என் மலர்tooltip icon

    சினி வரலாறு

    புகழின் உச்சியில் இருந்தபோது, டைரக்டர் டி.ஆர்.ராமண்ணாவை ஈ.வி.சரோஜா மணந்து கொண்டார்.
    புகழின் உச்சியில் இருந்தபோது, டைரக்டர் டி.ஆர்.ராமண்ணாவை ஈ.வி.சரோஜா மணந்து கொண்டார்.

    அதன்பின் "கொடுத்து வைத்தவள்'' என்ற படத்தை ராமண்ணாவும், ஈ.வி.சரோஜாவும் தயாரித்தனர். இந்தப்படத்தில், எம்.ஜி.ஆரும், ஈ.வி.சரோஜாவும் இணைந்து நடித்தனர். இது வெற்றிப்படம்.

    அதன் பிறகு ஈ.வி.சரோஜா படங்களில் நடிக்கவில்லை குடும்பத் தலைவியானார்.

    ஈ.வி.சரோஜா - ராமண்ணா தம்பதிகளுக்கு ஒரே மகள். பெயர் நளினி. இவருக்கு 1981-ம் ஆண்டு திருமணம் நடந்தது. கணவர் பெயர் சிவப்பிரகாஷ். துபாயில் கப்பல் போக்குவரத்துக் கழகத்தில் துணைத் தலைவராக இருக்கிறார்.

    நளினிக்கு ஒரு மகள், ஒரு மகன். மகள் பெயர் வஷின்யா. மகன் பெயர் ராகுல். இருவரும் கனடாவில் படித்து வருகிறார்கள்.

    துபாயில் கணவருடன் வசித்து வரும் நளினி, இரண்டு மாதங்களுக்கு ஒரு முறையோ அல்லது இரு முறையோ சென்னை வந்து இங்குள்ள தனது தாயாருடைய சொத்துக்களை கவனித்துச் செல்கிறார். இவற்றை ஈ.வி.சரோஜாவின் தம்பி ஈ.வி.ராஜன் பொறுப்பேற்று கவனித்து

    வருகிறார்.கடந்த வாரம் சென்னை வந்த நளினி தன் தாயார் ஈ.வி.சரோஜாவின் நினைவுகளை "தினத்தந்தி'' நிருபரிடம் பகிர்ந்து

    கொண்டார்.அப்போது அவர் கூறியதாவது:- "எனது தாயார் சினிமாவில் நடிப்பதைவிட,நடனம் ஆடுவதையே அதிகம் விரும்புவார். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, சிங்களம் ஆகிய மொழிப்படங்களில் நடித்தார். மொத்தம் 50 அல்லது 60 படங்கள் இருக்கும். பெரும்பாலான படங்களில் நடனம் மட்டுமே ஆடியுள்ளார்.

    கதாநாயகியாக நடித்த படங்கள் வெகு சிலவே. சந்திரபாபுவுடன் காமெடி நடிகையாகவும் நடித்துள்ளார்.

    எனது தாயார் சினிமாவில் நடிப்பதில் என் தந்தைக்கு விருப்பம் இல்லை. அதனால் எனது தாயார் 26 வயதிலேயே சினிமாவுக்கு முழுக்கு போட்டுவிட்டு, குடும்பத் தலைவி ஆகிவிட்டார்.

    அவர் காலத்தில் கதாநாயகியாக நடித்த நடிகைகள் எல்லாம் பிற்காலத்தில் குணச்சித்திர நடிகைகளோ அல்லது அம்மா வேடம் போட்டோ நடிக்க வந்துவிட்டார்கள். ஆனால் என் தாயார் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருக்கும்போதே சினிமாவில் இருந்து ஒதுங்கியவர், மீண்டும் நடிக்கவே இல்லை.

    அவருக்கு நடனத்தின் மீதே அதிக நாட்டம் இருந்ததால், "மனோன்மணியம்'' கதையை நாட்டிய நாடகமாக தயாரித்து அந்த நடன நிகழ்ச்சியை இந்தியாவில் உள்ள ஏறக்குறைய எல்லா நகரங்களிலும் நடத்தி இருக்கிறார்.

    என் அம்மாவுக்கு குடும்பம்தான் முக்கியம். மிகவும் இளகிய மனம் படைத்தவர். யார் வந்து உதவி கேட்டாலும் இல்லை என்று சொல்லாமல் உதவும் குணம் படைத்தவர். படிப்பதற்கு யாராவது உதவி கேட்டால், தன்னிடம் இல்லாவிட்டாலும் கடன் வாங்கியாவது படிக்க உதவுவார்.

    எங்கள் கிராமத்தில் இருந்தவர்கள் சென்னையிலும் மற்றும் அமெரிக்கா போன்ற வெளிநாடுகளிலும் நல்ல பதவிகளில் இருக்கிறார்கள் என்றால், அவர்களில் பலருக்கு என் அம்மா செய்த உதவிதான் காரணம்.

    இவ்வளவு இளகிய மனம் படைத்தவர், என் விஷயத்தில் மிகவும் கண்டிப்பானவர். ஒரு டீச்சரைப்போல் என்னை மிகவும் கண்டிப்புடன் வளர்த்தார்கள். அப்போது எனக்கு அது கஷ்டமாக இருந்தது. ஆனால் இப்போது அதையெல்லாம் நினைக்கும்போது என் மீது அம்மா தன் உள்ளத்தில் வைத்திருந்த அன்பை உணர முடிகிறது.

    எனக்கு சிறு வயதிலேயே நடனம் கற்றுக் கொடுத்தார்கள். பள்ளியிலும், கல்லூரியிலும் ஆடினேன். பல பேர் என்னை திரைப்படத்தில் நடிக்க வைக்க, எனது பெற்றோர்களிடம் கேட்டிருக்கிறார்கள். ஆனால், அதற்கு அவர்கள் சம்மதிக்கவில்லை. இந்த விஷயம் எனக்கு திருமணம் ஆன பிறகு, என் பெற்றோர்கள் என்னிடம் சொன்ன பிறகுதான் தெரிந்தது.

    என்னை கண்ணுக்குள் வைத்து வளர்த்து ஆளாக்கி ஒரு நல்லவரிடம் ஒப்படைத்த எனது பெற்றோர்கள் என் தெய்வங்கள்.

    எனது தாயார் ஊரான திருவாரூரை அடுத்த எண்கண் கிராமத்தில் ஈ.வி.சரோஜா கல்வி நிலையம் என்ற பெயரில் ஒரு பள்ளிக்கூடத்தை எனது தாயார் கட்டிக் கொடுத்துள்ளார்கள்.

    அந்தப் பள்ளிக்கூடத்தில் எட்டாம் வகுப்பு வரைதான் உள்ளது. அதை எனது சொந்த செலவில் உயர்நிலைப்பள்ளியாக ஆக்குவதே எனது தாயாருக்கு நான் செய்யும் நன்றியாகும்.

    என்னுடைய 25-ம் ஆண்டு திருமண வெள்ளி விழாவில் கலந்து கொண்ட எனது தாயார் அதற்கு பிறகு ஒரு வாரமே உயிருடன் இருந்தார்கள். 2006 நவம்பர் 3-ந்தேதி காலமாகிவிட்டார்கள். அதை நினைக்கும்போது என் இதயமே வெடித்து விடும் போல் உள்ளது.

    துபாயிலிருந்து இங்கு வந்து வீட்டிற்குள் நுழைந்து, வீட்டின் ஒவ்வொரு இடத்தையும் பார்க்கும்போது என் தாயாரின் நினைவுதான் எனக்கு வரும்.

    அந்த அளவிற்கு என் தாயாரின் இழப்பு என்னை பாதித்துள்ளது.''

    இவ்வாறு நளினி கூறினார்.

    ஈ.வி.சரோஜாவிற்கு, உலக நாடுகளுக்கு எல்லாம் சென்று பார்க்க வேண்டும் என்று ஆசை இருந்தது. அதனால் தன்னுடைய மகள், மருமகன், பேரக்குழந்தைகளுடன் உலகின் பெரும்பா லான நாடுகளுக்கு சென்று வந்துள்ளார்.

    ஈ.வி.சரோஜா, 1974-ம் ஆண்டு "கலைமாமணி'' விருது பெற்றார். இதில் ஆச்சரியம் என்னவென்றால், இவருடைய கணவர் ராமண்ணாவிற்கும், அப்போதுதான் "கலைமாமணி'' விருது கிடைத்தது. கணவன் - மனைவி இருவரும் ஒரே நேரத்தில் "கலைமாமணி'' விருதை, அப்போது முதல்-அமைச்சராக இருந்த கலைஞர் கருணாநிதி கையில் பெற்றார்கள்.

    முத்தமிழ்ப் பேரவை சார்பில் "நாட்டிய செல்வி'' என்ற பட்டம் ஈ.வி.சரோஜாவுக்கு வழங்கப்பட்டது.

    2002-ம் ஆண்டு தமிழக அரசின் சார்பில் "எம்.ஜி.ஆர். விருதை'' அன்றைய முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஈ.வி.சரோஜாவிற்கு வழங்கினார்.

    மு.க.அழகிரியின் பேத்தியின் நடன அரங்கேற்றம் சென்னையில் நடந்தது. அந்த நிகழ்ச்சிதான் ஈ.வி.சரோஜா கலந்து கொண்ட கடைசி நிகழ்ச்சி. அதில் கலைஞர் கருணாநிதி பேசும்போது, "நடனத்தில் மிகச்சிறந்த மேதையான ஈ.வி.சரோஜா போன்றவர்கள் வந்து என் கொள்ளுப்பேத்தியை வாழ்த்தியதை நான் பெருமையாக கருதுகிறேன்'' என்றார்.
    மான்போல துள்ளிக் குதித்து நடனம் ஆடுவதில் புகழ் பெற்றவர், ஈ.வி.சரோஜா.
    மான்போல துள்ளிக் குதித்து நடனம் ஆடுவதில் புகழ் பெற்றவர், ஈ.வி.சரோஜா.

    இவரது சொந்த ஊர் திருவாரூரை அடுத்த எண்கண். பெற்றோர்: வேணுபிள்ளை - ஜானகி.

    சரோஜாவுக்கு ஒரு அண்ணனும், 2 தம்பிகளும் உண்டு.

    தனது ஏழாவது வயதிலேயே தந்தையை இழந்தார், சரோஜா.

    சிறு வயதில் இருந்தே இவருக்கு நடனத்தில் மிகுந்த ஆர்வம் உண்டு. அதனால் அவருக்கு முறைப்படி நடனப்பயிற்சி அளிக்க தாயார் முடிவு

    செய்தார்.இந்தக் காலக்கட்டத்தில், நடனக் கலையில் பெரிய மேதையாகத் திகழ்ந்தவர், வழுவூர் ராமையாப்பிள்ளை. குமாரி கமலா உள்பட பலருக்கு இவர்தான் குரு. அவர் திருவாரூருக்கு வந்திருந்த சமயம், அவரிடம் ஈ.வி.சரோஜாவை தாயார் அழைத்துச் சென்றார். "இவருக்கு நடனம் என்றால் உயிர். நீங்கள்தான் குருவாக இருந்து, நடனம் கற்றுத்தர வேண்டும்'' என்று கேட்டுக்கொண்டார்.

    ஈ.வி.சரோஜாவின் தோற்றமும், துறுதுறுப்பும், அழகிய கண்களும் ராமையாப்பிள்ளையை கவர்ந்தன. `இந்தப்பெண் நடனத்தை முறையாகக் கற்றுக் கொண்டால், எதிர்காலத்தில் சிறந்த நடன நட்சத்திரமாகப் பிரகாசிப்பாள்'' என்று கருதினார். எனவே நடனப் பயிற்சிக்கு, சென்னைக்கு அழைத்துச் சென்றார்.

    வழுவூர் ராமையாப் பிள்ளையிடம், பரதநாட்டியத்தை கற்றுக்கொண்ட ஈ.வி.சரோஜா, வெகு விரைவிலேயே நடனத்தில் முழுத் தேர்ச்சி

    பெற்றார்.1951-ல் சென்னை ரசிக ரஞ்சனி சபாவில், நீதிபதி ஏ.எஸ்.பி.அய்யர் முன்னிலையில் ஈ.வி.சரோஜாவின் நடன அரங்கேற்றம் நடந்தது. அப்போது அவருக்கு வயது 15.

    சிறந்த முறையில் நடனம் ஆடி, அனைத்துத் தரப்பினரின் பாராட்டையும் ஈ.வி.சரோஜா பெற்றார்.

    இந்த சமயத்தில், அசோகா பிக்சர்சார் "என் தங்கை'' என்ற படத்தை தயாரித்து வந்தார்கள். எம்.ஜி.ஆர்.தான் கதாநாயகன். அவருக்கு ஜோடி கிடையாது! படம் முழுவதும் சட்டை - வேட்டியுடன் வருவார்.

    இந்தப் படத்தில் எம்.ஜி.ஆருக்கு தங்கை மீனாவாக நடிக்க, ஒரு பெண்ணை பட அதிபர்கள் தேடிக்கொண்டு இருந்தார்கள். நடன நிகழ்ச்சியில் ஈ.வி.சரோஜாவை அவர்கள் பார்த்தார்கள். "மீனாவாக நடிக்க இந்தப் பெண்தான் பொருத்தமானவர்'' என்று தீர்மானித்து, அவரை ஒப்பந்தம் செய்தார்கள்.

    "என் தங்கை''யில் ஈ.வி.சரோஜாவின் வேடம் மிக மிக முக்கியமானது. அவரைச் சுற்றிதான் கதை பின்னப்பட்டிருந்தது.

    இந்தப் படத்தில், ஈ.வி.சரோஜா பார்வையற்ற பெண்ணாக நடித்தார். ஏழையான எம்.ஜி.ஆர். தன் தங்கை மீது உயிரையே வைத்திருப்பார். நல்ல இடத்தில் திருமணம் செய்து வைக்க படாதபாடு படுவார். "குருட்டுப் பெண்ணுக்கு கல்யாணமா?'' என்று எல்லோரும் கேலியாகப் பேசி மறுத்து விடுவார்கள்.

    கடைசியில் ஒரு மாப்பிள்ளை அமையும்போது, சரோஜா இறந்து விடுவார். சோகத்தின் உச்சிக்கே சென்றுவிடும் எம்.ஜி.ஆர்., தங்கையின் உடலை தோளில் போட்டுக்கொண்டு கடற்கரையில் நடந்து செல்வார்; பிறகு விறுவிறுவென்று கடலுக்குள் இறங்கி விடுவார்.

    உள்ளத்தைத் தொடும் உருக்கமான காட்சிகள் நிறைந்த இந்தப்படம் வெற்றி பெற்றது.

    ஒரே படத்தின் மூலம் புகழ் பெற்றார், ஈ.வி.சரோஜா.

    ஏ.பி.நாகராஜனின் "பெண்ணரசி''யிலும் நடித்தார்.

    பின்னர், டி.ஆர்.ராமண்ணா டைரக்ஷனில் எம்.ஜி.ஆர், டி.ஆர்.ராஜகுமாரி, ஜி.வரலட்சுமி ஆகியோர் நடித்த "குலேபகாவலி'' படத்தில், முக்கிய வேடத்தில் நடித்தார்.

    "சொக்கா போட்ட நவாப்பு... செல்லாதுங்கள் ஜவாப்பு'' என்று சந்திரபாபுவுடன் சேர்ந்து பாடி ஆடிய நடனம், அவரை நாடறிந்த நட்சத்திரம் ஆக்கியது.

    இதன்பின், "நீதிபதி'', "நல்லதங்காள்'' முதலிய படங்களில் சந்திரபாபுவுடன் இணைந்து நடித்தார்.

    எம்.ஜி.ஆர்., பானுமதி, பத்மினி நடித்த "மதுரை வீரன்'' படத்தில் ஈ.வி.சரோஜாவும் இடம் பெற்றார்.

    "வாங்க மச்சான் வாங்க, வந்த வழியைப் பார்த்துப் போங்க'' என்ற பாடலுக்கு ஈ.வி.சரோஜா ஆடிய நடனம், ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது.

    "மதுரை வீரன்'', 35 தியேட்டர்களில் நூறு நாட்கள் ஓடி சாதனை படைத்தது. சில ஊர்களில் 25 வாரங்கள் ஓடியது.

    "யாரும் மனம் வருந்துவதை காணச் சகிக்காத மனித நேயப் பண்பாளர் ரஜினிகாந்த்'' என்று விஜயகுமாரி கூறினார்.
    "யாரும் மனம் வருந்துவதை காணச் சகிக்காத மனித நேயப் பண்பாளர் ரஜினிகாந்த்'' என்று விஜயகுமாரி கூறினார்.

    சென்ற தலைமுறை நடிகர்களுடன் இணைந்து நடித்த விஜயகுமாரி, இன்றைய இளைய தலைமுறையினருக்கு அம்மாவாக நடிக்கிறார்.

    இதுபற்றி அவர் கூறியதாவது:-

    "நான் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருந்த நேரம். அப்போது பூம்புகார் புரொடக்ஷன் தயாரித்த "பிள்ளையோ பிள்ளை'' என்ற படத்தில் மு.க.முத்துவிற்கு அம்மாவாக நடிக்கும்படி என்னைக் கேட்டார்கள். நான் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருந்தபோது, அம்மா வேடத்தில் எப்படி நடிப்பது என்று யோசித்தேன்.

    கலைஞர் அவர்கள், கண்ணகி வேடத்தை எனக்கு கொடுத்து என்னை உயர்த்தியவர். அவருக்கு நான் இந்தப் படத்தில் நடிக்காவிட்டால் நன்றி இல்லாதவள் ஆகிவிடுவேன் என்று கருதி, கலைஞருக்காக அந்தப் படத்தில் அம்மா வேடத்தில் நடிக்க ஒத்துக்கொண்டேன்.

    மு.க.முத்துவுக்கு ஜோடியாக இந்தப் படத்தில் லட்சுமி நடித்தார்.

    படம் முடிந்து பிரத்தியேக காட்சி போட்டார்கள். எல்லோரும் வந்து வாழ்த்தினார்கள். எம்.ஜி.ஆர். அவர்கள் பேசும்போது, "எந்த பாத்திரம் கொடுத்தாலும் அந்த பாத்திரமாகவே மாறி அந்த பாத்திரத்திற்கு உயிர் கொடுத்து, சுத்தமாக தமிழ் பேசி உணர்ச்சி பூர்வமாக நடிக்கும் ஒரே தமிழ் நடிகை என் தங்கை விஜயகுமாரிதான்'' என்று வாழ்த்தினார்.

    இதை, என் நடிப்பிற்கு கிடைத்த அங்கீகாரமாக நான் கருதினேன்.

    "மெட்டி'' என்ற படம் மகேந்திரன் டைரக்ஷனில் உருவாகியது. இதில் ராஜேஷ், சரத்பாபு, ராதிகா, வடிவுக்கரசி ஆகியோருடன் நான் நடித்தேன்.

    இந்தப் படத்தில் எனக்கு முதல் ஷாட் எடுக்கும்போது டைரக்டர் மகேந்திரனே வந்து "கிளாப்'' அடித்தார். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. `உதவி டைரக்டர்கள் தானே கிளாப் அடிப்பார்கள். இவர் ஏன் கிளாப் அடிக்கிறார்'' என்று ஒரு நிமிடம் யோசித்தேன். அப்போது மகேந்திரன், "அம்மா! உங்களுக்கு "காஞ்சித்தலைவன்'' படத்தில் நான்தான் கிளாப் அடித்தேன். அப்போது நான் அந்தப் படத்தின் டைரக்டர் காசிலிங்கத்திடம் உதவி டைரக்டராக இருந்தேன். இப்போது நான் டைரக்டு செய்யும் படத்தில் நீங்கள் நடிப்பதால், நானே கிளாப் அடிக்க வேண்டும் என்று ஒரு ஆசை எனக்கு!'' என்றார்.

    இந்தப் படத்தில் எல்லோரும் மேக்கப் இல்லாமலேயே நடித்திருந்தோம். பாடல்கள் அத்தனையும் மனதில் நிற்கும் அளவிற்கு இருந்தன. ஆனால், படம் சுமாராகத்தான் ஓடியது.

    சத்யா மூவிஸ் தயாரித்த படம் "தங்க மகன்.'' இந்தப்படம் ஏ.ஜெகந்நாதன் டைரக்ஷனில் உருவாகியது. ரஜினிகாந்த், பூர்ணிமா ஜெயராம், தேங்காய் சீனிவாசன், ஜெய்சங்கர், வி.கே.ராமசாமி, ஆர்.எஸ்.மனோகருடன் நான் நடித்தேன்.

    இதில் நான் ரஜினிகாந்திற்கு அம்மாவாக நடித்தேன். இந்தப் படத்தின் படப்பிடிப்பின்போது, ரஜினிகாந்த் தனியாக அமர்ந்து எதையோ சிந்தித்துக் கொண்டிருப்பார். சில சமயம் எல்லோரிடமும் கலகலப்பாக பேசுவார்.

    ஒருநாள் என்னிடம் பேசிக்கொண்டிருந்தார். "நீங்கள் நடித்த படங்களை பார்த்து இருக்கிறேன். அந்தப் படங்களில் யார் கதாநாயகனாக நடித்தாலும், கதை உங்களை மையமாக வைத்துத்தான் இருக்கும்'' என்று சொன்னார். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. எவ்வளவு கவனம் செலுத்தி பார்த்திருக்கிறார் என்று வியந்தேன்.

    மற்றொரு நாள் என்னிடம், "நீங்கள் தியானம் செய்யுங்கள்'' என்று சொன்னார். நான் சிரித்தேன்.

    "ஏன் சிரிக்கிறீர்கள்?'' என்றார். "எனக்கு தலைக்கு மேல் எத்தனையோ பிரச்சினைகள் இருக்கிறதே!'' என்றேன்.

    அதைக்கேட்டு அவர் சிரித்தார். நான் அவரைப்பார்த்து, "நீங்கள் ஏன் சிரிக்கிறீர்கள்?'' என்றேன். அதற்கு அவர், "தலை இருக்கும் வரை பிரச்சினைகள் இருந்து கொண்டுதான் இருக்கும். அதையெல்லாம் மறந்து தியானம் செய்யுங்கள்'' என்றார்.

    இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஒரு வாரம் செங்கல் சூளை ஒன்றில் நடந்தது. அப்போது ஒருநாள் நான், ரஜினி மற்றும் உடன் நடித்தவர்களிடம், "நாளைக்கு நான் வீட்டிலிருந்து சாப்பாடு கொண்டு வரச்சொல்கிறேன். எல்லோரும் சேர்ந்து சாப்பிடலாம்'' என்றேன்.

    "சரி'' என்று எல்லோரும் சொன்னார்கள்.

    அடுத்த நாள் ரஜினிகாந்திற்கு 11 மணிக்கே படப்பிடிப்பு முடிந்துவிட்டது. "எனக்கு படப்பிடிப்பு முடிந்து விட்டது. நேற்று நீங்கள் கூறியபோது, நான் இன்று உங்களுடன் சாப்பிடுவதாகச் சொன்னேன். சாரி! இன்னொரு நாள் சாப்பிடுகிறேன்'' என்று சொல்லிவிட்டு சென்று விட்டார்.

    அன்று மத்தியானம் என் வீட்டிலிருந்து சாப்பாடு 2 மணிக்குத்தான் வந்தது. நாங்கள் எல்லோரும் சாப்பிட சென்றோம். அங்கு ரஜினிகாந்த் தரையில் படுத்து நன்றாக தூங்கிக் கொண்டிருந்தார். நாங்கள் சென்ற சத்தத்தை கேட்டு அவர் எழுந்து விட்டார். "சாரி! சாரி! நான் நன்றாக தூங்கிவிட்டேன் என்று சொல்லிவிட்டு, "சாப்பிடலாமா?'' என்று கேட்டார்.

    சற்று நேரத்துக்கு முன்தான், `இன்று சாப்பிட இயலவில்லை. இன்னொரு நாள் சாப்பிடுகிறேன்' என்று கூறிவிட்டுச் சென்றவர், இங்கேயே இருந்திருக்கிறார்; சாப்பிடலாமா என்றும் கேட்கிறாரே' என்று எண்ணியபடி வியப்புடன் அவரை நோக்கினேன்.

    "என்ன பார்க்கிறீர்கள்! நான் சாப்பிடாமல் சென்றால் உங்கள் மனசு கஷ்டப்படும். அதனால்தான் இங்கேயே இருந்து விட்டேன்'' என்றார்.

    நான் அவருக்கு நன்றி தெரிவித்து விட்டு எல்லோருக்கும் நானே பரிமாறினேன். அப்போது நான் நினைத்தேன். `ஒரு சின்ன விஷயத்துக்குக் கூட மற்றவர்கள் மனம் கஷ்டப்படக்கூடாது என்று நினைக்கிறாரே. இவருடைய உள்ளம் எவ்வளவு உயர்ந்தது!' என்று எண்ணினேன்.

    ஏவி.எம். தயாரித்த "சூரக்கோட்டை சிங்கக்குட்டி'' என்ற படத்தில் பிரபுவுக்கு அம்மாவாக நடித்தேன். நடிகர் திலகத்துடன் இணைந்து நடித்த நான், அவருடைய வாரிசுக்கு அம்மாவாக நடிப்பதில் அளவு கடந்த ஆனந்தம்.

    அதேபோல், முத்துராமனுடன் ஜோடியாக நடித்த நான், அவருடைய வாரிசு கார்த்திக்கின் அம்மாவாக "வணக்கம் வாத்தியாரே'' படத்தில் நடித்ததும் மிகுந்த மகிழ்ச்சியைத் தந்தது. எஸ்.ஏ.சந்திரசேகர் அவர்களின் "வசந்தகாலம்'', "பூவே உனக்காக'', ராஜ்கிரணின் "அரண்மனைக்கிளி'', "இரணியன்'' - இதெல்லாம் நான் அம்மா வேடத்தில் நடித்த படங்கள்.

    நான் நடித்த "காதல் சடுகுடு'' என்ற படம்தான் நான் கடைசியாக நடிக்கும் படம் என்று கருதி, படப்பிடிப்பு முடிந்தவுடன் என்னுடன் நடித்தவர்களுக்கெல்லாம் என் நினைவாக பரிசுப் பொருட்களைக் கொடுத்தேன்.

    மல்லியம் ராஜகோபால் தயாரித்த முதல் படத்தில் நான்தான் கதாநாயகி. ஸ்ரீதர் டைரக்ட் செய்த முதல் படத்தில் இரண்டு கதாநாயகிகளில் ஒருத்தி நான். கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் முதன் முதலில் டைரக்ட் செய்த படத்திலும் நான்தான் கதாநாயகி.

    பி.மாதவன் முதலில் டைரக்ட் செய்த படத்திலும் நான்தான் கதாநாயகி. ஏ.சி.திருலோகசந்தரின் முதல் படத்திலும் நான்தான் கதாநாயகி. ஆரூர்தாஸ் டைரக்ட் செய்த முதல் படத்திலும் நான்தான் கதாநாயகி.

    அந்தக்காலத்தில் திரை உலகில் புகழ் பெற்றவர்களின் முதல் படங்களில் எல்லாம் நான் கதாநாயகியாக நடித்ததை இன்னும் நினைத்து நினைத்து சந்தோஷப்பட்டுக் கொண்டிருக்கிறேன்.

    இந்த பாக்கியம் எனக்கு மட்டும்தான் கிடைத்தது என்று எண்ணும்போது, பெருமையாக இருக்கிறது.

    இதேபோல திரை உலகில் என்னால் மறக்க முடியாத நிகழ்ச்சி, 1968-ம் ஆண்டு மலேசியத் தலைநகரான கோலாலம்பூரில் உள்ள ரசிகர்கள் சிறந்த நடிகையாக என்னை தேர்ந்தெடுத்ததுதான். சிறந்த நடிகராக எம்.ஜி.ஆரை தேர்ந்தெடுத்திருந்தார்கள். இதுவும் என் திரை உலக வாழ்க்கையில் மறக்க முடியாதது.

    சிறு வயதிலேயே என் தாயை இழந்து விட்டேன். அதன் பிறகு இன்று வரை எனக்கு உண்மையான அன்பு எங்கும் எனக்கு கிடைக்கவில்லை. நான் முதன் முதலாக காதலித்த சினிமா மட்டும்தான் எனக்கு ஆதரவாக-துணையாக என்னுடன் வாழ்ந்து வருகிறது.

    ஆம்; எனக்கு இப்போதெல்லாம் காலை 5 மணியிலிருந்து இரவு 10 மணி வரை டெலிவிஷனில் வரும் சினிமாக்கள்தான் துணையாக இருக்கின்றன.

    சில சமயங்களில் இனம் புரியாத ஏதோ ஒரு வேதனை என்னை வாட்டும். அந்த நேரம் நான் நேராக காரை எடுத்துக்கொண்டு மெரீனா கடற்கரைக்கு சென்று காரில் இருந்தபடியே அங்கு இருக்கும் கண்ணகி சிலையை பார்த்து சந்தோஷப்பட்டு கையெடுத்து கும்பிட்டு விட்டு நிறைந்த மனதோடு திரும்புவேன்.

    இன்றும் என்னை எங்கு பார்த்தாலும் ரசிகர்கள் நினைவு கொள்வது கண்ணகி வேடத்தில் நான் நடித்ததைத்தான். அந்த அளவிற்கு இன்னும் மறக்காமல் இருக்கிறார்கள். இந்த உலகம் இருக்கும் வரை, எத்தனை தலைமுறைகள் வந்தாலும் கண்ணகி பெயருடன் சேர்த்து, என்னையும் ரசிகர்கள் நினைவு கொள்வார்கள். இது எனக்கு கிடைத்த பெரும் பேறு.

    எனக்கு ரவிக்குமார் என்று ஒரு மகன். அவனுக்கு இரண்டு குழந்தைகள். பேத்தி அமெரிக்காவில் எம்.பி.ஏ. படிக்கிறாள். பேரன் சென்னையில் படிக்கிறான்.''

    இவ்வாறு கூறினார், விஜயகுமாரி.
    டைரக்டர் கே.பாலசந்தர் டைரக்ஷனில் உருவான "தாமரை நெஞ்சம்'' படத்தில், கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பு விஜயகுமாரியை தேடி வந்தது. ஆயினும், அந்த வாய்ப்பை நழுவ விட்டார். அவருக்கு பதிலாக சரோஜாதேவி நடித்து பெரும் புகழ் பெற்றார்.
    டைரக்டர் கே.பாலசந்தர் டைரக்ஷனில் உருவான "தாமரை நெஞ்சம்'' படத்தில், கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பு விஜயகுமாரியை தேடி வந்தது. ஆயினும், அந்த வாய்ப்பை நழுவ விட்டார். அவருக்கு பதிலாக சரோஜாதேவி நடித்து பெரும் புகழ் பெற்றார்.

    "பூம்புகார்'' படத்தின் மூலம் புகழின் சிகரத்தைத் தொட்ட விஜயகுமாரி, தன் திரை உலகப் பயணம் பற்றி தொடர்ந்து கூறியதாவது:-

    "கலைஞர் வசனத்தில் கண்ணகி வேடத்தில் நடித்த எனக்கு, மற்றொரு அதிர்ஷ்டமும் வந்தது. உதயசூரியன் பட நிறுவனம் தயாரித்த "எதையும் தாங்கும் இதயம்'' படத்தில் அறிஞர் அண்ணா அவர்கள் எழுதிய வசனத்தை பேசி நடித்தேன்.

    இந்தப் படத்தில் என் கணவருக்கு நான் ஜோடியாக நடித்தேன். கே.ஆர்.ராமசாமி, சந்திரகாந்தா, பி.எஸ்.சரோஜா ஆகியோர்

    நடித்தனர்.இந்தப் படத்தின் முதல் நாள் படப்பிடிப்பிற்கு அண்ணா, எம்.ஜி.ஆர் அவர்களும் வந்திருந்தார்கள். இதை எங்களுக்க கிடைத்த பாக்கியமாக கருதினோம். அதோடு இந்தப்படம் வெற்றிப்படமாக அமைந்ததில் எங்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி.

    கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் அவர்கள் "தெய்வத்தின் தெய்வம்'' படத்திற்குப் பிறகு ஒரு புதிய படம் தயாரித்தார். அந்தப் படத்தில் நடிப்பதற்காக என்னை கேட்டார்கள். என்னால் அந்த சமயத்தில் நடிக்க முடியவில்லை. இதனால் அவருக்கு வருத்தம் இருந்தது. உடனே அவர் கோபமாக "நான் இந்த விஜயாவிற்கு பதில் இன்னொரு விஜயாவை உருவாக்குகிறேன்'' என்று சொல்லி, எனக்குப் பதிலாக புதுமுகத்தைப் போட்டு எடுத்தார். அந்தப் புதுமுகம்தான் கே.ஆர்.விஜயா! அந்தப்படம் "கற்பகம்!''

    ஒரு நல்ல படத்தை இழந்து விட்டோமே என்கிற வருத்தம் இன்னும்கூட எனக்கு இருக்கிறது.

    எஸ்.எஸ்.ஆர். நாடக மன்றத்தின் சார்பில், கலைஞர் கதை வசனத்தில் நாங்கள் நடத்தி வந்த "மணி மகுடம்'' நாடகத்தை படமாக எடுத்தோம். இதில் என் கணவர், நான், ஜெயலலிதா, எம்.என்.நம்பியார் எல்லோரும் நடித்திருந்தோம். படம் முடிந்து, பிரத்தியேகக் காட்சி காமதேனு தியேட்டரில் போடப்பட்டது. படத்தைப் பார்க்க அறிஞர் அண்ணா, கலைஞர், நாவலர், பேராசிரியர், ம.பொ.சி. அவர்கள் மற்றும் தி.மு.கழகத்தைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் வந்திருந்தனர்.

    படம் முடிந்தவுடன் பாராட்டு விழா நடைபெற்றது. மேடையில் அமர்ந்திருந்தவர்கள் ஒவ்வொருவரும் அவர்களுடைய கருத்தைச் சொல்லி எங்களை வாழ்த்தினார்கள். அண்ணா அவர்கள் பேசும்போது, "இந்தப் படத்தில் விஜயகுமாரி புரட்சிகரமான வேடத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார். அவரை வாழ்த்துகிறேன்'' என்று என்னை பாராட்டிப்பேசியது, இன்னும் என் நினைவில் இருக்கிறது.

    இவ்வளவு பெரியவர்களுடைய வாழ்த்துக்களை எல்லாம் பெற்ற இந்தப்படம், ஏன் சரியாக ஓடவில்லை என்பதற்கான காரணத்தை இன்னும் என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை.

    எஸ்.எஸ்.ஆருடன் அதிகப்படங்களில் நடித்தவள் நான்தான்.

    வடநாட்டில் ராஜ்கபூர் - நர்க்கீஸ் ஜோடி புகழ் பெற்று விளங்கியதுபோல தமிழ்நாட்டில் எஸ்.எஸ்.ராஜேந்திரன் - விஜயகுமாரி ஜோடி புகழ் பெற்றது. யாரும் எதிர்பாராதவிதமாக ராஜ்கபூர் - நர்க்கீஸ் ஜோடி பிரிந்ததுபோல, நானும் எஸ்.எஸ்.ராஜேந்திரனும்

    பிரிந்தோம்.எஸ்.எஸ்.ஆரை பிரிந்த பிறகு, `எப்படியும் வாழலாம்' என்று நினைக்காமல், `இப்படித்தான் வாழவேண்டும்' என்று எனக்குள் ஒரு வட்டம் போட்டுக்கொண்டு அதற்குள் வாழ்ந்து வந்தேன். என்னால் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு எனக்கு சோதனை காலம் ஆரம்பமானது. என்ன செய்வது என்று எனக்கே தெரியவில்லை.

    இதையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்த என் மாமியார் "இதோ, பாரம்மா! நீ சும்மா குழம்பிக்கொண்டு படங்களில் நடிக்காமல் இருக்காதே. மீண்டும் படங்களில் நடிக்கிற வழியைப் பார்'' என்று கூறி, எனக்கு தைரியம் கொடுத்தார்கள்.

    என்னை நம்பி என் குழந்தை, அப்பா, பாட்டி, அக்கா, தங்கை என்று ஒரு கூட்டமே இருந்தது. குழம்பிப்போய் இருந்த எனக்கு ஒரு நல்ல முடிவு கிடைத்தது.

    சினிமா... நான் ஆசைப்பட்ட சினிமா! அந்த சினிமா ஒன்றுதான் என்கூடவே இருந்து எனக்கு உதவப்போகிறது என்பதை உணர்ந்து கொண்டு, நான் மீண்டும் நடிக்க ஆரம்பித்தேன். டைரக்டர் ராமண்ணாவின் படம் "பவானி.'' இதில் நான் நடிக்க சம்மதித்தேன். இந்தப்படத்தில் ஜெய்சங்கர், அசோகன், மேஜர் சுந்தரராஜன், நாகேஷ், எல்.விஜயலட்சுமி எல்லோரும் நடித்தோம்.

    அந்த சமயத்தில் நான் திடீரென்று தேனாம்பேட்டை வீட்டிலிருந்து வெளியேற வேண்டிய சூழ்நிலை உருவானது. அப்போது எனக்கு உடனடியாக குடியிருக்க வீடு தேவைப்பட்டது.

    அப்போது தி.நகரில் ஒரு வீடு விலைக்கு வருகிறது என்று கேள்விப்பட்டு விசாரித்ததில் அந்த வீடு வீனஸ் கிருஷ்ணமூர்த்திக்கு சொந்தமானது என்று தெரிந்து கொண்டேன். அவருடைய "கல்யாணப்பரிசு'' படத்தில் நான் நடித்திருந்ததால், எனக்கு அவரை நன்கு தெரியும். ஆதலால் அவரிடம் சென்று என் நிலையை விளக்கி எனக்கு அந்த வீட்டை விலைக்குத் தரும்படி கேட்டேன். அவரும் சம்மதித்தார்.

    பிறகு அவரிடம், "எனக்கு நீங்கள் ஒரு உதவி செய்யவேண்டும்'' என்றேன். அதற்கு வீனஸ் கிருஷ்ணமூர்த்தி, "என்ன?'' என்று கேட்டார்.

    "வீட்டின் விலையில் ஒரு பகுதியை இப்போது கொடுத்து விடுகிறேன். மீதியை படங்களில் நடித்து கொஞ்சம் கொஞ்சமாக கொடுத்து விடுகிறேன்'' என்றேன். அதற்கு அவரும் சம்மதித்தார்.

    தேவர் பிலிம்ஸ் சின்னப்பா தேவர் அண்ணன் அவர்களுக்கு, என் அப்பாவை நன்றாகத் தெரியும். கோயமுத்தூரிலேயே நன்கு பழக்கம். அதனால் நான் என் அப்பாவை தேவர் அண்ணனிடம் சென்று, வீடு வாங்குவதற்கான பணத்தை கடனாக கேட்கச் சொன்னேன். தேவர் அண்ணன் அவர்களும் மறுநாளே அவருடைய தம்பி திருமுகத்திடம் பணம் கொடுத்து அனுப்பி வைத்தார்.

    நான் திருமுகத்திடம் சொன்னேன்: "தேவர் அண்ணனிடம் சொல்லுங்கள். எனக்கு நடிக்க படம் கொடுத்து, இந்தப் பணத்தை கழித்துக் கொள்ளச் சொல்லுங்கள்'' என்றேன். அவரும் "சரி'' என்று சொல்லிவிட்டு சென்றார். பிறகுதான் தெரிந்தது. தேவர் அண்ணன் எம்.ஜி.ஆர். அவர்களிடம் கேட்காமல் எதையும் செய்யமாட்டார் என்று. எம்.ஜி.ஆர். அவர்கள் சொல்லித்தான் தேவர் அண்ணன் எனக்குப் பணம் கொடுத்திருக்கிறார் என்று தெரிந்து கொண்டேன்.

    அதன் பிறகு அந்தப்பணத்தை தேவர் அண்ணன் அவர்கள் தயாரித்த "விவசாயி'', "தேர்த்திருவிழா'' ஆகிய இரண்டுப் படங்களில் நடித்து நான் சொன்ன மாதிரியே கடனை அடைத்து விட்டேன்.

    அதன் பிறகு என் வீட்டில் என்ன விசேஷம் நடந்தாலும் தேவர் அண்ணனை கூப்பிட்டுத்தான் விளக்கேற்றி வைக்கச் சொல்வேன்.

    சடையப்ப செட்டியார் தயாரித்த "கணவன்'' படத்தில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஜோடியாக நடித்தார்கள். ப.நீலகண்டன் டைரக்ட் செய்த இந்தப் படத்தில் எம்.ஜி.ஆரின் தங்கையாக நடித்தேன்.

    மல்லியம் புரொடக்ஷஸ் படம் "ஜீவனாம்சம்.'' இதில் ஜெய்சங்கர் ஜோடியாக நடித்தேன். இந்தப்படத்தில்தான் நடிகை லட்சுமி
    அறிமுகமானார்.

    சுபலட்சுமி மூவிஸ் கம்பெனி படம் "டீச்சரம்மா.'' டைரக்டர் புட்டண்ணா. கதை - வசனம் பாலமுருகன். இந்தப் படத்தின் கதை வித்தியாசமானது. தோழிக்காக தன்னுடைய காதலை தியாகம் செய்யும் ஒரு வித்தியாசமான டீச்சர் வேடம் எனக்கு. படம் நன்றாக

    ஓடியது.பிற்காலத்தில் எம்.ஜி.ஆர். அவர்கள் முதல்-அமைச்சராக இருந்தபோது, இந்தப்படம் டெலிவிஷனில் ஒளிபரப்பப்பட்டது. டி.வி.யில் படத்தைப் பார்த்த எம்.ஜி.ஆர், எனக்கு போன் செய்து என்னை வாழ்த்தினார். "படம் ரொம்ப நல்லா இருக்கு. நீ நன்றாக நடித்திருக்கிறாய். உன்னுடைய நடிப்பு உயர்ந்த இடத்தை அடைந்துள்ளது'' என்று, எப்போதோ நடித்த படத்திற்கு டி.வி.யினால் எனக்கு எம்.ஜி.ஆரின் வாழ்த்து கிடைத்தது.

    "டீச்சரம்மா'' படப்பிடிப்பின்போது டைரக்டர் கே.பாலசந்தர் அவர்கள் அவருடைய படத்தில் நடிக்க என்னைக் கேட்டார்கள். நான் அவரிடம், `வேறு யாரெல்லாம் நடிக்க இருக்கிறார்கள்?' என்று கேட்டேன். அதற்கு அவர் `ஜெமினிகணேசன், வாணிஸ்ரீ' என்றார். உடனே நான், `டீச்சரம்மா படத்திலும் நானும் வாணிஸ்ரீயும்தான் நடிக்கிறோம். அது உங்களுக்கு சரியாக வருமா?' என்று கேட்டேன்.

    கே.பாலசந்தர் படத்தில் நடிக்க ஒவ்வொருவரும் துடித்துக்கொண்டிருக்கும்போது நான் அசட்டுத்தனமாக இப்படிக் கேட்டு, அந்தப் படத்தை தவறவிட்டு விட்டேன். அந்தப் படம் "தாமரை நெஞ்சம்.'' பாலசந்தர் எனக்குத் தருவதாகச் சொன்ன வேடத்தில் சரோஜாதேவி நடித்து பெரும் புகழ் பெற்றார். அந்தப்படம் அமோக வெற்றி பெற்றது.

    அப்போது, "அடி போடி பைத்தியக்காரி'' என்று என்னைப்பார்த்து நானே பாடவேண்டும் போல் இருந்தது!

    அதன் பிறகு "மகனே நீ வாழ்க'' படத்தில் ஜெய்சங்கருடனும், "எல்லைக்கோடு'' படத்தில் ரவிச்சந்திரனுடனும், "தெய்வ சங்கல்பம்'' படத்தில் ஏவி.எம்.ராஜனுடனும், "கல்லும் கனியாகும்'' பிரபல பின்னணி பாடகர் டி.எம்.சவுந்திரராஜனுடனும், "அமுதா''வில் ரவிச்சந்திரனுடனும், "மகளுக்காக'' படத்தில் ஏவி.எம்.ராஜனுடனும் இணைந்து நடித்தேன்.

    அடுத்து கே.சங்கர் டைரக்ஷனில் "சுப்ரபாதம்'' என்ற படத்தில் நடித்தேன். இந்தப் படத்தின் படப்பிடிப்பு 108 விஷ்ணுகோவில்களிலும், மற்றும் வடநாட்டில் உள்ள புண்ணிய ஸ்தலங்களில்எல்லாம் நடந்தது.

    ஜி.உமாபதி அவர்கள் எடுத்த படம் "ராஜராஜசோழன்.'' தமிழ்நாட்டின் முதல் சினிமா ஸ்கோப் படம் இது. ஏ.பி.நாகராஜன் டைரக்ட் செய்தார். நான், நடிகர் திலகம் சிவாஜிகணேசன் அவர்களுக்கு மனைவியாக நடித்தேன்.

    "பார் மகளே பார்'' படத்தில் அவருக்கு மகளாக நடித்தேன். "அன்பைத்தேடி'' படத்தில் அவருக்கு அக்காவாக நடித்தேன். "குங்குமம்'' படத்தில் அவருக்கு முறைப்பெண்ணாக நடித்தேன். "சவாலே சமாளி'' படத்தில் அவருக்கு தங்கையாக நடித்தேன்.

    ஆக குடும்பத்தில் எத்தனை உறவு முறைகள் இருக்குமோ அத்தனை பாத்திரங்களிலும் நடிகர் திலகத்துடன் நான் நடித்திருக்கிறேன். இது வேறு எந்த நடிகைக்கும் கிடைக்காத பாக்கியம். அதுமட்டுமல்ல. அத்தனை படங்களும் வெற்றிப்படங்கள்! இது எனக்கு கிடைத்த பெரிய பாக்கியம்.'' - இவ்வாறு விஜயகுமாரி கூறினார். 
    கலைஞர் மு.கருணாநிதியின் திரைக்கதை - வசனத்தில் உருவான "பூம்புகார்'' படத்தில், விஜயகுமாரி கண்ணகியாகவே வாழ்ந்து காட்டினார்.
    கலைஞர் மு.கருணாநிதியின் திரைக்கதை - வசனத்தில் உருவான "பூம்புகார்'' படத்தில், விஜயகுமாரி கண்ணகியாகவே வாழ்ந்து
    காட்டினார்.ஐம்பெரும் காவியங்களில் ஒன்றான சிலப்பதிகாரம் "கோவலன்'' என்ற பெயரில் நீண்ட நெடுங்காலமாக நாடகமாக நடிக்கப்பட்டு வந்தது.

    இந்தக் கதையை, 1942-ல் ஜுபிடர் பிக்சர்சார் "கண்ணகி'' என்ற பெயரில் படமாகத் தயாரித்தனர். கண்ணாம்பா கண்ணகியாகவும், பி.யு.சின்னப்பா கோவலனாகவும் அற்புதமாக நடித்தனர்.

    குறிப்பாக, தாய்மொழி தெலுங்கு என்றாலும் தமிழ் வசனத்தை தெளிவாகவும், உணர்ச்சி பொங்கவும் பேசி நடித்தார், கண்ணாம்பா. பாண்டிய மன்னன் அவையில், "என் கணவன் கள் வனா?'' என்று நீதி கேட்கும்போது, தீப்பொறி பறக்க அவர் பேசிய வசனங்கள், காலத்தைக் கடந்தும் வாழ்கின்றன.

    உணர்ச்சியும், உயிர்த் துடிப்பும் நிறைந்த தமிழில் வசனங்களை எழுதியிருந் தார், இளங்கோவன். வசனம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு முதன் முதலாக இலக்கணம் வகுத்தவர் இளங்கோவன்.

    கண்ணகி - கோவலன் கதையை புதிய மெருகுடன் தயாரிக்க கருணாநிதி விரும்பினார். "பூம்புகார்'' என்ற பெயரில், திரைக்கதை - வசனம் எழுதினார். மேகலா பிக்சர்ஸ் அதைப் படமாகத் தயாரித்தது.

    கண்ணகியாக விஜயகுமாரி, கோவலனாக எஸ்.எஸ்.ராஜேந்திரன், மாதவியாக ராஜஸ்ரீ நடித்தனர். ப.நீலகண்டன் டைரக்ட் செய்தார். 1964-ல் வெளியான இந்தப்படம், பெரிய வெற்றி பெற்றது.

    "பூம்புகார்'' படம் உருவாக பின்னணியில் நடைபெற்ற நிகழ்ச்சி என்ன, கண்ணகி வேடம் தனக்குக் கிடைத்தது எப்படி என்பது பற்றி விஜயகுமாரி கூறியதாவது:-

    "நானும் என் கணவரும் முத்து மண்டபம் என்ற நாடகத்தை சென்னையில் நடத்தினோம். கலைஞர், மா.பொ.சி., டி.கே.சண்முகம் மற்றும் நிறைய பேர் நாடகத்திற்கு வந்திருந்தார்கள்.

    நாடகம் முடிந்த பிறகு, எல்லோரும் வாழ்த்திப் பேசினார்கள். "சிலம்பு செல்வர்'' ம.பொ.சி. அவர்கள் பேசும்போது, "விஜயகுமாரியை இந்த நாடகத்தில் பார்க்கும்போது எனக்கு கண்ணகியின் நினைவுதான் வருகிறது. மறுபடியும் கண்ணகி வரலாற்றை படமாக எடுத்தால் என்ன என்று தோன்றுகிறது. கண்ணகியாக விஜயகுமாரி நடிக்க வேண்டும். அந்த அளவிற்கு விஜயகுமாரியின் நடிப்பு மெய்சிலிர்க்கச் செய்தது'' என்று

    கூறினார்.அதையடுத்து பேசிய கலைஞர் அவர்கள், "கண்ணகி வரலாற்றை நான் `பூம்புகார்' என்ற பெயருடன் படமாக எடுக்கிறேன். அந்தப் படத்தில் ராஜேந்திரனும், விஜயகுமாரியும் நடிக்க வேண்டும். நடிப்பார்கள்!'' என்று சொன்னார்.

    பிறகு பேசிய என் கணவர், "கலைஞர் அவர்கள் சொன்னதுபோல், பூம்புகார் படத்தில் நானும் விஜயகுமாரியும் நடிக்கிறோம்'' என்று சொன்னார்கள்.

    இப்படித்தான் பூம்புகார் படம் எடுக்க பிள்ளையார் சுழி போடப்பட்டது. பூம்புகார் படப்பிடிப்பு தொடங் குவதற்கு முன்பாக, கண்ணாம்பா நடித்த "கண்ணகி'' படத்தைப் பார்க்கும்படி என்னிடம் சிலர் சொன்னார்கள். நான் அதை பார்க்கவில்லை. காரணம், அவர் நடித்த அளவிற்கு என்னால் நடிக்க முடியாமல் போய்விட்டால் என்ன செய்வது என்ற பயம்!

    நான் கண்ணாம்பா அம்மா வீட்டிற்கு போனேன். "அம்மா! நீங்கள் நடித்த கண்ணகி வேடத்தில் நான் நடிக்கப் போகிறேன். என்னை நீங்கள் ஆசீர்வதிக்க வேண்டும்'' என்று அவர் காலில் விழுந்து கும்பிட்டு ஆசீர்வாதம் வாங்கி வந்தேன்.

    இந்தப்படத்தில் நடிக்கும்போது நான் உண்ணாவிரதம் இருந்து நடித்தேன். "கண்ணகி சாதாரணப் பெண் இல்லை. அம்மனின் அவதாரம்'' என்று என் பாட்டி சொன்னார்கள்.

    பூம்புகார் படத்தின் முதல் நாள் படப்பிடிப்பு. "என் கணவர் கள்வன் இல்லை'' என்று பாண்டிய மன்னன் முன் நான் வாதாடும் காட்சி. படப்பிடிப்பு கோல்டன் ஸ்டூடியோவில் நடந்தது.

    கையில் வசனங்கள் எழுதிய காகிதத்துடன் நான் உற்சாகத்துடன் படப்பிடிப்பு நிலையத்திற்குள் சென்றேன். அங்கு கலைஞர் அவர்கள், மாறன், டைரக்டர் ப.நீலகண்டன் ஆகியோருடன் அமர்ந்திருந்ததைப் பார்த்ததும், நான் மனப்பாடம் செய்து வந்த வசனங்கள் எல்லாம் மறந்து போயிற்று. ஒரே பயம். கலைஞர் என்னை அழைத்து, "பயப்பட வேண்டாம். தைரியமாக நடி'' என்றார்.

    ஓ.ஏ.கே. தேவர் பாண்டிய மன்னன் வேடத்திலும், பாண்டிய மன்னன் மனைவி வேடத்தில் ஜி.சகுந்தலாவும் மற்றும் நிறைய பேர் அரச உடையிலும் சபையில் அமர்ந்திருந்தார்கள்.

    இந்த காட்சியில் எப்படி வசனம் பேசி நடிக்க வேண்டும் என்று, காட்சி எடுக்கும் முன் விவரமாக சொன்னார்கள். நான் ஒரு தடவை நடித்துக் காட்டினேன். "நீ இதை மனதில் வைத்துக் கொண்டு இப்படியே நடிக்க வேண்டும்'' என்று சொன்னார்கள்.

    அந்த தர்பார் மண்டப செட் ரொம்ப பெரிதாக இருந்தது. இப் போது மாதிரி முதலில் நடித்து விட்டு, பிறகு வேறொரு நாள் போய் வசனத்தை பதிவு செய்யும் வசதி அக்காலத்தில் கிடையாது. நடிக்கும்போதே வசனங்களை பதிவு செய்வார்கள். அதற்காக தலைக்கு மேலே மைக் இருக்கும். இந்த தர்பார் மண்டப செட் மிகப்பெரிய அளவில் பிரமாண்டமாக போடப்பட்டிருந்ததால் `மைக்'கை ரொம்பவும் மேலே வைத்திருந்தார்கள். இதனால் நான் வசனங்களை சத்தம் போட்டு பேசவேண்டியிருந்தது.

    சீன் நன்றாக அமையவேண்டும் என்று என் மனதில் ஒரு வெறி - ஒரு வேகம் இருந்தது. எந்த அளவிற்கு நான் முழு ஈடுபாட்டுடன் நடித்தேன் என்பது எனக்குத்தான் தெரியும்.

    ஒரு சமயம் வசனத்தை கத்திப்பேசியதால், என் தொண்டையில் இருந்து ரத்தம் வர ஆரம்பித்துவிட்டது. இப்படி ரத்தம் சிந்தி நடித்த "பூம்புகார்'' வெளிவந்து வெற்றிகரமாக ஓடியது. என்னை வாழ்த்தி ஏராளமான வாழ்த்துக் கடிதங்கள் வந்தன. அதே சமயம், நேரிலும், போன் மூலமும் வாழ்த்தியவர்கள் ஏராளம். இப்படி வாழ்த்து மழையில் நனைந்து கொண்டு இருந்தேன்.

    மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்கள், இந்தப் படத்தைப் பார்த்தார். "கண்ணகி வேடத்தில் நீ நடித்ததை பார்க்கும்போது, கண்ணகி உன்னைப்போல்தான் இருந்திருப்பார் என்று எல்லோருக்கும் தோன்றுகிறது. உனக்கு என் வாழ்த்துக்கள்'' என்று என்னைப் பாராட்டினார். அவர் கூறிய வார்த்தைகள் இன்னும் என் காதில் ஒலித்துக்கொண்டு இருக்கின்றன.

    நான், கண்ணகி வேடத்தில் நடித்ததற்கு ரொம்ப கொடுத்து வைத்திருக்க வேண்டும். நான் உயிரோடு இருந்தாலும், இல்லாவிட்டாலும் உலகம் உள்ளவரை கண்ணகி நினைவு வரும் போதெல்லாம் என் பெயரும் நினைவுக்கு வரும் அல்லவா?

    என் மீது நம்பிக்கை வைத்து எனக்கு இந்த வேடத்தைக் கொடுத்த கலைஞர் அவர்களுக்கும், எனக்கு இந்த வேடம் கிடைக்க காரணமாய் இருந்த சிலம்புச்செல்வர் மா.பொ.சி. அவர்களுக்கும், டி.கே.சண்முகம் அவர்களுக்கும் நான் என்றென்றும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்.

    இதற்கெல்லாம் மகு டம் வைத்தாற்போல், கண்ணகிக்கு சிலை எடுக்க வேண்டும் என்று அண்ணா அவர்கள் சொன்னார்கள்.

    அதன்படி கடற்கரையில் கண்ணகிக்கு சிலை அமைக்கப்பட்டது. கையில் சிலம்புடன் கண்ணகி நிற்கும் சிலை, பூம்புகார் படத்தில் நான் தோன்றிய தோற்றத்தின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டது. எனவே, கடற்கரையில் நானே சிலையாக நிற்பது போன்ற ஒரு உணர்வு எனக்குள்

    இருக்கிறது.அப்போதெல்லாம் தினமும் காலை 4-30 மணிக்கு எழுந்து கடற்கரைக்கு வாக்கிங் போவேன். தினமும் கடற்கரையில் இருக்கும் கண்ணகி சிலையைப் பார்ப்பேன். அப்போது என் மனதில் எண்ணற்ற இன்ப அலைகள் வந்து மோதும். தினமும், கண்ணகி தெய்வத்தை கையெடுத்துக் கும்பிடுவேன்.

    பூம்புகார் படம் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருந்த சமயம், நாங்கள் இலங்கைக்கு சென்றோம்.

    என் கணவருக்கு வில்லுப்பாட்டு நன்றாகத் தெரியும். கண்ணகி வரலாற்றை வில்லுப்பாட்டாக தயாரித்து, அந்த நிகழ்ச்சியை நடத்தத்தான் நாங்கள் இலங்கைக்கு சென்றோம்.

    இலங்கையில் எங்களுக்கு கிடைத்த வரவேற்பை இன்னும் என்னால் மறக்க முடியவில்லை. நாங்கள் எங்கு சென்றாலும் எங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு. மக்களின் அன்பான வரவேற்பு. ஒவ்வொரு வீட்டிலும் விருந்து உபசரிப்பு. எங்களுக்குத்தான் நேரம் போதவில்லை.

    இலங்கை பயணத்தை முடித்துவிட்டு, நாங்கள் சென்னைக்கு திரும்பினோம். மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து தேனாம்பேட்டையில் இருக்கும் எங்கள் வீடு வரைக்கும் நாங்கள் திறந்த ஜீப்பில் வந்தோம். ரோட்டின் இரு பக்கமும் ரசிகர்கள் நின்று கொண்டு, மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.''

    இவ்வாறு  கூறினார், விஜயகுமாரி. 
    விஜயகுமாரி நடித்த "சாரதா'' படத்தைப் பார்த்த பானுமதி, அவர் நடிப்பைப் பாராட்டி, பரிசு வழங்கினார்.
    விஜயகுமாரி நடித்த "சாரதா'' படத்தைப் பார்த்த பானுமதி, அவர் நடிப்பைப் பாராட்டி, பரிசு வழங்கினார்.

    விஜயகுமாரி நடித்த சிறந்த படங்களில் ஒன்று "போலீஸ்காரன் மகள்.'' இது எஸ்.வி.சகஸ்ரநாமம் நடத்தி வந்த நாடகம். அது, ஸ்ரீதர் டைரக்ஷனில் திரைப்படமாகியது. ஸ்ரீதர் டைரக்ஷனில் விஜயகுமாரி நடித்த இரண்டாவது படம் இது.

    போலீஸ்காரராக எஸ்.வி.சகஸ்ரநாமமும், அவர் மகளாக விஜயகுமாரியும் நடித்தனர். விஜயகுமாரியை ஏமாற்றி விடும் இளைஞனாக பாலாஜி நடித்தார்.

    இந்தப் படத்தில் ஒரு கட்டத்தில் சகஸ்ரநாமம் தன் இடுப்பிலிருந்த `பெல்ட்'டைக் கழற்றி, விஜயகுமாரியை அடித்து விளாசுவார். பார்த்தவர்கள் திகைத்து உறைந்துபோய் விடும் அளவுக்கு, அக்காட்சி தத்ரூபமாக அமைந்திருந்தது.

    இதில் இடம் பெற்ற "கண்ணிலே நீர் எதற்கு? காலம் எல்லாம் அழுவதற்கு!'' என்ற பாடல் பெரிய ஹிட் ஆகியது.

    ஸ்ரீதர் டைரக்ஷனில் "கொடி மலர்'' என்ற படத்திலும் விஜயகுமாரி நடித்தார். இதில் அவருக்கு ஊமைப்பெண் வேடம். அவருக்கு ஜோடி முத்துராமன். மற்றும் ஏவி.எம்.ராஜன், புஷ்பலதா, நாகேஷ் ஆகியோரும் நடித்தனர்.

    இந்த படத்தில் நடிக்கும் போது, தனக்கு ஏற்பட்ட ஒரு சுவையான அனுபவம் பற்றி விஜயகுமாரி சொன்னார்:

    "கொடிமலர்'' படப்பிடிப்பின்போது ஸ்ரீதர் அவர்கள் என்னிடம், "நான் புதுமுகங்களைப் போட்டு ஒரு படம் எடுக்கலாம் என்று இருக்கிறேன். அதற்காக 2 பெண்களை மேக்கப் டெஸ்ட் எடுத்து இருக்கிறேன். இந்த 2 பேரில் ஒரு பெண்ணை போடலாம் என்று நாங்கள் நினைத்து இருக்கிறோம். நீ அந்தப் பெண்களின் படத்தைப் பார்த்து, உன் அபிப்பிராயத்தை சொல்'' என்று கூறினார்.

    மேக்கப் டெஸ்ட் எடுத்த 2 படங்களையும் போட்டு காட்டினார்கள். அதில் ஒரு பெண் மிகவும் ஒல்லியாக இருந்தார். கைகள் நீளமாக, குச்சி குச்சியாக இருந்தன.

    மற்றொரு பெண் அளவான உடம்போடு இருந்தார். முகம் பார்க்க அழகாக இருந்தது.

    நான் இரண்டாவதாக நினைத்தப் பெண்ணை குறிப்பிட்டு, "இந்தப் பெண் நன்றாக இருக்கிறாள்'' என்று சொன்னேன்.

    "நாங்களும் அந்தப் பெண்ணைத்தான் தேர்வு செய்து வைத்திருக்கிறோம்'' என்று டைரக்டர் ஸ்ரீதர் கூறி, "இந்தப் பெண் யார் தெரியுமா? சந்தியா அம்மா அவர்களுடைய பெண்'' என்று சொன்னார். ஆம்; ஜெயலலிதாதான் அவர்.

    மற்றொரு பெண் ஒல்லியாக குச்சிபோல் இருந்தார் என்று சொன்னேன் அல்லவா? பிற்காலத்தில் வடநாட்டில் கனவு கன்னியாக கொடிகட்டிப் பறந்த ஹேமமாலினிதான் அவர்!

    ஸ்ரீதரின் "வெண்ணிறஆடை'' படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமான ஜெயலலிதா குறுகிய காலத்தில் நிறைய படங்களில் கதாநாயகியாக நடித்தார். பிற மொழிப் படங்களிலும் அவரே வசனம் பேசி நடித்தார். நானும் பல படங்களில் அவருடன் நடித்திருக்கிறேன்.

    முக்தா பிலிம்சின் "சூரியகாந்தி'' படம் ஜெயலலிதாவின் 100-வது படம். அந்தப் படத்தின் விழா கலைஞர் கருணாநிதி தலைமையில் நடந்தது. அந்த விழாவிற்கு சந்தியா அம்மா என் வீட்டிற்கு வந்து, என்னை அழைத்திருந்தார். நானும் அந்த விழாவிற்கு போனேன். விழாவில் என்னை ஜெயலலிதா அவர்களுக்கு மலர் கிரீடம் வைத்து வாழ்த்தி பேசச் சொன்னார்.

    நான் பேசினேன். "ஜெயலலிதா சினிமா துறைக்கு வருவதற்கு முன்பே நான் அவரைப் பார்த்து இருக்கிறேன். அமைதியாக இருப்பார். அப்படிப்பட்டவர் இன்று 100 படங்கள் நடித்து கலைஞர் தலைமையில் விழா நடந்து கொண்டிருக்கிறது. அவர் இந்த 100 படங்களில் மட்டுமல்லாமல் இன்னும் பல 100 படங்களில் நடித்து விழா காணவேண்டும். அது மட்டும் இல்லை. வரும் காலத்தில் இவர் ஒரு இந்திரா காந்தி மாதிரி வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை'' என்று பேசினேன். நான் பேசும்போது அரசியலுக்கும், அவருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அதற்காக, நான் பேசியதால்தான் அவர் அரசியலுக்கு வந்தார் என்று யாரும் நினைத்துவிட வேண்டாம்!

    கே.எஸ்.கோபாலகிருஷ்ணனின் சொந்தப்படம் "தெய்வத்தின் தெய்வம்.'' இந்தப் படத்தின் கதை - வசனம் - டைரக்ஷன் எல்லாம் அவர்தான். இந்தப் படத்தில் நான் எஸ்.எஸ்.ஆருக்கு ஜோடி. சந்தியாம்மா, மணிமாலா, ரங்காராவ், எஸ்.வி.ராஜம்மா எல்லோரும் நடித்தோம்.

    இந்தப் படத்தின் கதை, காமெடி கலந்த குடும்பப்பாங்கான கதை. உண்மையிலேயே நாங்கள் எல்லோரும் ரசித்து ரசித்து நடித்தோம். இந்தப்படம் ஒரு வெற்றிப்படமாக அமைந்தது.

    பி.எஸ்.வி. பிக்சர்ஸ் "ஆலயமணி'' டைரக்டர் கே.சங்கர் டைரக்ஷனில் உருவான படம். சிவாஜிகணேசன் - சரோஜாதேவி ஆகியோருடன் எஸ்.எஸ்.ஆர், நான், நாகையா, எம்.ஆர்.ராதா, புஷ்பலதா, எம்.வி.ராஜம்மா எல்லோரும் நடித்தோம்.

    இந்தப் படத்தில் வரும் பாட்டுக்கள் எல்லாமே நன்றாக இருந்தன. இந்தப் படத்தில் நடிக்க பி.எஸ்.வீரப்பா என்னிடம் கேட்டபோது, "இந்த வேடத்தில் நடிக்க எனக்கு பிடிக்கவே இல்லை'' என்று சொன்னேன். அப்படி விருப்பமில்லாமலே நடித்த அந்தப்படம் 100 நாட்களைத் தாண்டி ஓடியது.

    அந்தப் படத்தில் வரும், "தூக்கமும் கண்களைத் தழுவட்டுமே'' என்ற பாடல் அந்த சமயத்தில் எல்லோராலும் நேசிக்கப்பட்ட பாட்டு.

    மேகலா பிக்சர்ஸ் படம் "காஞ்சித் தலைவன்.'' கதை - வசனம் கலைஞர். டைரக்ஷன் காசிலிங்கம்.

    இந்தப் படத்தில் எம்.ஜி.ஆர், பானுமதி, எஸ்.எஸ்.ஆர், நான், எம்.ஆர்.ராதா எல்லோரும் நடித்தோம்.

    இந்தப் படத்தில் எம்.ஜி.ஆருக்கு நான் தங்கையாக நடித்தேன். அவரோடு நான் நடித்த முதல் படம் இதுதான்.

    இந்தப் படத்தில் பானுமதி அம்மாவும், நானும் சேர்ந்து வருவது போல் ஒரு சீன்கூட இல்லை! இதனால், படப்பிடிப்பின்போது, ஒருநாள்கூட பானுமதி அம்மாவை பார்க்க முடியவில்லை. ஆகவே, அவரைப் பார்க்க வேண்டும் என்று நான் விரும்பினேன்.

    அந்தச் சமயத்தில் "சாரதா'' படப்பிடிப்பு நிலையத்தில் எனக்கு "படித்த மனைவி'' படத்தின் சூட்டிங் நடந்து கொண்டிருந்தது. பக்கத்து செட்டில் "காஞ்சித் தலைவன்'' படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது. அன்று என் கணவர் எஸ்.எஸ்.ஆரும், பானுமதி அம்மாவும் பங்கு கொள்ளும் காட்சியை படமாக்கிக் கொண்டு இருந்தார்கள்.

    அன்று பலத்த மழை கொட்டிக் கொண்டிருந்தது. நான் ஒரு குடையைப் பிடித்துக்கொண்டு அவர்கள் இருவரும் இருக்கும் இடத்திற்குப் போனேன். அங்கு என்னை பானுமதி அம்மாவிற்கு எஸ்.எஸ்.ஆர். அறிமுகப்படுத்தி வைத்தார். என் தலையில் கையை வைத்து "நல்லா இரும்மா'' என்று பானுமதியம்மா வாழ்த்தினார். பிறகு, "நீ நடித்த படம் ஒன்றைப் பார்க்க வேண்டுமே'' என்றார்.

    நான் நடித்த "சாரதா'' படத்தை அவர்களுக்குப் போட்டுக் காட்டினேன். படத்தைப்பார்த்த பானுமதி அம்மா, "நீ ரொம்ப நல்லா நடித்திருக்கிறாய்'' என்று என்னை பாராட்டினார்.

    அதன் பிறகு வரலட்சுமி நோன்பு அன்று பானுமதி அம்மா  என் வீட்டிற்கு வந்து, எனக்கு காதில் போடும் ஒரு நகையை பரிசாகக் கொடுத்தார். அதை நான் இன்னும் பத்திரமாக வைத்திருக்கிறேன்.'' - இவ்வாறு சொன்னார் விஜயகுமாரி.

    கறுப்பு மேக்கப்புடன் விஜயகுமாரி நடித்த "நானும் ஒரு பெண்'', மகத்தான வெற்றி பெற்றதுடன் ஜனாதிபதி விருதையும் பெற்றது.
    கறுப்பு மேக்கப்புடன் விஜயகுமாரி நடித்த "நானும் ஒரு பெண்'', மகத்தான வெற்றி பெற்றதுடன் ஜனாதிபதி விருதையும் பெற்றது.

    அண்மையில் வெளியான "சிவாஜி'' படத்தில், சிகப்பான இரு பெண்கள் கறுப்பு `மேக்கப்'பில் அங்கவை, சங்கவை என்ற வேடங்களில் நடித்திருக்கிறார்கள் அல்லவா?

    1963-ம் ஆண்டிலேயே, ஏவி.எம். தயாரித்த "நானும் ஒரு பெண்'' படத்தில் கதாநாயகியாக நடித்த விஜயகுமாரி, படம் முழுக்க கறுப்பு மேக்கப்பில் நடித்து, சிறந்த நடிகை என்று புகழ் பெற்றார்.

    படம் தயாராகிக் கொண்டிருந்தபோது, `இப்படி கறுப்பு நிறத்தில் நடித்தால், ரசிகர்கள் விரும்பமாட்டார்கள். இதுவரை கஷ்டப்பட்டு சம்பாதித்த பேரும், புகழும் பறிபோய்விடும்' என்று பலரும் பயமுறுத்தினார்கள். விஜயகுமாரிக்கும் அச்சம் ஏற்பட்டது.

    இதையெல்லாம் மீறி அவர் கறுப்புப் பெண்ணாக நடித்தது எப்படி?

    அதில் சுவையான கதையே அடங்கியிருக்கிறது. அதுபற்றி விஜயகுமாரியே கூறுகிறார்:-

    "நானும் ஒரு பெண் படப்பிடிப்பு தொடங்கிய வேளையில்,  "வசந்தி'' படத்தின் பூஜை, சாரதா ஸ்டூடியோவில் நடந்தது. இது ஏ.எல்.எஸ். தயாரிப்பு. நானும் அந்தப் படத்தில் நடித்ததால், பூஜைக்குச் செல்லத் தீர்மானித்தேன். "நானும் ஒரு பெண்'' படத்துக்காகப் போட்ட கறுப்பு `மேக்கப்'புடன் சென்றேன்.

    என்னைப் பார்த்தவர்கள் எல்லோரும், "நடிகைகளை அழகாகப் பார்க்கத்தான் ரசிகர்கள் விரும்புவார்கள். நீ இந்த கறுப்பு மேக்கப்பில் நடித்து உன் பெயரையே கெடுத்துக் கொள்ளப் போகிறாய்!'' என்று சொன்னார்கள்.

    கறுப்பு நிறத்துடன் நடிப்பதை, நான் தவறாக நினைக்கவில்லை. ஆனால், எல்லோரும் சேர்ந்து பயமுறுத்தியதால் எனக்கும் அச்சம் ஏற்பட்டது. `எதிர்காலம் பாதிக்கப்படுமோ!' என்று பயந்தேன்.

    நான் மனக்கலக்கத்துடன் நின்று கொண்டிருந்தபோது, சிவாஜிகணேசன் அங்கே வந்தார்.

    "இந்த மேக்கப் எந்தப் படத்துக்கு?'' என்று கேட்டார். "ஏவி.எம். தயாரிக்கும் நானும் ஒரு பெண் படத்தில் இப்படி நடிக்கிறேன்'' என்று சொன்னேன்.

    உடனே சிவாஜி, "விஜி! உன்னைப் பார்த்தால் எனக்கு பொறாமையாக இருக்கிறது. நான் பெண்ணாக இருந்திருந்தால் ஏவி.எம். செட்டியார் அவர்களிடம் போய், இந்த வேடத்தில் நான் நடிக்கிறேன். எனக்குக் கொடுங்கள் என்று கேட்டிருப்பேன்'' என்றார். அத்துடன், "விஜி, இந்த கறுப்பு வேடம் உனக்கு பெரிய புகழை கொடுக்கப்போகிறது. மற்றவர்கள் சொல்வதையெல்லாம் கேட்டு மனதை குழப்பிக்கொள்ளாமல் தைரியமாக நடி!'' என்று வாழ்த்தினார்.

    அவர் வாழ்த்தியது போலவே "நானும் ஒரு பெண்'' மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அதோடு மட்டுமல்லாமல், சிறந்த படத்துக்கான மத்திய அரசின் விருதையும், (வெள்ளிப்பதக்கம்) பெற்றது.

    இதில் எஸ்.எஸ்.ஆருக்கு ஜோடியாக நான் நடித்திருந்தேன். எஸ்.வி.ரங்காராவ், ஏவி.எம்.ராஜன், புஷ்பலதா ஆகியோரும் நடித்திருந்தார்கள். திருலோகசந்தர் டைரக்டு செய்திருந்தார்.

    இந்தப்படம் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருந்தது. எனக்கு பெண்களிடம் இருந்தும், ரசிகர்களிடம் இருந்தும் பாராட்டி ஏராளமான கடிதங்கள் வந்தன.

    அதில் ஒரு கடிதத்தை இன்னும் என்னால் மறக்க முடியவில்லை. அந்த கடிதம் ஒரு பெண் ரசிகை எழுதியது. அதில், "நான் கறுப்பாக இருக்கிறேன் என்பதால் என் கணவர் என்னை வெறுத்தார். கல்யாணம் ஆகியும், கன்னியாகவே வைத்திருந்தார். இந்நிலையில், நீங்கள் நடித்திருந்த "நானும் ஒரு பெண்'' படத்தை அவர் பார்த்துவிட்டு வந்தார். அதன்பின் அவர் மனம் மாறி என் மீது அன்பு காட்டினார். எங்கள் வாழ்வும் மலர்ந்தது. நாங்கள் இப்போது மிகவும் சந்தோஷமாக இருக்கிறோம். இதற்கு காரணம் "நானும் ஒரு பெண்'' படத்தில் நீங்கள் கறுப்பாக நடித்ததுதான்!'' என்று எழுதி, அதில் "நன்றி'' என்பதை அவருடைய ரத்தத்தில் எழுதி இருந்தார்.

    ஒரு பெண் வாழ்க்கை மலர்வதற்கு நான் காரணமாக இருந்தேன் என்பதை நினைக்கும்போது, அந்த சந்தோஷத்தை விவரிக்க வார்த்தைகளே இல்லை.

    "நானும் ஒரு பெண்'' படத்திற்கான விருதை வாங்க டெல்லிக்கு சென்றோம். அங்கு அப்போது ஜனாதிபதியாக இருந்த டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்கள் கையில் பரிசைப் பெற்றேன்.

    அடுத்த நாள் நானும் என் கணவரும் பாராளுமன்றத்திற்குச் சென்றோம். அப்போது அங்கு நேருவை பார்த்தோம். இதை ஏன் குறிப்பிடுகிறேன் என்றால், என் கணவர் தி.மு.கழகத்தில் எம்.எல்.ஏ.வாக இருந்தும் அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர். எல்லோரும் எங்கள் குடும்ப நண்பர்களாக இருந்தும் இன்று வரை தமிழ்நாடு சட்டசபைக்கு நான் சென்றதில்லை. டி.வி.''யில்தான் சட்டசபை எப்படி நடக்கிறது என்று பார்த்திருக்கிறேனே தவிர, ஒருநாளும் நேரில் பார்த்ததில்லை!

    அடுத்து, நான் நடித்த படம் பீம்சிங் டைரக்ட் செய்த "பார் மகளே பார்.'' இந்தப்படத்தில், சிவாஜிகணேசன், சவுகார் ஜானகி எம்.ஆர்.ராதா, வி.கே.ராமசாமி, ஏவி.எம்.ராஜன், புஷ்பலதா, முத்துராமன் நான் எல்லோரும் நடித்தோம். இதில் முத்துராமன், ஜோடியாக நான் நடித்தேன். இதுவும் ஒரு வெற்றிப்படம்.

    ஏவி.எம். தயாரித்த "காக்கும் கரங்கள்'' படத்தில் நானும், என் கணவரும் நடித்தோம். இதன் டைரக்டர் ஏ.சி.திருலோகசந்தர். இந்தப் படத்தில்தான் சிவகுமார், முதன் முதலாக திரை உலகிற்கு அறிமுகமானார். இதுவும் வெற்றிப்படம்தான்.''

    - இவ்வாறு கூறினார் விஜயகுமாரி.

    ஏ.எல்.எஸ். தயாரித்த "சாரதா'' படத்தை, கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் முதன் முதலாக டைரக்ட் செய்தார். எஸ்.எஸ்.ராஜேந்திரன், விஜயகுமாரி இணைந்து நடித்த இந்தப்படம், பெரிய வெற்றி பெற்றது.
    ஏ.எல்.எஸ். தயாரித்த "சாரதா'' படத்தை, கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் முதன் முதலாக டைரக்ட் செய்தார். எஸ்.எஸ்.ராஜேந்திரன், விஜயகுமாரி இணைந்து நடித்த இந்தப்படம், பெரிய வெற்றி பெற்றது.

    கே.எஸ்.கோபாலகிருஷ்ணன், குடும்பப்பாங்கான கதைகளுக்கு அருமையாக வசனம் எழுதி புகழ் பெற்றிருந்த காலக்கட்டம் அது. திறமைசாலிகளை ஊக்குவிப்பதில் ஆர்வம் கொண்ட பட அதிபர் ஏ.எல்.சீனிவாசன் (கவிஞர் கண்ணதாசனின் அண்ணன்), கோபாலகிருஷ்ணன் டைரக்ஷனில் "சாரதா'' என்ற படத்தை தயாரிக்கத் திட்டமிட்டார்.

    இது புரட்சிகரமான கதை அமைப்பைக் கொண்டது.

    விபத்தில் ஆண்மை இழந்து விடும் கதாநாயகன், மனைவிக்கு மறுமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்வான். இதை விரும்பாத கதாநாயகி, பெரிய மனப்போராட்டத்தில் இருப்பாள். இறுதியில், கணவன் காலில் விழுந்து ஆசி பெறும்போது, உயிர் போய்விடும்.

    இதில் எஸ்.எஸ்.ராஜேந்திரன் கதாநாயகனாகவும், விஜயகுமாரி கதாநாயகியாகவும் நடித்தனர். மற்றும் எம்.ஆர்.ராதா, நாகையா, எம்.வி.ராஜம்மா, புஷ்பலதா ஆகியோரும் நடித்தனர்.

    படத்தின் கதை - வசனத்தை உணர்ச்சி பொங்க எழுதியிருந்தார், கோபாலகிருஷ்ணன்.

    கே.வி.மகாதேவன் இசை அமைப்பில், "ஒருத்தி ஒருவனை நினைத்து விட்டால்...'', "மெல்ல மெல்ல அருகில் வந்து மென்மையான கையைத்தொட்டு'', "தட்டுத்தடுமாறி நெஞ்சம்'' என்பது உள்பட எல்லா பாடல்களும் இனிமையாக அமைந்திருந்தன.

    "சாரதா'', 16-3-1962-ல் வெளிவந்தது. கதை, வசனம், நடிப்பு, பாடல் என்று அனைத்து அம்சங்களும் சிறப்பாக இருந்ததால், படம் `சூப்பர் ஹிட்' ஆகியது.

    குறிப்பாக, விஜயகுமாரியின் நடிப்பு அனைவரது பாராட்டையும் பெற்றது.

    சாரதா பட அனுபவங்கள் பற்றி விஜயகுமாரி கூறியதாவது:-

    "ஏ.எல்.எஸ். அவர்கள் இந்தப் படத்தின் வெற்றிக்குப் பிறகு, "மெஜஸ்டிக்'' என்ற ஸ்டூடியோவை குத்தகைக்கு எடுத்து, அதற்கு "சாரதா ஸ்டூடியோ'' என்று பெயர் சூட்டினார்.

    சாரதா படத்திற்கு பிறகு ஏ.எல்.எஸ். எடுத்த படங்களுக்கெல்லாம் படத்தின் கதாநாயகிகளின் பெயரையே சாந்தி, ஆனந்தி, வசந்தி என்று வைத்தார். இந்தப் படங்களில் எல்லாம் நான்தான் கதாநாயகியாக நடித்தேன்.

    "சாரதா'' படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தபோதே, சரவணா பிலிம்ஸ் தயாரித்த "பாதகாணிக்கை'' படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனேன். இந்தப் படத்தின் டைரக்டர் கே.சங்கர். ஜெமினிகணேசன், சாவித்திரி, எம்.ஆர்.ராதா, அசோகன், எஸ்.வி.சுப்பையா, எம்.வி.ராஜம்மா, ஆகியோருடன் கமலஹாசனும் சின்னப்பையனாக நடித்தார்.

    இந்தப் படத்தில் என்னுடைய மேக்கப் சரியில்லை என்று கூறி, ஹரிபாபு என்ற பெரிய மேக்கப்மேனை எனக்கு மேக்கப் போட ஏற்பாடு செய்திருந்தார்கள்.

    ஹரிபாபு, வெளியே எங்கேயும் போகமாட்டார். நடிக - நடிகைகள் அவர் வீட்டிற்குப்போய்தான் மேக்கப் போட்டுக் கொள்ள
    வேண்டும்.

    இதனால் நான் மேக்கப் போட்டுக் கொள்வதற்காக, அதிகாலை 4-30 மணியிலிருந்து 5 மணிக்குள் புறப்பட்டுப் போவேன். ஏறத்தாழ அதே நேரத்தில், என்.டி.ராமராவும் ஹரிபாபுவிடம் மேக்கப் போட்டுக்கொள்ள வருவார். அப்போது என்னைப் பார்த்த என்.டி.ஆர், என்னை தெலுங்குப் படத்தில் நடிக்க அழைத்தார். அதற்கு நான், "எனக்கு தெலுங்கு தெரியாதே'' என்று சொன்னேன்.

    "நான் உனக்கு தெலுங்கு சொல்லிக் கொடுத்து சின்ன சின்ன ஷாட்டாக எடுக்கிறேன். அதன் பிறகு உனக்கு தெலுங்கில் நடிப்பது சுலபமாகப் போய்விடும்'' என்றார்.

    அப்போது நான் நிறைய தமிழ் படங்களில் நடிக்க ஒப்புக் கொண்டிருந்ததால், என்.டி.ஆர். அவ்வளவு ஆர்வமாக கேட்டும், என்னால் நடிக்க முடியாமல் போயிற்று.

    அன்று அவர் கூறியபடி தெலுங்குப் படத்தில் நடித்திருந்தால், தெலுங்குப்பட உலகிலும் எனக்கொரு கதாநாயகி அந்தஸ்து கிடைத்து இருக்கும்.

    அடுத்து ராஜாமணி பிக்சர்ஸ் பட நிறுவனம் "குங்குமம்'' என்ற படத்தை கிருஷ்ணன் - பஞ்சு டைரக்ஷனில் தயாரித்தது. இந்தப் படத்தில், சிவாஜிகணேசன், எஸ்.எஸ்.ஆர், ரங்காராவ், எம்.வி.ராஜம்மா, நான் எல்லோரும் நடித்தோம். இந்தப்படத்தில் சாரதா

    அறிமுகமானார்.இதில், நான் சிவாஜிகணேசனை காதலிக்கும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தேன். அதை ரசிகர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. அதனால் கதை நன்றாக இருந்தும், பாட்டுக்கள் எல்லாம் அருமையாக அமைந்திருந்தும் படம் ஓடவில்லை.

    அடுத்து ஏ.எல்.எஸ். புரொடக்ஷன் தயாரித்த "சாந்தி'' என்ற படத்தில் சிவாஜிகணேசன், எஸ்.எஸ்.ஆர், நான், எம்.ஆர்.ராதா ஆகியோர் நடித்தோம். டைரக்டர் பீம்சிங்.

    இந்தப் படத்தில் சிவாஜிகணேசனுக்கும், எனக்கும் முதல் இரவு காட்சி. அந்தக் காட்சியில், முதல் இரவு நடக்கக்கூடாது என்பதற்காக என் புடவையை எரியும் விளக்கில் போட்டு புடவை எரிய ஆரம்பித்ததும் "முதல் இரவு அன்று இப்படி நடந்தது அபசகுனம்'' என்று காரணம் காட்டி, சிவாஜிகணேசன் முதல் இரவை தள்ளி வைத்துவிடுவார்.

    இது அன்றைய தினம் படமாக்கப்பட வேண்டிய காட்சி.

    அப்போது எதிர்பாராமல் என் புடவையில் தீ மள மளவென்று பரவியது.நான் பயந்து போய், என் கையால் அதைக் கசக்கி தீயை அணைத்துவிட்டேன். இதனால் என் கையில் தீக்காயம் ஏற்பட்டு, நான் துடித்துப்போனேன்.

    உடனே, சிவாஜி மருந்து வாங்கி வரச்சொல்லி, அவரே என் அருகில் அமர்ந்து தீக்காயத்திற்கு மருந்து தடவினார். அந்த மனிதாபிமானத்தை இன்றும் என்னால் மறக்க முடியவில்லை. வித்தியாசமான கதை அமைப்பை கொண்டிருந்த "சாந்தி'', நன்றாக ஓடியது.

    இதைத்தொடர்ந்து டைரக்டர் ப.நீலகண்டன் டைரக்ஷனில் ஏ.எல்.எஸ். நிறுவனம் எடுத்த படம் "ஆனந்தி.'' இதில் நானும் எஸ்.எஸ்.ஆரும் கதாநாயகன், கதாநாயகி. எம்.என்.நம்பியாரும் இதில் நடித்திருந்தார். இந்தப்படம் சுமாராக ஓடினாலும், இந்தப்படத்தில் இடம் பெற்ற ஒரு பாட்டு எனக்கு மிகவும் பிடித்திருந்தது. "கண்ணிலே அன்பிருந்தால் கல்லிலே தெய்வம் வரும்; நெஞ்சிலே நினைவிருந்தால் நீரிலும் தெய்வம் வரும்'' என்ற அந்தப்பாடலை, அடிக்கடி முணுமுணுத்துக் கொண்டு இருப்பேன்.

    தொடர்ந்து "பணம் பந்தியிலே'', "உல்லாசப்பயணம்'', "தேடி வந்த திருமகள்'', "அவன் பித்தனா'', "வழிகாட்டி'', "அல்லி'' முதலிய படங்கள் வந்தன. இவை நானும் எஸ்.எஸ்.ஆரும் இணைந்து நடித்த எங்களுடைய சொந்தப் படங்கள்.

    பெல் பிக்சர்ஸ் நிறுவனம் பீம்சிங் டைரக்ஷனில் எடுத்த படம் "பச்சை விளக்கு.'' இந்தப்படத்தில் சிவாஜிகணேசன், எஸ்.எஸ்.ஆர், எம்.ஆர்.ராதா, ரங்காராவ், சவுகார்ஜானகி, புஷ்பலதா, நாகேஷ் ஆகியோர் நடித்தோம்.

    இந்தப்படத்தில் நான் சிவாஜிகணேசனின் தங்கையாக நடித்தேன். அதில் சிவாஜிகணேசன் என்னை வாழ்த்தி "ஒளிமயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறது'' என்று பாடுவார். "குங்குமச் சிமிழே, குடும்பத்தின் விளக்கே, குலமகளே வருக! எங்கள் கோவிலில் வாழும் காவல் தெய்வம் கண்ணகியே வருக!'' என்று அந்தப்பாட்டில் வரிகள் வரும்.

    அன்றே சிவாஜிகணேசன் என்னிடம், "விஜி! நீ வருங்காலத்தில் கண்ணகியாக நடிப்பாய்!'' என்றார். அவர் என்னை வாழ்த்தி, பச்சை விளக்கு காட்டினார் என்றே நினைத்தேன்.

    பச்சை விளக்கு படம் திரையிடப்பட்ட எல்லா இடங்களிலும் வெற்றிக்கொடி நாட்டியது.''

    இவ்வாறு விஜயகுமாரி கூறினார்.

    ஸ்ரீதர் தயாரித்த மாபெரும் வெற்றிப்படமான "கல்யாணப்பரி''சில், ஜெமினிகணேசன், சரோஜாதேவியுடன் விஜயகுமாரி இணைந்து நடித்தார்.
    ஸ்ரீதர் தயாரித்த மாபெரும் வெற்றிப்படமான "கல்யாணப்பரி''சில், ஜெமினிகணேசன், சரோஜாதேவியுடன் விஜயகுமாரி இணைந்து

    நடித்தார்."குலதய்வம்'' வெற்றியைத் தொடர்ந்து, தமிழ்ப்பட உலகில் நிரந்தரமான ஓர் இடத்தை விஜயகுமாரி தேடிக்கொண்டார்.

    ஜெமினி, மாடர்ன் தியேட்டர்ஸ், புத்தா பிலிம்ஸ் போன்ற பெரிய பட நிறுவனங்களில் இருந்து விஜயகுமாரிக்கு அழைப்புகள் வந்தன. ஆனால், அவர் ஏவி.எம். நிறுவனத்துடன் செய்து கொண்டிருந்த ஒப்பந்தத்தினால், மற்ற படங்களில் நடிக்க முடியாத நிலை இருந்தது.

    இதை அறிந்த ஏவி.மெய்யப்ப செட்டியார், விஜயகுமாரியை அழைத்து, "உனக்கு நிறைய வாய்ப்புகள் வருகின்றன. அதற்கு, நாங்கள் போட்ட ஒப்பந்தம் தடையாக இருக்கக்கூடாது. எனவே அதை ரத்து செய்து விடுகிறோம். இனி நீ எல்லாப் படங்களிலும் நடிக்கலாம். நீ பெரிய நடிகையாக வருவாய்'' என்று கூறினார்.

    நெகிழ்ந்து போன விஜயகுமாரி, அவர் காலைத்தொட்டு வணங்கி, ஆசி பெற்றார்.

    ஜெமினியின் "வஞ்சிக்கோட்டை வாலிபன்'' படத்தில், ஜெமினிகணேசனின் தங்கையாக நடித்தார். அந்தப்படம் மாபெரும் வெற்றி பெற்றது.

    அதே படத்தை, இந்தியிலும் ஜெமினி எடுத்தது. தமிழில் நடித்த அதே வேடத்தில், இந்தியிலும் விஜயகுமாரி நடித்தார். இதுவும் பெரிய வெற்றிப்படம்.

    விஜயகுமாரிக்கு இந்திப் படங்களில் நடிக்கவும் அழைப்புகள் வந்தன. அவர் கவனம் முழுவதும், தமிழில் சிறந்த இடத்தைப் பெறவேண்டும் என்பதிலேயே இருந்தது. அதனால் அவர் இந்திப்பட உலகின் பக்கம் எட்டிப் பார்க்கவில்லை. அவர் நடித்த ஒரே இந்திப்படம், "ராஜ்திலக்'' (வஞ்சிக்கோட்டை வாலிபன் இந்திப்பதிப்பு) மட்டுமே.

    புத்தா பிலிம்ஸ் தயாரித்த "பதிபக்தி''யில் சிவாஜிகணேசன், ஜெமினிகணேசன், சாவித்திரி, எம்.என்.ராஜம் ஆகியோருடன் விஜயகுமாரியும் நடித்தார். இதில், விஜயகுமாரிக்கு, ஜெமினிகணேசனின் முறைப்பெண் வேடம்.

    பீம்சிங் டைரக்ட் செய்த இந்தப்படம் மெகா ஹிட் படமாகும்.

    கதை-வசன கர்த்தாவாக இருந்த ஸ்ரீதர், முதல் முதலாக டைரக்ட் செய்த படம் "கல்யாணப்பரிசு.'' தமிழ்ப்பட உலகில், ஒரு புதிய சகாப்தத்தை தொடங்கி வைத்த படம் இது.

    ஜெமினிகணேசன் கதாநாயகனாக நடித்த இப்படத்தில், விஜயகுமாரியும், சரோஜாதேவியும் அக்கா - தங்கையாக நடித்தனர். விஜயகுமாரிக்காக சரோஜாதேவி தன் காதலை தியாகம் செய்வார்.

    திருப்பங்கள் நிறைந்த இந்த முக்கோணக் காதல் கதையை, ஒரு காவியமாக உருவாக்கியிருந்தார், ஸ்ரீதர். 9-4-1959-ல் வெளிவந்து வெள்ளி விழா கண்ட இப்படத்தின் மூலம், விஜயகுமாரி மேலும் புகழ் பெற்றார்.

    மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்த "பெற்ற மகனை விற்ற அன்னை'' படத்தில் எஸ்.எஸ்.ராஜேந்திரனும், விஜயகுமாரியும் இணைந்து நடித்தனர். மனோகர், பண்டரிபாய் ஆகியோரும் இடம் பெற்றிருந்தனர். பாடல்கள், படப்பிடிப்பு எல்லாம் சிறப்பாக அமைந்தபோதிலும் படம் வெற்றி பெறவில்லை.

    இந்தக் காலக்கட்டத்தில், எஸ்.எஸ்.ராஜேந்திரனுடன் இணைந்து, விஜயகுமாரி பல நாடகங்களிலும் நடித்தார்.

    அதுபற்றி விஜயகுமாரி கூறுகிறார்:-

    "நாங்கள் நடித்த நாடகங்களில் கலைஞர் எழுதிய "மணி மகுடம்'' பெரும் புகழ் பெற்றது. மற்றும் "தென்பாண்டிய வீரன்'', "புதுவெள்ளம்'', "முதலாளி'', "முத்து மண்டபம்'' போன்ற நாடகங்களை நாங்கள் நடத்தினோம்.

    நாடகங்களில் நடித்துக் கொண்டே "மனைவியே மனிதனின் மாணிக்கம்'', "கைதியின் காதலி'', "தங்க மனசு தங்கம்'' போன்ற படங்களிலும் நடித்தேன்.

    அந்த சமயத்தில் நாங்கள் "தங்கரத்தினம்'' என்ற படத்தை தயாரித்தோம். இந்தப்படத்தில் நான் ஆதிதிராவிடப் பெண்ணாக நடித்தேன். சாதியில் ஏற்ற தாழ்வு கிடையாது, எல்லோருடைய உடம்பிலும் ஓடுவது ஒரே ரத்தம்தான். எல்லோரும் மனிதசாதி'' என்ற தத்துவத்தை சொல்லும்

    கதை.இந்த படத்தில், அப்போது பழனியில் நடந்த தி.மு.க. மாநாட்டில் அண்ணா பேசுவது, கலைஞர் பேசுவது முதலான காட்சிகள் இடம் பெற்றன. மக்கள் இதை மிகவும் வரவேற்றார்கள்.

    இந்தப்படம் முடியும்போது நான் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தேன்.

    அதனால் நாடகங்களில் நடிக்க முடியவில்லை. எனவே, "மணிமகுடம்'' நாடகத்தில் எனக்கு பதிலாக நடிக்க கோவையிலிருந்து ஒரு பெண் வந்திருந்தார். அவரால் கலைஞர் எழுதிய வசனங்களை பேச முடியவில்லை. ஆகவே மணிமகுடம் நாடகத்திற்குப் பதிலாக "தென்பாண்டிய வீரன்'' என்ற நாடகத்தை நடத்தினோம்.

    அந்தப் புது நடிகை யார் தெரியுமா? பிற்காலத்தில் மலையாள பட உலகில் கொடிகட்டிப் பறந்த "செம்மீன்'' பட நாயகி ஷீலாதான்!

    மருத்துவமனையில் எனக்கு ஆண் குழந்தை பிறந்தது. என் குழந்தைக்கு டாக்டர் வாதிராஜ×ம் அவருடைய மனைவியும்தான் பெயர் சூட்டினார்கள். என் கணவரின் முதல் எழுத்தான "ர'', என்னுடைய பெயரின் முதல் எழுத்தான "வி'' இந்த இரண்டையும் சேர்த்து ரவிக்குமார் என்ற பெயர் வைத்தார்கள்.

    குழந்தை பிறப்பதற்கு முன் வீமண்ண முதலி கார்டனில் குடியிருந்தேன். இது எனக்கு சொந்த வீடு. குழந்தை பிறந்த பிறகு, என் கணவர் அவருடைய முதல் மனைவி பங்கஜம் அக்காளுடன் இருந்த தேனாம்பேட்டை வீட்டிற்கு அழைத்துச் சென்றார்.

    அந்த காம்பவுண்டுக்குள் மூன்று வீடுகள். அடுத்தடுத்து இருந்தன. அதில் ஒரு வீட்டில், என் கணவரின் முதல் மனைவி பங்கஜம் அக்காள் அவர்களுடைய குழந்தைகளும், மற்றொரு வீட்டில் என் கணவரின் தங்கையும் அவருடைய கணவர் டி.வி.நாராயணசாமியும் அடுத்த வீட்டில் நானும் என் மகனும் இருந்தோம். அப்பா, பாட்டி, அக்காள், தங்கை, அக்காளுடைய மகள் ஆகியோரும் என்னுடன் இருந்தார்கள்.

    நாங்கள் தனித்தனி வீட்டில் இருந்தாலும், எல்லோரும் ஒரே குடும்பத்தில் இருப்பதுபோல், ஒற்றுமையாக - சந்தோஷமாக இருந்தோம். அந்த நிகழ்ச்சிகள் எல்லாம் என் மனதில்  இன்னும் நிழலாடுகின்றன.

    தைப்பொங்கல் வந்துவிட்டால் எங்கள் வீடு திருவிழா கோலம் பூண்டுவிடும். என் கணவரும், நானும் பொங்கல் அன்று காலை 6 மணிக்கு போர்ட்டிகோவில் வந்து நிற்போம். நாடக கம்பெனியில் உள்ளவர்கள், சினிமாத் துறையில் உள்ளவர்கள், கட்சியைச் சேர்ந்தவர்கள், ரசிகர் மன்றத்தினர், நரிக்குறவர்கள் கூடியிருப்பார்கள். ஒருபக்கம் நாதஸ்வரம் ஒலி ஒலித்துக்கொண்டிருக்கும்.

    பொய்க்கால் குதிரை ஆட்டம், கரகஆட்டம் என்று வீடே கலகலப்பாக இருக்கும், பிறகு எல்லோரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டுச்

    செல்வார்கள்.இதெல்லாம் என் வாழ்க்கையில் நடந்த மறக்க முடியாத இனிய நிகழ்ச்சியாகும்.

    அறிஞர் அண்ணா அவர்களின் 50-வது பிறந்த நாள் விழாவை எங்கள் வீட்டில் கொண்டாடினோம். அப்போது ஒரு வெள்ளித்தட்டில் 50 தங்கக் காசுகளை வைத்து அண்ணா அவர்களிடம் என் கணவர் கொடுத்தார்.

    எனக்கு குழந்தை பிறந்து 2 மாதம் இருக்கும் என்று நினைக்கிறேன். மாடர்ன் தியேட்டர் படம் "குமுதம்'' படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனேன். எனக்கு ஜோடி என் கணவர். இதில் ரங்காராவ், பி.எஸ்.சரோஜா, சவுகார்ஜானகி, எம்.ஆர்.ராதா ஆகியோர் நடித்தோம்.

    சுப்பையா டைரக்ட் செய்ய, கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் வசனம் எழுதினார்.

    இந்தப் படத்தில் எனக்கு வக்கீல் வேடம். காதலனுக்காகவும், காதலன் மனைவிக்காகவும் கோர்டடில் என் தந்தையை எதிர்த்து வாதாடி ஜெயித்து, தன் வாழ்க்கையை தியாகம் செய்யும் ஒரு பெண்ணின் கதை.

    இந்தப்படம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்து முதல்தர நாயகி அந்தஸ்தை எனக்குத் தேடித்தந்தது.

    - இவ்வாறு விஜயகுமாரி கூறினார்.
    ஒரு மாதம் கழித்து, ஏவி.எம்.மில் இருந்து விஜயகுமாரிக்குக் கடிதம் வந்தது. "உடனே புறப்பட்டு வாருங்கள்'' என்பதே அக்கடிதம்.
    ஒரு மாதம் கழித்து, ஏவி.எம்.மில் இருந்து விஜயகுமாரிக்குக் கடிதம் வந்தது. "உடனே புறப்பட்டு வாருங்கள்'' என்பதே அக்கடிதம்.

    விஜயகுமாரியும், அவர் பெற்றோரும் புறப்பட்டு சென்னை சென்றனர். ஏவி.எம். நிர்வாகி வாசுமேனனை சந்தித்தனர்.

    "நாளை உனக்கு மேக்கப் டெஸ்ட் எடுக்கப் போகிறோம். நாளைக்கு நீ பேசவேண்டிய வசனம் இந்த பேப்பரில் இருக்கிறது. நன்றாகப் படித்துவிட்டு வா. எப்படி நடிக்க வேண்டும் என்பதை நாங்கள் சொல்லித் தருகிறோம்'' என்றார், வாசுமேனன்.

    விஜயகுமாரி, வசனத்தை நன்றாக மனப்பாடம் செய்து கொண்டு, மறுநாள் ஏவி.எம். ஸ்டூடியோவுக்குப்போனார். அங்கு அவருக்கு மேக்கப் டெஸ்ட் நடந்தது. சிரிக்கச் சொல்லியும், கோபம், சோகம் முதலான முக பாவங்களை வெளிப்படுத்தியும் படம் எடுத்தார்கள்.

    முதல் நாள் கொடுத்த வசனங்களை பேசி நடிக்கச் சொன்னார்கள். அதன்படி பேசி நடித்தார். "பரவாயில்லை; நன்றாக நடிக்கிறாய்'' என்று வாசுமேனன் பாராட்டினார்.

    "இன்னும் இரண்டு நாட்கள் நீங்கள் எல்லோரும் சென்னையிலேயே தங்கியிருங்கள்'' என்று, வாசுமேனன் கூறினார். அதன்படி, பெற்றோருடன் விஜயகுமாரி 2 நாட்கள் சென்னையில் தங்கினார்.

    2 நாட்களுக்குப்பின் ஏவி.எம்.மில் இருந்து கார் அனுப்பினார்கள். அதில் விஜயகுமாரியும், பெற்றோர்களும் ஏவி.எம். ஸ்டூடியோவுக்குச் சென்றார்கள்.

    இவர்களை ஏவி.மெய்யப்ப செட்டியாரிடம் வாசுமேனன் அழைத்துச் சென்றார்.

    "உனக்குப் பாடத் தெரியுமா?'' என்று விஜயகுமாரியிடம் ஏவி.எம். கேட்டார். "தெரியாது'' என்று விஜயகுமாரி பதில் அளித்தார்.

    "பரத நாட்டியம் தெரியுமா?'', "நாடகங்களில் நடித்திருக்கிறாயா?'' - இப்படி ஏவி.எம். கேட்ட எல்லா கேள்விகளுக்கும் விஜயகுமாரி அளித்த பதில் "தெரியாது'', "இல்லை'' என்பதே!

    இந்த பதில்களைக் கேட்டு ஏவி.எம். சிரித்துவிட்டார். "எதுவுமே தெரியாத உன்னிடம் ஏதோ ஒரு திறமை ஒளிந்து கொண்டிருக்கிறது. ஸ்டூடியோவில் உனக்கு எல்லாம் சொல்லிக் கொடுப்பார்கள். அதிர்ஷ்டம் உன் பக்கம் இருக்கும் என்று நினைக்கிறேன். இப்போதைக்கு, உனக்கு மாதச் சம்பளம் கொடுக்கப்படும்'' என்று ஏவி.எம். கூறினார்.

    இதற்கான ஒப்பந்தத்தில் விஜயகுமாரியும், அவருடைய அப்பாவும் கையெழுத்துப் போட்டனர்.

    ஏவி.எம். காலில் விழுந்து வணங்கினார், விஜயகுமாரி.

    "நீ பெரிய நடிகையாக வருவாய்'' என்று ஏவி.எம். வாழ்த்தினார்.

    பின்னர் விஜயகுமாரியிடம் வாசுமேனன், "நீ இனிமேல் சென்னையில் தங்கியிருக்க வேண்டும். தினமும் இங்கு வந்து, டான்ஸ், பாட்டு எல்லாம் கற்றுக்கொள்ள வேண்டும்'' என்று கூறினார். அதன்படி பெற்றோருடன் சென்னையில் குடியேறினார், விஜயகுமாரி.

    தினமும் ஏவி.எம். ஸ்டூடியோவுக்குச் சென்று, நடிப்பு, நடனம், வசனம் ஆகியவற்றில் பயிற்சி பெற்றார்.

    ஏவி.எம். தயாரித்த "குலதெய்வம்'' என்ற படத்தில் விஜயகுமாரி அறிமுகமானார். இதற்கு வசனம் எழுதியவர் முரசொலி மாறன். அவருக்கும் இது முதல் படம். கிருஷ்ணன் - பஞ்சு டைரக்ட் செய்தனர்.

    எஸ்.எஸ்.ராஜேந்திரன், எஸ்.வி.சகஸ்ரநாமம், சந்திரபாபு, எம்.என்.ராஜம், மைனாவதி, பண்டரிபாய் ஆகியோர் நடித்தனர். இந்தப் படத்தின் மூலம் புகழ் பெற்ற ராஜகோபால், பின்னர் "குலதெய்வம் ராஜகோபால்'' என்று அழைக்கப்பட்டார்.

    தன் முதல் திரைப்பட அனுபவங்கள் பற்றி விஜயகுமாரி கூறியதாவது:-

    "நான் முதன் முதலில் கால் வைத்த இடம் ஏவி.எம். கலைக்கூடம். முதல் மேக்கப் டெஸ்ட் எடுக்கப்பட்டபோது, முதன் முதலாக பேசச்சொன்ன வசனம் கலைஞர் அவர்கள் எழுதி- நடிகர் திலகம் சிவாஜி அவர்களால் பேசப்பட்ட வசனம்- "ஓடினாள்... ஓடினாள்... வாழ்க்கையின் ஓரத்திற்கே ஓடினாள்...'' என்பது. இதெல்லாம் எனக்கு கிடைத்த பெரிய அதிர்ஷ்டங்கள்.

    "குலதெய்வம்'' என்ற அருமையான படத்தில் என்னை ஏவி.எம். நிறுவனம் அறிமுகப்படுத்தியது. இந்தப் படத்தில் எஸ்.எஸ்.ராஜேந்திரன் கதாநாயகனாக நடித்தார்.

    எந்தத் தாய் நான் சினிமாவில் நடிப்பதை ஆரம்பத்தில் எதிர்த்தாரோ, அதே தாயார் என் படம் எப்போது வரும் என்று தினமும் ஆவலோடு கேட்டு வந்தார்.

    இந்த சமயத்தில், என் வாழ்க்கையில் விதி விளையாடியது. என் தாயாரின் உடல்நிலை திடீரென்று மோசம் அடைந்தது. அவரை ஆஸ்பத்திரியில் சேர்த்தோம்.

    தினமும் ஆஸ்பத்திரிக்கு சென்று அவரை பார்ப்பது, பிறகு ஸ்டூடியோவுக்கு செல்வது என்று நாட்கள் ஓடின.

    "குலதெய்வம்'' படம் முடிவடைவதற்கு முன்பே என் தாயார் காலமாகிவிட்டார்கள். என் அம்மாவை உயிரற்ற உடலாக வீட்டுக்குக் கொண்டு வந்தபோது, என் இதயம் சுக்கல் சுக்கலாக உடைந்தது. என் அப்பா, நான், பாட்டி, அக்காள், தங்கை, அக்காள் மகள் எல்லோரும் கதறினோம்.

    நாங்கள் சென்னைக்கு புதிது. இங்கு யாரையும் எங்களுக்குத் தெரியாது. ஆறுதல் சொல்வதற்குக்கூட யாரும் இல்லை.

    இந்த சமயத்தில் எங்கள் அம்மா இறந்த செய்தியைக் கேட்டு எஸ்.எஸ்.ஆர். வந்தார். எங்களுக்கு ஆறுதல் சொன்னார். என் அம்மாவின் இறுதிச் சடங்கிற்கு வேண்டிய அனைத்து ஏற்பாடுகளையும் அவரே முன்னின்று செய்தார்.

    என் அம்மாவின் நினைவுகளை மனதில் சுமந்து கொண்டு "குலதெய்வம்'' படத்தில் தொடர்ந்து நடித்து வந்தேன். முன்பெல்லாம் என் துணைக்கு அப்பாவும், அம்மாவும் வருவார்கள். இப்போது அப்பா மட்டும் வந்தார்.

    "குலதெய்வம்'' 1956 செப்டம்பர் 29-ந்தேதி வெளிவந்தது. வெளியிட்ட எல்லா ஊர்களிலும் வெற்றிகரமாக ஓடி, 100-வது நாள் விழாவை கொண்டாடியது.

    என் முதல் படமே வெற்றிப்படமாக அமைந்ததில் எனக்கு மகிழ்ச்சியாக இருந்தாலும், இதைக்காண என் அம்மா இல்லையே என்ற துயரமும் மனதில் நிறைந்திருந்தது.

    எப்படி என் மனதைத் தேற்றினாலும், அம்மாவின் நினைவு அடிக்கடி வந்து என்னை வாட்டியது. அழுதுகொண்டே இருப்பேன். அவ்வப்போது, எஸ்.எஸ்.ஆர். என் வீட்டிற்கு வந்து எனக்கு ஆறுதல் சொல்வார். அது எனக்கு மனதில் தெம்பைக் கொடுத்தது.

    ஒருநாள் என் வீட்டிற்கு எஸ்.எஸ்.ஆர். அவர்கள் வந்தார்கள். என்னைப் பார்த்து "உன்னிடம் கொஞ்சம் பேசவேண்டும்'' என்றார்கள். "சொல்லுங்கள்'' என்றேன். "நான் உன்னைத் திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன். நீ என்ன சொல்கிறாய்?'' என்று கேட்டார். நான் மவுனமாக இருந்தேன். "மவுனம் சம்மதம்'' என்ற முறையில்.

    எங்கள் திருமணம் எளிமையாக நடந்தது. அம்மி மிதித்து அருந்ததி பார்க்கவில்லை; மாலை மாற்றிக் கொள்ளவும் இல்லை. எங்கள் வீட்டில் அப்போது இருந்த பெரியவர்களுடைய ஆசியைப் பெற்று, அவர்கள் முன்னிலையில் நாங்கள் கணவன் - மனைவியாக இல்வாழ்க்கையைத்

    தொடங்கினோம்.''இவ்வாறு விஜயகுமாரி கூறினார்.
    நூறு படங்களுக்கு மேல் நடித்தவர் விஜயகுமாரி. பள்ளியில் படிக்கும்போது, சினிமா என்றாலே அவருக்கு எட்டிக்காய் கசப்பு! அப்படிப்பட்டவர் சினிமாவில் நடித்து பெரும் புகழ் பெற்றார்.
    நூறு படங்களுக்கு மேல் நடித்தவர் விஜயகுமாரி. பள்ளியில் படிக்கும்போது, சினிமா என்றாலே அவருக்கு எட்டிக்காய் கசப்பு! அப்படிப்பட்டவர் சினிமாவில் நடித்து பெரும் புகழ் பெற்றார்.

    விஜயகுமாரியின் சொந்த ஊர் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம். தந்தை ராமசாமி கவுண்டர். தாயார் தங்கலட்சுமி அம்மாள்.

    விஜயகுமாரிக்கு ஒரு அக்காள், ஒரு தங்கை.

    விஜயகுமாரி மிகவும் அமைதியானவர். யாரிடமும் அதிகம் பேசமாட்டார். பள்ளிக்கூடத்தில் நடைபெறும் விளையாட்டுப்போட்டி, பாட்டுப்போட்டி, நடனப்போட்டி எதிலும் கலந்து கொள்வதில்லை. தான் உண்டு தன் படிப்பு உண்டு என்று இருப்பார்.

    ஒரு சமயம், விஜயகுமாரியை பள்ளி ஆசிரியை அழைத்து, "இந்த வருடம் பள்ளி ஆண்டு விழாவில் நீ கட்டாயம் நடனம் ஆடவேண்டும். தட்டிக் கழிக்க எந்தக் காரணமும் சொல்லக்கூடாது'' என்று கண்டிப்புடன் கூறிவிட்டார்.

    ஆட மறுத்தால், ஆசிரியை தன்னை நிச்சயம் பெயிலாக்கி விடுவார் என்று விஜயகுமாரி பயந்தார். என்றாலும், எந்த நடனத்தை எப்படி ஆடுவது என்று புரியவில்லை. இதுபற்றி ஆசிரியையிடம் கூற, "வேதாள உலகம்'' படத்தில் பத்மினி ஆடிய "வாசமுள்ள பூப்பறிப்பேனே'' என்ற நடனத்தை ஆட பயிற்சி அளித்தார்கள்.

    பள்ளி ஆண்டு விழாவில் பயந்து கொண்டேதான் ஆடினார், விஜயகுமாரி. ஆனால் நடனம் சிறப்பாக இருந்ததாகக் கூறி, பரிசும் வழங்கினார்கள்!

    ஒரு வாரம் கழிந்தது. விஜயகுமாரியை ஆசிரியை அழைத்தார். "நீ அழகாக இருக்கிறாய். ஆகவே சினிமாவில் நடிக்க முயற்சி செய். சிறந்த நடிகையாக வருவாய்'' என்றார்.

    அவர் மீது விஜயகுமாரிக்கு ரொம்பகோபம். காரணம், அவருக்கு சினிமா என்றாலே பிடிக்காது! அம்மா சினிமாவுக்கு அழைத்துப் போனால், அழுதுகொண்டே போவார். படம் பார்க்கும்போது, தூங்கி விடுவார்!

    ஆனால் ஆசிரியை விட்டபாடில்லை. `சினிமாவில் நடி. வாழ்க்கையில் முன்னேறலாம்' என்று உபதேசித்தபடி இருந்தார்.

    இதனால் மெல்ல மெல்ல, விஜயகுமாரி மனதில் சினிமா ஆசை துளிர்விட ஆரம்பித்தது.

    ஒரு நாள் தன் மனதைத் திடப்படுத்திக் கொண்டு, "அப்பா! நான் சினிமாவில் நடிக்க வேண்டும்!'' என்று தந்தையிடம் கூறினார். அவ்வளவுதான். அப்பா `பளார்' என்று விட்ட அறையில், விஜயகுமாரியின் கன்னம் வீங்கிவிட்டது!

    "உன்னை பள்ளியில் ஆடவிட்டதே தவறு. சினிமா கேட்கிறதா, சினிமா! இனிமேல் நீ பள்ளிக்குப் போகவேண்டாம்!'' என்று கோபத்துடன்

    கூறினார்.அன்று விஜயகுமாரி சாப்பிடவில்லை. அழுதுகொண்டே இருந்தார். காய்ச்சல் வேறு வந்துவிட்டது.

    அதை பார்த்துவிட்டு அவர் அம்மாவும் அழ ஆரம்பித்துவிட்டார்.

    அந்தக் காலத்தில் சில குடும்பங்களில் யாருக்காவது உடல் நலம் இல்லை என்றால், டாக்டரைக் கூப்பிடுவதற்குப் பதில் ஜோதிடரைக் கூப்பிடுவார்கள்!

    விஜயகுமாரியின் அப்பா ஒரு ஜோதிடரை அழைத்தார். விஜயகுமாரியின் ஜாதகத்தை அவரிடம் கொடுத்து, "சினிமாவில் நடிக்க வேண்டும் என்று அடம் பிடிக்கிறாள்'' என்ன செய்யலாம் என்று ஜாதகத்தைப் பார்த்து சொல்லுங்கள்'' என்றார்.

    ஜாதகத்தை ஆராய்ந்த ஜோசியர், "உங்கள் மகள் நிச்சயமாக சினிமாவில் நடிப்பாள். பேரும் புகழும் பெறுவாள்'' என்று அடித்துச்
    சொன்னார்.

    அந்த சமயத்தில் பத்திரிகைகளில் ஏவி.எம். நிறுவனத்தின் விளம்பரம் ஒன்று பிரசுரமாகியிருந்தது. "புது முகங்கள் தேவை. போட்டோவுடன் விண்ணப்பிக்கவும்'' என்று குறிப்பிடப்பட்டிருந்த அந்த விளம்பரத்தை, பெற்றோரிடம் காண்பித்தார், விஜயகுமாரி.

    அப்பா, அம்மா இருவரும் கலந்து பேசி, மகள் விருப்பத்துக்கு தடை போடவேண்டாம் என்று முடிவு செய்தார்கள். விஜயகுமாரியை போட்டோ ஸ்டூடியோவுக்கு அழைத்துச் சென்று சில படங்கள் எடுத்து, ஏவி.எம். நிறுவனத்துக்கு தபாலில் அனுப்பி வைத்தார்கள்.

    இதன் பிறகு நடந்தது பற்றி விஜயகுமாரி கூறுகிறார்:-

    "நான் தீவிர அம்மன் பக்தை. எங்கள் ஊர் மேட்டுப்பாளையத்தில் இருக்கும் வனபத்திரகாளி அம்மனையும், எங்கள் குல தெய்வம் முருகனையும் தினம் தினம் வேண்டிக் கொண்டிருந்தேன், ஏவி.எம். ஸ்டூடியோவில் இருந்து கடிதம் வரவேண்டும் என்று! எப்போதும் வாசலிலேயே உட்கார்ந்து கொண்டு, ஒவ்வொரு நாளும் தபால் காரரை எதிர்பார்த்துக் கொண்டிருப்பேன்.

    ஒருநாள் ஏவி.எம்.மிலிருந்து கடிதம் வந்தது. அதில் எங்களை ஏவி.எம்.மிற்கு வரும்படி அழைத்திருந்தார்கள். எனக்கு அளவில்லாத மகிழ்ச்சி.

    நானும், என் பெற்றோரும் சென்னைக்கு புறப்பட்டுச் சென்றோம். அங்கிருந்து ஏவி.எம். ஸ்டூடியோவிற்கு சென்றோம்.

    அங்கு மானேஜர் வாசுமேனன் அவர்களைப் போய்ப் பார்த்தோம். வாசுமேனன் என்னைப் பார்த்ததும், "போட்டோவில் பெரிய பெண் போல் தெரிகிறாய். நேரில் சின்னப் பெண்ணாக இருக்கிறாயே!'' என்று சிரித்துக் கொண்டே கூறினார்.

    பிறகு, "உனக்கு டான்ஸ் ஆடத்தெரியுமா?'' என்று கேட்டார். எனக்கு தெரிந்த அந்த ஒரே நடனம் - பள்ளியில் ஆடியதுதான். அந்த நடனத்தை நானே பாடிக்கொண்டு ஆடினேன்.

    "சரி. ஊருக்குப் போங்கள். நாங்கள் மறுபடியும் கடிதம் போடுகிறோம்'' என்று வாசுமேனன் கூறினார்.

    எங்களுக்கு ஒரே குழப்பம். `என்ன நடக்குமோ' என்ற கவலையுடன் ஊருக்குத் திரும்பினோம். எனக்கு வாய்ப்பு கிடைக்காது என்று என் பெற்றோர்கள் நினைத்தனர். "இனிமேல் ஏவி.எம்.மிலிருந்து கூப்பிட மாட்டார்கள். நீ பள்ளிக்குப் போய் படி. ஒருவேளை ஏவி.எம்.மிலிருந்து கடிதம் வந்தால் நாம் போவோம்'' என்று சமாதானம் சொல்வது போல சொல்லி, என்னை பள்ளிக்கு அனுப்பி வைத்தார்கள்.''

    இவ்வாறு விஜயகுமாரி கூறினார். 
    ஏராளமான படங்களுக்கு வசனம் எழுதிய தூயவன், பிறகு பட அதிபராக மாறி, "அன்புள்ள ரஜினிகாந்த்'', "வைதேகி காத்திருந்தாள்'' உள்பட சில படங்களை தயாரித்தார்.
    ஏராளமான படங்களுக்கு வசனம் எழுதிய தூயவன், பிறகு பட அதிபராக மாறி, "அன்புள்ள ரஜினிகாந்த்'', "வைதேகி காத்திருந்தாள்'' உள்பட சில படங்களை தயாரித்தார்.

    தூயவனுக்கு கல்யாணப் பேச்சு நடந்து கொண்டிருந்தபோதே, இரண்டு பெரிய படக் கம்பெனிகள் அவரை அணுகி, "பால்குடம்'' கதையை படமாக்கும் உரிமையைக் கேட்டன. பெரிய தொகை தரவும் முன்வந்தன.

    அதே சமயம், "பால்குடம்'' கதையை படமாக்க வேண்டும் என்ற எண்ணம், அதை நாடகமாக நடத்தி வந்த ஏவி.எம்.ராஜனுக்கும் இருந்தது. எனவே, பெரிய தொகைகளுக்கு ஆசைப்படாமல், தன் கதையை நாடகமாக அரங்கேற்றிய நன்றிக்கு அறிகுறியாக, படமாக்கும் உரிமையை ஏவி.எம்.ராஜனுக்கே தூயவன் தந்தார்.

    பால்குடத்தை ஏவி.எம்.ராஜன் படமாகத் தயாரித்தபோது, வசனம் எழுதும் வாய்ப்பை தூயவனுக்கே வழங்கினார். படத்தில் ஏவி.எம்.ராஜனும், புஷ்பலதாவும் நடித்தனர். இந்தப்படம் 50 நாட்கள் ஓடியது.

    தூயவன் கதை எழுதுவதில் மட்டும் அல்ல, வசனம் எழுதுவதிலும் கெட்டிக்காரர் என்பதை பட உலகத்தினர் தெரிந்து கொண்டனர். ஏராளமான பட வாய்ப்புகள் அவரைத் தேடி வந்தன. ஜெய்சங்கர் - ஜெயபாரதி நடித்த "புதிய வாழ்க்கை'', சிவாஜிகணேசன் நடித்த "மனிதருள் மாணிக்கம்'', "ஜெயலலிதா- முத்துராமன் நடித்த "திக்குத் தெரியாத காட்டில்'' ஆகிய படங்களுக்கு வசனம் எழுதினார்.

    அந்தக் காலக்கட்டத்தில், ஜேம்ஸ்பாண்ட் பாணி படங்கள் பலவற்றில் ஜெய்சங்கர் நடித்தார். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ஜெய்சங்கர் படங்கள் வந்து கொண்டிருந்தன. அவர் படங்களுக்கு தூயவன் வசனம் எழுதினார். "முடிசூடா மன்னன்'', "கல்யாணமாம் கல்யாணம்'', "எங்களுக்கும் காலம் வரும்'', "கிழக்கும் மேற்கும் சந்திக்கின்றன'' ஆகியவை, அவற்றில் சில.

    தன் படங்களுக்கு திரைக்கதை-வசனம் எழுதுமாறு தூயவனுக்கு சாண்டோ சின்னப்பா தேவர் அழைப்பு அனுப்பினார்.

    அதைத்தொடர்ந்து "கோமாதா என் குலமாதா'', "மாணவன்'', "ஆட்டுக்கார அலமேலு'', "அன்புக்கு நான் அடிமை'', கமலஹாசன் நடித்த "தாயில்லாமல் நான் இல்லை'', ரஜினிகாந்த் நடித்த "தாய் மீது சத்தியம்'', "தாய்வீடு'', "அன்னை ஓர் ஆலயம்'' முதலான படங்களுக்கு தூயவன் வசனம் எழுதினார். இந்தப் படங்கள் 100 நாட்களுக்கு மேல் ஓடின.

    முக்தா பிலிம்ஸ், மறைந்த வேணு செட்டியாரின் ஆனந்தி பிலிம்ஸ் ஆகியவற்றுக்காக பல படங்களுக்கு வசனம் எழுதினார். முக்தா சீனிவாசன் டைரக்ஷனில் சிவாஜிகணேசன் நடித்த "தவப்புதல்வன்'' படம் 100 நாட்கள் ஓடி வசன கர்த்தா தூயவனுக்கு புகழ் தேடித்தந்தது. ரஜினிகாந்த் நடித்த "பொல்லாதவன்'' படத்துக்கும் தூயவன் வசனம் எழுதினார்.

    ஜாவர் சீதாராமன் எழுதிய "பணம், பெண், பாசம்'' என்ற கதையை நடிகர் முத்துராமன் படமாகத் தயாரித்தார். அந்தப் படத்துக்கு தூயவன் வசனம் எழுதினார்.

    நடிகர் முத்துராமன், தூயவனின் நெருங்கிய நண்பர். அவர், படப்பிடிப்புக்காக ஊட்டிக்குச் சென்றிருந்தபோது, யாரும் எதிர்பாராத வகையில் திடீரென்று மரணம் அடைந்தார்.

    இதேபோல், தூயவனுக்கு ஆதரவு அளித்து வந்த சின்னப்பா தேவரும் திடீர் என்று காலமானார். இந்த இரு மரணங்களும், தூயவனை வெகுவாக பாதித்தன.

    இதன் பிறகு, வசனம் எழுதுவதைக் குறைத்துக் கொண்டு, படத்தயாரிப்பில் ஈடுபடத் தீர்மானித்தார்.

    நண்பர் சக்திவேலுடன் இணைந்து "எஸ்.டி.கம்பைன்ஸ்'' என்ற பட நிறுவனத்தை தொடங்கி, "விடியும் வரை காத்திரு'' என்ற படத்தை தயாரித்தார். இதன் கதை, திரைக்கதை, டைரக்ஷன் ஆகிய பொறுப்புகளை கே.பாக்யராஜ் ஏற்றதுடன் கதாநாயகனாகவும்

    நடித்தார்.நகைச்சுவை கலந்த கதாநாயகனாக பாக்யராஜ் முத்திரை பதித்து வந்த காலக்கட்டத்தில், "ஆன்டி ஹீரோ''வாக - அதாவது வில்லன் மாதிரியான கதாபாத்திரத்தில் "விடியும் வரை காத்திரு'' படத்தில் நடித்தார். அதை ரசிகர்கள் ஏற்காததால், படம் சுமாராகவே

    ஓடியது.கார்த்திக் கதாநாயகனாக நடிக்க "கேள்வியும் நானே பதிலும் நானே'' படத்தை தூயவன் தயாரித்தார். இந்தப்படம் சரியாக ஓடவில்லை.

    எம்.ஜி.ஆர். நடிகராக இருந்த காலக்கட்டத்தில் அவருக்காகவே ஒரு கதையைத் தயாரித்து வைத்திருந்தார், தூயவன். அந்தக் கதை எம்.ஜி.ஆருக்கும் பிடித்திருந்தது. அவர் தேர்தலில் வென்று முதல்-அமைச்சர் ஆகிவிட்டதால், அதன் பிறகு நடிப்பதில்லை என்று முடிவு செய்து விட்டார்.

    அந்தக் கதையை, ரஜினிகாந்துக்கு ஏற்றவாறு மாறுதல்கள் செய்து அவரிடம் சொன்னார் தூயவன். கதை அவருக்கு பிடித்துப்போயிற்று. "படம் எடுங்கள். நான் கால்ஷீட் தருகிறேன்'' என்றார்.

    அந்தப்படம்தான் "அன்புள்ள ரஜினிகாந்த்.'' எஸ்.டி.கம்பைன்ஸ் பேனரில் தூயவனும், துர்க்கா தமிழ்மணியும் தயாரித்தனர். தூயவன் வசனம் எழுதினார். நட்ராஜ் டைரக்ட் செய்தார்.

    1984 ஆகஸ்டு 2-ல் வெளியான இப்படம் பெரும் வெற்றி பெற்றது.

    இதுகுறித்து, தூயவன் மனைவி ஜெய்புன்னிசா கூறியதாவது:-

    "ரஜினி சார் நடித்த "தாய்வீடு'', "அன்னை ஓர் ஆலயம்'', "அன்புக்கு நான் அடிமை'', "ரங்கா'' முதலிய படங்களுக்கு என் கணவர் வசனம் எழுதினார். அப்போது இருவரும் நட்புடன் பழகினர். என் கணவர் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, ஒரு படம் பண்ணிக்கொடுக்க சூப்பர் ஸ்டார் சம்மதித்தார். அப்போது என் கணவர் சொன்ன கதைதான் "அன்புள்ள ரஜினிகாந்த்.''

    கதை ரஜினிக்கு பிடித்து விட்டது. பண விஷயம் பற்றி எந்த ஒரு நிபந்தனையும் விதிக்காமல் உடனே கால்ஷீட் கொடுத்தார்.

    படம் தயாரிக்க பணம் வேண்டுமே என்ற கேள்வி எழுந்தபோது, ஜி.வி.சி.ஆர்.நடராஜன் என்ற பைனான்சியரிடம் என் கணவரை பட அதிபர் கலைஞானம் அறிமுகம் செய்து வைத்தார்.

    உடனடியாக நடராஜன், பட உரிமையை வாங்கிக்கொண்டு ரூ.25 லட்சம் கொடுத்தார். "கணபதி வேல் முருகன் கம்பைன்ஸ்'' என்ற பேனரில், "அன்புள்ள ரஜினிகாந்த்'' தயாராகியது. ரஜினிகாந்த், அம்பிகா ஆகியோருடன், குழந்தை நட்சத்திரமாக மீனா நடித்தார். இப்படம் நூறு நாட்கள் ஓடியது.

    சூப்பர் ஸ்டார் ரஜினி சார் செய்த உதவியை எங்கள் குடும்பம் என்றும் மறவாது.''

    இவ்வாறு ஜெய்புன்னிசா கூறினார்.

    ஆர்.சுந்தரராஜன் டைரக்ஷனில் தூயவன் தயாரித்த "வைதேகி காத்திருந்தாள்'' அற்புதமான படம். இதில், அடிதடி இல்லாத குணச்சித்திர வேடத்தில் விஜயகாந்த் வாழ்ந்து காட்டினார்.

    விதவைப் பெண்ணாக நடித்த ரேவதி, "அழகு மலராட...'' நடனக் காட்சியில் மெய்சிலிர்க்கச் செய்தார்.

    1984 அக்டோபர் 23-ந்தேதி வெளியான இப்படம் நூறு நாட்களுக்கு மேல் ஓடியது.

    விஜயகாந்த் - ராதிகா நடித்த "நானே ராஜா நானே மந்திரி'', கவுண்டமணி கதாநாயகனாக நடித்த "தலையாட்டி பொம்மைகள்'' ஆகிய படங்களும் தூயவன் தயாரித்தவை.

    தூயவன் கடைசியாகத் தயாரித்த படம் "உள்ளம் கவர்ந்த கள்வன்.'' இந்தியில் வெளியான "சிட்சோர்'' படத்தின் உரிமையைப் பெற்று, அக்கதையை தமிழில் தயாரித்தார்.

    படம் முடிவடையும் தருணத்தில், நாகப்பட்டினத்துக்கு சென்றிருந்தபோது, 1987 ஜுலை 11-ந்தேதி மாரடைப்பு ஏற்பட்டு, திடீரெனக் காலமானார்.

    அப்போது அவருக்கு வயது 41 தான்.
    தூயவன்-ஜெய்புன்னிசா தம்பதிகளுக்கு பாபு தூயவன் (இக்பால்) என்ற மகனும், யாஸ்மின் என்ற மகளும் உள்ளனர். இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. பாபு தூயவன் "பி.காம்'' படித்தபின் திரைப்படக் கல்லூரியில் பயின்று பட்டம் பெற்றவர்.

    டெலிவிஷன் சீரியல்களை தயாரிப்பதில் புகழ் பெற்றவர். "அபர்ணா'' அவர் உருவாக்கிய டெலிவிஷன் சீரியல்களில் ஒன்று.

    ஜெய்புன்னிசா தொடர்ந்து கதைகள் எழுதி வருகிறார். 
    ×