77 நாட்களுக்கு பிறகுதான் பிரதமரே வாய் திறக்கிறார்- ரோகிணி ஆதங்கம்

பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்ட வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இந்த சம்பவத்திற்கு நாடு தழுவிய அளவில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
77 நாட்களுக்கு பிறகுதான் பிரதமரே வாய் திறக்கிறார்- ரோகிணி ஆதங்கம்
Published on

மணிப்பூரில் வன்முறை நடந்து வரும் நிலையில், கடந்த புதன்கிழமை வெளியான வீடியோ அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அதில் இரண்டு பெண்கள் நிர்வாணமாக்கி ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்டனர். இதற்கு நாடு தழுவிய அளவில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதுதொடர்பாக நான்கு பேரை போலீசார் கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். போலீயான ஒரு வீடியோவால் பழிக்குப்பழி கதையாக இந்த மனிதாபிமானமற்ற சம்பவம் நடைபெற்றுள்ளது.

இந்நிலையில், இந்த சம்பவத்தின் மீது நடவடிக்கை எடுக்காதது வெட்கக்கேடானது என்று நடிகை ரோகிணி கூறியுள்ளார். இது குறித்து அவர், "ஒட்டு மொத்த நாடும் வெட்கப்படக் கூடிய ஒரு விஷயம் இது. ஒரு பெண்ணின் உடலை நிர்வாணமாக்கி, ஊர்வலமாக அழைத்து சென்று வன்புணர்வு செய்திருப்பது நாம் அனைவருக்கும் வெட்கக்கேடு. இதன் மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பது அதை விட வெட்கக்கேடு.

77 நாட்களுக்கு பிறகு தான் பிரதமர் இதைபற்றி வாய் திறக்கிறார் என்பது எப்படிப்பட்ட செய்தியை மக்களுக்கு சொல்கிறது என்பதை யோசித்து பார்க்க வேண்டும். நம் சமூகத்தில் பெண்ணின் உடல் மீது சமூக கவுரவத்தையும் அனைவரின் மரியாதையும் புகுத்தி வைத்திருப்பதால்தான் இப்படி செய்ய தோன்றுகிறது. பெண்களை நிர்வாணப்படுத்திவிட்டால் உங்களை நாங்கள் அவமானப்படுத்தியதற்கு சமம் என்று நினைக்கிறார்கள். நம்முடைய அவமானங்களின் சின்னமாக பெண்களின் உடலை உருவாக்கியிருப்பது சமூகம் தான்.

பெண் உடல் பற்றிய இந்த மாதிரியான பார்வையை எப்போது களைகிறோமோ அப்போதுதான் பெண்களுக்கு இதிலிருந்து விடுதலை கிடைக்கும். இப்படிப்பட்ட குற்றங்கள் நடக்கும் போது போய் உடனடியாக நிற்க வேண்டிய காவல்துறையை அதை வேடிக்கை பார்த்தார்கள் என்று அந்த பெண் சொல்லியிருக்கிறார். இது எந்த அளவிற்கு நியாயம் என்பதை பிரதமர் நரேந்திர மோடியும் மணிப்பூர் முதல்வரும் கூற வேண்டும்" என்று பேசினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com