என் மலர்
சினிமா செய்திகள்

மை லார்ட்- திரைவிமர்சனம்
நாயகன் சசிகுமார் தனது மனைவியுடன் கோவில்பட்டியில் வாழ்ந்து வருகிறார். மத்திய மந்திரியாக இருக்கும் ஆஷா சரத் இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்து அவருக்கு உடனடியாக மாற்று சிறுநீரக சிகிச்சை தேவைப்படுகிறது. அவருடைய ரத்தவகை மிகவும் அரிய வகை என்பதால் நீண்ட தேடலுக்கு பிறகு சிறுநீரக தானத்திற்கு 2 பேரை தேர்வு செய்கிறார்கள். அதில் ஒருவர் சசிகுமார்.
ஆஷா சரத்தின் உடல்நிலை வெளியுலகிற்கு தெரியாமல் இருக்க வேண்டும் என அறுவை சிகிச்சையை ரகசியமாக நடத்த திட்டமிட்டு சசிகுமாரை அழைத்து வர முயற்சியில் ஆஷா சரத் குழு முயற்சி செய்கிறது. அதே சமயம் கோவில்பட்டியில் பல பிரச்சனைகளுடன் போராடி வரும் சசிகுமார் சிறுநீரகம் கொடுக்க மறுப்பு தெரிவிக்கிறார்.
இறுதியில் சசிகுமார் சிறுநீரகம் கொடுத்தாரா? சசிகுமாருக்கு இருக்கும் பிரச்சனை என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.
நடிகர்கள்
படத்தில் நாயகனாக நடித்து இருக்கும் சசிகுமார் அறிமுக காட்சியிலேயே கைத்தட்டல் வாங்கி இருக்கிறார். கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டப்பட்ட நிலையில் பிணவறையில் இருந்து உயிருடன் வெளியே வந்து நடனம் ஆடும் காட்சி சிறப்பு.
மனைவி சைத்ராவுடன் பாசம், அரசாங்கம் மீது கோபம், மற்றவர்கள் மீது இருக்கும் மனிதநேயம் என நடிப்பில் ஸ்கோர் செய்து இருக்கிறார். மனைவியாக வரும் சைத்ரா, பீடி பிடிப்பது, சாமியாடுவது சசிகுமாருடன் மருத்துவமனைக்கு அலைவது என நடிப்பில் கவனிக்க வைத்து இருக்கிறார்.
ஆஷா சரத்தின் நடிப்பு படத்திற்கு பெரிய பலம். இறக்க போகிறோம் என்ற பயத்தையும், அரசியல்வாதி என்ற திமிரையும், அழகாக வெளிப்படுத்தி இருக்கிறார். பத்திரிகையாளராக குரு சோமசுந்தரம், நீதிபதியாக ஜெயபிரகாஷ், வழக்கறிஞராக கோபி நயினார் ஆகியோர் நடிப்பு கூடுதல் பலம்.
இயக்கம்
ஆட்சியும் அதிகாரமும் இருந்தால் எதுவென்றாலும் செய்ய முடியும். சாதாரண மனிதனின் வாழ்க்கையை எப்படி வேண்டும் என்றாலும் மாற்ற முடியும் என்பதை சொல்லி இருக்கிறார் இயக்குனர் ராஜு முருகன்.
சாதாரண மக்களின் ஏழ்மையை பயன்படுத்தி, செல்வந்தர்கள் மற்றும் அரசியல்வாதிகள் எப்படி ஏமாற்றுகிறார்கள் என்பதை அழுத்தமாக சொல்லி இருக்கிறார் இயக்குனர். சாதாரண மனிதனின் வாழ்க்கை, அரசியல் அதிகாரம் இரண்டையும் இணைத்து திரைக்கதையை அமைத்து இருக்கிறார். கதாபாத்திரங்களிடையே திறமையாக வேலை வாங்கி இருக்கிறார். முதல்பாதியில் மெதுவாக செல்லும் திரைக்கதை பலவீனம்.
இசை
ஷான் ரோல்டன் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணி இசையை ரசிக்கும் படி கொடுத்து இருக்கிறார்.
ஒளிப்பதிவு
நீரவ்ஷா ஒளிப்பதிவு ரசிக்க வைக்கிறது.
ரேட்டிங்-3/5






