என் மலர்tooltip icon

    சினி வரலாறு

    வாலி எழுதிய "அம்மா என்றால் அன்பு'' என்ற பாடலை, அடிமைப்பெண் படத்தில் ஜெயலலிதா பாடினார்.
    வாலி எழுதிய "அம்மா என்றால் அன்பு'' என்ற பாடலை, அடிமைப்பெண் படத்தில் ஜெயலலிதா பாடினார்.

    இதுபற்றி வாலி கூறியிருப்பதாவது:-

    "அடிமைப்பெண்'' படத்துக்காக, "அம்மா என்றால் அன்பு'' என்னும் பாடல் எழுதியிருந்தேன்.

    "வாலி! இந்தப்பாட்டை அம்முவை (ஜெயலலிதா) பாட வைக்கலாம் என்றிருக்கிறேன்'' என்றார், எம்.ஜி.ஆர்.

    "ரொம்ப சந்தோஷம்'' என்று நான் சொல்லிவிட்டு, மேற்கொண்டு ஒரு விஷயத்தை எம்.ஜி.ஆரிடம் விளக்கினேன்.

    "அண்ணே! பிற்காலத்தில் இவங்களை நீங்க படத்திலே பாட வைப்பீங்கன்னுதான், ஏற்கனவே நான் தீர்க்கதரிசனமாக சொல்லி வைத்திருக்கிறேனே... கவிஞன் வாக்கு பொய்க்காது'' என்றேன்.

    "எப்படி? எப்படி?'' என்று எம்.ஜி.ஆர். ஆர்வமாகக் கேட்டார்.

    `அரசகட்டளை' திரைப்படத்தில் செல்வி ஜெயலலிதா அவர்களுக்காக நான் எழுதியிருந்த பாடலை அவருக்கு நினைவூட்டினேன்.

    அந்தப் பாடலின் வரிகள் இவைதான்:

    `என்னைப் பாட வைத்தவன் ஒருவன்; என் பாட்டுக்கு அவன்தான் தலைவன்!'

    - இதை நான் சொன்னதும் எம்.ஜி.ஆர். மகிழ்ந்து சிரித்து, "வாழ்க! வாழ்க! உங்கள் வாக்கு எப்போதும் இப்படி பலிக்கட்டும்'' என்றார்.

    "அம்மா என்றால் அன்பு'' என்ற பாட்டை கே.வி.மகாதேவன் இசை அமைப்பில் ஜெயலலிதா பாட, "அடிமைப்பெண்'' படத்தில் அப்பாடல் இடம் பெற்று பெரும் புகழ் பெற்றது.''

    இவ்வாறு வாலி கூறினார்.

    ஆரம்ப காலத்தில் வாலிக்கு மதுப்பழக்கம் இருந்தது. அதை விட்டுவிடும்படி எம்.ஜி.ஆர். சிலமுறை கூறியும், அந்த பழக்கம் தொடர்ந்தது.

    1978-ல் ஒருநாள் எம்.ஜி.ஆரும், வாலியும் ஒரே விமானத்தில் பயணம் செய்தனர். விமானப் பணிப்பெண் ஒரு தட்டில் சாக்லேட் கொண்டு வந்தார். அதில் ஒரு சாக்லெட்டை எடுத்து, வாலியிடம் கொடுத்தார், எம்.ஜி.ஆர்.

    "என்னண்ணே விசேஷம்? எதுக்கு சாக்லேட்?'' என்று கேட்டார், வாலி.

    "நேற்றுதான் ஒரு சந்தோஷ சமாசாரம் கேள்விப்பட்டேன். அந்த சந்தோஷத்தை உங்களோடு பகிர்ந்து கொள்ளத்தான் உங்களுக்கு இனிப்பு கொடுத்தேன்'' என்று கூறினார், எம்.ஜி.ஆர்.

    "என்ன சந்தோஷ சமாசாரம்?'' என்று வாலி கேட்டார்.

    "நீங்க மது அருந்துறதை விட்டுட்டீங்கன்னு நேற்றுதான் கேள்விப்பட்டேன். ஏழெட்டு மாதமா அந்தப்பீடையைக் கையால் தொடறதில்லையாமே நீங்க? இது எனக்கு சந்தோஷ சமாசாரம்தானே!'' என்று கூறிய எம்.ஜி.ஆர்., "உங்க உடம்பு உங்களுக்குத் தேவை இல்லாமல் இருக்கலாம். ஆனால் தமிழுக்குத்தேவை'' என்றார்.

    கண் கலங்கி விட்டார், வாலி.

    எம்.ஜி.ஆர். முதல்-அமைச்சராக இருந்தபோது, அவருடன் வாலி, மதுரை முத்து ஆகியோர் உரையாடிக்கொண்டிருந்தனர். அப்போது, "கவிஞர்கள் வாக்கு பலிக்குமா?'' என்ற கேள்வி எழுந்தது.

    கவிஞர்களின் வாக்கு பலிக்கும் என்பதற்கு, பல உதாரணங்களை கூறினார், எம்.ஜி.ஆர்.

    அப்போது எம்.ஜி.ஆரிடம் மதுரை முத்து கூறினார்:

    "உங்களுக்காக வாலி எழுதின பாடல் அத்தனையும் பலிச்சிருக்கு.

    "நினைத்தேன் வந்தாய், நூறு வயது!'' என்று எழுதினாரு. குண்டடிபட்டுப் படுத்திருந்த நீங்க நல்லபடியாகப் பொழச்சு வந்தீங்க.

    "நான் ஆணையிட்டால், அது நடந்து விட்டால்...'' என்று "எங்க வீட்டு பிள்ளை''யிலே வாலி எழுதினாரு. நீங்க இப்போது ஆணையிடுகிற இடத்திலே இருக்கீங்க.

    "அன்னமிட்ட கை'' என்று உங்கள் கையைப் புகழ்ந்து எழுதினாரு. சத்துணவு திட்டத்தில் இப்போது நீங்கள் குழந்தைகளுக்கு அன்னமிடுகிறீர்கள்.''

    - இவ்வாறு முத்து கூறியபோது, வாலி குறுக்கிட்டார்.

    "அண்ணே! நான் சொன்னதெல்லாம் பலிச்சுதுன்னா அந்தப் பெருமை எல்லாம் நம் அண்ணனை (எம்.ஜி.ஆர்)தான் சாரும். ஏனென்றால், அவர் பாடியதால்தான், அந்தப் பாட்டுக்கெல்லாம் அவ்வளவு சக்தி வந்து பலிச்சிது'' என்றார்.

    அப்போது, முத்துவைப் பார்த்து எம்.ஜி.ஆர்., "என்னைப் பற்றி வாலி எழுதிய எல்லாப் பாட்டும் பலிச்சுது. ஆனால் ஒரு பாட்டுதான் பலிக்கவில்லை'' என்றார்.

    எந்தப்பாட்டை எம்.ஜி.ஆர். குறிப்பிடுகிறார் என்று, வாலிக்குப் புரியவில்லை.

    பிறகு எம்.ஜி.ஆரே சொன்னார்:

    "எனக்கொரு மகன் பிறப்பான்! அவன் என்னைப்போலவே இருப்பான். தனக்கொரு பாதை வகுக்காமல் என் தலைவன் வழியிலே நடப்பான்' என்று பாட்டு எழுதினீர்களே! அந்தப் பாட்டைத்தான் சொல்கிறேன்'' என்றார், எம்.ஜி.ஆர்.

    வாலியின் முகம் வருத்தத்தால் வாடியது. எனினும், தன்னை ஒருவாறு தேற்றிக்கொண்டு, "அண்ணே! நாட்டில் உள்ள சின்னஞ்சிறார்கள் அனைவருமே, உங்களுடைய செல்வங்களாக இருக்கிறார்கள். அப்படி இருப்பதால், உங்களுக்கு தனியாக ஒரு வாரிசு அமைவதை இறைவனே விரும்பவில்லை. அதனால்தான் இந்தப்பாட்டு பலிக்காமல் போய்விட்டது'' என்று கூறினார்.

    மதுரை முத்துவும், வாலி சொன்னதை ஆமோதித்தார்.

    எம்.ஜி.ஆர். புன்னகை புரிந்தார்.
    கவிஞர் கண்ணதாசனும், வாலியும் சம காலத்தில் சிறந்த பாடல்களை எழுதிக் குவித்தனர். அதனால் பிற்காலத்தில், சில பாடல்கள் `இது கண்ணதாசன் எழுதியதா, அல்லது வாலி எழுதியதா?' என்ற சந்தேகத்தை ஏற்படுத்தின.
    கவிஞர் கண்ணதாசனும், வாலியும் சம காலத்தில் சிறந்த பாடல்களை எழுதிக் குவித்தனர். அதனால் பிற்காலத்தில், சில பாடல்கள் `இது கண்ணதாசன் எழுதியதா, அல்லது வாலி எழுதியதா?' என்ற சந்தேகத்தை ஏற்படுத்தின.

    இதுபற்றி வாலி எழுதியிருப்பதாவது:-

    ஒரு விழாவில், என் அருமை நண்பரும் தஞ்சைப் பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தருமான அவ்வை நடராஜன் பேசும்போது, "காற்று வாங்கப்போனேன், ஒரு கவிதை வாங்கி வந்தேன்! அதை கேட்டு வாங்கிப் போனாள் -அந்த கன்னி என்னவானாள்?'' என்று கவியரசர் கண்ணதாசன் எழுதினார். இப்படி எழுத இன்று யாரேனும் இருக்கிறார்களா?'' என்று கூறினார்.

    என்னை பக்கத்தில் வைத்துக்கொண்டே அவ்வை நடராஜன் இவ்வாறு சொன்னபோது, அவை ஆரவாரித்து அதை ஆமோதித்தது.

    என் அன்புச் சகோதரி மனோரமா அவர்கள் ஒரு பத்திரிகையில் கீழ்க்கண்டவாறு எழுதினார்:

    "கண் போன போக்கிலே

    கால் போகலாமா?

    கால் போன போக்கிலே

    மனம் போகலாமா?

    மனம் போன போக்கிலே

    மனிதன் போகலாமா?

    மனிதன் போன பாதையை

    மறந்து போகலாமா?''

    என்று கவிஞர் கண்ணதாசன் அற்புதமான பாட்டை எழுதினார். இப்ப வர்ற சினிமாவிலே, இது மாதிரி யாரு கருத்தோட பாட்டு எழுதறாங்க?'' என்று ஒரு வினாவையும் எழுப்பியிருந்தார், மனோரமா.

    பிரபல பட அதிபர் `ஜீவி' அவர்கள் ஒரு பத்திரிகையில், "நிலவு ஒரு பெண்ணாகி உலவுகின்ற அழகோ! நíரலைகள் இடம் மாறி நீந்துகின்ற குழலோ!'' என்று கண்ணதாசன் பாடல் எழுதினார். இது போல கற்பனை வளத்தோடு எழுத இப்போது யார் இருக்கிறார்கள்?'' என்று எழுதியிருந்தார்.

    இது குறித்து நான் விசனப்படவில்லை; பேசியவர்களின் வார்த்தைகளால் எவ்வித மனத்தாங்கலும் ஏற்படவில்லை.

    ஏனென்றால், நண்பர் நடராஜன் அவர்களும், மனோரமா அவர்களும், ஜீவி அவர்களும் சிறப்பித்துப் பாராட்டிய மூன்று பாடல்களும் கண்ணதாசன் எழுதியவை அல்ல; அடியேன் எழுதியவை.

    நல்ல பாடல் என்றாலே, அதைக் கண்ணதாசன் எழுதியிருக்க வேண்டும் என்று மேற்சொன்ன மூவரும் நினைப்பதில் தப்பில்லை. இருப்பினும், எதை எவர் எழுதினார் என்று தெள்ளத்தெளிய அறிந்து வைத்துக்கொண்டு பேசுதல்தான் நயத்தகு நாகரீகமாகும்.

    `வாலி பாட்டு எது, என் பாட்டு எது என்று எனக்கே சில சமயங்களில் தெரிவதில்லை' என்று கவியரசர் கண்ணதாசன் பலமுறை பாராட்டியிருப்பதை கவிஞர் நா.காமராசனை கேட்டுப்பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

    `நான் எழுதுகிற மாதிரியே எழுதக்கூடியவன் வாலி. இப்ப இந்த சிச்சுவேஷனுக்கு நான் எழுதியிருக்கிற மாதிரி அவன் வேறு ஏதாவது படத்திலே எழுதியிருக்கானான்னு சரி பார்த்துக் கொள்ளுங்கள்' என்று இயக்குனர்களிடம் கண்ணதாசன் சொல்வது உண்டு என்பதை, புகழ் வாய்ந்த இயக்குனர் எஸ்.பி.முத்துராமனிடம் கேட்டுப் புரிந்து கொள்ளலாம்.

    இலங்கை வானொலிக்கு அளித்த பேட்டியில், என் பாடல் வரிகளை கண்ணதாசன் சிலாகித்துப் பேசியுள்ளார்.

    "கண்ணதாசனும், வாலியும் எனக்கு இரண்டு கண்கள்'' என்று தன் கருத்தைப் பதிவு செய்தவர் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்கள்.''

    இவ்வாறு வாலி குறிப்பிட்டுள்ளார்.

    வாலியின் பாடல் குறித்து, இன்னொரு நகைச்சுவை நிகழ்ச்சியும் நடந்தது.

    ஸ்ரீரங்கத்தில், வாலியின் குடும்ப நண்பர் ஒருவர் வீட்டுத் திருமணத்தில் சிதம்பரம் சி.எஸ்.ஜெயராமனின் கச்சேரிக்கு ஏற்பாடாகியிருந்தது.

    வாலி, திரைப்படத் துறையில் புகழ் பெறத் தொடங்கிய நேரத்தில், சிதம்பரம் ஜெயராமன் அவ்வளவாக பின்னணி பாடவில்லை. எனவே இருவருக்கும் அறிமுகம் இல்லை.

    இசை அமைப்பாளர் ராமமூர்த்தி மூலமாக கச்சேரிக்கு வாலி ஏற்பாடு செய்தார். சிதம்பரம் ஜெயராமனை அவரே காரில் அழைத்துச் சென்றார்.

    தன்னைப்பற்றி ஜெயராமனிடம் ராமமூர்த்தி கூறியிருப்பார் என்று வாலி நினைத்தார். ஆனால், `நம்ம திருச்சிக்காரர், கச்சேரி விஷயமா உங்களைப் பார்ப்பார்!' என்று மட்டுமே ராமமூர்த்தி கூறியிருந்தார். எனவே, தன்னைக் காரில் அழைத்துச் செல்கிறவர் வாலி என்பது ஜெயராமனுக்குத் தெரியாது.

    காரின் முன் வரிசையில் சி.எஸ்.ஜெயராமன் அமர்ந்திருந்தார். பின் வரிசையில் வாலி உட்கார்ந்திருந்தார்.

    கார், செங்கல்பட்டைத் தாண்டியது. ஜெயராமன் ஒரு கச்சேரிப் பாடலை ஆலாபனம் செய்தார். ஆனந்தமாய் பாட்டைக் கேட்டுக் கொண்டிருந்த வாலி, இடையில் "ஆகா! அற்புதம்!'' என்றார்.

    உடனே ஜெயராமன் பாட்டை நிறுத்திவிட்டு, "தம்பி! உங்களுக்கு சங்கீதம் தெரியுமா?'' என்று கேட்டார்.

    "ஓரளவு ரசிக்கத் தெரியும். சட்ட -திட்டம் எல்லாம் அவ்வளவாகத் தெரியாது'' என்றார், வாலி.

    "நான் இப்போது பாடியது என்ன ராகம்?'' என்று ஜெயராமன் கேட்டார்.

    "காமவர்த்தினி'' என்று பதில் சொன்னார், வாலி.

    "பலே!'' என்று மகிழ்ச்சியுடன் கூவினார், ஜெயராமன்.

    பிறகு, அவர் ஒவ்வொரு பாட்டாகப் பாட, "இது ஹரி காம்போதி'', "இது பைரவி'', "இது கல்யாணி'' என்றெல்லாம் ராகங்களின் பெயர்களைக் கூறிக்கொண்டே வந்தார், வாலி.

    மனம் மகிழ்ந்து போன ஜெயராமன், "தம்பி! நீங்க காவேரி தண்ணியாச்சே! சங்கீத ஞானத்துக்கும் கேட்கணுமா?'' என்று வாலியை பாராட்டினார்.

    பிறகு, "தம்பி! நீங்க என்ன தொழில் பண்றீங்க...'' என்று கேட்டார்.

    "பாட்டு எழுதிக்கிட்டு இருக்கிறேன்'' என்று வாலி சொன்னதும், "அப்படியா!'' என்று வியப்புடன் கூறினார், ஜெயராமன்.

    பிறகு, "கிராமபோன் ரிக்கார்டுலே யாராது பாடியிருக்காங்களா?'' என்று கேட்டார்.

    டி.எம்.சவுந்தர்ராஜன், பி.சுசீலா ஆகியோர் பாடியிருப்பதாக வாலி சொன்னார்.

    "சபாஷ்! சபாஷ்! டி.எம்.சவுந்தரராஜன் என்ன பாட்டு பாடியிருக்காரு, கொஞ்சம் பாடிக்காட்டுங்க'' என்றார்,

    சி.எஸ்.ஜெயராமன். டி.எம்.எஸ். பாடிய - "கற்பனை என்றாலும், கற்சிலை என்றாலும்'', "ஓராறு முகம்'' ஆகிய பாடல்களையும், பி.பி.சீனிவாஸ் பாடிய "இசையால் எதுவும் வசியமாகும்'' என்ற பாடலையும், வேறு சில பாடல்களையும் பாடிக்காண்பித்தார், வாலி.

    பரவசப்பட்டுப்போன ஜெயராமன், "உங்க பாட்டுகள் எல்லாம் பிரமாதமாக இருக்கு. இந்த பாட்டுகளையெல்லாம் நான் ஏற்கனவே கேட்டிருக்கிறேன். ஆனால், நீங்கள் எழுதியது என்று தெரியாது'' என்று கூறிவிட்டு, "தம்பி! உங்களுக்கு பாட்டெழுத நல்லா வருது. அருமையான சொற்கள். கருத்துக்களும் பிரமாதமா இருக்கு. நீங்க சினிமாவில் பாட்டு எழுத முயற்சி பண்ணினால், பிரமாதமாக வருவீங்க'' என்றார்.

    "அண்ணே...!'' என்று குறுக்கிட்டார், வாலி. ஆனால் அவரை பேச விடாமல் ஜெயராமன் தொடர்ந்து கூறினார்:

    "தம்பி! நீங்க என்ன சொல்ல வர்றீங்கன்னு எனக்குப் புரியுது. நம்ம பாட்டையெல்லாம் சினிமாவிலே யாரு எடுத்துப்பாங்கன்னு நீங்க சந்தேகப்படுறீங்க. இந்த சந்தேகம் எல்லாம் வேண்டாம். மகா மோசமா பாட்டு எழுதுகிறவன் எல்லாம் இப்ப சினிமாவுக்கு வந்துவிட்டான்'' என்று சொன்ன சிதம்பரம் ஜெயராமன், வெற்றிலையை மடித்து வாயில் திணித்தவாறே, "அத்தைமடி மெத்தையடி, மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும், புன்னகை என்ன விலை... இப்படி எல்லாம் மட்டகரமான பாட்டுக்கள் வர ஆரம்பிச்சுடுச்சு.

    எவனோ ஒருத்தன் `வாலி'ன்னு இப்ப புதுசா வந்திருக்கிறான். விஸ்வநாதன் -ராமமூர்த்தி கிட்ட அவன்தான் நிறைய எழுதுறான். பாட்டெல்லாம் ஒரே கட்சிப் பாட்டா இருக்கு. நீங்க எவ்வளவோ தேவலை. விவரமா எழுதறீங்க'' என்று சொல்லி முடிப்பதற்கும், கார் திண்டிவனத்தில் ஒரு டீக்கடை எதிரே நிற்பதற்கும் சரியாக இருந்தது.

    வாலியும், சிதம்பரம் ஜெயராமனும் மாறுபட்ட மன நிலையில் நாலாபுறத்தையும் வேடிக்கை பார்த்தபடி அமர்ந்திருந்தனர்.

    திடீரென்று, பத்துப்பதினைந்து பள்ளி மாணவர்கள், "டேய்! கார்ல உட்கார்ந்து இருப்பது கவிஞர் வாலிடா... வாங்கடா ஆட்டோகிராப் வாங்கலாம்'' என்றபடி ஓடிவந்தனர்.

    ஆட்டோகிராப் நோட்டை நீட்டிய மாணவர்களுக்கு, "நல்வாழ்த்துக்கள் -வாலி'' என்று கையெழுத்து போட்டுக்கொடுத்தார், வாலி. இதைப்பார்த்த சிதம்பரம் ஜெயராமன் `ஷாக்' அடித்தவர் போல சிலையானார்.

    மாணவர்கள் போனபின், வாலியின் இரு கைகளையும் பற்றிக்கொண்டு, "தம்பி! நீங்கதான் வாலின்னு தெரியாம பேசிட்டேன். ஆமாம். நீங்களாவது உங்க பெயரை சொல்லியிருக்கக் கூடாதா?'' என்று பாசத்தோடு கேட்டார்.

    "என் பெயர் என்னன்னு நீங்க கேட்கவே இல்லையேண்ணே! அதனால்தான் நானும் சொல்லலே'' என்றார் வாலி.

    சிதம்பரம் ஜெயராமன் சிரித்துக்கொண்டே, "காவேரித் தண்ணீக்கே கொஞ்சம் குசும்பு ஜாஸ்தி'' என்று, வாலியின் கன்னத்தை செல்லமாகத் தட்டினார்.

    புகழேணியில் வேகமாக முன்னேறிக் கொண்டிருந்தபோது, வாலி திருமணம் செய்து கொண்டார். இது காதல் திருமணம்; ரகசியத் திருமணமும் கூட!
    புகழேணியில் வேகமாக முன்னேறிக் கொண்டிருந்தபோது, வாலி திருமணம் செய்து கொண்டார். இது காதல் திருமணம்; ரகசியத் திருமணமும் கூட!

    ஒரு நாள் எம்.ஜி.ஆரை வாலி சந்தித்துப் பேசிக்கொண்டிருந்தபோது, "வாலி! காலா காலத்தில் ஒரு கல்யாணம் செய்து கொள்ளுங்க! நிறைய பணம் சம்பாதிக்கிறபோது, தனி மனிதனா இருந்தா தப்புத் தண்டாவுலே புத்திப்போகும். நீங்க உங்களுக்குப் பிடிச்ச பொண்ணைச் சொல்லுங்க. நான் முன்நின்று உங்க கல்யாணத்தை நடத்தி வைக்கிறேன்...'' என்று எம்.ஜி.ஆர். பாசத்துடன் சொன்னார்.

    அப்படியிருந்தும், எம்.ஜி.ஆருக்கே தெரியாமல் வாலியின் ரகசிய திருமணம் நடந்தது.

    பிரபல திரைப்பட கவிஞராக உயர்ந்த பிறகும், வாலிக்கு நாடக ஆசை விடவில்லை. "லவ் லெட்டர்'' என்ற நாடகத்தை எழுதினார். ஏவி.எம்.ராஜன், ஜாவர் சீதாராமன், `காக்கா' ராதாகிருஷ்ணன் ஆகியோர் இதில் நடிக்க இருந்தனர்.

    நாடக ஒத்திகை, அடிக்கடி வாலியின் வீட்டில் நடந்தது.

    இந்த நாடகத்தில் கதாநாயகியாக நடிக்க, திலகம் என்ற பெண்ணை வாலி ஒப்பந்தம் செய்திருந்தார். இவர், வழுவூர் ராமையா பிள்ளையிடம் பரதம் பயின்றவர். நடிகைகள் பத்மினி, ஈ.வி.சரோஜா ஆகியோருடன் சேர்ந்து நடனம் ஆடியவர். எஸ்.வி.சகஸ்ரநாமத்தின் "குயில்'' நாடகத்தில் கதாநாயகியாக நடித்தவர்.

    திலகத்தை மணந்து கொள்ள வாலி விரும்பினார். ஆனால் காதல் ஏற்படவில்லை.

    இதுபற்றி வாலி எழுதியிருப்பதாவது:-

    "நேசித்த பெண்ணை மணந்து கொள்ள வேண்டும் என்று, அல்லும் பகலும் அதே சிந்தனையில் இருந்தேன். அவள் பிடி கொடுத்துப் பேசவில்லை.

    இருப்பினும், அவளது சித்திரத்தை அழித்துவிட்டு இன்னொரு சித்திரத்தை எழுதிப் பார்க்க என் மனம் தயாராயில்லை.

    அப்படி ஒரு காதல் தவத்தில் நான் ஈடுபட்டிருந்த நாளில்தான், "எங்க வீட்டுப்பிள்ளை'' படத்திற்காக பாடல் எழுத உட்கார்ந்தேன்.

    டைரக்டர் சாணக்யா, பாடல் காட்சியை விளக்கினார்.

    "கதாநாயகன், தான் விரும்பும் பெண்ணின் உள்ளத்தில் இடம் பெற்று விடவேண்டும் என்று படாதபாடு படுகிறான்'' என்று கூறி, அதற்கேற்ப பாடல் எழுதச் சொன்னார்.

    கதாநாயகனின் உள்ளுணர்விலேயே நானும் இருந்ததால், என் உள்ளக்கிடக்கையை அப்படியே பாடலாக்கினேன்.

    "குமரிப்பெண்ணின் உள்ளத்திலே குடியிருக்க நான் வரவேண்டும்; குடியிருக்க நான் வருவதென்றால் வாடகை என்ன தரவேண்டும்?'' - இந்தப் பாட்டின் தாக்கத்தால், என் காதலி மனம் கசிந்தாள்; என் காதலுக்கு பச்சைக்கொடி காட்டினாள்.''

    இவ்வாறு வாலி கூறியுள்ளார்.

    திருமணத்தை எளிய முறையில் நடத்த வாலி விருமëபினார். அதனால், உடன் பிறந்த சகோதர -சகோதரிகளிடமோ, எம்.ஜி.ஆர்., எம்.எஸ்.விஸ்வநாதன் போன்ற மிக மிக நெருங்கிய நண்பர்களிடமோ கூட சொல்லாமல், திருமண பத்திரிகை கூட அச்சிடாமல், கீழத்திருப்பதியில் திருமணத்தை நடத்த முடிவு செய்தார்.

    திருமணத்துக்கு மண்டபம் ஏற்பாடு செய்ய, தன் நண்பர் வி.கோபாலகிருஷ்ணனுடன் காரில் புறப்பட்டார், வாலி.

    கோபாலகிருஷ்ணன்தான் காரை ஓட்டினார்.

    அதன்பின் நடந்தது பற்றி வாலி கூறியதாவது:-

    "ஒரு குக்கிராமத்தில் கார் நுழையும்போது எதிர்பாராதவிதமாக ஓர் ஐந்து வயதுப் பெண் குழந்தை குறுக்கே ஓடி வந்து, கார் ஹெட்லைட்டில் லேசாக அடிபட்டு, சிறிய காயத்தோடு தப்பியது.

    குழந்தையின் தாய் பரபரப்போடு ஓடிவந்து, மகளை அள்ளி மார்போடு அணைத்துக்கொண்டாள். நானும், கோபியும் வண்டியை விட்டு இறங்கி, "குழந்தை எதிர்பாராமல் குறுக்கே ஓடிவந்ததால்தான், இப்படி ஆயிப்போச்சு... இதுல எங்க தவறு எதுவுமில்லை. இருந்தாலும், பெரிய மனசு பண்ணி நீங்க மன்னிக்கணும்'' என்று குழந்தையின் தாயிடம் சொன்னோம். அந்த அம்மையார் அதில் சமாதானமடைந்து, ஊரைக்கூட்டி விவகாரம் செய்யாமல் எங்களை மேற்கொண்டு பயணிக்க அனுமதித்தார்.

    "வாலி! இப்படி ஒரு சின்ன ஆக்சிடெண்ட் ஆயிடுச்சே! மெட்ராசுக்கே திரும்பிடலாமா...?'' என்று கோபி என்னிடம் கேட்டார்.

    "ஏன்? இதனால் என்ன?'' என்றேன் நான்.

    "கல்யாணத்திற்கு இடம் பார்க்கப் போகிறோம், சகுனமே சரியில்லையே'' என்றார் கோபி.

    "எனக்கு இதிலெல்லாம் நம்பிக்கையில்லை. இந்தக் கல்யாணத்துல கடவுளுக்கு இஷ்டமில்லைன்னாதான் நடக்காது. மத்தப்படி, இது மாதிரி விஷயங்களுக்கு நாம் முக்கியத்துவம் கொடுக்கத் தேவையில்லை'' என்றேன் நான்.

    கோபி, மவுனமாகக் காரை ஓட்டிக்கொண்டு வந்தார். திடீரென்று வயல் வெளியில் மேய்ந்து கொண்டிருந்த மாடு ஒன்று, வாலை நிமிர்த்தி சிலிர்த்துக்கொண்டு பாதையின் குறுக்கே ஓடிவந்தது.

    அதன் மீது கார் மோதாமலிருக்க கோபி பிரேக்கின் பெடலை அமுக்க, எதிர்பாராமல் வண்டி நிலை குலைந்து பாதையை விட்டு வயக்காட்டில் இறங்கி ஒரு குலுக்கலோடு நின்றது. எனக்கும் கோபிக்கும் உச்சந்தலையிலும், முன் நெற்றியிலும் லேசான சிராய்ப்புகள்.

    "சகுனம் சரியில்லை... வாங்க, வாலி! ஒழுங்கா நாம் மெட்ராசுக்கே திரும்பிடலாம்'' என்றார், கோபி.

    வயக்காட்டில் வேலை செய்து கொண்டிருந்தவர்கள் துணையோடு, எங்கள் கார், பள்ளத்திலிருந்து பாதைக்குக் கொண்டு வரப்பட்டது.

    "இப்போதைக்கு உங்க கல்யாணத்தைத் தள்ளிப்போட்டுடுங்க. ஒண்ணு ஒண்ணா தடங்கல் வந்துக்கிட்டேயிருக்கு'' என்றார் கோபி. நான் அதற்கு உடன்படவில்லை.

    "கோபி! எண்ணித் துணிஞ்சாச்சு... துணிஞ்சப்புறம் எண்றதே இழுக்கு... கல்யாணம் ஏப்ரல் 7-ந்தேதி, திருச்சானூர் கோவில் சத்திரத்தில் நடந்தே தீரணும்... என் முடிவை நான் மாத்திக்கறதா இல்லை... நீங்க வராட்டி, நான் நடந்தே திருப்பதி போயிடுவேன்'' என்று சொன்னதும் கோபி சிரித்து விட்டுப் பேசினார்.

    "ஏப்ரல் 7-ந்தேதி சத்திரம் கிடைக்கல்லேன்னா...?''

    "அப்ப, இந்தக் கல்யாணத்தைத் தள்ளிப்போடக் கடவுள் விரும்புறார்னு நினைப்பேன்.''

    என் உறுதியைப் பாராட்டி கோபி, திருப்பதியை நோக்கிக் காரைச் செலுத்தினார்.

    கோபி, சொன்னது ஒரு விஷயத்தில் உண்மைதான். கீழத்திருப்பதி, திருச்சானூர் கோவில் கல்யாண மண்டபம் அவ்வளவு சுலபமாகக் கிடைக்கக்கூடிய இடமில்லை. ஏனெனில் ஏகப்பட்ட முகூர்த்தங்களுக்கான மாதம் அது. மூன்று மாதங்களுக்கு முன்னதாகவே பலர் ரிசர்வேஷன் செய்திருக்க நிறைய வாய்ப்பு உண்டு.

    திருப்பதி தேவஸ்தான பேஷ்கார், கோபிக்கு மிக நெருங்கிய நண்பர். கீழத்திருப்பதியில் குடியிருந்த அவர் வீட்டுக்குப்போய்ச் சேர்ந்து விவரத்தைச் சொன்னோம்.

    "ஏப்ரல் 7-க்கு இன்னும் ஒரு வாரமே இருக்கிறது... இப்போது கேட்டால் எப்படி? கண்டிப்பாகக் கல்யாண மண்டபம் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டதாக இருக்கும்...'' என்று சொன்னார் கோவில் பேஷ்கார்.

    "டெலிபோன் செஞ்சு கேட்டுப் பாருங்களேன்'' என்று பேஷ்காரிடம் என்பொருட்டு வேண்டினார், கோபி.

    திருச்சானூர் கோவில் நிர்வாக அதிகாரியோடு போனில் பேசிவிட்டு பேஷ்கார் சொன்னார்:

    "எல்லா முகூர்த்த நாட்களும் இன்னும் 3 மாதத்திற்கு `புக்' ஆகிவிட்டது. ஆனால் ஏப்ரல் 7-ந்தேதி காலியாயிருக்கு...''

    உடனே நான் கோபியிடம், "இதுதான் கடவுள் திருவுள்ளம் என்பது!'' என்றேன்.

    1965 ஏப்ரல் 7-ந்தேதி என் திருமணம் திருச்சானூரில் நடந்தது. மா.லட்சுமணன், "புலித்தேவன்'' பட இயக்குனர் ஏ.ராஜாராம், கோபி இவர்கள் முன்னிலையில் என் மனைவி திலகத்தின் நெற்றியில் நான் திலகம் இட்டேன்.

    திருமண மண்டபத்தைத் தேர்வு செய்யப்போகும் போதே இவ்வளவு தடங்கல்கள் ஏற்படின் என்னைத்தவிர வேறு எவரேனும் இதுபோல் விடாப்பிடியாக நின்று, விவாகத்தை முடித்திருப்பார்களா என்பது சுலபமாக விடையிறுக்க முடியாத வினாவாகும்.

    நான் ஆண்டவனிடத்தில் நம்பிக்கையுடையவன்.

    சகுனங்களிலும், ஜாதகங்களிலும் நம்பிக்கையுடையோரை நையாண்டி செய்வது நாகரிகமற்ற செய்கை என்பதில் உறுதியாக நிற்பவன். எந்த சகுனமும், எந்த ஜாதகமும் பார்க்காமல் திருமணம் செய்து கொண்ட என் குடும்ப வாழ்க்கை, எந்த சஞ்சலமும், சங்கடமுமில்லாமல் நல்லபடியாகத்தான் நாயகன் அருளால் நடந்து கொண்டிருக்கிறது.''

    இவ்வாறு வாலி குறிப்பிட்டுள்ளார்.

    தன் திருமணம் பற்றி யாருக்கும் வாலி தகவல் தெரிவிக்கவில்லை என்றாலும், மறுநாள் பத்திரிகைகளில் "வாலி ரகசிய திருமணம்'' என்று செய்தி வெளியாகிவிட்டது.

    அதைப் பார்த்துதான், எம்.ஜி.ஆர்., எம்.எஸ்.வி. ஆகியோருக்கு வாலியின் திருமண தகவலே தெரிந்தது.

    இதனால் அவர்கள் வாலியிடம் கோபித்துக்கொண்டாலும், வாலி பெரும்பாடுபட்டு அவர்களை சமாதானப்படுத்தி, வாழ்த்து பெற்றார்.
    எம்.ஜி.ஆருக்கும் வாலிக்கும் இடையே மிகுந்த பாசமும், ஆழ்ந்த நட்பும் இருந்தபோதிலும் இடையிடையே கருத்து வேற்றுமைகளும் ஏற்பட்டன.
    எம்.ஜி.ஆருக்கும் வாலிக்கும் இடையே மிகுந்த பாசமும், ஆழ்ந்த நட்பும் இருந்தபோதிலும் இடையிடையே கருத்து வேற்றுமைகளும் ஏற்பட்டன.

    இதுபற்றி வாலி கூறியதாவது:-

    "ஒருநாள் எம்.ஜி.ஆர். என்னிடம் ஏதோ தனியாகப் பேசவேண்டும் என்று சொல்லி, ஒலிப்பதிவு கூடத்துக்கு வெளியே ஒரு மரத்தடிக்கு அழைத்துச் சென்றார்.

    "வாலி! உங்களால் எனக்கு ஒரு தர்மசங்கடமான நிலைமை'' என்று எம்.ஜி.ஆர். சொன்னதும், எனக்குத் தூக்கி வாரிப்போட்டது.

    "என்ன அண்ணே?'' என்று பதற்றத்துடன் கேட்டேன்.

    "நீங்கள் ஸ்டூடியோவுக்கு வரும்போது, நெற்றியில் விபூதி -குங்குமம் இட்டுக்காமல் வந்தால் தேவலே...'' என்று சற்று தயக்கத்தோடு சொன்னார், எம்.ஜி.ஆர்.

    "ஏன் அண்ணே! இதனால் என்ன வந்தது?'' என்று கேட்டேன்.

    எம்.ஜி.ஆர். சற்று விளக்கமாகச் சொன்னார்:

    "வாலி! நீங்கள் தி.மு.க.வில் உறுப்பினர் இல்லை, அரசியல் தொடர்பு இல்லாதவர் என்பதெல்லாம் எனக்குத் தெரியும். இருந்தாலும் நீங்க எனக்குப் பாட்டு எழுதறீங்க. உங்க திறமையாலேதான் நீங்க முன்னுக்கு வந்திருக்கீங்க. நீங்க நல்லா எழுதறதாலே நான் உங்களைப் பயன்படுத்திக்கிறேன். ஆனால், நான் இருக்கிற கட்சியில் இருக்கிற என்.வி.நடராசனைப் போன்ற பெரியவர்கள், "கட்சியிலே இருக்கிற கவிஞர்களை ஆதரிக்காமல், பகுத்தறிவு கொள்கைக்கு புறம்பா விபூதி -குங்குமம் இட்டுக்கிற வாலியை ஆதரிக்கிறீங்களே!'' என்று சொல்றாங்க.

    உங்களை விடறதிலே எனக்கு இஷ்டம் இல்லை. நீங்க வீட்டிலே எப்படி வேண்டுமானாலும் பக்திமானா இருந்துக்குங்க... வெளியே வரும்போது, நான் இருக்கிற கழகத்தின் கொள்கைக்கு ஏற்ப, நெற்றியில் விபூதி - குங்குமம் இல்லாமல் வந்தால் தேவலை.''

    எம்.ஜி.ஆர். இப்படிச் சொன்னதும், நான் ஒரு விநாடி சிந்தனையில் ஆழ்ந்தேன். பிறகு, எம்.ஜி.ஆரிடம் ஒரு தன்னிலை விளக்கத்தை மிகத் தெளிவாக அளித்தேன்.

    "அண்ணே! நான் தீவிரமான முருக பக்தன். என்னை உங்களோட இணைச்சதும் அந்த முருகன்தான். அப்படி இருக்கும்போது, நான் விபூதியை விடமுடியாது. என்னால் உங்களுக்கு தர்ம சங்கடமான நிலைமை வேண்டாம். நான் ஒதுங்கிக் கொள்கிறேன்'' என்று நான் சொன்னவுடன், எம்.ஜி.ஆர். என் இரு கரங்களையும் பற்றி, "சரி... இந்த விஷயத்தை இத்துடன் நìறுத்திக் கொள்வோம். என்னுடன் வாங்க!'' என்று கூறியபடி, என் தோளில் கை போட்டவாறு, ரிக்கார்டிங் தியேட்டருக்குள் அழைத்துச் சென்றார்.

    தி.மு.கழகத்தை விட்டு எம்.ஜி.ஆர். விலகாதிருந்த நாளில் (1972) கலைஞரின் மகன் மு.க.முத்துவைக் கதாநாயகனாகக் கொண்டு "பிள்ளையோ பிள்ளை'' என்னும் வண்ணப் படத்தை பூம்புகார் புரொடக்ஷன்சார் தயாரித்தனர். கிருஷ்ணன் பஞ்சு இயக்க, எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைக்க, நான் பாடல்களை எழுதினேன்.

    படம் தயாரானதும், அந்தப் படத்தின் பிரத்தியேகக் காட்சி ஒன்று, தேவி பாரடைஸ் தியேட்டரில் ஒரு நாள் காலைப் பொழுதில் ஏற்பாடாகியிருந்தது.

    படத்தைப் பார்க்க முதல்வர் கலைஞரோடு, அமைச்சர்கள் அனைவரும் வந்திருந்தார்கள். படத்தின் இடைவேளையில் மு.க.முத்துவின் நடிப்பை எம்.ஜி.ஆர். பாராட்டிப்பேசி, ஒரு கைக்கடிகாரத்தையும் அன்பளிப்பாகத் தந்து வாழ்த்தினார்.

    நானும் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன். நிகழ்ச்சி முடிந்து காரில் ஏறும்போது, எம்.ஜி.ஆர். என்னை அவருடைய தோட்டத்திற்கு மறுநாள் காலை சிற்றுண்டிக்கு வரச்சொன்னார்.

    மறுநாள், நான் தோட்டத்திற்கு சென்றேன்.

    விருந்தோம்பலில் எம்.ஜி.ஆருக்கு இணையே கிடையாது. இட்லிகளும், தோசைகளும் அவர் கையாலேயே எனக்குப் பரிமாறப்பட்டன.

    சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போது, எம்.ஜி.ஆர். என்னிடம் மெல்லப் பேசத்தொடங்கினார். "என்னங்க வாலி! மூன்று தமிழ் தோன்றியது மு.க.முத்து கிட்டதானா?''

    இப்படி எம்.ஜி.ஆர். என்னைக்கேட்டதும், அவரது மனதில் உள்ளது என்னவென்று மறுவினாடியே எனக்குப் புரிந்துவிட்டது.

    "பிள்ளையோ பிள்ளை'' படத்தின் இயக்குனர்கள் கிருஷ்ணன் பஞ்சு. திரு.பஞ்சு மூலம், கலைஞர், தன் மகன் முத்துவை வாழ்த்தி நான் பாட்டெழுத வேண்டுமென்று சொல்லியனுப்பியிருந்தார்.

    அதன் காரணமாகப் படத்தின் கதாநாயகி, கதாநாயகனைப் பார்த்து - "மூன்று தமிழ் தோன்றியதும் உன்னிடமோ! - நீ மூவேந்தர் வழிவந்த மன்னவனோ!'' என்று பாடுவதாக பாடலைப் புனைந்தேன்.

    எம்.எஸ்.வி.யும், சாருகேசி ராகத்தில் அந்த பாடலுக்கு அற்புதமாக இசையமைத்திருந்தார்.

    இதைப் படத்தில் பார்த்துவிட்டுத்தான் எம்.ஜி.ஆர். என்னிடம் "மூன்று தமிழ் தோன்றியது மு.க.முத்துக்கிட்டதானா? என்று என்னைக் கேட்டார்.

    "அண்ணே! மு.க.முத்து வளர வேண்டிய இளம் கலைஞன். ஆகவே நான் வாழ்த்தி எழுதும்படி கேட்டுக்கொள்ளப்பட்டேன். என்னுடைய தமிழ் எல்லாரையும் வாழ்த்துவதாக இருக்க வேண்டும் என்று நீங்களே பல தடவை சொல்லியிருக்கீங்க... அதனாலதான் அப்படி எழுதினேன்'' என்று நான் சொன்ன விளக்கத்தை எம்.ஜி.ஆர். நியாயமென்று ஏற்றுக்கொண்டாலும், அவர் மனம் முழுமையாக அதை ஒப்பவில்லை என்பதை அவர் முகம் காட்டிற்று.

    மேற்கண்ட பாடல் தன்னுடைய படத்தில் எழுதப்பட்டிருந்தால், அது இன்னும் அதிக அளவு பிரபல்யம் அடைந்திருக்கக்கூடும் என்பதை, எனக்கு அவர் சொல்லாமலேயே சொன்னார் என்று நான் புரிந்து கொண்டேன்.

    இதற்கு முன் (1970) மேகலா பிக்சர்ஸ் தயாரித்த படமாகிய "எங்கள் தங்கம்'' எம்.ஜி.ஆர். கதாநாயகனாக நடிக்க, கிருஷ்ணன் பஞ்சு இயக்கத்தில் உருவாயிற்று.

    இதற்கும் நான்தான் பாடல்கள் எழுதினேன். எம்.எஸ்.வி.தான் இசையமைத்தார்.

    இதில் "நான் செத்துப் பிழைச்சவன்டா -எமனைப் பார்த்து சிரிச்சவன்டா'' என்று ஒரு பாடலை எழுதினேன்.

    எம்.ஜி.ஆர். குண்டடி பட்டு இறைவனருளால் மீண்டு வந்திருந்த நேரம் அது. ஆகவே, அந்தப் பல்லவி அந்நேரத்திற்கு மிகமிகப் பொருத்தமாக இருந்தது.

    முழுப் பாடலையும் எழுதி முடித்த பிறகு, பாடலை எம்.ஜி.ஆரிடம் காட்டுவதற்காக, நானும் நண்பர் முரசொலி மாறனும் ஜெமினி ஸ்டூடியோ சென்றோம்.

    மாறன் வெளியே தங்கிவிட நான் மட்டும் எம்.ஜி.ஆரின் மேக்கப் ரூமிற்குள் சென்றேன்.

    அப்போது எம்.ஜி.ஆர். ஜெமினியில் `நீரும் நெருப்பும்' படப்பிடிப்பிற்கான ஒப்பனையில் இருந்தார்.

    முழுப் பாடலையும் நான் எம்.ஜி.ஆரிடம் பாடிக் காண்பித்தேன். அந்தப் பாடலில், உயிருக்கு அஞ்சாது நாட்டுக்கு உழைத்தோர் பற்றியெல்லாம் சரணங்களில் எழுதியிருந்தேன்.

    எம்.ஜி.ஆர். பாட்டைக்கேட்டுவிட்டு வெகுவாக சந்தோஷப்பட்டார். நான் விடை பெற்றுக் கிளம்பும்போது என்னை மறுபடியும் தன் ரூமுக்குள் அழைத்தார்.

    "வாலி! நாட்டுக்காக, உயிரைத் துச்சமா நினைச்சவங்களப்பத்தி இந்தப் பாட்டுல எழுதியிருக்கீங்க... அதெல்லாம் நல்லாயிருக்கு... இருந்தாலும், தமிழ் மொழிக்காகத் தண்டவாளத்துல தலை வெச்சுப் படுத்தவரு, நம்ம கலைஞர்... அவரைப்பற்றி ஒரு சரணம் எழுதி இந்தப் பாட்டுல சேத்துடுங்க...'' என்று எம்.ஜி.ஆர். என்னிடம் கேட்டுக்கொண்டார். அவர் சொன்னது போலவே பாட்டின் இரண்டாவது சரணத்தை நான் அமைத்தேன்.

    (அந்த இரண்டாவது சரணம்: `ஓடும் ரெயிலை இடைமறித்து -அதன் பாதையில் தனது தலை வைத்து, உயிரையும் துரும்பாய்த்தான் மதித்து -தமிழ்ப்பெயரை காத்த கூட்டமிது'')

    இந்தப் படத்தில் என் பாட்டில் கலைஞரை உயர்த்தி நான் சொல்ல வேண்டுமென்று எம்.ஜி.ஆர். விரும்பியதுபோல், இதே படத்தில் இன்னொரு பாட்டில் எம்.ஜி.ஆரை உயர்த்தி நான் சொல்ல வேண்டுமென்று கலைஞர் விரும்பினார்.

    படத்தின் கதாநாயகனாகிய எம்.ஜி.ஆர், "நான் அளவோடு ரசிப்பவன்...'' - என்று பாடுவதாக ஒரு பாடலை நான் "எங்கள் தங்கம்'' படத்தில் எழுதினேன்.

    "நான் அளவோடு ரசிப்பவன்'' என்று முதல் வரியை எழுதிவிட்டு, இரண்டாவது வரியை சிந்தித்துக் கொண்டிருக்கும்போது, என் பக்கத்தில் அமர்ந்திருந்த கலைஞர், "வாலி! இரண்டாவது வரியை - `எதையும் அளவின்றி கொடுப்பவன்' என்று போட்டா நல்லாயிருக்குமே!'' என்று என்னிடம் சொன்னார்.

    நான் அவ்வாறே எழுதினேன்.

    இப்படி கலைஞரும், எம்.ஜி.ஆரும் பரஸ்பர அன்பு பாராட்டிய காலம் அது.

    இந்த இடத்தில், இன்னொரு உண்மையையும் நான் சொல்ல வேண்டும்.

    அண்ணன் எம்.ஜி.ஆர். எந்தக் காலத்திலும், தன்னுடைய இமேஜை உயர்த்துமாறு பாடல் வரிகளை நான் எழுதவேண்டும் என்று என்னிடம் சொன்னதேயில்லை.

    "மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்'', "கொடுத்ததெல்லாம் கொடுத்தான்'', "நான் செத்துப் பிழைச்சவண்டா'', "நான் ஆணையிட்டால்'' போன்ற பாடல்களெல்லாம் நானாகத் தன்னிச்சையாகப் புனைந்ததே தவிர, எம்.ஜி.ஆர். எழுதச் சொல்லி எழுதியவை அல்ல; இது கடவுள் சத்தியம்.

    இன்னும் உண்மையைக் கொஞ்சம் அகலமாகச் சொல்லப்போனால் -தன்னை `வள்ளல்', `மன்னன்' என்றெல்லாம் எழுதப்படுவதை அவர் கூச்சத்தோடு என்னிடம் மறுத்திருக்கிறார்.

    அவர்பால் எனக்கு இருந்த அன்பின் காரணமாகவும், விருந்தோம்பல், எளிமை முதலிய அவரது உயர்ந்த பண்புகளை உடனிருந்து பார்த்தாலும் -நானே அவ்வாறு அவரைப் போற்றிப் புகழ்ந்து பாடல்கள் எழுதினேன்.''

    இவ்வாறு வாலி கூறியுள்ளார்.
    எம்.ஜி.ஆரின் ஏராளமான படங்களுக்கு வாலி பாடல் எழுதிக் கொண்டிருந்த காலக்கட்டத்தில் (1964), சிவாஜி படங்களுக்கும் பாட்டு எழுத அழைப்பு வந்தது.
    எம்.ஜி.ஆரின் ஏராளமான படங்களுக்கு வாலி பாடல் எழுதிக் கொண்டிருந்த காலக்கட்டத்தில் (1964), சிவாஜி படங்களுக்கும் பாட்டு எழுத அழைப்பு வந்தது.

    சிவாஜியின் அன்பைப் பெற்றவரும், அவருடைய நீண்ட கால குடும்ப நண்பருமான பெரியண்ணன், தனது சாந்தி பிலிம்ஸ் சார்பாக "அன்புக்கரங்கள்'' என்ற படத்தை தயாரிக்க முடிவு செய்தார். படத்தின் கதாநாயகன் சிவாஜிதான். அப்படத்துக்கு வாலி பாடல் எழுதவேண்டும் என்று பெரியண்ணன் விரும்பினார்.

    வாலியை அழைத்துச்சென்று சிவாஜியிடம் அறிமுகம் செய்தார்.

    அதன்பின் நடந்தது பற்றி வாலி கூறியதாவது:-

    "கணேசு! இவருதான் வாலி. நம்ம ஊர்க்காரர். திருச்சி'' என்று, சிவாஜியிடம் பெரியண்ணன் என்னை அறிமுகப்படுத்தி வைத்தார்.

    அப்போது நான் ஏகப்பட்ட எம்.ஜி.ஆர். படங்களுக்கு பாடல்கள் எழுதிக் கொண்டிருப்பது சிவாஜிக்குத் தெரியும். அதன் காரணமாக, என்பால் அவருக்கு ஒரு எரிச்சல் இருக்கக்கூடும் என்று எண்ணினேன்.

    ஆனால் என் எண்ணத்திற்கு மாறாக, சிவாஜி சிரித்த முகத்தோடு "வாங்க'' என்று என் வலக்கரத்தில் தன் வலக்கரத்தை கோத்து வரவேற்றார்.

    1964-ல் ஆரம்பமான இந்த அறிமுகம், பிறகு நான் 60 சிவாஜி படங்களுக்கு பாடல்கள் எழுத ஓர் ஆரம்பமாக அமைந்தது.

    `பராசக்தி' காலத்திலிருந்தே சிவாஜியின் நடிப்பில் பெரிதும் ஈடுபாடு கொண்டிருந்த நான் எம்.ஜி.ஆர். ரசிகர் மன்றக் கூட்டங்களில், சிவாஜியை விமர்சித்துப் பேசவேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளானதுண்டு.

    இதுகுறித்து சிவாஜிக்கு மனத்தளவில் என்பால் ஒரு கசப்புணர்வு மெல்லியதாய் பரவியிருந்தபொழுதும், அவர் படங்களுக்கு நான் பாடல் எழுதக்கூடாது என்றெல்லாம் தடை விதிக்கக்கூடிய குறுகிய கண்ணோட்டம் அவரிடம் இருந்ததில்லை.

    தனிப்பட்ட முறையில் சிவாஜியும், எம்.ஜி.ஆரும் ஆரத்தழுவி அன்பு பாராட்டும் நண்பர்களாக இருந்தபோதும், தொழில் ரீதியாக அவர்களுக்கிடையே ஒரு போட்டி மனப்பான்மை இருந்தது முக்காலும் உண்மை.

    சிவாஜி நடிக்கும் `அன்புக்கரங்கள்' படத்திற்கு நான் பாடல்கள் எழுதுவதாக, என் பெயரைத்தாங்கிய முழுப்பக்க விளம்பரம் நாளேடுகளில் வெளியான அன்று `தாழம்பூ' படப்பிடிப்பில், நான் எம்.ஜி.ஆரைத் தற்செயலாக சந்திக்க நேர்ந்தது.

    என்னைப் பார்த்தவுடன், "உங்க `அன்புக்கரங்கள்' எப்ப ரிலீஸ்?'' என்று எம்.ஜி.ஆர். புன்னகைத்தவாறு என்னிடம் கேட்டார்.

    "உங்க அன்புக்கரங்களில் இருந்து, என்றைக்குமே எனக்கு ரிலீஸ் கிடையாது'' என்று நான் சொன்னதும் எம்.ஜி.ஆர். நெகிழ்ந்து போனார்.

    பிற்காலத்தில், தமிழக முதல்-அமைச்சராக எம்.ஜி.ஆர். பதவி வகித்தபோது, புயல் - வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ, நட்சத்திரங்கள் நிதி திரட்டினார்கள். 5 முக்கிய நகரங்களில் எம்.ஜி.ஆர். தலைமையில் அனைத்துப் பிரபல நடிகர்களும் பங்கு பெறும் வகையில் கலை நிகழ்ச்சிகள் ஏற்பாடாகியிருந்தன.

    திருநெல்வேலியில் நடந்த கலை நிகழ்ச்சிக்கு எம்.ஜி.ஆர். தலைமை வகிக்கையில், நான் அவருக்குப் பக்கத்து இருக்கையில் அமர்ந்து கொண்டிருந்தேன்.

    அமைச்சர்கள் காளிமுத்து, எட்மண்ட் முதலானோர் பின் வரிசையில் அமர்ந்திருந்தார்கள்.

    "அசோக சக்ரவர்த்தியின் கலிங்கத்துப்போர்'' என்னும் ஓரங்க நாடகத்தில் -சிவாஜி அவர்கள் சாம்ராட் அசோகனாக மேடையில் தோன்றி, அற்புதமாக நடித்தார்.

    இந்த ஓரங்க நாடகம், முரசொலி மாறன் "அன்னையின் ஆணை'' படத்திற்காக எழுதியது. சிவாஜி அவர்கள் தனக்கே உரித்தான வசன உச்சரிப்பாலும், வியத்தகு நடிப்பாலும், வெகுவாகப் பலரையும் கவர, நான் உடனே எம்.ஜி.ஆரிடம் சொன்னேன்:

    "அண்ணே! சிவாஜி மாதிரி ஒரு நடிகர், இந்த சகாப்தத்திலே வேறு யாருமில்லை... என்ன நடிப்பு பார்த்தீங்களா?'' என்றேன்.

    "சிவாஜிக்கு அடுத்ததாக நடிகர் முத்துராமனையும் சொல்லலாம்...'' என்றார் எம்.ஜி.ஆர்.

    பிறகு, எம்.ஜி.ஆர். தலைமை வகித்துப் பேச மேடைக்குச் சென்றுவிட்டார்.

    உடனே, என் பின்னே அமர்ந்திருந்த அமைச்சர் எட்மண்ட், "என்னங்க வாலி! சிவாஜி நடிப்பைப் புகழ்ந்து எம்.ஜி.ஆர்.கிட்டயே பேசிட்டீங்களே... உங்களப்பத்தி, தப்பா நினைச்சுக்கப் போறாரு...'' என்று என்னிடம் சொன்னதும்தான், நான் நாகரிகக் குறைவான முறையில் நடந்து கொண்டுவிட்டேனோ என்னும் சந்தேகம் என்னைத் தொற்றிக் கொண்டது. இருப்பினும், எம்.ஜி.ஆர். அதைத் தவறாக எடுத்துக்கொள்ளாமல், என்னிடம் தொடர்ந்து அன்பு குறையாமலே பழகினார்.

    எப்பொழுதுமே நான் ஒளிவு மறைவின்றிப் பேசியதாலேயே, என்னை எம்.ஜி.ஆர். விரும்பினார் என்று நான் நினைக்கிறேன்.

    எம்.ஜி.ஆர். அறிய, சிவாஜியைப் பாராட்டியது போல் -சிவாஜி அறிய நான் எம்.ஜி.ஆரைப் பாராட்டும் சந்தர்ப்பமும் ஏற்பட்டது.

    எம்.ஜி.ஆர். முதல்வராகப் பதவியேற்றதும், அவருக்கு ஒரு பாராட்டு விழா நடத்த நடிகர் சங்கம் தீர்மானித்தது. வாழ்த்து மடல் ஒன்றை வாசித்துக் கொடுக்கவும் ஏற்பாடாயிற்று.

    அப்போது நடிகர் சங்கத்தின் தலைவராயிருந்த சிவாஜி, சங்கத்தின் செயலாளராயிருந்த மேஜர் சுந்தர்ராஜனை என்னிடம் அனுப்பி, எம்.ஜி.ஆரைப் பாராட்டி வாசித்தளிக்கும் வாழ்த்து மடலை எழுதி வாங்கி வரச்சொன்னார்.

    அந்த வாழ்த்து மடலில், எம்.ஜி.ஆரின் இனிய பண்புகளையும், இயல்பான நடிப்பையும் மிகவும் சிலாகித்து நான் எழுதியிருந்தேன். படித்துவிட்டு, சிவாஜி, புன்னகைத்தாரே தவிர பொருமினார் இல்லை.''

    இவ்வாறு வாலி குறிப்பிட்டுள்ளார்.
    "என் படங்களுக்கு `வாலி' என்னும் புதிய கவிஞர்தான் இனி பாட்டு எழுதுவார்'' என்று பொதுக்கூட்டத்திலேயே எம்.ஜி.ஆர். அறிவித்தார்.
    "என் படங்களுக்கு `வாலி' என்னும் புதிய கவிஞர்தான் இனி பாட்டு எழுதுவார்'' என்று பொதுக்கூட்டத்திலேயே எம்.ஜி.ஆர். அறிவித்தார்.

    "இன்றோடு உன் தரித்திரம் முடிந்தது'' என்று வாலியிடம் முக்தா சீனிவாசன் சொன்னது உண்மை ஆயிற்று.

    விஸ்வநாதன் -ராமமூர்த்தியுடன் பணியாற்றத் தொடங்கியவுடனேயே, வாலியை கோடம்பாக்கம் கவனிக்கத் தொடங்கியது.

    கம்பெனி கம்பெனியாக, வாலியின் திறமை பற்றி எம்.எஸ்.விஸ்வநாதன் கூறியதன் பயனாக, வாய்ப்புகள் குவியலாயின.

    "சாரதா'' படத்திற்கு பிறகு டைரக்டராக பெரும் புகழ் பெற்ற கே.எஸ்.கோபாலகிருஷ்ணனிடம் இருந்து ஒரு நாள் வாலிக்கு அழைப்பு வந்தது. வாலி அவரை சந்தித்தார்.

    "எம்.எஸ்.வி. உங்களைப் பற்றி நிறைய சொன்னார். முதலில் இப்போது ஒரு பாட்டு எழுதுங்கள். மற்றதை பிறகு பார்ப்போம்'' என்றார், கோபாலகிருஷ்ணன்.

    "ரொம்ப நன்றி சார்!'' என்றார் வாலி.

    "எம்.எஸ்.விஸ்வநாதன் இசைக்கு எழுதின ஏதாவது ஒரு பாட்டை சொல்லுங்கள்'' என்று கே.எஸ்.ஜி. கேட்டார்.

    "உறவு என்றொரு சொல் இருந்தால், பிரிவு என்றொரு பொருளிருக்கும். காதல் என்றொரு கதை இருந்தால், கனவு என்றொரு முடிவிருக்கும்'' என்ற பாடலை, மெட்டோடு வாலி பாடிக்காட்டினார். இது, "இதயத்தில் நீ'' என்ற படத்துக்காக எழுதப்பட்ட பாடல்.

    "ஓகே! பாடல் நன்றாக இருக்கிறது. ஒரு பானை சேற்றுக்கு ஒரு அரிசி பதம். நீங்கள் போய்விட்டு, நாளைக்கு வாருங்கள். கார் அனுப்புகிறேன்'' என்றார், கோபாலகிருஷ்ணன்.

    நெஞ்சத்தில் மகிழ்ச்சி பொங்க, கிளப்ஹவுசுக்குத் திரும்பினார், வாலி.

    சொன்னபடி, மறுநாள் வண்டி அனுப்பினார், கோபாலகிருஷ்ணன். எம்.எஸ்.விஸ்வநாதனும், ராமமூர்த்தியும், பக்கவாத்தியக்காரர்களுடன் அமர்ந்திருந்தார்கள்.

    படத்தில் வரும் ஒரு நிகழ்ச்சியை விவரித்து, அதற்கான தாலாட்டுப் பாடலை எழுதும்படி வாலியிடம் கோபாலகிருஷ்ணன் சொன்னார்.

    "அத்தைமடி மெத்தையடி, ஆடி விளையாடம்மா'' என்ற பல்லவியை எழுதி, விஸ்வநாதனிடம் கொடுத்தார். அதை அவர் படித்துப் பார்த்துவிட்டு, கே.எஸ்.ஜி.யிடம் நீட்டினார்.

    ஒரு சிட்டிகை பொடியை உறிஞ்சிவிட்டு, பல்லவியை கே.எஸ்.ஜி. படித்துப் பார்த்தார். மகிழ்ச்சியுடன் வாலி முதுகில் ஒரு தட்டு தட்டினார்.

    பாட்டு "ஓகே'' ஆயிற்று.

    கோபாலகிருஷ்ணனின் முதல் தயாரிப்பான "கற்பகம்'' படத்துக்கு அனைத்துப் பாடல்களையும் வாலிதான் எழுதினார். அந்தப் படம், அவருக்கு நட்சத்திர அந்தஸ்தை தேடித்தந்தது.

    ஜி.என்.வேலுமணியின் சரவணா பிலிம்ஸ், வரிசையாக வெற்றிப் படங்களைத் தயாரித்து வந்தது. ஒருநாள், எம்.எஸ்.விஸ்வநாதன் தன்னுடைய காரை வாலிக்கு அனுப்பி, சரவணா பிலிம்சுக்கு வரச்சொன்னார்.

    வாலி உடனே புறப்பட்டுச் சென்றார். வாலியை வேலுமணிக்கு விஸ்வநாதன் அறிமுகம் செய்து வைத்தார்.

    சரவணா பிலிம்ஸ் தயாரிக்க இருக்கும் படத்தின் முழுக் கதையையும் கதாசிரியர் சக்தி கிருஷ்ணசாமி சொன்னார்.

    "வாலி! கதையைக் கேட்டுட்டீங்க! இந்தக் கதைக்கு ஐந்து எழுத்தில் வருவது மாதிரி ஒரு `டைட்டில் சொல்லுங்க!'' என்றார், வேலுமணி.

    உடனே "படகோட்டி'' என்று சொன்னார், வாலி.

    "பிரமாதம்'' என்று கூறியபடி, தன் கதர் ஜிப்பாவில் இருந்து ஒரு நூறு ரூபாய் நோட்டை எடுத்து வாலியின் கையில் திணித்தார், வேலுமணி.

    "படகோட்டி''க்கு இரண்டு பாடல்கள் பதிவாயின. முன்பு இசை அமைப்பாளர் எம்.பி.சீனிவாசனால் நிராகரிக்கப்பட்ட "கொடுத்ததெல்லாம் கொடுத்தான், யாருக்காகக் கொடுத்தான்?'' என்ற பாடலும் விஸ்வநாதன் இசை அமைப்பில், டி.எம்.சவுந்தரராஜன் குரலில் பிரமாதமாக அமைந்தது.

    "படகோட்டி'' படத்துக்கு வாலி பாட்டு எழுதுகிறார் என்பது, அதுவரை எம்.ஜி.ஆருக்குத் தெரியாது. இரண்டு பாடல்கள் பதிவான பிறகு, அவற்றை ராமாவரம் தோட்டத்துக்கு வேலுமணி கொண்டு சென்று, எம்.ஜி.ஆருக்குப் போட்டுக் காட்டினார்.

    பாடல்கள் எம்.ஜி.ஆருக்கு மிகவும் பிடித்துப்போயின.

    அன்று மாலை, பரங்கிமலையில் நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில், எம்.ஜி.ஆர். பேசினார். "என்னுடைய படங்களுக்கு வாலி என்னும் புதிய கவிஞர்தான் இனி பாட்டுகள் எழுதுவார்'' என்று அக்கூட்டத்தில் அறிவித்தார்.

    இதுபற்றி, வாலி கூறியிருப்பதாவது:-

    "அப்போது எம்.ஜி.ஆருக்கும், கண்ணதாசனுக்கும் நிறைய இடைவெளி ஏற்பட்டிருந்தது. என்னைக் கொண்டு அதை சரி செய்து கொள்ளலாம் என்று எம்.ஜி.ஆர். எண்ணினார். அவர் எண்ணத்திற்கேற்ப என்னுடைய வளர்ச்சியும் அமைந்தது.

    `படகோட்டி'யின் பாடல்கள் பெரும்பாலும் பதிவாகிவிட்ட நிலையில், ஒரே ஒரு பாடல் எழுதி ஒலிப்பதிவு செய்யவேண்டியிருந்தது.

    அந்த நேரத்தில் நான் கடுமையான ஜ×ரத்தால் பாதிக்கப்பட்டு, வீட்டில் படுத்த படுக்கையாகக் கிடந்தேன்.

    வேலுமணி அவர்களுக்கோ, பாட்டு மிகமிக அவசரத்தேவை. உடனே ஒலிப்பதிவு செய்து மறுநாள் படப்பிடிப்பை நடத்தியாக வேண்டும். இந்த சந்தர்ப்பத்தை விட்டால் இன்னும் மூன்று மாதத்திற்கு எம்.ஜி.ஆர். கால்ஷீட் கிடைப்பது கடினம்.

    இந்த ஒரு பாட்டை மட்டும், வேறு யாரையாவது வைத்து எழுதிவிடலாம் என்ற நிலை வந்தபோது, விஸ்வநாதன் அவர்கள் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை.

    "அருமையான பாடல்களை வாலி அண்ணன் இந்தப் படத்துல எழுதியிருக்காரு. இந்த ஒரு பாட்டுக்காக இன்னொருவரைத் தேடிச் செல்வது தர்ம நியாயமல்ல...'' என்று வாதாடினார்.

    ஆர்மோனியப் பெட்டியைத் தூக்கிக்கொண்டு, பக்கவாத்தியக்காரர்களோடு என் வீட்டிற்கே வந்துவிட்டார்.

    அப்போது நான் தனிக்கட்டை; திருமணமாகவில்லை.

    படுக்கையில் படுத்தவாறே, விஸ்வநாதன் அவர்களின் வர்ணமெட்டிற்கேற்ப நான் வார்த்தைகளைச் சொல்ல, உதவி இயக்குனர் ஒருவர் அதை எழுதி முடித்தார்.

    "அழகு ஒரு ராகம்; ஆசை ஒரு தாளம்'' என்பதே அந்தப்பாடல்.''

    இவ்வாறு வாலி குறிப்பிட்டுள்ளார்.
    கண்ணதாசனிடம் வாலியை வசனகர்த்தா மா.லட்சுமணன் அழைத்துச்சென்று அறிமுகப்படுத்தினார்.
    கண்ணதாசனிடம் வாலியை வசனகர்த்தா மா.லட்சுமணன் அழைத்துச்சென்று அறிமுகப்படுத்தினார்.

    "தெரியுமே! திருச்சி வானொலியில் நாடகம் எல்லாம் எழுதிக் கொண்டிருந்த வாலிதானே நீங்கள்?'' என்று கேட்டார், கண்ணதாசன்.

    அவருடைய ஞாபகசக்தியை எண்ணி வாலி வியந்தார். இருவருக்கும் காபி கொண்டுவரச்சொல்லி தன் கையாலேயே கொடுத்தார், கண்ணதாசன்.

    "நான் ஒரு தீவிர ஆஸ்திகன்... நீங்களும் இப்படி ஆஸ்திகனா மாறிவிட்டதில் எனக்கு ரொம்ப சந்தோஷம்'' என்று வாலி கூற, "நான் எப்பவுமே ஆஸ்திகன்தான். ஜுபிடர் பிக்சர்சில் இருக்கிறபோது, விபூதி குங்குமத்தோடு இருப்பேன்'' என்றார், கண்ணதாசன்.

    வாலி, கண்ணதாசனைப் பற்றி எழுதிக் கொண்டு போயிருந்த ஒரு கவிதையைப் படித்தார்.

    "காட்டுக்குள் தேனீக்கள் கூட்டுக்குள் வைத்ததை, பாட்டுக்குள் வைத்தவனே!'' என்று தொடங்கும் அந்தப் பாடலை வாலி பாடிக்காட்ட, கண்ணதாசன் மகிழ்ந்தார்.

    "நாம் அடிக்கடி சந்திக்கலாம்...'' என்று கண்ணதாசன் கூறினார்.

    ஆனால் காலம், கண்ணதாசனையும், வாலியையும் எதிர் எதிர் அணியில் நிறுத்தி தொழில் புரிய வைத்தது.

    இந்தியில் மிகப்பெரிய வெற்றிப்படமான "தீதார்'' படத்தின் கதையை "நீங்காத நினைவு'' என்ற பெயரில் பத்மா பிலிம்சார் படமாக எடுத்தார்கள். இந்தப் படத்துக்கு இசை அமைப்பாளராக கே.வி.மகாதேவனும், இயக்குனராக தாதாமிராசியும் பணியாற்றினர்.

    இந்தப் படத்தின் அதிபர் சுலைமானிடம் வாலியை வசனகர்த்தா `மா.ரா.'' அறிமுகப்படுத்தினார். சுலைமானுக்கு வாலியின் பாடல் பிடித்திருந்தது.

    அதைத்தொடர்ந்து, மகாதேவனை வாலி சந்தித்தார். அந்தக் காலத்தில், எந்த இசை அமைப்பாளரும் ஒரு புதிய பாடல் ஆசிரியரை அவ்வளவு சுலபமாக ஏற்றுக் கொள்வதில்லை. அதற்கேற்ப, வாலியிடம் மகாதேவன் இறுக்கமாகவே இருந்தார்.

    வாலியை அவர் உதறவும் இல்லை; உற்சாகப்படுத்தவும் இல்லை. ஆயினும், பட அதிபர் சுலைமானும், வசன கர்த்தா "மா.ரா.''வும் வாலிக்கு பக்க பலமாக இருந்ததால், "நீங்காத நினைவு'' படத்தில் வாலியின் பாடல்கள் இடம் பெற்றன.

    (ஆரம்பத்தில் வாலியை முழு மனதுடன் மகாதேவன் வரவேற்கவில்லை என்றாலும், பிற்காலத்தில் வாலியின் நூற்றுக்கணக்கான பாடல்களுக்கு இசை அமைத்தார்.)

    இந்தக் காலக்கட்டத்தில், வாலியின் வாழ்க்கையில் எதிர்பாராத பெரிய திருப்பம் ஏற்பட்டது.

    முக்தா பிலிம்சார் அப்போது "இதயத்தில் நீ'' என்ற படத்தைத் தயாரித்துக் கொண்டிருந்தார்கள். முக்தா சீனிவாசனிடம் "நீங்காத நினைவு'' படத்தயாரிப்பாளர் சுலைமானும், வசனகர்த்தா "மா.ரா.''வும் வாலியைப் பற்றி கூறினார்கள். இதன் விளைவாக, வாலிக்கு அப்படத்தில் பாட்டு எழுதும் வாய்ப்பு கிடைத்தது.

    அதன் பிறகு நடந்தது பற்றி வாலி கூறுகிறார்:

    "என் ஆனந்தத்திற்கு எல்லையேயில்லை. ஏனெனில் அந்தப் படத்தின் இசையமைப்பாளர்கள் விஸ்வநாதன் - ராமமூர்த்தி. இவர்களிடம் பாட்டெழுதும் வாய்ப்புக்காகத்தானே நான் இத்தனை காலம் தவமிருந்தேன்!

    1963 ஜனவரி மாதம் முதல் வாரத்தில் ஒரு மத்தியான வேளையில் முக்தா பிலிம்ஸ் மாடியிலுள்ள சின்ன அறையில் எம்.எஸ்.விஸ்வநாதனுக்கும், ராமமூர்த்திக்கும் நான் அறிமுகம் செய்து வைக்கப்பட்டேன்.

    நான் ஏற்கனவே எம்.ஜி.ஆர். படத்திலும், எஸ்.எஸ்.ஆர். படத்திலும் பாடல்கள் எழுதியிருப்பதையெல்லாம் விஸ்வநாதனிடம் விவரித்துச் சொன்னார் முக்தா சீனிவாசன்.

    "நல்ல கவிஞர். பாட்டைப் பாருங்கள். பிடித்திருந்தால் ஏற்றுக்கொள்ளுங்கள். ஒத்துவராது என்று தோன்றினால் நான் உங்களை வற்புறுத்தமாட்டேன்'' என்றெல்லாம் தெளிவாகச் சொன்னார் முக்தா சீனிவாசன்.

    எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு நான் ஒரு வணக்கத்தைப் போட்டேன்.

    "ஏதாவது பல்லவி எழுதிக்கொடுங்கள்'' என்றார், விஸ்வநாதன். பாட்டுக்கான காட்சி விளக்கத்தை இயக்குனர் முக்தா சீனிவாசன் சொன்னார்.

    உடனே நான் ஒரு பல்லவியை எழுதி விஸ்வநாதனிடம் நீட்டினேன்.

    "பூவரையும் பூவைக்குப் பூமாலை போடவா?

    பொன்மகளே! வாழ்கவென்று பாமாலை போடவா?''

    - என்பதுதான் அந்தப் பல்லவி.

    "பூவைக்கு என்பதெல்லாம், டிïனுக்கு சரியாக வராதே...'' என்றார் எம்.எஸ்.வி.

    உடனே `பூங்கொடியே' என்று மாற்றிக் கொடுத்தேன்.

    ஒரு சிட்டிகை பொடியை எடுத்து மூக்கில் உறிஞ்சினார், விஸ்வநாதன். அப்போதெல்லாம் அவருக்குப் பொடி போடும் பழக்கமுண்டு.

    நான் எழுதிக் கொடுத்த பல்லவிக்கு ஐந்தே நிமிடங்களில் -ஐந்து விதமாக மெட்டமைத்துப் பாடியதைக் கேட்டு நான் அசந்து போனேன்.

    "சரணத்திற்கு, நான் கொடுக்கும் மெட்டுக்குத்தான் நீங்கள் பாட்டு எழுதவேண்டும்'' என்று விஸ்வநாதன் சரணத்திற்கான மெட்டை வாசித்தார்.

    விஸ்வநாதன் கொடுத்த மெட்டிற்கு கால்மணி நேரத்தில் நான்கைந்து சரணங்களை எழுதி அவரிடம் நீட்டினேன்.

    சரணங்களை வாங்கியவர், அவற்றைப் பாடாமல் திரும்பத் திரும்ப இரண்டு மூன்று முறை மனதிற்குள் படித்துப் பார்த்தார் விஸ்வநாதன்.

    பிறகு ஒரே ஒரு கேள்விதான் என்னை கேட்டார்:

    "இவ்வளவு நாளா எங்கே இருந்தீங்க?'' என்பதுதான் அந்த கேள்வி.

    நான் கண்கலங்கி மவுனி ஆனேன்.

    சரணங்களை உடனே `மளமள'வென்று பாடினார்.

    "சீனு அண்ணா! அடுத்த சிச்சுவேஷனையும், இவர்கிட்ட சொல்லுங்க...'' என்றார் விசு.

    சொன்னார் சீனிவாசன்.

    உடனே நான் எழுதினேன்:

    `ஒடிவது போல் இடையிருக்கும்

    இருக்கட்டுமே! - அது

    ஒய்யார நடை நடக்கும்

    நடக்கட்டுமே!

    சுடுவது போல் கண் சிவக்கும்

    சிவக்கட்டுமே! - அது

    சுட்டுவிட்டால் கவி பிறக்கும்

    பிறக்கட்டுமே!

    விஸ்வநாதன், மகிழ்ந்தும் நெகிழ்ந்தும் போனார். உடனே விதவிதமான மெட்டமைத்துப் பாடிக்காட்டினார். வழக்கம்போல் அவர் கொடுத்த மெட்டுக்கு நான் சரணங்களை எழுதி முடித்தேன்.

    பிற்பகல் 3 மணியிலிருந்து 4 1/2 மணிக்குள் இரண்டு பாடல்களும் நிறைவடைந்தன.

    விஸ்வநாதன் அடுத்த கம்பெனிக்குப்புறப்பட்டுவிட்டார். போகும்போது, முக்தா சீனிவாசனைத் தனியாக அழைத்துக் காதில் ஏதோ சொல்லிவிட்டுப் போனார்.

    "தரித்திரம் ஒழிந்தது''

    `என்ன சொன்னாரோ?' என்று நான் பதை பதைத்துக்கொண்டே சீனிவாசனிடம் கேட்டேன்!

    "உன்னை வைத்தே மிச்சப் பாடல்களையும் எழுதலாம் என்று சொல்லிவிட்டுப் போனாரய்யா! இன்னியோடு உன் தரித்திரம் ஒழிந்தது'' என்றார் முக்தா.

    எனக்கு நா எழவில்லை. கண்களில் நீர் கோத்து விழிப்படலம் மறைக்க நின்றேன்.

    முக்தா சீனிவாசன் என் கண் முன்னால் எனக்குக் கடவுளாகவே காட்சியளித்தார். வறுமையில் வாடி நித்தநித்தம் செத்துக் கொண்டிருந்த எனக்கு வாழ்வுப் பிச்சை போட்ட முக்தா சீனிவாசனை நான் மூச்சுள்ளளவும் மறப்பதற்கில்லை''

    இவ்வாறு வாலி கூறினார்.
    வாலி கஷ்டப்பட்ட காலத்தில் கண்ணதாசனின் உதவியாளராக வேலை பார்க்கக்கூடிய வாய்ப்பு வந்தது. அதை ஏற்க வாலி மறுத்துவிட்டார்.
    வாலி கஷ்டப்பட்ட காலத்தில் கண்ணதாசனின் உதவியாளராக வேலை பார்க்கக்கூடிய வாய்ப்பு வந்தது. அதை ஏற்க வாலி மறுத்துவிட்டார்.

    "நல்லவன் வாழ்வான்'' படத்துக்குப் பிறகு, அண்ணா கதை, வசனம் எழுதி, ப.நீலகண்டன் இயக்கிய "எதையும் தாங்கும் இதயம்'' படத்துக்கு பாடல் எழுதும் வாய்ப்பு வாலிக்குக் கிடைத்தது.

    "உன் அன்னை முகம் என்றெண்ணி - நீ என்னை முகம் பார்க்கின்றாய்! என் பிள்ளை முகம் என்றெண்ணி - நான் உன்னை முகம் பார்க்கின்றேன்'' என்பதுதான் அந்தப்பாடல்.

    கே.ஆர்.ராமசாமி, எஸ்.எஸ்.ராஜேந்திரன் ஆகியோர் நடித்த படம் இது.

    இந்தப் படத்துக்குப் பிறகும் வாலிக்குப் பெரிய வாய்ப்பு எதுவும் வரவில்லை.

    வாலி சிரமப்படும் போதெல்லாம் அவருக்கு உதவி செய்த சிலருள் இசை அமைப்பாளர் ஜி.கே.வெங்கடேஷ் ஒருவர்.

    ஒரு நாள் அவர் திடீரென்று வாலியைத் தேடி வந்தார்.

    "வாலி! இனிமே நீ இரண்டு வேளை வயிறாரச் சாப்பிடலாம். உனக்கு மாதம் 300 ரூபாய் கிடைக்கிற மாதிரி ஒரு ஏற்பாடு பண்ணிட்டேன்... ஏறு, என் வண்டீல...'' என்று கையைப்பிடித்து இழுத்தார்.

    "அண்ணே, எனக்கு ஆபீஸ் வேலை வேணாம்ணே.... பாட்டு எழுதற வேலைதான் வேணும்!'' என்று வாலி சொன்னார்.

    "பாட்டு எழுதுற வேலைதாண்டா... கண்ணதாசன் பாட்டு எழுதச் சொல்லுவாரு... அதை நீ உடனே ஒழுங்காய்ப் பேப்பரில் எழுதணும். கவிஞர், உன்னை அசிஸ்டெண்டா வெச்சுக்க ஒத்துக்கிட்டாரு... உனக்கு அவர் மாதம் 300 ரூபாய் சம்பளம் தந்திடுவாரு...'' என்று வெங்கடேஷ் கூறினார்.

    உடனே வாலி, "அண்ணே! கண்ணதாசன் கடைக்கு, எதிர்க்கடை விரிக்க நான் வந்திருக்கிறேன். அவர்கிட்டேயே உதவியாளனாகச் சேர்ந்தா, என் தனித்தன்மை காணாமல் போய்விடும்... டெய்லர் கிட்ட வேலைக்குச் சேர்ந்தா காலமெல்லாம் காஜாதான் எடுக்கணுமே தவிர, மெஷின்ல ஏத்தமாட்டாங்க...'' என்றேன்.

    ஜி.கே.வி.யின் முகம் சிவந்து போயிற்று.

    "நீ உருப்படமாட்டேடா'' என்று கோபமாகச் சொல்லிவிட்டுப் போய்விட்டார்.

    இதுகுறித்து வாலி எழுதியிருப்பதாவது:-

    "கண்ணதாசனின் கீழ் பணியாற்றுவது கேவலம் என்று நான் எண்ணவில்லை. அது எள் முனையளவு கூட, என் முன்னேற்றத்திற்கு உதவாது என்பதால்தான் அந்த வாய்ப்பை நான் விலக்கினேன்.

    ஒரு கவிஞன் தனக்கென்று -ஒரு முகவரியோடு இருத்தல் மிகமிக அவசியமானது. நம்மிடம் இருக்கும் தமிழ், நயாபைசா அளவுதான் என்றிருந்தாலும்கூட... அதை ரூபாயாக்கி முன்னேற வேண்டும் எனும் முனைப்பு இல்லாது போயின் நமக்கென்று ஒரு ஸ்தானத்தை சமூகம் வழங்காது.

    விஸ்வநாதன் -ராமமூர்த்தி, கே.வி.மகாதேவன் இவர்களது முக தரிசனமே கிட்டாத நிலையில், கோடம்பாக்கம் ஒரு தொலைதூரக் கனவாகவே ஆகிவிட்டது எனக்கு. தந்தை மறைந்து போனார்; தாயோ பம்பாயில் நோய்ப்படுக்கையில் இருக்கிறாள். எனக்காக நானே அழுது கொள்ள வேண்டுமே தவிர, ஈரம் துடைப்பார் எவருமில்லை.

    இந்த லட்சணத்தில் சினிமாவை விடாமல் பிடித்துக்கொண்டு தொங்குவது, புத்திசாலித்தனமல்ல என்று புரிந்து கொண்டேன்.

    மதுரையில் டி.வி.எஸ். அலுவலகத்தில் மிகப்பெரிய பதவியில் என் நண்பர் ஒருவர் இருந்தார். அவருக்கு வேலை கேட்டு ஒரு லெட்டர் எழுதினேன்.

    அடுத்த வாரமே வந்து வேலையில் சேரச் சொல்லி அவர் பதில் எழுதியிருந்தார்.

    சென்னைக்கு ஒரு பெரிய வணக்கத்தைப் போட்டுவிட்டு, மதுரைக்குப் போய்விடலாம் என்று முடிவு கட்டினேன்.

    கைவசம் இருந்த நீலப் பெட்டியையும், சிகப்பு ஜமுக்காளத்தையும் தூக்கி கொண்டு மறுநாள் மதுரைக்கு புறப்பட இருந்தேன்.

    அப்போதுதான் பாடகர் பி.பி.ஸ்ரீநிவாஸ் என் அறைக்கதவை தட்டினார்.

    ஊரைவிட்டே நான் போவதாக இருக்கும் விஷயத்தை அவரிடம் சொல்லாமல், "சமீபத்தில் நீங்கள் பாடின நல்ல பாட்டு ஏதாவது இருந்தால் பாடிக்காட்டுங்க...'' என்று சொன்னேன்.

    அவர் சிறிது சிந்தித்துவிட்டு வெளியாக இருக்கும், `சுமை தாங்கி' என்னும் படத்தில், கண்ணதாசன் எழுதி, விஸ்வநாதன் - ராமமூர்த்தி இசையமைத்திருந்த ஒரு பாடலை முழுவதும் எனக்குப் பாடிக் காண்பித்தார்.

    பாட்டு வரிகள் என் செவியில் பாயப்பாய, மதுரைக்குப் பயணமாவதை ரத்து செய்து, சென்னையிலேயே தங்கிவிடுவது என்று முடிவு கட்டினேன்.

    ஆம்! ஒரு சினிமாப்பாட்டு என் திசையை மாற்றியது; என் எதிர்காலத்தை நிர்ணயித்தது. நான் தொடர்ந்து போராடுவதற்கான தெம்பையும், தெளிவையும் என்னுள் தோற்றுவித்தது. சோர்ந்து போன என் சுவாசப் பையில் பிராண வாயுவை நிரப்பி, எனக்கு உயிர்ப்பிச்சை கொடுத்து என்னைப் புதுமனிதனாக்கியது.

    `சுமை தாங்கி' படத்தில் இடம் பெற்று பின்னாளில் மிகமிகப் பிரபலமான அந்தப்பாடல், கண்ணதாசன் எனக்குச் செய்த கீதோபதேசமாகவே அமைந்தது.

    எந்தத் துறையிலும் முட்டி மோதி முயற்சித்து முன்னுக்கு வரமாட்டாது, மனதொடிந்த எவரும் இந்தப் பாட்டை மந்திரம் போல் மனனம் செய்யலாம். அவ்வளவு அருமையான, ஆழமான, அர்த்தமான - அதே நேரத்தில் மிகமிக எளிமையான பாடல்.

    பாடல் இதுதான்:

    `மயக்கமா? கலக்கமா?

    மனதிலே குழப்பமா?

    வாழ்க்கையில் நடுக்கமா?

    `வாழ்க்கையென்றால் ஆயிரமிருக்கும்;

    வாசல் தோறும் வேதனையிருக்கும்;

    வந்த துன்பம் எதுவென்றாலும்

    வாடி நின்றால் ஓடுவதில்லை;

    எதையும் தாங்கும் இதயமிருந்தால் -

    இறுதிவரைக்கும் அமைதியிருக்கும்!'

    `ஏழை மனதை மாளிகை யாக்கு;

    இரவும் பகலும் காவியம் பாடு;

    நாளைப் பொழுதை இறைவனுக் களித்து,

    நடக்கும் வாழ்வில் அமைதியைத் தேடு;

    உனக்கும் கீழே உள்ளவர் கோடி -

    நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு!'

    கண்ணதாசன் எழுதிய இந்த பாடலை, வரி வரியாக மனதிற்குள் சொல்லிப் பாருங்கள். வாழ்க்கையின் உண்மை விளங்கும்.

    இவ்வாறு வாலி கூறியுள்ளார்.

    வாலி சென்னைக்கு வந்து ஐந்தாண்டுகள் ஆகியிருந்தும், அதுவரை கண்ணதாசனை சந்திக்கவில்லை. அவரை உடனே சந்திக்க வேண்டும் என்று ஆவல் எழுந்தது.

    அதன்படி, அடுத்த நாளே சென்று கண்ணதாசனை சந்தித்தார்.


    அண்ணா வசனம் எழுதி, எம்.ஜி.ஆர். நடித்த "நல்லவன் வாழ்வான்'' படத்தில் வாலியின் பாடல் இடம் பெற்றபோதிலும், பல சோதனைகளை வாலி சந்திக்க வேண்டியிருந்தது.
    அண்ணா வசனம் எழுதி, எம்.ஜி.ஆர். நடித்த "நல்லவன் வாழ்வான்'' படத்தில் வாலியின் பாடல் இடம் பெற்றபோதிலும், பல சோதனைகளை வாலி சந்திக்க வேண்டியிருந்தது.

    ப.நீலகண்டன் கூறியது போலவே மறுநாள் அவரைப் போய்ப் பார்த்தார், வாலி. சுமார் ஐம்பது பல்லவிகளைக் கொடுத்தார். அவற்றில், "சிரிக்கின்றாள், இன்று சிரிக்கின்றாள்'' என்ற பல்லவியை தேர்வு செய்தார், நீலகண்டன்.

    அதற்கு இசை அமைப்பாளர் டி.ஆர்.பாப்பா பலவிதமான மெட்டுகளைப் போட்டுக்காட்டினார். அதில் ஒரு மெட்டை தேர்வு செய்தார், நீலகண்டன்.

    அதன் பிறகு, முழுப் பாட்டுக்கும் இசை அமைப்பதில் பாப்பா மும்முரமாக ஈடுபட்டார்.

    இசை அமைக்கும்போது வந்திருந்த ஒருவரை வாலிக்கு அறிமுகம் செய்து வைத்தார், பாப்பா. அவர்தான் எழுத்தாளரும், வசன கர்த்தாவுமான மா.லட்சுமணன். "இவர்தான் உங்களைப்பற்றி ப.நீலகண்டன் சாருக்கு தெரிவித்து, அதன் மூலம் உங்களுக்கு பாட்டெழுதும் வாய்ப்பு கிடைத்துள்ளது'' என்று பாப்பா கூறினார்.

    அதைக்கேட்டு வாலி பிரமித்து நின்றார். கண்கள் பனிக்க மா.லட்சுமணனுக்கு நன்றி தெரிவித்தார்.

    "நல்லவன் வாழ்வான்'' படத்துக்கு கதை -வசனம் எழுதுபவர் பேரறிஞர் அண்ணா என்பதை அறிந்து இரட்டிப்பு மகிழ்ச்சி அடைந்தார், வாலி.

    வாலியின் பாடல், அண்ணாவின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. பாடல் நன்றாக இருப்பதாகக் கூறியதோடு, சில வரிகளை அடிக்கோடிட்டு, பாராட்டினார்.

    எம்.ஜி.ஆருக்கும் பாடல் பிடித்து விட்டது.

    சோதனை மேல் சோதனை என்றாலும், அந்தப் பாடல் பதிவு செய்யப்படுவதிலும், படத்தில் இடம் பெறுவதிலும் பெரும் சோதனைகள் ஏற்பட்டன.

    அதுபற்றி வாலி எழுதியிருப்பதாவது:-

    "சாரதா ஸ்டூடியோவில் `ரிக்கார்டிங்'கிற்கான தேதி முடிவாயிற்று. நான் இஷ்ட தெய்வங்களையெல்லாம் வேண்டிக்கொண்டு சாரதா ஸ்டூடியோவிற்குச் சென்றேன்.

    பகல் 12 மணியளவிற்கு எம்.ஜி.ஆர். வந்தார். பாட்டின் பின்னணி இசை திருப்தியாக இல்லை என்றார். சில மாற்றங்கள் செய்யப் போதுமான நேரம் இல்லாததால் ரிக்கார்டிங் ரத்து செய்யப்பட்டது.

    10 நாட்களுக்குப் பிறகு மீண்டும் சாரதா ஸ்டூடியோவில் ஒலிப்பதிவிற்கான தேதி குறிக்கப்பட்டது. அன்று பகல் 12 மணியளவில் பி.சுசீலாவிற்கு உடல் நிலை சரியில்லையென்று ஒலிப்பதிவு ரத்து செய்யப்பட்டது.

    பிறகு, ஒரு மாதம் கழித்து இன்னொரு நாள் ஒலிப்பதிவிற்கான தேதி குறிக்கப்பட்டது. அன்று சீர்காழி கோவிந்தராசனின் சாரீரம் உதவும்படியாக இல்லையென்று ஒலிப்பதிவு ரத்து செய்யப்பட்டது. அந்தக் காலத்தில் டிராக் எடுத்துவிட்டு பிற்பாடு குரலைப் பதிவு செய்யும் வழக்கமெல்லாம் அமலுக்கு வரவில்லை.

    `இந்தப்பாட்டு, ராசியில்லாத பாட்டு... எனவே, மருதகாசியை வைத்து வேறு பாட்டு எழுதி ஒலிப்பதிவு செய்யலாம்' என்று நீலகண்டன் முடிவெடுத்தார்.

    மருதகாசியும் பாட்டு எழுதவந்தார். ஏற்கனவே நான் எழுதியிருந்த பாட்டை, ஒரு முறை கையில் வாங்கிப் பார்த்தார்.

    "இந்தப் பையன் நல்லா எழுதியிருக்கான். இவனுடைய வாழ்க்கை என்னால் கெட்டுப் போவதை நான் விரும்பவில்லை... இந்தப் பாட்டையே வைத்துக்கொள்ளுங்கள்... பாப்புலராகும்...'' என்று சொல்லிவிட்டு, மருதகாசி அண்ணன் தன் பிளைமவுத் காரில் ஏறிப் போய்விட்டார். அண்ணன் மருதகாசிக்கு மனதுக்குள் ஆலயம் எழுப்பி வழிபட்டேன். பிறகு என் பாடலையே பதிவு செய்து படப்பிடிப்புக்குப் போனார்கள்.

    நிïடோன் ஸ்டூடியோவில் ஒரு பெரிய செட் போட்டு இந்தப் பாடலைப் படம் பிடிக்க ஏற்பாடாயிற்று.

    ஒரு மலை; அதனின்றும் வழியும் அருவி. அருவி வந்து விழும் தடாகம் எனப் பெரிதாக அழகுற அமைக்கப்பட்ட அந்த செட்டில் எம்.ஜி.ஆரும், ராஜசுலோசனாவும் ஆடிப்பாடுவதாக நடன இயக்குனர் அமைத்த வண்ணம் ஒத்திகை பார்க்கப்பட்டது.

    முதல் ஷாட் எம்.ஜி.ஆர், `சிரிக்கின்றாள், இன்று சிரிக்கின்றாள்' என்னும் பாடல் வரிக்கு வாயசைத்தவாறே, கரையிலிருந்த தடாகத்தில் இறங்குகையில் கரை உடைந்து ஸ்டூடியோ "செட்'' முழுவதும் வெள்ளக்காடாயிற்று.

    படப்பிடிப்பு ஒத்தி வைக்கப்பட்டது. நான் அதிர்ந்து போனேன். இந்த ஒரு பாடலுக்கே இத்துணை தடங்கல்களென்றால் என் எதிர்காலம் என்னாவது என்று அஞ்சலானேன்.

    நல்லவேளை, செட் சீர் செய்யப்பட்டு பாட்டு நல்ல விதமாகப் படமாக்கப்பட்டு, படத்திலும் இடம் பெற்றது.

    இறுதியில் பாடல் வரிகளில் ஆட்சேபணைக்குரியதாகக் கருதப்பட்டு, சரணத்தில் சில வாக்கியங்கள் சென்சாரால் வெட்டப்பட்டன.

    இவ்வளவு அமர்க்களங்களுக்கு இடையே, எம்.ஜி.ஆருக்காக நான் எழுதிய முதல் பாடலுடன் "நல்லவன் வாழ்வான்'' 1961 ஆகஸ்டு 31-ந்தேதி திரைக்கு வந்தது.''

    இவ்வாறு வாலி குறிப்பிட்டுள்ளார்.
    வாலியின் முதல் பாடல் வெற்றிகரமாக திரையில் ஒலித்தபோதிலும், இரண்டாவது பாடல் வாய்ப்பு சுலபமாகக் கிடைத்து விடவில்லை.
    வாலியின் முதல் பாடல் வெற்றிகரமாக திரையில் ஒலித்தபோதிலும், இரண்டாவது பாடல் வாய்ப்பு சுலபமாகக் கிடைத்து விடவில்லை.

    அப்போது வி.கோபாலகிருஷ்ணன் நாலைந்து படங்களில் கதாநாயகனாக நடித்துக் கொண்டிருந்தார். அவரும், சவுகார் ஜானகியும், எம்.ஆர்.ராதாவும் நடித்த "தாமரைக்குளம்'' படத்தின் படப்பிடிப்பு, கோல்டன்ஸ் ஸ்டூடியோவில் நடந்து கொண்டிருந்தது. படத்தின் டைரக்டர் `முக்தா' சீனிவாசன்.

    படப்பிடிப்பை பார்க்க வாலி சென்றிருந்தார். அவருக்கு ஒரு புதுமுக நடிகரை கோபாலகிருஷ்ணன் அறிமுகப்படுத்தி வைத்தார்.

    அதுபற்றி வாலி கூறுகிறார்:-

    "நானும் அந்தப் புதுமுக நடிகரும் மரத்தடியில் நின்று பேசிக்கொண்டிருந்தோம். மிகமிக ஒல்லியான உருவம். சினிமாவிற்கே அவசியமான கவர்ச்சி என்பது சிறிதளவும் இல்லாத முகம். ஆயினும் படித்தவராக இருந்ததால், அவர் விழியிலும், வார்த்தையிலும் ஓர் அறிவு தீட்சண்யம் இருந்தது. அவருடைய உருவ அமைப்பை வைத்து, இவர் எதை நம்பி சினிமாவில் தன் எதிர்காலத்தைத் திட்டமிடுகிறார் என்ற எண்ணத்திலேயே அவரிடம் பேச்சைக் கொடுத்தேன். அறிமுகமாகி ஒரு நிமிடமே ஆகியிருந்தும் அவர் என்னிடம் மனம் விட்டுப் பேசினார்.

    "மிஸ்டர் வாலி, என் சொந்த ஊர் தாராபுரம். என் பெயர் குண்டுராவ். நான் ரெயில்வே டிபார்ட்மெண்டுல கைநிறைய சம்பளத்தோட ஆனந்தமா இருந்தவன். இருந்தாலும் இந்த நடிப்பு ஒரு பித்தாகவே மாறி, என்னுடைய சிந்தனையை முழு நேரமும் ஆக்கிரமிச்சுடுச்சு. நாடகங்களிலேயும் நடிச்சிக்கிட்டிருக்கிறேன். இந்தத் தாமரைக்குளம் படத்தின் தயாரிப்பாளர் என் நாடக நடிப்பைப் பார்த்து எனக்கு இந்தப் படத்துல ஒரு சின்ன வேஷம் கொடுத்திருக்காரு. நடிச்சு முடிச்சா சம்பளமா தொண்ணூறு ரூபா தர்றேன்னாரு. எனக்குப் பணம் முக்கியமில்லை, என் திறமையை நிரூபிக்க விரும்புகிறேன். இதை நம்பி தைரியமா, ரெயில்வே வேலையை ராஜினாமா செஞ்சுட்டேன்.''

    நண்பர் குண்டுராவ் இப்படிச் சொன்னதும் எனக்குப் பொறி கலங்கிப் போய்விட்டது.

    "என்ன சார், ரெயில்வே உத்தியோகம் லேசுல கிடைக்குமா? சினிமாவை நம்பி அதை நீங்க விட்டது ரொம்பத் தப்பு'' என்று என் உண்மையான வருத்தத்தை அவரிடம் எடுத்துச் சொன்னேன்.

    "வாலி சார், எனக்கு நம்பிக்கையிருக்கு. ஒரு நாள் நான் கண்டிப்பா `ஸ்டார்' ஆவேன்; அப்ப ரெயில் நான் வரவரைக்கும் நிற்கும்'' என்று சொல்லிவிட்டு குண்டுராவ் ஒரு சிகரெட்டைப் புகைத்தார்.

    பிற்காலத்தில் குண்டுராவ், பிரபல நட்சத்திரமாகி கோடம்பாக்கத்தையே தன் கைக்குள் ஏறத்தாழ இருபது ஆண்டுகள் வைத்திருந்தார். நானும் அவரும் பின்னாளில் `வாடா... போடா...' என்று அழைத்துப் பேசிக்கொள்ளும் அளவிற்கு ஆப்த நண்பர்களானோம்.

    அந்த `குண்டுராவ்' வேறு யாருமல்ல. நாகேஷ்தான் அவர்!''

    இவ்வாறு வாலி குறிப்பிட்டுள்ளார்.

    இரண்டாவது பட வாய்ப்பு உடனே கிடைக்காததாலும், உடல் நலம் சரியில்லாததாலும், மீண்டும் ஸ்ரீரங்கத்துக்குப் போனார், வாலி.

    அப்போது, அவர் தந்தை காலமானார்.

    வாலியின் அண்ணன் மும்பையில் இருந்தார். "பாட்டு எழுதும் வேலை சரிப்படாது. மும்பை சென்று ஏதாவது வேலை தேடவேண்டியதுதான்'' என்ற முடிவுக்கு வந்தார், வாலி. தாயாருடன் மும்பை சென்றார்.

    மும்பையில் சில காலம் இருந்து விட்டு மீண்டும் சென்னை திரும்பினார். தியாகராய நகரில் சிவா- விஷ்ணு கோவில் அருகே இருந்த கிளப்ஹவுசில் தங்கினார். அங்கு 20 அறைகள் இருந்தன. பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள் அங்கே தங்கியிருந்தனர். ஒருவருக்கு வாடகை 15 ரூபாய்.

    அங்கே தங்கியிருந்தவர்களில் பெரும்பாலோர் பிரம்மச்சாரிகள். நாகேசும் அப்போது அங்கு தங்கியிருந்தார். ஏற்கனவே அறிமுகமாகியிருந்த நாகேசும், வாலியும் நெருங்கிய நண்பர்கள் ஆனார்கள்.

    அமெரிக்க தூதர் அலுவலகத்தில் அதிகாரியாகப் பணியாற்றிக் கொண்டிருந்த வெங்கடராமன் என்ற இளைஞரும், அங்கு தங்கியிருந்தார். அவரும் வாலிக்கு நண்பரானார்.

    இவர்தான் பிற்காலத்தில் "வெண்ணிற ஆடை''யில் கதாநாயகனாக அறிமுகமாகி, ஏறத்தாழ 20 ஆண்டு காலம் கதாநாயகனாகவும், வில்லனாகவும், குணச்சித்திர வேடங்களிலும் நடித்த ஸ்ரீகாந்த்.

    கிளப் ஹவுசில் தங்கியிருந்தவர்கள் ஒவ்வொருவராக திரை உலகில் நுழைந்தார்கள். வாலிக்குமë நல்ல காலம் பிறந்தது.

    ஒரு நாள் காலை, முன்பின் தெரியாத ஒருவர் வாலியைத் தேடி வந்தார். "நாளை காலை பத்து மணிக்கு நீங்கள் `அரசு பிக்சர்ஸ்' அலுவலகத்துக்கு வாருங்கள். அங்கு டைரக்டர் ப.நீலகண்டனை சந்தியுங்கள். அவர் படத்துக்கு பாட்டு எழுத வேண்டும்'' என்றார், அவர்.

    வாலிக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை. நாகேஷ் வந்ததும், இந்தத் தகவலைச் சொன்னார். "அரசு பிக்சர்ஸ் ஆபீஸ், நுங்கம்பாக்கத்திலே இருக்குடா. எனக்குத் தெரியும். நானும் உன் கூட வர்றேன்'' என்றார், நாகேஷ் மகிழ்ச்சி பொங்க.

    மறுநாள் வாலியும், நாகேசும் `அரசு பிக்சர்ஸ்' அலுவலகத்துக்கு சென்றனர். திரை உலகில் நாகேஷ் புகழ் பெறாத காலம் அது.

    ப.நீலகண்டன் அறைக்குள் இருவரும் நுழைந்தனர். "உங்கள் இருவரில் யார் வாலி?'' என்று கேட்டார், ப.நீலகண்டன்.

    "நான்தான் சார்! இவர் என் நண்பர். நாகேஷ்னு பேரு. படங்களில் எல்லாம் நடித்துக்கொண்டு இருக்கிறார்'' என்று பவ்யமாக பதில் அளித்தார், வாலி.

    "பாட்டு நீங்கதானே எழுதப்போறீங்க?''

    "ஆமாம் சார்!''

    "அப்ப, அவரை வெளியே இருக்கச் சொல்லுங்க!''

    ப.நீலகண்டன் இவ்வாறு கூற, நாகேஷ் அந்த அறையை விட்டு வெளியேறினார்.

    வாலியைப் பற்றிய விவரங்களைக் கேட்டறிந்தார், நீலகண்டன். பின்னர் துணை இயக்குனரை அழைத்து, "பாடல் காட்சி பற்றிய விவரங்களை இவருக்கு விளக்குங்கள்'' என்று கூறிவிட்டு, "நீங்கள் நாளை பாடலின் பல்லவிகளை எழுதிக்கொண்டு வாருங்கள்'' என்று வாலியிடம் தெரிவித்தார்.

    வாலி, நாகேசுடன் கிளப் ஹவுஸ் திரும்பினார்.

    மகிழ்ச்சி மிகுதியால், இரவெல்லாம் வாலிக்கு தூக்கம் இல்லை.

    காரணம் அவர் பாடல் எழுதும் அந்த காதல் காட்சியில் நடிக்கப்போகிறவர், எம்.ஜி.ஆர்! படத்தின் பெயர் "நல்லவன் வாழ்வான்.'' எம்.ஜி.ஆருடன் நடிக்கப் போகிறவர் ராஜசுலோசனா.

    `எம்.ஜி.ஆர். படத்துக்கு பாட்டெழுதப் போகிறோம்' என்ற மகிழ்ச்சியில் மனம் பூரிக்க, விடிய விடிய விழித்திருந்து 50 பாடல்களுக்கான பல்லவிகளை எழுதிக் குவித்தார், வாலி!
    பெரிய போராட்டத்துக்குப் பின், சினிமாவில் பாட்டு எழுதும் வாய்ப்பு வாலிக்கு கிடைத்தது. அந்தப் பாடலை சுசீலா பாடினார்.
    பெரிய போராட்டத்துக்குப் பின், சினிமாவில் பாட்டு எழுதும் வாய்ப்பு வாலிக்கு கிடைத்தது. அந்தப் பாடலை சுசீலா பாடினார்.

    மிஸ் மாலினி, ஏழைபடும்பாடு, மகாத்மா உதங்கர் முதலிய படங்களில் நடித்தவர், வி.கோபாலகிருஷ்ணன். படங்களில் நடனம் மட்டும் ஆடிக்கொண்டிருந்த லலிதா -பத்மினி சகோதரிகள், முதன் முதலில் கதாபாத்திரம் ஏற்று நடித்த "ஏழைபடும்பாடு'' படத்தில், இவர்தான் பத்மினிக்கு ஜோடி.

    கடிதப் போக்குவரத்து மூலம் கோபியின் நட்பை பெற்ற வாலி, ஒருமுறை ரேடியோ நாடகத்தில் நடிக்க திருச்சிக்கு வந்த கோபியிடம், "நான் சென்னைக்கு வந்து சினிமாவில் பாட்டு எழுத முயற்சிக்கலாம் என்று நினைக்கிறேன்'' என்றார்.

    "வாங்க, வாலி! நான் இருக்கிறேன். எதற்கும் கவலைப்பட வேண்டாம்'' என்று ஊக்கம் அளித்தார், கோபி.

    1958 டிசம்பர் முதல் வாரத்தில், வாலி சென்னைக்கு வந்தார். திருவல்லிக்கேணியில் இருந்த ஸ்ரீரங்கத்து நண்பர் செல்லப்பாவின் அறையில் தங்கினார்.

    அப்போது தியாகராய நகரில், சின்னையாப்பிள்ளை ரோட்டில் உள்ள வீட்டில் வி.கோபாலகிருஷ்ணன் வசித்து வந்தார். தன்னைத்தேடி வருவோருக்கு, முடிந்த உதவிகளை எல்லாம் செய்பவர் அவர்.

    தினமும் திருவல்லிக்கேணியில் பஸ் பிடித்து, தி.நகர் வாணி மஹாலில் இறங்கி கோபாலகிருஷ்ணன் வீட்டுக்குப் போவார், வாலி. தன்னைப் பார்க்க வரும் திரை உலகப் பிரமுகர்களிடம் வாலியை கோபி அறிமுகப்படுத்துவார்.

    அதுமட்டும் அல்ல. தன்னுடைய ஸ்கூட்டரின் பின்னால் வாலியை உட்கார வைத்துக்கொண்டு தினமும் யாராவது பட அதிபர்கள், டைரக்டர்கள், இசை அமைப்பாளர்களிடம் அழைத்துச் சென்று அறிமுகப்படுத்துவார். "இவர் நல்ல கவிஞர். சினிமாவுக்கு பாட்டெழுத வாய்ப்பு தந்தால், பிரமாதமாக எழுதுவார்'' என்று கூறி, சான்ஸ் கேட்பார்.

    வாலி, தன்னுடைய பாடல்கள் சிலவற்றை ஒரு நோட்டில் எழுதி வைத்திருப்பார். சிலர் அந்த நோட்டுப் புத்தகத்தை வாங்கி படித்துப் பார்த்துவிட்டு, புன்னகை புரிவார்கள். சிலர் படித்துப் பார்க்காமலேயே புன்னகை செய்வார்கள்.

    இந்த புன்னகைகளால் வாலிக்கு எந்த பயனும் ஏற்படுவதில்லை.

    அந்தக் காலக்கட்டத்தில், "பாதை தெரியுது பார்'' என்ற படத்தை, குமரி பிலிம்சார் எடுத்துக்கொண்டு இருந்தனர். இசை அமைப்பாளர் எம்.பி.சீனிவாசன்,, பொதுவுடமைக் கவிஞர் கே.சி.எஸ்.அருணாசலம் எழுதிய "சின்னச் சின்ன மூக்குத்தியாம்'' என்ற பாடலை ஒத்திகை பார்த்துக்கொண்டிருந்தார்.

    எம்.பி.சீனிவாசனிடம் வாலியை அறிமுகப்படுத்திய கோபாலகிருஷ்ணன், பாதை தெரியுது பார் படத்தில் ஒரு வாய்ப்பு வழங்குமாறு கேட்டுக்கொண்டார்.

    "கோபி! கே.சி.எஸ்.அருணாசலம், ஜெயகாந்தன், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ஆகிய மூன்று பேரும்தான் இந்தப் படத்துக்கு பாட்டு எழுதுகிறார்கள். புதிதாக வேறு பாட்டை பயன்படுத்தக்கூடிய கட்டம் எதுவும் படத்தில் இல்லை. ஆனாலும், பொதுவுடமை கருத்தையும், சமூக விழிப்புணர்வையும் எடுத்துக் காட்டக்கூடிய பாட்டு எதுவும் இருந்தால், "டைட்டில் சாங்'' ஆகப் பயன்படுத்த முயற்சி செய்கிறேன்'' என்றார், சீனிவாசன்.

    உடனே வாலி, தான் எழுதி வைத்திருந்த பாட்டை, அதற்கான மெட்டுடன் பாடிக்காட்டினார்.

    பாட்டை கேட்ட சீனிவாசன், "மிஸ்டர் வாலி! இப்போது நீங்க பாடிக்காண்பித்த பாட்டு நன்றாக இல்லை என்று நான் சொல்லமாட்டேன். ஆனால், என்னை பெரிதாக கவரவில்லை. சாரி!'' என்று கூறிவிட்டு, உள்ளே போய்விட்டார்.

    "கவலைப்படாதீங்க, வாலி! வேறு இடத்தில் முயற்சி செய்யலாம்'' என்று ஆறுதலாகக் கூறிவிட்டு, வாலியை வீட்டுக்கு அழைத்துச் சென்றார், கோபி.

    (1958-ல் எம்.பி.சீனிவாசனால், நிராகரிக்கப்பட்ட பாடல், 1967-ல் எம்.ஜி.ஆர். படத்தில் இடம் பெற்று, மகத்தான வெற்றி பெற்று பட்டி தொட்டி எல்லாம் எதிரொலித்தது. அதுதான், "கொடுத்ததெல்லாம் கொடுத்தான், அவன் யாருக்காகக் கொடுத்தான்?'' என்ற பாடல். இந்தப் பாடல் இடம் பெற்ற படம் "படகோட்டி.'')

    "மெல்லிசை மன்னன்'' எம்.எஸ்.விஸ்வநாதன் இசை அமைப்பில், ஏராளமான பாடல்கள் இயற்றி இருக்கிறார், வாலி.

    ஆனால், முதன் முதலாக இவர்கள் சந்தித்துக் கொண்டபோது, வாலியின் பாடல் விஸ்வநாதனைக் கவரவில்லை.

    அதுபற்றி, வாலி எழுதியிருப்பதாவது:-

    "ஒருநாள், அதிகாலை என்னை ஒரு இசையமைப்பாளர் வீட்டுக்கு கோபி தன் ஸ்கூட்டரில் அழைத்துச் சென்றார். எனக்கு அந்த இசையமைப்பாளரிடம் ஏற்கனவே அளவு கடந்த அபிமானமும், மரியாதையும் உண்டு. அவர் மூலம் எனக்கு எப்படியும் படத்துறையில் பாட்டெழுதும் ஒரு வாய்ப்பைப் பெற்று தந்து விடுவது என்று கங்கணம் கட்டிக்கொண்டு அவர் வீட்டுக்கு என்னைக் கூட்டிப் போனார், கோபி.

    அந்த இசையமைப்பாளருக்கு கோபியிடம் மிகுந்த பிரியமுண்டு. கோபியை ஆரத்தழுவி அவர் வரவேற்றார். என்னை அவரிடம் கோபி அறிமுகப்படுத்திவிட்டு, என் ஊர், என் கல்வி இவை பற்றியெல்லாம் ஒரு சிறிய முன்னுரையை வழங்கிவிட்டு, என் பாட்டு நோட்டை என் கையிலிருந்து வாங்கி, அந்த இசையமைப்பாளரிடம் கொடுத்தார்.

    அவர் அதை ஆர்வத்தோடு, வாங்கி, சில பக்கங்களைப் புரட்டிப் பார்த்து, நின்று நிதானமாகப் படித்தார். பிறகு, என் பாட்டு நோட்டை என்னிடம் திருப்பித் தந்துவிட்டு, காபி வரவழைத்து எங்கள் இருவருக்கும் வழங்கினார்.

    பிறகு, கோபியை தனியாக அழைத்து அந்த இசையமைப்பாளர் சன்னமான குரலில் காதோடு காதாக ஏதோ சொன்னார்.

    "வாங்க வாலி போகலாம்...'' என்று கோபி என்னை அழைத்து வந்துவிட்டார்.

    ஸ்கூட்டரில் போகும்போது என்னைப் பற்றி அந்த இசையமைப்பாளர் என்ன சொன்னார் என்று கோபியைக் கேட்டேன். அவர் சொன்னதை கோபி அப்படியே என்னிடம் சொன்னார்:

    "கோபி, இவர் எழுதியிருக்கிற பாட்டெல்லாம் ரொம்ப சுமாரா இருக்கு. சினிமாவில் முன்னுக்கு வர்றதுக்கான வாய்ப்பே இவருக்கு இருக்கிற மாதிரி தெரியவில்லை... பாவம்! மெட்ராசில் இவர் இருந்து கஷ்டப்படறதை விட, படிச்சவரா இருக்கிறதனாலே, சினிமாவுக்கு முழுக்கு போட்டுவிட்டு ஏதாவது வேலைக்குப் போகச் சொல்லுங்க...''

    அந்த இசையமைப்பாளர் சொன்னதை ஒருவரி விடாமல் கோபி என்னிடம் சொல்லிவிட்டு மவுனமாக ஸ்கூட்டரை ஓட்டினார்.

    அந்த இசையமைப்பாளர் வேறு யாருமல்ல. பிற்காலத்தில் என் முன்னேற்றத்திற்கு முழு முதற்காரணமாக விளங்கிய மெல்லிசை மன்னர் எமë.எஸ்.விஸ்வநாதன் அவர்கள்தான், அன்று என்னை வேறு வேலை தேடிப்போவது உசிதம் என்று தன் மனதில் பட்டதை வெளிப்படையாகக் கோபியிடம் சொன்னவர்.

    நான் ஸ்ரீரங்கம் திரும்பிவிடலாம் என்ற முடிவுக்கே வந்துவிட்டேன். ஓரிரு நாளில் மூட்டை முடிச்சோடு நான் ஊருக்குத் திரும்ப இருந்தபோதுதான், படத்தில் முதன் முதலாகப் பாட்டு எழுதும் வாய்ப்பு என்னைத் தேடி வந்தது.

    இவ்வாறு வாலி குறிப்பிட்டுள்ளார்.

    கர்நாடகத்தைச் சேர்ந்த பட அதிபரும், நடிகருமான கெம்பராஜ், "நளதமயந்தி'', "கற்கோட்டை'', "ராஜவிக்கிரமா'' ஆகிய படங்களைத் தயாரித்துவிட்டு, 1958-ல் "அழகர் மலைக்கள்ளன்'' என்ற படத்தைத் தயாரித்தார்.

    ஒருநாள் காலை, கோபாலகிருஷ்ணன் காரில் வாலியை அவரிடம் அழைத்துச் சென்றார். தெலுங்கு இசை அமைப்பாளர் கோபாலம், ஆர்மோனிய பெட்டியுடன் அமர்ந்திருந்தார்.

    வாலி அவருக்கு வணக்கம் செலுத்தினார்.

    பாட்டுக்கான மெட்டை ஆர்மோனியத்தில் இசை அமைப்பாளர் வாசித்துக்காட்டினார். "ஒரு தாய் பாடும் தாலாட்டுப்பாட்டு இது'' என்று வாலியிடம், காட்சியை விளக்கினார்கள்.

    உடனே வாலி, காகிதத்தை எடுத்தார். "நிலவும், தாரையும் நீயம்மா; உலகம் ஒரு நாள் உனதம்மா'' என்ற பல்லவியை எழுதிக் காட்டினார்.

    அதைப் பார்த்துவிட்டு, இசை அமைப்பாளர் அசந்து போனார். இசையுடன் வார்த்தைகள் வெகுவாகப் பொருந்தின.

    முக்கால் மணி நேரத்தில் முழுப்பாடலையும் எழுதி முடித்தார், வாலி. பட அதிபர் கெம்பராஜ் வந்து, பாட்டைக்கேட்டார். அவருக்கு ரொம்பவும் பிடித்துவிட்டது. வாலியைத் தட்டிக்கொடுத்தார்.

    "நாளை ரிக்கார்டிங். கார் அனுப்புகிறேன். வந்துவிடுங்கள்'' என்று சொன்னார். மகிழ்ந்து போனார், வாலி.

    மறுநாள் கோல்டன் ஸ்டூடியோவில் சுசீலா பாட, வாலியின் முதல் பாடல் ஒலிப்பதிவு ஆகியது.
    எம்.ஜி.ஆரின் புகழ் பெற்ற பாடல்கள் பலவற்றை எழுதியவர்; ஓவியராக இருந்து நாடக ஆசிரியரானவர்; நாடகத்திலிருந்து சினிமா உலகுக்கு வந்தவர் அவர்தான் கவிஞர் வாலி.
    எம்.ஜி.ஆரின் புகழ் பெற்ற பாடல்கள் பலவற்றை எழுதியவர்; ஓவியராக இருந்து நாடக ஆசிரியரானவர்; நாடகத்திலிருந்து சினிமா உலகுக்கு வந்தவர் அவர்தான் கவிஞர் வாலி.

    அவர் சினிமா உலகில் எளிதாகப் புகழ் பெற்று விடவில்லை. எதிர்நீச்சல் போட்டு வெற்றி பெற்றார்.

    வாலியின் சொந்த ஊர் ஸ்ரீரங்கம். தந்தை பெயர் சீனிவாச அய்யங்கார். தாயார் பொன்னம்மாள். வாலியின் இயற்பெயர் ரங்கராஜன். சிறு வயதில் இருந்தே ஓவியம் வரைவதில் ஆர்வம் கொண்டிருந்தார். பிரபல ஓவியர் `மாலி' போல் புகழ் பெறவேண்டும் என்று ஆசை.

    இதனால், பாபு என்ற அவருடைய பள்ளித் தோழர், "வாலி'' என்ற பெயரை சூட்டினார். இதை அறிந்த அவருடைய ஆசிரியர், "உனக்கு வால் இல்லையேடா! அப்புறம் எப்படி வாலின்னு பெயர் வெச்சுக்கிட்டே?'' என்று கேலி செய்தார்.

    உடனே ஒரு துண்டு காகிதத்தை எடுத்து, "வாலில்லை என்பதால் வாலியாகக்கூடாதா? காலில்லை என்பதால் கடிகாரம் ஓடாதா?'' என்று ஒரு கவிதையை எழுதி, ஆசிரியரிடமே நீட்டினார்.

    அதைப் படித்த ஆசிரியர், "பரவாயில்லையே! கவிதை கூட நன்றாக எழுதுகிறாயே!'' என்று முதுகில் தட்டிக்கொடுத்தார்.

    ஓவியம் வரைவதுடன் கதை, கட்டுரை, கவிதை எழுதுவதிலும் `வாலி' ஆர்வம் கொண்டிருந்தார். பத்திரிகைகளில் வரும் கதைகளை எல்லாம் விழுந்து விழுந்து படிப்பார். பிரபல மராத்தி எழுத்தாளர் காண்டேகர் எழுதிய கதைகள் அவருக்கு மனப்பாடம்.

    நண்பர்களுடன் சேர்ந்து "நேதாஜி'' என்ற கையெழுத்துப் பத்திரிகை நடத்தினார். ஸ்ரீரங்கத்துக்கு வந்திருந்த எழுத்தாளர் "கல்கி'', அந்த கையெழுத்துப் பத்திரிகையைப் பார்த்து பாராட்டியதுடன், பத்திரிகைக்கு கதை எழுதும்படி கூறினார்.

    இந்தக் காலக்கட்டத்தில், ஸ்ரீரங்கத்தில் ஏ.எஸ்.ராகவன், ஸ்ரீரங்கம் ராமகிருஷ்ணன், ஸ்ரீரங்கம் நரசிம்மன், பிலஹரி, சுஜாதா என்று பல எழுத்தாளர்கள் வசித்தார்கள். இவர்கள் எல்லாம் வாலிக்கு நண்பர்கள் ஆனார்கள்.

    ஒரு நாள் ஸ்ரீரங்கம் ஆயிரங்கால் மண்டபத்தில், பிரபல ஓவியர் "சில்பி'' ஓவியங்கள் வரைந்து கொண்டிருப்பதைப் பார்த்தார். தான் வரைந்த ஓவியங்களை அவரிடம் கொண்டு போய்க் காண்பித்தார். "கும்பகோணத்திலும், சென்னையிலும் ஓவியக் கல்லூரிகள் இருக்கின்றன. அங்கு சேர்ந்து ஓவியம் பயின்றால், சிறந்த ஓவியனாக வரலாம்'' என்று சில்பி ஆலோசனை கூறினார்.

    இந்த சமயத்தில், திருச்சியில் புகழ் பெற்ற கவிஞராக விளங்கிய திரிலோக சீதாராம், மகாகவி பாரதியாரின் மகள் தங்கம்மாள் பாரதியுடன் வாலியின் வீட்டுக்கு வந்தார்.

    வாலி வரைந்த பாரதியாரின் படம், சுவரில் மாட்டப்பட்டிருந்தது. அதைப் பார்த்த தங்கம்மாள் பாரதி, "அப்பா மாதிரியே இருக்கு. நன்றாக வரைந்திருக்கே'' என்று வாலியைப் பாராட்டியதுடன், "பையனை படம் வரையற துறையிலேயே விடுங்க. நன்றாக முன்னுக்கு வருவான்'' என்று வாலியின் பெற்றோரிடம் கூறினார்.

    கடன் வாங்கியாவது பையனை சென்னைக்கு அனுப்பி, ஓவியம் வரைய செய்வது என்ற முடிவுக்கு வந்தார், வாலியின் தந்தை. அதன்படி, சென்னைக்கு ரெயில் ஏறினார், வாலி. எழும்பூரில் உள்ள ஓவியக் கல்லூரியில் சேர்ந்தார்.

    சிந்தாதிரிப்பேட்டையில், ஒரு நண்பனுடன் தங்கிக்கொண்டு ஓவியக் கல்லூரிக்கு போய் வந்தார்.

    ஓவியக் கல்லூரியில் ஏற்பட்ட அனுபவம் பற்றி வாலி கூறியிருப்பதாவது:-

    "ஓவியக் கல்லூரியில் என்னுடைய வகுப்பில் மாடலிங் என்ற பெயரில், ஆண், பெண்கள் ஆடாது, அசையாது சிலை போல் நிற்பது உண்டு.

    `மாடலிங்'காக முதன் முதலில் சந்தித்தது, இருபத்தைந்து வயதிற்குள் இளம் பருவத்தை சற்றே கடந்து நின்ற ஒரு பெண்ணைத்தான். அந்தப் பெண்ணைப் பார்த்து, அப்படியே வண்ண ஓவியமாக வரையவேண்டும்.

    அந்தப்பெண் எங்களுக்கு முன்னால் வந்து நிற்க, எந்த கோணத்தில் எப்படி `போஸ்' தரவேண்டும் என்பதை ஆசிரியர் சொல்லிக் கொடுத்தார்.

    நான், என் மேஜைக்குக் கீழே குனிந்து, ஓவியம் வரைவதற்காக வைத்திருந்த உபகரணங்களை எடுத்து மேஜை மíது வைத்து விட்டு, `மாடலிங்'காக நின்ற அந்த பெண்ணை நிமிர்ந்து பார்த்தேன்.

    ஒரு விநாடி எனக்குத் தலை சுற்றியது. ரத்தமே உறைந்து விடுவது போல், உடலெங்கும் ஒரு சிலிர்ப்பு பரவியது. என் கை கால்கள் வெடவெடத்தன.

    காரணம், அந்தப் பெண் முழு நிர்வாணமாக நின்று கொண்டிருந்தாள்! நிர்வாணமாகப் பெண்களை வரைவது ஓவியத்தில் ஒரு பாடமாகும்.

    ஓவியக் கல்லூரியில் நான் பயின்றது "கமர்ஷியல் ஆர்ட்.'' ஓராண்டுதான் நான் படித்தேன். பிறகு அந்தப் படிப்புக்கே முற்றுப்புள்ளி வைத்து விட்டு, ஏதோ ஓர் உந்துதலால் ஸ்ரீரங்கம் திரும்பிவிட்டேன்.

    ஸ்ரீரங்கத்தில், "வாலி பப்ளிசிட்டீஸ்'' என்று சொந்தமாக ஒரு விளம்பர நிறுவனத்தை நிறுவினேன். அதுவும், வள்ளலார் கதை போல ஆயிற்று. "கடை விரித்தேன்; கொள்வார் இல்லை.''

    எதிலும் நான் உருப்படாமல் போய் விடுவேனோ என்று என் தாயும், தந்தையும் என் எதிர்காலம் பற்றி மலையளவு வருத்தத்தை மனதில் தேக்கி வைத்திருந்தனர்.''

    இவ்வாறு குறிப்பிட்டுள்ளார், வாலி.
    ×