என் மலர்tooltip icon

    சினி வரலாறு

    பல வெற்றிப் படங்களுக்கு வசனம் எழுதிய "தூயவன்'', ஆரம்ப காலத்தில் எழுத்தாளராக இருந்து பிறகு பட உலகில் புகுந்தவர்
    பல வெற்றிப் படங்களுக்கு வசனம் எழுதிய "தூயவன்'', ஆரம்ப காலத்தில் எழுத்தாளராக இருந்து பிறகு பட உலகில் புகுந்தவர். "வைதேகி காத்திருந்தாள்'', "அன்புள்ள ரஜினிகாந்த்'' உள்பட சில படங்களை சொந்தமாகத் தயாரித்தவர்.

    திரை உலகில் புகுந்த எழுத்தாளர்களில் பெரும்பாலோர் தோல்வியைத்தான் தழுவினர். வெற்றி பெற்ற சில எழுத்தாளர்களில் ஒருவர்

    "தூயவன்.''இவர் நாகூரைச் சேர்ந்தவர். இயற்பெயர் எம்.எஸ்.அக்பர். இவருடைய தந்தை ஷாகு ஒலியுல்லா, அந்தக் காலத்திலேயே ஆங்கில இலக்கியத்தில் "பி.ஏ'' பட்டம் பெற்று, தஞ்சையில் ரிஜிஸ்திரார் ஆகப் பணியாற்றியவர்.

    தாயார் பெயர் ஜொகரான்.

    ஐந்து பெண்களுக்கு மத்தியில் பிறந்த ஒரே ஆண் வாரிசு என்ற முறையில், தூயவன் மீது பெற்றோர் மிகுந்த அன்பு செலுத்தினர்.

    தூயவன், பள்ளி இறுதி வகுப்பு வரை படித்தார். தந்தை திடீரென்று மறைந்ததால், படிப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

    இளமையிலேயே இலக்கிய ஆர்வம் கொண்டிருந்தார், தூயவன். நாகப்பட்டினம், இலக்கியவாதிகள் நிறைந்த ஊர். அப்துல் வகாப் சாப் என்ற ஆன்மீக இலக்கியவாதியின் தொடர்பு கிடைத்ததால், தன் எழுத்தாற்றலை வளர்த்துக்கொள்ள முடிந்தது.

    "தினத்தந்தி'', "ராணி'', "ஆனந்தவிகடன்'', "தினமணி கதிர்'' உள்பட பல பத்திரிகைகளில் தூயவனின் கதைகள் பிரசுரமாகி வந்தன.

    1967-ம் ஆண்டில், "ஆனந்த விகடன்'' அதன் முத்திரைக் கதைகளுக்கு வழங்கி வந்த நூறு ரூபாய் பரிசுத்தொகையை, 500 ரூபாயாக உயர்த்தியது.

    "தூயவன்'' எழுதிய "உயர்ந்த பீடம்'' என்ற கதை, 500 ரூபாய் பரிசு பெற்ற முதல் முத்திரைக் கதையாகும். இதனால், தமிழ்நாடு முழுவதும் புகழ் பெற்ற எழுத்தாளரானார்.

    அது, டெலிவிஷன் இல்லாத காலம். மேடை நாடகங்கள் சக்கை போடு போட்டுக்கொண்டிருந்தன. மேஜர் சுந்தரராஜன் மேடையிலும், சினிமாவிலும் புகழ் பெற்று விளங்கினார்.

    தூயவன் சென்னை சென்று, மேஜர் சுந்தரராஜனை சந்தித்தார். தன்னை ஒரு எழுத்தாளர் என்று மட்டும் அறிமுகப்படுத்திக் கொண்டு, கதை-வசனம் எழுதும் வாய்ப்பு கேட்டார்.

    உடனே மேஜர், "நீங்கள் எல்லாம் என்னப்பா எழுதுகிறீர்கள்! ஆனந்த விகடனில் தூயவன் என்ற எழுத்தாளர் முத்திரைக்கதை எழுதியிருக்கிறார். கதை என்றால் அப்படி எழுதவேண்டும்! என்ன நடை... என்ன எழுத்து!'' என்றார்.

    அவர் பேசி முடிக்கும் வரை காத்திருந்த தூயவன், "நீங்கள் பாராட்டுகிற அந்தக் கதையை எழுதிய தூயவன் நான்தான்!'' என்று நிதானமாகக் கூறினார்.

    மலைத்துப்போய் விட்டார், மேஜர். பிறகு தூயவனை உள்ளே அழைத்துச் சென்று, அவரைப் பற்றிய முழு விவரங்களையும் கேட்டறிந்தார். மேடை நாடகம் எழுதும் வாய்ப்பை அளித்தார்.

    மேஜருக்காக "தீர்ப்பு'' என்ற நாடகத்தை எழுதிக் கொடுத்தார், தூயவன்.

    இதே சமயத்தில் ஏவி.எம்.ராஜனும் தூயவனுடன் தொடர்பு கொண்டு நாடகம் கேட்டார். அவருக்காக தூயவன் எழுதிய நாடகம் "பால்குடம்.'' இந்த நாடகம்தான் முதலில் அரங்கேறியது.

    "தீர்ப்பு'' நாடகத்தின் 100-வது நாள் விழாவுக்கு, எம்.ஜி.ஆர். தலைமை தாங்கினார்.

    "நாடகம் மிகச்சிறப்பாக உள்ளது. இந்து சமய கோட்பாடுகளில் எவ்வித பிழையும் நேரிடாமல், மிகவும் நுட்பமாக ஆராய்ந்து நாடகத்தை எழுதியிருப்பவர் ஒரு இஸ்லாமிய சகோதரர் என்பது, ஆச்சரியமான விஷயம்'' என்று எம்.ஜி.ஆர். பாராட்டிப்பேசி, தூயவனுக்கு கெடிகாரம் ஒன்றை பரிசாக வழங்கினார்.

    "பால்குடம்'' நாடகமும், அரங்கு நிறைந்த காட்சிகளுடன் வெற்றிகரமாக நடைபெற்று வந்தது. அப்போதுதான் சட்டசபை தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்று அண்ணா முதல்-அமைச்சராகப் பதவி ஏற்றிருந்தார். நிதி அமைச்சராக இருந்த நெடுஞ்செழியன் இந்த நாடகத்தின் வெற்றி விழாவில் கலந்து கொண்டு தூயவனுக்கு பரிசு வழங்கினார்.

    இந்த சமயத்தில் தூயவனுக்குத் திருமணம் செய்து வைக்க அவரது குடும்பத்தினர் விரும்பினர். தனக்கு மனைவியாக வரும் பெண், இலக்கியத் துறையைச் சேர்ந்தவளாக - எழுத்தாளராக இருக்க வேண்டும் என்று தூயவன் விரும்பினார்.

    "தினமணி கதிர்'' வார இதழின் ஆசிரியராக "சாவி'' இருந்த நேரம் அது. "தூயவன்'' எழுதிய "சிவப்பு ரோஜா'' என்ற கதை, பரிசுக் கதையாக அதில் பிரசுரமாகியிருந்தது. அதே இதழில், "செல்வி'' என்ற பெண் எழுத்தாளர் எழுதிய கதையும் பிரசுரமாகியிருந்தது.

    "செல்வி'' என்ற புனைப்பெயரில் அந்தக் கதையை எழுதியவர் ஒரு முஸ்லிம் பெண்மணி என்பதும், பெயர் கே.ஜெய்புன்னிசா என்பதும் தூயவனுக்குத் தெரிந்தது.

    உடனே தன் குடும்பத்தினருக்குத் தகவல் தெரிவித்தார். தூயவனின் தாயார், பெரியம்மா, அக்கா, மாமா ஆகியோர் கோவைக்குச் சென்று, பெண்ணைப் பார்த்தார்கள்.

    இரு தரப்பினருக்கும் பிடித்துப்போகவே, தூயவன் என்கிற எம்.எஸ்.அக்பருக்கும், ஜெய்புன்னிசாவுக்கும் 27-9-1968-ல் கோவையில் திருமணம் நடைபெற்றது.

    திருமணத்துக்கு ஏவி.எம்.ராஜன் - புஷ்பலதா, மேஜர் சுந்தரராஜன் ஆகியோர் நேரில் சென்று வாழ்த்தினர்.

    திருமணம் நடந்தவேளை, பட வாய்ப்புகள் தூயவனைத் தேடி வந்தன.
    தமிழ் சினிமாவில் நடிகை ஸ்ரீபிரியா வியந்து பார்த்த ஒரு நடிகை லட்சுமி. அவருடன் `அவன் அவள் அது'' என்ற படத்தில் நடிக்கும் வாய்ப்பு டைரக்டர் முக்தா சீனிவாசன் மூலம் வந்தபோது, ஸ்ரீபிரியாவுக்கு அளவு கடந்த சந்தோஷம்.
    தமிழ் சினிமாவில் நடிகை ஸ்ரீபிரியா வியந்து பார்த்த ஒரு நடிகை லட்சுமி. அவருடன் `அவன் அவள் அது'' என்ற படத்தில் நடிக்கும் வாய்ப்பு டைரக்டர் முக்தா சீனிவாசன் மூலம் வந்தபோது, ஸ்ரீபிரியாவுக்கு அளவு கடந்த சந்தோஷம். லட்சுமியின் கருவை சுமந்து குழந்தையைப் பெற்றுக்கொடுக்கும் "வாடகைத் தாயாக'' ஸ்ரீபிரியா நடித்துள்ளார். வெள்ளி விழா கொண்டாடிய படம் இது.

    இந்தப் படத்தில் நடிக்க ஸ்ரீபிரியாவுக்கு அழைப்பு வந்தபோது, படத்தில் லட்சுமியும் இருக்கிறார் என்பது தெரிந்து ரொம்பவும் மகிழ்ந்திருக்கிறார். அந்த நேரம் ஏற்பட்ட பரவசத்தை ஸ்ரீபிரியாவே பகிர்ந்து கொள்கிறார்:-

    "எனக்கு லட்சுமியை ரொம்ப பிடிக்கும். அவங்களோட "சட்டைக்காரி'' படத்தையெல்லாம் ரொம்ப ரசித்துப் பார்த்திருக்கிறேன். நடிப்பில் தனித்துவம் வாய்ந்தவர். அவருடன் நடிக்கப் போகிறேன் என்றதும் எனக்கு வேண்டியவர்களே கொஞ்சம் பயமுறுத்தினார்கள். "லட்சுமி பிரமாதமான நடிகை. அவர் கூட நடிக்கும்போது நீ காணாமல் போயிடப்போறே'' என்று பயமுறுத்தினார்கள். ஆனால் படத்தில் நடிக்கும்போது நட்பில் நாங்கள் ரொம்பவே ஒன்றிப் போனோம். படத்தில் `ஆச்சி'யும் இருந்தார். மூன்று பேரும் செட்டில் இருந்து விட்டால் அரட்டை! அரட்டை! ஒரே அரட்டைதான்!

    ஒரு கட்டத்தில் எங்கள் லூட்டியை தாங்கிக்கொள்ள முடியாத டைரக்டர் முக்தா சீனிவாசன், "உங்களை கட்டி மேய்க்க என்னால் முடியவில்லை. கடவுள் சத்தியமா உங்க மூணு பேரையும் ஒண்ணா வெச்சு இனிமே படம எடுக்கவே மாட்டேன். எனக்கு வேலையே நடக்க மாட்டேங்குது'' என்றார்.

    எந்த நேரத்தில் அப்படிச் சொன்னாரோ அதன் பிறகு நாங்கள் மூன்று பேரும் ஒரே படத்தில் சேர்ந்து நடிக்க முடியாமலே போய்விட்டது. ஒன்று நானும் ஆச்சியும் இருப்போம். இல்லேன்னா லட்சுமியும், நானும் இருப்போம். எப்படியோ டைரக்டர் முக்தா சீனிவாசன் சொன்னது நடந்துவிட்டது.''

    இவ்வாறு ஸ்ரீபிரியா கூறினார்.

    டைரக்டர் எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் சிவகுமார் ஜோடியாக ஸ்ரீபிரியா நடித்த முதல் படம் "ஆண்பிள்ளை சிங்கம்.''

    திட்டமிட்டு படமாக்கும் ஆற்றல் இவரிடம் இருப்பதை ஸ்ரீபிரியா தெரிந்து கொண்டார். தேவையில்லாமல் நடிகர் - நடிகைகளை காக்க வைக்கிற பழக்கமும் இவருக்கு இருந்ததில்லை. தொழிலில் இவர் காட்டிய ஈடுபாடு ஸ்ரீபிரியாவை பெரிய அளவில் கவர்ந்திருக்கிறது. தொடர்ந்து இவரது படங்களில் நடிக்க ஆர்வம் காட்டினார். இப்படி அவர் "ஒரு கொடியில் இரு மலர்கள்'', "சொந்தமடி நீ எனக்கு'', "எனக்குள் ஒருவன்'', "மோகம் முப்பது வருஷம்'' என படங்களை தொடர்ந்தார்.

    இதில், "மோகம் முப்பது வருஷம்'' படத்தில் மட்டும், தனக்கு கொடுக்கப்பட்ட கேரக்டரில் ஸ்ரீபிரியாவுக்கு திருப்தி இல்லை. தைரியமாக, "இந்த கேரக்டரில் நான் நடிக்கத்தான் வேண்டுமா?'' என்று டைரக்டர் எஸ்.பி.முத்துராமனிடமே கேட்டும்விட்டார்.

    இந்த நேரத்தில், ஸ்ரீபிரியாவுக்கு மஞ்சள் காமாலை நோய் வந்துவிட்டது. அதற்காக ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தபோது, இப்படத்துக்கு திரைக்கதை - வசனம் எழுதிய மகேந்திரன் அவரை சந்தித்தார். "படத்தில் 3 பெண் கேரக்டர்கள் இருந்தாலும் நீங்கள் நடிக்கிற பாமா கேரக்டரோடுதான் ரசிகர்கள் ஒன்றிப் போவார்கள். படம் வெளிவரும்போது ரசிகர்கள், பாமா பற்றிதான் பேசிக்கொண்டு வருவார்கள். அந்த அளவுக்கு வித்தியாசமும் அழுத்தமும் கொண்ட கேரக்டர்'' என்று விளக்கம் தந்தார்.

    அதன் பிறகு பாமா கேரக்டரில் நடிக்க ஒப்புக்கொண்டார் ஸ்ரீபிரியா. அவர் குணமானதும் படப்பிடிப்பு தொடங்கியது. படம் ரிலீசானபோது மகேந்திரன் சொன்னது போலவே நடந்தது. படம் பார்த்த ரசிகர்கள் பாமா கேரக்டர் பற்றியே பேசினார்கள்.

    ஸ்ரீபிரியாவை கவர்ந்த இன்னொரு இயக்குனர் டி.என்.பாலு. டைரக்டர் ராமண்ணாவிடம் உதவியாளராக இருந்தபோதே "நான்'', "மூன்று முகம்'' போன்ற வெற்றிப்படங்களுக்கு கதை எழுதியவர். இவர் டைரக்டரானதும் இயக்கிய "சட்டம் என் கையில்'' படத்தில் கமலஹாசன் கதாநாயகன். அவருக்கு ஜோடி ஸ்ரீபிரியா.

    டி.என்.பாலு பற்றி ஸ்ரீபிரியா இப்படிச் சொன்னார்:-

    "பாடல் காட்சியின்போது எனக்கு சரியாக வாயசைக்க வராது என்பதை கண்டுபிடித்து திருத்தியவர் இவர்தான். பாட்டு சீனில் வாயை ஒரு மாதிரி வைத்துக் கொண்டிருப்பேன். `இப்படிச் செய்தால் நீ பாடுகிற மாதிரி திரையில் எப்படித் தெரியும்? முதலில் அதை சரி பண்ணு' என்றார். ஒரு ஆர்ட்டிஸ்ட்டிடம் இருக்கும் திறமையை பட்டியலிட்டு பாராட்டும் குணம் இருந்த அளவுக்கு, குறைகளை பக்குவமாக சொல்லி சரி செய்யும் பண்பும் இவரிடம் இருந்தது. இவரது "ஓடி விளையாடு தாத்தா'' காமெடிப்படம் எனக்கு காமெடியில் ரொம்ப நல்ல பெயர் தேடித் தந்தது. "நல்லதுக்கு காலமில்லை'' படத்திலும், எனக்கு நல்ல பெயர் வாங்கித் தந்தார்.

    கமல் நடித்த "சங்கர்லால்'' படத்தை, இவர் இயக்கியபோதுதான் எனக்கும் அவருக்கும் சின்ன பிரச்சினை. படத்தில் கமல் ஜோடியாக என்னை ஒப்பந்தம் செய்தவர், நான் இரண்டொரு தடவை தேதிகளை மாற்றினேன் என்பதற்காக, உணர்ச்சிவசப்பட்டு கவுன்சிலில் என் மீது புகார் கொடுத்துவிட்டார். பிறகு பிரச்சினை சுமூகமாக தீர்ந்து போயிருந்தாலும், நாங்கள் சந்திக்கும் வாய்ப்பு இல்லாது போயிற்று.

    திடீரென அவர் இறந்தபோது, மனது தாங்காமல் அஞ்சலி செலுத்தப் போனேன். அப்போது என்னை கட்டிக்கொண்டு அழுத அவர் மனைவி, "அய்யோ அது (ஸ்ரீபிரியா) எவ்வளவு நல்ல பொண்ணு. நான் அவசரப்பட்டு புகார் கொடுத்து அது மனதை புண்படுத்தி விட்டேனேன்னு என்கிட்ட அடிக்கடி சொல்லிக்கிட்டிருப்பாரே!'' என்று அழுதார். ஏற்கனவே சோகத்தில் இருந்த நான், அவங்க அப்படிச் சொன்னதும் உடைந்து கதறிவிட்டேன்.''

    இவ்வாறு ஸ்ரீபிரியா கூறினார்.

    இந்தியில் சஞ்சீவ்குமார்- ஷர்மிளா தாகூர் இணைந்து நடித்த படம் "மாசூன்.'' இந்தப் படத்தில் நடித்த இருவருக்குமே சிறந்த நடிப்புக்காக தேசிய விருது கிடைத்தது. இந்தப் படத்தை தமிழில் "வசந்தத்தில் ஓர் நாள்'' என்ற தலைப்பில் டைரக்டர் ஏ.சி.திருலோகசந்தர் இயக்கினார். படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் ஸ்ரீபிரியா நடித்து முடித்தபோது கைதட்டி பாராட்டினார்.

    "நிஜமாகவே உயரத்தில் மட்டுமல்ல... பண்பிலும் உயர்ந்தவர் அவர்'' என்று திருலோகசந்தரைப் பாராட்டிய ஸ்ரீபிரியா, மேலும்

    சொன்னார்:-"ஏவி.எம். ஸ்டூடியோவில் சின்னத்திரை தொடர் ஒன்றை இயக்கிக் கொண்டிருந்தேன். நான் படப்பிடிப்பு நடத்திக் கொண்டிருந்த இடத்தைத் தாண்டி ஒரு கார் வேகமாக சென்றது. திடீரென அந்தக் கார் நிறுத்தப்பட்டு, அதில் இருந்து உயரமான மனிதர் ஒருவர் என்னை நோக்கி வந்தார். பார்த்தால் டைரக்டர் ஏ.சி.திருலோகசந்தர்! என்னைப் பார்த்ததும், "என்னம்மா எப்படி இருக்கீங்க?'' என்று பாசத்துடன் விசாரித்தார். என்னைப் பார்த்ததும், வந்த வேலையை கூட தள்ளிவைத்துவிட்டு தேடிவந்து நலம் விசாரிக்கும் அந்த மாதிரியான அன்பை யாரிடம் எதிர்பார்க்க முடியும்?

    ஒருமுறை அவர் இயக்கிய, சிவாஜி - கே.ஆர்.விஜயா நடித்த "பாரத விலாஸ்'' படத்தை, டிவி.யில் பார்த்தேன். தேச ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக உணர்ச்சிப்பூர்வமாக காட்சிகளை அவர் அமைத்திருந்தார். மனம் நெகிழ்ந்துபோய், உடனே அவர் போன் நம்பரை தேடிப்பிடித்து பாராட்டினேன். "படம் இயக்கி இத்தனை வருஷம் கழித்தும் பாராட்டுகிற பண்பு உன்போன்ற சிலருக்கு இருப்பதை நினைத்தாலே பெருமையாக இருக்கிறது'' என்று மகிழ்ச்சி தெரிவித்தார். "தெய்வமகன்'' போன்ற படங்கள் எப்போதும் சினிமாவில் அவர் பெயரை சொல்லிக் கொண்டிருக்கும்'' என்றார், ஸ்ரீபிரியா. 
    கமலஹாசனும், ஸ்ரீபிரியாவும் நடித்த "வாழ்வே மாயம்'' பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.
    கமலஹாசனும், ஸ்ரீபிரியாவும் நடித்த "வாழ்வே மாயம்'' பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.

    தெலுங்கில், `பிரேமபாசம்' என்ற பெயரில் காதலுக்கு புது இலக்கணம் சொன்ன படம் பெரும் வெற்றி பெற்றது. ஒரு அழகான இளம் பெண்ணை விரட்டி விரட்டி காதலிக்கும் இளைஞன் ஒருவன், அவள் காதல் கிடைக்கப் பெற்ற பிறகு அவளை உதாசீனம் செய்கிறான். காதலியை பல்வேறு கட்டங்களில் வெறுப்பேற்றி, அவளை வேறொரு திருமணமும் செய்ய வைத்து விடுகிறான். அதன் பிறகுதான் அவனுக்கு ரத்தப் புற்று நோய் வந்த விஷயமே காதலிக்கு தெரியவருகிறது.

    இந்த உணர்ச்சிபூர்வ காதல் கதையை தமிழில் எடுக்க விரும்பினார், பாலாஜி. அதுவே கமல், ஸ்ரீதேவி, ஸ்ரீபிரியா நடிக்க "வாழ்வே மாயம்'' என்ற பெயரில் படமானது.

    இந்தப் படத்தில் கதாநாயகி என்ற இடத்தில் ஸ்ரீதேவிதான் இருந்தார். நோயுற்ற பிறகு தன்னைத் தேடிவரும் நாயகனுக்கு ஆதரவும், அடைக்கலமும் கொடுக்கும் `விலை மாது' கேரக்டரில் நடித்திருந்தார், ஸ்ரீபிரியா.

    இந்தக் கேரக்டரிலும் நடிப்பது தொடர்பாக முதலில் தன் அதிருப்தியை வெளியிட்டார், ஸ்ரீபிரியா. ஆனால், படத்தில் ஸ்ரீதேவி கேரக்டருக்கு இணையாக அவரும் பேசப்பட்டார்.

    இந்தப் படத்தில் கமலின் காதலியாக வரும் ஸ்ரீதேவியும், விலைமாது கேரக்டரில் வரும் ஸ்ரீபிரியாவும் சந்திக்கும் இடத்தில் ஸ்ரீபிரியா பேசும் ஒவ்வொரு வசனத்துக்கும் கைதட்டல் கிடைக்கும்படி செய்திருந்தார், வசனகர்த்தா ஏ.எல்.நாராயணன். ஏற்கனவே "பில்லா'' படத்தில் ஸ்ரீபிரியாவின் கேரக்டரை ஏ.எல்.நாராயணன் மெருகேற்றியிருந்தார். இந்தப் படத்தில் அது இன்னும் அதிகமாகப் பளிச்சிட்டது.

    இந்தப் படத்தில் நடித்த வகையில் ஸ்ரீபிரியாவுக்குள் இன்னொரு சந்தோஷமும் இருக்கிறது. பாலாஜி தயாரிக்கும் எல்லாப் படங்களிலுமே கதாநாயகன் பெயர் `ராஜா' என்றும் கதாநாயகி பெயர் `ராதா' என்றும் இருக்கும். "வாழ்வே மாயம்'' படத்தில், கதாநாயகன் ராஜாவாக கமல் நடித்தார். `ராதா' கேரக்டரில் ஸ்ரீபிரியாதான் நடித்தார். ஸ்ரீதேவி, `தேவி' என்ற கேரக்டரில் நடித்தார். இப்படி பாலாஜி பட `நாயகி' பெயரில் நடிக்க நேர்ந்ததே பெரிய திருப்திதான் ஸ்ரீபிரியாவுக்கு.

    அடுத்தடுத்து 2 படங்களில் பெரிய கேரக்டர் அமையாததால், தயாரிப்பாளர் பாலாஜி தனது புதிய தயாரிப்பில் ஸ்ரீபிரியாவாலேயே மறக்க முடியாத கதாநாயகி கேரக்டரை கொடுக்க நினைத்தார். அப்போது இந்தியில் ரண்தீன்கபூர், ஹேமமாலினி நடித்து பரபரப்பாக ஓடிக்கொண்டிருந்த "ஹாத் கீ சபாய்'' என்ற படத்தின் தமிழ் உரிமை வாங்கி அதில் கமலஹாசனையும், ஸ்ரீபிரியாவையும் ஜோடியாக நடிக்க வைத்தார். அந்தப் படமே "சவால்.'' படம் தமிழிலும் வெற்றி பெற்றது. ஸ்ரீபிரியாவின் நட்சத்திர அந்தஸ்தையும் உயர்த்தியது.

    எத்தனையோ நடிகைகளுடன் நடிக்க நேர்ந்த போதிலும், ஸ்ரீபிரியாவின் "மரியாதைக்குரிய நடிகை'' பட்டியலில் இருந்தவர் மனோரமாதான்.

    அதற்கான காரணத்தை ஸ்ரீபிரியாவே கூறுகிறார்:-

    "மற்ற நடிகர் - நடிகைகள் நலனில் எப்போதுமே அக்கறை செலுத்துபவர் `ஆச்சி' மனோரமா. புதுமுகம் ஆயிற்றே என்றெல்லாம் ஒதுங்கிப் போகமாட்டார்.

    என் நான்காவது படமான "தொட்டதெல்லாம் பொன்னாகும்'' படத்தில் ஆச்சியும் இருந்தார். படத்தில் ஜெய்சங்கர் - ஜெயசித்ரா ஜோடியாக நடித்தனர். நான் தேங்காய் சீனிவாசனின் ஜோடியாக நடித்தேன்.

    இந்தப் படத்துக்கான படப்பிடிப்பு சேலத்தில் நடந்தது. `ஆச்சி'யும் வந்திருந்தார். நான் நடிக்க வருவதற்கு முன்பே, எங்கள் குடும்பத்துடன் ஆச்சிக்கு நெருங்கிய நட்பு இருந்தது. அதனால் நான் சினிமாவுக்கு வந்தபிறகு, என்னை ரொம்பவும் அக்கறையுடன் பார்த்துக்

    கொள்வார்.எப்போதும் படப்பிடிப்புக்கு என்னுடன் பாட்டி வருவதுண்டு. `ஆச்சி'யுடன் எனக்கு படப்பிடிப்பு என்றால், பாட்டி வரமாட்டார். இந்த வகையில் ஆச்சி என் இன்னொரு அம்மா ஸ்தானத்தில் இருந்தார்.

    "தொட்டதெல்லாம் பொன்னாகும்'' படப்பிடிப்பில் அன்று எனக்கும் ஆச்சிக்கும் சீன் இருந்தது. முதலில் எனக்கு மேக்கப் போட்டார்கள். எனக்கு மேக்கப் போட்டவர் ஏதோ பெயருக்கு அவசரமாக போட்டு விட்டு போய்விட்டார். நான் நடிக்க வேண்டிய அன்றைய காட்சிக்கு எனக்கு கொடுக்கப்பட்டிருந்த உடையும் `ஏனோதானோ' என்றிருந்தது.

    நான் மேக்கப் ரூமை விட்டு வெளியே வரவும் `ஆச்சி' என்னைப் பார்த்து விட்டார். `மேக்கப்' என்ற பெயரில் என் முகம் இருந்த விதம் ஆச்சிக்குள் கோபத்தை உண்டுபண்ணிவிட்டது. என் கையைப்பிடித்து மறுபடியும் மேக்கப் ரூமுக்கு அழைத்துப் போனார்.

    மேக்கப் போட்டுக் கொண்டிருந்தவர்களிடம், "ஒரு தமிழ்ப்பொண்ணு நடிக்க வந்தா அவளுக்கு இந்த மாதிரிதான் மரியாதை கொடுப்பீங் களா?'' என்று உரத்த குரலில் கண்டித்ததுடன், எனக்கு மறுபடியும் மேக்கப் போட ஏற்பாடு செய்தார். சரியான உடைகளையும் தரச்செய்தார்.

    அன்றைக்கு என்னுடன் என் அம்மாவோ, பாட்டியோ இருந்திருந்தாலும், `ஆச்சி' அளவுக்கு நிச்சயம் செய்திருக்க முடியாது. இந்த வகையில் ஆச்சி, எனக்கு இன்னொரு அம்மா.

    இப்படிப்பட்ட ஆச்சியிடமே ஒரு தடவை ஏதோ ஒரு காரணத்துக்காக கோபித்துக்கொண்டு விட்டேன். அம்மா - பெண்ணுக்கிடையே வந்து போகும் சாதாரண மோதலாக அதை ஆச்சி எடுத்துக் கொண்டார். எனக்கு அப்போது ஆச்சி அளவுக்கு பக்குவம் ஏது?

    ஒருநாள் ஷெட்டில் என் கண்ணில்பட்ட ஆச்சியின் ஹேர் டிரஸ்ஸரிடம், "மேடம் நல்லா இருக்காங்களா?'' என்று கேட்டுவிட்டேன். அடுத்த கணம் எங்கிருந்துதான் ஆச்சி வந்தாரோ, என்னை பிலுபிலுவென பிய்த்துவிட்டார்.

    "என்னை மேடம்னு கூப்பிடற அளவுக்கு நீங்க பெரிய மனுஷி ஆகிட்டீங்களா?'' என்று கோபத்துடன் கூறினார். அவர் அப்படி உரிமையுடன் என் மீது கோபப்பட்டு, மீண்டும் என்னுடன் சமரசமாகிவிடவேண்டும் என்பதுதான் என் திட்டம்! அது நன்றாகவே நடந்தேறியது.

    இப்போது நான் நடிக்கும் "இம்சை அரசிகள்'' சீரியலில்கூட எனக்கும் ஆச்சிக்கும் சமமான கேரக்டர்கள். ஆச்சி அவருக்கே உரிய ஆற்றலில் சின்னத்திரை ரசிகர்களையும் குலுங்க வைத்துக் கொண்டிருக்கிறார்.

    எப்போதும் என்னை வாய் நிறைய `ஆலு' (ஒரிஜினல் பெயரான அலமேலுவின் சுருக்கம்) என்று வாய் நிறைய அவர் அழைப்பதே தனி அழகு.''
    புகழ் பெற்ற நட்சத்திரமாக விளங்கியபோதே, சில படங்களை ஸ்ரீபிரியா டைரக்ட் செய்தார்.
    நடிகையாகவே சினிமாவுக்குள் அறிமுகமாகியிருந்தாலும் ஸ்ரீபிரியாவுக்குள் கதை சொல்லும் ஆற்றலும் இருந்தது. "காதோடுதான் நான் பேசுவேன்'' என்ற கதையை, சினிமாவுக்காக எழுதினார். டைரக்டர் எம்.ஏ.காஜா இந்தப் படத்தை இயக்கினார்.

    தமிழில் படம் அவ்வளவாக வெற்றி பெறாவிட்டாலும், கதை நன்றாக இருப்பதாக ரசிகர்களால் பாராட்டப்பட்டது.

    இந்தப் படத்தின் கதை உரிமையை அனைத்து மொழிகளுக்கும் ஸ்ரீபிரியாவிடம் டைரக்டர் கே.பாலசந்தர் வாங்கினார். இது, ஸ்ரீபிரியாவுக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்தது.

    கதையை வாங்கியதும், தெலுங்கில் சரிதாவை வைத்து படத்தை இயக்கினார் பாலசந்தர். அங்கே படம் மிகப்பெரிய வெற்றி.

    "ஒரு தோல்விப்படத்தை எப்படி வெற்றிகரமாக மாற்றமுடியும்'' என்பதை அன்றே செய்து காட்டினார், கே.பாலசந்தர். இதில் கதை என்னுடையது என்பதில் எனக்கொரு பெருமை. அவ்வளவுதான்'' என்கிறார், ஸ்ரீபிரியா.

    இதே காலகட்டத்தில் டைரக்டராகவும் தன்னை வெளிப்படுத்தினார், ஸ்ரீபிரியா. "சாந்தி முகூர்த்தம்'' என்ற படத்தை இயக்கினார். அந்தப் படம் ஸ்ரீபிரியாவை ஒரு தரமான இயக்குனராக நிலைநிறுத்த, தொடர்ந்து "நானே வருவேன்'' என்ற படத்தை இயக்கினார். இதே படத்தை கன்னடத்திலும் இயக்கினார்.

    இந்தக் காலக்கட்டத்தில், தெலுங்கில் பிரபல இயக்குனராக திகழ்ந்த தாசரி நாராயணராவ் தெலுங்கில் இயக்கிய "சிவரஞ்சனி'' படம் தமிழில் தயாரிக்கப்பட்டது. தமிழில் "நட்சத்திரம்'' என்ற பெயரில் தயாரான இந்தப் படத்தில் ஸ்ரீபிரியா நடிகையாகவே நடித்திருந்தார். இந்தப்படம் தெலுங்கில் பெற்ற வெற்றியை, தமிழில் எட்டவில்லை.

    டைரக்டர் ஸ்ரீதர் இயக்கிய "இளமை ஊஞ்சலாடுகிறது'' படம் ஸ்ரீபிரியாவுக்கு இன்னொரு திருப்பு முனையாக அமைந்தது. இந்தப் படத்தில் கமலஹாசனின் காதலியாக இருந்து ரஜினியின் மனைவியாக மாறும் கேரக்டரில் பிரமாதமாக நடித்திருந்தார், ஸ்ரீபிரியா.

    முதலில் இந்தக் கேரக்டரில் ஸ்ரீபிரியா நடிப்பதாக இல்லை. அதுபற்றி ஸ்ரீபிரியா கூறுகிறார்:-

    "படத்தில் ஜெயசித்ரா நடித்த கேரக்டரில்தான் நான் நடிப்பதாக இருந்தது. கதைப்படி அந்த கேரக்டருக்கு அத்தனை முக்கியம் இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. டைரக்டர் ஸ்ரீதர் இந்தப்படத்தை தெலுங்கிலும் எடுத்துக் கொண்டிருந்தார். தெலுங்கில் அப்போது புகழின் உச்சியில் இருந்த ஜெயசுதா நடித்தார். நான் ஸ்ரீதரிடம், "படத்தில் நீங்கள் எனக்கு தருவதாக சொன்ன கேரக்டர் எனக்கு பிடிக்கவில்லை. மெயின் ரோல் தந்தால் பண்ணுகிறேன். சின்ன கேரக்டரில் நான் நடிக்க விரும்பவில்லை'' என்று சொல்லிவிட்டு விறுவிறுவென வந்து விட்டேன்.

    நான் இப்படி மனதில் இருப்பதை படபடவென கொட்டிவிட்டு வந்தது ஸ்ரீதர் சாருக்கு அதிர்ச்சியாக இருந்திருக்கக் கூடும் என்று எண்ணினேன். ஆனால் என் தைரியத்தைப் பார்த்தோ, அல்லது நம்பிக்கை வந்தோ அந்த மெயின் கேரக்டரில் என்னை நடிக்க வைத்தார். நான் நடிக்க மறுத்த கேரக்டரில் சில நாட்களில் ஜெயசித்ரா நடித்தார்.

    படம் தமிழ், தெலுங்கு இரண்டிலும் வெற்றி. நீண்ட இடைவெளிக்குப்பிறகு, ஆடை நேர்த்திக்காக இந்தப் படத்தில்தான் நான், பேசப்பட்டேன். ஸ்ரீதர் சாரின் கலை அழகுணர்வுக்கு கிடைத்த மரியாதையாக இந்தப் பாராட்டை எடுத்துக் கொண்டேன்.

    இந்தப்படம் இந்தியிலும் எடுக்கப்பட்டது. ராஜேஷ்கன்னா, சத்ருகன்சின்கா நடித்தார்கள். என் கேரக்டரில் ஜெயபிரதா நடித்தார். என்ன காரணத்தாலோ இந்தியில் படம் சரியாக ஓடவில்லை.''

    இவ்வாறு கூறினார், ஸ்ரீபிரியா.

    நடிகர் பாலாஜி அப்போது பட அதிபராகவும் மாறி நிறைய படங்களைத் தயாரித்துக் கொண்டிருந்தார். ரஜினியின் புகழ் ஏறுமுகமாக இருந்தபோது, அவரை கதாநாயகனாக்கி "பில்லா'' என்ற படத்தை தயாரித்தார். படத்தில் ரஜினிக்கு ஜோடி ஸ்ரீபிரியா.

    இந்தப் படத்தில் தனது கேரக்டர் சின்னதாக இருப்பதாக கூறி ஆரம்பத்தில் நடிக்க மறுத்திருக்கிறார், ஸ்ரீபிரியா. படத்தில் தனது கேரக்டர் வலுவில்லாததாக இருக்கிறது என்று அவர் கதை வசனகர்த்தா ஏ.எல்.நாராயணனிடம் கூறினார்.

    ஸ்ரீபிரியா இப்படிச் சொன்னதும் வசனகர்த்தா ஏ.எல்.நாராயணன், "வேண்டுமானால் பார். படத்தில் உன் கேரக்டரும் பேசப்படும். அதற்கு நான் பொறுப்பு'' என்றார்.

    இந்தப்படத்தில் நடித்தது பற்றி ஸ்ரீபிரியா கூறுகிறார்:-

    "தயாரிப்பாளர் பாலாஜி எப்போதுமே என் போன்ற கலைஞர்களின் மரியாதைக்குரியவர். அவர் கம்பெனியில், சின்ன நடிகர்கள், பெரிய நடிகர்கள் என்ற பேதம் கிடையாது. ஒவ்வொரு நடிகர் - நடிகைக்கும் நாற்காலி போட்டு அதில் எம்பிராய்டரியில் அவர்கள் பெயரை பதித்து இருப்பார்கள்.

    அதுமாதிரி சம்பள விஷயத்திலும் அவர்களின் அணுகுமுறை புதுமையானது. யார் நடிக்கிறார்களோ அவர்கள் கையில்தான் சம்பளப் பணத்தையே கொடுப்பார்கள். அதுவரை நான் நடித்த படங்களில் என் சம்பளத்தை அம்மாவிடம்தான் கொடுத்திருக்கிறார்கள். முதன் முதலாக இந்தப் படத்தில்தான் என் சம்பளத்தை நான் வாங்கினேன்.

    அப்போது கூட பாலாஜி சாரிடம், "அம்மாவிடம் கொடுத்து விடுங்களேன் சார்'' என்று சொல்லிப் பார்த்தேன். அவரோ, "என் படத்தில் நடிப்பவர் யாரோ, அவர்தான் சம்பளத்தை வாங்கிக் கொள்ள வேண்டும்'' என்று கூறிவிட்டார்.

    பாலாஜி சாரின் "பில்லா'' படம் இந்தியில் வந்த `டான்' படத்தின் ரீமேக். அமிதாப்பச்சனும், ஜீனத் அமனும் நடித்திருந்தார்கள். இந்தப் படத்தை எனக்குப் போட்டுக் காட்டியபோது முழுவதும் பார்க்காமல் தூங்கிவிட்டேன். கடைசியில் என் கேரக்டர் இதுதான் என்று வந்தபோது `சின்ன ரோல்' என்று தயங்கினேன்.

    கதை வசன கர்த்தா ஏ.எல்.நாராயணன், இந்தியில் சின்னதாக இருந்த கேரக்டரை, தமிழில் பெரிதாக உருவாக்கித் தருகிறேன் என்றார்.

    ஆனாலும் படம் வந்தபோது என் கேரக்டர் இன்னும் கொஞ்சம் பெரிதாக இருந்திருக்கலாமே என்று எனக்குத் தோன்றவே செய்தது. என்றாலும் அந்த கேரக்டரில் நான் பேசப்பட்டேன். ஏ.எல்.நாராயணன் சார் சொன்னது உண்மையாயிற்று.

    இந்தப் படத்தில் என் கேரக்டர் பெரிய அளவில் இல்லை என்பதை தயாரிப்பாளர் பாலாஜி சாரும் தெரிந்தே வைத்திருந்தார். "பில்லா'' படப்பிடிப்பு சமயத்தில் ஒரு நாள் என்னைப் பார்த்தவர், "என்னுடைய அடுத்த படத்தில் உங்களுக்கு பெரிய கேரக்டர் உண்டு'' என்று

    சொன்னார்.இப்படி எல்லோருமே நம்பிக்கைïட்டுகிற விதமாக சொல்லவே செய்வார்கள். ஆனால் காலப்போக்கில் மறந்து விடுவார்கள். பாலாஜி சார் அப்படியில்லாமல், அவரது அடுத்த படத்தில் எனக்கு பெரிய கேரக்டரே கொடுத்தார். "சவால்'' என்ற அந்தப் படத்தில் கமல் ஜோடியாக நடித்தேன். இப்போதுகூட மறக்க முடியாத கேரக்டர் அது.''

    இவ்வாறு ஸ்ரீபிரியா கூறினார்.

    ஸ்ரீபிரியா ஏராளமான படங்களில் நடித்துக் கொண்டிருந்த காலக்கட்டத்தில், "நீயா'' என்ற படத்தை சொந்தமாகத் தயாரித்தார்.
    ஸ்ரீபிரியா ஏராளமான படங்களில் நடித்துக் கொண்டிருந்த காலக்கட்டத்தில், "நீயா'' என்ற படத்தை சொந்தமாகத் தயாரித்தார்.

    "நாகின்'' என்ற இந்திப்படத்தில் வந்த ஒரு பாடல்தான் அவரை படத்தயாரிப்பாளர் ஆக்கியது.

    வைஜயந்திமாலா இந்திப்படங்களில் கொடிகட்டிப் பறந்தபோது "நாகின்'' என்ற படத்தில் நடித்தார். அவருக்கு ஜோடி பிரதீப்குமார். மகுடி வாத்தியத்தை வைத்து அற்புதமான மெட்டுகளில் இசை அமைத்திருந்தார், ஹேமந்தகுமார்.

    பல ஆண்டுகளுக்குப் பிறகு "நாகின்'' என்ற பெயரிலேயே இன்னொரு இந்திப்படம் வெளிவந்தது. இந்தப் படத்திலும் பாடல்கள் சிறப்பாக அமைந்திருந்தன.

    "வீடியோ சிடி'' எல்லாம் வராத காலம் அது.

    சென்னை ஸ்டார் தியேட்டரில் ஓடிக்கொண்டிருந்த இந்தப் படத்தை, தன் தாயாருடன் சென்று பார்த்தார், ஸ்ரீபிரியா.

    படத்தில் இடம் பெற்றிருந்த ஒரு பாடல் அவரை ரொம்பவும் கவர்ந்தது. அந்தப் பாடலுக்காகவே அந்தப் படத்தை 6 தடவை பார்த்து ரசித்தார். அதோடு நில்லாமல், தனது தாயாரிடம் "நான் நடிக்கிற படத்தில் இப்படியொரு பாட்டு இருந்தால், எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும்'' என்று கூறினார்.

    "அவ்வளவுதானே! கவலையைவிடு'' என்று அம்மா சொன்னார்.

    அம்மா அப்படிச் சொன்னதன் பொருள் ஸ்ரீபிரியாவுக்கு ஒரு வாரம் கழித்தே புரிய ஆரம்பித்தது. "நாகின்'' படத்தை தமிழில் தயாரிக்கும் உரிமையை ஸ்ரீபிரியாவின் தாயார் வாங்கினார். அப்போது பிசியாக இருந்த டைரக்டர் துரையை அந்தப் படத்தை இயக்கும்படி கேட்டுக்கொண்டார். அவரும் சம்மதம் தெரிவித்தார். அப்போது முன்னணியில் இருந்த கமல், விஜயகுமார், ஸ்ரீகாந்த், ரவிச்சந்திரன், ஜெய்கணேஷ், சந்திரமோகன் என 6 ஹீரோக்கள் நடித்தனர்.

    இந்தப் படத்தில் கமல் நடித்த கேரக்டரில் முதலில் ரஜினி நடிக்க இருந்தார். ரஜினியின் கால்ஷீட் கிடைப்பதில் ஏற்பட்ட சிக்கலால் ரஜினிக்கு பதிலாக கமல் நடித்தார்.

    இந்திப்படத்தில் ரேகா நடித்த "பாம்பு'' கேரக்டரில் ஸ்ரீபிரியாவும், அவருக்கு ஜோடிப் பாம்பாக சந்திரமோகனும் நடித்தார்கள்.

    இந்திப் படத்தில் ஸ்ரீபிரியா எந்தப் பாட்டுக்கு மயங்கினாரோ, அதே டிïனில் தமிழிலும் அந்தப் பாடலுக்கு இசையமைத்திருந்தார்கள். "ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம் வாராய் கண்ணா'' என்பதுதான் அந்தப் பாடல்.

    1979 பொங்கலுக்கு வெளிவந்த "நீயா'' பெரிய வெற்றி பெற்றது.

    இந்தப் படம் வெளியானபோது, சிவாஜிகணேசனுடன் "திரிசூலம்'' படத்தில் ஸ்ரீபிரியா நடித்துக் கொண்டிருந்தார்.

    "நீயா!'' படத்தை பார்த்து விட்டு, ஸ்ரீபிரியாவிடம் சிவாஜிகணேசன் செல்லமாகக் கோபித்துக் கொண்டார். அதுபற்றி ஸ்ரீபிரியாவே கூறுகிறார்:-

    "நடிகர் திலகம் எவ்வளவு பெரிய நடிகர். நடிப்பில் இமயம். அவர் "நீயா'' படம் பார்த்து விட்டு மறுநாள் "திரிசூலம்'' படப்பிடிப்பில் இருந்தபோது என்னிடம் பேசினார். "படம் பார்த்தேன் புள்ளே! பாம்பா உன் கூட சேர்ந்து நடனமாடற அந்தப் பையன் (சந்திரமோகன்) என்னமா டான்ஸ் ஆடறான்! அவன் `கெட்அப்'பும், கொண்டை போட்டிருந்த அழகும் அடடா! அடடா! இந்த கேரக்டருக்கு என்னை ஏன் புள்ளே கூப்பிடலை?'' என்று கேட்டார். எனக்கு அதிர்ச்சி ஒருபுறம்; ஆனந்தம் ஒருபுறம்'' என்றார், ஸ்ரீபிரியா.

    டைரக்டர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் இயக்கிய சில படங்களில் ஸ்ரீபிரியா நடித்து இருக்கிறார். அவற்றில் முக்கியமானது "தசாவதாரம்'' படம். இந்தப் படத்தில் சூர்ப்பனகை வேடத்தில் நடிக்க ஸ்ரீபிரியாவை கேட்டார் இயக்குனர். ஸ்ரீபிரியா மறுத்துவிட்டார்.

    "நடிகர் திலகம் சிவாஜி எப்பேர்ப்பட்ட நடிகர்! அவர் ராமாயண நாடகத்தில் நடித்தபோது கைகேயி வேடத்தில் நடித்தார். ஒரு ஆர்ட்டிஸ்ட் என்றால் எந்த கேரக்டரிலும் நடிக்கத் தெரிந்திருக்க வேண்டும். உன்னால் இந்த சூர்ப்பனகை கேரக்டரிலும் நடித்து பெயர் வாங்க முடியும்'' என்று கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் கூறினார்.

    இந்த விளக்கம் ஏற்றுக் கொள்ளும்படி இருந்ததாலும், எந்த கேரக்டரிலும் தன்னால் ஜெயிக்க முடியும் என்ற நம்பிக்கையாலும் சூர்ப்பனகை வேடத்தில் நடிக்க சம்மதித்தார், ஸ்ரீபிரியா.

    கதாநாயகியாக திரைக்கு அறிமுகமாகியிருந்தாலும் காமெடி, அதிரடி என சகல விஷயமும் தொட்டவர், இவர். கமலஹாசனுடன் நடித்த "பட்டிக்காட்டுராஜா'' படத்தில் `வில்லி' கேரக்டரில் கூட வந்தார். அதுமாதிரி "தொட்டதெல்லாம் பொன்னாகும்'' படத்தில் கதாநாயகன் ஜெய்சங்கர் என்றாலும், படத்தில் தேங்காய் சீனிவாசனுக்கு ஜோடியாக நடித்தார்.

    இந்த மாதிரியான `சவால்' கேரக்டர்கள், சின்ன கேரக்டர்களிலும் நடித்த அனுபவம் இருந்ததால் சூர்ப்பனகை கேரக்டரையும் சிறப்பாகவே செய்தார், ஸ்ரீபிரியா.

    கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் நடித்த அனுபவம் குறித்து ஸ்ரீபிரியா கூறியதாவது:-

    "பெரியப்பா தண்டாயுதபாணி பிள்ளை மீது டைரக்டர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் சாருக்கு பிரியமும் அதிகம். மரியாதையும் அதிகம். அந்த அடிப்படையில் தன்னை `சித்தப்பா' என்றே அழைக்கச் சொல்வார். ஆரம்பத்தில் வாய் தவறி `சார்' வந்தாலும், "நான் உன்னிடம் என்ன சொல்லியிருக்கிறேன்?'' என்று குரலில் கடுமை காட்டி கேட்பார். வசனங்களை இவர் சொல்லித் தருவதே தனி அழகு. காட்சியை விவரிக்கும்போதே அவரிடம் இருந்து வசனங்கள் வந்து விழும். ஒத்திகையின்போது பேசவேண்டிய வசனத்தை சொல்லிக் கொடுப்பவர், மறுபடி `டேக்'கின் போது இன்னமும் கூடுதலாக சில வசனங்களை சேர்ப்பார். ஆனால் அப்படி புதிதாக சேர்க்கப்பட்ட வசனங்களும் அற்புதமாக இருக்கும்.

    தசாவதாரம் படத்தில் சூர்ப்பனகையாக நடிக்கும்போதே, "வாய் வலிக்குது'' என்று அவரிடம் கிண்டல் செய்திருக்கிறேன். வசனம் அதிகம் இருப்பதைப்பற்றி கிண்டல் செய்கிறேன் என்பதை அவரும் புரிந்து கொள்வார். அதை சாதாரணமாக எடுத்துக்கொண்டு, அதுபற்றி பேசாமல் சிரிக்க மட்டும் செய்வார்.

    அவர் சொன்னபடி தசாவதாரம் படத்தில் எனக்கும் நல்ல பெயர் கிடைத்தது. தொடர்ந்து, "வாயில்லாப்பூச்சி'', "பாலாபிஷேகம்'', "உள்ளத்தில் குழந்தையடி'' உள்பட ஏழெட்டு படங்களில் நடித்தேன். எல்லாமே எனக்கு பெயர் வாங்கிக் கொடுத்த படங்கள்.

    நான் கதை கேட்காமல் நடிக்க ஒப்புக்கொண்ட டைரக்டர்களில் இவரும் ஒருவர். "நாளை பூஜை. படத்தில் நீயும் இருக்கிறாய். பூஜைக்கு வந்துவிடு'' என்பது மட்டுமே இவரது திடீர் அழைப்பாக இருக்கும். ஒரு படத்தில் எத்தனை கேரக்டர்கள் இருக்கிறதோ அத்தனை கேரக்டர்களையும் உயிரோட்டமாகத் தரும் இயக்குனர் என்ற வகையில் நான் மட்டுமல்ல, பல நடிகர் - நடிகைகள் இவரிடம் `படத்தில் தங்களுக்கு என்ன கேரக்டர்' என்று கேட்கமாட்டார்கள்.

    சமீபத்தில் நான் இயக்கும் டெலிவிஷன் சீரியல் ஒன்றுக்காக கற்பகம் ஸ்டூடியோவுக்குப் போயிருந்தபோது குதூகலத்துடன் என் அருகில் ஒரு நாற்காலியைப் போட்டு அமர்ந்து கொண்டார். "நீ டைரக்ட் பண்றதை பார்க்கும்போது எனக்கே நடிக்கணும் போல இருக்கு'' என்று சொல்லி என்னை பாராட்டினார். அப்போது என் கண்களில் ஆனந்தக் கண்ணீர் வழிந்தது.'' இவ்வாறு ஸ்ரீபிரியா குறிப்பிட்டார். 
    தேவர் பிலிம்சின் பெரிய வெற்றிப்படம் "ஆட்டுக்கார அலமேலு.'' இதன் கதாநாயகியாக `படாபட்' ஜெயலட்சுமியை நடிக்க வைக்கலாம் என்று பலர் யோசனை கூறினார்கள்.
    தேவர் பிலிம்சின் பெரிய வெற்றிப்படம் "ஆட்டுக்கார அலமேலு.'' இதன் கதாநாயகியாக `படாபட்' ஜெயலட்சுமியை நடிக்க வைக்கலாம் என்று பலர் யோசனை கூறினார்கள். அதை ஏற்க சாண்டோ சின்னப்ப தேவர் மறுத்துவிட்டார்.

    ஸ்ரீபிரியாதான் கதாநாயகியாக நடிக்க வேண்டும் என்பதில் தேவர் உறுதியாக இருந்தார். அதற்கு அவர் சொன்ன காரணம் வேடிக்கையானது. "ஸ்ரீபிரியாவின் உண்மைப் பெயர் அலமேலு. எனவே, அலமேலுவாக அந்தப் பெண்தான் நடிக்க வேண்டும்'' என்றார், தேவர்!

    இந்தக் காலக்கட்டத்தில் தேவர் பிலிம்ஸ் தயாரித்த இரண்டொரு படங்கள் சரியாக ஓடவில்லை. இதனால் அடுத்த படம் நிச்சயம் வெற்றிப்படமாக அமையவேண்டும் என்று முனைப்புடன் செயல்பட்டார், தேவர்.

    "ஆட்டுக்கார அலமேலு''வின் "முதல்நாள் படப்பிடிப்பு மேட்டுப்பாளையத்தில் நடந்தது. தேவரின் மருமகன் தியாகராஜன்தான் டைரக்டர். ஸ்ரீபிரியா ஆற்றில் குளிக்கிறபோது பாடுகிற பாடல் காட்சிதான் முதல் காட்சியாக எடுக்கப்பட இருந்தது.

    அப்போது படப்பிடிப்பு நடக்கும் இடத்திற்கு, வேகமாக காரில் வந்து இறங்கினார் தேவர். டைரக்டரை பார்த்து, "மாப்ளே! முதல் `ஷாட்'டே ஓ.கே. ஆகணும். இல்லாவிட்டால் `பேக்கப்' பண்ணிட்டு, எல்லாரும் ஊருக்குப் புறப்பட வேண்டும்'' என்றார். இதனால் ஸ்ரீபிரியாவுக்கும், மற்றவர்களுக்கும் பரபரப்பும், படபடப்பும் அதிகமாயின. ஆயினும், அவற்றையெல்லாம் தாங்கிக்கொண்டு ஸ்ரீபிரியா இயல்பாக நடித்தார். முதல் ஷாட்டே ஓகே ஆகியது. "ஆத்துல மீன் பிடிச்சு ஆண்டவனே உன்னை நம்பி'' என்ற பாடல் காட்சிதான் அது.

    இந்தப் படத்துக்குப் பிறகு, தேவர் பிலிம்சில் ஏழெட்டு படங்களில் தொடர்ச்சியாக நடித்தார், ஸ்ரீபிரியா. பூஜை போட்டதும், முதல் ஷாட்டில் ஸ்ரீபிரியாவைத்தான் படம் பிடிக்கச் சொல்வார், தேவர். அந்த முதல் ஷாட் என்ன தெரியுமா? "மருதமலை முருகன் அருளால் மகத்தான வெற்றி கிடைக்கணும்'' என்று ஸ்ரீபிரியா வசனம் பேசுவதுதான்!

    பிரபல ஹீரோக்கள் நடிக்கும் சமயத்தில்கூட, முதல் ஷாட்டில் ஸ்ரீபிரியாதான் இந்த வசனத்தைப் பேசி நடிக்க வேண்டும். இதை கதாநாயக நடிகர்கள் கவுரவப் பிரச்சினையாக எடுத்துக் கொள்ளக்கூடாது என்பதற்காக அவர்களிடம், "தப்பா நினைச்சுக்காதீங்க. இது `லக்கி பாப்பா'ங்கறதால முதல் வசனத்தைப் பேச வைக்கிறேன்'' என்பார்.

    ஆட்டுக்கார அலமேலு படம் தமிழில் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதைத் தொடர்ந்து அதை இந்தியிலும் எடுத்தார்கள். இந்தியில் ஸ்ரீபிரியா கேரக்டரில் ராமேஸ்வரி நடித்தார். தொடர்ந்து தெலுங்கில் `கொட்டேலு பொன்னம்மா' என்ற பெயரில் எடுத்தபோது அதில் ஸ்ரீபிரியா நடித்தார். தமிழில் அலமேலு. தெலுங்கில் பொன்னம்மா. "கொட்டேலு'' என்றால் தெலுங்கில் ஆடு என்று அர்த்தம்.

    இந்தப்படமும் வெற்றி பெற, ஸ்ரீபிரியாவுக்கு தெலுங்கு ரசிகர்களின் எண்ணிக்கை அதிகமாகியது. அவரை ஆந்திராவில் எங்கே பார்த்தாலும் "கொட்டேலு'' பொன்னம்மா என்றே அழைக்கத் தொடங்கினார்கள்.

    இப்போதும் ஆந்திரா பக்கம் யாராவது அவரைப் பார்த்தால்கூட, `கொட்டேலு பொன்னம்மா' என்று அழைப்பது தான் ஆச்சரியம்!

    ஸ்ரீபிரியா நடிக்க வந்த புதிதில் யாருடனும் பேசவே ரொம்பத் தயங்குவார். படப்பிடிப்பு இடைவேளையில்கூட, முகத்தை `உம்' என்று வைத்துக் கொண்டிருப்பார். `கலகல'வென்று பேசும் அளவுக்கு அவரை மாற்றியது அவரது அம்மா கிரிஜாதான்.

    `எப்போதும் சிரித்த முகத்துடன் இருக்க வேண்டும். அப்போதுதான் எல்லோரும் உன்னிடம் மதிப்பும், மரியாதையும் வைப்பார்கள். வாழ்க்கையில் வெற்றி பெற, சிரித்த முகமும், கலகலப்பான பேச்சும் அவசியம்' என்று எடுத்துக் கூறினார். இதனால், ஸ்ரீபிரியா தன் சுபாவத்தை மாற்றிக்கொண்டார்.

    ஸ்ரீபிரியா, எல்லோருடனும் கலகலப்பாகப் பேசாமல் இருந்ததற்கு, இன்னொரு காரணமும் உண்டு. அதுதான் மொழிப்பிரச்சினை! தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர் என்றாலும், ஆங்கிலப் பள்ளியில் படித்த காரணத்தால், நாக்கில் ஆங்கிலம்தான் துள்ளி விளையாடியதே தவிர, தமிழில் கோர்வையாகப் பேசத் திணறினார்!

    அப்படியிருந்த ஸ்ரீபிரியா, பின்னர் அழகாகவும், சரளமாகவும் தமிழ் பேசியது எப்படி? அவரே கூறுகிறார்:-

    "நான் இந்த அளவுக்கு தெளிவாக தமிழ் பேசுவதற்கு பின்னணியில் இருப்பது "தினத்தந்தி''தான். என் முதல் தமிழ் ஆசான் "தினத்தந்தி''தான் என்பதை எப்போதும் பெருமையுடன் சொல்லிக் கொள்வேன்.

    அம்மா சொன்ன யோசனையின் பேரில், தினமும் "தினத்தந்தி'' வந்ததும், பெரிய எழுத்துக்களை ஒவ்வொன்றாக எழுத்துக்கூட்டி படிக்க ஆரம்பித்தேன். நாளடைவில் சேர்த்து படிக்கும் அளவுக்கு முன்னேறி விட்டேன்.

    கலைஞரின் அழகுத் தமிழ் வசனங்கள் எனக்குப் பிடித்தன. கலைஞரின் வசனங்களை சிவாஜி சார் பேசுவது தனி அழகு. இந்த அழகு என்னை கவர்ந்ததால், கலைஞரின் வசனங்களையும் உச்சரிக்கப் பழகினேன்.

    சமீபத்தில் ஒரு டெலிவிஷன் பேட்டியில் முதல்வர் கலைஞர் அவர்கள், தமிழில் நன்றாக வசனம் பேசும் 5 பேரைப்பற்றி கூறினார்கள். அந்த 5 பேரில் என்னையும் அவர் சேர்த்திருந்ததைப் பார்த்ததும், நிஜமாகவே நெகிழ்ந்து போய்விட்டேன். தமிழ்த்தாயின் தவப்புதல்வரின் அங்கீகாரம் கிடைத்ததில் எனக்கு அளவு கடந்த மகிழ்ச்சி.

    இப்போது எனக்கிருக்கும் தமிழ் ஆர்வம் மட்டும் நான் நடிக்க வந்த புதிதில் இருந்திருந்தால், எனக்கு தமிழ் அல்லாத "ஸ்ரீபிரியா'' என்ற பெயரைக்கூட வைக்க விட்டிருக்கமாட்டேன். இப்போது தமிழில் திருமூலரை படித்து ரசிக்கும் அளவுக்கு என்னை வளர்த்துக் கொண்டிருப்பதை எனக்கு கிடைத்த பெருமையாகவே உணர்கிறேன்'' என்றார் ஸ்ரீபிரியா.

    டைரக்டர் பி.மாதவனின் முதல் படத்தில் அறிமுகமான ஸ்ரீபிரியா, தனது 5-வது படமாக மீண்டும் மாதவன் இயக்கிய படத்தில் நடித்தார். அந்தப் படம் "பாட்டும் பரதமும்.'' சிவாஜிகணேசன் இரட்டை வேடத்தில் நடித்த இந்தப் படத்தில், அவருடன் ஜெயலலிதாவும், ஸ்ரீபிரியாவும் இணைந்து நடித்தனர்.

    கதாநாயகிகள் இருவரே தவிர, ஒருநாள் படப்பிடிப்பில் கூட இருவரும் சேர்ந்து வருகிற மாதிரி காட்சிகள் வரவில்லை என்பதில் ஸ்ரீபிரியாவுக்கு ரொம்பவே வருத்தம். கதை அப்படி என்றாலும், கடைசியில் `கிளைமாக்ஸ்' பாடல் காட்சியில் இருவரும் வருகிற மாதிரி ஒரு காட்சி இருந்தது. ஆனால் தனது காட்சியை முடித்துக் கொடுத்துவிட்டு ஜெயலலிதா போன பிறகே, ஸ்ரீபிரியா அந்தக் காட்சியில் நடிக்க அழைக்கப்பட்டார். அப்போதும் ஜெயலலிதாவைப் பார்க்க முடியாததில் ஸ்ரீபிரியாவுக்கு ஏக வருத்தம். 
    வில்லனாக நடித்துக் கொண்டிருந்த ரஜினிகாந்த், முதன் முதலாக "பைரவி'' படத்தில் கதாநாயகனாக நடித்தார். அந்தப் படத்தில், அவருக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு ஸ்ரீபிரியாவுக்கு கிடைத்தது.
    வில்லனாக நடித்துக் கொண்டிருந்த ரஜினிகாந்த், முதன் முதலாக "பைரவி'' படத்தில் கதாநாயகனாக நடித்தார். அந்தப் படத்தில், அவருக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு ஸ்ரீபிரியாவுக்கு கிடைத்தது.

    ஸ்ரீபிரியாவின் முதல் படமான "முருகன் காட்டிய வழி'' படம் தயாராகிக் கொண்டிருந்த நேரத்தில், டைரக்டர் கே.பாலசந்தரின் "அவள் ஒரு தொடர்கதை'' படத்திலும்  ஒப்பந்தமானார் ஸ்ரீபிரியா.

    "முருகன் காட்டிய வழி'' படம் 1974 ஜுன் மாதம் ரிலீசானது. இதே ஆண்டில் தீபாவளி தினத்தில் "அவள் ஒரு தொடர்கதை'' படம் வெளியானது. இந்த நேரத்தில் எம்.ஜி.ஆர். நடித்து டைரக்டர் ஸ்ரீதர் இயக்கிய "உரிமைக்குரல்'' உள்ளிட்ட சில பெரிய படங்களும் வெளிவந்தன. இருந்தும் முற்றிலும் புதுமுகங்களை வைத்து கே.பாலசந்தர் இயக்கிய "அவள் ஒரு தொடர்கதை'' படம் மகத்தான வெற்றி பெற்றது.

    இதுபற்றி ஸ்ரீபிரியா கூறியதாவது:-

    "அவள் ஒரு தொடர்கதை'' படத்தில் நடிக்கும்போதே டைரக்டர் கே.பாலசந்தர் என்னிடம் "படத்தில் எத்தனை கேரக்டர்கள் இருந்தாலும் உன் கேரக்டர் தனித்துப் பேசப்படும்'' என்றார். அப்படியே நடந்தது.

    தமிழில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து இந்தப் படத்தை தெலுங்கிலும் கே.பாலசந்தர் `அந்துலேனி கதா' என்ற பெயரில் உருவாக்கினார். தமிழில் சுஜாதா நடித்த கேரக்டரில் தெலுங்கில் ஜெயபிரதா நடித்தார். தமிழில் படாபட் ஜெயலட்சுமியும், நானும் ஏற்றிருந்த அதே கேரக்டர்களை தெலுங்கிலும் நடித்தோம். தெலுங்கிலும் படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது.

    இந்த வெற்றியைத் தொடர்ந்து தெலுங்கு ரசிகர்களிடமும் நான் பிரபலமானேன். தமிழில் என் அண்ணன் கேரக்டரில் ஜெய்கணேஷ் நடித்திருந்தார். தெலுங்கில் இந்தக் கேரக்டரில் ரஜினி நடித்து பிரபலமானார்.''

    இப்படி ரஜினியும், ஸ்ரீபிரியாவும் தெலுங்கில் நல்லவிதமாக அறிமுகமானதைத் தொடர்ந்து `சிலகம்மா செப்பந்தி' என்ற தெலுங்குப் படத்தில் இருவரும் ஜோடியாக நடித்தனர். இது `அடிமைகள்' என்ற மலையாளப் படத்தின் ரீமேக். மலையாளத்தில் சாரதா நடித்த கேரக்டரில் தெலுங்கில் ஸ்ரீபிரியா நடித்திருந்தார். கே.பாலசந்தர் மேற்பார்வையில் ஈரங்கி ஷர்மா டைரக்ட் செய்திருந்தார்.

    இந்த தெலுங்குப் படமும் வெற்றி பெற்றது. இதையே தமிழில் "நிழல் நிஜமாகிறது'' என்ற பெயரில் சில மாற்றங்களுடன் உருவாக்கினார். தெலுங்கில் ரஜினி நடித்த கேரக்டரில் தமிழில் கமலஹாசனும், ஸ்ரீபிரியா நடித்த கேரக்டரில் ஷோபாவும் நடித்தார்கள். தமிழிலும் படம் வெற்றி பெற்றது.

    தமிழில் பாலசந்தர் கேட்ட தேதிகளை தரமுடியாத அளவுக்கு ஸ்ரீபிரியா பிசியாக இருந்ததால், தமிழில் ஸ்ரீபிரியாவுக்கு பதிலாக ஷோபா நடித்தார்.

    இதுபற்றி ஸ்ரீபிரியா கூறும்போது, "1974-ல் வருஷத்துக்கு ஐந்தாறு படம் என்ற நிலையில் இருந்தேன். ஆனால் அடுத்து வந்த வருடங்களில் வருடத்துக்கு 16 முதல் 18 படம் வரை நடித்தேன்! அந்த ஆண்டுகளில் அதிக படங்களில் நடித்த நடிகை என்ற பெயரை தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டிருந்தேன்'' என்கிறார்.

    வி.சி.குகநாதன் டைரக்ட் செய்த "மாங்குடி மைனர்'' படத்தில் ஸ்ரீபிரியா கதாநாயகியாக நடித்தார். இப்படத்தில் ரஜினி நடித்திருந்தாலும், விஜயகுமார்தான் "மாங்குடி மைனர்!'' ரஜினி, வில்லனாகவே நடித்துக் கொண்டிருந்த காலக்கட்டம் இது.

    இந்தியில் "ராம் கு கா லட்சுமண்'' என்ற பெயரில் ரந்திர்கபூர், சத்ருகன் சின்கா, ரேகா நடித்த படத்தின் தமிழ்ப் பதிப்பு இது. இந்தியில் சத்ருகன் சின்கா ஏற்றிருந்த வேடத்தை தமிழில் ரஜினி ஏற்க, ரேகா கேரக்டரில் ஸ்ரீபிரியா நடித்தார்.

    இந்த சமயத்தில்தான் "பைரவி'' படத்தில் ரஜினியை கதாநாயகனாக அறிமுகப்படுத்தினார், தயாரிப்பாளர் கலைஞானம். இந்தப் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிக்கும்படி ஸ்ரீபிரியாவை கேட்டார்.

    ஸ்ரீபிரியா ஏராளமான படங்களில் நடித்துக் கொண்டு பிசியாக இருந்த நிலையிலும், கால்ஷீட்டுகளை அட்ஜஸ்ட் செய்து, "பைரவி''யில் கதாநாயகியாக நடித்தார்.

    இதுபற்றி ஸ்ரீபிரியா கூறியதாவது:-

    "அப்போது நான் நிறைய தெலுங்குப் படங்களை கைவசம் வைத்திருந்தேன். நான், கமல், ரஜினி, மூவருமே சம காலத்தில் நடிக்க வந்தவர்கள். டைரக்டர் கே.பாலசந்தர் படங்களில் நடிக்கும்போதே, எங்களுக்குள் நல்ல நட்பு இருந்து வந்தது. ருத்ரையா டைரக்ஷனில் "அவள் அப்படித்தான்'' படத்தில் கமல், ரஜினி, நான் என்று மூவருமே நடித்தும் இருக்கிறோம். ரஜினியுடன் "ஆடுபுலி ஆட்டம்'' போன்ற சில படங்களில் நடிப்பை தொடர்ந்திருக்கிறேன்.

    "அவள் அப்படித்தான்'' படத்தில் என் நடிப்புக்காக தமிழக அரசு "சிறந்த நடிகை'' விருது தந்தது. உண்மையில் இந்தப் படத்தின் கதையை கேட்டதும் நான் நடிக்கத் தயங்கினேன். திருமணமானவரை விரும்பும் பெண் கேரக்டரை ரசிகர்கள் ஏற்பார்களோ, மாட்டார்களோ என்று பயந்தேன். ஆனால் கமல்தான், "நிச்சயமாக இந்த கேரக்டர் உனக்கு பேரும் புகழும் வாங்கித் தரும். நடி'' என்று வற்புறுத்தினார்.

    இப்படி ஒருவர் வளர்ச்சியில் மற்றவர்கள் அக்கறை செலுத்தி மகிழ்ந்து கொண்டிருந்தோம்.

    முதல் முதலாக ரஜினி கதாநாயகனாக நடித்த படத்தில், அவருடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு எனக்கு வந்ததும், அப்போது `பத்மாலயா' நிறுவனத்தின் தெலுங்குப் படத்துக்கு கொடுத்திருந்த கால்ஷீட்களை அவர்களிடம் கேட்டு மாற்றிக்கொண்டு, "பைரவி'' படத்தில் நடித்தேன். படமும் வெற்றி பெற்றது'' என்றார், ஸ்ரீபிரியா.

    தேவர் பிலிம்ஸ் தயாரித்த "ஆட்டுக்கார அலமேலு'' படம் ஸ்ரீபிரியாவுக்கு மிகவும் புகழ் தேடித்தந்த படம். ஸ்ரீபிரியா நடித்த வேடத்தில், முதலில் படாபட் ஜெயலட்சுமிதான் நடிக்க இருந்தார். அப்போது தெலுங்கில் தாசரி நாராயணராவ் இயக்கத்தில் "படாபட்'' நடித்த தெலுங்குப்படம் தமிழில் "சொர்க்கம் - நரகம்'' என்ற பெயரில் வெளியாகி இங்கும் வெற்றி பெற்றிருந்தது. இதனால், `படாபட்' ஜெயலட்சுமியை ஆட்டுக்கார அலமேலுவாக நடிக்கச் செய்ய ஏற்பாடு நடந்தது.

    பிறகு எப்படி ஸ்ரீபிரியா "ஆட்டுக்கார அலமேலு'' ஆனார் என்பது ஒரு சுவாரசியமான கதை. 
    பி.மாதவன் டைரக்ட் செய்த "முருகன் காட்டிய வழி'' மூலமாக திரை உலகில் அடியெடுத்து வைத்த ஸ்ரீபிரியா, தொடக்கத்தில் வசனம் பேசுவதற்கு மிகவும் சிரமப்பட்டார்.
    பி.மாதவன் டைரக்ட் செய்த "முருகன் காட்டிய வழி'' மூலமாக திரை உலகில் அடியெடுத்து வைத்த ஸ்ரீபிரியா, தொடக்கத்தில் வசனம் பேசுவதற்கு மிகவும் சிரமப்பட்டார்.

    சினிமா ஆசை இல்லாமல் சர்ச் பார்க் கான்வென்டில் படித்துக் கொண்டிருந்தபோது, ஸ்ரீபிரியாவுக்கு திரைப்பட வாய்ப்பு தேடி வந்தது.

    "நல்ல வாய்ப்பு வரும்போது சொல்லி அனுப்புகிறேன்'' என்று கூறியிருந்த டைரக்டர் பி.மாதவன், ஸ்ரீபிரியாவுக்கு அழைப்பு அனுப்பினார்.

    ஸ்ரீபிரியா அவரைச் சந்தித்தார். மாதவன் "முருகன் காட்டிய வழி''யின் கதையைச் சொன்னார். ஏவி.எம்.ராஜனின் தங்கை வேடத்தில் ஸ்ரீபிரியா நடிக்க வேண்டும் என்று கூறினார்.

    சிறு வேடங்களில் நடிப்பதில் ஸ்ரீபிரியாவுக்கு ஆரம்பத்திலேயே விருப்பம் இல்லை. ஆனால், "முருகன் காட்டிய வழி''யில் ஏவி.எம்.ராஜனுக்கு தங்கை என்றாலும், படத்திலேயே மிக முக்கியமான பாத்திரம். எனவே ஸ்ரீபிரியா ஒப்புக்கொண்டார்.

    மேக்கப் டெஸ்ட்டின்போது, ஸ்ரீபிரியா கொஞ்சம் சிரமப்பட வேண்டியிருந்தது. நெற்றி சின்னதாக இருப்பதாகக் கூறி, முன்புற நெற்றி முடியை பிளேடு வைத்து அகற்றி, மேக்கப் டெஸ்ட் நடத்தினார்கள்! இதனால் பள்ளிக்கு பஸ்சில் போய் வந்து கொண்டிருந்த ஸ்ரீபிரியா, பஸ்சில் ஏறியதும் கையிலிருக்கும் நோட்டுப் புத்தகத்தால் நெற்றியை மறைத்துக்கொண்டு பயணம் செய்தார்!

    பஸ் நிறுத்தத்தில் பஸ்சுக்காக காத்திருக்கும் சமயங்களிலும் இந்த `முகமறைப்பு' தொடர்ந்து இருக்கிறது.

    முகத்தைக்கூட காட்ட முடியாத சோகம், ஸ்ரீபிரியாவுக்குள் ஒரு கட்டத்தில் கோப அலைகளை எழுப்பியது. தன்னை சினிமாவில் நடிக்க அழைத்த டைரக்டர் பி.மாதவன் மீதே கோபப்பட வைத்தது.

    ஒருநாள் பள்ளி முடிந்ததும், நேராக டைரக்டர் பி.மாதவன் ஆபீசுக்கு போனார். ஏதோ, பட விஷயமாகப் பேச வந்திருப்பதாக மாதவன் நினைத்தார்.

    ஆனால் ஸ்ரீபிரியாவோ, "எனக்கு நடிக்க விருப்பமில்லை. தயவு செய்து என்னை விட்டுவிடுங்கள்'' என்று கெஞ்சல் குரலில் சொன்னார்.

    "வீணாக பயப்படாதே. மேக்கப் டெஸ்ட் `ஓகே' ஆகிவிட்டது. உன்னை நன்றாக நடிக்க வைக்க முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது!'' என்று மாதவன் கூறினார்.

    ஆனால் ஸ்ரீபிரியாவோ, சொன்னதையே திருப்பித் திருப்பிச் சொல்ல, கோபம் அடைந்தார், மாதவன்.

    "எத்தனையோ பேர் நடிப்பதற்கு ஆசைப்பட்டு தவம் கிடக்கிறார்கள். உனக்கு வாய்ப்பு தேடி வந்திருக்கிறது. இப்போது நீ மறுத்துவிட்டால், பிறகு இந்த வாய்ப்பு மீண்டும் வராது!'' என்று கூறினார்.

    ஆனால் ஸ்ரீபிரியாவோ, "எனக்கு அதுபற்றிக் கவலை இல்லை சார்!'' என்று கூறிவிட்டு விடுவிடுவென்று அங்கிருந்து புறப்பட்டுவிட்டார்.

    ஆனால் டைரக்டர் மாதவன் விடுவதாக இல்லை. 2 மாதம் கழித்து, ஸ்ரீபிரியாவுக்கு மீண்டும் அழைப்பு அனுப்பினார். `ஏன் திரும்பவும் அழைக்கிறார்' என்று யோசித்தபடியே அவரைப் போய் சந்தித்தார்.

    "என்ன ஆனாலும் சரி. நடிக்கமாட்டேன் என்று தைரியமாக கூறிவிட்டுப் போனாய் அல்லவா? அந்த தைரியம்தான் எனக்கு ரொம்பவும் பிடிக்கிறது. என் கதையின் அந்தக் கேரக்டர், உனக்கு ரொம்பப் பொருத்தமாக இருக்கும். பிடிவாதம் செய்யாமல் நடி!'' என்று மாதவன் கூறினார்.

    ஸ்ரீபிரியாவின் தாயாரும், மாதவன் கருத்தை ஆதரித்தார். "டைரக்டர் சார் இவ்வளவு சொல்லும்போது நீ மறுப்பது சரியல்ல'' என்று எடுத்துச் சொன்னார். எனவே, நடிப்பதற்கு சம்மதித்தார், ஸ்ரீபிரியா.

    முதல் படத்தில் தனக்கு நேர்ந்த அனுபவம் குறித்து ஸ்ரீபிரியா கூறியதாவது:-

    "நடிப்பது என்று முடிவு எடுத்ததும், அதற்கேற்ப என்னை பக்குவப்படுத்திக் கொண்டேன். எங்கள் சர்ச் பார்க் பள்ளியின் எதிரே `சினிமா கட்- அவுட்'கள் வைப்பார்கள். அதில் பிரபல நடிகர் -நடிகைகள் படங்கள் பெரிய அளவில் பளிச்சென்று காணப்படும். `நாம் இப்போது நடிக்கப்போகிறோம். இனி நமக்கும் இதே இடத்தில் `கட்அவுட்' வைப்பார்கள்!' என்று எண்ணிக் கொண்டேன்.

    அன்றைய பிரபல சினிமா பத்திரிகைகளில் என் படத்தை அட்டையில் பிரசுரித்தார்கள். அதனால், பள்ளி மாணவிகள் மத்தியில் என் புகழ் பரவியது.''- இப்படிச் சொன்ன ஸ்ரீபிரியா, முதல் படம் "முருகன் காட்டிய வழி''யில் வசனம் பேசத்தான் ரொம்ப சிரமப்பட்டிருக்கிறார்.

    டைரக்டர் பி.மாதவனிடம் உதவியாளர்களாக இருந்த தேவராஜ் -மோகன் இருவரில் மோகன்தான் ஸ்ரீபிரியாவுக்கு வசனம் பேச கற்றுக் கொடுத்தார். அதுவரை தமிழில் பேச, எழுதத் தெரியாத ஸ்ரீபிரியாவுக்கு தமிழில் சரளமாக பேசிப்பழக அவர் கொடுத்த வசனம் "தங்கப்பதக்கம்'' படத்தில் சிவாஜியிடம் மருமகளாக நடிக்கும் பிரமிளா பேசும் வசனம்.

    `மாமா! காஞ்சுப்போன நதியெல்லாம் வற்றாத நதியைப் பார்த்து ஆறுதல் அடையும். அந்த நதியே காய்ஞ்சு போயிட்டா?''

    இந்த வசனத்தை ஸ்ரீபிரியா சொன்ன பிறகு, படத்துக்கான 2 பக்க வசனத்தை படித்துக்காட்டினார், மோகன்.

    இந்த வசனத்தை ஸ்ரீபிரியா தயங்கித் தயங்கி பேசினார். அப்போது பின்னால் நின்று கொண்டிருந்த டைரக்டர் பி.மாதவன், `பொண்ணு தேறுமா?' என்பது போல் மோகனிடம் கை அசைவில் கேட்டிருக்கிறார். மோகனோ, உதட்டைப் பிதுக்கி `தேறாது' என்பதுபோல் சொல்லியிருக்கிறார்!

    ஆனால், வெகு விரைவிலேயே எல்லோரும் ஆச்சரியப்படும்படி வசனத்தை தெளிவான உச்சரிப்புடன் பேசத்தொடங்கினார், ஸ்ரீபிரியா.

    "எனக்கு தமிழ் சரியாகத் தெரியவில்லை என்றாலும், இரண்டு தடவை படித்துக் காட்டினால் போதும். அப்படியே மனதுக்குள் கிரகித்துக் கொண்டு திருப்பிச் சொல்லிவிடுவேன். மோகன் சார் எனக்கான வசனத்தை இரண்டாவது தடவையாகச் சொன்னபோது, அப்படியே கடகடன்னு திருப்பிச் சொல்லி, அவரை ஆச்சரியப்படுத்தி விட்டேன். நான் பேசி முடித்ததும் கேமராமேன் பி.என்.சுந்தரம் சார் கைதட்டி பாராட்டினார்'' என்று `மலரும் நினைவு'களை பகிர்ந்து கொண்டார், ஸ்ரீபிரியா.

    இதன் பிறகு ஒருநாள் படப்பிடிப்பு தளத்தில் ஸ்ரீபிரியா நடித்துக் கொண்டிருந்தபோது, தற்செயலாக அங்கு நடிகர் சிவகுமார் வந்தார்.

    "படத்தின் சில காட்சிகளை டைரக்டர் மாதவன் சாருடன் சேர்ந்து பார்த்தேன். நன்றாக நடித்திருக்கிறாய். வசனத்தையும் அழகாகப் பேசியிருக்கிறாய். எதிர்காலத்தில் சிறந்த நடிகையாக வருவாய்!'' என்று வாழ்த்தினார்.

    பூரித்துப்போனார், ஸ்ரீபிரியா. 
    தமிழக நடிகைகளில் 350 படங்களுக்கு மேல் நடித்து சாதனை படைத்தவர் ஸ்ரீபிரியா. எம்.ஜி.ஆர், சிவாஜிகணேசன், ஜெய்சங்கர், கமல், ரஜினி என எல்லா முன்னணி நடிகர்களுக்கும் ஜோடியாக நடித்தவர்.
    தமிழக நடிகைகளில் 350 படங்களுக்கு மேல் நடித்து சாதனை படைத்தவர் ஸ்ரீபிரியா. எம்.ஜி.ஆர், சிவாஜிகணேசன், ஜெய்சங்கர், கமல், ரஜினி என எல்லா முன்னணி நடிகர்களுக்கும் ஜோடியாக நடித்தவர்.

    தமிழ்ப் படங்கள் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு, கன்னடம் என்று 350 படங்களை தாண்டியிருக்கிறார். தமிழில் மட்டும் கிட்டத்தட்ட 150 படங்கள். சிவாஜியுடன் 20 படங்கள், ஜெய்சங்கருடன் 20 படங்கள், கமலுடன் 32 படங்கள், ரஜினியுடன் 30 படங்கள் என்று முன்னணி நட்சத்திரங்களின் `தொடர் நாயகியாக' உலா வந்த பெருமை இவருக்கு உண்டு.

    ஜெமினி, ஏவி.எம். போன்ற பெரிய சினிமா நிறுவனங்களில் ஆஸ்தான நடனக்கலைஞர் என்ற அந்தஸ்துடன் இருந்த பிரபல நடனமேதை கே.என். தண்டாயுதபாணி பிள்ளை, ஸ்ரீபிரியாவின் பெரியப்பா. இவர் எம்.ஜி.ஆரின் நெருங்கிய நண்பராகவும் இருந்தார். நடன அமைப்பாளர்கள் சங்கத்தில் இப்போதும் கே.என்.தண்டாயுதபாணி பிள்ளையின் படம் இருக்கிறது.

    பெரியப்பாவின் நடனப்பின்னணியில் ஸ்ரீபிரியாவின் அப்பா பக்கிரிசாமியும் நடனக் கலைஞர். அம்மா கிரிஜாவும் நடனத்தில் தேர்ந்தவர்.

    ஜெமினி தயாரித்த "மூன்று பிள்ளைகள்'' படத்தில் பக்கிரிசாமி நடன இயக்குனராக இருந்து, கிரிஜாவை நடனமாடச் செய்திருக்கிறார்.

    `ஸ்ரீபிரியா' என்பது சினிமாவுக்காக டைரக்டர் பி.மாதவன் சூட்டிய பெயர். நிஜப்பெயர் அலமேலு.

    டைரக்டர் பி.மாதவன் இயக்கிய "முருகன் காட்டிய வழி'' என்ற படம் மூலம்தான் ஸ்ரீபிரியா சினிமாவில் அறிமுகமானார். ஆனால், டைரக்டர் ஏ.பி.நாகராஜன் இயக்கி சிவாஜி -சாவித்திரி சிவன்- பார்வதியாக நடித்த "திருவிளையாடல்'' படத்திலேயே நடித்திருக்க வேண்டியவர்.

    அதுபற்றி ஸ்ரீபிரியாவே கூறுகிறார்:-

    "அப்போது எனக்கு 6 வயது இருக்கும். `திருவிளையாடல்' படத்தில் பாலமுருகனாக நடிக்க சிறுவர்- சிறுமி தேவை என்று, `தினத்தந்தி'யில் விளம்பரம் வந்திருந்தது. என் பெரியப்பா, அந்தப் படத்திற்கு டான்ஸ் மாஸ்டராக இருந்தார். அவர் என்னிடம் "பாலமுருகனாக நடிக்க ஆலு (ஸ்ரீபிரியா) நீ வேணும்னா முயற்சி பண்ணேன்'' என்றார்.

    பெரியப்பா இப்படிச் சொன்னதும், எனக்கும் ஆசை வந்துவிட்டது. நடிக்கும் ஆசை அல்ல; சினிமாவில் நடிக்கப்போனால் ஸ்கூலுக்கு லீவு போடலாமே என்ற ஆசைதான்!

    முருகனாக நடிப்பதற்காக அம்மா என்னை அழைத்துப்போனார். அங்கே போனால், என் வயதில் சுமார் 200 பேர் வந்திருந்தார்கள். அத்தனை பேருக்கும் `மேக்கப் டெஸ்ட்' நடந்தது. அதில் என்னை மட்டுமே தேர்வு செய்தார்கள். என்னிடம் ஒரு வசனத்தைக் கொடுத்து, படிக்கச் சொன்னார்கள்.

    அப்போது எனக்கு சுத்தமாக தமிழ் படிக்கத் தெரியாது! நான் படித்த `சர்ச் பார்க்' கான்வென்டில் ஆங்கிலம்தான் பிரதானம். அதோடு நான் சிறப்புப்பாடமாக இந்தியை எடுத்திருந்தேன்.

    எனக்கு, தமிழ் தெரியாவிட்டாலும் வசனத்தை எப்படிப் பேசவேண்டும் என்று சொல்லிக் கொடுத்தார்கள்.

    பெற்றோரிடம் கோபித்துக்கொண்டு மலைக்குப்போன முருகனை அவ்வையார் சந்தித்து, சாந்தப்படுத்த முயற்சிக்கிற காட்சி அது.

    முருகன் தங்கியிருக்கும் மலைக்கு அவ்வையார் சென்று, "முருகா! ஞானபண்டிதா!'' என்று அழைக்க, பதிலுக்கு முருகன், "ஓ அவ்வையா!'' என்று கேட்க வேண்டும்.

    இந்தக் காட்சி பற்றி விளக்கி எனக்கான வசனத்தையும் சொல்லிக் கொடுத்து என்னை நடிக்க வைத்தார்கள். அது ஒத்திகை என்று கூட அப்போது எனக்குத் தெரியாது. என் நடிப்பு டைரக்டர் ஏ.பி.நாகராஜனுக்கு பிடித்துப்போக, மறுநாள் வருமாறு சொன்னார்கள். `கார் வரும்' என்றார்கள்.

    மறுநாள் காரும் வரவில்லை; அழைப்பும் வரவில்லை. என்ன நடந்தது என்று போய்ப்பார்த்தால், நான் நடிக்க வேண்டிய அந்த பாலமுருகன் வேடத்தில் இன்னொரு பெண் நடித்துக் கொண்டிருந்தாள்! பிறகுதான் அந்த பாலமுருகன் வேடத்துக்கு, சிவாஜி சார் சிபாரிசு செய்த பெண்ணைப் போட்டிருக்கிறார்கள் என்பது தெரிந்தது.

    பின்னாளில் நான் கதாநாயகியாக நிறைய படங்களில் நடித்தபோது, டைரக்டர் ஏ.பி.நாகராஜன் எம்.ஜி.ஆரை வைத்து "நவரத்தினம்'' என்ற படத்தை இயக்கினார். அதில் 9 கதாநாயகிகளில் நானும் இருந்தேன். இந்தப்படத்தில் நடித்துவிட்டு வரும்போது, ஏ.பி.நாகராஜனிடம் "சார்! நான் படத்தில் நடித்த இந்தக்காட்சி இருக்குமா? அல்லது திருவிளையாடல் படத்தில் `ஓ.கே' பண்ணிய பிறகு என்னை விலக்கியது மாதிரி இதிலும் செய்து விடுவீர்களா?'' என்று விளையாட்டாகக் கேட்டேன். அவரோ, பதறியபடி, "என்னம்மா நீ! சின்ன வயதில் நடந்ததைக் கூடவா இப்படி நினைவில் வைத்திருப்பாய்!'' என்று சொன்னார்.

    ஸ்ரீபிரியா எட்டாவது படித்துக் கொண்டிருந்த நேரத்தில், ஸ்ரீபிரியாவின் அக்கா மீனாவின் பரதநாட்டிய அரங்கேற்றம் நடந்தது. நடன நிகழ்ச்சிகளை பிரபல `ஸ்டில் போட்டோகிராபர்' நாகராஜராவ் படம் எடுத்தார். விழாவைப் பார்க்க வந்த ஸ்ரீபிரியா நாகராஜராவ் எடுத்த படங்களில் விழுந்திருந்தார்.

    படங்களை நாகராஜராவ் பிரிண்ட் போட்டு தயார் நிலையில் வைத்திருந்தபோது, டைரக்டர் பி.மாதவன் அங்கு வந்தார். தற்செயலாக ஸ்ரீபிரியாவின் படத்தைப் பார்த்த மாதவன் `நாம் எடுக்கும் படத்துக்கு இந்தப்பெண்ணும் சரியாக இருப்பாள்' என்று நினைத்தார். அன்று மதியமே ஸ்ரீபிரியா படித்த சர்ச்பார்க் பள்ளிக்கு சினிமா கம்பெனி கார் போயிற்று.

    "அப்போது எனக்கு நடிப்பில் எல்லாம் ஆர்வம் கிடையாது. ஏற்கனவே சிறு வயதில் ஏற்பட்ட சினிமா அனுபவம், `அந்தத் திசைக்கு ஒரு கும்பிடு' என்ற நிலைக்கு என்னைக் கொண்டு வந்திருந்தது. அதோடு அப்போது ஸ்கூலில் `த்ரோபால்', `நெட்பால்' என்று விளையாட்டுகளில் `நம்பர் ஒன்'னாக இருந்தேன். என் `ஸ்போர்ட்ஸ்' ஆர்வம் என்னை `கேம்ஸ் டீச்சர்' ஆகவேண்டும் என்ற கனவில் வைத்திருந்தது. இப்படியிருக்கும்போது, தேடி வந்த நடிப்பு வாய்ப்பை ஏற்கத் தயங்கினேன்'' என்று கூறுகிறார், ஸ்ரீபிரியா.

    ஆனால் அவர் தாயாரோ, "மாதவன் சார் பெரிய டைரக்டர். நீ நடிக்க வேண்டாம் என்று நினைத்தாலும் அதை நேரில் போய் சொன்னால்தான் மரியாதை'' என்று சொல்ல, அம்மாவுடன் போய் டைரக்டர் மாதவனை பார்த்தார்.

    மாதவன் அப்போது கதாசிரியர் பாலமுருகன் தயாரித்த "மாணிக்கத் தொட்டில்'' என்ற படத்தை டைரக்ட் செய்ய இருந்தார். அதில் ஜெமினிகணேசனின் 5 மகள்களில் ஒருவராக ஸ்ரீபிரியாவை நடிக்க வைக்கும் முடிவில்தான் அழைத்திருந்தார். எப்படியாவது நடிக்கும் வாய்ப்பை தட்டிக்கழிக்க விரும்பிய ஸ்ரீபிரியா, "5 பேரில்  ஒருவராக நடிப்பதில் எனக்கு விருப்பம் இல்லை'' என்று கூறினார்.

    "பொண்ணுக்குத் தங்கமனசு'' என்ற வெற்றிப்படத்தை மாதவன் இயக்கியிருந்த நேரம் அது. அந்தப் படத்தில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்தது. "அப்படி ஒரு படத்தை தயாரிக்கும்போது, அழைப்பு அனுப்புகிறேன்'' என்று கூறினார், மாதவன். சொன்னதைச் செய்தார்.

    கதாநாயகியாகவே நடித்து வந்த ரோஜா, டைரக்டர் கே.பாக்யராஜின் அழைப்பை தட்ட முடியாமல், "பாரிஜாதம்'' படத்தில் அம்மா வேடத்தில் நடித்தார்.
    கதாநாயகியாகவே நடித்து வந்த ரோஜா, டைரக்டர் கே.பாக்யராஜின் அழைப்பை தட்ட முடியாமல், "பாரிஜாதம்'' படத்தில் அம்மா வேடத்தில் நடித்தார்.

    டைரக்டர் பாக்யராஜ் தனது மகள் சரண்யாவை நாயகியாக்கி இயக்கிய படம் "பாரிஜாதம்.'' இந்தப் படத்தில் கதாநாயகன் பிருத்விராஜ×க்கு அம்மாவாக நடித்து ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கினார் ரோஜா.

    இந்தப்படம் கடந்த ஆண்டு வெளிவந்தபோது, ரோஜாவை அதுவரை நாயகியாக மட்டுமே பார்த்து ரசித்து வந்த ரசிகர்கள் வியப்பும், திகைப்பும் அடைந்தார்கள். தங்கள் இதயத்தில் `நாயகி'யாக குடிகொண்டிருக்கும் ரோஜா, அதற்குள் எப்படி அம்மாவாக நடிக்கலாம் என்று கோபப்பட்ட ரசிகர்கள் ஏராளம்.

    சிலர் கடிதங்கள் எழுதி திட்டினார்கள். சிலர் டெலிபோன் மூலம் தங்கள் ஆத்திரத்தைக் கொட்டினார்கள்.

    இதுபற்றி ரோஜா கூறும்போது, "எனக்கும் அம்மா கேரக்டரில் நடிப்பதில் உடன்பாடு இல்லைதான். ஹீரோ பிரித்விராஜ×க்கு அம்மா என்பதும் எனக்குத் தெரியாது. செட்டில் பிரிதிவிராஜை பார்த்தபோதுதான் `திக்'கென்றது. ஆனாலும், டைரக்டர் பாக்யராஜ் கேட்டு "முடியாது'' என்று சொல்ல மனம் இடம் தரவில்லை. எனவே, அம்மா கேரக்டரில் நடிக்க வேண்டியதாயிற்று. இதில் ஒரு ஆறுதல் என்னவென்றால், அந்த அம்மா கேரக்டர் படத்தின் பிளாஷ்பேக் காட்சியில் வருவது'' என்றார்.

    இந்த நட்பு பின்னணியில்தான் டைரக்டர் ராமநாராயணனின் "பாசக்கிளிகள்'' படத்தில் வில்லனின் மனைவியாக நடித்ததையும், விஜய் நடித்த "நெஞ்சினிலே'' படத்தில் ஒரு பாட்டுக்கு மட்டும் ஆட நேர்ந்ததையும் குறிப்பிட்டார்.

    ரோஜா அப்போது பிசியாக இருந்த நேரம். ஆனால் விஜய்யுடன் ஒரு படத்திலாவது நடித்துவிடவேண்டும் என்ற எண்ணம் மனதுக்குள் ஓடிக்கொண்டிருந்தது. இந்த நேரத்தில் விஜய்யுடன் ஒரு பாட்டுக்கு மட்டும் ஆடவேண்டும் என்று கேட்டு வந்த "நெஞ்சினிலே'' பட வாய்ப்பை அவரால் நிராகரிக்க முடியவில்லை.

    தவிரவும், இந்தப் பாடல் முழுக்க ரோஜாவை புகழ்ந்து எழுதப்பட்டது. அதுவும் விஜய்யே பாடியிருந்தார். "தங்க நிறத்துக்குத்தான் தமிழ்நாட்டை எழுதித்தரட்டுமா'' என்று தொடங்கும் பாடலின் முதல் வரியே ரோஜாவை நடனக் காட்சிக்கு உடனடியாக தயார் செய்து விட்டது.

    தமிழ்ப்படங்களில் ரோஜா ஜோடி சேராத ஹீரோ என்று பார்த்தால், அதில் கமல் மட்டுமே இருக்கிறார்.

    கமலுடன் நடிக்கும் வாய்ப்பு தேடி வந்த போதும், சூழ்நிலை காரணமாக அதை ஏற்கவில்லை.

    ஒரு கட்டத்தில் படங்கள் குறையத் தொடங்கியதும் ரோஜா ஆந்திர அரசியலோடு தன்னை இணைத்துக்கொண்டார். முன்னாள் ஆந்திர முதல்- மந்திரி சந்திரபாபு நாயுடுவின் அணியில் ரோஜா முன்னணியில் இருக்கிறார். மேடையில் பேச அழைத்தால் போகிறார். தேர்தல் சமயங்களில் ஓட்டுக்கேட்க வீடு வீடாகச் செல்கிறார். மக்களுடன் சரளமாக உரையாடி அவர்களின் கோரிக்கைகளையும் கேட்டு தெரிந்து கொள்கிறார்.

    "குறுகிய காலத்தில், கட்சியில் முக்கிய இடத்தை பிடித்து விட்டீர்கள். `நடிகை' என்ற தகுதிதான் இதற்குக் காரணமா?'' என்று கேட்டதற்கு ரோஜா கூறினார்:

    "ஒரு தனி மனிதர் கட்சியில் சேருகிறார். படிப்படியாக வளருகிறார். கட்சியில் அவர் எல்லோருக்கும் தெரிந்த முகமாகி, முக்கிய பொறுப்புக்கு வருவதற்குள் கிட்டத்தட்ட 10 வருடமாகி விடுகிறது. என் போன்றவர்கள் சினிமா மூலம் ஏற்கனவே மக்களுக்கு தெரிந்தவர்களாகி விடுகிறோம். இதனால் கட்சி எங்களை அதிக அளவில் பயன்படுத்திக் கொள்கிறது. பொறுப்புக்களையும் தருகிறது.

    தெலுங்குதேச கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு எப்போதுமே என் மரியாதைக்குரியவர். என் திருமணம் திருப்பதியில் நடந்தபோது, அவர் ஆந்திர முதல்- மந்திரியாக இருந்தார். திருமணத்துக்கு வந்து வாழ்த்த வேண்டும் என்று கேட்டதும், சந்தோஷமாய் சம்மதித்தார். வந்து வாழ்த்தினார்.''

    இப்படிச் சொல்லும் ரோஜா, கட்சியில் சேர்ந்த புதிதில் சிவபிரசாத் என்ற வேட்பாளர் எம்.எல்.ஏ. பதவிக்கு போட்டியிட்டபோது அவருக்காக பிரசாரம் செய்து வெற்றியும் ஈட்டித் தந்தார்.

    கடந்த பொதுத்தேர்தலில் நகரி தொகுதியில் போட்டியிட்டார். 4 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை நழுவ விட்டார். ரோஜாவை எதிர்த்துப் போட்டியிட்டவர் செல்வாக்கு பெற்ற தலைவர்களில் ஒருவர். அவர் குறைந்த ஓட்டில்தான் ஜெயிக்க முடிந்திருக்கிறது.

    `அரசியலில் வெற்றி -தோல்வி சகஜம். அரசியலை தேர்ந்தெடுத்த பிறகு எக்காலத்திலும் அதில் இருந்து பின்வாங்குவதாக இல்லை' என்பதை, தனது அரசியல் கொள்கையாகவே வைத்திருக்கிறார், ரோஜா.

    அரசியலில் ஈடுபட்டாலும் நல்ல கேரக்டர் வந்தால் நடிப்பது என்று முடிவு எடுத்திருக்கிறார். சமீபத்தில் "மேக சந்தேசம்'' தெலுங்கு சீரியலில் நடிக்க நடிகை ராதிகா அழைத்திருந்தார். 4 பெரிய பையன்களுக்கு அம்மாவாக நடிக்க வேண்டும்! மறுத்துவிட்டார், ரோஜா.

    "ரோஜா ரோஜாதான் என்று ரசிகர்கள் சொல்கிற மாதிரி கேரக்டர்கள் வரவேண்டும். முகத்தைக் காட்டிவிட்டுப் போகிற மாதிரியெல்லாம் நடிப்பது என்றால், அந்த வாய்ப்பு வேண்டவே வேண்டாம். பணத்தேவைக்காக நடிக்க வேண்டும் என்ற கட்டாயம் எனக்கு இல்லை''- இப்படி தெளிவுபடுத்தும் ரோஜாவுக்கு அம்சவதனி என்ற 4 வயது மகளும், கிருஷ்ணகவுசிக் என்ற ஒரு வயது மகனும் வாரிசுகள்.

    "பிள்ளைகள் எப்படி வரவேண்டும் என்று விரும்புகிறீர்கள்?'' என்று கேட்டதற்கு, "இப்படித்தான் வரவேண்டும் என்ற திட்டமெல்லாம் வாழ்க்கைக்கு சரி வராது. அவர்களின் ஆர்வம் எதுவோ, முன்னேற்றம் எதுவோ அதிலே அவர்கள் நிச்சயம் வெளிப்படுவார்கள். பிள்ளைகளின் விஷயத்தில் எங்கள் ஆர்வத்தை திணிக்கிற பெற்றோராக நானும் செல்வாவும் ஒருபோதும் இருக்க மாட்டோம்'' என்றார், ரோஜா.
    புகழின் உச்சியில் இருந்தபோது நடிகை ரோஜாவுக்கும், டைரக்டர் செல்வமணிக்கும் காதல் ஏற்பட்டது. அவர்கள் 13 ஆண்டுகள் காத்திருந்து திருமணம் செய்து கொண்டனர்.
    புகழின் உச்சியில் இருந்தபோது நடிகை ரோஜாவுக்கும், டைரக்டர் செல்வமணிக்கும் காதல் ஏற்பட்டது. அவர்கள் 13 ஆண்டுகள் காத்திருந்து திருமணம் செய்து கொண்டனர்.

    காதல் அனுபவங்கள் பற்றி ரோஜா கூறியதாவது:-

    "தெலுங்கில் மற்ற டைரக்டர்களுடன் பணியாற்றியதற்கும், செல்வாவுடன் பணியாற்றியதற்கும் ஏகப்பட்ட வித்தியாசம் தெரிந்தது. யாராவது நடிகைகள் கேமிரா முன் நடிப்பதற்காக நின்று கொண்டிருந்தால், கேமிரா முன்னால் செல்வா வரமாட்டார். அத்தனை கூச்ச சுபாவம். கொஞ்சம் தூரத்தில் இருந்தபடியே, காட்சிகளை விவரிப்பார். எப்படி நடித்தால் சரியாக இருக்கும் என்று விளக்குவார்.

    செல்வாவின் இந்தப் பண்பு என்னைக் கவர்ந்தது. இதுவே அவர் மீது எனக்கு நன்மதிப்பை ஏற்படுத்தியிருந்தது. அப்போதுகூட, `காதல்' ஏற்பட்டுவிடவில்லை'' என்றார், ரோஜா.

    ரோஜா பற்றி அவரது அம்மாவிடமும், அண்ணனிடமும் அக்கறையாக பேசி வந்திருக்கிறார் செல்வமணி.

    இதனால், அவர்கள் இருவருக்கும் செல்வமணியை ரொம்பவே பிடித்துவிட்டது. `அம்மாவுக்கு செல்வான்னா உயிர்' என்று ரோஜாவே சொல்லும் அளவுக்கு ரோஜாவின் தாயாரிடம் நற்பெயர் பெற்றார், செல்வமணி.

    காதலை செல்வமணி வெளிப்படுத்தியது பற்றி ரோஜா கூறுகிறார்: "செல்வா என்னிடம் எப்போதும் போலவே  பழகினார். ஆனால் அம்மாவிடம் என் மீதான அவரது தனிப்பட்ட அக்கறையை வெளிப்படுத்தி வந்தார். அவ்வப்போது ஒரு தாய்க்கு உரிய பரிவுடன் என் மீதான அவரது அக்கறையையும் தாண்டிய பிரியம் அம்மாவுக்கு தெரியவர, `நம் மகளுக்கேற்றவர் இவரே' என்ற முடிவுக்கு அம்மா வந்துவிட்டார். இது பற்றி அண்ணன்களிடமும் அம்மா கூற, அண்ணன்கள் தரப்பிலும் செல்வாவின் விருப்பத்துக்கு தடையில்லை.

    எங்கள் `ரெட்டி' வம்சத்தில், வேறு ஜாதியில் பெண்ணோ, மாப்பிள்ளையோ பெரும்பாலும் எடுக்கமாட்டார்கள். செல்வா முதலியார் வகுப்பு. கனிவான அணுகுமுறையாலும், பண்பாலும் ஜாதியை மீறி எங்களைக் கவர்ந்துவிட்டார், செல்வா.

    ராஜமுந்திரியில் ஒரு படப்பிடிப்பில் இருக்கிறேன். அன்றைக்கு எனது பிறந்த நாளும்கூட. அங்கே வந்த செல்வா, என்னை மணந்துகொள்ள விரும்புவதாகக் கூறினார்.

    "உன்னை நன்றாக வைத்துக்கொள்ள முடியும் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது. இதில் உனக்கும் சம்மதமானால் நான் காத்திருக்கிறேன். நம் திருமணம் உடனடியாக நடந்துவிடவேண்டும் என்பதில்லை. நீ இப்போது பிசியான ஆர்ட்டிஸ்ட். உன் ஆசை தீர நடி. எப்போது `போதும்' என்று தோன்றுகிறதோ, அப்போது நாம் திருமணம் செய்து கொள்வோம்'' என்றார்.

    அம்மா மூலம் செல்வாவின் விருப்பம் என் காதுக்கும் ஏற்கனவே வந்திருந்தது. அதுபற்றி எந்த முடிவும் எடுக்காமல் இருந்தபோது, செல்வா இப்படி சொல்ல, `அடடா! எப்படிப்பட்ட மனிதர் இவர்!' என்று எனக்குத் தோன்றியது. நானும் சம்மதம் தெரிவித்து விட்டேன்.

    செல்வா எனக்காக 13 வருஷம் காத்திருந்து கைபிடித்தார். நிஜமாகவே இப்படி ஒரு காதல் கணவர் கிடைக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும்'' என்று ரோஜா கூறினார்.

    இந்த காத்திருந்த காதலிலும் ரோஜாவுக்கு அவ்வப்போது அட்வைசெல்லாம் கொடுத்து `பூப்போல' பார்த்துக் கொண்டிருக்கிறார், செல்வமணி.

    ராத்திரி பகல்னு தொடர்ந்து தூங்காம ரெஸ்ட்டே இல்லாம நடிச்சா கண்ணுக்கு கீழே கருவளையம் வந்திடும். அதனால் `ஓய்வு' எடுக்கிற நேரம் அதிகமா இருக்கணும்' என்கிற மாதிரி செல்வமணி அவ்வப்போது ஆலோசனை கொடுத்துக்கொண்டுதான் இருந்திருக்கிறார்.

    காலச்சக்கரம் எப்போதும் ஒரே மாதிரி சுழல்வதில்லை. ரோஜா தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என நூறு படங்களைத் தாண்டிவிட்டார்.

    ரோஜா புகழின் உச்சியில் இருந்தாலும், செல்வமணி இயக்கும் படங்களின் எண்ணிக்கை குறைந்து விட்டது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட "குற்றப்பத்திரிகை'' படம் ரிலீசாகாமல் போனதும் செல்வமணியை கவலைக்குள்ளாக்கி விட்டது (முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கு பின்னணியில் உருவான படம் என்பதால், அப்போது தடை செய்யப்பட்ட இந்த படம், பல வருடங்கள் கழித்து சமீபத்தில்தான் ரிலீசானது).

    இந்த நேரத்தில் ரோஜாவிடம் பலரும் பேசி அவர் மனதை கலைக்கப் பார்த்திருக்கிறார்கள். அது காதலில் உறுதியாயிருந்த ரோஜாவின் மனதை எந்தவிதத்திலும் கலைக்கவில்லை. காதலிக்கத் தொடங்கி 13 வருடங்கள் முடிந்த நிலையில் ரோஜா `திருமதி செல்வமணி' ஆகிவிட்டார்.

    அப்போது ஆந்திராவின் முதல்- மந்திரியாக இருந்த சந்திரபாபு நாயுடு இந்தத் திருமணத்தை நடத்தி வைத்தார். இந்த காதல் தம்பதிகளுக்கு பெண் ஒன்றும், ஆண் ஒன்றுமாய் இரண்டு குழந்தைகள்.

    ஆரம்பத்தில் கிளாமர் கேரக்டர்களில் அதிகம் நடித்து வந்த ரோஜாவுக்கு ரஜினியுடன் `உழைப்பாளி' படத்தில் நடிக்க வந்தபோது ஒரு சின்ன பிரச்சினை ஏற்பட்டது.

    ரோஜா ஏராளமான படங்களில் இரவு -பகலாக நடித்துக் கொண்டிருந்த காலக்கட்டம் அது. ஐதராபாத்துக்கும், சென்னைக்குமாக அடிக்கடி விமானத்தில் பறந்தபடி இருந்தார்.

    அப்போதுதான் ரஜினிக்கு ஜோடியாக "உழைப்பாளி'' படத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்தது.

    முதல் நாள் படப்பிடிப்பில், "ரஜினி பெரிய சூப்பர் ஸ்டார். அவருடன் நடிப்பது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?'' என்று நிருபர்கள் கேட்கப்போக, இதில் தனக்கு எந்தவித பீலிங்கும் இருப்பதாக தெரியவில்லை என்கிற ரீதியில் ரோஜா பதில் சொன்னார்.

    இந்த பதிலால், ரஜினி ரசிகர்கள் வெடித்துவிட்டார்கள். `எங்கள் சூப்பர் ஸ்டார் உங்களுக்கு அவ்வளவு சாதாரணமானவராகத் தெரிகிறாரா?' என்கிற மாதிரி கேள்விக்கணைகளை வீசினார்கள்.

    ஆனால், "அவர் ஒரு நடிகை. என்னுடன் நடிப்பது இதுதான் முதல் தடவை. ஒரு நடிகை என்ற கண்ணோட்டத்தில், இது சினிமா என்ற கண்ணோட்டத்தில் அவர் சொன்ன பதில் எப்படி தவறாக இருக்க முடியும்?'' என்று கூறி, ரஜினிதான் ரசிகர்களை சமாளித்திருக்கிறார்.

    இதுபற்றி ரோஜா கூறும்போது, "அப்போது நான் எவ்வளவு வெகுளியாக இருந்திருக்கிறேன், பாருங்கள்!'' என்று சிரித்தார். 
    "செம்பருத்தி'' படத்தில், கதாநாயகியாக ரோஜா அறிமுகமானார். அதற்குக்காரணமாக இருந்தது ஒரு புகைப்படம்.
    "செம்பருத்தி'' படத்தில், கதாநாயகியாக ரோஜா அறிமுகமானார். அதற்குக்காரணமாக இருந்தது ஒரு புகைப்படம்.

    விஜயகாந்த் நடிப்பில் "கேப்டன் பிரபாகரன்'' வெற்றி பெற்றிருந்த நேரம். படத்தை இயக்கிய ஆர்.கே.செல்வமணி, புகழின் உச்சியில் இருந்தார்.

    அதிரடிப்படமாக "கேப்டன் பிரபாகரன்'' வந்திருந்ததால், அடுத்து ஒரு காதல் கதையை இயக்க விரும்பினார், செல்வமணி. அப்படி அவர் முடிவு செய்த படம்தான் "செம்பருத்தி.''

    படத்தின் நாயகனாக பிரசாந்த். அவரது பாட்டியாக `அஷ்டாவதானி' நடிகை பானுமதி என தேர்வு செய்தவருக்கு, `நாயகி' கிடைப்பதில்தான் சிக்கல் இருந்தது. கதைக்கு புதுமுக நடிகையை போட்டால் சரியாக இருக்கும் என்று கருதினார் அவர். அதற்கேற்ப நாயகி தேடுதல் வேட்டையிலும் ஈடுபட்டார்.

    இதில் ரோஜா எப்படி சிக்கினார்? ரோஜாவே கூறுகிறார்:

    "அப்போது என் புகைப்படம் ஒரு சினிமா பத்திரிகையின் அட்டையில் வந்தது. தெலுங்குப் படத்துக்காக அப்பாவின் நண்பர் எடுத்த படங்களில் ஒன்றுதான் இப்படி பத்திரிகையில் வந்துவிட்டது. இதை யாரோ டைரக்டர் செல்வமணியின் கண்களில் காட்டியிருக்கிறார்கள். உடனே அவரும் இப்படியொரு புதுமுகத்தைத்தான் தேடிக்கொண்டிருந்தேன்'' என்று கூறியிருக்கிறார்.

    உண்மையில், போட்டோவில் பார்த்ததுமே எனது பெரிய கண்களும், புன்னகை முகமும் அவருக்குப் பிடித்து விட்டன. அதனால் என்னை கதாநாயகியாக தேர்வு செய்தார்.''

    இவ்வாறு ரோஜா கூறினார்.

    புது நாயகியை செல்வமணி முடிவு செய்ததும் திருப்பதியில் அவர் வீட்டுக்கு சினிமா ஆட்கள் போய்த் தேடியிருக்கிறார்கள். ரோஜாவோ (அப்போது ஸ்ரீலதா) தனது பெற்றோருடன் அதே நேரத்தில் சென்னையில் நடந்த உறவினர் திருமணத்திற்கு வந்திருக்கிறார். சென்னை தி.நகரில் உள்ள "ரோகிணி இன்டர் நேஷனல்'' ஓட்டலில்தான் ரூம் எடுத்து தங்கியிருக்கிறார்கள். படப்பிடிப்பு ஆட்கள் இதைத் தெரிந்து கொண்டார்கள்.

    வேகவேகமாக ரோகிணி இன்டர்நேஷனல் ஓட்டலுக்குப் போனவர்கள், ரோஜாவின் குடும்பம் பத்து நிமிடம் முன்புதான் அறையை காலி செய்துவிட்டு காரில் திருப்பதிக்கு புறப்பட்டார்கள் என்பதை அறிந்து ஏமாற்றம் அடைந்தனர்.

    ரோஜாவை தேடி வந்திருந்த செல்வமணியின் நண்பர் ராமநாதன், உடனே செயலில் இறங்கினார். சினிமாவில் `கார் சேஸிங்' காட்சிகள் வருகிற மாதிரி காரை வேகமாக ஓட்டச்செய்து, சென்னை பாரிமுனை சந்திப்பில், ரோஜாவின் காரை மடக்கிவிட்டார். அதன் பிறகு நடந்ததை ரோஜாவே கூறுகிறார்:

    "எங்கள் காரை மடக்கிய அதே வேகத்தில் "செம்பருத்தி'' படக்கம்பெனிக்கு அழைத்துப் போனார்கள். அப்போது கேப்டன் பிரபாகரன் படம் `ஓஹோ' என ஓடிக்கொண்டிருந்தது. இவ்வளவு பெரிய டைரக்டர் படத்தில் நடிக்க நமக்கு அழைப்பா என்று எனக்கு திகைப்பாகக்கூட இருந்தது. அப்போது கூட நடிக்க வேண்டும் என்பது என் விருப்பமாக இல்லாதிருந்ததால், நடிக்க வந்த அழைப்பு என்னை பெரிய அளவில் ஆச்சரியப்படுத்தவில்லை.''

    இவ்வாறு ரோஜா கூறினார்.

    இதன் பிறகு ரோஜாவின் அப்பாவிடம், திரைக்கதையை செல்வமணி சொல்லி, ரோஜாவை நடிக்க வைக்க அனுமதி கேட்டிருக்கிறார். இப்போதும் ரோஜாவின் அப்பா மட்டுமே "ஓ.கே'' சொல்லியிருக்கிறார். ரோஜா தரப்பில் அப்போது மவுனமே பதிலாக இருந்திருக்கிறது.

    மறுநாள் அழைத்து வரச்சொல்லி ரோஜாவின் அப்பாவிடம் டைரக்டர் செல்வமணி சொல்ல, மறுநாளே மேக்கப் டெஸ்ட் நடந்திருக்கிறது. அதன் பிறகு ஊருக்கும் வந்துவிட்டார்கள்.

    அப்போது நமக்கெல்லாம் எங்கே சான்ஸ் கிடைக்கப்போகிறது என்றே எண்ணியிருக்கிறார் ரோஜா. அதுபற்றி அவர் சொல்லும்போது:

    "நானெல்லாம் கறுப்பு. அப்போது படங்களில் நடிக்க வந்த நடிகைகள் எவ்வளவு கலராக இருந்தார்கள். அப்பேர்ப்பட்டவர்கள் நடித்த சினிமாவில் என்னை எங்கே அழைக்கப் போகிறார்கள்? அதுவும், செல்வமணி போன்ற பெரிய டைரக்டர்கள் நிச்சயம் என்னை அழைக்கமாட்டார்கள் என்றே நம்பிக் கொண்டிருந்தேன்.

    ஆனால் நான் எதிர்பார்த்தே இராத அந்த தகவல் 10-வது நாளில் வந்துவிட்டது. நடிக்க வருமாறு, தகவல் அனுப்பினார்கள். வீட்டில் மகா சந்தோஷம். இப்போது அப்பா வழியில் அம்மாவும் நான் நடிக்கலாம் என்ற முடிவுக்கு வந்துவிட்டார். அப்போது கூட நடிப்பில் சாதனை செய்த `அஷ்டாவதானி' பானுமதியம்மாவுடன் நடிக்கப் போகிறோம் என்றதும் எனக்கு பயமாகிவிட்டது'' என்றார், ரோஜா.

    தமிழில் நடிக்க வந்து விட்டாரே தவிர, தமிழில் ஒரு வார்த்தை கூட ரோஜாவுக்குத் தெரியாது. டைரக்டர் சொல்லிக் கொடுத்ததை செய்தார். மற்ற நேரங்களில் அண்ணனுடன்தான் தெலுங்கில் `மாட்லாடிக்' கொண்டிருப்பார். படம் ஒரு வருடம் தயாரிப்பில் இருந்ததால் அவ்வப்போது கிடைத்த இடைவெளியில் ரோஜா தெலுங்கில் 3 படங்கள் நடித்து முடித்து விட்டார். முதல் படம் "பிரேம தப்பர்சு'' தோல்விப்படம் என்றாலும், அடுத்தடுத்து வந்த 2 படங்கள் வெற்றி பெற்று ரோஜாவுக்கு தெலுங்குப்பட உலகில் நிலையான மார்க்கெட்டை ஏற்படுத்திக் கொடுத்துவிட்டது.

    அதிலும் கூட இரண்டாவது தெலுங்குப்படத்தை விடவும், மூன்றாவது தெலுங்குப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்று ரோஜாவை தெலுங்கில் முன்னணி ஹீரோயின்களில் ஒருவராக நிலை நிறுத்தியது.

    தயாரிப்பில் ஒரு வருடம் நீடித்த "செம்பருத்தி'' ரிலீஸ் ஆகி அதுவும் வெற்றிப்படமானதில் ரோஜா தமிழிலும் முன்னணி நடிகையானார்.

    திரையில் தனது (கறுப்பு) நிறத்துக்கு சம்பந்தமே இல்லாமல் ரோஜாவின் அழகுத்தோற்றம் வெளிப்பட்டதில் ரோஜாவுக்கு நம்ப முடியாத ஆச்சரியம்.

    "நல்ல கலராக இருப்பவர்கள்தான் சினிமாவில் ஹீரோயினாக முடியும் என்று நம்பிக்கொண்டிருந்தேன். அதனால்தான் நடிக்க அழைக்கப்பட்ட புதிதில் என் மீதே எனக்கு நம்பிக்கையில்லை. நானும் படத்தில் நடித்து அது திரையிலும் வந்த பிறகுதான், முன்னர் நடித்த பல பிரபல நடிகைகள் கூட மேக்கப் உபயத்தில்தான் கலர் கலராக காட்சியளித்திருக்கிறார்கள் என்பதை புரிந்து கொண்டேன். அதன் பிறகு `நிறம்' ஒரு பொருட்டாகவே தோன்றவில்லை'' என்கிறார், ரோஜா.

    தெலுங்கில்படங்கள் தொடர்ந்து கொண்டிருக்க, தமிழிலோ "செம்பருத்தி'' படத்துக்குப் பிறகு உடனடி வாய்ப்பு வரவில்லை, ரோஜாவுக்கு. கொஞ்சம் இடைவெளி விட்டு அதன் பிறகு வந்த படமே `சூரியன்.' இதில் சரத்குமார் ஜோடியாகி இருந்தார் ரோஜா.

    இந்தப்படமும் வெற்றி பெற, தமிழில் ராசியான நடிகை என்ற பெயரும் ரோஜாவுக்கு கிடைத்தது.

    "செம்பருத்தி'' படத்திலேயே ரோஜாவின் குழந்தைக் குணமும், யதார்த்தமான போக்கும் டைரக்டர் செல்வமணியை கவர்ந்து இருக்கிறது. ரோஜா மாதிரியான வெள்ளை மனம் கொண்ட பெண்கள் சினிமாவில் தாக்குப்பிடிக்க முடியாது என்று எண்ணிய அவர், அடுத்து எடுத்த அஸ்திரம்தான் "ரோஜாவுடன் திருமணம்.'' (ரோஜா - செல்வமணி காதல்)
    ×