என் மலர்tooltip icon

    சினி வரலாறு

    10 வயதிலேயே கேமரா முன் நின்ற ஸ்ரீலதா, பாரதிராஜாவால் "ரோஜா'' என்று பெயர் சூட்டப்பட்டு, நட்சத்திர நடிகையானார்.
    10 வயதிலேயே கேமரா முன் நின்ற ஸ்ரீலதா, பாரதிராஜாவால் "ரோஜா'' என்று பெயர் சூட்டப்பட்டு, நட்சத்திர நடிகையானார்.

    தமிழ் சினிமாவில் செம்பருத்தியாக மலர்ந்தவர் நடிகை ரோஜா.

    1991-ம் ஆண்டில் டைரக்டர் ஆர்.கே. செல்வமணி இயக்கிய "செம்பருத்தி'' படத்தில் அறிமுகமான ரோஜா, தொடர்ந்து 15 ஆண்டுகள் சினிமாவில் நிலைத்து நின்றவர். தமிழிலும், தெலுங்கிலுமாக 140-க்கு மேற்பட்ட படங்களில் கதாநாயகியாக நடித்தவர்.

    திருப்பதியைச் சேர்ந்த ஸ்ரீலதா தான் சினிமாவுக்கு வந்த பிறகு `ரோஜா'வாகியிருக்கிறார். அப்பா ஒய்.என். ரெட்டி. அம்மா லலிதா.

    உடன் பிறந்தோர் 2 அண்ணன்கள் மட்டும். மூத்த அண்ணன் குமாரசாமி ரெட்டி. அடுத்த அண்ணன் ராம்பிரசாத் ரெட்டி.

    ஒரே பெண் என்பதால் செல்லம் அதிகம் கிடைக்கும் என்பார்கள். ரோஜாவை பொறுத்தவரையில் ரொம்ப ரொம்ப செல்லம். அதற்குக் காரணம் ரோஜாவே சொல்கிறார்:

    "அப்பாவுக்கு அக்கா, தங்கை யாரும் கிடையாது. தாத்தாவுக்கும் அக்கா -தங்கை கிடையாது. இதனால் குடும்பத்தில் பிறந்த முதல் பெண் குழந்தை என்பதால் ஆளாளுக்கு என்னை கொண்டாடினார்கள். பாசம் கொட்டினார்கள். ஆனாலும் நான் பையன் மாதிரிதான் வளர்ந்தேன். எப்போதும் யாரையாவது சீண்டியபடி ஜாலி ஜாலி ஜாலிதான். தாத்தா ஒருத்தருக்கு மட்டும்தான் கொஞ்சம் பயப்படுவேன்.'' சொல்லிச் சிரிக்கிறார் ரோஜா.

    பள்ளிப் பருவத்தில் கூட ரோஜாவுக்குள் நடிப்பு வாசனை வீசவில்லை. நடிகையாக வேண்டும் என்று கனவு கூட கண்டதில்லை. ஆனால், நம்பர் ஒன் சினிமா ரசிகையாக இருந்திருக்கிறார். அதுபற்றி ரோஜா கூறுகிறார்:

    "பள்ளி நாட்களில் எல்லாம் ஒரு சினிமா விடமாட்டேன். ஸ்கூலுக்கு `கட்' அடித்து விட்டு தோழிகளுடன் போய் விடுவேன். ஆனால் அப்போதுகூட சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசை எனக்குள் துளிர்த்ததே இல்லை.''

    இப்படிச் சொல்லும் ரோஜாவுக்கு `நடிகை அந்தஸ்து' எப்போதுதான் வந்தது?

    "அப்பா, சாரதி ஸ்டூடியோவில் சவுண்டு என்ஜினீயராக இருந்தார். சினிமா இயக்கும் ஆசை அவருக்கு இருந்தது. இதனால் வேலையை விட்டு விட்டு முதலில் `கொத்தடி பொம்மா பூர்ணமா' என்ற டாகுமெண்டரி படத்தை இயக்கினார்.

    இதில் தெலுங்கில் பிரபல இயக்குனராக இருந்த கோடி.ராமகிருஷ்ணாவின் மனைவியை நாயகியாக நடிக்க வைத்தார். அவரது மகளாக நடிக்க 10 வயதுப்பெண் தேவைப்பட்டபோது அப்பாவின் பார்வை என் மீது. அப்போது நான் ஐந்தாவது படித்துக் கொண்டிருந்தேன். மாலையில் வீட்டுக்கு வந்த என்னிடம், "நாளை நீ பள்ளிக்குப் போகவேண்டாம்'' என்றார், அப்பா.

    "ஏன்?'' என்று கேட்டேன்.

    "நான் ஒரு டாகுமெண்டரி படம் இயக்குகிறேன் அல்லவா? அதில் உன் வயதுப்பெண் நடிக்க தேவைப்படுகிறாள். அது ஏன் நீயாக இருக்கக்கூடாது?'' என்று கேட்டார் அப்பா.

    "நடிப்பதா? நானா? எனக்கு என்ன தெரியும் டாடி?'' என்று திருப்பிக் கேட்டேன்.

    "இதுவும் பாடம் மாதிரிதான். நான் சொல்லித் தருவதை அப்படியே செய்தால் போதும்'' என்றார் அப்பா. படப்பிடிப்பில் அப்பா சொன்னதைச் செய்தேன். அவ்வளவுதான். அத்தோடு நடித்ததைக்கூட மறந்து மறுபடியும் மாணவியாகிவிட்டேன்.''

    இவ்வாறு கூறினார், ரோஜா.

    ரோஜாவுக்கு சினிமா வாய்ப்பு மறுபடியும் தேடி வந்தது கல்லூரிப் பருவத்தில்தான். திருப்பதியில் உள்ள ஸ்ரீபத்மாவதி பெண்கள் கல்லூரியில் முதலாண்டு மாணவியாக இருந்த நேரத்தில் `நடிப்பு' தேடிவந்து அழைத்திருக்கிறது. அதுபற்றி ரோஜா கூறுகிறார்:

    "அப்பாவின் நண்பர் எங்கள் கல்லூரியில் நடந்த விழா ஒன்றுக்கு வந்திருந்தார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு என்னைப்பார்த்த அவருக்குள் என்னை நடிக்க வைக்கும் எண்ணம் வெளிப்பட்டிருக்கிறது. இதை அவர் எங்கள் வீட்டில் சொன்னபோது அம்மா, அண்ணன்கள் பயங்கர எதிர்ப்பு. அப்பாதான், "நடித்தால்தான் என்ன?'' என்று கேட்டு, நடிப்பதற்கு கிரீன் சிக்னல் கொடுத்தார்.

    அப்பாவின் நண்பர் என்னை நிறைய படங்கள் எடுத்தார். அப்போது எனக்கு சிரிப்பு வந்தது. "ஏன் சிரிக்கிறாய்?'' என்று கேட்டார். நான் "ஒன்றுமில்லை'' என்று கூறி சமாளித்து விட்டேன். ஆனால் அந்தப் படங்களில் ஒன்று, ஒரு தெலுங்கு சினிமா பத்திரிகையின் அட்டையில் வர, அதுதான் தமிழில் என்னை நாயகியாக்கியது.

    அதுகூட உடனடியாக இல்லை. தெலுங்குப் படம் எடுக்க முன்னேற்பாடுகளை செய்த அப்பாவின் நண்பர், தமிழில் பிரபலமாக இருந்த டைரக்டர் பாரதிராஜாவுக்கும் நண்பராக இருந்திருக்கிறார். அவரை தனது படப்பிடிப்புக்கு அழைத்த அப்பாவின் நண்பர் எனக்கு ஒரு சினிமா பெயரை சூட்டும்படி பாரதிராஜாவை கேட்டிருக்கிறார். என்னைப் பார்த்தது ஒரு நொடிதான். உடனே, "ரோஜா'' என்று பெயர் வைத்துவிட்டார்.

    எனக்குப் பெயர் வைத்ததையே பாரதிராஜா மறந்து விட்டார். இந்த நிகழ்ச்சியை பொறுத்தவரையில் அவருக்கு சம்பவம். எனக்கு சரித்திரம் அல்லவா! பின்னாளில் அவரது டைரக்ஷனில் தமிழ்ச்செல்வன் படத்தில் நடித்தபோது நான் இந்த பெயர் சூட்டிய சம்பவத்தை சொன்னேன். "அடடா! எனக்கு நினைவில்லையே?'' என்று ஆச்சரியப்பட்டார் அவர்.

    இவ்வாறு ரோஜா கூறினார்.

    இசை உலகில், இளையராஜாவின் வாரிசுகளாக கார்த்திக்ராஜா, பவதாரிணி, யுவன்சங்கர்ராஜா ஆகியோர் திகழ்கிறார்கள்.
    இசை உலகில், இளையராஜாவின் வாரிசுகளாக கார்த்திக்ராஜா, பவதாரிணி, யுவன்சங்கர்ராஜா ஆகியோர் திகழ்கிறார்கள்.

    இளையராஜாவின் குடும்பத்தில் அவரது தம்பி கங்கை அமரனும் புகழ் பெற்ற இசை அமைப்பாளராக இருக்கிறார்.

    இளையராஜாவின் வாரிசுகள் கார்த்திக்ராஜா, பவதாரிணி, யுவன்சங்கர்ராஜா மூவருமே அப்பா வழியில் இசையமைப்பாளர்களாகி

    விட்டார்கள்.பவதாரிணி பாடகியாகவும், புகழ் பெற்றுள்ளார். "பாரதி'' திரைப்படத்தில் "மயில் போல பொண்ணு ஒண்ணு'' என்ற பாடலைப் பாடி தேசிய விருது பெற்றார். இந்தப் பாடலுக்கு இசை அமைத்தவர் இளையராஜா. பாடலை எழுதியவர் மு.மேத்தா.

    இளையராஜாவின் இசைக்குழுவில், 11 வயதில் கீ போர்டு வாசிப்பவராக சேர்ந்த ஏ.ஆர்.ரகுமான், இன்று உலகப்புகழ் பெற்ற இசை அமைப்பாளராக விளங்குகிறார்.

    தன் இசைக்குழுவில், ஏ.ஆர்.ரகுமான் எப்படி சேர்ந்தார் என்பது பற்றி இளையராஜா கூறியதாவது:-

    "மூடுபனி படத்துக்கு நான் இசை அமைத்துக் கொண்டிருந்த நேரத்தில், கீபோர்டு வாசிப்பவர், குடிபோதையில் வந்திருப்பது தெரிந்தது. உடனே அவரை வெளியே அனுப்பி விட்டேன். `கீபோர்டு' வாசிக்கத் தெரிந்த வேறொருவர் தேவைப்பட்டபோது உடனடியாக யாரும் கிடைக்கவில்லை. அப்போது என் குழுவில் இருந்த ஒருவர் என்னிடம் வந்து, "எனக்குத் தெரிந்த ஒரு பையன் இருக்கிறான். அவன் ஓரளவு கீ போர்டு வாசிப்பான். அழைத்து வரட்டுமா?'' என்று கேட்டார். "இதென்ன கேள்வி? உடனே அழைத்து வாருங்கள்'' என்றேன்.

    அடுத்த அரை மணி நேரத்தில் அந்த சிறுவனை அழைத்து வந்தார்கள். நான் அந்தச் சிறுவனிடம் கீபோர்டில் வாசிக்க வேண்டிய இசைக் குறிப்பை கொடுத்தேன். அதை வாசிப்பதில் அவனுக்கு கொஞ்சம் சிரமம் ஏற்பட்டபோது நானே அவன் கையைப் பிடித்து வாசிக்கச் சொல்லிக் கொடுத்தேன். அந்தச் சிறுவனும் புரிந்து கொண்டு நான் எதிர்பார்த்த மாதிரி வாசித்து விட்டான். பாடலும் நன்றாக அமைந்தது.

    அந்த சிறுவன் வேறு யாருமல்ல, இசையமைப்பாளர் சேகரின் மகன் திலீப்தான் அவர். இந்த திலீப்தான் பின்னாளில் ஏ.ஆர்.ரகுமானாக இசை உலகுக்கு வந்தார்.''

    இவ்வாறு இளையராஜா கூறினார்.

    சித்ரா, ஜென்சி, சுஜாதா, மகதி உள்பட பல பின்னணி பாடகிகளை அறிமுகப்படுத்திய பெருமை இளையராஜாவுக்கு உண்டு.

    இளையராஜா இசை அமைத்த "நிழல்கள்'' படத்தில், "பொன்மாலைப் பொழுது'' பாட்டை எழுதி, திரை உலகில் அடியெடுத்து வைத்தார், கவிஞர் வைரமுத்து. பாரதிராஜா  இயக்கிய இந்தப்படம் 1980-ல் வெளிவந்தது.

    இசையமைத்துப் பாடுவதோடு மட்டுமின்றி இலக்கியத்திலும் ஆர்வம் கொண்டவர், இளையராஜா.

    "சங்கீதக் கனவுகள்'', "வெட்ட வெளிதனில் கொட்டிக் கிடக்குது'', "பால் நிலா பாதை'', "துளிக்கடல்'', "ஞான கங்கா'', "வெண்பா நன்னூல் மாலை'', "பள்ளியெழுச்சி பாவை பாடல்கள்'' முதலான புத்தகங்களை எழுதியுள்ளார்.

    ஆதிசங்கரரின் ஞான நூலை சமஸ்கிருதத்தில் ரமண மகரிஷி எழுதினார். தமிழில் அதை "விவேக சூடாமணி'' என்ற பெயரில் இளையராஜா எழுதியிருக்கிறார்.

    இலக்கிய ஆர்வம் பற்றி அவர் குறிப்பிடுகையில், "அவ்வப்போது கவிஞர் பொன்னடியான் எனக்கு தமிழ் இலக்கிய - இலக்கணம் கற்பிக்க வருவார். பிற்காலத்தில் பாடல்கள் எழுதவும், வெண்பா, கவிதைகள் போன்ற பலவற்றை எழுதும்போதும், அவர் முன்பு கூறிய விஷயங்கள் பெரிதும் உதவியிருக்கின்றன'' என்று கூறியுள்ளார்.

    இசைக்காக 3 முறை டாக்டர் பட்டம் பெற்றவர் இளையராஜா.

    1994-ல் அரிசோனா பல்கலைக்கழகம் அவருக்கு டாக்டர் பட்டம் வழங்கியது. அதே ஆண்டில் அண்ணாமலைப் பல்கலைக்கழகமும், அடுத்த ஆண்டில் மதுரை காமராஜர் பல்கலைக்கழகமும் "டாக்டர்'' பட்டங்களை வழங்கின.

    இளையராஜாவின் இசை பற்றி ஆய்வு மேற்கொண்டு, பாடகி அனுராதா ஸ்ரீராம் உள்பட பலர் முனைவர் பட்டம் பெற்றுள்ளனர்.

    "டாக்டர்'' பட்டம் கிடைப்பதற்கு முன்பே, இளையராஜா பெற்ற பட்டம் "இசை ஞானி.'' இதை வழங்கியவர் முதல்-அமைச்சர்

    கருணாநிதி.காரைக்குடியில் பட அதிபர் பழ.கருப்பையா நடத்திய விழாவில், இந்த விருது வழங்கப்பட்டது.

    தமிழக அரசின் "கலைமாமணி'' விருது, கேரள அரசின் "சிறந்த இசையமைப்பாள''ருக்கான விருது, ஆந்திர அரசின் "நந்தி'' விருது உள்பட பல விருதுகளை இளையராஜா பெற்றுள்ளார்.

    "ஹவ் டு நேம் இட்?'', "நத்திங் பட் வின்ட்'', "இன்டியா 24 ஹவர்ஸ்'' ஆகிய பெயர்களில் இசை ஆல்பங்கள் வெளியிட்டுள்ளார்.

    இளையராஜா பல்வேறு இந்திய மொழிகளிலும் 854 படங்களுக்கு இசை அமைத்துள்ளார். இசை அமைத்த பாடல்கள் எண்ணிக்கை 5 ஆயிரத்துக்கும் மேல்.

    இளையராஜா இப்போது இசையமைத்துக் கொண்டிருக்கும் 855-வது படம் `ஆ தினகளு' (அந்த நாட்கள்) என்ற கன்னடப்படம். தனது இசைப்பணிகளை சென்னை பிரசாத் ஸ்டூடியோவில் உள்ள தனக்கான நிரந்தர அறையில் இருந்து கவனிக்கிறார்.

    இளையராஜாவை "அன்னக்கிளி'' படத்தின் மூலம் இசை உலகுக்கு அறிமுகப்படுத்தியவரும், ராஜா என்ற பெயரை மாற்றி "இளையராஜா'' என்ற பெயரை சூட்டியவருமான பஞ்சு அருணாசலம் கூறியதாவது:-

    "தமிழ்நாட்டில் இந்தி எதிர்ப்பு இருந்த போதிலும், இந்தி சினிமாப் படங்கள் பாடலுக்காகவே இங்கே வெற்றிகரமாக ஓடின.

    இந்திப் படங்கள் செலுத்தி வந்த ஆதிக்கத்தை தடுக்கக்கூடிய விதத்தில், இசையில் புதுமையைப் புகுத்தியவர் இளையராஜா. அதனால், இசையில் இளையராஜாவின் கொடி, வெகு உயரத்தில் பறந்தது; இன்னும் பறந்து கொண்டிருக்கிறது.

    இசை உள்ளவரை இளையராஜாவின் புகழும் வாழ்ந்து கொண்டிருக்கும்.''

    இவ்வாறு பஞ்சு அருணாசலம் கூறினார்.

    இளையராஜா கூறியதாவது:-

    "இசை தானாக வராது. யாரும் அழைத்து வந்துவிட முடியாது. அதுவாக என்னிடம் வந்தது. போட்டியும், பொறாமையும், குரோதமும் நிறைந்த இந்த உலகில் அன்பும், பாசமும் நேசமும் உள்ள மனித உறவுகளை காண்பதரிது.

    இவ்வளவுக்கும் மத்தியில், என்னை தவிக்க விட்டு விடாமல், சப்த சுரமும், நற்றமிழும், பாடலும், நாதாமிர்தமாக - நதியாக - கடலாக இருக்கும் இசையிலே ஒரு துளியாக என்னை இறைவன் உட்கார வைத்தானே! இது, தகுதியற்ற என் மீது இறைவன் கொண்ட கருணையே அல்லாமல் வேறு என்னவாக இருக்கும்!

    மனித வாழ்க்கையில் சில மனிதர்கள் மட்டுமே ஆலமரம் போல் நின்று, வருகிறவர்களுக்கு நிழல் தருவதுடன் தங்கும் பறவைகளுக்கு இடம் கொடுப்பது போல, மற்றவர்களுக்கு உபயோகமாக தங்கள் வாழ்க்கையை கழிப்பார்கள்.

    சாதாரணமான ஒரு இசை அமைப்பாளனான என்னிடம் வந்து தங்கிப்போனவர்களும் தாளாது போனவர்களும் இருந்தாலும், எத்தனையோ தயாரிப்பாளர்கள், நடிகர்கள், இயக்குனர்கள், இசைத்தட்டு - கேசட் விற்பனையாளர்கள் உயர்வதற்கு என் இசை ஒரு காரணமாக இருந்திருக்கிறது.

    எனினும், இந்தப் பிறவியில் இவை எல்லாம் எனக்கு பெரிதல்ல. என் இசை, என் அன்னை மூகாம்பிகை, என் பிறவிப்பிணி ஒழித்த பகவான் ஸ்ரீரமணர் அருள் - இதையெல்லாம் அடைந்ததை மட்டுமே முக்கியமாக கருதுகிறேன்.

    திருவண்ணாமலை என்ற ஒரு ஸ்தலம் இல்லாது போயிருந்தால், என் கதி என்னவாகியிருக்கும்? அதைச்சுற்றிச் சுற்றி இந்த உடம்பைத் தேய்ப்பதைத் தவிர எனக்கு ஏதும் உயர்வாகத் தோன்றவில்லை!''

    இவ்வாறு இளையராஜா கூறினார்.

    இளையராஜா லண்டனுக்குச் சென்று, தான் உருவாக்கிய இசையை ("சிம்பொனி''), ராணி எலிசபெத்தின் ஆதரவில் இயங்கும் இசைக் குழுவினரைக் கொண்டு பதிவு செய்தார்.
    இளையராஜா லண்டனுக்குச் சென்று, தான் உருவாக்கிய இசையை ("சிம்பொனி''), ராணி எலிசபெத்தின் ஆதரவில் இயங்கும் இசைக் குழுவினரைக் கொண்டு பதிவு செய்தார்.

    இந்த நிகழ்ச்சி, 1993 ஜுலை மாதத்தில் நடந்தது.

    "சிம்பொனி'' என்றால் என்ன?

    வெளிநாடுகளில், அந்தந்த காலத்திய இசைக் குழுவினர் வாசிப்பதற்காக, இசை அமைப்பாளர்கள் பலவிதமான இசைத் தொகுப்புகளை உருவாக்கினார்கள். இந்த இசைத் தொகுப்புகளுக்கு "சிம்பொனி'' என்று பெயர்.

    சாஸ்திரிய முறைப்படி பழுதற்ற உயர்ந்த இசை வடிவங்களை, 15-ம் நூற்றாண்டில் இருந்தே விவால்டி, கேன்டல், பீதோவான் போன்ற இசை மேதைகள் உருவாக்கித் தந்தார்கள்.

    இளையராஜாவின் இசைத் திறமை பற்றி, லண்டனில் உள்ள "ராயல் பில் ஹார்மனி'' என்ற இசைக்குழுவுக்கு தகவல் கிடைத்தது. இந்த இசைக்குழு, ராணி எலிசபெத்தின் ஆதரவில் இயங்குவதாகும்.

    இந்த இசைக்குழுவினர் மைக்கேல் டவுன்எண்ட் என்பவரை சென்னைக்கு அனுப்பி, இளையராஜாவின் இசையைப் பற்றி நேரில் அறிந்துவர ஏற்பாடு செய்தனர்.

    சென்னையில் ஒரு படத்துக்கு இளையராஜா இசை அமைத்துக் கொண்டிருந்ததை டவுன்எண்ட் பார்த்தார். இளையராஜாவின் இசைத் திறமையை வெகுவாகப் புகழ்ந்து, லண்டனுக்கு தகவல் அனுப்பினார்.

    இதைத்தொடர்ந்து, இளையராஜாவுக்கு "ராயல் பில் ஹார்மனி'' இசைக்குழு அழைப்பு அனுப்பியது.

    "1993 ஜுலை 6-ந்தேதி அவர்கள் இளையராஜாவுக்கு எழுதிய கடிதத்தில், "வருகிற 19 முதல் 21-ந்தேதி வரை தங்கள் இசையை (சிம்பொனி) பதிவு செய்ய ஏற்பாடு செய்திருக்கிறோம். எலிசபெத் ராணி அவர்களின் ஆதரவில், இது உலகப்புகழ் பெற்ற இசைக்குழுவாக இருந்தபோதிலும், ஆசியாவின் எந்த இசை அமைப்பாளரின் இசையையும் இதுவரை பதிவு செய்தது இல்லை. ராயல் பில்ஹர்மோனி இசைக்குழுவில் உள்ள அனைவரும் தங்கள் இசையை பதிவு செய்ய ஆவலோடு காத்திருக்கிறோம்'' என்று குறிப்பிட்டு இருந்தனர்.

    இதைத்தொடர்ந்து இளையராஜா லண்டனுக்குச் சென்று, தான் உருவாக்கிய இசையைப் பதிவு செய்தார்.

    அகில இந்திய திரை இசையின் பிதாமகன் என்று போற்றப்படுகிறவர் நவுஷாத். அகில இந்தியா முழுவதும் வெற்றிக்கொடி நாட்டிய "ரத்தன்'', "அன்மோல்கடி'', "ஆன்'', "மொகல்-ஏ-ஆஜாம்'' முதலிய படங்களுக்கு இசை அமைத்தவர்.

    அவர் ஒரு சமயத்தில், "இளையராஜாவிடம் நிறைய விஷயங்கள் இருக்கின்றன. எனக்கு உடல் நிலை சரியாக இருந்து நேரமும் இருக்குமானால், இந்த இளைஞனிடம் உட்கார்ந்து கற்றுக் கொள்வதற்கு நான் தயங்கமாட்டேன்'' என்று குறிப்பிட்டார்.

    இதுபற்றி இளையராஜா கூறுகையில், "இசை என்றால் என்னவென்றே அறியாத இந்தப் படிக்காத பட்டிக்காட்டானிடம் இசையை கற்றுக்கொள்ளலாம் என்று கூறிய - என் முன்னோடிகளில் மூத்தவரான நவுஷாத் அவர்களின் பாராட்டு என்னை மேலும் உற்சாகத்தில் ஆழ்த்துவதற்கு பதிலாக - சிறிய புழுவாக்கிவிட்டது'' என்று சொன்னார்.

    புகழ்ச்சி, சிலரை கர்வப்பட வைக்கும். இளையராஜாவை நாணப்பட வைத்தது.

    இளையராஜா ஒரு கட்டுரையில் எழுதியிருப்பதாவது:-

    "நான் படித்தவன் இல்லை. முறையாக சங்கீதம் கற்றவனும் இல்லை. எனக்குள் இருப்பது, என்னில் இருந்து மாறுபட்ட ஒன்றாகத் தோன்றுகிறது.

    சில இசை உருவாக்கங்களை, படைப்புகளைச் செய்துவிட்டு, பிறகு நிதானமாக ஆராயும்போது, `இதைச் செய்தது நான்தானா?' என்று தோன்றுகிறது. `இதைப் படைத்தது நானில்லையோ' என்று தோன்றுகிறது. இதுபோல் அடிக்கடி ஏற்படுவதுண்டு.

    இந்தப் பிறவியில் உருவான ஒன்றாகவும் இது தோன்றவில்லை. இது என்னுடையது இல்லையோ, இதை என்னால் சிந்திக்க முடியுமா என்றும் தோன்றுகிறது.''

    இவ்வாறு இளையராஜா குறிப்பிட்டுள்ளார்.
    இளையராஜா சில படங்களுக்கு இசை அமைக்க மறுத்தார்.
    இளையராஜா சில படங்களுக்கு இசை அமைக்க மறுத்தார்.

    அதுபற்றி அவர் கூறியிருப்பதாவது:-

    "எனக்கொரு கெட்ட குணம். என்னிடம் யாராவது வந்து, "நீங்கள் இசை அமைக்கவில்லை என்றால், இந்தப் படத்தை எடுக்கமாட்டேன், இப்படியே விட்டு விடுவேன்'' என்று சொன்னால், கண்டிப்பாக இசை அமைக்க ஒத்துக்கொள்ள மாட்டேன்! காரணம், "இவர்கள் எப்படி படம் எடுக்காமல் இருக்கிறார்கள், பார்ப்போமே!'' என்ற எண்ணம்தான்.

    இரண்டு மூன்று மாதம் காத்திருப்பார்கள். நான் இறங்கி வரமாட்டேன்.

    அப்புறம், வேறு ஒருவரின் இசையில் படம் வெளிவந்து விடும்!

    அப்படி வந்ததுதான் கே.பாக்யராஜின் முதல் படம் "ஒரு கை ஓசை'' (இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்)

    இப்படி, "நீங்கள் இசை அமைக்கவில்லை என்றால் இந்தப் படத்தை நான் எடுக்கப்போவதில்லை'' என்று சொல்லி, நான் இசை அமைக்க மாட்டேன் என்று மறுத்து, வேறு ஒருவர் இசை அமைப்பில் படத்தை தயாரித்து வெளியிட்ட இருவர்:- நடிகர் பார்த்திபன் (படம் "புதிய பாதை''); அனந்த் (கே.பாலசந்தரின் உதவியாளர்). படம்: "சிகரம்.''

    சாருசித்ரா சீனுவாசன், "தீஸ்ரி மஞ்ஜில்'' என்ற இந்திப்படத்தை தமிழில் எடுக்க முடிவு செய்து, கமல் - ஸ்ரீதேவியை ஒப்பந்தம் செய்துவிட்டு என்னிடம் வந்தார். எனக்குப் படத்தைப் போட்டுக்காட்டினார்.

    எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துடன் நான் கச்சேரி நடத்திய காலத்திலேயே, இந்தப் படத்தின் பாடல்கள் அத்தனையும் மனப்பாடம். ஆர்.டி.பர்மன் அற்புதமாக இசை அமைத்திருந்தார்.

    படம் முடிந்ததும், "இந்தப் பாடல்களைப்போல் என்னால் கம்போஸ் செய்ய முடியாது. வேறு யாரையாவது ஏற்பாடு செய்து கொள்ளுங்கள்'' என்று சொல்லிவிட்டேன்.

    சில பாடல்களுக்கு இணை கிடையாது. அதுபோல் இசை அமைக்க முயற்சி செய்யக்கூடாது. ஆர்.டி.பர்மன் இசை அமைத்த அந்தப் படத்தின் பாடல்களும் அந்த வகையைச் சேர்ந்தவை.

    சினிமாவுக்கு கதை சொல்வது ஒரு தனி கலை. சிலர், கதையை சொல்லத் தெரியாமல் மூன்று - நான்கு மணி நேரம் சொல்வார்கள். சிலர், கதையைப் பிரமாதமாகச் சொல்லிவிட்டு, உப்புச் சப்பு இல்லாமல் படமாக்குவார்கள்.

    என்னிடம், சொல்லியதை சொல்லியவாறே படம் எடுத்த டைரக்டர்கள் இரண்டே பேர்: பாலுமகேந்திரா, மணிரத்னம்.

    கதையை மிகவும் சுருக்கமாகச் சொல்லும் இயக்குனர்களில் ஸ்ரீதர் அவர்களும், கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் அவர்களும் தனி ரகம். இருவரும் 15 நிமிடங்களுக்குள் கதை சொல்லிவிடுவார்கள்.

    பாரதிராஜா அவரது "காதல் ஓவியம்'' படத்தின் மீது ரொம்ப நம்பிக்கை வைத்திருந்தார்.

    நான் மூகாம்பிகையின் தீவிர பக்தன் என்பதால், "படத்தின் நாயகன் அம்பாளின் பக்தன் என்று சொன்னால், இளையராஜா நல்ல டிïன்களை எலலாம் போட்டுத்தருவார்'' என்று பாரதியிடம் உதவியாளர்களாக இருந்த மணிவண்ணனும், கலைமணியும் சொல்லியிருப்பார்கள் போலும்.

    நான் அப்படத்துக்கு இசை அமைத்தேன். ஒருநாள் மாலை நேரத்தில் ஆரம்பித்த பாடல் `கம்போசிங்' அன்றே முடிந்துவிட்டது. படத்துக்கான எட்டுப்பாடல்களும் தயாராகிவிட்டன.

    படம், பின்னணி இசை சேர்ப்புக்காக வந்தபோது, அந்த படத்தின் மீது எனக்கு நம்பிக்கை வரவில்லை. பாரதியிடம், "படம் ரிலீஸ் ஆவதற்குள் நாம் இருவரும் குருவாïர் போய் வரலாம்'' என்றேன். "சரி'' என்றார். வேலை சரியாக இருந்ததால், நகர முடியவில்லை.

    திடீரென்று ஒருநாள் கலைமணியை பாரதி கூப்பிட்டு, "ஏய்யா! படத்திலே ஏதோ ஒன்னு குறையுதே. உனக்குத் தெரியாதா? தெரிந்தா சொல்லு!'' என்றார்.

    "அது ஒன்றும் இல்லே சார். கதைதான் குறையுது!'' என்று கலைமணி கூற, எல்லோரும் விழுந்து விழுந்து சிரித்தோம். கலைமணியை பாரதி அடிக்கப்போக, அவர் தப்பி ஓடிவிட்டார்.

    படம் ரிலீஸ் ஆகியது. ஒரு வாரத்தில், படப்பெட்டிகள் எல்லாம் திரும்பி வந்துவிட்டன.

    பாரதி என்னிடம் வந்து, "வா, குருவாïர் போய் வரலாம்'' என்றார். "படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பல்லவா போயிருக்க வேண்டும். இப்போது வேண்டாமே!'' என்று கூறிவிட்டேன்.

    "காதல் ஓவியம்'' படம் சரியாகப் போகாததால், பாரதி மனம் சங்கடப்பட்டார். ரசிகர்கள் மீது கோபப்பட்டார்.

    "பாரதி! ரசிகர்களை குறை கூறவேண்டாம். அவர்கள் எப்போதும் சரியாகவே இருப்பார்கள்'' என்றேன்.

    "உனக்குத் தெரியாது. இவர்களுக்கு எது வேணும் என்று எனக்குத் தெரியாதா? இவர்களுக்காக ஒரு மூன்று படி கீழே இறங்கி வந்து ஒரு படம் எடுத்துக் காட்டுகிறேன் பார்!'' என்றார்.

    அதற்கு நான், "யோசித்துப் பாருங்கள். 16 வயதினிலே படம் நன்றாக ஓடிக்கொண்டிருந்த அதே நேரத்தில், அதற்கு இணையாக விட்டலாச்சாரியாவின் "ஜெகன்மோகினி'' படம் ஓடியதல்லவா? அதற்காக, பாரதிராஜா, ஜெகன்மோகினி போல படம் எடுக்கவேண்டும் என்று அர்த்தம் இல்லை. உங்களிடம் மக்கள் எதிர்பார்ப்பது வேறு. அதைவிட்டு எங்கும் போகவேண்டாம்'' என்றேன்.

    ஆனால் பாரதி தன் கருத்தில் உறுதியாக இருந்தார்.

    ரசிகர்களுக்காகவே கீழே இறங்கி வந்து அவர் எடுத்த "வாலிபமே வா வா.'' படம் ஓடவில்லை.

    "அலைகள் ஓய்வதில்லை'' படத்தின் மூலம் தயாரிப்பாளர் ஆன பாஸ்கர், அடுத்து ஏதாவது படம் தயாரிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் என்னிடம் வந்தார். பஞ்சு சாரின் வீட்டில் இருதேன். அப்போது, அங்கே அமர் (கங்கை அமரன்) இருந்ததைப் பார்த்து, "அமர் டைரக்ஷனில் படத்தை எடு. படத்தின் பெயர் கோழி கூவுது'' என்றேன். மதுரையில் நாங்கள் நடத்திய நாடகத்தின் பெயர் அது.

    நான் சொன்னதை அமர் ஏற்றுக்கொண்டு, ஒரு கதையை உருவாக்கி, பிரபுவை ஹீரோவாகப் போட்டு படம் எடுத்தான். அவன் எனக்குப் போட்டியாக இசை அமைப்பாளராக வந்துவிடக்கூடாது என்பதற்காக டைரக்ட் செய்யச் சொன்னேன் என்று டெலிவிஷன் பேட்டிகளில் அமர் சொல்வது வழக்கம்.

    அவன் எனக்குப் போட்டியா, இல்லையா என்பது அவனுக்கே தெரியும்!''

    இவ்வாறு இளையராஜா கூறியுள்ளார்.

    இரண்டு இசை மேதைகள் சேர்ந்து இசை அமைப்பது என்பது ஆச்சரியமான விஷயம். ஏவி.எம். தயாரித்த "மெல்லத் திறந்தது கதவு'' படத்துக்கு எம்.எஸ்.விஸ்வநாதனும், இளையராஜாவும் சேர்ந்து இசை அமைத்தார்கள்.
    இரண்டு இசை மேதைகள் சேர்ந்து இசை அமைப்பது என்பது ஆச்சரியமான விஷயம். ஏவி.எம். தயாரித்த "மெல்லத் திறந்தது கதவு'' படத்துக்கு எம்.எஸ்.விஸ்வநாதனும், இளையராஜாவும் சேர்ந்து இசை அமைத்தார்கள்.

    "மெல்லத் திறந்தது கதவு'' படம் 1986 செப்டம்பர் 12-ந்தேதி வெளியாயிற்று. இதை ஆர்.சுந்தரராஜன் இயக்கினார். மோகன், ராதா, அமலா ஆகியோர் நடித்தனர்.

    இதில் இடம் பெற்ற முக்கிய பாடல்கள்:-

    1. "ஊரு சனம் தூங்கிருச்சு... ஊதக்காத்தும் அடிச்சிருச்சு!''

    2. "குழலூதும் கண்ணனுக்கு குயில் பாடும் பாட்டு கேக்குதா?''

    3. "தேடும் கண் பார்வை தவிக்க...''

    4. "வா வெண்ணிலா... உன்னைத்தானே வானம் தேடுது!''

    5. "தில் தில் தில்... மனதில் ஒரு தல் தல் தல் காதல்''

    "மெல்லத் திறந்தது கதவு'' படத்தை ஏவி.எம். தயாரிக்க நேர்ந்ததே ஒரு சுவையான கதை.

    அதுபற்றி ஏவி.எம். சரவணன் ஒரு கட்டுரையில் கூறியிருப்பதாவது:-

    "1985-ம் ஆண்டு ஒரு நாள் எனக்கு திடீரென்று பாரதிராஜா டெலிபோன் செய்தார். "சார்... நானும் இளையராஜாவும் உங்களைப் பார்க்க வீட்டுக்கு வரலாம் என்றிருக்கிறோம்'' என்றார்.

    இருவரும் வந்தார்கள்.

    "எம்.எஸ்.விஸ்வநாதன் இப்போது கொஞ்சம் சிரமத்தில் இருக்கிறார். அவருக்கு ஒரு படம் எடுத்து உதவி செய்தால் நன்றாக இருக்கும்'' என்று யோசனை சொன்னார்கள். அப்போது நாங்கள் நிறையப் படங்கள் எடுத்துக் கொண்டிருந்தோம். அந்த யோசனையை நான் உடனே ஏற்றுக்கொண்டேன்.

    என் தந்தையாருக்கு மெல்லிசை மன்னரின் பாட்டுகள் மட்டுமல்ல, அவரது பண்புகளும் மிகவும் பிடிக்கும். அவரது மனதில் நிறைந்திருந்த மனிதர்களில் எம்.எஸ்.வியும் ஒருவர்.

    ஒருமுறை அப்பச்சி (ஏவி.எம்) என்னை அழைத்து "விஸ்வநாதனை மட்டும் என்றைக்கும் விட்டு விடாதே. அவருக்கு எப்போது எந்தச் சிரமம் ஏற்பட்டு அது உனக்குத் தெரிய வந்தாலும் அவருக்கு உதவி செய்யத் தயங்காதே'' என்று சொன்னார். மெல்லிசை மன்னரை எனக்கும் பிடிக்கும். அவர் மீது எனக்கு என்றும் மரியாதை உண்டு.

    பாரதிராஜாவும், இளையராஜாவும் சொன்னதும், எம்.எஸ்.வி.க்கு உதவ வேண்டும் என்பதற்காக எடுக்கப்பட்ட படம்தான் "மெல்லத்திறந்தது கதவு.''

    இளையராஜாதான் அந்தப் படத்துக்கு இசையமைப்பதாக இருந்தது. "நானும் எம்.எஸ்.வி.யும் சேர்ந்து இப்படத்துக்கு மிïசிக் பண்றோமே'' என்று ராஜா கேட்டபோது எனக்கு அந்த ஐடியா பிடித்திருந்தது. இரண்டு இசை மேதைகளும் இணைந்து அந்தப் படத்தில் பணியாற்றினார்கள் என்பது ஒரு தனிச்சிறப்பாக அமைந்தது.

    பாடல்களுக்கான டிïனை எம்.எஸ்.வி. அவர்கள் போட்டார். ஆர்க்கெஸ்ட்ராவை இளையராஜா நடத்தினார்.

    பாடல்கள் மிக இனிமையாக அமைந்தன. அவர்கள் இருவரும் ஒருவரையொருவர் மதித்துப் பணியாற்றிய விதமும் இனிமையாக இருந்தது.

    படம் வெளியானதும் முதலில் சுமாராகத்தான் போயிற்று. நாட்கள் ஆக ஆகத்தான் பிக் அப் ஆயிற்று.

    நடுவில் ஒரு தமாஷ் நடந்தது.

    மதுரையில் எங்கள் வினியோகஸ்தர் நாகராஜ ராஜா என்பவர் அங்கே சினிப்ரியா தியேட்டரில் அந்தப் படத்தை, இடைவேளைக்கு பிந்தைய பகுதியை முன்னதாகவும், முந்தைய பகுதியை பின்னாலும் போட்டால் நன்றாக இருக்கும் போலிருக்கிறதே என்று கருதி அப்படியே மாற்றிப்போட ஏற்பாடு செய்தார். ஆனால் இப்படி மாற்றிப் போட்டது ரசிகர்கள் யாருக்கும் தெரியாது. அப்படிப்போட்டபோது அது ஒரிஜினல் படத்தைவிட அதிகமாக ரசிக்கப்பட்டதாகத் தெரிந்தது. எங்களுக்கே இது ஆச்சரியமாக இருந்தது.

    மதுரையில் இப்படி படத்தை முன்னும் பின்னுமாக மாற்றிப்போட்டு அது வரவேற்பைப் பெற்றது என்ற விவரம் தியேட்டர் வட்டாரங்களில் வேகமாக கசிந்து, மற்ற தியேட்டர்காரர்களும் அப்படியே செய்யத் தொடங்கி விட்டார்கள்.

    இதனால் பின்னர் பிரச்சினை ஏதும் வந்துவிடக்கூடாது என்ற எண்ணத்தில் தியேட்டரில் காண்பித்துக் கொண்டிருந்த மாதிரியே மாற்றிப்போட்டு படத்தை மறு தணிக்கைக்கு அனுப்பினோம்.

    "இது தேவைதானா'' என்று அதிகாரிகளே கேட்டார்கள்.

    "படத்துக்குத்தான் சர்டிபிகேட் ஏற்கனவே கொடுத்தாயிற்றே. எப்படிக் காட்டினால் என்ன?'' என்று அவர்கள்

    அபிப்பிராயப்பட்டார்கள்.நாங்கள்தான் வற்புறுத்தி மீண்டும் ஒரு சர்டிபிகேட் வாங்கினோம்.

    அப்போது குறும்புக்கார அதிகாரி ஒருவர், "தலைப்பு எப்படி? `மெல்லத் திறந்தது கதவு' என்றுதான் இருக்கப் போகிறதா? இல்லை, `கதவு திறந்தது மெல்ல' என்று மாற்றப் போகிறீர்களா?'' என்று கிண்டலடித்தார்.''

    இவ்வாறு சரவணன் குறிப்பிட்டுள்ளார்.
    சிறந்த இசை அமைப்பாளருக்கான மத்திய அரசின் தேசிய விருதை, இளையராஜா பெற்றார்.
    சிறந்த இசை அமைப்பாளருக்கான மத்திய அரசின் தேசிய விருதை, இளையராஜா பெற்றார்.

    அவருக்கு இந்த விருதைப் பெற்றுத்தந்த படங்கள்:-

    1. சிந்து பைரவி

    2. சாகர சங்கமம் ("சலங்கை ஒலி'')

    3. ருத்ரவீணை.

    இதில், "சிந்து பைரவி'' 11-11-1985-ல் வெளியானது. கே.பாலசந்தர் இயக்கியிருந்தார். சங்கீதத்தையே உயிர் மூச்சாகக் கொண்ட ஒரு இசைக்கலைஞனின் வாழ்க்கையில் ஏற்படும் காதல் திருப்பம் அவன் வாழ்வையே புரட்டிப்போட்டு விடுகிறது. `இசை' பற்றி பாலபாடம் கூட தெரியாத அன்பே வடிவான மனைவி, இசை மூலம் ஈர்க்கப்பட்டு, இசைக் கலைஞராலும் ஈர்க்கப்படும் இளம் பெண் என இந்த மூவர் பின்னணியில் பாலசந்தர் காட்சிகளை உருவாக்கியிருந்தார். 25 வாரம் ஓடி `இசை'க்கு மரியாதை ஏற்படுத்திக் கொடுத்த படம்.

    இதில் "ஜே.கே.பி'' என்ற இசைக் கலைஞராக சிவகுமார் வாழ்ந்து காட்டியிருந்தார். பாசத்தைக் கொட்டும் அப்பாவி மனைவியாக வந்து, கணவரின் இன்னொரு காதலில் வெந்து, அப்புறமாய் தன்னைத்தானே ஜீரணித்துக் கொள்ளும் அப்பாவிப் பெண் கேரக்டரில் சுலக்ஷனா வெளுத்துக் கட்டியிருந்தார்.

    ஜே.கே.பி.யின் இசையை நேசித்து பிறகு அவரையும் நேசிக்கும் கேரக்டரில் சுஹாசினி நடிப்பில் சிகரம் தொட்டிருந்தார். இந்த நடிப்புக்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது அவரைத் தேடிவந்தது என்பது படத்துக்கு கிடைத்த இன்னொரு சிறப்பு.

    இந்தப் படத்தில்தான் பின்னணி பாடகியாக சித்ராவை இளையராஜா அறிமுகம் செய்தார்.

    சித்ரா பாடிய "பாடறியேன், படிப்பறியேன், பள்ளிக்கூடம் தானறியேன்'' பாடல் அவருக்கு பெரும் புகழ் தேடிக்கொடுத்து, மத்திய அரசின் தேசிய விருதையும் பெற்றுத்தந்தது. அதோடு தமிழில் நிலையான பாடகியாகவும் நிலை நிறுத்தியது.

    தெலுங்கில் புகழ் பெற்ற இயக்குனர் கே.விஸ்வநாத், பரத நாட்டிய கலைஞரின் வாழ்க்கைப் பின்னணியை மையமாக வைத்து உருவாக்கிய படம் "சாகர சங்கமம்.'' "சங்கராபரணம்'' என்ற தெலுங்குப்படம் மூலம் மிகப்பிரபலமான இந்த இயக்குனரின் சாகர சங்கமமும் வெற்றிப்படமே. நடனக் கலைஞராக, நடிப்பின் சிகரத்தைத் தொட்டார், கமலஹாசன். அவருடன் இணைந்து நடித்தார், ஜெயப்பிரதா.

    தெலுங்கில் பெற்ற வெற்றியைத் தொடர்ந்து தமிழிலும் இந்தப்படம் "சலங்கை ஒலி'' என்ற பெயரில் மொழி மாற்று செய்து வெளியிடப்பட்டது. `மவுனமான நேரம்', `ஓம் நமச்சிவாய', `ததித ததித தந்தானா' போன்றவை, இளையராஜா இசையில் மிகவும் பிரபலமான

    பாடல்கள்."ருத்ரவீணை'' இளையராஜாவின் இசைக்கு தேசிய விருது பெற்றுத்தந்த மூன்றாவது படம். கே.பாலசந்தர் இயக்கினார்.

    தேசிய விருது பெற்றது குறித்து இளையராஜா கூறியதாவது:-

    "ஒரு படத்துக்கு எந்த மாதிரி தேவையோ அதை சரியாக கொடுப்பது ஒரு இசையமைப்பாளரின் கடமை. நானும் அதைத்தான் செய்தேன். சில பாடல்கள் ரெக்கார்டிங்கின்போதே அதன் தனித்தன்மை தெரிந்து விடும். "சிந்து பைரவி'' படத்தில் "பாடறியேன் படிப்பறியேன்'' பாடல் பதிவாகும்போது, என்னுடன் இருந்த டைரக்டர் கே.பாலசந்தரிடம், "இந்தப் பாடல் மட்டும் உரிய வரவேற்பைப் பெறாவிட்டால் நான் இசையமைப்பாளரே அல்ல'' என்றேன். விருது கொடுத்தது, இசை மீதான என் நம்பிக்கையை உறுதிப்படுத்திக் கொண்டார்கள்.''

    இவ்வாறு இளையராஜா கூறினார்.

    பாரதிராஜா இயக்கத்தில் கே. பாக்யராஜ் -ரதி நடித்த "புதிய வார்ப்புகள்'' படத்துக்கு, புதுப்புது உத்திகளில் இளையராஜா இசை அமைத்தார்.
    பாரதிராஜா இயக்கத்தில் கே. பாக்யராஜ் -ரதி நடித்த "புதிய வார்ப்புகள்'' படத்துக்கு, புதுப்புது உத்திகளில் இளையராஜா இசை அமைத்தார்.

    தனது இசைப்பயணம் பற்றி இளையராஜா கூறியதாவது:-

    "தேவராஜ் -மோகன் இயக்கிய "பூந்தளிர்'' படத்தில் ஒரு மலையாளப்பாடல் இடம் பெற்றது.

    "ஞான் ஞான் பாடணும் ஊஞ்ஞால் ஆடணும்''- என்ற இந்தப்பாடலை எம்.ஜி.வல்லபன் எழுதியிருந்தார். இந்த பாடலில், ஒரு புதிய பாடகி பாடியிருப்பதும் எதிர்பாராமல் நடந்த விஷயம்.

    முந்தின நாள் எனது இசையில் ஒரு பாட்டுக்கு பாட வந்த ஜேசுதாஸ், அவருடன் ஒரு பெண்ணையும் அழைத்து வந்திருந்தார். `இந்தப் பெண்ணை பாட வைத்து கேட்டுப்பாருங்கள்' என்று கேட்டுக்கொண்டார். கேட்டேன். குரல் பிடித்துப் போயிற்று. அடுத்த நாளே ரெக்கார்டிங்கில், அந்தப் பெண்ணை இந்த மலையாளப்பாடலை பாட வைத்தேன். அந்தப் பாடகிதான் ஜென்சி.

    தேவராஜ் - மோகனின் "ரோசாப்பூ ரவிக்கைக்காரி'' நல்ல கதையம்சம், பாடல்களுடன்அமைந்த படம். கவிஞர் புலமைப்பித்தனின் அருமையான தமிழும் அழகும் கிராமியப் பாடலிலும் கொஞ்சி வந்து மெட்டுக்களில் விளையாடிய படம்.

    "உச்சி வகுந்தெடுத்து பிச்சிப்பூ வெச்ச கிளி'', "என்ன பாட்டுப்பாட'', "வெத்தல வெத்தல வெத்தலயோ கொழுந்து வெத்தலயோ'', "என்னுள்ளில் எங்கோ'' முதலான பாடல்கள் ரசிகர்களின் விருப்பப்பாடல்களாக அமைந்தன.

    பாரதிராஜா "புதிய வார்ப்புகள்'' என்று ஒரு படத்துக்கு பெயர் சூட்டினார். நான், பாரதி எல்லாம் ஜெயகாந்தனின் ரசிகர்கள் என்பதால் அவரது ஒரு கதைத் தலைப்பை இந்த படத்துக்கு வைத்து, படத்தின் கடைசி பிரேமில் தலைப்பிற்கு ஒரு அழுத்தம் கொடுக்கும் வகையில் கதையை உருவாக்கிருந்தார்.

    இந்தப் படத்தின் கம்போசிங் பிரசிடெண்ட் ஓட்டலில் நடந்தது. ஒரே மூச்சில் படத்தை முடிக்கத் திட்டமிட்டிருப்பதாகவும், பாடல்கள் எல்லாவற்றையும் முதலிலேயே பதிவு செய்து எடுத்துப்போனால்தான் அது சாத்தியம் என்றும் பாரதி சொன்னார்.

    முதலில் பூஜைக்கு ஒரு பாடலை மட்டும் ரெக்கார்டு செய்வதற்காக இரவு பின்னணி இசை வேலை முடிந்து 9 மணிக்கு "ட்ïன்'' கம்போஸ் செய்தேன். கவியரசர் வந்து பாடலை எழுதிக்கொடுத்துவிட்டுப் போய்விட்டார். 10 1/2 மணிக்கு வீட்டுக்குப் போய்விட்டேன்.

    அப்போது பாரதியிடம் இருந்து போன் வந்தது. "இந்தப் பாட்டை நாளைக்கு பதிவு செய்யவேண்டாம். ஒரு நல்ல டூயட் பாட்டுக்கு டிïன் போட்டு, அதை பதிவு செய்தால் நல்லாயிருக்கும்னு நினைக்கிறேன்'' என்றார்.

    நான் பாரதியிடம், "யோவ்! என்ன விளையாடறியா? கவிஞர் வந்து பாட்டெல்லாம் எழுதிட்டுப் போயிட்டார். அவருகிட்ட புதுசா பாட்டு வேணாம்னு எப்படிய்யா கேட்கமுடியும்?'' என்றேன்.

    பாரதியும் விடவில்லை. "அதெல்லாம் நான் சொல்லிக்கிறேன். வேறு பாட்டை நாளைக்கு காலையில் பூஜை ரெக்கார்டிங்கில் எடுக்கிறோம். சரியா?'' என்று கேட்டார்.

    "சரி காலையில் பார்க்கலாம்'' என்று சொல்லி போனை வைத்தேன்.

    மறுநாள் காலையில் ஜேசுதாசின் தரங்கிணி ஸ்டூடியோவில் காலை 7 மணிக்கு ஒரு டிïனை பாடினேன். அது நன்றாக இருக்கிறது என்று பாரதி `ஓ.கே' சொல்ல, அப்படியே இசைக்குழுவுக்கு அதற்கான இசையை கம்போஸ்செய்து எழுதிக்கொடுத்து விட்டேன்.

    டிபன் முடித்துவிட்டு 9 மணிக்கு இசைக்குழுவுடன் பாடலுக்கான ஒத்திகையும் முடித்தேன்.

    கவியரசர் கண்ணதாசன் சரியாக 10 மணிக்கு வந்தார். ஒரு ஹாலில் அமர்ந்தோம். சுற்றிலும் இசைக்குழுவினர் ஆங்காங்கே நின்று வேடிக்கை பார்க்கத் தொடங்கினார்கள். அவர்கள் கண்ணதாசன் பாடல் எழுதுவதை பார்த்திருக்க வாய்ப்பு இல்லை அல்லவா? அதனால்தான் அத்தனை ஆர்வம்.

    கவியரசர் முதல் நாளே கதையை கேட்டுவிட்டதால் "டூயட்தானே?'' என்று மட்டும் என்னிடம் கேட்டார்.

    "ஆமாண்ணே'' என்றேன்.

    "டிïனை பாடு'' என்றார்.

    பாடினேன்.

    "இன்னொரு முறை பாடு'' என்றார்.

    மீண்டும் பாடினேன்.

    உடனே கவியரசரிடம் இருந்து டிïனுக்கேற்ற வார்த்தைகள் வந்து விழுந்தன.

    "வான் மேகங்களே! வாழ்த்துங்கள்! பாடுங்கள்! நான் இன்று கண்டுகொண்டேன் ராமனை'' என்று அவர் உடனே சொல்ல சுற்றி நின்ற இசைக்குழுவினர் ஆச்சரியத்தில் திறந்த வாய் மூடாமல் கேட்டுக்கொண்டிருந்தனர்.

    அவர் சொன்னதை நான் டிïனோடு பாடிக்காட்டினேன். "கண்டுகொண்டேன் ராமனை'' என்று நான் பாடி முடித்தவுடன், இசையில் இருந்து இம்மியும் பிசகாது வார்த்தைகள் கவியரசரிடம் இருந்து விழுவதைக் கண்டு கைதட்டினார்கள்.

    கவிஞருக்கோ ரசிகர்களை மொத்தமாக கூட்டி வைத்து அவர்கள் முன் பாடல் எழுதுவது போன்ற உணர்வு ஏற்பட்டது போலும். உற்சாகமாக அடுத்தடுத்த வார்த்தைகள் வெளிவந்தன.

    மொத்தப்பாடலும் 20 நிமிடத்தில் முடிய அதை ஒரு 10 நிமிடத்தில் நகல் எடுத்துக்காட்ட, கவியரசர் சரி பார்த்தார். பாரதி "ஓ.கே'' சொன்னார்.

    ஜானகியும், மலேசியா வாசுதேவனும் வந்தார்கள். பாடலை எழுதி, டிïனை கற்றுக்கொண்டு ஒத்திகை முடிந்து பாடல் பதிவானது.

    அங்கேயே அப்போதே சுடச்சுட எடுத்த பாடல்தான். ஆனால் `பாஸ்ட் புட்' ரகம் அல்ல.

    கடற்கரையில் உதயமான கற்பனை

    மற்ற பாடல்களை கம்போஸ் செய்ய ஓட்டலில் உட்கார்ந்தோம்.

    ஊருக்குப் புதிதாய் வந்த ஆசிரியருக்கும், நாயகிக்கும் காதல் அரும்புகிறது. இப்போது பாடல் காட்சி. இந்தப்பாடல் எனக்கு வித்தியாசமாக வேண்டும் என பாரதி கேட்டார்.

    பல மெட்டுக்கள் போட்டேன். ஒன்றும் பிடிக்கவில்லை. எனக்கே புதிதாக ஏதாவது செய்யவேண்டும் என்று தோன்றிக்கொண்டிருந்தது. அந்த நேரத்தில் வந்த மெட்டுக்களை எல்லாம் வாசித்தபடி பாடிக்கொண்டிருந்தேன். எனக்கும் எதுவும் புதிதாகத் தெரியவில்லை.

    ஆர்மோனியத்தை மூடிவிட்டு "சரி வாய்யா! அப்படி பீச் பக்கம் போய் வரலாம்'' என்றார் பாரதி. பிரசிடென்ட் ஓட்டலில் இருந்து கொஞ்ச தூர நடையில் கடற்கரையை அடைந்தோம்.

    கூட்டம் அவ்வளவாக இல்லை. வழக்கமாக நாங்கள் மாலை நேரங்களில் பொழுது போக்கிய அதே கடற்கரை.

    சுண்டல் வாங்கி கொறித்தபடி கடற்கரையில் நடந்தோம். கடல் அலைகளில் கால்கள் நனைய நனைய நின்றோம். இப்படியே சிறிது நேரம் பீச்சில் பொழுது போக்கிவிட்டு திரும்பவும் ரூமுக்கு வந்தோம். அதுவரை பாடலைப் பற்றி பேசவும் இல்லை. அதுபற்றி சிந்திக்கவும் இல்லை.

    இந்த இடைவெளியில் என்ன நடந்ததோ தெரியவில்லை. வந்து ஆர்மோனியத்தை தொட்டேன். அவ்வளவுதான். ஆரம்பம் முதல் கடைசி வரை `தம் தனனம்' என்று தொடங்கி முடியும் வரை அதே `தம்தனன'வில் பாடலின் முழு டிïனும் வந்துவிட்டது.

    பாரதியைப் பார்க்கணுமே "சூப்பர்! பிரமாதம்'' என்றவர், ஆடாத குறைதான். அத்தனை உற்சாகம் அவருக்கு!

    பாக்யராஜ் ஹீரோ ஆனது எப்படி?

    "புதிய வார்ப்புகள்'' படத்திற்கு சரியான ஹீரோ கிடைக்கவில்லை. படப்பிடிப்புக்கான நாள் நெருங்கிக் கொண்டிருந்தது. பாடல்கள் முடிந்ததும் ஷூட்டிங் போக ஏற்பாடாகி இருந்தது.

    "ஹீரோ கிடைக்காவிட்டால் ஷூட்டிங் கிடையாதா?'' கேட்டேன், பாரதியிடம்.

    "நாளை ஒருநாள் கடைசி. எப்படியாவது யாரையாவது நடிக்க வைப்பேன். படப்பிடிப்பு ஏற்கனவே முடிவு செய்த தேதியில் தொடங்கும்'' உறுதியாகவே சொன்னார், பாரதி.

    மறுநாள் என்னைப் பார்த்தவர், "என் உதவி டைரக்டர் பாக்யராஜ்தான் இந்தப் படத்தில் ஹீரோவாக நடிக்கப்போகிறார்'' என்றார்.

    கொஞ்ச நேரத்தில் பாக்யராஜ் வந்தார். நான் அவரிடம், "என்ன பாக்யராஜ்! நீங்கள் நடித்தால் நாங்கள் என்ன செய்வோம்? எங்களைப் பார்த்தால் உங்களுக்கு பாவமாக இல்லையா?'' என்று கிண்டல் செய்தேன்.

    அவரோ, "இல்லே சார்! டைரக்டர் சொல்லிவிட்டார். அதுக்கு மேல பேச முடியாது சார்'' என்று யதார்த்தமாக சொன்னார்.

    அந்தப்படம் வெற்றி பெற்று பாக்யராஜ×ம் ஹீரோ - இயக்குனர் என்று வளர்ந்து விட்டார். பிற்காலத்தில் பாக்யராஜின் திறமை கண்டு, அன்றைக்கு நான் சொன்ன முட்டாள்தனமான கிண்டல் பேச்சை எண்ணி பலமுறை வருந்தியிருக்கிறேன். "ஒருவரின் தகுதியை எடைபோட நீ யார்? உனக்கென்ன தகுதி இருக்கிறது?'' என்று பலமுறை எனக்கு நானே கேட்டுக்கொண்டேன்.

    "கவரிமான்'' படத்தில், கீர்த்தனை ஒன்றுக்கு புதிய முறையில் இசை அமைத்தார், இளையராஜா. பாடுவதற்கு கடினமான அந்தப்பாடலுக்கு மிகப் பொருத்தமாக வாயசைத்தார், சிவாஜிகணேசன்.
    "கவரிமான்'' படத்தில், கீர்த்தனை ஒன்றுக்கு புதிய முறையில் இசை அமைத்தார், இளையராஜா. பாடுவதற்கு கடினமான அந்தப்பாடலுக்கு மிகப் பொருத்தமாக வாயசைத்தார், சிவாஜிகணேசன். அதைக்கண்டு இளையராஜா வியந்து போனார்.

    இசைப்பயணம் பற்றி இளையராஜா கூறியதாவது:-

    "இளமை ஊஞ்சலாடுகிறது'' படத்தைத் தொடர்ந்து மீண்டும் டைரக்டர் ஸ்ரீதரின் "அழகே உன்னை ஆராதிக்கிறேன்'' படத்துக்கும் இசை வாய்ப்பு வந்தது. இந்தப் படமும் ஹிட்டாகி பாடல்களும் ஹிட்டானதில் மகிழ்ச்சி.

    எஸ்.பி.முத்துராமன் இயக்கிய "கடவுள் அமைத்த மேடை''படத்தில்தான், ஒரு பரிசோதனை முயற்சி செய்யவேண்டும் என்று தோன்றியது.

    அதாவது கர்நாடக சங்கீத ராகங்களை எடுத்துக்கொண்டு, அதன் ஆழம் குறையாமல் கிராமியப் பாணியின் சந்தங்களை மெட் டாக அமைத்து, பாடும்போது அதன் இரண்டு வேறுபட்ட தனிப்பட்ட தன்மைகளை இணைத்துப் பாடவைக்கலாமே என்று தோன்றியது.

    அதை உடனே செய்யலாம் என்ற எண்ணத்தில் டைரக்டர் எஸ்.பி.முத்துராமன் சொன்ன ஒரு டூயட்டிற்கு ஹம்சத்வனி ராகத்தில் கிராமியத்தனமான மெட்டமைத்தேன். பாடலை வாலி எழுதினார். "மயிலே மயிலே உன் தோகை எங்கே?'' என்ற அந்தப் பாடல்தான் இந்தப் பரிசோதனை முயற்சியில் உருவான பாடல்.

    எஸ்.பி.பாலசுப்பிரமணியமும், ஜென்சியும் இந்தப் பாடலை பாடியிருந்தார்கள்.

    இதே படத்தில்தான், பி.பி.சீனிவாசும் முதன் முதலாக என் இசைக்கு பாடினார். அதுவும் ஒரு சிறிய கஜல் போன்ற பாடல். "தென்றலே நீ பேசு'' என்பது அதன் பல்லவி.

    பஞ்சு சார் கமல், ரஜினி இரண்டு பேரையும் தனித்தனியாக போட்டு படம் எடுக்க முடிவு செய்தார். அப்போது கமல் - ரஜினி இருவரும் சேர்ந்து நடிப்பதில்லை என்று முடிவெடுத்திருந்த நேரம்.

    கமலை வைத்து "கல்யாணராமன்'', ரஜினியை வைத்து "ஆறில் இருந்து அறுபதுவரை'' ஆகிய படங்களை எடுத்தார்.

    இரண்டுமே வெற்றி பெற்றன.

    கல்யாணராமன் படத்தில் `ஆஹா வந்துருச்சு' பாடலும், அதற்கு கமல் ஆடிய வித்தியாசமான நடனமும் ரசிகர்களை பெருமளவில் கவர்ந்தன.

    பஞ்சு சார் அடுத்து "கவரிமான்'' என்ற படத்தில் நடிக்க சிவாஜியை ஒப்பந்தம் செய்தார். நடிகர் திலகத்தின் பாத்திரப் படைப்பை ரசிகர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. (மனைவி சோரம் போகிற காட்சியை பார்க்கும் கணவனின் கேரக்டர்)

    என் இசையில் முதன் முதலில் ஒரு தியாகராஜ கீர்த்தனை இடம் பெற்றது இந்தப் படத்தில்தான். "ப்ரோவ பாரமா?'' என்ற கீர்த்தனையை ஜேசுதாஸ் பாட, டி.வி.கிருஷ்ணன் அவர்களின் வயலினும், டி.வி.கோபாலகிருஷ்ணனின் மிருதங்கமும் இணைந்தன.

    சிவாஜி இந்தப் பாட்டுக்கு வாயசைத்ததை கண்டு வியந்து போனேன்.

    ஆரம்பத்தில் ஜேசுதாஸ் ராகம்பாடி, தாளம் ஏதும் இல்லாமல் திடீரென்று `ப்ரோவபாரமா' என்று தொடங்குமாறு பதிவு ஆகியிருந்தது.

    ராகம்பாடி, `ப்ரோவ பாரமா' தொடங்குவதற்கு இடையில் தாளத்தில் ஏதாவது வாசித்திருந்தால் நடிப்பவர்களுக்கு பாடல் தொடங்கும் இடம் சரியாகத் தெரிந்து வாயசைக்கலாம்.

    ராகம்பாட, வெறும் தம்புரா மட்டும் போய்க்கொண்டிருக்க, அது எவ்வளவு நேரம் போகிறது என்று கண்டுபிடித்து, பாடல் ஜேசுதாஸ் குரலில் வரும் அந்த நொடியை எப்படியோ கண்டுபிடித்து சரியாக வாயசைத்தார்.

    இதைப் பாராட்டி, அண்ணன் சிவாஜியிடம், "எப்படிச் செய்கிறீர்கள்?'' என்று கேட்டேன்.

    "என்னை என்னடா நினைச்சிட்டே? சும்மா ஏனோதானோன்னு சினிமாவுக்கு வந்தவன்னு நினைச்சியா? இதெல்லாம் முடியாட்டா ஏண்டா ஒருத்தன் நடிகனா இருக்கணும்?'' என்று கேட்டார் சிவாஜி.

    "நடிகர் திலகம்'' என்று சும்மாவா பட்டம் கொடுத்தார்கள்?

    "லட்சுமி'' படத்தில் கிராமிய சந்தத்தை வேகமாக அமைத்துப் பாடிய பாடல் "தென்ன மரத்துல தென்றலடிக்குது நந்தவனக் கிளியே.''

    நானும் பி.சுசீலாவும் பாடினோம். இந்த வகையில் இது சுசீலா அவர்களுடன் நான் சேர்ந்து பாடிய முதல் பாடல்.

    பண்ணைபுரத்தில் உள்ள எங்கள் வீட்டில், தம்புராவுடன் சுசீலா இருக்கும் படத்தை பிரேம் போட்டு நான் மாட்டி வைத்திருந்தது, இந்தப் பாடலை அவருடன் பாடும்போது நினைவுக்கு வந்தது.

    கோவை செழியன் தயாரிப்பில் வந்த "முதல் இரவு'' படத்தில், "மஞ்சள் நிலாவுக்கு இன்று முதல் இரவு'' என்ற பாடல் பிரபலமானது. டைரக்டர் ஸ்ரீதர் இந்தப் பாடலை கேட்டு என்னை மிகவும் பாராட்டினார்.

    பாரதிராஜா டைரக்ஷனில் "நிறம் மாறாத பூக்கள்'' படத்துக்கு பாடல் பதிவுடன் பூஜை.

    ஒரு ஓட்டலில் கதையை பாக்யராஜை சொல்லச் சொன்னார், பாரதி. கோர்வையாக,அதே நேரம் நகைச்சுவை கலந்து நன்றா கவே கதை சொன்ன பாக்யராஜை பாராட்டினேன். பாரதியும், "அதனால்தான் அவனையே சொல்லச்சொன் னேன். நல்ல திறமைசாலி'' என்று பாராட்டினார்.

    இடைவேளைக்குப்பிறகு சில மாற்றங்கள் இருக்கலாம்.

    பூஜைக்கு இரு நாயகியரும் கதாநாயகனும் பாடுகிற மாதிரி ஒரு பாடலை எடுத்துக் கொள்ளலாம் என்பதை சொல்லிவிட்டார்கள்.

    தயாரிப்பாளர் வீட்டிலேயே கம்போசிங் நடந்தது. அப்போது அவர் தயாரிப்பில் வெளிவந்த "வருவான் வடிவேலன்'' படம் நன்றாக ஓடிக்கொண்டிருந்தது.

    கவியரசர் கண்ணதாசன் அதுவரை காலை 10 மணிக்கு முன்னதாக பாட்டெழுத வந்தது கிடையாது. எனக்கு 9 மணிக்கு பின்னணி இசை வேலை இருந்ததால் கவியரசர் முதன் முதலாக எனக்காக காலை 71/2 மணிக்கு பாட்டெழுத வந்துவிட்டார்.

    கதையைச் சொல்லி டிïனை வாசித்த உடனே,

    "ஆயிரம் மலர்களே மலருங்கள்!

    அமுத கீதம் பாடுங்கள் பாடுங்கள்''

    என்று எழுதினார். பாரதி உள்பட அனைவருக்கும் பிடித்திருந்தது. பாரதிராஜா இயக்கிய இந்த நான்காவது படமும் நன்றாக ஓடியது.

    "ஊர்வசி நீனே நன்ன ப்ரேயசி'' என்ற கன்னடப்படம் தெலுங்கிலுமாக இரு மொழிப்படமாக வந்தது. இதன் மலையாளம் டைரக்டர் ஐ.வி.சசி இயக்கிய "பகலில் ஓர் இரவு'' படம். ஸ்ரீதேவி நடித்திருந்தார்.

    பாம்குரோவ் ஓட்டலில் கம்போசிங் நடந்தது கவியரசர் "இளமையெனும் பூங்காற்று'' என்று எழுதினார்.

    இங்கே ஒன்றைச் சொல்லவேண்டும். கவியரசர் - எம்.எஸ்.விஸ்வநாதன் இணைந்து செய்த பாடல்கள் எல்லாம் மிகவும் நல்ல லட்சண அமைப்புடன் இருக்கும்.

    முதல் வரி தொடங்க, அதே சந்தத்தில் குறைந்தது நான்கு அடிகளாவது வரும்.

    "எட்டடுக்கு மாளிகையில்

    ஏற்றி வைத்த என் தலைவன்

    விட்டு விட்டுச் சென்றானடி

    வேறு பட்டு நின்றானடி''

    "கண்ணன் என்னும் மன்னன்

    பேரைச் சொல்லச் சொல்ல

    கல்லும் முள்ளும் பூவாய்

    மாறும் மெல்ல மெல்ல''

    - இப்படி எந்தப் பாடலை எடுத்தாலும் ஒரு ஒத்த அழகுடன் இருக்கும்.

    மாற்றம்

    இதை நான் மாற்ற எண்ணினேன்

    ஒரு அடிபோல் இன்னொரு அடி வராமல் போனாலும், அழகு கெடாமல் இருக்க வேண்டும் என்றும், `இங்கே நான் நிறுத்த வேண்டும் - இங்கே நீட்ட வேண்டும்' என்ற வரைமுறைகளைத் தாண்ட வேண்டுமென்றும் என்னுடைய மெட்டுக்களை அமைத்தேன். அதிலும் ஒரு அழகு இழையோடும் விதமாக கவியரசர் எழுதிவிட்டார்.

    "இளமை எனும் பூங்காற்று பாடியது ஓர் பாட்டு

    ஒரு பொழுதில் ஓர் ஆசை சுகம் சுகம் அதிலே ஒரே சுகம்

    ஒரே வீணை ஒரே நாதம்''

    இசையோடு இந்த வரிகள் கொஞ்சிக் குழையும் என்பது அவருக்கும் தெரிந்தே இருந்தது.

    இதில் இன்னும் ஒரு பாடல் பரிசோதனை முயற்சியாக, "தாம்த தீம்த'' என்று தொடங்கும் பாடலில், ஆண் - பெண் கோரசை வைத்தே, இசைக்குழு இல்லாமல், பாடலுக்கு இடையில் வரும் இசையை கோரசே இசைப்பது போல அமைத்திருந்தேன்.

    நன்றாக இருந்தாலும் வெளியே தெரியாமல் போன காரணம் தெரியவில்லை.

    `பஞ்ச பூதாலு' என்ற தெலுங்குப்படம் தமிழில் சிவாஜி நடிக்க "பட்டாக்கத்தி பைரவன்' ஆனது. இந்தப் படத்தை நினைத்தாலே "எங்கெங்கோ செல்லும் என் எண்ணங்கள் பாடல்தான் மனதில் ஓடிவரும்.

    என் முதல் படமான "அன்னக்கிளி''யின் கதையை எழுதிய செல்வராஜ், முதன் முதலில் "பொண்ணு ஊருக்குப் புதுசு'' என்ற படத்தை டைரக்ட் செய்தார். இதில் எல்லாப் பாடல்களுமே என்றைக்கும் கேட்க சுகமானவை.

    "ஓரம்போ''

    "சாமக்கோழி கூவுதம்மா''

    "ஒனக்கெனத்தானே இந்நேரமா''

    - போன்ற படத்தின் எல்லாப் பாடல்களையும் அமர்தான் எழுதினான்.

    தமிழ்ப் படங்களுக்கு இசை அமைப்பதில் `பிசி'யாக இருந்த இளையராஜா, தெலுங்கு, மலை யாளப் படங்களுக்கும் இசை அமைத்தார்.
    தமிழ்ப் படங்களுக்கு இசை அமைப்பதில் `பிசி'யாக இருந்த இளையராஜா, தெலுங்கு, மலை யாளப் படங்களுக்கும் இசை அமைத்தார்.

    இசை அனுபவங்கள் குறித்து இளையராஜா கூறியதாவது:-

    "பழசை நினைத்துப் பார்ப்பது என்பது எனக்கு எப்போதுமே பிடித்தமான ஒன்று. இன்றைக்கு, ஒரு இசையமைப்பாளராக என்னை ரசிகர்கள் அங்கீகரித்துக் கொண்டால்கூட, ஊரில் இருந்து நான் வரும்போது இந்த நம்பிக்கை இருந்ததா என்றால், "இல்லை'' என்பதுதான் என் பதிலாக இருக்கும்.

    "சிகப்பு ரோஜாக்கள்'' படத்தின் பாடல்கள் பதிவான நிலையில் ஒரு நாள் அண்ணன் பாஸ்கரிடம் மனம் விட்டுப் பேசினேன். "அண்ணா! நாம் கிராமத்தை விட்டு வரும்போது அம்மா நம்மிடம் `பட்டணத்தில் வேலை கிடைக்காவிட்டால் என்ன செய்வீர்கள்?' என்று கேட்டார்கள். பதிலுக்கு நாம், "அப்படி ஒருவேளை எதிர்பார்த்தபடி வேலை கிடைக்கவில்லை என்றால், பிளாட்பாரத்தில் - தெருவில் உட்கார்ந்து ஜனங்கள் முன்பு வாசிப்போம். எங்களுக்கென்ன கவலை!'' என்று சொன்னோமல்லவா! அப்படி வாசிக்கும் நிலைமை ஏற்படவில்லையென்றாலும், கடற்கரையில் உட்கார்ந்து வாசிப்பது போல ஒரு போட்டோவாவது எடுத்துக் கொள்வோமா?'' என்று கேட்டேன்.

    பாஸ்கருக்கு என் யோசனை பிடித்தது. "போகலாமே'' என்றார்.

    பீச்சுக்குப்போனால் அங்கே படப்பிடிப்பு நடக்கிறது. சிகப்பு ரோஜாக்கள் படத்திற்காக கமல் நடிக்க பாரதிராஜா டைரக்ட் செய்து கொண்டிருந்தார்.

    தானாகக் கிடைத்த வாய்ப்பை நழுவ விடலாமா?

    நாங்கள் பிளாட்பாரத்தில் வாசிப்பது போலவும், கமலும் பாரதியும் எங்கள் பாட்டை கேட்டுக்கொண்டே தரையில் விரித்திருந்த துண்டில் காசு போடுவது போலும் படங்கள் எடுத்துக்கொண்டோம்!

    "சிகப்பு ரோஜாக்கள்'' படம் பின்னணி இசைக்காக என்னிடம் வந்தது.

    பாரதிராஜா தனது தாயாருடன் தேனாம்பேட்டை காமராஜர் சாலையில் இருந்தபோது நானும் பாரதியும் அண்ணா சாலையில் எஸ்.ஐ.இ.டி. காலேஜ் வரை நடந்து போய் வருவோம். சில சமயம் இரவு 9 மணியைக் கடந்து வீட்டுக்குத் திரும்புவோம்.

    இப்படி ஒரு நாள் `வாக்கிங்' போன நேரத்தில், பாரதி ஒரு கதை சொன்னார். அது புகழ் பெற்ற ஆலிவுட் டைரக்டர் ஆல்பிரட் ஹிட்ச்சாக்கின் படம் போல இருந்தது.

    நாங்கள் பிளாட்பாரத்தில் நடந்து கொண்டிருந்தபோது, எதிரே பாழடைந்த பங்களா ஒன்று எங்கள் கண்ணில்படும். அதை பார்த்துத்தான் அந்தக் கதை தன் மனதில் உருவானதாக பாரதி சொன்னார். அந்தக் கதைதான், அவரது டைரக்ஷனில் `சிகப்பு ரோஜாக்கள்' ஆகியிருந்தது. பாரதிராஜா என்றால் கிராமத்துக் கதைகளை மட்டுமே டைரக்ட் செய்வார் என்று அப்போது ஒரு பேச்சு இருந்தது. அதற்குப் பதிலடி தருகிற விதத்தில் இந்தப் படம் வந்திருப்பதை ரெக்கார்டிங்கின் போதே தெரிந்து கொண்டேன்.

    பின்னணி இசைக்கு பொதுவாக எல்லாப் படத்துக்கும் 6 கால்ஷீட்டுகள் தேவைப்படும். ஆனால் இந்தப் படத்துக்கோ 4 கால்ஷீட்டுகளே தேவைப்பட்டது. அதாவது மூன்று நாளில் ஐந்தே பேர்தான் இசைக்குழு. நான்காவது கால்ஷீட்டில் 12 வயலின், 2 செல்லோ அவ்வளவுதான்.

    சொன்னால் ஆச்சரியமாக இருக்கும். "சிகப்பு ரோஜாக்கள்'' படத்தின் பின்னணி இசைக்கு மொத்தப் பில்லும் வெறும் பத்தாயிரம் ரூபாய்தான்.

    இந்தப் படத்தின் வெற்றி, இதை இந்திக்கும் கொண்டு போனது. இந்தி `ரீமேக்'கில் ஆர்.டி.பர்மன் இசையமைத்தார்.

    எப்படி இந்த பின்னணி இசையை கிரியேட் செய்தேன் என்று என்னிடம் அவரே கேட்டு வியந்தார்.

    இந்தப் படத்துக்கு அவர் அமைத்த இசையில் சரியான `எபெக்ட்' வராமல் இருந்திருக்கிறது. இதனால் தமிழில் நான் இசையமைத்த "மிïசிக்'' டிராக்குகளை தயாரிப்பாளர் கே.ஆர்.ஜி.யிடம் கேட்டிருக்கிறார், பாரதி.

    கே.ஆர்.ஜி. என்னிடம் வந்து "கொடுக்கலாமா?'' என்று கேட்டார். நான் கே.ஆர்.ஜி.யிடம், "என்னைவிட நன்றாக இசையமைப்பார் என்றுதானே ஆர்.டி.பர்மனிடம் பாரதி போனார்! அவரே போடட்டும். டிராக்குகளை கொடுக்கவேண்டாம்'' என்று கூறிவிட்டேன். டிராக்குகளை கொடுத்திருந்தாலும் டைட்டிலில் என் பெயர் வராதல்லவா!''

    நடிகர் பாலாஜி தயாரிப்பாளராகவும் மாறி, படங்கள் தயாரித்துக் கொண்டிருந்தார். "தியாகம்'' என்ற படத்தை அப்போது தயாரித்தார். சிவாஜி நடித்த இந்தப் படத்தில், "வசந்த காலக் கோலங்கள், வானில் விழுந்த கோடுகள், கலைந்திடும் கனவுகள்' கண்ணீர் சிந்தும் உறவுகள்'' என்ற கவியரசு கண்ணதாசனின் அற்புதமான சிந்தனையுடன் கூடிய பாடல் இடம் பெற்றது.

    இதே படத்தில் சிவாஜி பாடுவதாக வரும் "நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு'' என்ற பாடலும் காலத்தில் அழியாதது.

    "நதி வெள்ளம் காய்ந்து விட்டால்

    நதி செய்த குற்றம் இல்லை!

    விதி செய்த குற்றம் அன்றி வேறே யாரம்மா!

    மனிதனம்மா மயங்குகிறேன்''

    - இப்படி போகும் பாடலில் வாழ்க்கைத் தத்துவத்தை இயல்பாக சொல்லியிருந்தார் கவியரசர்.

    தமிழில் சிவாஜி நடித்த "வாழ நினைத்தால் வாழலாம்'', "வட்டத்துக்குள் சதுரம்'' என்று போய்க்கொண்டிருந்த நேரத்தில், `வயசு பிடிசிந்தி' என்ற தெலுங்குப் பட வாய்ப்பும் வந்தது. இந்த வகையில் என் முதல் தெலுங்குப்படம் இது.

    இதே சமயத்தில் `வ்யா மோஹம்' என்ற மலையாள படத்துக்கும் இசை அமைக்கும் வாய்ப்பு வந்தது. எனது இசையில் வந்த இந்த முதல் மலையாளப்படம் தமிழில் ஸ்ரீதர் டைரக்ட் செய்த "போலீஸ்காரன் மகள்'' என்ற படத்தின் ரீமேக்.

    தேவர் பிலிம்ஸ் "அன்னை ஓர் ஆலயம்'' என்றொரு படம் எடுத்தார்கள். ரஜினி முதன் முதலாக தேவர் பிலிம்சில் நடித்த படம்.

    இந்தப் படத்துக்கு முன்னால் ஒரு முறை திருப்பதி சென்று சுவாமி தரிசனம் செய்து வரலாம் என்று போயிருந்தேன். பெயர், புகழ் என்று எந்த செல்வாக்கையும் உபயோகிக்காமல் சாதாரண பக்தனாக போய் வந்தேன். என்னுடன் மனைவி, குழந்தைகளும் வந்திருந்தார்கள்.

    அப்படிப் போனபோது தரிசனம் செய்யக்கூட விடாமல், பிடித்துத் தள்ளுவதும், ஆட்கள் நெருக்குவதுமாக மிகவும் வருந்தும்படியான தரிசனமாகியது. அப்போது நான் பெருமாளிடம், "சந்நிதியில் சாதாரணமாக வந்தேன். உன்னை தரிசிக்க இயலவில்லை. இனிமேல் உன்னைப் பார்க்க வரமாட்டேன்'' என்று சபதம் செய்து விட்டு வந்துவிட்டேன்.

    "அன்னை ஓர் ஆலயம்'' படத்தின் இசை அமைப்பாளர் என்ற முறையில் என்னை படத்தின் டைரக்டர் தியாகராஜன் சந்தித்தார். "ராஜா சார்! அன்னை ஓர் ஆலயம்'' கம்போசிங்கிற்கு திருப்பதி போகலாமா?'' என்று கேட்டார்.

    மூகாம்பிகை போய் என் வாழ்க்கை முறை முற்றிலுமாய் மாறியிருந்த நேரம் அது. எனவே வேண்டும் என்றோ, வேண்டாம் என்றோ எதுவும் சொல்லாமல் வெறுமனே தலையை மட்டும் அசைத்தேன்.

    "அப்படியென்றால் ஞாயிற்றுக்கிழமை போகலாமா?'' என்று கேட்டார்.

    அதற்கும் தலையசைப்பில் சரி சொன்னேன்.

    அப்போது திருப்பதியில் ஒரு பத்து காட்டேஜ்கள் மட்டுமே கட்டப்பட்டிருந்தன.

    ஐந்து காட்டேஜ்களில் ஒன்றில் நானும், இன்னொன்றில் கவிஞர் வாலியும், என் உதவியாளர்கள் இன்னொன்றிலுமாக இருந்தோம். டைரக்டர் தியாகராஜன், அவரது ïனிட் ஆட்கள் அடுத்த 2 காட்டேஜ்களில் தங்கினார்கள்.

    முதல் நாள் அதிகாலை 4 மணிக்கு ராஜதரிசனம் என்று சொல்லி தேவஸ்தானத்தில் இருந்து அழைத்துப் போனார்கள்.

    நானும் போனேன். தரிசனம் நன்றாக நடந்தது. என்னிடம் மட்டும் "என்ன! வரமாட்டேன் என்றாயே... வரவைத்துவிட்டேன் பார்த்தாயா?'' என்று சுவாமி கேட்பது போலிருந்தது.

    நானும் மானசீகமாய்ப் பேசினேன். "நீ தரிசனம் கொடுத்தாலும் நீதான் பெரும் ஆள்! தரிசனம் கொடுக்காவிட்டாலும் நீதானே பெரும் ஆள்! இதில் என் மனம் போல் தரிசனம் கிடைத்தால் என்னைப்பற்றி நான் பெருமைப்பட என்ன இருக்கிறது? நீ கொடுத்தால்தானே கிடைக்கும். கொடுத்தாலும் நீயே. கொடுக்காவிட்டாலும் நீயே!'' என்று மனதுக்குள் கூறிக்கொண்டேன்.

    அங்கிருந்த ஒரு வாரமும் விதவிதமான அலங்காரத்தில் சுவாமி இருப்பார். தினசரி காலை 4 மணிக்கு எங்களை அழைப்பார். தரிசனம் கொடுப்பார். எங்களை பெருமைப்பட வைப்பார். அதைப் பார்த்து ரசிப்பார்.

    ரெக்கார்டிங் சமயத்தில்தான் இதை வாலியிடம் சொன்னேன். அதிசயப்பட்டார். "யோவ் நீ பெருமாளுக்கு அடியார்யா! அதனால்தான் உன்னை அழைத்து வந்து தரிசனம் கொடுத்திருக்கிறார்'' என்றார்.

    "பிரியா'' படத்துக்கு முதன் முதலாக "ஸ்டீரியோ'' முறையில் பாடல்களை பதிவு செய்தார், இளையராஜா.
    "பிரியா'' படத்துக்கு முதன் முதலாக "ஸ்டீரியோ'' முறையில் பாடல்களை பதிவு செய்தார், இளையராஜா. அந்தப் பாட்டைக் கேட்ட பிரபல இந்தி இசை அமைப்பாளர் சலீல் சவுத்ரி, "இதுபோன்ற திரை இசையை இதுவரை நான் கேட்டது இல்லை'' என்று பாராட்டினார்.

    திலீப்குமார் - வைஜயந்திமாலா நடித்த "மதுமதி'' உள்பட ஏராளமான இந்திப் படங்களுக்கு இசை அமைத்தவர் சலீல் சவுத்ரி. தென்னாட்டில் இருந்து முதன் முதலாக ஜனாதிபதியின் தங்கப்பதக்கம் பரிசு பெற்ற "செம்மீன்'' மலையாளப் படத்துக்கு இசை அமைத்தவரும் அவர்தான்.

    தனது இசைப்பயணம் குறித்து இளையராஜா தொடர்ந்து கூறியதாவது:-

    "முள்ளும் மலரும்'' படத்தில் டைரக்டர் மகேந்திரன் முடிவு செய்த இடைவேளை வேறு. இப்போது தியேட்டரில் பார்த்த இடைவேளை வேறு.

    இதனால் என்னைவிட, டைரக்டர் மகேந்திரன் அதிகம் அதிர்ந்து போனார். அதற்கப்புறம் படம் பார்க்கப் பிடிக்காமல் நாங்கள் தங்கியிருந்த ஓட்டலுக்குத் திரும்பிவிட்டோம்.

    தியேட்டர் முதலாளி தன் வீட்டில் சமைத்த சாப்பாட்டுடன் எங்களைப் பார்க்க வந்திருந்தார்.

    அவரைப் பார்த்ததும் மகேந்திரன் கோபமாக, "என்ன சார் இது! இடைவேளை இந்த இடத்தில் இல்லையே! எப்படி மாறியது?'' என்று கேட்டார்.

    தியேட்டர் அதிபரோ எங்கள் டென்ஷனை கண்டுகொள்ளாமல் "ஓ! அதுவா... சார்! உங்களுக்கு ஒரு விஷயம் சொல்கிறேன். நம்ம தியேட்டர் ஆபரேட்டர் இருக்கிறானே, அவன் ஒரு டைரக்டருக்கு மேல சார்! சொன்னா நம்பமாட்டீங்க. இந்த படத்துல இடைவேளை போடற இடம் சரியில்லை. ரஜினி மேல லாரி ஏறுகிற மாதிரி ஒரு சீன். அப்ப இடைவேளை போட்டாத்தான் "ரஜினிக்கு என்னாச்சு?'' என்ற பதட்டத்தோடு படத்தைப் பார்ப்பார்கள். அப்படிப் பார்க்கும்போது "கை மட்டும்தான் போய்விட்டது'' என்று காட்டினால் ஒரு `பஞ்ச்' இருக்கும் என்றான் சார்! சொன்னது சொன்னபடி சீனை கட் பண்ணி முன்னே பின்னே போட்டு எப்படி சூப்பரா பண்ணியிருக்கான் பார்த்தீங்களா? அதனாலதான் நான் அவன் விஷயத்திலே தலையிடறதே இல்லை சார்!'' என்று சர்வ சாதாரணமாக சொன்னார்.

    அதோடு, டைரக்டர் மகேந்திரனை பார்த்து, "இப்ப படம் எப்படியிருக்கு சார்?'' என்றும் கேட்டார்.

    மகேந்திரன் பதில் சொல்லவில்லை. ஆனால் நான் மகேந்திரனைப் பார்த்து, "நமக்கும் மேலே ஒருவனடா! அவன் நாலும் தெரிந்த தலைவனடா'' என்று பாடினேன்.

    பஞ்சு அருணாசலம் சார் அடுத்து "பிரியா'' படத்தை தயாரிக்க முடிவு செய்தார்.

    பஞ்சு சார் கதை வசனம் எழுத, சுஜாதா திரைக்கதை அமைக்க எஸ்.பி.முத்துராமன் டைரக்ட் செய்வதாக ஏற்பாடு. ரஜினி, ஸ்ரீதேவி இந்தப் படத்தில் நடிக்க ஒப்பந்தமானார்கள்.

    இந்தப் படத்துக்கான பாடல்கள் வித்தியாசமாக இருக்கவேண்டும் என்று பஞ்சு சார் விரும்பினார். அவர் விருப்பத்தில் எனக்கும் உடன்பாடுதான். எனவே யோசித்தேன். அப்போது ஜேசுதாஸ் தனது தரங்கிணி ஸ்டூடியோவிற்காக, "ஸ்டீரியோ'' முறையில் பாடல் பதிவு செய்வதற்கான கருவிகளை புதிதாக வாங்கியிருந்தார்.

    அவருடைய மெல்லிசை நிகழ்ச்சிகளில் இந்த புதிய கருவிகளைப் பயன்படுத்தி ரசிகர்களை மெய்மறக்கச் செய்யும் விதத்தில் `சவுண்ட் சிஸ்டம்' அமைத்தார்.

    "பிரியா'' படத்தின் பாடல்களை இந்த `ஸ்டீரியோ' முறையில் பதிவு செய்ய முயன்று பார்த்தால் என்ன என்று தோன்றியது. "கம்போசிங்கிற்கு, பெங்களூர் போகலாம்'' என்றார், பஞ்சு அருணாசலம். போனோம்.

    முதல் நாள் ஓட்டலில் உட்கார்ந்தோம். கம்போசிங்கில் திருப்தி வரவில்லை. நான் பஞ்சு சாரிடம் "அண்ணே! பெங்களூர் வந்து ரூமிற்குள் அடைந்து கிடப்பதா? லால்பாக், கம்பன்பாக் போன்ற இடங்களுக்கே போய் கம்போஸ் செய்வோம்'' என்றேன்.

    பஞ்சு சாரும் சிரித்துக்கொண்டே, "சரி, அங்கேயே போவோம்'' என்றார்.

    காரில் வாத்தியங்களை ஏற்றிக்கொண்டு கிளம்பினோம்.

    லால்பாக்கில் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியை தேர்ந்தெடுத்து அங்கே ஒரு பெட்ஷீட் விரித்து உட்கார்ந்து கம்போஸ் செய்ய ஆரம்பித்தோம். கூட்டம் நாங்கள் இருந்த பக்கமாக வரவில்லை என்பதால் `இசை'க்கு இடைïறு இல்லாதிருந்தது.

    இப்படியே ஒவ்வொரு நாளும் ஒவ்வோர் இடத்தில் கம்போசிங் நடந்ததில் 6 பாடல்களும் முடிந்தன.

    சென்னைக்கு திரும்பியதும், ஜேசுதாசிடம் எங்கள் புதிய இசை முயற்சி பற்றி தெரிவித்தேன். இது விஷயத்தில் எங்கள் ஆர்வத்துக்கு இணையாக ஜேசுதாஸ் உற்சாகமாகி விட்டார். "இன்னும் சில புதிய மெஷின்கள் வாங்கி விடுகிறேன்'' என்று சொன்னவர் கையோடு அப்போதே ஆர்டர் கொடுத்துவிடடார். புதிய மெஷின்களும் வந்து சேர்ந்தன.

    பரணி ஸ்டூடியோவில் அத்தனை மெஷின்களையும் செட்டப் செய்து, மைக், வயரிங், ஹெட்போன்ஸ் எல்லாம் அமைத்து முதன் முதலாக "என்னுயிர் நீதானே'' என்ற பாடலை பதிவு செய்தோம்.

    நம்பவே முடியவில்லை. இசை மிகத் தெளிவாக இருந்தது. தனியாகக் கேட்டபோதும் சரி, மொத்தமாக கேட்டபோதும் சரி துல்லியமாக ஒலித்தது பாட்டு. அளவு கடந்த மகிழ்ச்சியைத் தரும் இசையாக அது இருந்தது.

    தமிழ்த்திரை உலகில், உலகத் தரத்துக்கு ஒப்பாக ஒரு இசையைக் கேட்பது அதுதான் முதல் தடவை.

    இசைக் கலைஞர்கள் எல்லா ரெக்கார்டிங்குகளிலும் இதுபற்றியே பேசினார்கள். அப்போது ஒரு மலையாளப் படத்துக்கு இசையமைக்க சென்னை வந்திருந்த பிரபல இந்தி இசை அமைப்பாளர் சலீல் சவுத்ரி காதுக்கும் இந்த செய்தி சென்று விட்டது. அவர் ரெக்கார்டிங்கை பார்க்க பரணி ஸ்டூடியோவுக்கு வந்துவிட்டார். அவருடன் அவரது மகள், உதவியாளர் நேபு ஆகியோரும் வந்திருந்தார்கள்.

    அன்றைக்கு, பி.சுசீலா பாடிய "டார்லிங் டார்லிங்'' பாடல் பதிவாகியிருந்தது.

    சலீல் சவுத்ரி வந்தவுடன், அந்தப் பாடலைப் போட்டுக் காட்டினோம். அவர் முகம் பிரகாசம் அடைந்தது. பாடல் முழுவதையும் கேட்டுவிட்டு, "இதுபோன்ற சினிமா இசையை இதுவரை கேட்டதில்லை'' என்றார், பரவசக் குரலில். ஒரு உண்மைக் கலைஞரின் உயர்ந்த மனோபாவத்தை அது எடுத்துக்காட்டியது.

    இந்த வகையில் முதல் "ஸ்டீரியோ'' இந்தப் படத்தின் பாடல்கள்தான். ஜேசுதாஸ் அவர்களின் ஒத்துழைப்பால்தான் இதை சாதிக்க முடிந்தது.

    இந்த ரெக்கார்டிங் முடிவதற்குள், ரெக்கார்டு செய்த பாடல்களைக் கேட்கும் உற்சாகத்தில் சவுண்டு என்ஜினீயர் வால்ïமை ஏற்ற, ஒரு `ஸ்பீக்கர்' போய்விட்டது.

    ஜேசுதாஸ் அதையும் பொருட்படுத்தாமல், உடனடியாக வேறு ஸ்பீக்கருக்கு ஏற்பாடு செய்தார்.

    "பிரியா'' படம் முழுக்க முழுக்க மலேசியாவிலும், சிங்கப்பூரிலும் படமானது. சண்டைக் காட்சிகளும், சேஸிங் காட்சிகளும் பாடல்களுமாக "பிரியா'' ஜனரஞ்சகமான படமாக வெளிவந்தது.

    இந்தப் படத்தின் ஒரு ரீலில் தொடர்ந்து 10 நிமிடம் வசனம் எதுவும் வராது. `சைலன்ட் மூவி' போல இருக்கும் இந்த இடத்தில் மிïசிக் 10 நிமிடமும் வந்தாக வேண்டும்.

    ரஜினியும், ஸ்ரீதேவியும் சிங்கப்பூரில் உள்ள டூரிஸ இடங்களையெல்லாம் ஜாலியாக பார்த்துத் திரிவது போன்ற காட்சிகள், டால்பின் ஷோ, கிளிகள் விளையாட்டு இதுபோல பலப்பல காட்சிகள் இடம் பெற்ற இந்த ரீலுக்கு இசையமைப்பது என்பது ஒரு சவாலாகவே இருந்தது. சரியான தாள கதியில் மிïசிக்கை கண்டக்ட் செய்யாவிட்டால் கிளி விளையாட்டுக்கு வரவேண்டிய மிïசிக் வேறு இடத்துக்கு போய்விடும்! அந்த காலகட்டத்தில் எந்த வசதியும் இல்லாமல் ஒவ்வொரு ஷாட்டுக்கும் ஒவ்வொரு மிïசிக் வரவைப்பதென்பது எவ்வளவு கடினம் என்பது இப்போதுதான் தெரிகிறது. அன்றைக்கு நான் ஏதோ விளையாட்டுப் போல அதை செய்துவிட்டேன். அன்று அரை மணி நேரத்தில் முடிந்த அந்த ரீலுக்கு, இன்று மிïசிக் செய்தால் மூன்று நாட்களாவது ஆகும். அதிலும் அன்றைக்கு கிடைத்த அந்த இசை கிடைக்காது என்பது மட்டும் நிச்சயம்.

    தயாரிப்பாளர் கே.ஆர்.ஜி.க்காக "சிகப்பு ரோஜாக்கள்'' என்ற படத்தை பாரதிராஜா டைரக்ட் செய்யும் வாய்ப்பு வந்தது.

    கமலஹாசன் - ஸ்ரீதேவி நடித்த இந்த படத்தை, ஒரு "மர்டர் மிஸ்ட்ரி'' படமாகத்தர பாரதி திட்டமிட்டிருந்தார். படத்தில் இரண்டே பாடல்கள். ஒன்று கவிஞர் கண்ணதாசன் எழுதிய "இந்த மின்மினிக்கு கண்ணில் ஒரு மின்னல் வந்தது.'' அடுத்தது வாலி எழுதிய "நினைவோ ஒரு பறவை'' பாடல்.

    ரெக்கார்டிங்கை பார்ப்பதற்காக, கமல் வந்திருந்தார். ரிகர்சல் பார்த்து முடித்த நேரத்தில் "பிரேக்'' விடப்பட்டது

    அந்த நேரத்தில் கமல் சில ஆங்கிலப் பாடல்களைப் பாடிக்காட்டினார். நன்றாக இருந்தது.

    நான் கமலிடம், "படத்திலும் நீங்களே இந்தப் பாட்டை பாடிவிடுங்கள்'' என்றேன்.

    "ஓ பாடலாமே'' என்றார். ஜானகியுடன் சேர்ந்து பாடினார். "சிகப்பு ரோஜாக்கள்'' படத்தில் இடம் பெற்ற இரண்டு பாடல்களுமே "ஹிட்'' ஆயின. படமும்தான்.


    சிவாஜிகணேசன் - கே.ஆர்.விஜயா நடித்த `ரிஷிமூலம்' படத்துக்கு, இளையராஜா இசை அமைத்தார். இந்தப் படத்தின் பாடல் பதிவின்போது ருசிகரமான நிகழ்ச்சிகள் நடந்தன.
    சிவாஜிகணேசன் - கே.ஆர்.விஜயா நடித்த `ரிஷிமூலம்' படத்துக்கு, இளையராஜா இசை அமைத்தார். இந்தப் படத்தின் பாடல் பதிவின்போது ருசிகரமான நிகழ்ச்சிகள் நடந்தன.

    தனது இசை வாழ்வு அனுபவங்கள் குறித்து, இளையராஜா கூறியதாவது:-

    "சென்னை கமலா தியேட்டரில் `கிழக்கே போகும் ரெயில்' படத்தின் வெற்றி விழா. விழாவில் நடிகர் திலகம் சிவாஜி கலந்துகொண்டு எங்கள் எல்லாருக்கும் பரிசு வழங்கினார்.

    அவர் பேசும்போது, படத்தில் இடம் பெற்ற ``மாஞ்சோலைக் கிளிதானோ'' என்ற பாடலை வாய்விட்டுப் பாடி, ``அடடா! என்ன பாடல்! என்ன பாடல்!'' என்று புகழ்ந்து பேசினார். நடிகர் திலகத்திடம் இருந்து கிடைத்த இந்தப் பாராட்டு, எங்களை நெகிழ்ச்சி அடையச் செய்தது.

    சிவாஜி பேசும்போது, பாரதிராஜாவை வானளாவ உயர்த்திப்பேசினார். அப்போது, விழாவுக்கு வந்திருந்தவர்களில் ஒருவராக, பாரதிராஜாவின் அம்மாவும் அமர்ந்து, அதைக் கேட்டுக் கொண்டிருந்தார்.

    விழா முடிந்ததும், தனது தாயாரை சந்தித்த பாரதிராஜா, ``எப்படி இருந்தது?'' என்று கேட்க, அந்தத் தாயாரோ சர்வ சாதாரணமாக, ``அது என்னமோப்பா! அவங்க என்னென்னமோ பேசுறாங்க! ஆனா என் காதுல பாரதிராசா, பாரதிராசாங்கற உன் பேர் மட்டும்தான் கேட்டுதுப்பா'' என்று சொன்னார்.

    உயர்ந்த தாயுள்ளத்தின் உணர்வுக்கு எடுத்துக்காட்டாகத்தான் என்னால் இதை உணர முடிந்தது.

    இதற்கிடையில் தயாரிப்பாளர் ராஜ்கண்ணுவின் ஆபீசிற்கு ஒருநாள் போய் வரலாம் என்று போனேன். அப்போது ராஜ்கண்ணுவுடன் சிலர் இருந்தனர். என்னைப் பார்த்ததும், ``படத்தின் பாடல்கள் சரியில்லை. பதினாறு வயதினிலே படப்பாடல்கள் மாதிரி அமைந்திருந்தால் படம் இன்னும் நன்றாகப் போகும்'' என்றார்கள்.

    என் முகத்திற்கு எதிரேயே அவர்கள் இப்படிச் சொன்னதில், எனக்கு வருத்தமாகி விட்டது. எல்லா படப் பாட்டுக்களும் ஒரே மாதிரிதான் இருக்க வேண்டுமா? என்ன இவர்களின் பேச்சு? ஒரு அடிப்படை கலை உணர்வு கூடவா இல்லாமல் இருப்பார்கள்? மனம் வருந்தினேன். அந்த மாதிரியான வருத்தங்கள், மனதில் வடுவாகத் தங்கி விட்டன.

    நடிகர் திலகம் சிவாஜி நடிக்க ``ரிஷிமூலம்'' என்ற படத்தை எஸ்.எஸ்.கருப்பசாமி தயாரித்தார். நான் இசை. மகேந்திரன் வசனம், எஸ்.பி.முத்துராமன் டைரக்ஷன்.

    எஸ்.எஸ்.கருப்பசாமி அப்போது அருப்புக்கோட்டை தொகுதியில் எம்.எல்.ஏ. வாக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். மிகவும் கண்டிப்பானவர். கண்ணியமானவரும் கூட.

    பாடல்கள் கம்போசிங்கிற்கு டைரக்டர் எஸ்.பி.முத்துராமன், மகேந்திரன், தயாரிப்பாளர் எஸ்.எஸ்.கருப்பசாமி ஆகியோருடன் மகாபலிபுரம் போனேன். அங்குள்ள தமிழ்நாடு தங்கும் விடுதியில் தங்கினோம்.

    மூன்று நாட்கள் தொடர்ந்து கம்போசிங் நடந்தது. ``நேரமிது'' என்ற பாடலுக்கான சூழ்நிலை புதிது. சிவாஜி - கே.ஆர்.விஜயா பாடுவதாக வரும் இந்த டூயட் எங்கே ஆரம்பிக்கிறது தெரியுமா? அவர்கள் பெட்ரூமில்! அதுவும் குழந்தை அருகில் படுத்திருக்கும்போது!

    அதாவது தூங்கும் குழந்தை விழித்து விடாதபடி, மிக மெல்லியதாக அவர்களின் டூயட் அமைய வேண்டும். டிïன் அமைத்து, பாடிக்காட்டினேன். எல்லாருக்கும் பிடித்திருந்தது.

    இந்த டிïனை நான் கம்போஸ் செய்து கொண்டிருந்தபோது, எதிர்பாராத ஒரு சம்பவம் நடந்தது.

    அந்த மாலை நேரத்தில் பிரான்சில் இருந்து சுற்றுலா வந்திருந்த தம்பதியரில் பெண் மட்டும் எங்கள் அறையை கடந்து போயிருக்கிறார். பாடலைக் கேட்டவர் அப்படியே நின்று விட்டார். பிறகு ``நான் உள்ளே வரலாமா?'' என்று வெளியில் இருந்தவாறே சைகை மூலம் கேட்டார். ``ப்ளீஸ் கம் இன்'' என்று டைரக்டர் சொல்ல, உள்ளே வந்தார்.

    நாங்களெல்லாம் கீழே தரையில் விரிப்பை விரித்து அமர்ந்திருந்தோம். எங்களோடு அவரும் கீழே உட்கார்ந்தார். என் முகம் பார்த்தவர், ``நீங்கள் பாடிய பாடலை மறுபடியும் ஒருமுறை பாட முடியுமா?'' என்று கேட்டார்.

    ``ஓ'' என்றேன். மெதுவாக பாடவும் செய்தேன்.

    அந்தப் பெண்ணின் கண்களில் இருந்து `பொலபொல' வென்று கண்ணீர் கொட்டியது.

    பாடல் முடிந்ததும் எல்லாரும் அமைதியானோம்.

    இப்போது அந்தப் பெண்மணி பேசினார். "இந்த இசைக்கும் எனக்கும் பல ஜென்மங்களாக தொடர்பு இருப்பது போல் உணர்கிறேன்'' என்றார். அதோடு, ``இந்த இசையை எனக்காக எழுதித்தர முடியுமா?'' என்று கேட்டவர், தனக்கு பியானோ வாசிக்கத் தெரியும் என்றும்

    சொன்னார்.என்னிடம் மிïசிக் எழுதும் பேப்பர் இல்லை. எனவே என் லெட்டர்பேடில் இருந்து ஒரு பேப்பரை எடுத்து அதில், கோடுகள் போட்டு அந்த இசையை பியோனோவில் வாசிப்பதற்கு தகுந்தாற்போல் எழுதிக் கொடுத்தேன்.

    வாங்கிக் கொண்ட அந்தப் பெண் நன்றி ததும்ப, ``இந்த இசையை வாங்குவதற்குத்தான் இந்த சுற்றுலா நடந்ததோ என்னவோ?'' என்று சொல்லியபடி விடை பெற்றுச் சென்றார்.

    இந்தப் பாடல் பதிவு செய்யப்பட்டபோது, இன்னொரு சம்பவம்.

    டி.எம்.சவுந்தர்ராஜனும், பி.சுசிலாவும் பாடிக் கொண்டிருந்தார்கள். ``மேகத்திலே வெள்ளி நிலா, காதலிலே பிள்ளை நிலா'' என்ற சரணம் போய்க் கொண்டிருந்தது.

    அப்போது எஸ்.பி.முத்துராமன் என்னை அழைத்தார். ``ராஜா சார்! நீங்கள் கம்போசிங்கில் வெறும் ஆர்மோனியத்துடன் பாடும்போது காதருகில் மிகவும் மெல்லிய குரலில் பாடுவது போல இருந்ததே! இப்போது இவர்கள் பாடும்போது பலமான குரலில் வருவது போலல்லவா இருக்கிறது'' என்றார்.

    மகேந்திரனோ அவர் பங்குக்கு, ``ராஜா! இவ்வளவு சத்தமாக பாட்டைக் கேட்டால், கட்டிலில் தூங்கும் பையன் எழுந்து விடமாட்டானா?'' என்றார்.

    நான் டி.எம்.எஸ். - சுசிலா பாடிக் கொண்டிருந்த அறைக்குப் போனேன்.

    டி.எம்.எஸ்.சிடம், ``அண்ணா! குழந்தை தூங்கிக் கொண்டிருக்கும்போது கணவனும், மனைவியும் பாடும் ரொமாண்டிக் பாடல் இது. மெதுவாகக் கேட்க வேண்டும். இதுவோ பெரிய மலைச்சாரலில் நின்று கொண்டு ``மேகத்திலே வெள்ளி நிலா'' என்று பாடுவது போல் வருகிறது. உங்களுக்கு தெரியாததல்ல. மெதுவாகப் பாடினால் நன்றாக இருக்கும்'' என்றேன்.

    அவர், ``ராஜா! நான் மெதுவாகத்தான் பாடுகிறேன். இப்போ கேளு''என்றவர் பாடினார். மிகவும் சன்னமாக குரல் ஒலிக்க, மெதுவாகத்தான் கேட்டது.

    ``பிறகு எப்படி ரிக்கார்டிங்கில் அவ்வளவு பெரிய சத்தமாக கேட்கிறது?'' என்று கேட்டேன்.

    ``நான் என்னப்பா பண்றது? என் குரல் அமைப்பு அப்படி! நேரில் கேட்டால் மென்மையாகவும் மைக்கில் கேட்டால் கம்பீரமாகவும் ஒலிக்கிற குரலாக ஆண்டவன் கொடுத்து விட்டான்'' என்றார், டி.எம்.எஸ்.

    உள்ளே போய் இருவருடைய குரலையும் குறைத்து பாடலைப் பதிவு செய்தோம்.

    ஆனாலும், அது ஒருவருக்கொருவர் காதில் ரகசியமாக பாடுகிற மாதிரி வரவில்லை.

    மகேந்திரன் கதை வசனம் எழுதிய படங்கள் எல்லாம் நன்றாக ஓடியதால் அவருக்கு டைரக்டு செய்யும் வாய்ப்பு வந்தது. ஆனந்தி பிலிம்ஸ் வேணு செட்டியார் அப்படியொரு வாய்ப்பை வழங்கினார்.

    இதைத் தொடர்ந்து வார இதழ் ஒன்றில் தொடர் கதையாக வந்திருந்த ``முள்ளும் மலரும்'' கதையை படமாக்க மகேந்திரன் முடிவு செய்தார். திரைக்கதை அமைத்து டைரக்ட் செய்யும் ஏற்பாடுகளை தொடர்ந்தார்.

    ரஜினி, ஷோபா, படாபட் ஜெயலட்சுமி, சரத்பாபு என நட்சத்திரங்கள் முடிவானார்கள்.

    கம்போசிங் நடந்தது. அப்போது ``16 வயதினிலே'' படத்தைப் பற்றியும், பாரதிராஜாவின் திறமையைப் பற்றியும் மட்டுமே மகேந்திரன் திரும்பத் திரும்ப பேசிக் கொண்டிருந்தார். அதே நேரம், ``தரத்தில் உயர்ந்த நல்ல படமாக இதைக் கொண்டு வந்து விட வேண்டும்'' என்றும் சொன்னார்.

    ``செந்தாழம்பூவில் வந்தாடும் தென்றல்'', ``அடி பெண்ணே பொன்னூஞ்சல் ஆடும் இளமை'', ``ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்...'' ``நித்தம் நித்தம் நெல்லுச் சோறு'' போன்ற பாடல்கள் உருவாயின. பாலு மகேந்திராதான் கேமரா. மகேந்திரனும், பாலு மகேந்திராவும் நல்ல நண்பர்கள்.

    ரஜினியின் நல்ல நடிப்பு, படத்தின் இயக்கம், கேமரா, கதை, திரைக்கதை எல்லாம் கச்சிதமாக அமைந்து படத்துக்கு வெற்றியை தேடித்தந்தன.

    ஒரு படத்தின் வெற்றிக்காகவே ஒட்டுமொத்த ïனிட்டும் உழைத்தாலும், வெற்றியைத் தருவது நமக்கும் மேலே உள்ள ஒருசக்தி.

    இதை உறுதிப்படுத்தும் விதமாக ஒரு சம்பவம் நடந்தது. நானும் மகேந்திரனும், சேலத்தில் ``முள்ளும் மலரும்'' ஓடிய ஒரு தியேட்டருக்கு போன போது அது நடந்தது.

    தியேட்டர் முதலாளி எங்களை வரவேற்று அழைத்துச் சென்று படம் பார்க்க வைத்தார்.

    படத்தின் ஆறாவது ரீலில், ரஜினி மீது லாரி ஏறியது போல் ஒரு சீன் வரும். அங்கே இடைவேளை என்று போட்டு விட்டார்கள். எனக்கு அதிர்ச்சி. நான் பார்த்தவரை படத்தின் இடைவேளை அது இல்லை.என்னைவிட மகேந்திரன் இன்னும் அதிர்ச்சியாகி இருந்தார்.

    "இசைக் கருவிகளை சரியாக வாசிக்காவிட்டால், அண்ணன் என்றாலும் கோபப்படுவேன்'' என்று இளையராஜா கூறினார்.
    "இசைக் கருவிகளை சரியாக வாசிக்காவிட்டால், அண்ணன் என்றாலும் கோபப்படுவேன்'' என்று இளையராஜா கூறினார்.

    தனது இசைப்பயணம் குறித்து இளையராஜா கூறியதாவது:-

    "தண்ணி கறுத்திருச்சு'' பாடலுக்கு டைரக்டர் ஸ்ரீதர் வேறு டிïன் போட்டுக்கொள்ளலாம் என்று சொன்னாலும், எனக்கு மனசு கேட்கவில்லை. நான் அவரிடம் "சார்! இது ஹிட் ஆகும் நல்ல டிïன்தான். நிறுத்தி நிறுத்திப்பாடி முழுப்பாடலையும் கேட்க முடியாததால் உங்களுக்கு அப்படித் தோன்றுகிறது'' என்றேன்.

    அதோடு, "இந்தப்பாடலை வேறு ஒருவரைக்கொண்டு பாடச் சொல்லலாம்'' என்றும் சொன்னேன்.

    "வேறு யாரை பாட வைக்க நினைக்கிறீர்கள்?'' கேட்டார் ஸ்ரீதர்.

    "மலேசியா வாசுதேவனை பாட வைக்கிறேன்'' என்றேன்.

    "உங்கள் விருப்பம்'' என்றார், ஸ்ரீதர்.

    சொன்னபடி மலேசியாவை பாட அழைத்தேன். ஜி.கே.வி.யும் கூட இருந்தார். மலேசியா வாசுதேவன் பாடி முடித்த நேரத்தில் ஜி.கே.வி. என்னிடம், "இவ்வளவு வித்தியாசமான பாடல் என்று எனக்கு ஏன் அன்றைக்கு தெரியாமல் போயிற்று?'' என்று கேட்டார்.

    இந்தப் பாடல் உள்பட இளமை ஊஞ்சலாடுகிறது படத்தின் எல்லாப் பாடல்களுமே `ஹிட்' ஆனது.

    "என்னடி மீனாட்சி'' என்பது இந்தப் படத்தில் இடம் பெற்ற இன்னொரு பாடல்.

    இந்தப்பாடல் பதிவின்போது ஒரு வேடிக்கை நடந்தது.

    வெளிïரில் இருந்து நிறைய கல்லூரி மாணவ-மாணவிகள் ஸ்டூடியோவுக்கு ஷூட்டிங் பார்க்க வந்திருந்தார்கள். அப்படியே என்னுடைய ரெக்கார்டிங் நடக்கிறது என்று கேள்விப்பட்டு அனுமதியுடன் ரெக்கார்டிங் தியேட்டருக்கு வந்தார்கள்.

    நான் கண்டக்ட் செய்து கொண்டிருந்தேன். அனைவரும் அமைதியாக நின்று வேடிக்கை பார்த்தார்கள்.

    திடீரென்று கமலஹாசன் வந்துவிட்டார். ரிகர்சல் முடிந்ததும் எல்லாரும் அமைதியாய் நிற்க, நான் ஒரு சிறு தமாஷ் செய்ய விரும்பினேன்.

    மிïசிக் எழுதிய பேப்பரை கையில் எடுத்துக்கொண்டு கமலை நோக்கிப் போனேன். அவருடைய கையில் மிïசிக் பேப்பரை கொடுத்து, கொஞ்சம் சத்தமாக "கமல் சார்! எல்லாம் நீங்க சொன்னது போல் எழுதி ரிகர்சல் செய்துவிட்டேன். சரியா இருக்கா? இல்லே ஏதாவது மாற்றணுமா? பார்த்திட்டு சொல்லுங்க'' என்றேன்.

    உடனே அவரும் சிரிக்காமல் சீரியசாக "எல்லாம் சரியாத்தான் இருக்கு. ஆனால்...'' என்று இழுத்து, அதில் ஒரு இடத்தைக்காட்டி "இந்த இடத்தில்தான் நான் எழுதியது போல் வரவில்லை. அதை மட்டும் சரி செய்து விட்டால் நூறு சதவீதம் `பெர்பெக்ட்' ஆகிவிடும்''

    என்றார்.ஆர்க்கெஸ்ட்ரா குழுவினருக்கு எங்கள் நாடகம் புரிந்தது. தங்களுக்குள்ளாக சிரித்துக்கொண்டார்கள்.

    மாணவ-மாணவிகள் தான் எங்கள் நாடகம் புரியாமல் அப்படியே அதை உண்மை என்று நம்பிவிட்டார்கள்.

    "அய்யே! இவ்வளவுதானா? கமலஹாசன் சொல்வதைத்தான் இந்த இளையராஜா செய்கிறாராக்கும்!'' என்று அவர்களுக்குள் மெல்லிய குரலில் பேசிக்கொண்டே கலைந்து போனார்கள்.

    அவர்கள் வெளியே போகும்வரை அமைதியாக இருந்துவிட்டு, அதற்கப்புறம் நானும் கமலும் சிரித்தோம். பாருங்கள்.... அப்படியொரு சிரிப்பு. எங்களுடன் இசைக் குழுவினரும் சேர்ந்து சிரித்தார்கள்.

    இசை விஷயத்தில் நான் ரொம்பவே கண்டிப்பானவன். இசையில் மட்டும் ஏதாவது தவறு வந்தால் கோபம் பொத்துக்கொண்டு வந்துவிடும். பெரியவர், சிறியவர் என்ற தராதரம் இல்லாது கோபப்பட்டு விடுவேன்.

    அண்ணன் பாஸ்கர் மீது கூட இப்படி என் கோபம் பாய்ந்திருக்கிறது. ரெக்கார்டிங்கின்போது பாஸ்கர் "காங்கோ'' போன்ற கருவிகளை வாசிப்பார். சில சமயம் இஷ்டப்படி வாசிப்பார். அதை வேண்டாமென்று சொல்வேன். உடனே என்னை வெறுப்பேற்றவோ, அல்லது தம்பிதானே என்ற எண்ணத்திலோ மீண்டும் தவறாக வாசிப்பார்.

    எனக்கு தலைக்கேறிவிடும். சத்தம் போட்டு வெளியே அனுப்பி விடுவேன்.

    இசைக்குழுவினர் பார்க்க இது நடக்கும். என் இசையில் `காம்ப்ரமைஸ்' என்ற பேச்சுக்கே இடம் இருக்காது. கூடப் பிறந்த அண்ணனே ஆனாலும் தவறாக வாசித்தால் வெளியே போய்விட வேண்டியதுதான் என்பதை அவர்கள் தெரிந்து வைத்திருந்தார்கள். இதனால் சரியாக வாசிக்க வேண்டும் என்ற எண்ணத்தை அவர்களுக்குள் ஏற்படுத்தி ஒரு `டிசிப்ளினை' கொண்டு வந்திருந்தது.

    `ஓபோ' என்ற இசைக் கருவியை வாசிக்கும் இசைக் கலைஞர் ஒருவர் விஷயத்திலும் இப்படியொரு சம்பவம் நடந்து விட்டது. அவர் பெயர் கணேசன். இசைக் குழுவினர் அவரை `கணேசண்ணா' என்றுதான் அன்புடன் அழைப்பார்கள். அன்றைய தினம் ஒரு பாடலுக்கு இவர் வாசித்துக் கொண்டிருந்தார்.

    அந்த `பிட் மிïசிக்' நான் எதிர்பார்த்தபடி அவருக்கு வாசிக்க அமையவில்லை.

    இத்தனைக்கும் நான் இசையமைப்பாளர் என்ற நிலைக்கு முன்னாக கிடார் வாசித்த காலத்தில், அவரோடு எத்தனையோ ரெக்கார்டிங்குகளில் வாசித்திருக்கிறேன். ஒரே டாக்சியில் போய் வந்திருக்கிறோம்.

    இருந்தாலும் இந்த இடத்தில் பிடிவாதமாக நான் எதிர்பார்த்தபடி வரவேண்டும் என்று பல முறை கேட்டும், ரிகர்சல் கொடுத்தும்

    வரவில்லை.கோவர்த்தன் மாஸ்டரும் சில ரிகர்சல் கொடுத்து, "இது எப்படியிருக்கு என்று கேளு'' என்றார்.

    ஊஹும். எனக்கு நூற்றில் இருபத்தைந்து சதவீதம் கூட சரிப்படவில்லை.

    கடைசியில், "அவர் வாசிக்கவேண்டாம். போகட்டும்'' என்று சொல்லிவிட்டேன்.

    எத்தனையோ கால அனுபவம் உள்ளவர். எவ்வளவோ இசையமைப்பாளர்களை பார்த்தவர். இதெல்லாம் எனக்கு பெரிதாகப்படவில்லை.

    இதில் நான் நினைத்தபடி அந்த வாத்தியம் வரவில்லையென்றால் எதற்கு அந்த வாத்தியம்? வேண்டாம். இதுதான் என்பக்க நியாயம்.

    அவர் கொஞ்ச நேரம் அமைதியாக வாடிய முகத்துடன் இருந்துவிட்டு, டாக்சி வந்தவுடன் வாத்தியத்தை எடுத்துக்கொண்டு கிளம்பிவிட்டார்.

    அப்போது வருத்தப்படாத என் மனம், பல நாட்களுக்குப் பிறகு நினைத்து நினைத்து வருந்தியது. என் உள்ளேயே குமைந்து குறுகும் உணர்வை இன்றும் எனக்கு தந்து கொண்டிருக்கிறது.

    பாரதிராஜா "கிழக்கே போகும் ரெயில்'' என்று ஒரு கதையை தயார் செய்து, பூஜை பாடல், ரெக்கார்டிங் வைத்தார். அன்றைக்கென்று பார்த்து மூன்று பூஜைகள். அந்த பரபரப்பிலும் ஒரே நாளில் மூன்று பாடல்களை கிழக்கே போகும் ரெயில் படத்திற்காக பதிவு செய்தோம். இரண்டாவது பாடல் முடிய மதியம் 3 மணி ஆகிவிட்டது. மூன்றாவது பாடலை 4 மணிக்கு தொடங்கினோம். "கோவில் மணி ஓசை தன்னை கேட்டதாரோ'' என்ற அந்த பாடல் முடிய இரவு 10ஷி மணி ஆகிவிட்டது.

    அப்போதெல்லாம் `சினி மிïசிசியன்ஸ் ïனியன்' இருந்தது. இரவு 9 மணிக்குள் ரெக்கார்டிங் முடிக்கப்பட வேண்டும் என்பது அவர்களின் விதிமுறையில் இருந்தது. இருந்தாலும் அவ்வப்போது இது மாதிரியான சந்தர்ப்பங்களில் அட்ஜஸ்ட் செய்து கொள்வது வழக்கமாக இருந்தது.

    "மாஞ்சோலைக் கிளிதானோ'' பாடலை கவிஞர் முத்துலிங்கமும், "பூவரசம்பூ பூத்தாச்சு'' பாடலை அமரும் எழுதியிருந்தார்கள்.

    கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம் எழுதிய ஒரே திரைப்படப்பாடல் என்ற பெருமையை பெற்றது எனது இசையமைப்பில் இந்தப் படத்துக்காக உருவான "மலர்களே நாதஸ்வரங்கள்'' என்ற பாடல். ஆனால் பாரதிராஜா ஏனோ படத்தில் அந்தப் பாடலை வைக்கவில்லை.

    "கிழக்கே போகும் ரெயில்'' ரிலீஸ் ஆன அன்றே படக்கம்பெனி பணியாளர்கள் தியேட்டர்களில் ரசிகர்களிடம் கருத்து கேட்கப் போயிருக்கிறார்கள். அவர்களிடம் சில ரசிகர்கள் "ராஜ்கண்ணு (படத்தின் தயாரிப்பாளர்) ரெயில் ஏறிட வேண்டியதுதான்'' என்று கிண்டல் அடித்திருக்கிறார்கள்.

    ஒரு வாரத்திற்கு அப்புறம் படம் நன்றாக இருப்பதாக ரசிகர்களிடையே பேச்சு பரவி, படம் சூப்பர் ஹிட் ஆயிற்று. "16 வயதினிலே'' படத்தில் கிடைத்த புகழை பாரதிராஜா தக்க வைத்துக்கொண்டார்.
    ×