

    இயக்குனர் அருள், முழுக்க முழுக்க திகில் படமாக உருவாக்க வேண்டும் என்பதற்காக படத்தை பாடல்களே இல்லாமல் எடுத்துள்ள விதம் பாராட்டத்தக்கது. ஒருசில இடங்களில் பயப்பட வைத்தாலும், மெதுவாக நகரும் திரைக்கதை படத்திற்கு பின்னடைவாக அமைந்துள்ளது. கதாபாத்திரங்களின் தேர்விலும் கவனம் செலுத்தி இருக்கலாம்.

    விமர்சனம்

    குறைந்த பட்ஜெட் படம் என்பதனால், படத்தின் பெரும்பாலான காட்சிகளை பங்களாவிற்குள்ளேயே எடுத்துள்ளனர். இதற்கு ஏற்றார் போல் வித்தியாசமான கோணங்களில் காட்சிப்படுத்தி உள்ளார் ஒளிப்பதிவாளர் விடிகே உதயன், படத்தில் பாடல் எதுவும் இல்லை என்பதால் தனது முழு உழைப்பையும் பின்னணி இசை மூலம் வெளிப்படுத்தி இருக்கிறார் இசையமைப்பாளர் பிருத்வி.

    மொத்தத்தில் ‘காதம்பரி’ திகில் குறைவு.
    கணேஷ் விநாயகன் இயக்கத்தில் தருண் குமார், அபர்னதி நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘தேன்’ படத்தின் விமர்சனம்.
    குறிஞ்சிக்குடி மலைக் கிராமத்தைச் சேர்ந்தவர் தருண் குமார். இவர் மலைத்தேன் எடுப்பதை தொழிலாகச் செய்து வருகிறார். மற்றொரு மலைக் கிராமத்தை சேர்ந்த நாயகி அபர்ணதி, தனது தந்தை தேவராஜ் உடல் நலத்திற்காக மலைத்தேன் தேடி செல்கிறார். அபர்ணதியின் நிலையை அறிந்து அவருக்கு உதவுகிறார் தருண் குமார்.

    இந்த பழக்கத்தில் இவர்கள் இருவருக்கும் காதல் ஏற்படுகிறது. இவர்கள் திருமணம் செய்ய முடிவு செய்து ஊர் மக்கள் முன்னிலையில், வாழை மட்டையை இரண்டாகப் பிரித்து சாமியிடம் திருமணத்துக்குச் சம்மதம் கேட்கிறார்கள். வாழை மட்டை சரியாக பிரியாததால், சாமி வரம் கொடுக்கவில்லை என்று கூறி, ஊர் பெரியவர்கள் திருமணத்துக்கு மறுக்கிறார்கள்.

    தேன் விமர்சனம்

    தருணை மறக்க முடியாத அபர்ணதி, ஊர் முடிவை எதிர்த்துத் திருமணம் செய்துகொள்கிறார். பெண் குழந்தை பிறந்த நிலையில், அபர்ணதிக்கு உடல் நலக்குறைவு ஏற்படுகிறது. மனைவி அபர்ணதியின் சிகிச்சைக்காக மலை கிராமத்தை விட்டு ஊருக்குள் வரும் தருணுக்கு பல சிக்கல்கள் ஏற்படுகிறது.

    இறுதியில் சிக்கல்களை கடந்து மனைவி அபர்ணதியின் உயிரை தருண் காப்பாற்றினாரா? அபர்ணதிக்கு உடல் நலக்குறைவு ஏற்படக் காரணம் என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.

    'குங்கமப்பூவும் கொஞ்சும் புறாவும்', 'தகராறு' உள்ளிட்ட படங்களில் வில்லனாக நடித்த தருண் குமார், இப்படத்தில் நாயகனாக நடித்திருக்கிறார். இவரது வெள்ளந்தியான நடிப்பு மலைக் கிராமத்து மனிதனைக் கண்முன் நிறுத்துகிறது. கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தி இருக்கிறார்.

    தேன் விமர்சனம்

    நாயகியான அபர்ணதி, மலைக்கிராமத்து பூங்கொடியாகவே மாறி இருக்கிறார். இவர் பேசும் மொழி, உடல் மொழி அனைத்தும் கதாபாத்திரதிற்கு வலு சேர்த்திருக்கிறது. இவரின் மிகை இல்லாத நடிப்பு ரசிக்க வைக்கிறது. வாய் பேசாமல் நடித்திருக்கும் பேபி அனுஸ்ரீ பரிதாபத்தை ஏற்படுத்தி கண் கலங்க வைக்கிறார்.

    'தகராறு', 'வீர சிவாஜி' படங்களை இயக்கிய கணேஷ் விநாயகன், மலை கிராம மக்களின் வாழ்வியல், அரசியல், கார்ப்ரேட் நிறுவனம் ஆகியவற்றை மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார். எளியதாக தொடங்கும் கதைக்களம் இறுதியில் பார்ப்பவர்களை கதைக்குள் ஒன்ற வைக்கிறது. அரசு அதிகாரிகளின் அலட்சியம், பண மதிப்பிழப்பு, கார்ப்பரேட் அரசியல், இயற்கை வளங்கள் சூறையாடப்படுவது, மலைக்கிராமங்கள் வேட்டையாடப்படுவது, காட்டுத்தீ என பல விஷயங்களை சொல்லி இருக்கிறார்.

    தேன் விமர்சனம்

    சுகுமாரின் ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்து படைத்திருக்கிறது. அருவியின் ஆர்ப்பரிப்பு, மலையின் அழகு என ஒளிப்பதிவில் பளிச்சிடுகிறார். சனந்த் பரத்வாஜியின் இசையும் பின்னணியும் படத்திற்கு பலம்.

    மொத்தத்தில் ‘தேன்’ சுவை அதிகம்.
    டோனி ஜா, ரான் பெர்ல்மேன், டால்ப் லன்ட்க்ரன் நடிப்பில் வெளியாகி இருக்கும் வீர தீரன் படத்தின் விமர்சனம்.
    தாய்லாந்தில் பெண்களை கடத்தி விற்கும் தொழில் செய்து வருகிறார் ரான் பெர்ல்மேன். இவரை சட்டப்படி கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் அதற்கான முயற்சியில் இறங்குகிறார் ஹாங்காங் போலீஸ் அதிகாரி டோனி ஜா. இந்த நிலையில், தொழில் விஷயமாக அமெரிக்கா வருகிறார் ரான் பெர்ல்மேன். அவருக்கு தண்ணி காட்டி, அவரை எப்படியாவது கைது செய்ய திட்டமிடுகிறார் அமெரிக்க போலீஸ் அதிகாரி டால்ப் லன்ட்க்ரன்.

    மேலும் தனது திட்டப்படி ரான் பெர்ல்மேனை கைது செய்கிறார். இருவருக்குமிடையேயான சண்டையில் ரானின் கடைசி மகனை டால்ப் லன்ட்க்ரன் சுட்டதில் அவரது மகன் உயிரிழக்கிறார்.

    விமர்சனம்

    இதனால் கடும் கோபத்திற்குள்ளாகும் ரானின் மூத்த மகன்கள் டால்ப்பின் ஒட்டுமொத்த குடும்பத்தையும் அழித்து விடுகிறார்கள். டால்ப் மயிரிழையில் உயிர் தப்புகிறார். இதற்கிடையே ரான் பெர்ல்மேன் விடுதலையாகி தாய்லாந்துக்கு திரும்புகிறார்.

    தனது குடும்பத்தையே அழித்த ரானை கொல்வதற்காக டால்ப் லன்ட்க்ரனும் தாய்லாந்துக்கு வருகிறார். டால்ப்பை கண்காணிக்கும்படி டோனி ஜாவுக்கு அறிவுறுத்தப்படுகிறது.

    கடைசியில் தனது குடும்பத்தை கொன்ற ரான் பெர்ல்மேனை, டால்ப் லன்ட்க்ரன் பழி வாங்கினாரா? டோனி ஜா அவரை தடுத்தாரா? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.

    விமர்சனம்

    டால்ப் லன்ட்க்ரன், டோனி ஜா என இருவருமே அதிரடியாக போட்டி போட்டுக் கொண்டு நடித்திருக்கிறார்கள். குறிப்பாக சண்டைக்காட்சிகளில் இருவருமே தங்களது திறமையை நிரூபித்திருக்கிறார்கள். ரான் பெர்ல்மேன் இருவருக்கும் ஈடுகொடுத்து நடித்திருக்கிறார். பீட்டர் வெல்லர், செலினா ஜேட் உள்ளிட்ட மற்ற கதாபாத்திரங்களும் சிறப்பாக நடித்துள்ளார்கள்.

    டோனி ஜா, டால்ப் லன்ட்க்ரன் என முன்னணி நட்சத்திரங்களை வைத்து அதிரடி கலந்த த்ரில்லர் படத்தை உருவாக்கி இருக்கிறார் இயக்குநர் எகச்சாய் உக்ரோந்தம். அமெரிக்கா, தாய்லாந்து என காட்சிகளை நகர்த்தி திரைக்கதையில் விறுவிறுப்பை கூட்டியிருக்கிறார்.

    ஜேக்கப் குரோத்தின் இசையும், பென் நாட்டின் ஒளிப்பதிவும் படத்திற்கு வலுசேர்த்திருக்கிறது. 

    மொத்தத்தில் `வீர தீரன்' வீரமானவன்.
    அழகப்பன் இயக்கத்தில் துல்கர் சல்மான், மாளவிகா மோகனன் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘காதல் இது காதல்’ படத்தின் விமர்சனம்.
    நாயகன் துல்கர் சல்மானும், நாயகி மாளவிகா மோகனனும் வெவ்வேறு மதத்தை சேர்ந்தவர்கள். காதலித்து வரும் இவர்கள் இருவரும், ஒரு கட்டத்தில் வீட்டை விட்டு ஓடி விடுகின்றனர். ஊட்டிக்கு செல்லும் அவர்கள், அங்கு ஜாலியாக சுற்றுகின்றனர். கையில் காசு இருக்கும் வரை ஆடம்பரமாக செலவு செய்கின்றனர். ஒரு கட்டத்தில் கொண்டுவந்த பணமெல்லாம் காலியாகிறது.

    கையில் பணமில்லாத சமயத்தில் இவர்கள் இருவருக்குள்ளும் அடிக்கடி சண்டை ஏற்பட ஆரம்பிக்கிறது. பின்னர் அது ஈகோ மோதலாக மாறி இருவரும் பிரிந்துவிடுகின்றனர். குடும்பத்தினரிடம் நடந்ததை எடுத்துக்கூறி அவரவரவர் வீட்டுக்கு சென்றுவிடுகின்றனர். 

    காதல் இது காதல் விமர்சனம்

    பின்னர் துல்கர் சல்மானுக்கு ஒரு இடத்தில் வேலை கிடைக்கிறது. அதே அலுவலகத்தில் நாயகி மாளவிகா மோகனனுக்கும் வேலை கிடைக்கிறது. இதனால் அவர்கள் இருவரும் சந்திக்க நேர்கிறது. இதையடுத்து என்ன ஆனது? அவர்கள் இருவரும் மீண்டும் இணைந்தார்களா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக் கதை.

    கடந்த 2013-ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான ‘பட்டம் போல’ எனும் மலையாள படமான இது, தற்போது தமிழ் டப்பிங் செய்து வெளியிடப்பட்டுள்ளது. நாயகன் துல்கர் சல்மானும், நாயகி மாளவிகா மோகனனும் திரையுலகில் அறிமுகமானபோது வந்த படம் என்பதால் அவர்களது நடிப்பு பெரிதாக கவரவில்லை. மற்றபடி ஜெயப்பிரகாஷ், சீதா, இளவரசு, லீமா பாபு ஆகியோரின் அனுபவ நடிப்பு படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.

    காதல் இது காதல் விமர்சனம்

    இயக்குனர் அழகப்பன், அவர் இயக்கிய முதல் படம் இது. படத்தின் கதை, பல படங்களில் பார்த்து பழகிய கதை போல் உள்ளது பின்னடைவாக உள்ளது. திரைக்கதையும் மெதுவாக நகர்வது சோர்வைத் தருகிறது. 

    படத்திற்கு ஒளிப்பதிவும் இவரே செய்திருக்கிறார். வண்ணமையமான காட்சி அமைப்பால் கவர்ந்திருக்கிறார். எம் ஜெயச்சந்திரனின் இசையில் பாடல்கள் சுமார் ரகம் தான். பின்னணி இசை மூலம் ஓரளவு ரசிக்க வைத்துள்ளார்.

    மொத்தத்தில் ‘காதல் இது காதல்’ சோர்வு.
    எலி ரோத் இயக்கத்தில் லாரன்ஸா, டேரில் சபரா, ஏரியல் லெவி நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘தி கிரீன் இன்பெர்னோ’ படத்தின் விமர்சனம்.
    தொழிற்சாலை அமைப்பதற்காக வனப்பகுதியில் ஒரு கும்பல் மரங்களை வெட்டி ஆக்கிரமிப்பு செய்து வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். நாயகி லாரன்ஸாவும், தனது கல்லூரி நண்பர்களுடன் இந்த போராட்டத்தில் கலந்து கொள்கிறாள். 

    இதையடுத்து மரம் வெட்டுபவர்கள் போல் உடையணிந்து, நண்பர்களுடன் காட்டுக்குள் செல்லும் நாயகி, அங்கு நடப்பவற்றை வீடியோ எடுத்து அனுப்புகிறார். இதையடுத்து அந்த தொழிற்சாலை அமைப்பதற்கான பணி நிறுத்தப்படுகிறது. 

    பின்னர் காட்டை விட்டு வெளியே வரும்போது நாயகியும், அவரது நண்பர்களும், மனிதர்களை கொன்று தின்னும் காட்டுவாசிகளிடம் சிக்குகிறார்கள். இவர்களை காட்டுவாசிகள் சிறைபிடிக்கின்றனர். பின்னர் அந்த காட்டுவாசிகளிடம் இருந்து அவர்கள் தப்பித்தார்களா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை. 

    தி கிரீன் இன்பெர்னோ விமர்சனம்

    அட்வெஞ்சர் ஹாரர் படமான இதை எலி ரோத் இயக்கி இருக்கிறார். காட்டுக்குள் மாட்டிக்கொள்ளும் 6 நண்பர்கள் எப்படி தப்பித்தார்கள் என்பதை விறுவிறுப்பாக காட்டி இருக்கிறார். காட்டு வாசிகள் கதாபாத்திரத்தை மிகவும் கொடூரமாக வடிவமைத்துள்ளார். பார்க்கும் நமக்கே அவர்கள் மீது பயம் வரும் அளவுக்கு காட்டி இருக்கிறார்கள்.

    லாரன்ஸா, டேரில் சபரா, ஏரியல் லெவி ஆகியோரது நடிப்பு பிரமாதம். கதாபாத்திரங்களின் தேர்வு படத்திற்கு பலமாக அமைந்துள்ளது. 

    தி கிரீன் இன்பெர்னோ விமர்சனம்

    ஆண்டனியோ கேர்சியாவின் நேர்த்தியான ஒளிப்பதிவில் காடுகளின் எழில் கொஞ்சும் அழகை திரையில் ரசிக்க முடிகிறது. மானுவேல் ரிவெய்ரோவின் பின்னணி இசை படத்திற்கு விறுவிறுப்பை கூட்டி இருக்கிறது.

    மொத்தத்தில் ‘தி கிரீன் இன்பெர்னோ’ திகிலூட்டுகிறது.
    ஆர்.டி.குஷால் குமார் இயக்கத்தில் கெவின், சாரா நடிப்பில் வெளியாகி இருக்கும் பூம் பூம் காளை படத்தின் விமர்சனம்.
    நாயகன் கெவின் - நாயகி சாரா இருவருக்கும் திருமணம் ஆகிறது. இருவரும் தேனிலவிற்காக ஊட்டி செல்கிறார்கள். அங்கு முதலிரவிற்காக தயாராகிறார் கெவின். ஆனால், சாராவோ நமக்குள் நல்ல புரிதல் வந்த பிறகு முதலிரவு வைத்துக் கொள்ளலாம் என்று தடை போடுகிறார்.

    தன் ஆசைகளை கட்டுப்படுத்த முடியாத கெவின், சாராவை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். ஆனால், சாரா, கெவினின் ஆசைக்கு அடங்க மறுக்கிறார். இதனால் இவர்களுக்குள் விரிசல் ஏற்படுகிறது. இறுதியில் இருவரும் வாழ்க்கையில் ஒன்று சேர்ந்தார்களா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.

    பூம் பூம் காளை விமர்சனம்

    நாயகன் கெவின், அடங்காத காளை போல், இவரின் நடிப்பை ஓரளவிற்கு ரசிக்க முடிகிறது. நாயகி சாரா, கொடுத்த வேலையை செய்திருக்கிறார். இருவரும் புதுமுகங்கள் என்பது திரையில் தெளிவாக தெரிகிறது. இருவருக்கும் இடையேயான கெமிஸ்ட்ரி நன்றாக இருக்கிறது.

    போலீஸ் அதிகாரியாக வரும் அபிநயஸ்ரீ நடிப்பில் பளிச்சிடுகிறார். அப்புக்குட்டியின் காமெடி திரைக்கதை ஓட்டத்திற்கு ஆங்காங்கே கை கொடுத்திருக்கிறது. 

    பூம் பூம் காளை விமர்சனம்

    கணவன், மனைவிக்குள் நடக்கும் ஈகோவை மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் ஆர்.டி.குஷால் குமார். இரண்டு கதாபாத்திரங்களை மட்டுமே திரையில் அதிக நேரம் காண்பித்து, அவர்களை சுற்றியே அதிக நேரம் திரைக்கதை நகர்வது அதிக சுவாரஸ்யம் இல்லாமல் இருக்கிறது. ஆர்.சுந்தராஜன், சச்சு ஜோடியை வைத்து இளைய தலைமுறைக்கு அறிவுரை சொல்லி இருக்கிறார். இதை ஓரளவிற்கு ஏற்க முடிகிறது.

    பூம் பூம் காளை விமர்சனம்

    கே.பி.வேல்முருகனின் ஒளிப்பதிவு, ஊட்டியை அழகாக காண்பிக்கிறது. ஸ்ரீநாத்தின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். ரிஷா ஆடும் குத்தாடம் தாளம் போட வைக்கிறது.

    மொத்தத்தில் ‘பூம் பூம் காளை’ அடங்கிய காளை.
    சின்னா, ராஜ் பிரியன், காசிமாயன் நடிப்பில் வீரங்கன் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் ‘கணேசாபுரம்’ படத்தின் விமர்சனம்.
    கணேசாபுரம் கிராமத்தைச் சேர்ந்த சின்னா, ராஜ் பிரியன் மற்றும் காசிமாயன் மூவரும் நெருங்கிய நண்பர்கள். இவர்கள் திருடுவதை தொழிலாக வைத்திருக்கிறார்கள். இவர்கள் போல் பல ஊர்களை சேர்ந்த திருட்டு கும்பல்களை தனது கைக்குள் வைத்து இருக்கிறார் ஜமீந்தார் பசுபதி ராஜ்.

    ஒருநாள் பஞ்சாயத்தின் போது, ஊர் தலைவர் கயல் பெரேராவை சின்னா அடித்து விடுகிறார். இதனால் கோபமடையும் பெரேராவின் மகன் ராஜசிம்மன், சின்னா மற்றும் நண்பர்கள் அனைவரையும் கொல்ல முயற்சி செய்து வருகிறார். 

    இந்நிலையில் நாயகி ரிஷாவை சின்னா காதலிக்க ஆரம்பிப்பதால், நண்பர்களுக்குள் சண்டை ஏற்படுகிறது. நண்பர்களின் சண்டையால் திருட்டு தொழிலுக்கும் செல்லாமல் இருக்கிறார்கள். 
    விமர்சனம்

    இறுதியில் ராஜசிம்மன், சின்னா மற்றும் நண்பர்களை கொலை செய்தாரா? பிரிந்த நண்பர்கள் ஒன்று சேர்ந்தார்களா? என்பதே படத்தின் மீதிக்கதை.

    படத்தில் நாயகனாக நடித்திருக்கும் சின்னா, அம்மாசி கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார். ஆனால், காலரை தூக்கிவிடுவது, லுங்கியை தூக்கி கட்டுவது, பீடி பிடிப்பது என்று அடிக்கடி செய்வதால் எரிச்சலடைய வைக்கிறது. டிக் டாக் மூலமாக பிரபலமான ராஜ் பிரியன், சின்னாவின் நண்பராக நடித்திருக்கிறார். முதல் படம் என்று தெரியாதளவிற்கு அனுபவ நடிப்பை கொடுத்திருக்கிறார். மற்றொரு நண்பராக வரும் காசிமாயனின் நடிப்பு ஓகே தான். ஆனால், இவருக்கான காதல் காட்சிகள், பாடல் என இரண்டுமே படத்தோடு ஒட்டவில்லை. 

    கயல் பெரேரா, ராஜ சிம்மன், பசுபதி ராஜ், சரவண சக்தி ஆகியோர் கொடுத்த வேலையை செய்திருக்கிறார்கள். நாயகி ரிஷா புதுமுகம் என்பதால் மன்னித்து விடலாம்.

    விமர்சனம்

    நட்பு, காதல், திருட்டு என கிராமத்து பின்னணியில் படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் வீரங்கன். படத்தின் காட்சிகளை பார்க்கும் போது கிராமத்து பின்னணியில் வெளியான பல படங்களை ஞாபகப்படுத்துகிறது. யூகிக்கும்படியான காட்சிகள், தந்துவ வசனங்கள், இரண்டாம் பாதியின் நீளம் ஆகியவை படத்திற்கு பலவீனம். 

    வாசுவின் ஒளிப்பதிவை ஓரளவிற்கு ரசிக்க முடிகிறது. ராஜா சாயின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணி இசையும் திரைக்கதைக்கு கைக்கொடுத்திருக்கிறது.

    மொத்தத்தில் ‘கணேசாபுரம்’ கவரவில்லை.
    சக்தி செளந்தர் ராஜன் இயக்கத்தில் ஆர்யா, சாயீஷா நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘டெடி’ படத்தின் விமர்சனம்.
    அதிபுத்திசாலி இளைஞரான ஆர்யா, எந்த ஒரு வேலையையும் நேர்த்தியாக செய்யக்கூடிய குணம் கொண்டவர். மறுபுறம் கல்லூரி மாணவியான சாயீஷா, ஒரு விபத்தில் சிக்குகிறார். அப்போது அவருக்கு லேசாக காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். அப்போது அங்கு ஒரு கும்பல் செய்யும் சதிச் செயலால் சாயிஷா கோமா நிலைக்கு செல்கிறார். அவரை கடத்திச் செல்கின்றனர்.

    கோமா நிலைக்கு செல்லும் போது அருகில் இருக்கும் டெடி பியர் பொம்மையை சாயீஷா கெட்டியாக பிடித்துக் கொள்கிறார். அப்போது அவரின் ஆத்மா அந்த டெடி பியருக்குள் புகுந்துவிடுகிறது. இதையடுத்து உயிர்பெறும் அந்த டெடி பியர், ஆர்யாவை சந்தித்து தன் நிலையை எடுத்து சொல்கிறது. ஆர்யாவும் அதற்கு உதவ முன்வருகிறார். இறுதியில் ஆர்யாவும் டெடியும் சேர்ந்து சாயீஷாவை கண்டுபிடித்தார்களா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.

    டெடி விமர்சனம்

    நாயகன் ஆர்யா, புத்திசாலி இளைஞனாக நடித்திருக்கிறார். அவரது வழக்கமான துறுதுறு நடிப்பை வெளிப்படுத்தாமல் மிடுக்கான வேடத்தில் நடித்து வித்தியாசம் காட்டி இருக்கிறார். ஆக்‌ஷன் காட்சிகளில் தூள் கிளப்பி இருக்கிறார். 

    நாயகி சாயீஷாவிற்கு படத்தில் சின்ன ரோல் தான். ஆரம்பத்தின் ஒரு காட்சியில் வரும் அவர், பின்னர் கிளைமாக்ஸில் தான் வருகிறார். அவருக்கு பெரிதாக ஸ்கோர் செய்வதற்கான வாய்ப்பு இப்படத்தில் வழங்கப்படவில்லை என்றே சொல்லலாம்.

    டெடி விமர்சனம்

    பிரபல இயக்குனர் மகிழ் திருமேனி ஸ்டைலிஷ் வில்லனாக நடித்திருக்கிறார். அக்கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தி இருக்கிறார். அவரது குரல் மிகப்பெரிய பிளஸ் ஆக அமைந்துள்ளது. கருணாகரன், சதீஷ் ஆகியோர் கொடுத்த வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார்கள்.

    அனிமேஷன் கதாபாத்திரமான டெடி, படத்தின் மற்றொரு ஹீரோ என்றே சொல்லலாம். படம் முழுக்க ஆர்யாவுடன் பயணிக்கும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது. அந்த டெடியை பார்க்கும் போது அனிமேஷன் போல் அல்லாமல் ஒரு பொம்மை நிஜத்தில் நடந்தால் எப்படி இருக்கும் என்பதை தத்ரூபமாக காட்டி உள்ளனர். 

    டெடி விமர்சனம்

    இயக்குனர் சக்தி செளந்தர் ராஜன், முதல் பாதியை விறுவிறுப்பாக நகர்த்தியவர், இரண்டாம் பாதியில் கோட்டை விட்டுள்ளார். சில இடங்களில் லாஜிக் மீறல்கள் அப்பட்டமாக தெரிவது படத்தின் மைனஸ். மற்றபடி ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் திறம்பட கையாண்டுள்ளார்.

    யுவாவின் ஒளிப்பதிவும் டி இமானின் இசையும் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது. ஒளிப்பதிவாளர் யுவா, ஒவ்வொரு காட்சியை கண்களை கவரும் வகையில் வண்ணமையமாக காட்சிப்படுத்தி இருக்கிறார். டி இமானின் இசையில் பாடல்கள் ரசிக்கும் படி உள்ளன. பின்னணி இசை காட்சிகளுக்கு வலுசேர்த்திருக்கின்றன.

    மொத்தத்தில் ‘டெடி’ அழகு.
    ×