என் மலர்tooltip icon

    சினி வரலாறு

    ரஜினிகாந்த் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட தகவல், தமிழ்நாடெங்கும் பெரும் பரபரப்பை உண்டாக்கியது.
    ரஜினிகாந்த் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட தகவல், தமிழ்நாடெங்கும் பெரும் பரபரப்பை உண்டாக்கியது.

    1979 மார்ச் 11-ந்தேதியன்று விஜயா நர்சிங் ஹோமில் ரஜினி சேர்க்கப்பட்டார். அப்போது அவரை பரிசோதித்த டாக்டர்கள், "நல்லவேளை, சரியான நேரத்தில் கொண்டு வந்தீர்கள். இன்னும் 10 நாட்கள் இப்படியே விட்டு வைத்திருந்தால், பெரிய அளவுக்கு பாதிப்பு ஏற்பட்டிருக்குமë'' என்று கூறினார்கள்.

    ரஜினிகாந்த் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட செய்தி, தமிழ்நாடெங்கும் பெரும் பரபரப்பை உண்டாக்கியது. திரை உலகத்தில் அதுபற்றித்தான் பேச்சு.

    "சீக்கிரம் சரியாகி விடுவார். முன்போலவே, சுறுசுறுப்பாக நடிப்பார்'' என்று பலர் நினைத்தாலும், ஒருசிலர் "அவர் கதை அவ்வளவுதான். இனி அவரால் நடிக்க முடியாது'' என்றார்கள்.

    ஆனாலும், அவர் விரைவில் குணம் அடையவேண்டும் என்று நல்ல உள்ளங்கள் பிரார்த்தனை செய்தன.

    ஓய்வு எடுக்காமல், இரவு - பகலாக உழைத்ததுதான் இந்த பாதிப்புக்குக் காரணம் என்பதை டாக்டர்கள் மட்டுமல்ல, ரஜினியுடன் பழகியவர்களும் கூறினார்கள்.

    ரஜினிகாந்த் நடித்த "ப்ரியா'' படத்தின் கதாசிரியரான பிரபல எழுத்தாளர் சுஜாதா கூறியதாவது:-

    "ப்ரியா'' படப்பிடிப்பின்போது ரஜினிகாந்த் எனக்குப் பழக்கமானார். அப்போது அவர் உச்சியை நோக்கி ஓடிக்கொண்டிருந்தார். இருந்தும் என்னை விமானத்திலோ, படப்பிடிப்பிலோ சந்தித்தால் தனியாக மதிப்புக் கொடுத்துப் பேசிக் கொண்டிருப்பார். நான் சொல்வதைக் கவனமாகக் கேட்பார்.

    ரஜினிகாந்துக்கு தற்காலிக "நெர்வ்ஸ் பிரேக் டவுன்'' (நரம்பு மண்டல பாதிப்பு) ஏற்பட்ட காரணங்களை, அப்போதே என்னால் அடையாளம் கண்டு கொள்ள முடிந்தது.

    பெங்களூரில் இரவு எட்டரை மணிக்குப் பாலசந்தர் படத்தின் படப்பிடிப்பில் (தப்புத்தாளங்கள் என்று நினைக்கிறேன்) சைக்கிள் செயின் சுழற்றிக் கொண்டிருக்கிறார்.

    எட்டு நாற்பத்தைந்துக்கு, ஏணியை விலக்குவதற்கு இரண்டு நிமிஷம் முன்னால் பெங்களூரில் விமானம் ஏறி, சென்னை போய், அங்கேயிருந்து ராத்திரி பன்னிரண்டு மணிக்கு மற்றொரு பிளேன் பிடித்து சிங்கப்பூர் போய், அதிகாலையில் அங்கே `ப்ரியா' சூட்டிங். மூன்று நாள் கழித்துத் திரும்பிப் பெங்களூர் வந்து சைக்கிள் செயின் சுழற்றி விட்டு மறுபடி சிங்கப்பூர்! இந்த மாதிரி அலைந்தால் ஒரு திபேத்திய லாமாவுக்குக்கூட "நெர்வ்ஸ் ப்ரேக் டவுன்'' வந்து விடும்.''

    இவ்வாறு சுஜாதா கூறினார்.

    ரஜினியின் திரையுலக முன்னேற்றத்தில் பெரும் பங்கு வகிக்கும் பஞ்சு அருணாசலம் அப்போது ஒரு பேட்டியில் கூறியதாவது:-

    "உடல் நலம் சரி இல்லாதபோதும், படப்பிடிப்பை ரத்து செய்யாமல் நடித்தவர் ரஜினி. இதற்காக அவரை நான் கடிந்து கொண்டது உண்டு.

    அப்போதெல்லாம், "சொன்ன வார்த்தையைக் காப்பாற்ற வேண்டாமா சார்! தூக்கம் என்ன வேண்டிக் கிடக்கிறது!'' என்பார்.

    தயாரிப்பாளர், டைரக்டர்களின் மனதை வருத்தக்கூடாதே என்று தன் உடலை வருத்திக்கொண்டார்.

    ஓய்வே இல்லாமல் நடித்ததால்தான் அவருக்கு இந்நிலை ஏற்பட்டது. அவரைப்போல் பரபரப்பான - சுறுசுறுப்பான நடிகரைப் பார்ப்பது அபூர்வம்.''

    இவ்வாறு பஞ்சு அருணாசலம் கூறினார்.
    டைரக்டர் ஸ்ரீதர் படத்தில் நடிக்க விரும்பிய விஜயகுமார், அவர் நடத்திய புதுமுகங்களுக்கான தேர்வில் கலந்து கொண்டார்.
    சிவாஜியும், பத்மினியும் நடித்த "ஸ்ரீவள்ளி'' படத்தில் பாலமுருகனாக நடித்தாலும் அதற்குப்பிறகு புதிய படங்கள் எதுவும் விஜயகுமாருக்கு கிடைக்கவில்லை. இதனால் நாடகங்களில் நடித்தபடி, சினிமா வாய்ப்பை எதிர்நோக்கி காத்திருந்தார்.

    நாலைந்து வருடம் இதே நிலை நீடித்தது. ஆனாலும் சோர்ந்து விடாமல் எஸ்.வி.எஸ். நாடகக் குழுவில் சேர்ந்து நடித்துக் கொண்டு இருந்தார்.

    இந்த சமயத்தில் டைரக்டர் ஸ்ரீதரின் "நெஞ்சில் ஓர் ஆலயம்'' படம் வந்தது. காதலை புதிய கோணத்தில் அணுகிய காட்சிகள் ஸ்ரீதருக்கு பெரும் புகழைத் தந்ததோடு, படத்தையும் வெற்றிப் பட்டியலில் சேர்த்தது.

    இந்தப்படம் வெளிவந்த நேரத்தில் வையாபுரி ஜோதிடர் மூலம் விஜயகுமாருக்கு நடிகர் முத்துராமன் அறிமுகமானார். முத்துராமன் படங்களில் நடித்து வந்ததோடு நாடகங்களிலும் நடித்தார். அப்போது `வடிவேல் வாத்தியார்', தேரோட்டி மகன்' நாடகங்கள் ரசிகர்களை பெரும் அளவில் ஈர்த்தன. முத்துராமன் படங்களில் வளரத் தொடங்கிய நேரமாதலால், அப்போது அவர் நடித்து வந்த இந்த நாடகங்களில் தொடர்ந்து நடிக்க நேரம் கிடைக்காத நிலை. அதனால், தான் நடித்து வந்த கேரக்டரில் விஜயகுமாரை நடிக்க வைக்க முத்துராமனே சிபாரிசு செய்தார்.

    இதைத் தொடர்ந்து "சுயம்வரம்'' என்ற புதிய நாடகத்திலும் விஜயகுமாருக்கு முக்கிய வேடம் கிடைத்தது. இதில் "இரவும் பகலும்'' பட கதாநாயகி வசந்தா, காந்திமதி ஆகியோரும் நடித்தார்கள். இரவில் நாடகத்தில் நடிப்பது, காலையில் பட வாய்ப்புக்கான முயற்சி என்று விஜயகுமார் தீவிரப்பட்டது இந்த சமயத்தில்தான்.

    இந்த நேரத்தில்தான் டைரக்டர் ஸ்ரீதர் புதுமுகங்களை அறிமுகப்படுத்துவதில் அதிக அக்கறை காட்டி வந்தார். இதே மாதிரியான எண்ணம் மற்ற டைரக்டர்களுக்கும் இருந்தது. இதனால், டைரக்டர் ஸ்ரீதர், டைரக்டர்கள் ராமண்ணா, பீம்சிங், கே.எஸ்.கோபாலகிருஷ்ணன், பி.மாதவன் ஆகியோர் ஒன்று சேர்ந்து, "மூவி மேக்கர்ஸ் கவுன்சில்'' என்ற அமைப்பை உருவாக்கினர்.

    இந்த அமைப்பு மூலம் புதுமுகங்களை தேர்ந்தெடுத்து படம் தயாரிப்பது அவர்கள் எண்ணம். இதற்காக புதுமுகத் தேர்வும் நடத்தினார்கள். அதில் விஜயகுமாரும் கலந்து கொண்டார்.

    அதுபற்றி அவர் கூறுகிறார்:-

    டைரக்டர் ஸ்ரீதர் புதுமையை விரும்பினார். துணிச்சலாக தனது படங்களில் புதுமுகங்களை நடிக்க வைத்தார். படத்தையும் வெற்றிப் படமாக்கினார்.

    புதுமுகங்களை தேர்ந்தெடுக்க, ஸ்ரீதரும், மற்ற டைரக்டர்களும் இணைந்து, "மூவி மேக்கர்ஸ் கவுன்சில்'' தொடங்கினர். இதுபற்றி பட உலகில் பரபரப்பாக பேசப்பட்டது. ஐந்தாறு வருடங்களாக புதியவர்கள் சினிமாவுக்குள் வரமுடியாமல் இருந்த நிலை, இனி மாறும் என நம்பிக்கையும் ஏற்பட்டது.

     புதுமுகத் தேர்வு சென்னையில் உள்ள நார்த்போக் ரோட்டில் உள்ள ஒரு மண்டபத்தில் நடந்தது. கட்டுக்கடங்காத கூட்டம். பார்க்கிற முகங்களில் எல்லாம் `கதாநாயக' களை. இந்த அமைப்பில் டைரக்டர் ராமண்ணாவும் இருந்ததால், நிச்சயம் நாம் தேர்வு செய்யப்பட்டு விடுவோம் என்று நம்பினேன்.

    இந்த இடத்தில் டைரக்டர் ராமண்ணா பற்றி சொல்லியே ஆகவேண்டும். "ஸ்ரீவள்ளி'' படத்திற்குப் பிறகு, "நேரம் வரட்டும்; நானே கதாநாயகனாக அறிமுகப்படுத்துகிறேன்'' என்று சொல்லியிருந்தார். அதனால் நாடகங்களில் நடித்தாலும் அவ்வப்போது வந்து அவரிடம் `ஆஜர்' கொடுத்து விடுவேன்.

    இந்த மாதிரியான ஒருவேளையில் அவர் "சொர்க்கத்தில் திருமணம்'' என்ற படத்தை இயக்கினார். படத்தின் ஹீரோயின் லதா. என்னை ஹீரோவாக போட ராமண்ணா முடிவு செய்திருந்தார். ஆனாலும் ரவிச்சந்திரனே ஹீரோவாக நடித்தார். இதனால் நான் மனதளவில் உடைந்து போய்விடக்கூடாது என்பதற்காக, படத்தில் லதாவை ஒருதலையாக விரும்பும் ஒரு கேரக்டரில் என்னை நடிக்க வைத்தார்.

    இப்படி நம் மேலும் அக்கறைப்பட ஒரு டைரக்டர் இருக்கிறார் என்பது இயல்பாகவே ஒரு தைரியத்தை என் மனதிற்குள் ஏற்றி வைத்திருந்தது. தேர்வுக் குழுவில் டைரக்டர் ராமண்ணாவும் இடம் பெற்றிருந்ததால் நிச்சயம் தேர்வாவோம் என்ற நம்பிக்கையும் வலுப்பெற்றது.

    என் முறை வந்தபோது, ஏதாவது ஒரு காட்சியை நடித்துக்காட்ட சொன்னார்கள். நான் அப்போது நடித்துக் கொண்டிருந்த "வடிவேலு வாத்தியார்'' நாடகத்தில் நான் நடித்த ஒரு காட்சியை நடித்துக் காட்டினேன்.

    ஆயிரக்கணக்கானோர் தேர்வுக்கு வந்த இடத்தில், தேர்வானவர்கள் ஐந்தே ஐந்து பேர்தான். அந்த ஐந்து பேரில் நானும் ஒருவன். ஆம்பூர் பாபு, "அலைகள்'' செல்வகுமார் ஆகியோரும் இந்த ஐவர் குழுவில் இடம் பிடித்திருந்தனர்.

    ஆனாலும் 2 பேர் மட்டும்தான் அப்போது தேவை என்பதற்காக டைரக்டர்கள் குழு மீண்டும் பரிசீலனை செய்தது. முடிவில் `அலைகள்' செல்வகுமார், ஆம்பூர் பாபு ஆகியோரை எடுத்துக்கொண்டு மற்ற 3 பேரிடமும் "முகவரியைக் கொடுத்து விட்டுப் போங்கள். பிறகு தகவல் தெரிவிக்கிறோம்'' என்றார்கள்.

    எனக்கு கோபம் வந்துவிட்டது. என் மீது அக்கறையுள்ளவர் என்பதால் டைரக்டர் ராமண்ணாவை சந்தித்து என் ஆதங்கத்தை வெளிப்படுத்தினேன். "என்ன சார்! நீங்கள் இருந்தும் எனக்கு இப்படி ஆகிவிட்டதே!'' என்றேன், வேதனையுடன்.

    நான் இப்படிக் கூறியதும், ராமண்ணாவிடம் இருந்து சிரிப்புதான் பதிலாக வந்தன.

    "என் வேதனை புரியாமல் சிரிக்கிறீர்களே அண்ணா!'' என்றேன்.

    பதிலுக்கு அவரோ, "இவங்க படம் எதுவும் எடுக்க மாட்டாங்க. நீ ஏன் கவலைப்படுகிறாய்? உனக்கு நான் இருக்கிறேன்!'' என்றார்.

    மூவி மேக்கர்ஸ் கவுன்சில் பற்றி அவர் சொன்னது உண்மை ஆயிற்று. கடைசி வரை அவர்கள் படமே எடுக்கவில்லை.''

    இவ்வாறு நடிகர் விஜயகுமார் கூறினார்.
    அபூர்வமான ஆற்றல், கடும் உழைப்பு, விடா முயற்சி ஆகியவற்றால், சூப்பர் ஸ்டார் ஆனவர் ரஜினிகாந்த். இன்று ஜப்பான் உள்பட பல வெளிநாடுகளில் அவருடைய புகழ்க்கொடி மிக உயரதில் பறக்கிறது. ரஜினிகாந்தின் இயற்பெயர் சிவாஜிராவ். அதை சினிமாவுக்காக "ரஜினிகாந்த்'' என்று மாற்றி வைத்தவர், டைரக்டர் கே.பாலசந்தர்.
    அபூர்வமான ஆற்றல், கடும் உழைப்பு, விடா முயற்சி ஆகியவற்றால், சூப்பர் ஸ்டார் ஆனவர் ரஜினிகாந்த். இன்று ஜப்பான் உள்பட பல வெளிநாடுகளில் அவருடைய புகழ்க்கொடி மிக உயரதில் பறக்கிறது. ரஜினிகாந்தின் இயற்பெயர் சிவாஜிராவ். அதை சினிமாவுக்காக "ரஜினிகாந்த்'' என்று மாற்றி வைத்தவர், டைரக்டர் கே.பாலசந்தர்.

    ரஜினிகாந்தின் தந்தை பெயர் ரானோஜிராவ் கெய்க்வாட். தாயார் பெயர் ராம்பாய். கெய்க்வாட் என்பது, குடும்பப் பெயராகும். மராட்டிய மாமன்னர் சிவாஜியின் பரம்பரையில் வந்தவர்கள் கெய்க்வாட் என்று அழைக்கப்பட்டனர்.

    ரஜினியின் முன்னோர்கள் சிவாஜியின் மெய்க்காப்பாளர்களாக பணிபுரிந்துள்ளனர். இவர்களில் சிலர் பிற்காலத்தில் கர்நாடகத்திற்கு குடிபெயர்ந்தனர். மற்றும் சிலர், தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரிக்கு மூன்று கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள நாச்சிக்குப்பம் என்ற கிராமத்தில் குடியேறி வாழ்ந்து வந்தனர். ரஜினியின் தந்தையான ரானோஜிராவ் பிறந்தது நாச்சிக்குப்பத்தில்தான்.

    ரஜினியின் தாயார் ராம்பாய், கோவை மாவட்டத்தின் எல்லையில் உள்ள கொள்ளேகால் அருகில் உள்ள ஒரு கிராமத்தில் பிறந்தவர். ரானோஜிராவுக்கு கர்நாடக மாநில போலீஸ் இலாகாவில், போலீஸ் உத்தியோகம் கிடைத்ததால், குடும்பத்தோடு பெங்களூரில் குடியேறினார்.

    ரானோஜிராவ், தெய்வ பக்தி மிக்கவர். நேர்மையானவர். வேலையில் திறமையானவர். அதனால் படிப்படியாக உயர்ந்து ஹெட் கான்ஸ்டபிள் ஆனார்.

    ரானோஜிராவ் - ராம்பாய் தம்பதிகளுக்கு சத்தியநாராயணராவ், நாகேஸ்வரராவ் என்ற இரண்டு ஆண் குழந்தைகள் பிறந்த பிறகு மூன்றாவதாகப் பிறந்தவர் ரஜினிகாந்த்.

    1950-ம் ஆண்டு டிசம்பர் 12-ந்தேதி இரவு 11-45 மணிக்கு அவர் பிறந்தார். திருவோணம் நட்சத்திரம்; மகர ராசி. ரஜினிக்கு சத்திய நாராயணராவ் 5 வயதும், நாகேஸ்வரராவ் மூன்று வயதும் மூத்தவர்கள். ரஜினிக்கு ஒரு அக்காள். பெயர் அஸ்வத் பாலுபாய்.

    ரஜினிகாந்த் கர்நாடகத்தில் பிறந்து வளர்ந்தாலும், தாய் மொழி மராத்தி.

    குழந்தையாக இருக்கும்போதே ரஜினி துறுதுறுப்பும், புத்திசாலித்தனமும் மிகுந்தவராக விளங்கினார். ஐந்தாவது வயதில், பசவன்குடியில் உள்ள பிரிமியர் மாடல் ஸ்கூல் என்ற பள்ளியில் சேர்க்கப்பட்டார். படிப்பிலும், விளையாட்டிலும் கெட்டிக்காரராக விளங்கினார். ரஜினிகாந்த் ஒன்பது வயது சிறுவனாக இருந்தபோது, தாயாரை இழந்தார்.

    உடல் நிலை கவலைக்கிடமாகி ஆஸ்பத்திரியில் இருந்த தாயாரைப் பார்க்க, ரஜினியை அவர் அண்ணன் சத்தியநாராயணா அழைத்துச் சென்றார். தன் முடிவு நெருங்கிவிட்டதை அறிந்த ராம்பாய், ரஜினியை தன் அருகே அழைத்து தலையைக் கோதிவிட்டார். கையை எடுத்து முத்தட்டார்.

    அதுதான் மகனுக்கு அவர் கொடுத்த கடைசி முத்தம். மறுநாள் இறந்து விட்டார். விவரம் அறியாத சிறுவயதிலேயே அன்னையை இழந்தார் ரஜினி. தாயார் இறந்து விட்டார், இனி அவரைப் பார்க்க முடியாது என்பதைக்கூட அப்போது அவரால் உணர முடியவில்லை.

    இதுபற்றி ரஜினியின் அண்ணன் சத்தியநாராயணா ஒரு கட்டுரையில் எழுதியிருப்பதாவது:-

    சின்ன வயதில் அவன் (ரஜினி) ஒரு விளையாட்டுப் பிள்ளையாகத்தான் இருந்தான். அம்மா இறந்தபோது, அவனுக்கு வயது 9. விவரம் தெரியாத வயது. அம்மா உடலை, மாலை போட்டு Ûத்திருந்தோம். அப்போதுகூட, அம்மா இறந்ததை உணராமல், வீதியில் சைக்கிள் விட்டுக்கொண்டிருந்தான். அம்மா தூங்கிக் கொண்டிருப்பதாக அவனுக்கு நினைப்பு.

    மறுநாள், வீட்டில் அம்மா இல்லை என்று தெரிந்ததும், அம்மா எங்கே? அம்மாவைப் பார்க்கணும் என்று அழுதான். அன்று முதல் அவனுக்கு அம்மா என் மனைவிதான். அண்ணியிடம் ரொம்பவும் பாசமாக இருப்பான். வீட்டு வேலைகளில் ஒத்தாசை செய்வான்.

    நான் வீட்டுக்கு வந்ததும், அவன் இருக்கிறானா என்றுதான் முதலில் பார்ப்பேன். அவனைப் பார்க்காமல் ஒருநாள்கூட தூங்கியது கிடையாது.

    தினமும் அவன் நண்பர்களுடன் சுற்றிவிட்டு, லேட்டாகத்தான் வீட்டுக்கு வருவான். அது எனக்குப் பிடிக்காது. சத்தம் போடுவேன். சில சமயம் அடித்தும் இருக்கிறேன். ஆனால், அதையெல்லாம் அவன் பெரிதாக நினைக்கமாட்டான். உடனே சமாதானமாகி, என் பக்கத்தில் வந்து உட்காருவான். ஒன்றாக உட்கார்ந்து சாப்பிடுவோம்.

    இவ்வாறு சத்தியநாராயணா குறிப்பிட்டுள்ளார்.

    தாயார் பற்றி பிறகு ரஜினிகாந்த் கூறுகையில், அம்மா இறந்தபோது நான் விவரம் அறியாச் சிவனாக இருந்தேன். இப்போது, எந்தத் தாயைப் பார்த்தாலும், எங்கம்மாவை நினைத்து ஏங்குகிறேன். அன்னை ஓர் ஆலயம்' படத்தில் நான் நடித்தபோது, அம்மா, நீ சுமந்த பிள்ளை என்ற பாடல் காட்சியில் நான் நிஜமாகவே என் அம்மாவை நினைத்து அழுதுவிட்டேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
    சின்ன வயதில் இளையராஜா பாடிய பாட்டு பெண் குரலில் அமைந்தது! குரலைக் கேட்டு விட்டு, "பாடுவது பெண்'' என்று பந்தயம் கட்டியவர்கள் ஏமாந்தனர்.
    சின்ன வயதில் இளையராஜா பாடிய பாட்டு பெண் குரலில் அமைந்தது! குரலைக் கேட்டு விட்டு, "பாடுவது பெண்'' என்று பந்தயம் கட்டியவர்கள் ஏமாந்தனர்.

    கேரள முதல்-மந்திரி நம்பூதிரிபாடு, பாவலர் வரதராஜனை மேடைக்கு அழைத்து, "தனது மந்திரிசபை அமையக் காரணமானவர்'' என்று பாராட்டியதால் அவர் ஒரே நாளில் புகழின் உச்சிக்குப் போய்விட்டார்.

    "இந்த சம்பவம்தான் நான் இசை உலகில் அதிகமாக கால்பதிக்க காரணமாக அமைந்தது'' என்கிறார், இளையராஜா.

    அவர் கூறுகிறார்:-

    "கேரளாவில் நடந்த நிகழ்ச்சி மூலமாக பாவலரை அறிந்த கம்யூனிஸ்டு கட்சியினர் அவரை தங்கள் பகுதிகளிலும் பாட அழைத்தார்கள். அதில் முதல் அழைப்பு திருச்சி அருகே உள்ள திருவெறும்பூர் கம்யூனிஸ்டு தொழிலாளர் மாநாட்டுக் குழுவிடம் இருந்து வந்தது.

    அண்ணனும் பாட ஒப்புக்கொண்டார். இது தொடர்பாக விளம்பரமும் செய்தார்கள். ஆனால் பாட வேண்டிய மூன்று நாளைக்கு முன் அண்ணனுக்கு ஜுரம் வந்துவிட்டது. இரண்டொரு நாளில் ஜுரம் சரியாகி விடும் என்று பார்த்தால் அதிகமானதே தவிர, குறைந்த பாடில்லை.

    இதற்கிடையே நிகழ்ச்சிக்கு வரமுடியாத சூழ்நிலையை விளக்கி அண்ணன் தந்தி கொடுத்துவிட்டார். அப்படியும் அண்ணனை அழைத்து பாட வைத்தே ஆகவேண்டும் என்று ஆசைப்பட்ட நிகழ்ச்சி அமைப்பாளர்கள், நிகழ்ச்சிக்கு முதல் நாள் திருச்சியில் இருந்து காரை எடுத்துக்கொண்டு நேராகவே வீட்டுக்கு வந்துவிட்டார்கள்.

    அவர்களின் ஆர்வத்தை நேரில் பார்த்த அண்ணன், `அடாத ஜுரத்திலும் விடாது பாட' முடிவு செய்துவிட்டார். ஆர்மோனியம் சங்கரதாஸ், தபேலாக்காரர் சகிதம் அண்ணன் புறப்படவிருந்த நேரத்தில் அம்மா அண்ணனிடம் வந்தார். "உன்னுடன் தம்பி ராஜையாவையும் அழைத்துப் போனால், அவனையும் இடையிடையே இரண்டொரு பாட்டுப்பாட வைக்கலாமே. அவன் அப்படிப் பாடும்போது உனக்கும் `ரெஸ்ட்' கிடைத்த மாதிரி இருக்கும்'' என்றார்.

    ஜுரத்தில் பலவீனப்பட்ட நிலையில் அண்ணன் பாடப்போனால், அவருக்கு கொஞ்சமாவது ஓய்வு தேவை என்ற கண்ணோட்டத்தில்தான் அம்மா என்னை சிபாரிசு செய்தார். அதைப் புரிந்து கொண்ட அண்ணன், என்னைப் பார்த்தார். என்ன நினைத்தாரோ, "சரி நீயும் வா'' என்றார்.

    அண்ணனின் இந்த அழைப்புதான் என் கலையுலக வாழ்க்கைப் பயணத்தின் தொடக்கம் என்று அப்போது நான் அறிந்திருக்கவில்லை.

    திருவெறும்பூர் மாநாட்டில் சுமார் ஐம்பதாயிரம் பேர் கூடிய கூட்டத்தில் நான் முதன் முதலில் பாடியபோது கிடைத்த கைதட்டல், உயர் படிப்பு குறித்து நான் கட்டியிருந்த மனக்கோட்டையைத் தகர்க்கப்போகிறது என்பதை நான் அறிந்திருக்கவில்லை.

    மூன்று நாட்கள் திருச்சியில் கச்சேரி. பாடும் நேரம் மாலைதானே. மற்ற நேரங்களில் பெரும்பாலும் திருச்சி மலைக்கோட்டை உச்சிப் பிள்ளையார் கோவில், தாயுமானவர் கோவில் என்று நேரம் ஓடியது. மலைக்கோட்டையின் உச்சியில் இருந்து, காவிரியைப் பார்ப்பது கண்கொள்ளாக்காட்சி. ஸ்ரீரங்கம், திருவானைக் காவல் கோபுர தரிசனம் என்று, கண்களில் அதிசயங்கள் கண்டேன்.

    அதோடு காவிரியாற்றில் உற்சாகக் குளியல் போட்டபோது, அந்த மகிழ்ச்சி என்னை உறையூரைத் தலைநகராகக் கொண்டு சோழர்கள் ஆண்ட காலத்திற்கே கொண்டு போய்விட்டது.

    மூன்று நாட்கள் கழித்து பள்ளிக்கு வந்தால், மாணவ நண்பர்கள் என்னிடம், "என்ன ஆயிற்று? ஏன் ஸ்கூலுக்கு வரவில்லை?'' என்று விசாரிக்க ஆரம்பித்தார்கள். நானோ மூன்று நாளும் ஸ்கூலில் என்ன பாடம் நடந்திருக்கும் என்பதற்குப் பதிலாக, இந்த மூன்று நாளில் வெளியுலகில் என்ன பாடம் படித்தேன் என்று சிந்தித்துக் கொண்டிருந்தேன். கூரை வேய்ந்த அந்த சின்னஞ்சிறிய வகுப்பறையின் தடுப்புச் சுவர்களுக்குள் இருந்தபடி மலைக்கோட்டையின் உச்சிக்கும் மேலே திறந்த வானவெளியிலே கற்பனை சிறகடித்துப் பறந்து கொண்டிருந்தேன்.

    அண்ணனுக்கு கச்சேரிகளுக்கு நிறைய அழைப்பு வந்தது. அவரோடு அவ்வப்போது கச்சேரிகளில் கலந்து கொண்டு படிப்பையும் தொடர்வது சாத்தியமாக இல்லை. அவ்வளவுதான். பள்ளிக்கூட கதவு அடைபட்டு விட்டது.

    அப்போது சிறிய வயது என்பதால் என் குரல் பெண் குரல் மாதிரி இருக்கும். அண்ணன் நான் பாடுவதற்கென்றே பாடல்களையும் எழுதிவிட்டார். அண்ணனுடன் பாட `டூயட்' பாடல்களும் தயாராயின! இப்படி அண்ணனின் இசைக்குழுவில் நானும் முக்கியமான பாத்திரமாகி விட்டேன்.

    இசை நிகழ்ச்சியைப் பொறுத்தவரையில், தொடக்கத்திலேயே மக்களை அண்ணன் தன் பக்கம் இழுத்து விடுவார். முதல் பாடல் முடிந்து, வந்திருக்கும் எல்லாருக்கும் `வணக்கம்' சொல்லும் பாடலிலேயே பத்து இடங்களில் கை தட்டல்கள் வாங்கி விடுவார். கூட்டம் முழுவதும் அவர் சிரித்தால் சிரிக்கும்; கோபித்தால் மக்கள் முகத்திலும் கனல் தெரியும். அழும் மாதிரி பேசினாலோ முன் வரிசையில் உட்கார்ந்திருப்பவர்களின் முகங்களில் கண்ணீர் வழியும்.

    இது, தினமும் நாங்கள் காணும் அன்றாட நிகழ்ச்சி.

    டூயட் பாடலில் அண்ணன், "காங்கிரசில சேரப்போறேண்டி பொம்பளே! கதரைப் போட்டு பார்க்கப் போறேண்டி' என்று பாட, பதிலுக்கு நான், "வெளிய சொல்லித் தொலைச்சுடாதீங்க மாப்பிளே! வீணா கெட்டுப் போயிடாதீங்க'' என்று பாடுவேன்.

    சிறு வயது என்பதால், என் குரல் பெண் குரல் போல ஒலிக்கும்.

    இதில் ஆச்சரியம் என்ன தெரியுமா? என்னைப் பார்க்காமல் வெளியில் என் குரலைக் கேட்டுவிட்டு "யாரோ ஒரு பெண் பாடுகிறாள்'' என்று எதிர்பார்த்து அப்புறமாய் நேரில் பார்க்க வந்து ஏமாந்து போனவர்கள் பலர்! குரலைக்கேட்டு நான் பெண்தான் என்று பந்தயம் கட்டி தோற்றவர்களும் ஏராளம்.

    1962-ல் பாண்டிச்சேரி தேர்தலில் அண்ணன் பாடிய பாட்டு ரொம்பவே பரபரப்பை ஏற்படுத்தியது. அதில் அண்ணனும் நானும் இப்படிப்

    பாடுவோம்:"ஒத்த ரூபா தாரேன் நான்

    ஒனப்பத் தட்டும் தாரேன்

    ஓட்டுப் போடுற பொண்ணே - கொஞ்சம்

    மாட்டப் பாத்து குத்து''

     - இது அண்ணன்.

    "ஒத்த ரூபாயும் வேணாம் ஒங்க

    ஒனப்பூத் தட்டும் வேணாம் - நீங்க

    ஊரை அழிக்கிற கூட்டம் - ஒங்கள

    ஒழிச்சிக் கட்டப் போறோம்''

    - இது நான்.

    இந்தப் பாட்டுக்கு எவ்வளவு கரகோஷம் தெரியுமா?

    இப்படி பாடி, நானும் ரசிகர்களுக்கு தெரிய வந்த நேரத்தில், "இனி நீ பாட வரவேண்டாம்'' என்று அண்ணன் சொன்னால் எப்படி

    இருக்கும்?படிப்புப் போச்சு; பாட்டும் போச்சு என்றால் எனக்கு எப்படி இருக்கும்?
    கேரள சட்டசபை தேர்தலில், கம்யூனிஸ்டு கட்சிக்கு ஆதரவாக இளையராஜாவின் அண்ணன் பாவலர் வரதராஜன் பாட்டுப்பாடி பிரசாரம் செய்தார். கம்யூனிஸ்டு கட்சி வெற்றி பெற்று, நம்பூதிரிபாடு முதல்-மந்திரியானார். "இந்த வெற்றி பாவலர் வரதராஜனின் வெற்றி'' என்று நம்பூதிரிபாடு பாராட்டினார்.
    கேரள சட்டசபை தேர்தலில், கம்யூனிஸ்டு கட்சிக்கு ஆதரவாக இளையராஜாவின் அண்ணன் பாவலர் வரதராஜன் பாட்டுப்பாடி பிரசாரம் செய்தார். கம்யூனிஸ்டு கட்சி வெற்றி பெற்று, நம்பூதிரிபாடு முதல்-மந்திரியானார். "இந்த வெற்றி பாவலர் வரதராஜனின் வெற்றி'' என்று நம்பூதிரிபாடு பாராட்டினார்.

    தேர்தல் பிரசாரத்தில் அண்ணனுடன் சேர்ந்து ஈடுபட்ட அனுபவம் பற்றி இளையராஜா கூறியதாவது:-

    "ஒரு தேயிலைத் தோட்டத்தின் வழியாக நாங்கள் சென்றபோது, ஓரிடத்தில் ஆண்களும், பெண்களுமாக தேயிலை பறித்துக் கொண்டிருந்தார்கள். அங்கே மேட்டுப் பகுதியில் ஜீப்பை நிறுத்தச் சொன்ன பாவலர் அண்ணன் பிரசார பாட்டை பாடினார் இப்படி:

    "சிக்கிக்கிட்டு முழிக்குதம்மா

    வெட்கங்கெட்ட காளை ரெண்டு

    முட்டி உடைஞ்ச காளை என் கண்ணம்மா - இது

    மூக்குக்கயிறு அறுந்த காளை என் பொன்னம்மா''

    என்று பாடினார்.

    பாவலரின் பாட்டு தேயிலைத் தோட்டத்தில் எதிரொலிக்க, அங்கே வேலை செய்தவர்கள் தங்கள் பின்னால் கட்டியிருந்த தேயிலைக் கூடைகளை அப்படியே போட்டுவிட்டு, மேலே வேகமாக ஓடிவந்து ஜீப்பை சுற்றி நின்று கேட்டார்கள்.

    இடையிடையே கரகோஷம். ஆனந்தக் கூச்சல்கள்.

    `இன்னும் ஒரு பாட்டு. இன்னும் ஒரு பாட்டு' என்று ரசிகர்களாக மாறிப்போன தொழிலாளர்கள்!

    நேரம் ஆகிவிட்டதை உணர்ந்த பாவலர் அவர்களிடம், "வேறு இடங்களுக்கும் போகவேண்டும். நேரமாகிவிட்டது'' என்று சொல்லி ஜீப்பை கிளப்பச் சொல்ல,

    அப்போது, "பாவலரே! கொஞ்ச நேரம் பொறுங்க'' என்று சொன்ன ஒரு தொழிலாளி, ஓட்டமாய் ஒரு பர்லாங் தூரம் ஓடி கையில் சூடு பறக்கும் `டீ' கிளாசுடன் வந்து நின்றார்.

    அந்தக் குளிரிலும் ஆவி பறக்க டீ கொடுத்த அந்த அன்பு, எங்களை நெகிழச் செய்தது.

    எதிர்பார்த்தபடியே அந்தத் தொகுதியில் மீண்டும் கம்யூனிஸ்டு கட்சி ஜெயிக்க, நம்பூதிரிபாடு தலைமையில் கம்யூனிஸ்டு கட்சி மந்திரிசபை அமைத்தது.

    மூணாறு ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் வெற்றி விழா கொண்டாட்டம். லட்சக்கணக்கில் மக்கள் கூட்டம். மேடையில் நம்பூதிரிபாடு பேசவந்தபோது, "இவடே பாவலர் வரதராஜன் ஆரானு?'' என்று கேட்டார்.

    கூட்டத்தின் முன் வரிசையில் அமர்ந்திருந்த பாவலரை ஜனங்கள் எழுந்து நிற்க வைத்தார்கள். பாவலரை பார்த்த நம்பூதிரிபாடு, `என்ட சகாவே! இவிட வரு'' என்றார். அண்ணன் மேடையில் ஏறினார். கைதட்டல் அதிகமாகியது.

    அப்போது நம்பூதிரிபாடு "ஈ வெற்றி முழுவன் பாவலர் வரதராஜன்ட வெற்றியானு'' என்று மகிழ்ச்சியுடன் சொன்னார்.

    அவர் இப்படிச் சொன்னதும் மொத்தக் கூட்டமும் உற்சாகமானது. கைதட்டல் ஒலி விண்ணை எட்டியது. இந்த சம்பவத்துக்குப் பிறகே தமிழ்நாடு கம்யூனிஸ்டு கட்சிக்கு பாவலர் அறிமுகமானார்.''

    இவ்வாறு இளையராஜா கூறினார்.

    பாவலர் அண்ணனின் பாட்டு மூலம் கேரளத்தில் கிடைத்த வெற்றியை பகிர்ந்து கொண்ட இளையராஜா, தேவாரம் ஸ்கூலில் ஒன்பதாம் வகுப்பில் பீஸ் கட்டி சேர்ந்து விட்டார்.

    அதுபற்றி உற்சாகத்துடன் இளையராஜா சொன்னார்:

    "பள்ளியில் சேர்ந்த அன்று நான் அடைந்த ஆனந்தத்துக்கு அளவேயில்லை. புதிய புத்தகங்களும், நோட்டுப் புத்தகங்களும் வாங்கினேன். அதன் மணம் மனதுக்கு ரம்மியமாக இருந்தது. புதுப் புத்தகங்களை வாங்கிய அன்று அவற்றை தலையணைக்கு பக்கத்தில் வைத்து தூங்கினேன்.

    அடுத்த நாள் காலை பள்ளிக்குக் கிளம்பினேன். போன வருடம் 9-ம் வகுப்பில் பெயிலான என் நண்பன் ஜெயகரனும் என்னுடன் 9-ம் வகுப்பில் சேர்ந்து கொண்டான். நான் படிக்காமல் ஒரு வருடம் வேஸ்ட் ஆகிவிட்டதே என வருந்தியதை, அவன் படித்தும் ஒரு வருஷம் வேஸ்ட் ஆகியிருப்பதை எண்ணி மனதை தேற்றிக்கொண்டேன்.

    பள்ளியில் சேர்ந்தாகிவிட்டது. அது `நான் 9-வது படிக்க முடியாது'' என்று சொன்ன ஜோதிடர்களுக்குத் தெரிய வேண்டாமா?

    ஜோதிடர்களை பார்த்தேன். "நான் இளங்கோவடிகள் இல்லை என்றாலும், உங்கள் ஜோதிடத்தைப் பொய்யாக்கி விட்டேன் பார்த்தீர்களா?'' என்று கேட்டேன்.

    அவர்களோ என்னை ஏளனமாக பார்த்தபடிகள், "கொஞ்சம் பொறு கண்ணா. இன்னும் மூணே மாசம். இந்த கிரகம் இந்த வீட்டுக்கு வரும்போது எல்லாம் சரியாய்ப் போயிடும் (அதாவது படிக்க முடியாமல் போய்விடும்) என்றார்கள்.

    "அதையும் பார்க்கலாம்'' என்று சொல்லிவிட்டு, படிப்பைத் தொடர்ந்தேன். என்ன நடந்தாலும் எக்காரணம் கொண்டும் படிப்பையும், ஸ்கூலையும் விட்டு விடுவதில்லை என்று எனக்குள் ஒரு வைராக்கியமே குடிகொண்டது.

    அப்போது என்னை பார்ப்பவர்கள் ஒரு பொருட்டாகவே மதிக்க மாட்டார்கள். நாலைந்து மாணவர்களோடு சேர்ந்து நானும் பேசிக்கொண்டிருக்கும்போது, நான் ஏதாவது முக்கியமாக சொன்னால்கூட, அதை ஏனோதானோவென்றே கேட்பார்கள்.

    பள்ளியில் காலை பிரேயரை எனக்கு அண்ணன் முறைக்காரரான குருசாமி என்பவர் பாடுவார். இல்லையென்றால் ராமநாதன் என்ற தேவாரத்து மாணவன் பாடுவார். இவர்கள் எஸ்.எஸ்.எல்.சி. படித்தார்கள்.

    அன்றைக்கென்று பார்த்தால் குருசாமி அண்ணனுக்கு நல்ல ஜுரம். குரல் வேறு கம்மிப் போயிருந்தது. அதனால் அன்றைய பிரேயர் பாடலை `பாட முடியாது' என்பதை தெரிந்து கொண்டவர், பிரேயர் நேரத்தில் என்னைப் பாட அழைத்தார்.

    மைதானம் முழுக்க மாணவர்கள். நான் தயங்கித் தயங்கி, படிகளில் ஏறி, மேல் படியில் வழக்கமாக பிரேயர் பாடும் இடத்தில் நின்றபடி, `ஆதியந்தம் இல்லா அருட்ஜோதியே' என்று தொடங்கினேன். ஒரு அமைதி எங்கிருந்தோ வந்து கவ்வியது. பாடி முடியும்வரை அந்த அமைதி தொடர்ந்தது. பாடல் முடிந்து அவரவர் வகுப்புகளுக்குச் சென்ற மாணவர்கள் என்னை விசேஷமாக பார்த்தார்கள்.

    என் வகுப்பிலோ மாணவ-மாணவிகள் என்னை தனியாக கவனித்தார்கள்.

    அதுவரை என்னை பொருட்படுத்தாதவர்களுக்கு அன்று முதல் நான் முக்கியமானவன் ஆனேன். என்னை சட்டை செய்யாதவர்கள்கூட வலுவில் வந்து பேசினார்கள்.

    இப்படி திடீர் கவனிப்பு தொடர்ந்தாலும் ஜோதிடத்தை பொய்யாக்க வேண்டும் என்ற உறுதியுடன் படிப்பிலும் தீவிர கவனம் செலுத்தினேன். காலாண்டுத் தேர்வில் நல்ல மார்க் எடுத்தேன்.

    வைகை அணைக்கரை பகுதியில் செடிகளுக்கு தண்ணீர் ஊற்றும் பணியை தினமும் ஒரு ரூபாய் சம்பளத்தில் செய்து வந்த இளையராஜா, சத்தமாய் பாட்டுப்பாடியபடியே அந்த வேலையை தொடர்ந்து கொண்டிருந்தார்.
    வைகை அணைக்கரை பகுதியில் செடிகளுக்கு தண்ணீர் ஊற்றும் பணியை தினமும் ஒரு ரூபாய் சம்பளத்தில் செய்து வந்த இளையராஜா, சத்தமாய் பாட்டுப்பாடியபடியே அந்த வேலையை தொடர்ந்து கொண்டிருந்தார்.

    ஒருநாள் அந்தப் பாட்டு அணைக்கரை தலைமை என்ஜினீயரின் காதில் கேட்டுவிட்டது.

    அதன் பிறகு நடந்தது பற்றி இளையராஜா கூறுகிறார்:

    "நான் வேலை பார்த்த பகுதி எப்போதும் பரபரப்பாகவே இருக்கும். எல்லாருமே நான் வேலை செய்யும் இடத்தை கடந்துதான் போகவேண்டும். ஆனால் அன்று நான் பாடத்தொடங்கிய அந்த நேரத்தில் இருந்த கொஞ்ச சத்தமும் இல்லாமல் போயிருந்தது. என் பாட்டுக்காகத்தான் இப்படி எல்லோரும் அமைதியாகி விட்டார்களோ என்ற மகிழ்ச்சியில் பாடும் சத்தத்தை அதிகரித்தேன்.

    அப்போதுதான் `ஸ்பாட் விசிட்'டுக்காக அங்கே வந்திருந்த தலைமை என்ஜினீயர் என் பாட்டைக் கேட்டுவிட்டார். அப்போதும் கூட என் குரல் குறையவில்லை. நிற்கவும் இல்லை.

    என்னை நெருங்கியவர், "ஹேய்! கம் ஹியர் மேன்' (இங்கே வா) என்றார்.

    தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்த `ஓஸ் பைப்'பை மடக்கி வைத்துவிட்டு அருகில் போனேன்.

    "ஹு ஆர் யூ? வாட் இஸ் யுவர் நேம்? (யார் நீ? உன் பெயர் என்ன?) என்று கேட்டார்.

    "ராஜையா'' என்றேன்.

    "கொஞ்சமும் தயங்காமல் நான் பதில் சொன்னதைப் பார்த்தவர், "நீ படித்திருக்கிறாயா?'' என்று ஆங்கிலத்தில் கேட்டார்.

    "எஸ் சார். எய்த் ஸ்டாண்டர்டு'' என்றேன்.

    "எய்த் ஸ்டாண்டர்டு?'' என்று ஆச்சரியமாக கேட்டவர், அரை டிராயரும், குள்ளமுமாக இருந்த என்னை ஆச்சரியமாக மேலும் கீழும் பார்த்தார். அதே வேகத்தில் "ஆபீசுக்கு வந்து என்னைப்பார்'' என்று ஆங்கிலத்தில் சொல்லிவிட்டுச் சென்று விட்டார்.

    அதன்படி ஆபீசுக்குப் போய் அவரை பார்த்தேன். "நீ நாளையில் இருந்து `ஓஸ் பைப்' பிடிக்க வேண்டாம். இங்கே ஆபீசுக்கு வந்துவிடு'' என்றார்.

    "சரி சார்'' என்று சொல்லிவிட்டு சந்தோஷத்துடன் வெளியே வந்தேன். அங்கிருந்த அவரது உதவியாளரிடம், "இங்கே வந்து நான் என்ன செய்ய வேண்டும்?'' என்று கேட்டேன்.

    அவரோ, "ஏய்! உன்னை ஆபீஸ் பையனாகப் போட்டிருக்காருய்யா.  போ! போ!'' என்றார்.

    அடுத்த நாள் சந்தோஷமாக ஆபீசுக்குப் போனேன். அங்கே நாலைந்து செகரட்டரி, கிளார்க், லெட்ஜர் கீப்பர், அக்கவுண்டண்ட் இவ்வளவு பேர்தான் மொத்தம். இரண்டு பகுதியாக பிரிக்கப்பட்ட ஒரே கட்டிடத்தில் தடுப்பு வைத்து அமைக்கப்பட்ட நான்கு மேஜை - நாற்காலிகள். அவ்வளவுதான்.

    ஒரு பைலை கையில் கொடுத்து, "அவரிடம் கொடு'' என்பார், ஒருவர். "இதை அவர்கிட்டே கொடுத்து கையெழுத்து வாங்கி வா!'' என்பார், இன்னொருவர். இங்கும் அங்குமாக போய்க்கொண்டிருந்தேனே தவிர, மற்றபடி ஒரே போர். ஏனென்றால் பாட்டுப்பாடவே சான்ஸ் இல்லையே!  இதுபோக மத்தியானம் ஆபீசர் கேம்பசில் இருந்த என்ஜினீயர் முரளீதரனுக்கு கேரியரில் சாப்பாடு எடுத்துப் போய் பரிமாறி வரவேண்டும். ஒரு மைல் தூரம் நடந்துதான் போய்வர வேண்டும்.

    ஒரு நாள் முன்னதாகவே போய் காத்திருப்பேன். இன்னொரு நாளோ அவர் காத்திருக்க, நான் லேட்டாகப்போய் திட்டு வாங்குவேன். சரிவரப் பரிமாறாவிட்டால், அதற்கு வேறு திட்டு.

    என்னுடைய சர்வீசில் அவருக்குத் திருப்தி இல்லாததால், என்னை மறுபடியும் அணைக்கட்டுப் பகுதிக்கு மாற்றி, `ஓஸ் பைப்' பிடிக்க அனுப்பி விட்டார்கள்.''

    இவ்வாறு கூறும் இளையராஜாவுக்குள் அணை தொடர்பான, ஒரு சோகமும் இருக்கிறது. அதுபற்றி கூறுகிறார்:

    "அப்போது பெரும்பாலும் அணையின் வேலைகள் முடிவுக்கு வந்து கொண்டிருந்த நேரம். திடீரென ஒருநாள் அரசாங்க அறிவிப்பாக தண்டோரா ஒலித்தது.

    ஊரை விட்டு மக்கள் வெளியேற்றம்

    அணையின் பின்பகுதியில் நீர் தேங்கும் இடத்தில் இருந்த ஊர்களான காமக்காபட்டி உள்ளிட்ட 11 கிராமங்களில் வசிப்பவர்கள் அதைக் காலி செய்துவிட்டு வேறு ஊருக்குப் போய்விட வேண்டும். இப்படி வெளியேற கடைசிநாள்'' என்று கெடு தேதியையும் அறிவித்தார்கள்.

    அணை உச்சியில் செடிகளுக்கு தண்ணீர் ஊற்றும் வேலையைத் தொடர்ந்து கொண்டிருந்த என் கண்ணில் மக்கள் ஊரை காலி செய்துவிட்டுப் போகும் காட்சி கண்ணில் படும். கெடு நாள் நெருங்க நெருங்க, கூட்டம் கூட்டமாய் அங்கிருந்த மக்கள் வெளியேறுவதைக் காண மனம் சகிக்கவில்லை.

    அவர்கள் வாழ்வதற்கு அரசாங்கம் வேறு நிலங்கள் கொடுக்கலாம். நிலத்தோடு அவர்களுக்கிருந்த அந்த உறவின் பிரிவுக்கு எதை ஈடாகக் கொடுக்க முடியும்?''

    - இவ்வாறு மிக இளம் வயதிலேயே மற்றவர்களின் பிரச்சினைகளையும் மனதுக்குள் பதியமிட்டுக்கொண்ட இளையராஜா, ஒரு வருடம் வைகை அணையில் வேலை செய்து முடித்துவிட்டார். கையில் பணம் கொஞ்சம் சேர்ந்திருந்தது.

    "இந்த வருடம் நிச்சயம் தேவாரம் ஸ்கூலில் பணம் கட்டி சேர்ந்து ஜோதிடத்தை பொய்யாக்கி விடவேண்டும்'' என்று திட்டமிட்டார்.

    ஆனால், அவர் பள்ளியில் சேருவதற்கு முன்பாக கேரளாவில் நடந்த தேர்தலில் இளையராஜாவின் அண்ணன் பாவலர் வரதராஜன் தீவிர பிரசாரத்தில் ஈடுபடவேண்டி இருந்தது. அதற்காக இளையராஜாவும் கேரளா சென்றார்.

    இதுபற்றி அவரே கூறுகிறார்:

    "1957-ல் நடந்த பொதுத்தேர்தலில் எல்லா இடத்திலும் காங்கிரஸ் வெற்றி பெற்றிருக்க, கேரளாவில் மட்டும் கம்யூனிஸ்டு கட்சி வெற்றி பெற்றது. ஒட்டு மொத்த இந்தியாவில் ஒரேயொரு மாகாணத்தில் (கேரளா) மட்டும் காங்கிரசுக்கு எதிராக வேறு கட்சி உருவானதை காங்கிரசால் ஜீரணிக்க முடியவில்லை.

    இந்த நிலையில் தேவிகுளம் பீர்மேடு தொகுதியில் நடந்த தேர்தல் செல்லாது என்று அறிவிக்கப்பட்டது. இந்த ஒரு தொகுதியில் வெற்றி பெறும் கட்சியே ஆட்சிக்கு வர முடியும் என்ற நிலை.

    இதனால் அந்தத் தொகுதிக்கு நடந்த மறு தேர்தலில் காங்கிரசுக்கும் கம்யூஸ்டுக்கும் "வாழ்வா சாவா'' நிலை. எல்லா தேசியத் தலைவர்களும் அங்கே முகாமிட்டு இருந்தனர். எந்த நேரத்தில் என்ன நடக்குமோ என்ற டென்ஷனான நிலை. இந்த தேர்தல் பிரசாரத்துக்கு கம்யூனிஸ்டு கட்சி சார்பில் பாவலர் அண்ணன் போயிருந்தார்.

    ஸ்கூலில் சேருவதற்கு முன் வந்த விடுமுறை நாட்களில் நானும் பாஸ்கரும் பாவலர் அண்ணனை பார்க்க மூணாறுக்கு போனோம்.

    கம்யூனிஸ்டு கட்சி ஆபீசில் ஏகப்பட்ட கூட்டம். தேர்தல் காரியதரிசி அமர்ந்திருக்க, பல எஸ்டேட் கட்சித் தலைவர்கள் வரிசையாக நின்றிருந்தார்கள். அவர்களிடம் பேசிய செயலாளர், "கம்யூனிஸ்டு தலைவர்கள் பி.ராமமூர்த்தி, பி.டி.ரணதிவே, எஸ்.ஏ.டாங்கே, ஏ.கே.கோபாலன், ஜோதிபாசு, ராஜேஸ்வரராவ், ஜீவானந்தம் என அத்தனை பேரும் உங்கள் தொகுதிகளுக்கு அடுத்தடுத்து வருவார்கள்'' என்றார்.

    இதைக்கேட்ட எஸ்டேட் தொழிலாளர்கள் அத்தனை பேரும் ஒரே குரலில் "தோழரே! இவர்களெல்லாம் எங்களுக்கு வேண்டாம். பாவலர் கையில் ஒரு மைக்கை கொடுத்து அவரை மட்டும் எங்களுடன் அனுப்பினீர்களென்றால், இந்தத் தொகுதியை நாங்கள் ஜெயித்துக் காட்டுகிறோம்'' என்றார்கள்.

    இது என் கண் முன்னே நடந்த நிகழ்ச்சி.

    தொழிலாளர்கள் இப்படிச் சொன்னதும் அவர்களிடம் பேசிய செயலாளர், "பாவலர் கண்டிப்பாக வருவார். அவர் பாடியபின் கூட்டம் தலைவர்களோடு நடக்கும்'' என்றார்.

    உடனே மளமளவென வேலைகள் தொடர்ந்தன. பாவலர் அண்ணன் ஒரு ஜீப்பில் மைக்கை கட்டிக்கொண்டு ஒவ்வொரு எஸ்டேட்டாக பாடிச்சென்றதை கண்ணாரக் காணும் பாக்கியம் எனக்கும் பாஸ்கருக்கும் கிடைத்தது.

    பள்ளிக்கூடத்தில் படிப்பதற்கு பணம் திரட்டுவதற்காக இளையராஜா வேலைக்குச் சென்றார். ஒரு நாளைக்கு சம்பளம் ஒரு ரூபாய்!
    பள்ளிக்கூடத்தில் படிப்பதற்கு பணம் திரட்டுவதற்காக இளையராஜா வேலைக்குச் சென்றார். ஒரு நாளைக்கு சம்பளம் ஒரு ரூபாய்!

    எட்டாவது வகுப்புக்கு மேல் படிக்க முடியாது என்று ஊரின் பிரபல ஜோதிடர்கள் சொன்னதும், நொந்து போனார் இளையராஜா. ஆனாலும் நம்பிக்கை இழக்காமல் ஜோதிடர்களிடம் `வார்த்தைப்போர்' செய்தார்.

    அதுபற்றி இளையராஜா கூறியதாவது:-

    நான் எட்டாவதை தாண்டமாட்டேன் என்று என் ஜாதகத்தை கணித்து ஜோதிடர்கள் சொன்னதும், அவர்கள் சொன்னதில் நம்பிக்கை ஏற்படாமல் "சரியாக பாருங்கள். என் ஜாதகத்தில் அப்படியா இருக்கிறது?'' என்று தாஜா செய்து கேட்டேன்.

    ஆனால் ஜோதிடர்களோ என்னைப் பற்றி கொஞ்சமும் கவலைப்படாமல், "உனக்கு எட்டாம் வகுப்புக்கு மேல் படிப்பே இல்லை'' என்று திட்டவட்டமாகச் சொல்லிவிட்டார்கள்.

    எனக்கு கோபம் வந்துவிட்டது. அவர்களிடம் வாதம் செய்யத் தொடங்கினேன். "உங்களுக்கு சிலப்பதிகாரத்தில் வரும் இளங்கோவடிகளைத் தெரியுமா? அவர் சேரன் செங்குட்டுவனுக்கு இளையவர். `மூத்தவன் இருக்க இளையவனுக்குத்தான் பட்டம் சூட்டப்படும்' என்று ஜோதிடம் சொன்னவர்களிடம் "உங்கள் ஜோதிடத்தை இப்போதே பொய்யாக்கிக் காட்டுகிறேன்'' என்றவர், அந்த நிமிடத்திலேயே துறவி ஆகிவிட்டார். அவர் துறவி ஆனதால், சேரன் செங்குட்டுவனுக்கே பட்டம் சூட்டப்பட்டது. அதேபோல் உங்கள் ஜோதிடத்தை நானும் பொய்யாக்கிக் காட்டுகிறேன்'' என்று சவால் விடுகிற தொனியில் பேசினேன்.

    எட்டாம் வகுப்பில் முழுப் பரீட்சை எழுதுவதற்கு முன்னதாக ஒரு சின்ன சோதனை. பரீட்சையை உத்தமபாளையத்தில் எழுதவேண்டும் என்றார்கள். அங்கே ஒரு ஆஸ்டலில் தங்கி மூன்று நாட்கள் பரீட்சை எழுதவேண்டும். உணவிற்காக ஒரு குறிப்பிட்ட தொகை கட்டவேண்டியிருந்தது. பணம் கட்ட வேண்டிய கடைசி நாளும் வந்தது. ஆனால் அம்மாவால் பணம் புரட்ட முடியவில்லை.

    இந்த இக்கட்டான நேரத்தில், அக்கா கமலம்தான் அவரது தாலியை விற்று பணம் கொடுத்தார்; அதுவும் அத்தானுக்கு (அக்காவின் கணவர்) தெரியாமல்.

    அக்கா தாலியை விற்றது கூட எனக்கு அந்த நேரத்தில் பெரிதாகத் தெரியவில்லை. ஜோதிடத்தை பொய்யாக்கப் போகிறோம் என்பதுதான் பெரிதாகத் தெரிந்தது.

    இப்போது நினைத்தால் அக்காவின் அன்பும், உயர்ந்த பண்பும் எனக்கு பிரமிப்பாக இருக்கிறது. உயர்ந்த பண்புகள் கல்வியால் மட்டுமே வருவதில்லை என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. அக்காவின் அன்றைய தியாகத்துக்கு எதை ஈடாகக் கொடுக்க முடியும்? எதைக் கொடுத்தாலும் ஈடாக முடியாத அந்த அன்பை வெறும் வார்த்தைகளில் விவரித்து விடமுடியாதுதான்.''

    - இப்படியாக எட்டாம் வகுப்பு தேர்வை எழுதி முடித்த இளையராஜாவுக்கு ஒன்பதாவது வகுப்பில் சேர முடியாத சோதனை ஏற்பட்டது.

    அதுபற்றி அவரே கூறுகிறார்:

    "ஒன்பதாம் வகுப்பில் சேர, தேவாரத்தில் உள்ள மேல்நிலைப்பள்ளிக்கு போனேன். பள்ளியில் சேரவேண்டுமானால் `ஸ்பெஷல் பீஸ்' 25 ரூபாய் கட்டவேண்டும் என்றார்கள். அம்மாவிடம் சொன்னேன். அம்மாவும் யார் யாரிடமோ கேட்டுப் பார்த்தும் அந்த நேரத்தில் எதுவும்
    நடக்கவில்லை. பள்ளிக்கூடம் தொடங்கிவிட்டது. ஒரு மாதம் ஆனது. பணம் கிடைக்கவில்லை. இரண்டு மாதமானது. பணம் புரட்ட முடியாத அம்மாவின் முகம் எனக்குள்ளும் கவலை ஏற்படுத்தியது. இதே நிலை மூன்றாவது மாதமும் நீடித்தபோது, "சரி! இந்த வருடம் நாம் ஸ்கூலுக்குப் போக, அந்த ஸ்கூல் விரும்பவில்லை போலும்'' என்று நினைத்துக் கொண்டேன். அப்படி நினைத்தபோதே, ஜோதிடர்கள் சொன்னதும் நினைவுக்கு வர, "இனி அந்த ஜோதிடர்கள் முகத்தில் எப்படி விழிப்பேன்?'' என்றும் வருத்தப்படத் தொடங்கினேன்.

    இந்த நேரத்தில் அத்தானும் அக்காளும் வைகை அணையில் இருந்தார்கள். மிலிட்டரியில் இருந்த அத்தான் அங்கிருந்து வந்து வைகை அணைப் பகுதியில் டிரைவராக இருந்தார்.

    அக்கா நினைப்பு வந்ததும் ஐடியா வந்து விட்டது. வைகை அணையில் மட்டும் எனக்கொரு வேலை கிடைத்தால் ஒரு வருடம் வேலை பார்த்து, ஒரு வருட சம்பளத்தை வைத்துக்கொண்டு அடுத்த வருடமாவது படிப்பைத் தொடரலாம் என்று நினைத்தேன்.

    அம்மாவிடம் ஓடிவந்தேன். விஷயத்தை ரத்தினச் சுருக்கமாகச் சொல்லி, "நான் வைகை அணை போய் அத்தானைப் பார்க்கட்டுமா?'' என்று கேட்டேன்.

    அம்மாவுக்கும் என் ஆர்வம் புரிந்தது. படிக்க ஆசைப்படும் பிள்ளையை அதற்கொரு புதிய வழி கிடைக்கும்போது எந்தத் தாய்தான் தடுப்பார்? "போய்வா மகனே'' என்றார், அம்மா.

    என் வாழ்வைத்தேடி முதல் பயணம். வைகை அணை எப்படி இருக்குமோ என்ற கற்பனையுடன் புறப்பட்டேன். அத்தான் மூலமாக வேலை கிடைப்பதில் சிரமம் எதுவும் இல்லை.

    வைகை அணையின் கரையிலும், கீழே பூங்காவிற்கு மேலுள்ள புல்வெளிகளிலும் தண்ணீர்க் குழாயை பிடித்தபடி தண்ணீர் ஊற்ற வேண்டும். நாளொன்றுக்கு ஒரு ரூபாய் சம்பளம்! வாரா வாரம் சம்பளமாக ஏழு ரூபாய் கொடுத்து விடுவார்கள் என்றார்கள்.

    அரை டிராயர், அரைக்கை சட்டை, குள்ளமான கறுப்பு உருவம். தண்ணீர் பாய்ச்சும்போது சும்மா இருக்க முடியாது. யாரைப் பற்றியும் கவலைப்படாமல் பாட்டுப்பாடியபடியே தண்ணீர் பாய்ச்சுவேன்.

    பொதுவாகவே சத்தம் போட்டுப் பாடுவது எனக்கும் பாஸ்கருக்கும் பழக்கம். அக்கம் பக்கம் போவோர், வருவோர் என்னை வேடிக்கை பார்த்தார்கள். நானோ விடாப்பிடியாக பாடியபடியே வேலையைத் தொடர்ந்தேன்.

    ஒரு வாரம் முடிந்து ஞாயிற்றுக்கிழமை மாலை ஆபீசுக்குப் போய் சம்பளம் வாங்கினேன்.

    ஏழு புத்தம் புதிய ஒரு ரூபாய் நோட்டுக்கள். மணக்க, மணக்க! அடேயப்பா, வான மண்டலத்தில் சஞ்சரித்தேன். பறந்தேன் என்று கூட சொல்லலாம்.

    ஏழு ரூபாய் கையில் கிடைத்த அந்த நொடியில் ஏற்பட்ட ஆனந்தத்தை இன்றுவரை வேறு எந்தப் பணமும் எனக்குத் தரவில்லை.

    இப்படி 25 நாட்கள் வேலை செய்தால் 25 ரூபாய் வந்துவிடும். அப்புறமாய் போய் ஸ்கூலில் சேர்ந்து விடலாமா என்று கூட யோசித்தேன்.

    ஆனால் 4 மாத பாடம் நடந்திருக்குமே, என்ன செய்வது?

    சரி! ஒரேயடியாக அடுத்த வருடம் படிப்பை தொடரலாம். எனக்குள் ஒரு முடிவுக்கு வந்து வேலையைத் தொடர்ந்தேன்.

    இப்படிச் சொன்ன இளையராஜா, ஒருநாள் தண்ணீர் பாய்ச்சும் நேரத்தில் பாடிக்கொண்டே பணியைத் தொடர அப்போது அந்த வழியாக வந்த வைகை அணையின் சீப் என்ஜினீயர் காதுக்கும் அந்தப் பாட்டு எட்டியது.

    இளையராஜாவின் அப்பா இறந்த நேரத்தில் கேரளாவில் 25 ஏக்கர் ஏலக்காய் எஸ்டேட் சொந்தமாக இருந்தது. ஆனால் அதை விற்கும்படியான சூழ்நிலையும் இளையராஜாவின் தாயாருக்கு ஏற்பட்டது. வாழ்க்கையை நாடகம் என்பார்கள். இளையராஜா வீட்டிலோ, `நாடகம்'தான் இந்த திருவிளையாடலை செய்து
    இளையராஜாவின் அப்பா இறந்த நேரத்தில் கேரளாவில்  25 ஏக்கர் ஏலக்காய் எஸ்டேட் சொந்தமாக இருந்தது. ஆனால் அதை விற்கும்படியான சூழ்நிலையும் இளையராஜாவின் தாயாருக்கு ஏற்பட்டது.  வாழ்க்கையை நாடகம் என்பார்கள். இளையராஜா வீட்டிலோ, `நாடகம்'தான் இந்த திருவிளையாடலை செய்து முடித்து விட்டது. அதுபற்றி இளையராஜாவே தொடருகிறார்:

    "அப்பா இறந்த நேரத்தில், ஆறு குழந்தைகளோடு அம்மா ரொம்பவே சிரமப்பட்டார். அப்பா தானாக உருவாக்கிய 25 ஏக்கர் ஏலக்காய் எஸ்டேட் அப்போது எங்கள் குடும்பத்தின் சொத்தாக இருந்தது. அத்துடன் குடியிருந்த வீடும் சொந்தமாக இருந்தது. பண்ணைபுரத்தின் மேற்கே இருந்த குளத்தை நிலமாக மாற்றியதில், மூன்று ஏக்கர் நிலம் கைக்கு வந்தது.

    பாவலர் அண்ணனுக்கு கம்யூனிஸ்டு கட்சி மீது ஈடுபாடு ஏற்பட்ட நேரம் அது. கட்சிக்காக தன் சொந்த செலவில் நாடகம் எழுதி அரங்கேற்றினார். "இரு கொலைகள்'', "பாட்டாளியின் குரல்'' என்ற இந்த இரண்டு நாடகங்களுக்கும் அண்ணனே கதை, வசனம், பாடல்கள் எழுதினார். டைரக்ஷனும் அவரே. அதோடு நாடகத்தில் காமெடி நடிகர் வேஷத்தையும் அவரே செய்தார்.

    இந்த நாடகத்தில் நடிக்க உள்ளூர், பக்கத்து ஊர் என்று சிலரை தேர்ந்தெடுத்தார். இன்னும் சில நடிகர் - நடிகைகளை, மதுரையில் இருந்தும் கேரளாவில் இருந்தும் தேர்ந்தெடுத்தார்.

    நாடக ஒத்திகை எங்கள் வீட்டில்தான் நடக்கும். இந்த ஒத்திகை மட்டுமே ஒரு மாதத்துக்கு மேலாக தொடர்ந்தது. அத்தனை பேருக்கும் எங்கள் வீட்டில்தான் சாப்பாடு. அம்மாவும், அக்கா கமலமும் சமைத்துப்போட்டார்கள். தினமும் ஆடு, கோழி, மீன் என்று சமையல் அமர்க்களப்படும். சோதனை நாடகம் நடக்க வேண்டிய தினத்தில்தான் சோதனை. நாடகத்தை காண்ட்ராக்ட் எடுத்திருந்த அண்ணனின் நண்பர் ஒருவர், டிக்கெட்டில் வசூலான பணத்தை எடுத்துக்கொண்டு `எஸ்கேப்' ஆகிவிட்டார். நாடக மேடை மைக்கில், அவர் பெயரைச் சொல்லி "எங்கிருந்தாலும் உடனே மேடைக்கு வரவும்'' என்று அறிவிப்பு செய்து கொண்டிருந்தார்கள்.

    ஓடியவர் ஓடியவர்தான். என்றாலும் அரங்கம் முழுவதும் நிரம்பியிருந்த கூட்டத்தை ஏமாற்ற விரும்பாத அண்ணன், தனக்கே உரிய கலை ஆர்வத்தில் நாடகத்தை நடத்தி முடித்து விட்டார்.

    நாடகம் முடிந்த பிறகுதான் பிரச்சினை. நாடகம் போட்ட தியேட்டருக்கு பணம், மைக்செட், மதுரையில் இருந்து வந்த சீன் செட்டிங்ஸ் மேக்கப் மேன், டிரஸ், விளம்பர பேனர்கள், போஸ்டர்கள், டிக்கெட், நோட்டீஸ், பிரிண்டிங் சார்ஜ், விளம்பர வண்டிக்கு வாடகை, பேண்டு செட், பின்னணி இசை, ஆர்மோனியம், தபேலா, பாடகர் - பாடகி என இத்தனை பேருக்கும் பணம் பட்டுவாடா செய்தாகவேண்டிய நிர்ப்பந்தம். ஆனால், அண்ணன் தனக்கே உரிய மன உறுதியுடன் பணத்தை குறிப்பிட்ட தினத்தில் தருவதாக எல்லோரிடமும் உறுதிமொழி கொடுத்தார். அவர்கள் அண்ணனை நம்பினார்கள்.

    இதில் தியேட்டர் மட்டும்தான் பண்ணைபுரம் கிராமத்துக்கு சொந்தமானது. தியேட்டர் வாடகைக்கு மட்டும் கிராமத்தினரை அழைத்து விஷயம் சொல்லி சமாளித்தார்.

    ஆனால் மற்றவர்களுக்கு? அத்தோடு நாடக சம்பந்தப்பட்ட அத்தனை பேருக்கும் ஒரு மாதத்துக்கும் மேலாக சமைத்துப் போட்ட கடன்?

    அண்ணனின் தர்ம சங்கடமான நிலையை அம்மா புரிந்து கொண்டார். அண்ணன், நாடகக்காரர்களுக்கு கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றும் நோக்கத்தில் அப்பா சுயமாக சம்பாதித்து வைத்திருந்த ஏலக்காய் தோட்டத்தை விற்கும் முடிவுக்கு வந்தார்.

    இன்று கோடிக்கணக்கான விலை மதிப்புள்ள அந்த ஏலக்காய் தோட்டத்தை அன்று அம்மா விற்றது வெறும் பத்தாயிரம் ரூபாய்க்கு. மகன் பட்ட கடனுக்காக சொத்தை விற்று பிரச்சினையை சரி செய்தார் அம்மா.

    அந்த ஏலக்காய் தோட்டத்துக்கு அப்பா வைத்திருந்த பெயர் என்ன தெரியுமா? அசோகவனம்.''

    இவ்வாறு குறிப்பிட்ட இளையராஜா, இசையில் தனக்கு ஆர்வம் ஏற்பட்ட நிகழ்ச்சி பற்றி கூறியதாவது:-

    இன்றைக்கிருக்கும் "கரோக்கி'' சிஸ்டத்தை (திரை இசையுடன் சேர்ந்து பாடுவது) அந்தக் காலத்திலேயே பாவலர் அண்ணன் ஆரம்பித்து விட்டார். எனக்குத்தெரிய இந்த முறையைத் தொடங்கியவர் அண்ணனாகத்தான் இருக்கக்கூடும்.

    ஒரு இசைத்தட்டை ஓடவிட்டதும் மயூசிக் தொடங்கும். அதில் பாடுகிற குரல் ஒலிக்கும் நேரத்தில் மைக்கில் அண்ணன் பாடுவார். இசைத் தட்டில் இருந்து எழுகிற வால்யூமை குறைத்து வைப்பார். இதில் என்னையும் பாட வைப்பார்.

    "அமுதைப் பொழியும் நிலவே'', "உலவும் தென்றல் காற்றினிலே'', "திருவிளக்கு வீட்டுக்கு அலங்காரம்'' - இப்படி பல பாடல்களை நானும் பாடியிருக்கிறேன்.

    ஊர்த் திருவிழாக்களில், அவ்வப்போது ஆர்மோனியம் - மிருதங்கம் சகிதம் கச்சேரி செய்ய ஆரம்பித்தார், அண்ணன். இதில் ஆர்மோனியம் வாசிக்க, சாக்ராபுரம் என்ற ஊரில் இருந்து சங்கரதாஸ் என்பவர் வருவார். வீட்டில் ஒத்திகை நடக்கும்.

    அவருடைய வாசிப்பில் நானும், பாஸ்கரும் அதிகமாக ஈர்க்கப்பட்டு, ஒரு கட்டத்தில் அவரது ரசிகர்களாகவே மாறிப்போனோம்.

    இப்படி இசையும், படிப்புமாக போய்க்கொண்டிருந்த நேரத்தில் எட்டாவது வகுப்பு வந்துவிட்டேன். அப்போது ஒரு நாள் அம்மா எங்கள் எல்லோருடைய ஜாதகங்களையும் பார்க்க விரும்பி, பழனிச்சாமி, சந்தானம் என்ற 2 ஜோதிடர்களை வரவழைத்திருந்தார்.

    அந்த ஜோதிடர்களின் கணிப்பு தப்பியதே இல்லை. அத்தனை கச்சிதமாக இருக்கும்.

    அந்த ஜோதிடர்கள் என் ஜாதகத்தை பார்க்கும்போது என்ன சொன்னார்கள் தெரியுமா? "இந்த ஜாதகன்தான் இந்த வீட்டுக்கு பெருவிரல் போல! ஆனால் இவன் எட்டாவதற்கு மேல் படிக்க முடியாது.''

    அதிர்ந்தே போனேன். ஆனால் அதுதான் நடந்தது.

    தமிழ்த் திரையுலகில் `இசை'யாகவே வாழ்ந்து கொண்டிருப்பவர் `இசைஞானி' இளையராஜா. 1976-ம் ஆண்டு `அன்னக்கிளி' மூலம் சினிமாவுக்குள் இசையமைப்பாளராக அடியெடுத்து வைத்த இளையராஜாவுக்கு, இசைத்துறையில் இது 31-வது ஆண்டு.
    தமிழ்த் திரையுலகில் `இசை'யாகவே வாழ்ந்து கொண்டிருப்பவர் `இசைஞானி' இளையராஜா. 1976-ம் ஆண்டு `அன்னக்கிளி' மூலம் சினிமாவுக்குள் இசையமைப்பாளராக அடியெடுத்து வைத்த இளையராஜாவுக்கு, இசைத்துறையில் இது 31-வது ஆண்டு.

    "அன்னக்கிளி'' படத்தில் "அன்னக்கிளி உன்னைத்தேடுதே'', "மச்சானைப் பார்த்தீங்களா'' எனத் தொடங்கிய இந்த இசையருவி, நதியாக ஓடத்தொடங்கி இன்று கடல் அளவுக்கு தன் இசை எல்லையை விஸ்தரித்துக் கொண்டிருக்கிறது.

    இளையராஜா பிறந்தது மதுரை மாவட்டத்தில் உள்ள பண்ணைபுரம் கிராமம். 1943-ம் ஆண்டு பெற்றோருக்கு ஐந்தாவது குழந்தையாகப் பிறந்தார். இவருக்கு அடுத்து ஆறாவதாக பிறந்தவர் அமர்சிங் என்ற கங்கை அமரன்.

    தனது குடும்பம் பற்றி இளையராஜா கூறுகிறார்:

    "நான் பிறந்தது மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த பண்ணைபுரம் என்னும் கிராமத்தில். இப்போது அது தேனி மாவட்டத்தில் உள்ளது.

    அப்பா பெயர் ராமசாமி. அம்மா சின்னத்தாயம்மாள். ஊரில் அப்பாவை `கங்காணி' ராமசாமி என்றால்தான் தெரியும். அப்பாவுக்கு இரண்டு மனைவிகள். இரண்டாவது மனைவிக்குப் பிறந்த குழந்தைகளில் நான் ஐந்தாவது. ஆறாவது என் தம்பி அமரன் (கங்கை அமரன்).

    எங்களுக்கு மூத்த அண்ணன் பாவலர் வரதராஜன். அடுத்து அக்காள் கமலம். அடுத்து பத்மாவதி. அடுத்தவர் அண்ணன் பாஸ்கர்.

    1943-ம் ஆண்டு நான் பிறந்தேன். தமிழில் வைகாசி மாதம் 20-ந்தேதி. (3-6-1943)

    அப்பாவுக்கு ஜோதிடம் தெரியும். என் பிறந்த நேரத்தை கணித்த அப்பா, அம்மாவிடம் "இவன் நம் வீட்டிலேயே முக்கியமானவன். இவனால் சீரும் சிறப்பும் வருவதையெல்லாம் பார்த்து சந்தோஷம் அனுபவித்த பிறகுதான் நீ போவாய்'' என்று கூறியிருக்கிறார்.

    அப்பா சொன்னதில் உள்ள `உள் அர்த்தம்' அம்மாவை பாதிக்கச் செய்துவிட்டது. "நீங்க என்ன சொல்றீங்க?'' என்று பதட்டத்துடன் கேட்டிருக்கிறார்.

    பதிலுக்கு அப்பா, "எல்லாம் இவன் ஜாதகத்தை கணித்த பிறகே சொல்கிறேன். இவனுக்கு 9 வயது வரும்போது நான் போய்விடுவேன்'' என்று சொல்லியிருக்கிறார்.

    அப்பா அவர் சொன்னதுபோலவே என் 9-வது வயதில் (1952-ம் வருஷம் ஏப்ரல் 10-ந்தேதி) காலமாகிவிட்டார். அப்பா இறக்கும்போது நான் நாலாவது படித்துக் கொண்டிருந்தேன். உயிர் பிரியும் நேரத்தில் என் கையையும் அண்ணன் பாஸ்கரின் கையையும் பாவலர் அண்ணன் கையில் பிடித்துக் கொடுத்துவிட்டு, அண்ணன் தலையில் கை வைத்து ஆசீர்வதித்தார். அத்தோடு உலக வாழ்க்கையில் இருந்து விடைபெற்றுக்கொண்டார்.

    எனக்கு அப்பா வைத்த பெயர் ஞானதேசிகன். ஆனால் பள்ளியில் சேர்க்கும்போது ராஜையா என்று மாற்றி விட்டார். ஆனால் `ராசையா' என்றே எல்லோராலும் அழைக்கப்பட்டேன். பட்டிக்காடு அல்லவா! `ராஜையா'வுக்கு பதில் ராசையாதான் அவர்களுக்கு சுலபம்.

    நான் படிப்பிலும் பெரிய விசேஷம் கிடையாது. பண்ணைபுரத்தில் பெருமாள் வாத்தியார் என்பவர் ஒரு பள்ளிக்கூடம் நடத்தி வந்தார். அதில் ஐந்தாம் வகுப்பு வரைதான் இருந்தது.

    பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோதுதான் சினிமா பார்க்கும் வழக்கம் ஏற்பட்டது. ஊரில் ஒரு டூரிங் டாக்கீஸ் இருந்தது. அதில் நானும் பாஸ்கர் அண்ணனும் அடிக்கடி சினிமா பார்க்கச் செல்வது வழக்கமாகி விட்டது.

    இப்படி பார்த்த ஒரு படம் பானுமதி, நாகேஸ்வரராவ் நடித்த "லைலா மஜ்னு.'' இந்தப் படத்தை பாடல்களுக்காக மூன்று நான்கு முறை பார்த்தோம். பாடல்கள் எல்லாம் எங்களுக்கு மனப்பாடமாகி விட்டது. அண்ணன் பாவலர் எப்போதுமே அந்தப் பாடல்களை பாடிக்கொண்டிருப்பார்.

    அந்தப் படத்தில் வரும் ஒரு காட்சி எனக்குள் ஆழமாக பதிந்து விட்டது. ஆசிரியர் பாடம் எழுதச் சொல்ல, கயஸ் மட்டும் `லைலா லைலா' என்று தன்னுடைய சிலேட்டில் எழுதிக்கொண்டிருப்பான். இதைப் பார்த்த ஆசிரியர் கயஸின் கையில் பிரம்பால் விளாசி விடுவார். கை புண்ணாகி விடும். எங்கள் வகுப்பிலும் ஆசிரியர் ஏதோ எழுதச் சொல்லியிருந்தார். முந்தின நாள் இரவு ஆட்டம் பார்த்த ஞாபகத்தில் சிலேட்டில் `லைலா லைலா' என்று எழுதியிருந்தேன்.

    என்ன நடந்தது தெரியுமா? படத்தில் கயஸுக்கு விழுந்த அடியை விட எனக்கு பலமாக அடி விழுந்தது. கயஸுக்கு வருத்தப்பட என் மாதிரி ரசிகர்கள் இருந்தார்கள். எனக்காக வருத்தப்படத்தான் யாருமில்லை.

    இந்தப் படத்தின் பாடல்களால் - நான் வளர வளர, கயஸை விடவும் லைலா மீது எனக்கு காதல் அதிகமாகி விட்டது. அந்தப் படத்துக்கு சி.ஆர்.சுப்பராமன் இசையமைத்திருந்தார். பின்னாளில் இவரே என் மானசீக குரு ஆனார்.

    அண்ணனுக்கு (பாவலர் வரதராஜன்) பாட்டு, நாடகம், கச்சேரி என்பதில் ஆர்வம் அதிகம். திருச்சி வானொலி நிலையத்தில் நிலைய வித்வானாக இருந்த மரியானந்த பாகவதரிடம் கொஞ்சம் சங்கீதம் கற்றிருந்தார். இசை எனக்கு அறிமுகமானதும், ஆர்வமானதும் அண்ணனால்தான். நான் ஓரளவுக்கு ராகங்கள் பற்றி தெரிந்து கொண்டதற்குக் காரணமும் அவர்தான். இப்படித்தான் எனக்கு ராகங்கள் கல்யாணியும், சங்கராபரணமும், கரகரப்பிரியாவும், தோடியும் அடையாளம் கண்டு கொள்ளக்கூடிய அளவுக்கு தெரிய வந்தது.

    இளையராஜாவுக்கும், கோவைத் தம்பிக்கும் சமரசம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, "மதர்லேண்ட் பிக்சர்ஸ்'' படங்களுக்கு மீண்டும் இளையராஜா இசை அமைத்தார்.

    இளையராஜாவுக்கும், கோவைத் தம்பிக்கும் சமரசம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, "மதர்லேண்ட் பிக்சர்ஸ்'' படங்களுக்கு மீண்டும் இளையராஜா இசை அமைத்தார்.

    சமரசம் ஏற்பட்டது எப்படி என்பது பற்றி கோவைத்தம்பி கூறியதாவது:-

    "இளையராஜா இல்லாமல் இனி படம் தயாரிப்பதில்லை என்ற முடிவுக்கு வந்ததும், இளையராஜா இதுபற்றி என்ன நினைக்கிறார் என்பதை தெரிந்து கொள்ள நினைத்தேன். அவர் வீட்டுக்கு என் மகன் மோகன் துரையையும், என் மனைவி சீதாவையும் அனுப்பி வைத்தேன்.

    அவர்களை இளையராஜாவும், அவர் துணைவியாரும் அன்புடன் வரவேற்று உபசரித்திருக்கிறார்கள். "என் அப்பா, உங்கள் இசை அமைப்பில் படம் தயாரிக்க விரும்புகிறார்...'' என்று என் மகன் ஆரம்பித்ததுமே, "நானா உங்கள் அப்பாவுடன் கோபித்துக் கொண்டேன்? அவர் அல்லவா கோபித்துக்கொண்டு என்னைப் பார்க்க வராமல் இருந்தார்! இதை உங்கள் அப்பாவிடம் கூறுங்கள். நாம் எப்போதும் ஒரே குடும்பம்தான். உங்கள் அப்பாவை வரச்சொல்லுங்கள்'' என்று இளையராஜா கூறியிருக்கிறார். இதை என் மகன் என்னிடம் வந்து கூறியதும், நான் இளையராஜாவை நேரில் சந்தித்தேன். இருவரும் மனம் விட்டுப் பேசினோம். எங்களிடையே இருந்த கருத்து வேற்றுமைகள் அகன்றன. எங்கள் நட்பு மீண்டும் தொடர்ந்தது.

    அடுத்து நான் தயாரித்த "உன்னை வாழ்த்திப் பாடுகிறேன்'' என்ற படத்துக்கு இளையராஜா இசை அமைத்தார். இதில் பார்த்திபன், சுமாரங்கநாத் நடித்தனர். ஸ்ரீதேவ் டைரக்ட் செய்தார். இந்தப்படம் 50 நாட்கள் ஓடியது. அடுத்து, ஆர்.கே.செல்வமணியுடன் கூட்டாக "செம்பருத்தி'' படத்தைத் தயாரித்தேன். இதற்கு இளையராஜா இசை அமைத்தார். இந்தப் படத்தில்தான் ரோஜா அறிமுகமானார். கதாநாயகனாக பிரசாந்த் நடித்தார்.

    செல்வமணி டைரக்ட் செய்த இந்தப்படம் பெரிய வெற்றி பெற்றது. 200 நாட்கள் ஓடி சாதனை படைத்தது. 10 ஆண்டுகளில் 13 படங்களைத் தயாரித்தேன். அதன் பிறகு தொடர்ந்து படம் எடுக்கக்கூடிய ஆரோக்கியமான சூழ்நிலை திரை உலகில் இல்லாததால், படம் எடுப்பதை நிறுத்தினேன். நல்ல சூழ்நிலைக்காக காத்திருந்தேன். இப்போது காலம் கனிந்திருப்பதால், மீண்டும் படத்தயாரிப்பில் மதர்லேண்ட் பிக்சர்ஸ் ஈடுபட இருக்கிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். சமீபத்தில் வெளிவந்து பெரும் வெற்றி பெற்ற "உயிர்'' படத்தின் டைரக்டர் சாமியின் டைரக்ஷனில் "சதம்'' என்ற படத்தைத் தயாரிக்க இருக்கிறேன். இதில் விக்ராந்த் (நடிகர் விஜய்யின் தம்பி) கதாநாயகனாக நடிக்க இருக்கிறார்.''

    இவ்வாறு கோவைத்தம்பி கூறினார்.

    கோவைத்தம்பி -சீதா தம்பதிகளுக்கு ஒரு மகன், இரண்டு மகள்கள். சீதா கோவையில் `மதர்லேண்ட் மெட்ரிகுலேஷன் பள்ளி'யை நடத்துகிறார். மூத்த மகன் கோ.மோகன் துரை, சென்னையில் மதர்லேண்ட் வீடியோ ஸ்டூடியோவை நடத்தி வருகிறார். மனைவி பெயர் சியாமளா. மூத்த மகள் பெயர் இந்திரா. இவருடைய கணவர் தெய்வசிகாமணி, கம்ப்யூட்டர் டிசைனர். இளையமகள் நித்யாவுக்கும் திருமணம் ஆகி விட்டது. கணவர் டாக்டர் ரமேசுடன் அமெரிக்காவில் வசிக்கிறார்.
    சிவாஜிகணேசனை வைத்துப் படம் எடுக்க வேண்டும் என்ற கோவைத்தம்பியின் விருப்பம், "மண்ணுக்குள் வைரம்'' படத்தின் மூலம் நிறைவேறியது.

    சிவாஜிகணேசனை வைத்துப் படம் எடுக்க வேண்டும் என்ற கோவைத்தம்பியின் விருப்பம், "மண்ணுக்குள் வைரம்'' படத்தின் மூலம் நிறைவேறியது.

    கோவைத்தம்பி, எம்.ஜி.ஆரின் பரம பக்தர். எனினும், தனது மதர்லேண்ட் பிக்சர்ஸ் சார்பில், சிவாஜிகணேசனை வைத்து ஒரு படம் தயாரிக்க வேண்டும் என்று விரும்பினார்.

    இந்த சமயத்தில், இளம் டைரக்டர் மனோஜ்குமாரிடம் ஒரு நல்ல கதை இருப்பதாகவும், அவருக்கு வாய்ப்பு கொடுக்கலாம் என்று கோவைத்தம்பியிடம் பாரதிராஜா சிபாரிசு செய்தார். அதைத்தொடர்ந்து, கோவைத்தம்பியை மனோஜ்குமார் சந்தித்து, "மண்ணுக்குள் வைரம்'' கதையைச் சொன்னார். கதை, கோவைத் தம்பிக்கு பிடித்துவிட்டது. "இது சிவாஜிக்கு ஏற்ற கதை'' என்று தீர்மானித்தார்.

    அப்போது, ஒரு தெலுங்குப் படத்தில் நடிப்பதற்காக சிவாஜி ஐதராபாத்துக்கு சென்றிருந்தார். கோவைத்தம்பி, ஐதராபாத்துக்குச் சென்றார். படப்பிடிப்பில் இருந்த சிவாஜியை சந்தித்து `மண்ணுக்குள் வைரம்' கதையைச் சொன்னார்.

    கதையைக் கேட்ட சிவாஜி, "கதை எனக்குப் பிடித்திருக்கிறது. மதர்லேண்ட் பிக்சர்ஸ் நிறுவனத்தின் படத்தில் நடிப்பதில் எனக்குப்பெருமைதான். ஆனால், என்னை நடிக்க வைப்பதாக அண்ணன் எம்.ஜி.ஆரிடம் சொல்லிவிட்டீர்களா?'' என்று கேட்டார்.

    "அண்ணனிடம் இதுபற்றி பேசி விட்டுத்தான் இங்கு வருகிறேன். என் படத்தில் நீங்கள் நடிப்பதில் அண்ணனுக்கு மகிழ்ச்சிதான்!'' என்று பதில் அளித்தார், கோவைத்தம்பி. "அப்படியா? ரொம்ப மகிழ்ச்சி. உங்கள் படத்தில் நடிக்க எனக்கு சம்மதம்'' என்று சிவாஜிகணேசன் தெரிவித்தார்.

    மனோஜ்குமார் டைரக்ஷனில், "மண்ணுக்குள் வைரம்'' படப்பிடிப்பு தொடங்கியது. சிவாஜிக்கு ஜோடியாக சுஜாதா நடித்தார். தேவேந்திரன் என்ற புதிய இசை அமைப்பாளர் இசை அமைத்தார். இதுபற்றி கோவைத்தம்பி கூறுகையில், "மண்ணுக்குள் வைரம் படம் 11-12-1986-ல் வெளிவந்து, 75 நாட்கள் ஓடியது. படம் நூறு நாட்கள் ஓடவில்லை என்றாலும், நடிகர் திலகத்தை வைத்து படம் எடுத்த மன நிறைவு இன்றளவும் எனக்கு இருக்கிறது'' என்றார்.

    அடுத்து, "மங்கை ஒரு கங்கை'' என்ற படத்தை கோவைத்தம்பி எடுத்தார். இதில் சுரேஷ் -நதியா நடித்தார்கள். படத்தை மலையாள பட டைரக்டர் ஹரிஹரன் டைரக்ட் செய்தார். லட்சுமிகாந்த் -பியாரிலால் இசை அமைத்தனர். 25-7-1987-ல் வெளியான இப்படம் 50 நாட்களே ஓடியது. 1987 டிசம்பர் 24-ந்தேதி எம்.ஜி.ஆர். மறைந்தபோது, கோவைத்தம்பி நிலைகுலைந்து போனார்.

    அதுபற்றி அவர் கூறியதாவது:-

    "எம்.ஜி.ஆர். மறைந்த அந்த நாள், என் வாழ்க்கையில் மிகத் துயரமான நாள். வானமே இடிந்து என் தலையில் விழுந்தது போல இருந்தது. நூறு குத்தீட்டிகளைக்கொண்டு, யாரோ என் இதயத்தைக் கிழிப்பது போன்ற ரண வேதனை ஏற்பட்டது. புகழின் உச்சியில் இருந்து, புழுதி மேட்டுக்குத் தள்ளப்பட்டு விட்டது போன்ற உணர்வு. இந்தத் துயரில் இருந்து நான் விடுபட பல நாட்கள் ஆயின.

    அடுத்து, விஜயகாந்த் -ராதிகா நடிக்க "உழைத்து வாழவேண்டும்'' என்ற படத்தை தயாரித்தேன். இதை அமீர்கான் டைரக்ட் செய்தார். தேவேந்திரன் இசை அமைத்தார். 8-11-1988-ல் (தீபாவளி அன்று) இப்படம் வெளிவந்தது. இந்தப் படம் எனக்கு பெரிதாக லாபம் தரவில்லை. அதற்குக் காரணம், அந்த தீபாவளிக்கு விஜயகாந்தின் 2 படங்கள் வெளிவந்தன. அதனால் "உழைத்து வாழவேண்டும்'' சுமாராகவே ஓடியது. இதன் காரணமாக, விஜயகாந்த் தன் சம்பளத்தின் பெரும் பகுதியை வாங்கிக் கொள்ளாமல் விட்டு விட்டார். அவருடைய இந்தப் பெருங்குணத்தை, இப்போது நினைத்தாலும் நெஞ்சம் நெகிழ்கிறது.

    என்னுடைய ஆரம்ப காலப்படங்கள் மாபெரும் வெற்றி பெற்றன. பிற்கால படங்களுக்கு அத்தகைய வெற்றி கிடைக்கவில்லை. இதுபற்றி தீவிரமாக யோசித்தேன்.

    என்னுடைய மதர்லேண்ட் பிக்சர்ஸ் தயாரித்த முதல் படமான "பயணங்கள் முடிவதில்லை''யில் இருந்து, தொடர்ந்து பல படங்களுக்கு இசை அமைத்தவர் இளையராஜா. என் படங்களின் வெற்றியில் பெரும் பங்கு இளையராஜாவுக்கு உண்டு. கருத்து வேற்றுமையினால் அவர் நட்பை இழந்ததால், என் பிற்காலப்படங்கள் பாதிப்புக்கு உள்ளாயின.

    எனவே, கவுரவம் பார்க்காமல் இளையராஜாவுடன் சமரசம் செய்து கொள்வது என்றும், அவர் இல்லாமல் இனி படம் எடுப்பதில்லை என்றும் முடிவு செய்தேன்.''

    இவ்வாறு கோவைத்தம்பி கூறினார்.
    வரிசையாக வெற்றிப் படங்களைத் தயாரித்த கோவைத்தம்பி, மணிரத்னம் டைரக்ஷனில் "இதயக்கோயில்'' படத்தைத் தயாரித்தார். இதில் மோகன், அம்பிகா, ராதா நடித்தனர்.

    வரிசையாக வெற்றிப் படங்களைத் தயாரித்த கோவைத்தம்பி, மணிரத்னம் டைரக்ஷனில் "இதயக்கோயில்'' படத்தைத் தயாரித்தார். இதில் மோகன், அம்பிகா, ராதா நடித்தனர்.

    ஆர்.சுந்தர்ராஜன் டைரக்ஷனில் இரண்டு வெற்றிப் படங்களைத் தயாரித்த கோவைத்தம்பி, தன்னுடைய 4-வது படத்தையும் அவர் டைரக்ஷனில் தயாரிக்க விரும்பினார். ஆனால், வெற்றிப்பட டைரக்டர்கள் வரிசையில் இடம் பெற்று விட்டதால், சுந்தர்ராஜன் ரொம்ப "பிசி''யாகிவிட்டார். தவிர, அவருடைய சம்பளமும் அதிகம்.

    எனவே, அவரிடம் கால்ஷீட் கேட்டு தர்மசங்கடத்தைத் தர விரும்பாமல், புதிய டைரக்டரை அறிமுகப்படுத்த விரும்பினார், கோவைத்தம்பி. அதன்படி, தனது நான்காவது படமான "உன்னை நான் சந்தித்தேன்'' படத்தை இயக்கும் பொறுப்பை கே.ரங்கராஜிடம் ஒப்படைத்தார். சிவகுமார், மோகன், ரேவதி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்தனர். இளையராஜா இசை அமைத்தார். 17-10-1984-ல் வெளியான இந்தப்படமும் வெற்றிப்படமாக அமைந்தது. 150 நாட்கள் ஓடியது.

    தொடர்ந்து கே.ரங்கராஜ் டைரக்ஷனில் "உதய கீதம்'' படத்தைத் தயாரித்தார். இதில் மோகன், ரேவதி, லட்சுமி நடித்தனர். 12-4-1985-ல் வெளியான இந்தப்படம் 148 நாட்கள் ஓடியது. இதன்பின் மணிரத்னம் டைரக்ஷனில், "இதயகோயில்'' என்ற படத்தை கோவைத்தம்பி தயாரித்தார். இது, மதர்லேண்ட் பிக்சர்சின் 6-வது படம். இதில் மோகன், ராதா, அம்பிகா நடித்தனர். இந்தப்படம் வேகமாக வளர்ந்தது. எனினும் ஒரு விஷயத்தில் மணிரத்னத்துக்கும், கோவைத்தம்பிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

    அதுபற்றி கோவைத்தம்பி கூறியதாவது:-

    "இதயக்கோயில் படத்தில் ஒரு கல்யாண மண்டபக்காட்சி வருகிறது. அதற்காக ஒரு லட்ச ரூபாய் செலவில், ஒரு கல்யாண மண்டபம் `செட்' போட்டோம். அக்காலத்தில் இது பெரிய தொகை. ஆனால், அந்த செட் மணிரத்னத்துக்குப் பிடிக்கவில்லை. "விஜயசேஷ் மகாலில்தான் படப்பிடிப்பு நடத்த வேண்டும். அதை புக் செய்து கொடுங்கள்'' என்றார். இதனால், படப்பிடிப்பு தள்ளிப் போய்க்கொண்டே இருந்தது. "எவ்வளவு வெற்றிப்படங்களை எடுத்திருக்கிறோம்! இந்த புது டைரக்டர் இப்படி பிரச்சினை செய்கிறாரே!'' என்று கோபமும், வருத்தமும் அடைந்தேன்.

    கடைசியில், மணிரத்னத்தின் விருப்பப்படியே விஜயசேஷ்மகாலில் படப்பிடிப்பை நடத்தினோம். நாட்கள் அதிகமாகி, செலவும் அதிகமான போதிலும், அந்த கிளைமாக்ஸ் காட்சி பிரமாதமாக அமைந்து, எல்லோருடைய பாராட்டையும் பெற்றது. இதனால், மணிரத்னத்தின் மீது இருந்த வருத்தம் மறைந்து, பெரிய மரியாதை ஏற்பட்டது. இதயக்கோயில் 128 நாட்கள் ஓடி வெற்றிப்படமாக அமைந்தாலும், இசை மேதை இளையராஜாவுடன் நான் கொண்டிருந்த ஆழமான நட்பு, இந்தப் படத்தினால் பாதிக்கப்பட்டது.

    இதயக்கோயில் படப்பிடிப்பு குறிப்பிட்ட காலத்தில் முடியாமல் போனதால், இளையராஜா கோபம் அடைந்தார். படத்தின் பின்னணி இசை சேர்ப்புக்கு அவரை அழைத்தபோது, "நான் கொடுத்த கால்ஷீட்டையெல்லாம் வீணாக்கி விட்டு, இப்போது தொந்தரவு கொடுக்கிறீர்களே! மற்றவர்களுக்கு கொடுத்துள்ள கால்ஷீட்டை இப்போது உங்களுக்காக எப்படி மாற்றித் தரமுடியும்?'' என்று கேட்டார். இந்த சமயத்தில் ஒன்றைக் குறிப்பிட வேண்டும். எங்கள் இருவருக்கும் இடையே இருந்த உன்னதமான நட்பை பிரிக்க சில சக்திகள் முயன்று, அதில் வெற்றியும் பெற்று விட்டனர்.

    இதனால், என்னுடைய அடுத்த படத்துக்கு ("உயிரே உனக்காக'') இசை அமைக்க, பிரபல இந்தி இசை அமைப்பாளர்களான லட்சுமிகாந்த் - பியாரிலால் இரட்டையர்களை ஒப்பந்தம் செய்தேன். இந்தப் படத்தில் மோகன், நதியா ஆகியோர் நடித்தனர். கே.ரங்கராஜ் டைரக்ட் செய்தார். 5-3-1986-ல் வெளிவந்த இந்தப்படம், 100 நாள் ஓடியது.

    சிறு வயது முதலே, டைரக்டர் ஸ்ரீதரை எனக்கு மிகவும் பிடிக்கும். அவருடைய "கல்யாணப்பரிசு'' படத்தை நான் 30 தடவைக்குமேல் பார்த்தேன்! அவருடைய டைரக்ஷனில் ஒரு படம் தயாரிக்க விரும்பி, அவரிடம் சென்று கேட்டேன். அவரும் மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டார். இந்தப் படத்தில் சிவாஜிகணேசன் தந்தையாகவும், கமலஹாசன் மகனாகவும் நடிப்பதாக இருந்தது. ஆனால் அப்போது கமலஹாசன் ரொம்பவும் `பிசி'யாக இருந்தார். அவருடைய கால்ஷீட் கிடைக்கவில்லை.

    "கமல் காலீஷீட் கிடைக்கும்போது இந்தப் படத்தை எடுப்போம். இப்போதைக்கு இந்தப்படம் சம்பந்தப்பட்ட வேலைகளை நிறுத்தி விடுவோம்'' என்று ஸ்ரீதர் கூறினார். எனவே, அந்தப் படத் தயாரிப்புப் பணிகள் நிறுத்தப்பட்டன. இப்போதுகூட, ஸ்ரீதர் டைரக்ஷனில் படம் தயாரிக்க முடியாமல் போய்விட்டதே என்ற வருத்தம் எனக்கு உண்டு. அடுத்து ஈ.ராமதாஸ் டைரக்ஷனில், "ஆயிரம் பூக்கள் மலரட்டும்'' என்ற படத்தை தயாரித்தேன். வி.எஸ்.நரசிம்மன் இசை அமைத்தார். இப்படத்தில், மோகன், சீதா ஆகியோர் நடித்தனர்.

    இப்படம் 13-8-1986-ல் வெளியானது. மதர்லேண்ட் பிக்சர்ஸ் படங்களிலேயே மிகக்குறைந்த நாள் (46 நாட்கள்) ஓடிய படம் இதுதான். இந்தப் படம் ரசிகர்களை கவராமல் போனதற்குக் காரணம், படத்தின் "கிளைமாக்ஸ்''தான். கதாநாயகி சீதா, தன் கணவனை கொலை செய்வதுதான் கிளைமாக்ஸ்! இதை ரசிகர்கள் ஏற்கவில்லை. அதனால் படம் தோல்வியைத் தழுவியது. இதற்கு நானும், டைரக்டரும்தான் பொறுப்பு.''

    இவ்வாறு கோவைத்தம்பி கூறினார்.    
    ×