என் மலர்
சினிமா

மாரி செல்வராஜ், தனுஷ்
நடிகர் தனுஷின் ‘கர்ணன்’ படத்திற்கு தடைகோரி வழக்கு
மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் வாழ்க்கையை மையமாக வைத்து கர்ணன் திரைப்படம் உருவாகி உள்ளது.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் கர்ணன். மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகி உள்ள இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இப்படம் வருகிற ஏப்ரல் 9-ந் தேதி ரிலீசாக உள்ளது.
இந்நிலையில், மதுரை சுப்பிரமணியபுரத்தைச் சேர்ந்த பிரபு என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் கர்ணன் படத்திற்கு தடை விதிக்கக் கோரி பொதுநல வழக்கினை தாக்கல் செய்துள்ளார்.
கர்ணன் படத்தில் இடம்பெறும் ‘பண்டாரத்தி புராணம்’ எனும் பாடல் குறிப்பிட்ட சமூகத்தினரை காயப்படுத்தும் விதமாக உள்ளதாக மனுவில் குறிப்பிட்டுள்ளார். மேலும் பண்டாரத்தி புராணம் பாடலை யூடியூப் சேனல் மற்றும் கர்ணன் படத்திலிருந்து நீக்கவும், அதுவரை படத்தை வெளியிட தடை விதித்து உத்தரவிட வேண்டும் எனவும் கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆனந்தி அமர்வு திரைப்பட தணிக்கைத்துறையின் மண்டல அலுவலர், கர்ணன் படத்தின் இயக்குனர் மாரி செல்வராஜ், தயாரிப்பாளர் கலைப்புலி தாணு, பாடலை வெளியிட்ட யூடியூப் சேனல் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கை ஏப்ரல் 16 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
Next Story






