search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    கடினமான பாடலுக்கு பிரமாதமாக வாயசைத்தார்- சிவாஜிகணேசனுக்கு இளையராஜா புகழாரம்
    X

    கடினமான பாடலுக்கு பிரமாதமாக வாயசைத்தார்- சிவாஜிகணேசனுக்கு இளையராஜா புகழாரம்

    "கவரிமான்'' படத்தில், கீர்த்தனை ஒன்றுக்கு புதிய முறையில் இசை அமைத்தார், இளையராஜா. பாடுவதற்கு கடினமான அந்தப்பாடலுக்கு மிகப் பொருத்தமாக வாயசைத்தார், சிவாஜிகணேசன். அதைக்கண்டு இளையராஜா வியந்து போனார்.
    இசைப்பயணம் பற்றி இளையராஜா கூறியதாவது:-

    "இளமை ஊஞ்சலாடுகிறது'' படத்தைத் தொடர்ந்து மீண்டும் டைரக்டர் ஸ்ரீதரின் "அழகே உன்னை ஆராதிக்கிறேன்'' படத்துக்கும் இசை வாய்ப்பு வந்தது. இந்தப் படமும் ஹிட்டாகி பாடல்களும் ஹிட்டானதில் மகிழ்ச்சி.

    எஸ்.பி.முத்துராமன் இயக்கிய "கடவுள் அமைத்த மேடை''படத்தில்தான், ஒரு பரிசோதனை முயற்சி செய்யவேண்டும் என்று தோன்றியது.

    அதாவது கர்நாடக சங்கீத ராகங்களை எடுத்துக்கொண்டு, அதன் ஆழம் குறையாமல் கிராமியப் பாணியின் சந்தங்களை மெட் டாக அமைத்து, பாடும்போது அதன் இரண்டு வேறுபட்ட தனிப்பட்ட தன்மைகளை இணைத்துப் பாடவைக்கலாமே என்று தோன்றியது.

    அதை உடனே செய்யலாம் என்ற எண்ணத்தில் டைரக்டர் எஸ்.பி.முத்துராமன் சொன்ன ஒரு டூயட்டிற்கு ஹம்சத்வனி ராகத்தில் கிராமியத்தனமான மெட்டமைத்தேன். பாடலை வாலி எழுதினார். "மயிலே மயிலே உன் தோகை எங்கே?'' என்ற அந்தப் பாடல்தான் இந்தப் பரிசோதனை முயற்சியில் உருவான பாடல்.

    எஸ்.பி.பாலசுப்பிரமணியமும், ஜென்சியும் இந்தப் பாடலை பாடியிருந்தார்கள்.

    இதே படத்தில்தான், பி.பி.சீனிவாசும் முதன் முதலாக என் இசைக்கு பாடினார். அதுவும் ஒரு சிறிய கஜல் போன்ற பாடல். "தென்றலே நீ பேசு'' என்பது அதன் பல்லவி.

    பஞ்சு சார் கமல், ரஜினி இரண்டு பேரையும் தனித்தனியாக போட்டு படம் எடுக்க முடிவு செய்தார். அப்போது கமல் - ரஜினி இருவரும் சேர்ந்து நடிப்பதில்லை என்று முடிவெடுத்திருந்த நேரம்.

    கமலை வைத்து "கல்யாணராமன்'', ரஜினியை வைத்து "ஆறில் இருந்து அறுபதுவரை'' ஆகிய படங்களை எடுத்தார்.

    இரண்டுமே வெற்றி பெற்றன.

    கல்யாணராமன் படத்தில் `ஆஹா வந்துருச்சு' பாடலும், அதற்கு கமல் ஆடிய வித்தியாசமான நடனமும் ரசிகர்களை பெருமளவில் கவர்ந்தன.

    பஞ்சு சார் அடுத்து "கவரிமான்'' என்ற படத்தில் நடிக்க சிவாஜியை ஒப்பந்தம் செய்தார். நடிகர் திலகத்தின் பாத்திரப் படைப்பை ரசிகர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. (மனைவி சோரம் போகிற காட்சியை பார்க்கும் கணவனின் கேரக்டர்)

    என் இசையில் முதன் முதலில் ஒரு தியாகராஜ கீர்த்தனை இடம் பெற்றது இந்தப் படத்தில்தான். "ப்ரோவ பாரமா?'' என்ற கீர்த்தனையை ஜேசுதாஸ் பாட, டி.வி.கிருஷ்ணன் அவர்களின் வயலினும், டி.வி.கோபாலகிருஷ்ணனின் மிருதங்கமும் இணைந்தன.

    சிவாஜி இந்தப் பாட்டுக்கு வாயசைத்ததை கண்டு வியந்து போனேன்.

    ஆரம்பத்தில் ஜேசுதாஸ் ராகம்பாடி, தாளம் ஏதும் இல்லாமல் திடீரென்று `ப்ரோவபாரமா' என்று தொடங்குமாறு பதிவு ஆகியிருந்தது.

    ராகம்பாடி, `ப்ரோவ பாரமா' தொடங்குவதற்கு இடையில் தாளத்தில் ஏதாவது வாசித்திருந்தால் நடிப்பவர்களுக்கு பாடல் தொடங்கும் இடம் சரியாகத் தெரிந்து வாயசைக்கலாம்.

    ராகம்பாட, வெறும் தம்புரா மட்டும் போய்க்கொண்டிருக்க, அது எவ்வளவு நேரம் போகிறது என்று கண்டுபிடித்து, பாடல் ஜேசுதாஸ் குரலில் வரும் அந்த நொடியை எப்படியோ கண்டுபிடித்து சரியாக வாயசைத்தார்.

    இதைப் பாராட்டி, அண்ணன் சிவாஜியிடம், "எப்படிச் செய்கிறீர்கள்?'' என்று கேட்டேன்.

    "என்னை என்னடா நினைச்சிட்டே? சும்மா ஏனோதானோன்னு சினிமாவுக்கு வந்தவன்னு நினைச்சியா? இதெல்லாம் முடியாட்டா ஏண்டா ஒருத்தன் நடிகனா இருக்கணும்?'' என்று கேட்டார் சிவாஜி.

    "நடிகர் திலகம்'' என்று சும்மாவா பட்டம் கொடுத்தார்கள்?

    "லட்சுமி'' படத்தில் கிராமிய சந்தத்தை வேகமாக அமைத்துப் பாடிய பாடல் "தென்ன மரத்துல தென்றலடிக்குது நந்தவனக் கிளியே.''

    நானும் பி.சுசீலாவும் பாடினோம். இந்த வகையில் இது சுசீலா அவர்களுடன் நான் சேர்ந்து பாடிய முதல் பாடல்.

    பண்ணைபுரத்தில் உள்ள எங்கள் வீட்டில், தம்புராவுடன் சுசீலா இருக்கும் படத்தை பிரேம் போட்டு நான் மாட்டி வைத்திருந்தது, இந்தப் பாடலை அவருடன் பாடும்போது நினைவுக்கு வந்தது.

    கோவை செழியன் தயாரிப்பில் வந்த "முதல் இரவு'' படத்தில், "மஞ்சள் நிலாவுக்கு இன்று முதல் இரவு'' என்ற பாடல் பிரபலமானது. டைரக்டர் ஸ்ரீதர் இந்தப் பாடலை கேட்டு என்னை மிகவும் பாராட்டினார்.

    பாரதிராஜா டைரக்ஷனில் "நிறம் மாறாத பூக்கள்'' படத்துக்கு பாடல் பதிவுடன் பூஜை.

    ஒரு ஓட்டலில் கதையை பாக்யராஜை சொல்லச் சொன்னார், பாரதி. கோர்வையாக,அதே நேரம் நகைச்சுவை கலந்து நன்றா கவே கதை சொன்ன பாக்யராஜை பாராட்டினேன். பாரதியும், "அதனால்தான் அவனையே சொல்லச்சொன் னேன். நல்ல திறமைசாலி'' என்று பாராட்டினார்.

    இடைவேளைக்குப்பிறகு சில மாற்றங்கள் இருக்கலாம்.

    பூஜைக்கு இரு நாயகியரும் கதாநாயகனும் பாடுகிற மாதிரி ஒரு பாடலை எடுத்துக் கொள்ளலாம் என்பதை சொல்லிவிட்டார்கள்.

    தயாரிப்பாளர் வீட்டிலேயே கம்போசிங் நடந்தது. அப்போது அவர் தயாரிப்பில் வெளிவந்த "வருவான் வடிவேலன்'' படம் நன்றாக ஓடிக்கொண்டிருந்தது.

    கவியரசர் கண்ணதாசன் அதுவரை காலை 10 மணிக்கு முன்னதாக பாட்டெழுத வந்தது கிடையாது. எனக்கு 9 மணிக்கு பின்னணி இசை வேலை இருந்ததால் கவியரசர் முதன் முதலாக எனக்காக காலை 71/2 மணிக்கு பாட்டெழுத வந்துவிட்டார்.

    கதையைச் சொல்லி டிïனை வாசித்த உடனே,

    "ஆயிரம் மலர்களே மலருங்கள்!

    அமுத கீதம் பாடுங்கள் பாடுங்கள்''

    என்று எழுதினார். பாரதி உள்பட அனைவருக்கும் பிடித்திருந்தது. பாரதிராஜா இயக்கிய இந்த நான்காவது படமும் நன்றாக ஓடியது.

    "ஊர்வசி நீனே நன்ன ப்ரேயசி'' என்ற கன்னடப்படம் தெலுங்கிலுமாக இரு மொழிப்படமாக வந்தது. இதன் மலையாளம் டைரக்டர் ஐ.வி.சசி இயக்கிய "பகலில் ஓர் இரவு'' படம். ஸ்ரீதேவி நடித்திருந்தார்.

    பாம்குரோவ் ஓட்டலில் கம்போசிங் நடந்தது கவியரசர் "இளமையெனும் பூங்காற்று'' என்று எழுதினார்.

    இங்கே ஒன்றைச் சொல்லவேண்டும். கவியரசர் - எம்.எஸ்.விஸ்வநாதன் இணைந்து செய்த பாடல்கள் எல்லாம் மிகவும் நல்ல லட்சண அமைப்புடன் இருக்கும்.

    முதல் வரி தொடங்க, அதே சந்தத்தில் குறைந்தது நான்கு அடிகளாவது வரும்.

    உதாரணமாக,

    "எட்டடுக்கு மாளிகையில்

    ஏற்றி வைத்த என் தலைவன்

    விட்டு விட்டுச் சென்றானடி

    வேறு பட்டு நின்றானடி''

    "கண்ணன் என்னும் மன்னன்

    பேரைச் சொல்லச் சொல்ல

    கல்லும் முள்ளும் பூவாய்

    மாறும் மெல்ல மெல்ல''

    - இப்படி எந்தப் பாடலை எடுத்தாலும் ஒரு ஒத்த அழகுடன் இருக்கும்.

    இதை நான் மாற்ற எண்ணினேன்

    ஒரு அடிபோல் இன்னொரு அடி வராமல் போனாலும், அழகு கெடாமல் இருக்க வேண்டும் என்றும், `இங்கே நான் நிறுத்த வேண்டும் - இங்கே நீட்ட வேண்டும்' என்ற வரைமுறைகளைத் தாண்ட வேண்டுமென்றும் என்னுடைய மெட்டுக்களை அமைத்தேன். அதிலும் ஒரு அழகு இழையோடும் விதமாக கவியரசர் எழுதிவிட்டார்.

    "இளமை எனும் பூங்காற்று பாடியது ஓர் பாட்டு

    ஒரு பொழுதில் ஓர் ஆசை சுகம் சுகம் அதிலே ஒரே சுகம்

    ஒரே வீணை ஒரே நாதம்''

    இசையோடு இந்த வரிகள் கொஞ்சிக் குழையும் என்பது அவருக்கும் தெரிந்தே இருந்தது.

    இதில் இன்னும் ஒரு பாடல் பரிசோதனை முயற்சியாக, "தாம்த தீம்த'' என்று தொடங்கும் பாடலில், ஆண் - பெண் கோரசை வைத்தே, இசைக்குழு இல்லாமல், பாடலுக்கு இடையில் வரும் இசையை கோரசே இசைப்பது போல அமைத்திருந்தேன்.

    நன்றாக இருந்தாலும் வெளியே தெரியாமல் போன காரணம் தெரியவில்லை.

    `பஞ்ச பூதாலு' என்ற தெலுங்குப்படம் தமிழில் சிவாஜி நடிக்க "பட்டாக்கத்தி பைரவன்' ஆனது. இந்தப் படத்தை நினைத்தாலே "எங்கெங்கோ செல்லும் என் எண்ணங்கள் பாடல்தான் மனதில் ஓடிவரும்.

    என் முதல் படமான "அன்னக்கிளி''யின் கதையை எழுதிய செல்வராஜ், முதன் முதலில் "பொண்ணு ஊருக்குப் புதுசு'' என்ற படத்தை டைரக்ட் செய்தார். இதில் எல்லாப் பாடல்களுமே என்றைக்கும் கேட்க சுகமானவை.

    "ஓரம்போ''

    "சாமக்கோழி கூவுதம்மா''

    "ஒனக்கெனத்தானே இந்நேரமா''

    - போன்ற படத்தின் எல்லாப் பாடல்களையும் அமர்தான் எழுதினான்.
    Next Story
    ×