search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    ஏ.ஆர்.ரகுமான்
    X
    ஏ.ஆர்.ரகுமான்

    மத வழிபாட்டு தலங்களில் கூடி குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம் - ஏ.ஆர்.ரகுமான்

    மத வழிபாட்டு தலங்களில் கூடி குழப்பத்தை ஏற்படுத்தும் நேரம் இதுவல்ல என இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
    இந்தியாவிலும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்து வருகிறது. கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு ஊரடங்கு உத்தரவால் மக்கள் வீட்டுக்குள் முடங்கி கிடக்கிறார்கள். 

    அதேபோல் திரைப்பிரபலங்கள் பலரும் கொரோனா குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், கொரோனவை கட்டுப்படுத்த இரவு பகலாக போராடி வரும் மருத்துவர்கள், செவிலியர்கள், காவல்துறையினரை பாராட்டி இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

    அதில் அவர் கூறியுள்ளதாவது: "இந்தியா முழுவதிலும் உள்ள மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் அனைத்து ஊழியர்களுக்கும், அவர்களின் துணிச்சலுக்கும் தன்னலமற்ற தன்மைக்கும் நன்றி தெரிவிப்பதற்கே இந்த பதிவு. இந்த மிக மோசமான தொற்றுநோயை சமாளிக்க அவர்கள் எவ்வளவு தயாராக இருக்கிறார்கள் என்பதைப் பார்க்கும் போது மனநிறைவை தருகிறது.

    நம்மைக் காப்பாற்ற அவர்கள் தங்கள் உயிரைப் பணயம் வைத்துள்ளனர். நமது வேறுபாடுகளை மறந்து உலகை தலைகீழாக மாற்றிய இந்த கண்ணுக்கு தெரியாத எதிரிக்கு எதிராக ஒன்றுபடுவதற்கான நேரம் இது. மனிதநேயம் மற்றும் ஆன்மீகத்தின் அழகை செயலில்  கொண்டுவருவதற்கான நேரம் இது. அருகில் இருப்பவர்கள், மூத்த குடிமக்கள், புலம்பெயரும்  தொழிலாளர்களுக்கு மற்றும் ஏழைகளுக்கு உதவுங்கள். 


    கடவுள் உங்கள் இதயத்திற்குள் இருக்கிறார். மிக புனிதமான ஆலயம் அதுதான்.  மத வழிபாட்டு தலங்களில் கூடி குழப்பத்தை ஏற்படுத்தும் நேரம் இதுவல்ல. அரசாங்கத்தின் ஆலோசனையைக் கேளுங்கள். சில வாரங்களுக்கு சுய தனிமையை கடைபிடித்தால்,  இன்னும் பல ஆண்டுகள் நிம்மதியாக வாழலாம். 

    வைரஸை பரப்பி சக மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்காதீர்கள். பொய்யான வதந்திகளை பரப்புவதற்கும், பீதியை ஏற்படுத்துவதற்கும் இது நேரம் அல்ல. தயவுசெய்து சிந்தனையுடன் செயல்படுங்கள், பலரது வாழ்க்கை நம் கையில் உள்ளது. " இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    Next Story
    ×