search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    ஸ்ரீரெட்டி
    X
    ஸ்ரீரெட்டி

    காரை தாக்கி உடைத்ததாக நடிகை ஸ்ரீரெட்டி போலீசில் புகார்

    நடிகர்கள், இயக்குனர்கள் மீது பாலியல் புகார் கூறி வரும் ஸ்ரீரெட்டி, தன்னுடைய காரை மர்ம நபர் சேதப்படுத்தியதாக போலீசில் புகார் அளித்துள்ளார்.
    ஆந்திராவைச் சேர்ந்தவர் நடிகை ஸ்ரீரெட்டி. இவர் தெலுங்கு நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டு தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார். இதில் சில தமிழ் நடிகர்கள், இயக்குனர்களும் சிக்கினர்.

    ஐதராபாத்தில் வசித்து வந்த ஸ்ரீரெட்டி அங்கிருந்து வெளியேறி கடந்த ஒரு வருடமாக சென்னை வளசரவாக்கம் அடுத்த அன்பு நகர் 10-வது தெருவில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர் தனது ‘பேஸ்புக்’ பக்கத்தில் ‘சென்னையில் உள்ள எனது வீட்டின் அருகே தமன்னா நடிக்கும் வெப் தொடரின் படப்பிடிப்பு நடைபெறுகிறது. அவர்களின் தொல்லை தாங்க முடிய வில்லை. கடந்த 10 நாட்களாக நான் இந்த தொல்லையை அனுபவித்து வருகிறேன். இனி என்னால் பொறுக்க முடியாது. அவர்களிடம் நேரில் சென்று பேசி இந்த பிரச்சினைக்கு முடிவு கட்டப் போகிறேன்’ என்று பதிவிட்டு இருந்தார்.

    ஸ்ரீரெட்டி

    இந்த நிலையில் ஸ்ரீரெட்டி கோயம்பேடு போலீசில் புகார் மனு அளித்தார். அதில் கூறி இருப்பதாவது:-

    எனது வீடு அருகே ஓய்வு பெற்ற போலிஸ் அதிகாரியின் “பங்களா வீடு” உள்ளது. இந்த வீட்டில் கடந்த சில நாட்களாக சினிமா படப்பிடிப்பு நடந்து வருகிறது. இதன் காரணமாக அந்த பகுதியில் ஏராளமான வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    நேற்று முன்தினம் வெளியே சென்று விட்டு இரவு வீடு திரும்பியபோது எனது வீட்டு வாசலில் வாகனம் நின்றதால் காரை வெளியே நிறுத்தி விட்டு சென்றேன். பின்னர் சிறிது நேரம் கழித்து வந்து பார்த்த போது எனது காரின் 2 பக்க கதவுகளும் சேதப்படுத்தப்பட்டு இருந்தது.

    மேலும் படப்பிடிப்பு நடத்தி வரும் தயாரிப்பு நிறுவனத்தின் மேலாளர் மனோஜ் என்பவர் மீது எனக்கு சந்தேகம் உள்ளது. எனவே காரை சேதப்படுத்தி விட்டு தப்பி சென்ற மர்மநபர்களை கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

    இதுகுறித்து இன்ஸ்பெக்டர் மாதேஸ்வரன் மற்றும் போலீசார் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×