என் மலர்tooltip icon

    சினி வரலாறு

    கண்ணதாசனிடம் வாலியை வசனகர்த்தா மா.லட்சுமணன் அழைத்துச்சென்று அறிமுகப்படுத்தினார்.
    கண்ணதாசனிடம் வாலியை வசனகர்த்தா மா.லட்சுமணன் அழைத்துச்சென்று அறிமுகப்படுத்தினார்.

    "தெரியுமே! திருச்சி வானொலியில் நாடகம் எல்லாம் எழுதிக் கொண்டிருந்த வாலிதானே நீங்கள்?'' என்று கேட்டார், கண்ணதாசன்.

    அவருடைய ஞாபகசக்தியை எண்ணி வாலி வியந்தார். இருவருக்கும் காபி கொண்டுவரச்சொல்லி தன் கையாலேயே கொடுத்தார், கண்ணதாசன்.

    "நான் ஒரு தீவிர ஆஸ்திகன்... நீங்களும் இப்படி ஆஸ்திகனா மாறிவிட்டதில் எனக்கு ரொம்ப சந்தோஷம்'' என்று வாலி கூற, "நான் எப்பவுமே ஆஸ்திகன்தான். ஜுபிடர் பிக்சர்சில் இருக்கிறபோது, விபூதி குங்குமத்தோடு இருப்பேன்'' என்றார், கண்ணதாசன்.

    வாலி, கண்ணதாசனைப் பற்றி எழுதிக் கொண்டு போயிருந்த ஒரு கவிதையைப் படித்தார்.

    "காட்டுக்குள் தேனீக்கள் கூட்டுக்குள் வைத்ததை, பாட்டுக்குள் வைத்தவனே!'' என்று தொடங்கும் அந்தப் பாடலை வாலி பாடிக்காட்ட, கண்ணதாசன் மகிழ்ந்தார்.

    "நாம் அடிக்கடி சந்திக்கலாம்...'' என்று கண்ணதாசன் கூறினார்.

    ஆனால் காலம், கண்ணதாசனையும், வாலியையும் எதிர் எதிர் அணியில் நிறுத்தி தொழில் புரிய வைத்தது.

    இந்தியில் மிகப்பெரிய வெற்றிப்படமான "தீதார்'' படத்தின் கதையை "நீங்காத நினைவு'' என்ற பெயரில் பத்மா பிலிம்சார் படமாக எடுத்தார்கள். இந்தப் படத்துக்கு இசை அமைப்பாளராக கே.வி.மகாதேவனும், இயக்குனராக தாதாமிராசியும் பணியாற்றினர்.

    இந்தப் படத்தின் அதிபர் சுலைமானிடம் வாலியை வசனகர்த்தா `மா.ரா.'' அறிமுகப்படுத்தினார். சுலைமானுக்கு வாலியின் பாடல் பிடித்திருந்தது.

    அதைத்தொடர்ந்து, மகாதேவனை வாலி சந்தித்தார். அந்தக் காலத்தில், எந்த இசை அமைப்பாளரும் ஒரு புதிய பாடல் ஆசிரியரை அவ்வளவு சுலபமாக ஏற்றுக் கொள்வதில்லை. அதற்கேற்ப, வாலியிடம் மகாதேவன் இறுக்கமாகவே இருந்தார்.

    வாலியை அவர் உதறவும் இல்லை; உற்சாகப்படுத்தவும் இல்லை. ஆயினும், பட அதிபர் சுலைமானும், வசன கர்த்தா "மா.ரா.''வும் வாலிக்கு பக்க பலமாக இருந்ததால், "நீங்காத நினைவு'' படத்தில் வாலியின் பாடல்கள் இடம் பெற்றன.

    (ஆரம்பத்தில் வாலியை முழு மனதுடன் மகாதேவன் வரவேற்கவில்லை என்றாலும், பிற்காலத்தில் வாலியின் நூற்றுக்கணக்கான பாடல்களுக்கு இசை அமைத்தார்.)

    இந்தக் காலக்கட்டத்தில், வாலியின் வாழ்க்கையில் எதிர்பாராத பெரிய திருப்பம் ஏற்பட்டது.

    முக்தா பிலிம்சார் அப்போது "இதயத்தில் நீ'' என்ற படத்தைத் தயாரித்துக் கொண்டிருந்தார்கள். முக்தா சீனிவாசனிடம் "நீங்காத நினைவு'' படத்தயாரிப்பாளர் சுலைமானும், வசனகர்த்தா "மா.ரா.''வும் வாலியைப் பற்றி கூறினார்கள். இதன் விளைவாக, வாலிக்கு அப்படத்தில் பாட்டு எழுதும் வாய்ப்பு கிடைத்தது.

    அதன் பிறகு நடந்தது பற்றி வாலி கூறுகிறார்:

    "என் ஆனந்தத்திற்கு எல்லையேயில்லை. ஏனெனில் அந்தப் படத்தின் இசையமைப்பாளர்கள் விஸ்வநாதன் - ராமமூர்த்தி. இவர்களிடம் பாட்டெழுதும் வாய்ப்புக்காகத்தானே நான் இத்தனை காலம் தவமிருந்தேன்!

    1963 ஜனவரி மாதம் முதல் வாரத்தில் ஒரு மத்தியான வேளையில் முக்தா பிலிம்ஸ் மாடியிலுள்ள சின்ன அறையில் எம்.எஸ்.விஸ்வநாதனுக்கும், ராமமூர்த்திக்கும் நான் அறிமுகம் செய்து வைக்கப்பட்டேன்.

    நான் ஏற்கனவே எம்.ஜி.ஆர். படத்திலும், எஸ்.எஸ்.ஆர். படத்திலும் பாடல்கள் எழுதியிருப்பதையெல்லாம் விஸ்வநாதனிடம் விவரித்துச் சொன்னார் முக்தா சீனிவாசன்.

    "நல்ல கவிஞர். பாட்டைப் பாருங்கள். பிடித்திருந்தால் ஏற்றுக்கொள்ளுங்கள். ஒத்துவராது என்று தோன்றினால் நான் உங்களை வற்புறுத்தமாட்டேன்'' என்றெல்லாம் தெளிவாகச் சொன்னார் முக்தா சீனிவாசன்.

    எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு நான் ஒரு வணக்கத்தைப் போட்டேன்.

    "ஏதாவது பல்லவி எழுதிக்கொடுங்கள்'' என்றார், விஸ்வநாதன். பாட்டுக்கான காட்சி விளக்கத்தை இயக்குனர் முக்தா சீனிவாசன் சொன்னார்.

    உடனே நான் ஒரு பல்லவியை எழுதி விஸ்வநாதனிடம் நீட்டினேன்.

    "பூவரையும் பூவைக்குப் பூமாலை போடவா?

    பொன்மகளே! வாழ்கவென்று பாமாலை போடவா?''

    - என்பதுதான் அந்தப் பல்லவி.

    "பூவைக்கு என்பதெல்லாம், டிïனுக்கு சரியாக வராதே...'' என்றார் எம்.எஸ்.வி.

    உடனே `பூங்கொடியே' என்று மாற்றிக் கொடுத்தேன்.

    ஒரு சிட்டிகை பொடியை எடுத்து மூக்கில் உறிஞ்சினார், விஸ்வநாதன். அப்போதெல்லாம் அவருக்குப் பொடி போடும் பழக்கமுண்டு.

    நான் எழுதிக் கொடுத்த பல்லவிக்கு ஐந்தே நிமிடங்களில் -ஐந்து விதமாக மெட்டமைத்துப் பாடியதைக் கேட்டு நான் அசந்து போனேன்.

    "சரணத்திற்கு, நான் கொடுக்கும் மெட்டுக்குத்தான் நீங்கள் பாட்டு எழுதவேண்டும்'' என்று விஸ்வநாதன் சரணத்திற்கான மெட்டை வாசித்தார்.

    விஸ்வநாதன் கொடுத்த மெட்டிற்கு கால்மணி நேரத்தில் நான்கைந்து சரணங்களை எழுதி அவரிடம் நீட்டினேன்.

    சரணங்களை வாங்கியவர், அவற்றைப் பாடாமல் திரும்பத் திரும்ப இரண்டு மூன்று முறை மனதிற்குள் படித்துப் பார்த்தார் விஸ்வநாதன்.

    பிறகு ஒரே ஒரு கேள்விதான் என்னை கேட்டார்:

    "இவ்வளவு நாளா எங்கே இருந்தீங்க?'' என்பதுதான் அந்த கேள்வி.

    நான் கண்கலங்கி மவுனி ஆனேன்.

    சரணங்களை உடனே `மளமள'வென்று பாடினார்.

    "சீனு அண்ணா! அடுத்த சிச்சுவேஷனையும், இவர்கிட்ட சொல்லுங்க...'' என்றார் விசு.

    சொன்னார் சீனிவாசன்.

    உடனே நான் எழுதினேன்:

    `ஒடிவது போல் இடையிருக்கும்

    இருக்கட்டுமே! - அது

    ஒய்யார நடை நடக்கும்

    நடக்கட்டுமே!

    சுடுவது போல் கண் சிவக்கும்

    சிவக்கட்டுமே! - அது

    சுட்டுவிட்டால் கவி பிறக்கும்

    பிறக்கட்டுமே!

    விஸ்வநாதன், மகிழ்ந்தும் நெகிழ்ந்தும் போனார். உடனே விதவிதமான மெட்டமைத்துப் பாடிக்காட்டினார். வழக்கம்போல் அவர் கொடுத்த மெட்டுக்கு நான் சரணங்களை எழுதி முடித்தேன்.

    பிற்பகல் 3 மணியிலிருந்து 4 1/2 மணிக்குள் இரண்டு பாடல்களும் நிறைவடைந்தன.

    விஸ்வநாதன் அடுத்த கம்பெனிக்குப்புறப்பட்டுவிட்டார். போகும்போது, முக்தா சீனிவாசனைத் தனியாக அழைத்துக் காதில் ஏதோ சொல்லிவிட்டுப் போனார்.

    `என்ன சொன்னாரோ?' என்று நான் பதை பதைத்துக்கொண்டே சீனிவாசனிடம் கேட்டேன்!

    "உன்னை வைத்தே மிச்சப் பாடல்களையும் எழுதலாம் என்று சொல்லிவிட்டுப் போனாரய்யா! இன்னியோடு உன் தரித்திரம் ஒழிந்தது'' என்றார் முக்தா.

    எனக்கு நா எழவில்லை. கண்களில் நீர் கோத்து விழிப்படலம் மறைக்க நின்றேன்.

    முக்தா சீனிவாசன் என் கண் முன்னால் எனக்குக் கடவுளாகவே காட்சியளித்தார். வறுமையில் வாடி நித்தநித்தம் செத்துக் கொண்டிருந்த எனக்கு வாழ்வுப் பிச்சை போட்ட முக்தா சீனிவாசனை நான் மூச்சுள்ளளவும் மறப்பதற்கில்லை''

    இவ்வாறு வாலி கூறினார்.
    வாலி கஷ்டப்பட்ட காலத்தில் கண்ணதாசனின் உதவியாளராக வேலை பார்க்கக்கூடிய வாய்ப்பு வந்தது. அதை ஏற்க வாலி மறுத்துவிட்டார்.
    வாலி கஷ்டப்பட்ட காலத்தில் கண்ணதாசனின் உதவியாளராக வேலை பார்க்கக்கூடிய வாய்ப்பு வந்தது. அதை ஏற்க வாலி மறுத்துவிட்டார்.

    "நல்லவன் வாழ்வான்'' படத்துக்குப் பிறகு, அண்ணா கதை, வசனம் எழுதி, ப.நீலகண்டன் இயக்கிய "எதையும் தாங்கும் இதயம்'' படத்துக்கு பாடல் எழுதும் வாய்ப்பு வாலிக்குக் கிடைத்தது.

    "உன் அன்னை முகம் என்றெண்ணி - நீ என்னை முகம் பார்க்கின்றாய்! என் பிள்ளை முகம் என்றெண்ணி - நான் உன்னை முகம் பார்க்கின்றேன்'' என்பதுதான் அந்தப்பாடல்.

    கே.ஆர்.ராமசாமி, எஸ்.எஸ்.ராஜேந்திரன் ஆகியோர் நடித்த படம் இது.

    இந்தப் படத்துக்குப் பிறகும் வாலிக்குப் பெரிய வாய்ப்பு எதுவும் வரவில்லை.

    வாலி சிரமப்படும் போதெல்லாம் அவருக்கு உதவி செய்த சிலருள் இசை அமைப்பாளர் ஜி.கே.வெங்கடேஷ் ஒருவர்.

    ஒரு நாள் அவர் திடீரென்று வாலியைத் தேடி வந்தார்.

    "வாலி! இனிமே நீ இரண்டு வேளை வயிறாரச் சாப்பிடலாம். உனக்கு மாதம் 300 ரூபாய் கிடைக்கிற மாதிரி ஒரு ஏற்பாடு பண்ணிட்டேன்... ஏறு, என் வண்டீல...'' என்று கையைப்பிடித்து இழுத்தார்.

    "அண்ணே, எனக்கு ஆபீஸ் வேலை வேணாம்ணே.... பாட்டு எழுதற வேலைதான் வேணும்!'' என்று வாலி சொன்னார்.

    "பாட்டு எழுதுற வேலைதாண்டா... கண்ணதாசன் பாட்டு எழுதச் சொல்லுவாரு... அதை நீ உடனே ஒழுங்காய்ப் பேப்பரில் எழுதணும். கவிஞர், உன்னை அசிஸ்டெண்டா வெச்சுக்க ஒத்துக்கிட்டாரு... உனக்கு அவர் மாதம் 300 ரூபாய் சம்பளம் தந்திடுவாரு...'' என்று வெங்கடேஷ் கூறினார்.

    உடனே வாலி, "அண்ணே! கண்ணதாசன் கடைக்கு, எதிர்க்கடை விரிக்க நான் வந்திருக்கிறேன். அவர்கிட்டேயே உதவியாளனாகச் சேர்ந்தா, என் தனித்தன்மை காணாமல் போய்விடும்... டெய்லர் கிட்ட வேலைக்குச் சேர்ந்தா காலமெல்லாம் காஜாதான் எடுக்கணுமே தவிர, மெஷின்ல ஏத்தமாட்டாங்க...'' என்றேன்.

    ஜி.கே.வி.யின் முகம் சிவந்து போயிற்று.

    "நீ உருப்படமாட்டேடா'' என்று கோபமாகச் சொல்லிவிட்டுப் போய்விட்டார்.

    இதுகுறித்து வாலி எழுதியிருப்பதாவது:-

    "கண்ணதாசனின் கீழ் பணியாற்றுவது கேவலம் என்று நான் எண்ணவில்லை. அது எள் முனையளவு கூட, என் முன்னேற்றத்திற்கு உதவாது என்பதால்தான் அந்த வாய்ப்பை நான் விலக்கினேன்.

    ஒரு கவிஞன் தனக்கென்று -ஒரு முகவரியோடு இருத்தல் மிகமிக அவசியமானது. நம்மிடம் இருக்கும் தமிழ், நயாபைசா அளவுதான் என்றிருந்தாலும்கூட... அதை ரூபாயாக்கி முன்னேற வேண்டும் எனும் முனைப்பு இல்லாது போயின் நமக்கென்று ஒரு ஸ்தானத்தை சமூகம் வழங்காது.

    விஸ்வநாதன் -ராமமூர்த்தி, கே.வி.மகாதேவன் இவர்களது முக தரிசனமே கிட்டாத நிலையில், கோடம்பாக்கம் ஒரு தொலைதூரக் கனவாகவே ஆகிவிட்டது எனக்கு. தந்தை மறைந்து போனார்; தாயோ பம்பாயில் நோய்ப்படுக்கையில் இருக்கிறாள். எனக்காக நானே அழுது கொள்ள வேண்டுமே தவிர, ஈரம் துடைப்பார் எவருமில்லை.

    இந்த லட்சணத்தில் சினிமாவை விடாமல் பிடித்துக்கொண்டு தொங்குவது, புத்திசாலித்தனமல்ல என்று புரிந்து கொண்டேன்.

    மதுரையில் டி.வி.எஸ். அலுவலகத்தில் மிகப்பெரிய பதவியில் என் நண்பர் ஒருவர் இருந்தார். அவருக்கு வேலை கேட்டு ஒரு லெட்டர் எழுதினேன்.

    அடுத்த வாரமே வந்து வேலையில் சேரச் சொல்லி அவர் பதில் எழுதியிருந்தார்.

    சென்னைக்கு ஒரு பெரிய வணக்கத்தைப் போட்டுவிட்டு, மதுரைக்குப் போய்விடலாம் என்று முடிவு கட்டினேன்.

    கைவசம் இருந்த நீலப் பெட்டியையும், சிகப்பு ஜமுக்காளத்தையும் தூக்கி கொண்டு மறுநாள் மதுரைக்கு புறப்பட இருந்தேன்.

    அப்போதுதான் பாடகர் பி.பி.ஸ்ரீநிவாஸ் என் அறைக்கதவை தட்டினார்.

    ஊரைவிட்டே நான் போவதாக இருக்கும் விஷயத்தை அவரிடம் சொல்லாமல், "சமீபத்தில் நீங்கள் பாடின நல்ல பாட்டு ஏதாவது இருந்தால் பாடிக்காட்டுங்க...'' என்று சொன்னேன்.

    அவர் சிறிது சிந்தித்துவிட்டு வெளியாக இருக்கும், `சுமை தாங்கி' என்னும் படத்தில், கண்ணதாசன் எழுதி, விஸ்வநாதன் - ராமமூர்த்தி இசையமைத்திருந்த ஒரு பாடலை முழுவதும் எனக்குப் பாடிக் காண்பித்தார்.

    பாட்டு வரிகள் என் செவியில் பாயப்பாய, மதுரைக்குப் பயணமாவதை ரத்து செய்து, சென்னையிலேயே தங்கிவிடுவது என்று முடிவு கட்டினேன்.

    ஆம்! ஒரு சினிமாப்பாட்டு என் திசையை மாற்றியது; என் எதிர்காலத்தை நிர்ணயித்தது. நான் தொடர்ந்து போராடுவதற்கான தெம்பையும், தெளிவையும் என்னுள் தோற்றுவித்தது. சோர்ந்து போன என் சுவாசப் பையில் பிராண வாயுவை நிரப்பி, எனக்கு உயிர்ப்பிச்சை கொடுத்து என்னைப் புதுமனிதனாக்கியது.

    `சுமை தாங்கி' படத்தில் இடம் பெற்று பின்னாளில் மிகமிகப் பிரபலமான அந்தப்பாடல், கண்ணதாசன் எனக்குச் செய்த கீதோபதேசமாகவே அமைந்தது.

    எந்தத் துறையிலும் முட்டி மோதி முயற்சித்து முன்னுக்கு வரமாட்டாது, மனதொடிந்த எவரும் இந்தப் பாட்டை மந்திரம் போல் மனனம் செய்யலாம். அவ்வளவு அருமையான, ஆழமான, அர்த்தமான - அதே நேரத்தில் மிகமிக எளிமையான பாடல்.

    பாடல் இதுதான்:

    `மயக்கமா? கலக்கமா?

    மனதிலே குழப்பமா?

    வாழ்க்கையில் நடுக்கமா?

    `வாழ்க்கையென்றால் ஆயிரமிருக்கும்;

    வாசல் தோறும் வேதனையிருக்கும்;

    வந்த துன்பம் எதுவென்றாலும்

    வாடி நின்றால் ஓடுவதில்லை;

    எதையும் தாங்கும் இதயமிருந்தால் -

    இறுதிவரைக்கும் அமைதியிருக்கும்!'

    `ஏழை மனதை மாளிகை யாக்கு;

    இரவும் பகலும் காவியம் பாடு;

    நாளைப் பொழுதை இறைவனுக் களித்து,

    நடக்கும் வாழ்வில் அமைதியைத் தேடு;

    உனக்கும் கீழே உள்ளவர் கோடி -

    நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு!'

    கண்ணதாசன் எழுதிய இந்த பாடலை, வரி வரியாக மனதிற்குள் சொல்லிப் பாருங்கள். வாழ்க்கையின் உண்மை விளங்கும்.

    இவ்வாறு வாலி கூறியுள்ளார்.

    வாலி சென்னைக்கு வந்து ஐந்தாண்டுகள் ஆகியிருந்தும், அதுவரை கண்ணதாசனை சந்திக்கவில்லை. அவரை உடனே சந்திக்க வேண்டும் என்று ஆவல் எழுந்தது.

    அதன்படி, அடுத்த நாளே சென்று கண்ணதாசனை சந்தித்தார்.

    அண்ணா வசனம் எழுதி, எம்.ஜி.ஆர். நடித்த "நல்லவன் வாழ்வான்'' படத்தில் வாலியின் பாடல் இடம் பெற்றபோதிலும், பல சோதனைகளை வாலி சந்திக்க வேண்டியிருந்தது.
    அண்ணா வசனம் எழுதி, எம்.ஜி.ஆர். நடித்த "நல்லவன் வாழ்வான்'' படத்தில் வாலியின் பாடல் இடம் பெற்றபோதிலும், பல சோதனைகளை வாலி சந்திக்க வேண்டியிருந்தது.

    ப.நீலகண்டன் கூறியது போலவே மறுநாள் அவரைப் போய்ப் பார்த்தார், வாலி. சுமார் ஐம்பது பல்லவிகளைக் கொடுத்தார். அவற்றில், "சிரிக்கின்றாள், இன்று சிரிக்கின்றாள்'' என்ற பல்லவியை தேர்வு செய்தார், நீலகண்டன்.

    அதற்கு இசை அமைப்பாளர் டி.ஆர்.பாப்பா பலவிதமான மெட்டுகளைப் போட்டுக்காட்டினார். அதில் ஒரு மெட்டை தேர்வு செய்தார், நீலகண்டன்.

    அதன் பிறகு, முழுப் பாட்டுக்கும் இசை அமைப்பதில் பாப்பா மும்முரமாக ஈடுபட்டார்.

    இசை அமைக்கும்போது வந்திருந்த ஒருவரை வாலிக்கு அறிமுகம் செய்து வைத்தார், பாப்பா. அவர்தான் எழுத்தாளரும், வசன கர்த்தாவுமான மா.லட்சுமணன். "இவர்தான் உங்களைப்பற்றி ப.நீலகண்டன் சாருக்கு தெரிவித்து, அதன் மூலம் உங்களுக்கு பாட்டெழுதும் வாய்ப்பு கிடைத்துள்ளது'' என்று பாப்பா கூறினார்.

    அதைக்கேட்டு வாலி பிரமித்து நின்றார். கண்கள் பனிக்க மா.லட்சுமணனுக்கு நன்றி தெரிவித்தார்.

    "நல்லவன் வாழ்வான்'' படத்துக்கு கதை -வசனம் எழுதுபவர் பேரறிஞர் அண்ணா என்பதை அறிந்து இரட்டிப்பு மகிழ்ச்சி அடைந்தார், வாலி.

    வாலியின் பாடல், அண்ணாவின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. பாடல் நன்றாக இருப்பதாகக் கூறியதோடு, சில வரிகளை அடிக்கோடிட்டு, பாராட்டினார்.

    எம்.ஜி.ஆருக்கும் பாடல் பிடித்து விட்டது.

    சோதனை மேல் சோதனை என்றாலும், அந்தப் பாடல் பதிவு செய்யப்படுவதிலும், படத்தில் இடம் பெறுவதிலும் பெரும் சோதனைகள் ஏற்பட்டன.

    அதுபற்றி வாலி எழுதியிருப்பதாவது:-

    "சாரதா ஸ்டூடியோவில் `ரிக்கார்டிங்'கிற்கான தேதி முடிவாயிற்று. நான் இஷ்ட தெய்வங்களையெல்லாம் வேண்டிக்கொண்டு சாரதா ஸ்டூடியோவிற்குச் சென்றேன்.

    பகல் 12 மணியளவிற்கு எம்.ஜி.ஆர். வந்தார். பாட்டின் பின்னணி இசை திருப்தியாக இல்லை என்றார். சில மாற்றங்கள் செய்யப் போதுமான நேரம் இல்லாததால் ரிக்கார்டிங் ரத்து செய்யப்பட்டது.

    10 நாட்களுக்குப் பிறகு மீண்டும் சாரதா ஸ்டூடியோவில் ஒலிப்பதிவிற்கான தேதி குறிக்கப்பட்டது. அன்று பகல் 12 மணியளவில் பி.சுசீலாவிற்கு உடல் நிலை சரியில்லையென்று ஒலிப்பதிவு ரத்து செய்யப்பட்டது.

    பிறகு, ஒரு மாதம் கழித்து இன்னொரு நாள் ஒலிப்பதிவிற்கான தேதி குறிக்கப்பட்டது. அன்று சீர்காழி கோவிந்தராசனின் சாரீரம் உதவும்படியாக இல்லையென்று ஒலிப்பதிவு ரத்து செய்யப்பட்டது. அந்தக் காலத்தில் டிராக் எடுத்துவிட்டு பிற்பாடு குரலைப் பதிவு செய்யும் வழக்கமெல்லாம் அமலுக்கு வரவில்லை.

    `இந்தப்பாட்டு, ராசியில்லாத பாட்டு... எனவே, மருதகாசியை வைத்து வேறு பாட்டு எழுதி ஒலிப்பதிவு செய்யலாம்' என்று நீலகண்டன் முடிவெடுத்தார்.

    மருதகாசியும் பாட்டு எழுதவந்தார். ஏற்கனவே நான் எழுதியிருந்த பாட்டை, ஒரு முறை கையில் வாங்கிப் பார்த்தார்.

    "இந்தப் பையன் நல்லா எழுதியிருக்கான். இவனுடைய வாழ்க்கை என்னால் கெட்டுப் போவதை நான் விரும்பவில்லை... இந்தப் பாட்டையே வைத்துக்கொள்ளுங்கள்... பாப்புலராகும்...'' என்று சொல்லிவிட்டு, மருதகாசி அண்ணன் தன் பிளைமவுத் காரில் ஏறிப் போய்விட்டார். அண்ணன் மருதகாசிக்கு மனதுக்குள் ஆலயம் எழுப்பி வழிபட்டேன். பிறகு என் பாடலையே பதிவு செய்து படப்பிடிப்புக்குப் போனார்கள்.

    நிïடோன் ஸ்டூடியோவில் ஒரு பெரிய செட் போட்டு இந்தப் பாடலைப் படம் பிடிக்க ஏற்பாடாயிற்று.

    ஒரு மலை; அதனின்றும் வழியும் அருவி. அருவி வந்து விழும் தடாகம் எனப் பெரிதாக அழகுற அமைக்கப்பட்ட அந்த செட்டில் எம்.ஜி.ஆரும், ராஜசுலோசனாவும் ஆடிப்பாடுவதாக நடன இயக்குனர் அமைத்த வண்ணம் ஒத்திகை பார்க்கப்பட்டது.

    முதல் ஷாட் எம்.ஜி.ஆர், `சிரிக்கின்றாள், இன்று சிரிக்கின்றாள்' என்னும் பாடல் வரிக்கு வாயசைத்தவாறே, கரையிலிருந்த தடாகத்தில் இறங்குகையில் கரை உடைந்து ஸ்டூடியோ "செட்'' முழுவதும் வெள்ளக்காடாயிற்று.

    படப்பிடிப்பு ஒத்தி வைக்கப்பட்டது. நான் அதிர்ந்து போனேன். இந்த ஒரு பாடலுக்கே இத்துணை தடங்கல்களென்றால் என் எதிர்காலம் என்னாவது என்று அஞ்சலானேன்.

    நல்லவேளை, செட் சீர் செய்யப்பட்டு பாட்டு நல்ல விதமாகப் படமாக்கப்பட்டு, படத்திலும் இடம் பெற்றது.

    இறுதியில் பாடல் வரிகளில் ஆட்சேபணைக்குரியதாகக் கருதப்பட்டு, சரணத்தில் சில வாக்கியங்கள் சென்சாரால் வெட்டப்பட்டன.

    இவ்வளவு அமர்க்களங்களுக்கு இடையே, எம்.ஜி.ஆருக்காக நான் எழுதிய முதல் பாடலுடன் "நல்லவன் வாழ்வான்'' 1961 ஆகஸ்டு 31-ந்தேதி திரைக்கு வந்தது.''

    இவ்வாறு வாலி குறிப்பிட்டுள்ளார்.
    வாலியின் முதல் பாடல் வெற்றிகரமாக திரையில் ஒலித்தபோதிலும், இரண்டாவது பாடல் வாய்ப்பு சுலபமாகக் கிடைத்து விடவில்லை.

    வாலியின் முதல் பாடல் வெற்றிகரமாக திரையில் ஒலித்தபோதிலும், இரண்டாவது பாடல் வாய்ப்பு சுலபமாகக் கிடைத்து விடவில்லை.

    அப்போது வி.கோபாலகிருஷ்ணன் நாலைந்து படங்களில் கதாநாயகனாக நடித்துக் கொண்டிருந்தார். அவரும், சவுகார் ஜானகியும், எம்.ஆர்.ராதாவும் நடித்த "தாமரைக்குளம்'' படத்தின் படப்பிடிப்பு, கோல்டன்ஸ் ஸ்டூடியோவில் நடந்து கொண்டிருந்தது. படத்தின் டைரக்டர் `முக்தா' சீனிவாசன்.

    படப்பிடிப்பை பார்க்க வாலி சென்றிருந்தார். அவருக்கு ஒரு புதுமுக நடிகரை கோபாலகிருஷ்ணன் அறிமுகப்படுத்தி வைத்தார்.

    அதுபற்றி வாலி கூறுகிறார்:-

    "நானும் அந்தப் புதுமுக நடிகரும் மரத்தடியில் நின்று பேசிக்கொண்டிருந்தோம். மிகமிக ஒல்லியான உருவம். சினிமாவிற்கே அவசியமான கவர்ச்சி என்பது சிறிதளவும் இல்லாத முகம். ஆயினும் படித்தவராக இருந்ததால், அவர் விழியிலும், வார்த்தையிலும் ஓர் அறிவு தீட்சண்யம் இருந்தது. அவருடைய உருவ அமைப்பை வைத்து, இவர் எதை நம்பி சினிமாவில் தன் எதிர்காலத்தைத் திட்டமிடுகிறார் என்ற எண்ணத்திலேயே அவரிடம் பேச்சைக் கொடுத்தேன். அறிமுகமாகி ஒரு நிமிடமே ஆகியிருந்தும் அவர் என்னிடம் மனம் விட்டுப் பேசினார்.

    "மிஸ்டர் வாலி, என் சொந்த ஊர் தாராபுரம். என் பெயர் குண்டுராவ். நான் ரெயில்வே டிபார்ட்மெண்டுல கைநிறைய சம்பளத்தோட ஆனந்தமா இருந்தவன். இருந்தாலும் இந்த நடிப்பு ஒரு பித்தாகவே மாறி, என்னுடைய சிந்தனையை முழு நேரமும் ஆக்கிரமிச்சுடுச்சு. நாடகங்களிலேயும் நடிச்சிக்கிட்டிருக்கிறேன். இந்தத் தாமரைக்குளம் படத்தின் தயாரிப்பாளர் என் நாடக நடிப்பைப் பார்த்து எனக்கு இந்தப் படத்துல ஒரு சின்ன வேஷம் கொடுத்திருக்காரு. நடிச்சு முடிச்சா சம்பளமா தொண்ணூறு ரூபா தர்றேன்னாரு. எனக்குப் பணம் முக்கியமில்லை, என் திறமையை நிரூபிக்க விரும்புகிறேன். இதை நம்பி தைரியமா, ரெயில்வே வேலையை ராஜினாமா செஞ்சுட்டேன்.''

    நண்பர் குண்டுராவ் இப்படிச் சொன்னதும் எனக்குப் பொறி கலங்கிப் போய்விட்டது. "என்ன சார், ரெயில்வே உத்தியோகம் லேசுல கிடைக்குமா? சினிமாவை நம்பி அதை நீங்க விட்டது ரொம்பத் தப்பு'' என்று என் உண்மையான வருத்தத்தை அவரிடம் எடுத்துச் சொன்னேன்.

    "வாலி சார், எனக்கு நம்பிக்கையிருக்கு. ஒரு நாள் நான் கண்டிப்பா `ஸ்டார்' ஆவேன்; அப்ப ரெயில் நான் வரவரைக்கும் நிற்கும்'' என்று சொல்லிவிட்டு குண்டுராவ் ஒரு சிகரெட்டைப் புகைத்தார்.

    பிற்காலத்தில் குண்டுராவ், பிரபல நட்சத்திரமாகி கோடம்பாக்கத்தையே தன் கைக்குள் ஏறத்தாழ இருபது ஆண்டுகள் வைத்திருந்தார். நானும் அவரும் பின்னாளில் `வாடா... போடா...' என்று அழைத்துப் பேசிக்கொள்ளும் அளவிற்கு ஆப்த நண்பர்களானோம்.

    அந்த `குண்டுராவ்' வேறு யாருமல்ல. நாகேஷ்தான் அவர்!''

    இவ்வாறு வாலி குறிப்பிட்டுள்ளார்.

    இரண்டாவது பட வாய்ப்பு உடனே கிடைக்காததாலும், உடல் நலம் சரியில்லாததாலும், மீண்டும் ஸ்ரீரங்கத்துக்குப் போனார், வாலி. அப்போது, அவர் தந்தை காலமானார்.

    வாலியின் அண்ணன் மும்பையில் இருந்தார். "பாட்டு எழுதும் வேலை சரிப்படாது. மும்பை சென்று ஏதாவது வேலை தேடவேண்டியதுதான்'' என்ற முடிவுக்கு வந்தார், வாலி. தாயாருடன் மும்பை சென்றார்.

    மும்பையில் சில காலம் இருந்து விட்டு மீண்டும் சென்னை திரும்பினார். தியாகராய நகரில் சிவா- விஷ்ணு கோவில் அருகே இருந்த கிளப்ஹவுசில் தங்கினார். அங்கு 20 அறைகள் இருந்தன. பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள் அங்கே தங்கியிருந்தனர். ஒருவருக்கு வாடகை 15 ரூபாய்.

    அங்கே தங்கியிருந்தவர்களில் பெரும்பாலோர் பிரம்மச்சாரிகள். நாகேசும் அப்போது அங்கு தங்கியிருந்தார். ஏற்கனவே அறிமுகமாகியிருந்த நாகேசும், வாலியும் நெருங்கிய நண்பர்கள் ஆனார்கள்.

    அமெரிக்க தூதர் அலுவலகத்தில் அதிகாரியாகப் பணியாற்றிக் கொண்டிருந்த வெங்கடராமன் என்ற இளைஞரும், அங்கு தங்கியிருந்தார். அவரும் வாலிக்கு நண்பரானார்.

    இவர்தான் பிற்காலத்தில் "வெண்ணிற ஆடை''யில் கதாநாயகனாக அறிமுகமாகி, ஏறத்தாழ 20 ஆண்டு காலம் கதாநாயகனாகவும், வில்லனாகவும், குணச்சித்திர வேடங்களிலும் நடித்த ஸ்ரீகாந்த்.

    கிளப் ஹவுசில் தங்கியிருந்தவர்கள் ஒவ்வொருவராக திரை உலகில் நுழைந்தார்கள். வாலிக்கும் நல்ல காலம் பிறந்தது.

    ஒரு நாள் காலை, முன்பின் தெரியாத ஒருவர் வாலியைத் தேடி வந்தார். "நாளை காலை பத்து மணிக்கு நீங்கள் `அரசு பிக்சர்ஸ்' அலுவலகத்துக்கு வாருங்கள். அங்கு டைரக்டர் ப.நீலகண்டனை சந்தியுங்கள். அவர் படத்துக்கு பாட்டு எழுத வேண்டும்'' என்றார், அவர்.

    வாலிக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை. நாகேஷ் வந்ததும், இந்தத் தகவலைச் சொன்னார். "அரசு பிக்சர்ஸ் ஆபீஸ், நுங்கம்பாக்கத்திலே இருக்குடா. எனக்குத் தெரியும். நானும் உன் கூட வர்றேன்'' என்றார், நாகேஷ் மகிழ்ச்சி பொங்க.

    மறுநாள் வாலியும், நாகேசும் `அரசு பிக்சர்ஸ்' அலுவலகத்துக்கு சென்றனர். திரை உலகில் நாகேஷ் புகழ் பெறாத காலம் அது.

    ப.நீலகண்டன் அறைக்குள் இருவரும் நுழைந்தனர். "உங்கள் இருவரில் யார் வாலி?'' என்று கேட்டார், ப.நீலகண்டன்.

    "நான்தான் சார்! இவர் என் நண்பர். நாகேஷ்னு பேரு. படங்களில் எல்லாம் நடித்துக்கொண்டு இருக்கிறார்'' என்று பவ்யமாக பதில் அளித்தார், வாலி.

    "பாட்டு நீங்கதானே எழுதப்போறீங்க?'' "ஆமாம் சார்!'' "அப்ப, அவரை வெளியே இருக்கச் சொல்லுங்க!'' ப.நீலகண்டன் இவ்வாறு கூற, நாகேஷ் அந்த அறையை விட்டு வெளியேறினார்.

    வாலியைப் பற்றிய விவரங்களைக் கேட்டறிந்தார், நீலகண்டன். பின்னர் துணை இயக்குனரை அழைத்து, "பாடல் காட்சி பற்றிய விவரங்களை இவருக்கு விளக்குங்கள்'' என்று கூறிவிட்டு, "நீங்கள் நாளை பாடலின் பல்லவிகளை எழுதிக்கொண்டு வாருங்கள்'' என்று வாலியிடம் தெரிவித்தார்.

    வாலி, நாகேசுடன் கிளப் ஹவுஸ் திரும்பினார். மகிழ்ச்சி மிகுதியால், இரவெல்லாம் வாலிக்கு தூக்கம் இல்லை.

    காரணம் அவர் பாடல் எழுதும் அந்த காதல் காட்சியில் நடிக்கப்போகிறவர், எம்.ஜி.ஆர்! படத்தின் பெயர் "நல்லவன் வாழ்வான்.'' எம்.ஜி.ஆருடன் நடிக்கப் போகிறவர் ராஜசுலோசனா.

    `எம்.ஜி.ஆர். படத்துக்கு பாட்டெழுதப் போகிறோம்' என்ற மகிழ்ச்சியில் மனம் பூரிக்க, விடிய விடிய விழித்திருந்து 50 பாடல்களுக்கான பல்லவிகளை எழுதிக் குவித்தார், வாலி!
    பெரிய போராட்டத்துக்குப் பின், சினிமாவில் பாட்டு எழுதும் வாய்ப்பு வாலிக்கு கிடைத்தது. அந்தப் பாடலை சுசீலா பாடினார்.

    பெரிய போராட்டத்துக்குப் பின், சினிமாவில் பாட்டு எழுதும் வாய்ப்பு வாலிக்கு கிடைத்தது. அந்தப் பாடலை சுசீலா பாடினார்.

    மிஸ் மாலினி, ஏழைபடும்பாடு, மகாத்மா உதங்கர் முதலிய படங்களில் நடித்தவர், வி.கோபாலகிருஷ்ணன். படங்களில் நடனம் மட்டும் ஆடிக்கொண்டிருந்த லலிதா -பத்மினி சகோதரிகள், முதன் முதலில் கதாபாத்திரம் ஏற்று நடித்த "ஏழைபடும்பாடு'' படத்தில், இவர்தான் பத்மினிக்கு ஜோடி.

    கடிதப் போக்குவரத்து மூலம் கோபியின் நட்பை பெற்ற வாலி, ஒருமுறை ரேடியோ நாடகத்தில் நடிக்க திருச்சிக்கு வந்த கோபியிடம், "நான் சென்னைக்கு வந்து சினிமாவில் பாட்டு எழுத முயற்சிக்கலாம் என்று நினைக்கிறேன்'' என்றார்.

    "வாங்க, வாலி! நான் இருக்கிறேன். எதற்கும் கவலைப்பட வேண்டாம்'' என்று ஊக்கம் அளித்தார், கோபி.

    1958 டிசம்பர் முதல் வாரத்தில், வாலி சென்னைக்கு வந்தார். திருவல்லிக்கேணியில் இருந்த ஸ்ரீரங்கத்து நண்பர் செல்லப்பாவின் அறையில் தங்கினார்.

    அப்போது தியாகராய நகரில், சின்னையாப்பிள்ளை ரோட்டில் உள்ள வீட்டில் வி.கோபாலகிருஷ்ணன் வசித்து வந்தார். தன்னைத்தேடி வருவோருக்கு, முடிந்த உதவிகளை எல்லாம் செய்பவர் அவர்.

    தினமும் திருவல்லிக்கேணியில் பஸ் பிடித்து, தி.நகர் வாணி மஹாலில் இறங்கி கோபாலகிருஷ்ணன் வீட்டுக்குப் போவார், வாலி. தன்னைப் பார்க்க வரும் திரை உலகப் பிரமுகர்களிடம் வாலியை கோபி அறிமுகப்படுத்துவார்.

    அதுமட்டும் அல்ல. தன்னுடைய ஸ்கூட்டரின் பின்னால் வாலியை உட்கார வைத்துக்கொண்டு தினமும் யாராவது பட அதிபர்கள், டைரக்டர்கள், இசை அமைப்பாளர்களிடம் அழைத்துச் சென்று அறிமுகப்படுத்துவார். "இவர் நல்ல கவிஞர். சினிமாவுக்கு பாட்டெழுத வாய்ப்பு தந்தால், பிரமாதமாக எழுதுவார்'' என்று கூறி, சான்ஸ் கேட்பார்.

    வாலி, தன்னுடைய பாடல்கள் சிலவற்றை ஒரு நோட்டில் எழுதி வைத்திருப்பார். சிலர் அந்த நோட்டுப் புத்தகத்தை வாங்கி படித்துப் பார்த்துவிட்டு, புன்னகை புரிவார்கள். சிலர் படித்துப் பார்க்காமலேயே புன்னகை செய்வார்கள்.

    இந்த புன்னகைகளால் வாலிக்கு எந்த பயனும் ஏற்படுவதில்லை.

    அந்தக் காலக்கட்டத்தில், "பாதை தெரியுது பார்'' என்ற படத்தை, குமரி பிலிம்சார் எடுத்துக்கொண்டு இருந்தனர். இசை அமைப்பாளர் எம்.பி.சீனிவாசன்,, பொதுவுடமைக் கவிஞர் கே.சி.எஸ்.அருணாசலம் எழுதிய "சின்னச் சின்ன மூக்குத்தியாம்'' என்ற பாடலை ஒத்திகை பார்த்துக்கொண்டிருந்தார்.

    எம்.பி.சீனிவாசனிடம் வாலியை அறிமுகப்படுத்திய கோபாலகிருஷ்ணன், பாதை தெரியுது பார் படத்தில் ஒரு வாய்ப்பு வழங்குமாறு கேட்டுக்கொண்டார்.

    "கோபி! கே.சி.எஸ்.அருணாசலம், ஜெயகாந்தன், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ஆகிய மூன்று பேரும்தான் இந்தப் படத்துக்கு பாட்டு எழுதுகிறார்கள். புதிதாக வேறு பாட்டை பயன்படுத்தக்கூடிய கட்டம் எதுவும் படத்தில் இல்லை. ஆனாலும், பொதுவுடமை கருத்தையும், சமூக விழிப்புணர்வையும் எடுத்துக் காட்டக்கூடிய பாட்டு எதுவும் இருந்தால், "டைட்டில் சாங்'' ஆகப் பயன்படுத்த முயற்சி செய்கிறேன்'' என்றார், சீனிவாசன்.

    உடனே வாலி, தான் எழுதி வைத்திருந்த பாட்டை, அதற்கான மெட்டுடன் பாடிக்காட்டினார்.

    பாட்டை கேட்ட சீனிவாசன், "மிஸ்டர் வாலி! இப்போது நீங்க பாடிக்காண்பித்த பாட்டு நன்றாக இல்லை என்று நான் சொல்லமாட்டேன். ஆனால், என்னை பெரிதாக கவரவில்லை. சாரி!'' என்று கூறிவிட்டு, உள்ளே போய்விட்டார்.

    "கவலைப்படாதீங்க, வாலி! வேறு இடத்தில் முயற்சி செய்யலாம்'' என்று ஆறுதலாகக் கூறிவிட்டு, வாலியை வீட்டுக்கு அழைத்துச் சென்றார், கோபி.

    (1958-ல் எம்.பி.சீனிவாசனால், நிராகரிக்கப்பட்ட பாடல், 1967-ல் எம்.ஜி.ஆர். படத்தில் இடம் பெற்று, மகத்தான வெற்றி பெற்று பட்டி தொட்டி எல்லாம் எதிரொலித்தது. அதுதான், "கொடுத்ததெல்லாம் கொடுத்தான், அவன் யாருக்காகக் கொடுத்தான்?'' என்ற பாடல். இந்தப் பாடல் இடம் பெற்ற படம் "படகோட்டி.'')

    "மெல்லிசை மன்னன்'' எம்.எஸ்.விஸ்வநாதன் இசை அமைப்பில், ஏராளமான பாடல்கள் இயற்றி இருக்கிறார், வாலி.

    ஆனால், முதன் முதலாக இவர்கள் சந்தித்துக் கொண்டபோது, வாலியின் பாடல் விஸ்வநாதனைக் கவரவில்லை.

    அதுபற்றி, வாலி எழுதியிருப்பதாவது:-

    "ஒருநாள், அதிகாலை என்னை ஒரு இசையமைப்பாளர் வீட்டுக்கு கோபி தன் ஸ்கூட்டரில் அழைத்துச் சென்றார். எனக்கு அந்த இசையமைப்பாளரிடம் ஏற்கனவே அளவு கடந்த அபிமானமும், மரியாதையும் உண்டு. அவர் மூலம் எனக்கு எப்படியும் படத்துறையில் பாட்டெழுதும் ஒரு வாய்ப்பைப் பெற்று தந்து விடுவது என்று கங்கணம் கட்டிக்கொண்டு அவர் வீட்டுக்கு என்னைக் கூட்டிப் போனார், கோபி.

    அந்த இசையமைப்பாளருக்கு கோபியிடம் மிகுந்த பிரியமுண்டு. கோபியை ஆரத்தழுவி அவர் வரவேற்றார். என்னை அவரிடம் கோபி அறிமுகப்படுத்திவிட்டு, என் ஊர், என் கல்வி இவை பற்றியெல்லாம் ஒரு சிறிய முன்னுரையை வழங்கிவிட்டு, என் பாட்டு நோட்டை என் கையிலிருந்து வாங்கி, அந்த இசையமைப்பாளரிடம் கொடுத்தார்.

    அவர் அதை ஆர்வத்தோடு, வாங்கி, சில பக்கங்களைப் புரட்டிப் பார்த்து, நின்று நிதானமாகப் படித்தார். பிறகு, என் பாட்டு நோட்டை என்னிடம் திருப்பித் தந்துவிட்டு, காபி வரவழைத்து எங்கள் இருவருக்கும் வழங்கினார்.

    பிறகு, கோபியை தனியாக அழைத்து அந்த இசையமைப்பாளர் சன்னமான குரலில் காதோடு காதாக ஏதோ சொன்னார்.

    "வாங்க வாலி போகலாம்...'' என்று கோபி என்னை அழைத்து வந்துவிட்டார்.

    ஸ்கூட்டரில் போகும்போது என்னைப் பற்றி அந்த இசையமைப்பாளர் என்ன சொன்னார் என்று கோபியைக் கேட்டேன். அவர் சொன்னதை கோபி அப்படியே என்னிடம் சொன்னார்:

    "கோபி, இவர் எழுதியிருக்கிற பாட்டெல்லாம் ரொம்ப சுமாரா இருக்கு. சினிமாவில் முன்னுக்கு வர்றதுக்கான வாய்ப்பே இவருக்கு இருக்கிற மாதிரி தெரியவில்லை... பாவம்! மெட்ராசில் இவர் இருந்து கஷ்டப்படறதை விட, படிச்சவரா இருக்கிறதனாலே, சினிமாவுக்கு முழுக்கு போட்டுவிட்டு ஏதாவது வேலைக்குப் போகச் சொல்லுங்க...''

    அந்த இசையமைப்பாளர் சொன்னதை ஒருவரி விடாமல் கோபி என்னிடம் சொல்லிவிட்டு மவுனமாக ஸ்கூட்டரை ஓட்டினார்.

    அந்த இசையமைப்பாளர் வேறு யாருமல்ல. பிற்காலத்தில் என் முன்னேற்றத்திற்கு முழு முதற்காரணமாக விளங்கிய மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்கள்தான், அன்று என்னை வேறு வேலை தேடிப்போவது உசிதம் என்று தன் மனதில் பட்டதை வெளிப்படையாகக் கோபியிடம் சொன்னவர்.

    நான் ஸ்ரீரங்கம் திரும்பிவிடலாம் என்ற முடிவுக்கே வந்துவிட்டேன். ஓரிரு நாளில் மூட்டை முடிச்சோடு நான் ஊருக்குத் திரும்ப இருந்தபோதுதான், படத்தில் முதன் முதலாகப் பாட்டு எழுதும் வாய்ப்பு என்னைத் தேடி வந்தது.

    இவ்வாறு வாலி குறிப்பிட்டுள்ளார்.

    கர்நாடகத்தைச் சேர்ந்த பட அதிபரும், நடிகருமான கெம்பராஜ், "நளதமயந்தி'', "கற்கோட்டை'', "ராஜவிக்கிரமா'' ஆகிய படங்களைத் தயாரித்துவிட்டு, 1958-ல் "அழகர் மலைக்கள்ளன்'' என்ற படத்தைத் தயாரித்தார்.

    ஒருநாள் காலை, கோபாலகிருஷ்ணன் காரில் வாலியை அவரிடம் அழைத்துச் சென்றார். தெலுங்கு இசை அமைப்பாளர் கோபாலம், ஆர்மோனிய பெட்டியுடன் அமர்ந்திருந்தார்.

    வாலி அவருக்கு வணக்கம் செலுத்தினார்.

    பாட்டுக்கான மெட்டை ஆர்மோனியத்தில் இசை அமைப்பாளர் வாசித்துக்காட்டினார். "ஒரு தாய் பாடும் தாலாட்டுப்பாட்டு இது'' என்று வாலியிடம், காட்சியை விளக்கினார்கள்.

    உடனே வாலி, காகிதத்தை எடுத்தார். "நிலவும், தாரையும் நீயம்மா; உலகம் ஒரு நாள் உனதம்மா'' என்ற பல்லவியை எழுதிக் காட்டினார்.

    அதைப் பார்த்துவிட்டு, இசை அமைப்பாளர் அசந்து போனார். இசையுடன் வார்த்தைகள் வெகுவாகப் பொருந்தின.

    முக்கால் மணி நேரத்தில் முழுப்பாடலையும் எழுதி முடித்தார், வாலி. பட அதிபர் கெம்பராஜ் வந்து, பாட்டைக்கேட்டார். அவருக்கு ரொம்பவும் பிடித்துவிட்டது. வாலியைத் தட்டிக்கொடுத்தார்.

    "நாளை ரிக்கார்டிங். கார் அனுப்புகிறேன். வந்துவிடுங்கள்'' என்று சொன்னார். மகிழ்ந்து போனார், வாலி.

    மறுநாள் கோல்டன் ஸ்டூடியோவில் சுசீலா பாட, வாலியின் முதல் பாடல் ஒலிப்பதிவு ஆகியது.
    வாலியின் நாடகம் ஒன்றுக்குத் தலைமை தாங்கிய எம்.ஜி.ஆர்., "சென்னைக்கு வாருங்கள். உங்கள் தமிழ், திரை உலகுக்குத் தேவை'' என்று அழைப்பு விடுத்தார்.

    வாலியின் நாடகம் ஒன்றுக்குத் தலைமை தாங்கிய எம்.ஜி.ஆர்., "சென்னைக்கு வாருங்கள். உங்கள் தமிழ், திரை உலகுக்குத் தேவை'' என்று அழைப்பு விடுத்தார். ஓவியக் கல்லூரி படிப்பை ஓராண்டுடன் முடித்துக்கொண்ட வாலி,
    திருச்சியில் நாடகங்கள் எழுதி மேடை ஏற்றுவதில் முழு மூச்சுடன் ஈடுபட்டார்.

    ஸ்ரீரங்கம் உயர்நிலைப்பள்ளியில் இவர் நடத்திய "மிஸ்டர் சந்தோஷம்'' என்ற நாடகத்துக்கு, திரைப்பட நடிகரும், டைரக்டருமான ஜாவர் சீதாராமன் தலைமை தாங்கினார். நாடகத்தை அவர் வானளாவப் புகழ்ந்து பேசியதால், வாலி உற்சாகம் அடைந்தார்.

    நாடகங்கள் எழுதியதோடு, "கலைமகள்'', "குமுதம்'' முதலான பத்திரிகைகளில் கதைகளும் எழுதினார், வாலி.

    அந்தக் காலத்தில், வானொலியில் எழுத்தாளர்களின் சிறுகதைகளை படிக்கும் நிகழ்ச்சி இடம் பெற்றிருந்தது. வாலி எழுதி அனுப்பிய "வராளி வைகுண்டம்'' என்ற சிறுகதை, வானொலியால் ஏற்றுக்கொள்ளப்பட்டு ஒலிபரப்பப்பட்டது. அந்தக் கதை சிறப்பாக இருந்ததால், தொடர்ந்து கதைகள் எழுதும்படி வானொலி நிலையத்தில் உயர் அதிகாரியாகப் பணியாற்றிய எழுத்தாளரும், கவிஞருமான "துறைவன்'' உற்சாகப்படுத்தினார். அதனால், வாலி நிறைய கதைகளும், நாடகங்களும் வானொலிக்கு எழுதினார்.

    வானொலியின் பொங்கல் விழா சிறப்பு நிகழ்ச்சிக்கு பாடல் எழுதினார், வாலி. அந்தப் பாடலை டி.எம்.சவுந்தரராஜன் பாடினார். "நிலவுக்கு முன்னே...'' என்று தொடங்கும் அந்தப் பாடலை டி.எம்.எஸ். வெகுவாக ரசித்தார். "சென்னைக்கு வந்து, திரைப்படத் துறையில் நுழையுங்கள். கவிஞராகப் புகழ் பெறலாம்'' என்று வாலியிடம் கூறினார், டி.எம்.எஸ்.

    ரேடியோவில் நாடகங்கள் எழுதி வந்த அதே காலக்கட்டத்தில், மேடை நாடகங்களையும் வாலி தொடர்ந்து எழுதி வந்தார்.

    பிற்காலத்தில் எம்.ஜி.ஆரின் மந்திரிசபையில் அமைச்சராக பதவி வகித்த திருச்சி சவுந்தரராஜன், வாலியின் நாடகத்தில் நடித்தவர்.

    அம்பிகாபதி -அமராவதி காதலை வைத்து வாலி எழுதிய "கவிஞனின் காதலி'' என்ற நாடகத்தில் திருச்சி சவுந்தரராஜன் அம்பிகாபதியாகவும், புலியூர் சரோஜா அமராவதியாகவும், நடிகை சந்திரகாந்தாவின் சகோதரர் சண்முகசுந்தரம் கம்பராகவும் நடித்தனர்.

    வாலி ஸ்ரீரங்கத்தில் இருந்தபோது, இந்த நாடகம் சென்னையில் நடந்தது. திருச்சி சவுந்தரராஜனின் முயற்சியால், இந்த நாடகத்துக்கு எம்.ஜி.ஆர். தலைமை தாங்கினார். மூன்று மணி நேரமும் அமர்ந்து நாடகத்தை பார்த்தார்.

    முடிவில், நாடகத்தைப் பாராட்டி எம்.ஜி.ஆர். பேசும்போது, வாலியை வெகுவாக புகழ்ந்தார். "நாடகத்தை எழுதிய வாலி, ஸ்ரீரங்கத்தில் இருக்கிறாராம். அவர் எப்போது சென்னைக்கு வந்தாலும் என்னைப் பார்க்கலாம். அவருடைய தமிழ், சினிமாவுக்குத் தேவை'' என்று குறிப்பிட்டார்.

    திருச்சியில் "கோமதிராணி பிக்சர்ஸ்'' என்ற சினிமா கம்பெனியை ராஜ்குமார் என்பவர் தொடங்கி, வாலியின் நாடகம் ஒன்றை படமாக்கும் முயற்சியில் இறங்கினார். அது வெற்றி பெறவில்லை.

    ராஜ்குமார் மூலமாக வாலிக்கு எம்.ஏ.ராஜாராம் என்ற திரைப்பட இயக்குனர் அறிமுகமானார். அவர் அவ்வப்போது சென்னையில் இருந்து வாலிக்கு 10 ரூபாய் மணியார்டர் அனுப்புவார். ஸ்ரீரங்கத்தில் வசித்து வந்த வாலி, சென்னைக்கு ரெயிலில் சென்று, ராஜாராம் தயாரிக்கத் திட்டமிட்டிருந்த படத்துக்கு வசனம் எழுதிக் கொடுத்து விட்டு வருவார்.

    அப்போது (1956) சில பாடல்களையும் வாலி எழுதினார். அவற்றை சி.என்.பாண்டுரங்கன் இசை அமைப்பில் ஏ.எம்.ராஜா, சீர்காழி கோவிந்தராஜன், சூரமங்கலம் ராஜலட்சுமி ஆகியோர் பாட, ரேவதி ஸ்டூடியோவில் ஒலிப்பதிவு செய்யப்பட்டன.

    (ராஜாராம் படம் எடுக்க இயலாததால், இந்தப்பாடல்கள் அப்போது பயன்படுத்தப்படவில்லை. எனினும், பிற்காலத்தில் அவர் தயாரித்த "புரட்சி வீரன் புலித்தேவன்'' என்ற படத்தில் பயன்படுத்திக்கொண்டார்.)

    1956-ம் ஆண்டு தீபாவளிக்கு மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரிப்பான "பாசவலை'' படம் வெளியாயிற்று.

    அந்தப் படத்தில் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எழுதிய "குட்டி ஆடு தப்பி வந்தா குள்ள நரிக்கு சொந்தம்; குள்ள நரி தப்பி வந்தா குறவனுக்கு சொந்தம்; தட்டுக்கெட்ட மனிதர் கண்ணில் பட்டதெல்லாம் சொந்தம்; சட்டப்படி பார்க்கப்போனா எட்டடிதான் சொந்தம்'' என்ற பாடலில், மனதைப் பறிகொடுத்தார், வாலி.

    அதுபற்றி அவர் எழுதியிருப்பதாவது:-

    "குணங்குடி மஸ்தானும், சித்தர் பெருமக்களும் யாத்தளித்துள்ள எத்தனையோ தத்துவப் பாடல்களை, அடியேன் அந்த நாளிலேயே அறிவேன். ஆயினும், பாசவலை படப்பாட்டில், பாமரனுக்கும் புரியுமாறு போதிக்கப்பட்டிருந்த தத்துவ வரிகள் இருக்கின்றனவே, அவை ஒரு ஞானக்கோவையை சாறு பிழிந்தெடுத்து, வெள்ளித்திரை மூலம் ஊருக்கெல்லாம் விநியோகித்தது போலிருந்தது.

    இந்தப் பாடல்களை எழுதியிருந்தவர் பட்டுக்கோட்டை. அடேயப்பா! சவுக்கெடுத்து சொடுக்கி விட்டது போல என்ன சொல் வீச்சு? அசந்து போனேன். அன்றைய படவுலகுக்குப் புதிய வரவான பட்டுக்கோட்டையின் மேல், என்னையும் அறியாமலே காதலாகி கசிந்துருகிப்போனேன்.

    பாசவலை படத்தை, பத்து தடவை பார்த்தேன்; பாடல்களுக்காகத்தான்!

    பட்டுக்கோட்டையின் பாடல், என்னுள் பூசிக் கிடந்த சிறுகதை எழுதும் ஆசை, ஓவியம் வரையும் ஆசை, நாடகம் எழுதும் ஆசை அனைத்தையும் ஒருசேர ஒரே நாளில் கழுவி விட்டது.

    பாடல்கள் எழுத வேண்டும், அதுவும் படப்பாடல்களை எழுத வேண்டும், இந்த முயற்சியையே ஒரு தவமாகப் பழகி, இதில் காரியசித்தி பெற வேண்டும் என்னும் புதியதோர் வேட்கை வேர்விட்டது.''

    இவ்வாறு வாலி எழுதியுள்ளார்.

    "பாசவலை'' படத்தில் எம்.கே.ராதா, ஜி.வரலட்சுமி, எம்.என்.ராஜம் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தாலும், இளம் கதாநாயகனாக நடித்தவர் வி.கோபாலகிருஷ்ணன்.

    அவர் நடிப்பு வாலிக்கு மிகவும் பிடித்திருந்தது. அவரை பாராட்டி கடிதம் எழுதினார். அதற்கு கோபாலகிருஷ்ணன் பதில் எழுதினார்.

    கடிதப் போக்குவரத்து, அவர்கள் இடையே நட்புறவை வளர்த்தது. இந்த நட்புறவு, வாலியின் திரை உலகப் பிரவேசத்துக்கு வழி வகுத்தது.
    எம்.ஜி.ஆரின் புகழ் பெற்ற பாடல்கள் பலவற்றை எழுதியவர்; ஓவியராக இருந்து நாடக ஆசிரியரானவர்; நாடகத்திலிருந்து சினிமா உலகுக்கு வந்தவர் அவர்தான் கவிஞர் வாலி.
    எம்.ஜி.ஆரின் புகழ் பெற்ற பாடல்கள் பலவற்றை எழுதியவர்; ஓவியராக இருந்து நாடக ஆசிரியரானவர்; நாடகத்திலிருந்து சினிமா உலகுக்கு வந்தவர் அவர்தான் கவிஞர் வாலி.

    அவர் சினிமா உலகில் எளிதாகப் புகழ் பெற்று விடவில்லை. எதிர்நீச்சல் போட்டு வெற்றி பெற்றார்.

    வாலியின் சொந்த ஊர் ஸ்ரீரங்கம். தந்தை பெயர் சீனிவாச அய்யங்கார். தாயார் பொன்னம்மாள். வாலியின் இயற்பெயர் ரங்கராஜன். சிறு வயதில் இருந்தே ஓவியம் வரைவதில் ஆர்வம் கொண்டிருந்தார். பிரபல ஓவியர் `மாலி' போல் புகழ் பெறவேண்டும் என்று ஆசை.

    இதனால், பாபு என்ற அவருடைய பள்ளித் தோழர், "வாலி'' என்ற பெயரை சூட்டினார். இதை அறிந்த அவருடைய ஆசிரியர், "உனக்கு வால் இல்லையேடா! அப்புறம் எப்படி வாலின்னு பெயர் வெச்சுக்கிட்டே?'' என்று கேலி செய்தார்.

    உடனே ஒரு துண்டு காகிதத்தை எடுத்து, "வாலில்லை என்பதால் வாலியாகக்கூடாதா? காலில்லை என்பதால் கடிகாரம் ஓடாதா?'' என்று ஒரு கவிதையை எழுதி, ஆசிரியரிடமே நீட்டினார்.

    அதைப் படித்த ஆசிரியர், "பரவாயில்லையே! கவிதை கூட நன்றாக எழுதுகிறாயே!'' என்று முதுகில் தட்டிக்கொடுத்தார்.

    ஓவியம் வரைவதுடன் கதை, கட்டுரை, கவிதை எழுதுவதிலும் `வாலி' ஆர்வம் கொண்டிருந்தார். பத்திரிகைகளில் வரும் கதைகளை எல்லாம் விழுந்து விழுந்து படிப்பார். பிரபல மராத்தி எழுத்தாளர் காண்டேகர் எழுதிய கதைகள் அவருக்கு மனப்பாடம்.

    நண்பர்களுடன் சேர்ந்து "நேதாஜி'' என்ற கையெழுத்துப் பத்திரிகை நடத்தினார். ஸ்ரீரங்கத்துக்கு வந்திருந்த எழுத்தாளர் "கல்கி'', அந்த கையெழுத்துப் பத்திரிகையைப் பார்த்து பாராட்டியதுடன், பத்திரிகைக்கு கதை எழுதும்படி கூறினார்.

    இந்தக் காலக்கட்டத்தில், ஸ்ரீரங்கத்தில் ஏ.எஸ்.ராகவன், ஸ்ரீரங்கம் ராமகிருஷ்ணன், ஸ்ரீரங்கம் நரசிம்மன், பிலஹரி, சுஜாதா என்று பல எழுத்தாளர்கள் வசித்தார்கள். இவர்கள் எல்லாம் வாலிக்கு நண்பர்கள் ஆனார்கள்.

    ஒரு நாள் ஸ்ரீரங்கம் ஆயிரங்கால் மண்டபத்தில், பிரபல ஓவியர் "சில்பி'' ஓவியங்கள் வரைந்து கொண்டிருப்பதைப் பார்த்தார். தான் வரைந்த ஓவியங்களை அவரிடம் கொண்டு போய்க் காண்பித்தார். "கும்பகோணத்திலும், சென்னையிலும் ஓவியக் கல்லூரிகள் இருக்கின்றன. அங்கு சேர்ந்து ஓவியம் பயின்றால், சிறந்த ஓவியனாக வரலாம்'' என்று சில்பி ஆலோசனை கூறினார்.

    இந்த சமயத்தில், திருச்சியில் புகழ் பெற்ற கவிஞராக விளங்கிய திரிலோக சீதாராம், மகாகவி பாரதியாரின் மகள் தங்கம்மாள் பாரதியுடன் வாலியின் வீட்டுக்கு வந்தார்.

    வாலி வரைந்த பாரதியாரின் படம், சுவரில் மாட்டப்பட்டிருந்தது. அதைப் பார்த்த தங்கம்மாள் பாரதி, "அப்பா மாதிரியே இருக்கு. நன்றாக வரைந்திருக்கே'' என்று வாலியைப் பாராட்டியதுடன், "பையனை படம் வரையற துறையிலேயே விடுங்க. நன்றாக முன்னுக்கு வருவான்'' என்று வாலியின் பெற்றோரிடம் கூறினார்.

    கடன் வாங்கியாவது பையனை சென்னைக்கு அனுப்பி, ஓவியம் வரைய செய்வது என்ற முடிவுக்கு வந்தார், வாலியின் தந்தை. அதன்படி, சென்னைக்கு ரெயில் ஏறினார், வாலி. எழும்பூரில் உள்ள ஓவியக் கல்லூரியில் சேர்ந்தார்.

    சிந்தாதிரிப்பேட்டையில், ஒரு நண்பனுடன் தங்கிக்கொண்டு ஓவியக் கல்லூரிக்கு போய் வந்தார்.

    ஓவியக் கல்லூரியில் ஏற்பட்ட அனுபவம் பற்றி வாலி கூறியிருப்பதாவது:-

    "ஓவியக் கல்லூரியில் என்னுடைய வகுப்பில் மாடலிங் என்ற பெயரில், ஆண், பெண்கள் ஆடாது, அசையாது சிலை போல் நிற்பது உண்டு.

    `மாடலிங்'காக முதன் முதலில் சந்தித்தது, இருபத்தைந்து வயதிற்குள் இளம் பருவத்தை சற்றே கடந்து நின்ற ஒரு பெண்ணைத்தான். அந்தப் பெண்ணைப் பார்த்து, அப்படியே வண்ண ஓவியமாக வரையவேண்டும்.

    அந்தப்பெண் எங்களுக்கு முன்னால் வந்து நிற்க, எந்த கோணத்தில் எப்படி `போஸ்' தரவேண்டும் என்பதை ஆசிரியர் சொல்லிக் கொடுத்தார்.

    நான், என் மேஜைக்குக் கீழே குனிந்து, ஓவியம் வரைவதற்காக வைத்திருந்த உபகரணங்களை எடுத்து மேஜை மíது வைத்து விட்டு, `மாடலிங்'காக நின்ற அந்த பெண்ணை நிமிர்ந்து பார்த்தேன்.

    ஒரு விநாடி எனக்குத் தலை சுற்றியது. ரத்தமே உறைந்து விடுவது போல், உடலெங்கும் ஒரு சிலிர்ப்பு பரவியது. என் கை கால்கள் வெடவெடத்தன.

    காரணம், அந்தப் பெண் முழு நிர்வாணமாக நின்று கொண்டிருந்தாள்! நிர்வாணமாகப் பெண்களை வரைவது ஓவியத்தில் ஒரு பாடமாகும்.

    ஓவியக் கல்லூரியில் நான் பயின்றது "கமர்ஷியல் ஆர்ட்.'' ஓராண்டுதான் நான் படித்தேன். பிறகு அந்தப் படிப்புக்கே முற்றுப்புள்ளி வைத்து விட்டு, ஏதோ ஓர் உந்துதலால் ஸ்ரீரங்கம் திரும்பிவிட்டேன்.

    ஸ்ரீரங்கத்தில், "வாலி பப்ளிசிட்டீஸ்'' என்று சொந்தமாக ஒரு விளம்பர நிறுவனத்தை நிறுவினேன். அதுவும், வள்ளலார் கதை போல ஆயிற்று. "கடை விரித்தேன்; கொள்வார் இல்லை.''

    எதிலும் நான் உருப்படாமல் போய் விடுவேனோ என்று என் தாயும், தந்தையும் என் எதிர்காலம் பற்றி மலையளவு வருத்தத்தை மனதில் தேக்கி வைத்திருந்தனர்.''

    இவ்வாறு குறிப்பிட்டுள்ளார், வாலி.
    தமிழ்ப்பட உலகில் சிம்மக்குரலில் வசனம் பேசி புகழ் பெற்றவர் சிவாஜிகணேசன். அவரையடுத்து எஸ்.எஸ்.ராஜேந்திரன், சிறந்த குரல் வளம் படைத்தவர்.
    தமிழ்ப்பட உலகில் சிம்மக்குரலில் வசனம் பேசி புகழ் பெற்றவர் சிவாஜிகணேசன். அவரையடுத்து எஸ்.எஸ்.ராஜேந்திரன், சிறந்த குரல் வளம் படைத்தவர். இவர்களையடுத்து, கம்பீரமான குரல் கொண்ட நடிகர் கே.ஆர்.ராம்சிங்.

    கதாநாயகனாகவும், வில்லனாகவும், குணச்சித்திர நடிகராகவும் விளங்கியவர். பிற்காலத்தில் நூற்றுக்கணக்கான "டப்பிங்'' படங்களுக்கு குரல் கொடுத்தவர்.

    கே.ஆர்.ராம்சிங், 1915-ல் நாகர்கோவிலில் பிறந்தார். தந்தை பெயர் ரூப்சந்திரலால். தாயார் ராதாபாய். இவர்கள் ராஜபுத்திர வம்சாவழியினர்.

    நாகர்கோவில் இந்து உயர்நிலைப்பள்ளியில் "இன்டர் மீடியட்'' (தற்போதைய "பிளஸ்-2'') வரை படித்தார்.

    பள்ளியில் படிக்கும்போதே, ராம்சிங்கிற்கு நாடகத்தின் மீது ஆர்வம் மிகுந்திருந்தது. அதை அவரது பெற்றோர்கள் விரும்பவில்லை. இந்த சமயத்தில் அவரது தகப்பனார், உடல் நலம் குன்றி இறந்து போனார். அப்போது ராம்சிங்குக்கு வயது 15. நாடகத்தின் மீதிருந்த ஆர்வத்தில் தன் குடும்பத்தை விட்டு வெளியேறி ஒவ்வொரு நாடகக் கம்பெனிக்கும் ஏறி இறங்கி வாய்ப்புகள் கேட்டார். சிறு, சிறு வேடங்களில் நடிக்கத் தொடங்கினார்.

    இவ்வாறு தொடங்கிய இவரது நாடக பிரவேசம், சில ஆண்டுகளில் அவரை சிறந்த நடிகராக மிளிரச் செய்தது.

    தனது நடிப்பால், கணீரென்ற குரல் வளத்தால் புகழ் பெற்ற இவரை காரைக்குடி வைரம் அருணாசலம் செட்டியார் நடத்தி வந்த "ஸ்ரீராமபால கான வினோத சபா'' என்ற நாடகக் கம்பெனி நடிக்க அழைத்தது. இந்த நாடகக் கம்பெனியில் எம்.எஸ்.விஸ்வநாதன், நடிகர் ஆர்.முத்துராமன், எம்.கே.முஸ்தபா, "சட்டாம்பிள்ளை'' வெங்கட்ராமன், எம்.எஸ்.எஸ்.பாக்கியம், எஸ்.எம்.ராமநாதன் போன்ற கலைஞர்கள் அப்போது நடித்து வந்தனர்.

    கே.ஆர்.ராம்சிங், கம்பீர தோற்றம் கொண்டவர். "புயலுக்குப்பின்'' என்ற நாடகத்தில், ஒற்றைக்கால் சர்வாதிகாரியாக நடித்து பெரும் புகழ் பெற்றார்.

    பின்னர், "திருமழிசை ஆழ்வார்'' பக்தி நாடகத்தில் நடித்தார். இந்த நாடகம் சென்னையில் தொடர்ந்து 400 நாட்கள் நடந்தது.

    நாடகத்தில் புகழ் பெற்று விளங்கிய ராம்சிங்குக்கு, சினிமா வாய்ப்பு தேடி வந்தது.

    1947-ல் ஜகன்னாத் புரொடக்ஷன்ஸ் என்ற திரைப்பட நிறுவனம், "விஸ்வாமித்ரா'' என்ற படத்தை தயாரித்தது. கதாநாயகியாக, அன்றைய "கனவுக்கன்னி'' டி.ஆர்.ராஜகுமாரியும், கதாநாயகனாக ராம்சிங்கும் நடித்தனர். இப்படத்திற்கு பம்மல் சம்பந்த முதலியார் ("மனோகரா'' கதையை எழுதியவர்) வசனம் எழுதினார்.

    தமிழ், இந்தி ஆகிய இரு மொழிகளிலும் இப்படம் ஒரே நேரத்தில் தயாராகி வெளிவந்தது. இந்தியிலும் ராம்சிங்தான் கதாநாயகன். இப்படம் வெற்றி பெறவில்லை. எனவே, ராம்சிங் மீண்டும் நாடக உலகுக்கே திரும்ப வேண்டியதாயிற்று. "ஜீவன்'', "பிலோமினாள்'', "எதிர்பாராதது'' உள்பட பல நாடகங்களில் நடித்தார்.

    நீண்ட இடைவெளிக்குப்பிறகு, திரைப்படத்துறை மீண்டும் அழைத்தது.

    டி.என்.ஆர். புரொடக்ஷன்ஸ் தயாரித்த "மின்னல் வீரன்'' திரைப்படத்தில் வில்லனாக நடித்தார். இப்படத்தில், ரஞ்சன் கதாநாயகனாகவும், ஜெயலலிதாவின் தாயார் சந்தியா கதாநாயகியாகவும் நடித்தனர். "புயல்'' என்ற படத்திலும் வில்லனாக ராம்சிங் நடித்தார்.

    ஜுபிடர் பிக்சர்ஸ் தயாரித்த "கன்னியின் காதலி'' படத்தில் வில்லனாக நடித்தார். அஞ்சலிதேவி, மாதுரிதேவி, எஸ்.ஏ.நடராஜன் நடித்த இப்படத்தில்தான், கவிஞர் கண்ணதாசன் முதன் முதலாக பாடல் எழுதினார்.

    கே.ஆர்.ராமசாமி கதாநாயகனாக நடித்த "விஜயகுமாரி'' படத்தில் ஒற்றைக்கால் மந்திரவாதியாக வில்லன் வேடத்தில் பிரமாதமாக நடித்தார், ராம்சிங்,

    பிரபல இயக்குனர் கே.ராம்நாத் டைரக்ட் செய்த படம் இது.

    1958-ல் எம்.ஜி.ஆர். பிரமாண்டமாக தயாரித்த "நாடோடி மன்னன்'' படத்தில், பானுமதியின் தந்தையாக மீண்டும் ஒற்றைக்காலுடன் நடித்தார். இந்தப்படம் அவருக்கு புகழ் தேடித்தந்தது.

    இதன்பின், எம்.ஜி.ஆர் - சாவித்திரி நடித்த "மகாதேவி'' படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தார். எம்.ஜி.ஆரின் கண்களை குருடாக்குவது போலவும், பிறகு அவரை காப்பாற்றுவது போலவும் ராம்சிங் நடித்தது, ரசிகர்களைக் கவர்ந்தது.

    சிவாஜி - ஜமுனா இணைந்து நடித்த "மருதநாட்டு வீரன்'' படத்தில், பி.எஸ்.வீரப்பாவும், ராம்சிங்கும் வில்லன்களாக நடித்தனர்.

    பிறகு "நாகநந்தினி'', "தோழன்'' ஆகிய படங்களில் ராம்சிங் நடித்தார். இதில் "தோழன்'' படத்தில் அவருக்கு மீண்டும் ஒற்றைக்கால் வேடம்!

    இந்தி, தெலுங்கு முதலான மொழிகளில் தயாரிக்கப்பட்ட படங்கள் தமிழில் "டப்'' செய்யப்பட்டபோது, முக்கிய நடிகர்களுக்கு குரல் கொடுத்தவர், ராம்சிங்.

    ராஜ்கபூரின் "ஆ'' என்ற படம் தமிழில் "அவன்'' என்ற பெயரில் மொழி மாற்றம் செய்யப்பட்டபோது, ராஜ்கபூரின் தந்தை பிருதிவிராஜ் கபூருக்கு ராம்சிங் குரல் கொடுத்தார்.

    அவர் குரல் பிருதிவிராஜ் கபூரை வெகுவாகக் கவர்ந்தது. பின்னர் திலீப்குமார் - பிருதிவிராஜ்கபூர் நடித்த பிரமாண்டமான "மொகல் - ஏ - ஆஜாம்'' என்ற படம் தமிழில் "அக்பர்'' என்ற பெயரில் `டப்' செய்யப்பட்டபோது, தனக்கு குரல் கொடுக்கும்படி ராம்சிங்கிடம் பிருதிவிராஜ் கபூர் கேட்டுக்கொண்டார். அதன்படி அக்பராக நடித்த பிருதிவிராஜ் கபூருக்கு குரல் கொடுத்தார், ராம்சிங்.

    இடையே "தாழம்பூ'', "ஆசை முகம்'', "அஞ்சல் பெட்டி 520'', "பாட்டொன்று கேட்டேன்'', "பாக்தாத் பேரழகி'', "அரசகட்டளை'', "ஒரு வெள்ளாடு வேங்கை ஆகிறது'', "துணிவே துணை'' முதலிய படங்களில் நடித்தார்.

    பிறகு நடிப்பை குறைத்துக்கொண்டு, "டப்பிங்'' படங்களுக்கு குரல் கொடுப்பதில் கவனம் செலுத்தினார். நூற்றுக்கணக்கான "டப்பிங்'' படங்களுக்கு குரல் கொடுத்தார். விட்டலாச்சார்யா படங்களில், தெலுங்கு வில்லன் நடிகர் ராஜ்நளாவுக்கு பெரும்பாலும் குரல் கொடுத்தவர், ராம்சிங்தான்.

    பல நாடகங்களிலும், திரைப்படங்களிலும், ஒற்றைக்கால் வில்லனாக, ஒரு காலை கயிற்றால் மடக்கிக் கட்டிக்கொண்டு நடித்ததால், அவரது இடது காலில் ரத்தம் உறைய ஆரம்பித்தது. சரியான சிகிச்சை பெற்றுக்கொள்ளாமல், தொழிலில் கவனமாக இருந்ததால், உடல் நலம்

    குன்றியது.கோடம்பாக்கம் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட அவர் 1985 அக்டோபர் 18-ந்தேதி காலமானார். அப்போது அவருக்கு வயது 70.

    ராம்சிங்கின் மனைவி பெயர் லட்சுமி.

    இவர்களுக்கு சந்திரமோகன், ரவீந்தர் என்ற மகன்களும், ரோகிணி என்ற மகளும் உள்ளனர்.

    தமிழக அரசின் "கலைமாமணி'' பட்டம் உள்பட பல விருதுகளும், பரிசுகளும் பெற்றவர், ராம்சிங்.
    டி.ஏ.மதுரம், சி.டி.ராஜகாந்தம் ஆகியோரை அடுத்து, நகைச்சுவை நடிப்பில் கொடிகட்டிப் பறந்தவர், டி.பி.முத்துலட்சுமி.
    டி.ஏ.மதுரம், சி.டி.ராஜகாந்தம் ஆகியோரை அடுத்து, நகைச்சுவை நடிப்பில் கொடிகட்டிப் பறந்தவர், டி.பி.முத்துலட்சுமி. அவர் நடித்த படங்கள் சுமார் 300. முத்துலட்சுமியின் சொந்த ஊர் தூத்துக்குடி. தந்தை பொன்னைய பாண்டியர். தாயார் சண்முகத்தம்மாள். அவர்களுடைய ஒரே மகள் முத்துலட்சுமி.

    தூத்துக்குடியில் எட்டாம் வகுப்பு வரை படித்தார். படிக்கும்போதே, `பாட்டும், நடனமும் கற்றுக்கொண்டு சினிமா துறையில் நுழைய வேண்டும்' என்ற ஆசை ஏற்பட்டது. எட்டாம் வகுப்பை முடித்தபோது, தன் விருப்பத்தை பெற்றோரிடம் கூறினார். அவர்கள் திடுக்கிட்டனர்.

    முத்துலட்சுமியின் தந்தை ஒரு விவசாயி. "நமக்கெல்லாம் சினிமா ஒத்து வராது. அந்த ஆசையை விட்டு விடு'' என்று கூறிவிட்டார்.

    ஆனால் முத்துலட்சுமி மனம் தளரவில்லை. எப்படியும் சினிமா நடிகை ஆகவேண்டும் என்று உறுதி கொண்டார். சென்னையில் அவருடைய மாமா எம்.பெருமாள், டைரக்டர் கே.சுப்பிரமணியத்தின் சினிமா கம்பெனியில் நடனக்கலைஞராகப் பணியாற்றி வந்தார். அவருடைய உதவியுடன் சினிமாத்துறையில் நுழைய முடிவு செய்தார். பெற்றோரிடம் சொல்லிக் கொள்ளாமல் சென்னைக்கு ரெயில் ஏறினார்.

    முத்துலட்சுமிக்கு, பெருமாளே நடனமும், பாட்டும் கற்றுக்கொடுத்தார்.

    அந்த சமயத்தில் ஜெமினி அதிபர் எஸ்.எஸ்.வாசன், "சந்திரலேகா''வை பிரமாண்டமாகத் தயாரித்து வந்தார். பெருமாளின் முயற்சியினால், "சந்திரலேகா''வில் வரும் முரசு நடனத்தில் இடம் பெறும் வாய்ப்பு முத்துலட்சுமிக்கு கிடைத்தது. ஏராளமான பெண்கள் பங்கு கொண்ட அந்த நடனக் காட்சியில், முத்துலட்சுமி நடனம் ஆடியதுடன், சில காட்சிகளில் டி.ஆர்.ராஜகுமாரிக்கு "டூப்''பாக ஆடினார்.

    ஜெமினியில் 65 ரூபாய் மாத சம்பளத்தில் சில காலம் வேலை பார்த்தார்.

    பின்னர் "மகாபலிசக்ரவர்த்தி'', "மின்மினி'', "தேவமனோகரி'', "பாரிஜாதம்'' முதலான படங்களில் நடித்தார்.

    1950-ல், மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்த "பொன்முடி'' படத்தில் நகைச்சுவை வேடத்தில் நடித்தார். அது முத்துலட்சுமியின் வாழ்க்கையில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியது. ஏராளமான பட வாய்ப்புகள் தேடிவந்தன.

    1951-ல் ஏவி.எம். தயாரித்த அண்ணாவின் "ஓர் இரவு'' படத்தில், டி.கே.சண்முகத்தின் மனைவி பவானியாக நடித்தார்.

    பின்னர் "சர்வாதிகாரி'', "ஏழை உழவன்'' போன்ற படங்களில் நடித்தார்.

    மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்த "திரும்பிப்பார்'' படத்தில், சிவாஜிகணேசனின் தந்தையாக தங்கவேலு நடித்தார். (ஆரம்ப காலப்படங்களில், வயோதிக வேடத்தில் நடித்துப் புகழ் பெற்றவர் தங்கவேலு)

    வயதான காலத்தில் தங்கவேலு மணக்கும் ஊமைப் பெண்ணாக டி.பி.முத்துலட்சுமி நடித்தார்.

    1958-ல் வெளியான எம்.ஜி.ஆரின் பிரமாண்ட படமான "நாடோடி மன்ன''னில் முத்துலட்சுமிக்கு நகைச்சுவை வேடம் கிடைத்தது. அதில், தனக்கு விரைவில் கல்யாணம் நடக்க வேண்டும் என்பதற்காக, "புருஷன்! புருஷன்! புருஷன்'' என்று பூஜை செய்வார்.

    இதுபற்றி முத்துலட்சுமி கூறுகையில், "இந்தக் காட்சி படமாக்கப்படும்போது, படத்தின் டைரக்டரான எம்.ஜி.ஆர். அங்கே இருந்தார். "நன்றாக வேண்டிக்கொள். படம் திரையிடப்படுவதற்கு முன்பே உனக்கு நல்ல கணவர் கிடைப்பார்'' என்றார். அவர் சொன்னபடியே, எனக்குத் திருமணம் நடந்தது. என்னையும், என் கணவரையும் வீட்டுக்கு அழைத்து எம்.ஜி.ஆர். விருந்து கொடுத்தார்'' என்றார்.

    சிவாஜி -சரோஜாதேவி நடித்த "இருவர் உள்ளம்'' படத்தில், எம்.ஆர்.ராதாவின் ஜோடியாக முத்துலட்சுமி நடித்தார்.

    "அறிவாளி'' படத்தில் தங்கவேலுவுடன் இணைந்து நடித்தார். இதில், நகைச்சுவை காட்சிகள் பிரமாதமாக அமைந்தன.

    மனோகரா, வஞ்சிக்கோட்டை வாலிபன், அடுத்த வீட்டுப்பெண், கொஞ்சும் சலங்கை, வீரபாண்டிய கட்டபொம்மன், தங்கப்பதுமை, மரகதம், வடிவுக்கு வளைகாப்பு, மக்களைப்பெற்ற மகராசி, மாயாபஜார், அனுபவிராஜா அனுபவி, திருவருட்செல்வர் உள்பட 300-க்கும் மேற்பட்ட படங்களில் முத்துலட்சுமி நடித்துள்ளார்.

    பட உலக அனுபவங்கள் பற்றி அவர் கூறியதாவது:-

    "தங்கவேலு அண்ணனுடன் பல படங்களில் நகைச்சுவை காட்சிகளில் நடித்துள்ளேன். அவர் நல்ல திறமைசாலி. கலைவாணரைப் பின்பற்றி படத்திற்கு ஏற்ப நகைச்சுவை காட்சிகளை அமைப்பார். பந்தா இல்லாதவர். படங்களில், அபசகுனமான எந்த வார்த்தையையும் உச்சரிப்பதில்லை என்று கொள்கையே வைத்திருந்தார்.

    "டவுன் பஸ்'' படத்தில், நானும், அஞ்சலிதேவியும் பஸ் கண்டக்டர்களாக நடிப்போம். அஞ்சலிதேவியின் ஜோடியாக கண்ணப்பாவும், எனக்கு ஜோடியாக ஏ.கருணாநிதியும் நடித்தனர். குறைந்த பட்ஜெட் படம். மிக வெற்றிகரமாக ஓடியது.

    நடிகர் திலகம் சிவாஜி அண்ணன் நடித்த "அன்னையின் ஆணை''யில், தேன்மொழி என்ற கதாபாத்திரத்தில் நடித்தேன். அந்தப் படம் வெளிவந்தபோது, சிவாஜி அண்ணனுக்குப் பெண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தைக்கு "தேன்மொழி'' என்று அண்ணன் பெயரிட்டார்.

    அரியலூர் ரெயில் விபத்தில் என் தாயார் இறந்துவிட்டார். அதுபற்றி எனக்கு தந்தி வந்தது. அது ஆங்கிலத்தில் இருந்ததால், சிவாஜியிடம் கொடுத்து, படித்துச் சொல்லும்படி கேட்டேன். அதைப் படித்த அவர், உண்மையைச் சொன்னால் நான் மிகவும் அதிர்ச்சி அடைவேன் என்று கருதி, "உன் தாயாருக்கு உடம்பு சரி இல்லையாம். உடனே புறப்படு'' என்றுகூறி, தன்னுடைய காரில் என்னை அனுப்பி வைத்தார். ஒரு தங்கை போல் என்னிடம் பாசம் வைத்திருந்தார்.''

    இவ்வாறு முத்துலட்சுமி கூறினார்.

    முத்துலட்சுமியின் கணவர் பி.கே.முத்துராமலிங்கம். அரசு நிறுவனத்தில் சூப்பர்வைசராகப் பணியாற்றியவர். "தமிழ்நாடு சிலம்பாட்டக் கழக''த்தின் நிறுவனத் தலைவர்.

    தமிழக அரசின் "கலைமாமணி'' விருது, "கலைவாணர் விருது'' உள்பட பல விருதுகளைப் பெற்றவர், முத்துலட்சுமி. இவருடைய மாமன் மகன்தான் டைரக்டர் டி.பி.கஜேந்திரன்.
    நடிகை ஜெயசித்ரா, "புதிய ராகம்'' படத்தின் மூலம் டைரக்டர் ஆனார்.
    நடிகை ஜெயசித்ரா, "புதிய ராகம்'' படத்தின் மூலம் டைரக்டர் ஆனார்.

    1977-ம் ஆண்டில் ஏ.பீம்சிங் டைரக்ட் செய்த "பாத பூஜை''யில் ஜெயசித்ரா நடித்தார். தமிழ் மட்டுமின்றி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிப்படங்களிலும் நடித்தார்.

    ஜெயசித்ராவின் 100-வது படம் "நாயக்கரின் மகள்.'' முதல் படத்தை டைரக்ட் செய்த கே.எஸ்.கோபாலகிருஷ்ணன்தான், 100-வது படத்தையும் இயக்கினார். இதையொட்டி, கோபாலகிருஷ்ணனுக்கு மோதிரம் அணிவித்து வாழ்த்து பெற்றார், ஜெயசித்ரா.

    பிற்காலத்தில், டைரக்டர் மணிரத்தினத்தின் "அக்னி நட்சத்திரம்'' படத்தில் நடித்தார்.

    1988-ல், கே.பாலசந்தரின் "புதுப்புது அர்த்தங்கள்'' படத்தில் ரகுமானின் மாமியாராக (கீதாவின் அம்மாவாக) நடித்தார். இந்தப்படத்தில் நடிக்கும்போது அவருக்கு குழந்தை பிறந்தது. ஜெயசித்ரா படப்பிடிப்புக்காக ஸ்டூடியோ வந்து போவது சிரமமாக இருக்கும் என்பதால், குடியிருந்த பகுதியில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து, படப்பிடிப்பை நடத்தினார்கள்.

    1991-ல் ரகுமானை கதாநாயகனாக வைத்து, "புதிய ராகம்'' என்ற படத்தை சொந்தமாகத் தயாரித்து டைரக்ட் செய்தார்.

    ஜெயசித்ராவின் மகன் அம்ரேசுக்கு அப்போது ஒரு வயது. அவனையும் அப்படத்தில் நடிக்க வைத்தார்.

    ஜெயசித்ரா தமிழிலும், இதர தென்மாநில மொழிகளிலும் 200-க்கு மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இந்தி மொழி தெரியாதாகையால், இந்திப்படங்களில் நடிக்கவில்லை.

    படங்களில் நடித்து வந்தபோது, "சுமங்கலி'' டெலிவிஷன் தொடரில் நடித்தார். அந்தத் தொடரில் இவர் ஏற்று நடித்த சாவித்திரி என்ற வேடம், பெண்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.

    பின்னர் "சிவரஞ்சனி'' என்ற தொடரை சொந்தமாகத் தயாரித்தார். அந்தத் தொடரின் கதை, திரைக்கதை, டைரக்ஷன் ஆகிய பொறுப்புகளையும் கவனித்தார்.

    இந்தத் தொடரில் ஜெயசித்ராவின் மகன் அம்ரேஷ், கண்ணன் என்ற கேரக்டரில் நடித்தார்.

    ஜெய்சித்ரா -கணேஷ் தம்பதிகளின் மகன் அம்ரேஷ். இப்போது "பிளஸ்-2'' படித்து முடித்துள்ளார். சினிமாவில் அவரை முன்னுக்குக்கொண்டு வரவேண்டும் என்பது ஜெயசித்ராவின் விருப்பம். அதற்காக நடனம், சண்டை முதலியவற்றில் பயிற்சி அளித்து வருகிறார்.

    "சிவரஞ்சனி'' டெலிவிஷன் தொடரில், சண்டைக்காட்சிகளை வடிவமைத்தவர் அம்ரேஷ் என்பது குறிப்பிடத்தக்கது.

    திரைப்பட அனுபவங்கள் பற்றி ஜெயசித்ரா கூறியதாவது:-

    "நான் கதாநாயகியாக நடிக்கத் தொடங்கியபோது, ரொம்ப பிசியாக இருந்தேன். 1974 முதல் 1976 வரை, ஒவ்வொரு ஆண்டும் 18 படங்களில் நடித்தேன். ஆயிரத்திற்கு மேற்பட்ட பரத நாட்டிய நிகழ்ச்சியும் பண்ணி இருக்கிறேன்.

    கால்ஷீட் பணிகளை கவனிப்பதற்கு யாரையும் வேலைக்கு வைத்துக்கொள்ளவில்லை. நானே கவனித்தேன். சோர்வின்றி உழைத்ததாலும், என் பணிகளில் கவனமாக இருந்ததாலும்தான் 200 படங்களுக்கு மேல் நடிக்க முடிந்தது.

    ரஜினிகாந்த் தமிழ்ப்படங்களில் நடிக்க வருவதற்கு முன், சிவாஜிராவ் என்ற பெயரில் "தொலிரேகி -கடிசிந்தி'' என்ற தெலுங்குப்படத்தில் என்னுடன் நடித்துள்ளார்.

    முதன் முதலில் கமல் கதாநாயகனாக நடித்த "பட்டாம் பூச்சி'' படத்தில், நான்தான் அவருக்கு ஜோடியாக நடித்தேன். இதுகுறித்து பெருமைப்படுகிறேன்.

    நான் டைரக்ட் செய்த `புதிய ராகம்' படத்தை, ராஜீவ் காந்திக்கு போட்டுக்காட்ட நினைத்தேன். ஸ்ரீபெரும்புதூருக்கு செல்லும் வழியில் அவரை விமான நிலையத்தில் சந்தித்தேன்.

    தேர்தல் பணிகளில் தீவிரமாக இருந்ததால், படம் பார்க்க இயலாமையைத் தெரிவித்தார். எனக்கு வாழ்த்து எழுதிக் கொடுத்தார்.

    படத்தை தியேட்டரில் தொடங்கி வைத்துவிட்டு, ஸ்ரீபெரும்புதூர் சென்று ராஜீவ் காந்தி கூட்டத்தில் கலந்து கொள்ள எண்ணினேன். தியேட்டரில் மின்சார தடை ஏற்பட்டதால், படத்தை உரிய நேரத்தில் தொடங்க முடியவில்லை. இதனால் நான் ஸ்ரீபெருமëபுதூருக்கு செல்ல முடியாமல் போய்விட்டது. சென்றிருந்தால், அந்த குண்டு வெடிப்பில் நானும் சிக்கி இருப்பேன்.

    நல்ல கேரக்டர் கிடைத்தால், படங்களில் நடிப்பேன்.

    என் மகனுக்கு நடிப்புத் திறமை இருக்கிறது. எனவே, நல்ல முறையில் அவனை அறிமுகப்படுத்த பயிற்சி அளித்து வருகிறேன்.

    எல்லோரும் சினிமாத்துறையில் முன்னேறி விட முடியாது. அதற்கு, கடவுளின் அனுக்கிரகம் தேவை.''

    இவ்வாறு ஜெயசித்ரா கூறினார்.
    நடிகை ஜெயசித்ரா, "புதிய ராகம்'' படத்தின் மூலம் டைரக்டர் ஆனார்.
    1977-ம் ஆண்டில் ஏ.பீம்சிங் டைரக்ட் செய்த "பாத பூஜை''யில் ஜெயசித்ரா நடித்தார். தமிழ் மட்டுமின்றி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிப்படங்களிலும் நடித்தார்.

    ஜெயசித்ராவின் 100-வது படம் "நாயக்கரின் மகள்.'' முதல் படத்தை டைரக்ட் செய்த கே.எஸ்.கோபாலகிருஷ்ணன்தான், 100-வது படத்தையும் இயக்கினார். இதையொட்டி, கோபாலகிருஷ்ணனுக்கு மோதிரம் அணிவித்து வாழ்த்து பெற்றார், ஜெயசித்ரா.

    பிற்காலத்தில், டைரக்டர் மணிரத்தினத்தின் "அக்னி நட்சத்திரம்'' படத்தில் நடித்தார்.

    1988-ல், கே.பாலசந்தரின் "புதுப்புது அர்த்தங்கள்'' படத்தில் ரகுமானின் மாமியாராக (கீதாவின் அம்மாவாக) நடித்தார். இந்தப்படத்தில் நடிக்கும்போது அவருக்கு குழந்தை பிறந்தது. ஜெயசித்ரா படப்பிடிப்புக்காக ஸ்டூடியோ வந்து போவது சிரமமாக இருக்கும் என்பதால், குடியிருந்த பகுதியில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து, படப்பிடிப்பை நடத்தினார்கள்.

    1991-ல் ரகுமானை கதாநாயகனாக வைத்து, "புதிய ராகம்'' என்ற படத்தை சொந்தமாகத் தயாரித்து டைரக்ட் செய்தார்.

    ஜெயசித்ராவின் மகன் அம்ரேசுக்கு அப்போது ஒரு வயது. அவனையும் அப்படத்தில் நடிக்க வைத்தார்.

    ஜெயசித்ரா தமிழிலும், இதர தென்மாநில மொழிகளிலும் 200-க்கு மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இந்தி மொழி தெரியாதாகையால், இந்திப்படங்களில் நடிக்கவில்லை.

    படங்களில் நடித்து வந்தபோது, "சுமங்கலி'' டெலிவிஷன் தொடரில் நடித்தார். அந்தத் தொடரில் இவர் ஏற்று நடித்த சாவித்திரி என்ற வேடம், பெண்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.

    பின்னர் "சிவரஞ்சனி'' என்ற தொடரை சொந்தமாகத் தயாரித்தார். அந்தத் தொடரின் கதை, திரைக்கதை, டைரக்ஷன் ஆகிய பொறுப்புகளையும் கவனித்தார்.

    இந்தத் தொடரில் ஜெயசித்ராவின் மகன் அம்ரேஷ், கண்ணன் என்ற கேரக்டரில் நடித்தார்.

    ஜெய்சித்ரா -கணேஷ் தம்பதிகளின் மகன் அம்ரேஷ். இப்போது "பிளஸ்-2'' படித்து முடித்துள்ளார். சினிமாவில் அவரை முன்னுக்குக்கொண்டு வரவேண்டும் என்பது ஜெயசித்ராவின் விருப்பம். அதற்காக நடனம், சண்டை முதலியவற்றில் பயிற்சி அளித்து வருகிறார்.

    "சிவரஞ்சனி'' டெலிவிஷன் தொடரில், சண்டைக்காட்சிகளை வடிவமைத்தவர் அம்ரேஷ் என்பது குறிப்பிடத்தக்கது.

    திரைப்பட அனுபவங்கள் பற்றி ஜெயசித்ரா கூறியதாவது:-

    "நான் கதாநாயகியாக நடிக்கத் தொடங்கியபோது, ரொம்ப பிசியாக இருந்தேன். 1974 முதல் 1976 வரை, ஒவ்வொரு ஆண்டும் 18 படங்களில் நடித்தேன். ஆயிரத்திற்கு மேற்பட்ட பரத நாட்டிய நிகழ்ச்சியும் பண்ணி இருக்கிறேன்.

    கால்ஷீட் பணிகளை கவனிப்பதற்கு யாரையும் வேலைக்கு வைத்துக்கொள்ளவில்லை. நானே கவனித்தேன். சோர்வின்றி உழைத்ததாலும், என் பணிகளில் கவனமாக இருந்ததாலும்தான் 200 படங்களுக்கு மேல் நடிக்க முடிந்தது.

    ரஜினிகாந்த் தமிழ்ப்படங்களில் நடிக்க வருவதற்கு முன், சிவாஜிராவ் என்ற பெயரில் "தொலிரேகி -கடிசிந்தி'' என்ற தெலுங்குப்படத்தில் என்னுடன் நடித்துள்ளார்.

    முதன் முதலில் கமல் கதாநாயகனாக நடித்த "பட்டாம் பூச்சி'' படத்தில், நான்தான் அவருக்கு ஜோடியாக நடித்தேன். இதுகுறித்து பெருமைப்படுகிறேன்.

    நான் டைரக்ட் செய்த `புதிய ராகம்' படத்தை, ராஜீவ் காந்திக்கு போட்டுக்காட்ட நினைத்தேன். ஸ்ரீபெரும்புதூருக்கு செல்லும் வழியில் அவரை விமான நிலையத்தில் சந்தித்தேன்.

    தேர்தல் பணிகளில் தீவிரமாக இருந்ததால், படம் பார்க்க இயலாமையைத் தெரிவித்தார். எனக்கு வாழ்த்து எழுதிக் கொடுத்தார்.

    படத்தை தியேட்டரில் தொடங்கி வைத்துவிட்டு, ஸ்ரீபெரும்புதூர் சென்று ராஜீவ் காந்தி கூட்டத்தில் கலந்து கொள்ள எண்ணினேன். தியேட்டரில் மின்சார தடை ஏற்பட்டதால், படத்தை உரிய நேரத்தில் தொடங்க முடியவில்லை. இதனால் நான் ஸ்ரீபெரும்புதூருக்கு செல்ல முடியாமல் போய்விட்டது. சென்றிருந்தால், அந்த குண்டு வெடிப்பில் நானும் சிக்கி இருப்பேன்.

    நல்ல கேரக்டர் கிடைத்தால், படங்களில் நடிப்பேன்.

    என் மகனுக்கு நடிப்புத் திறமை இருக்கிறது. எனவே, நல்ல முறையில் அவனை அறிமுகப்படுத்த பயிற்சி அளித்து வருகிறேன்.

    எல்லோரும் சினிமாத்துறையில் முன்னேறி விட முடியாது. அதற்கு, கடவுளின் அனுக்கிரகம் தேவை.''

    இவ்வாறு ஜெயசித்ரா கூறினார். #tamilnews
    டைரக்டர் பி.மாதவன் தயாரிப்பில் உருவான "பொண்ணுக்கு தங்க மனசு'' படத்தின் மூலம் ஜெயசித்ரா கதாநாயகியானார். எம்.ஜி.ஆர்., சிவாஜி படங்களிலும் அவர் இடம் பெற்றார்.
    டைரக்டர் பி.மாதவன் தயாரிப்பில் உருவான "பொண்ணுக்கு தங்க மனசு'' படத்தின் மூலம் ஜெயசித்ரா கதாநாயகியானார். எம்.ஜி.ஆர்., சிவாஜி படங்களிலும் அவர் இடம் பெற்றார்.

    "குறத்திமகன்'' படத்தில் நடித்ததற்கு பிறகு தொடர்ச்சியாக கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் டைரக்ஷனில் "வாழையடி வாழை'', "தசாவதாரம்'' ஆகிய படங்களில் ஜெயசித்ரா நடித்தார். டைரக்டர் பி.மாதவன் மூலம் 1973-ம் ஆண்டு "பொண்ணுக்கு தங்கமனசு'' படத்தில் கதாநாயகியாக நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. இதில் சிவகுமாருக்கு ஜோடியாக நடித்தார்.

    நடிப்பில் ஆர்வம் இல்லாமல் இருந்த ஜெயசித்ராவுக்கு, அந்த படத்தில் நடித்த பிறகுதான் நடிப்புத்துறை மீது ஆர்வம் வந்தது.

    1974-ம் ஆண்டு சிவாஜியின் மகளாக "பாரதவிலாஸ்'' படத்தில் ஜெயசித்ரா நடித்தார்.

    ஜெயசித்ரா பள்ளியில் படித்துக்கொண்டு இருந்தபோது இந்த படத்தில் நடித்தார். அவர் படத்தில் நடிக்கும்போது தேர்வு நடந்து கொண்டு இருந்தது. எனவே சூட்டிங் சென்றுவிட்டு மேக்கப் சரிவர கலைக்காமல் அப்படியே சென்று தேர்வு எழுதினார். 7-ம் வகுப்பு படிக்கும் போதே நடிக்கத்தொடங்கிய ஜெயசித்ரா, 10-ம் வகுப்பு படிக்கும் வரை திரைப்படங்களில் நடித்ததை மறைத்து வந்தார். சில ஆசிரியைகளுக்கு இது தெரிந்தாலும், தெரிந்ததுபோல் யாரும் காட்டிக்கொள்ளவில்லை.

    தொடர்ந்து சிவாஜியுடன் "சத்யம்'', "லட்சுமி வந்தாச்சு'', "பைலட் பிரேம்நாத்'', "ரத்தபாசம்'' உள்பட பல படங்களில் நடித்தார்.

    சிவாஜி பற்றி ஜெயசித்ரா கூறும்போது, "பாரதவிலாஸ் படத்தில் நடித்தபோது, நன்றாக நடிக்க கற்றுக்கொடுத்தார். அப்போது நான் பாக்கு போட்டுக்கொண்டு டயலாக் பேசுவேன். அதற்கு சிவாஜி, "இப்படி பாக்கு போடக்கூடாது'' என்று கூறினார். அன்று முதல், நடிக்கும்போது நான் பாக்கு போடுவது இல்லை. சத்தியம் படத்தில் அதிகமாக டயலாக் பேச எனக்கு வாய்ப்பு கொடுத்தார்" என்றார்.

    "பொன்வண்டு'' என்ற படத்தில் நடிக்கும்போது, 11-ம் வகுப்பு தேர்வு எழுதமுடியாமல் போயிற்று.

    பின்னர் டைரக்டர் ஏ.பி.நாகராஜனின் "நவரத்னம்'' படத்தில் ஜெயசித்ரா நடித்தார். இந்த படத்தில் 9 கதாநாயகிகளை எம்.ஜி.ஆர் சந்திக்கும் நிலை ஏற்படும். அதில் பவளாயி என்ற கேரக்டரில் ஜெயசித்ரா நடித்தார். படத்தில் நடிக்கும் போது ஜெயசித்ரா குளத்தில் குதிப்பது போல ஒரு காட்சி எடுத்தனர்.

    இது குறித்து ஜெயசித்ரா கூறும்போது, "நான் குளத்துக்குள் குதிப்பதற்கு முன்பு தண்ணீர் அழுக்காக இருக்கிறதே என்று லேசாக கூறினேன். இது அருகே நின்ற எம்.ஜி.ஆருக்கு கேட்டு இருக்கிறது. உடனே, அந்தக் குளத்தில் இருந்த தண்ணீர் அனைத்தையும் மாற்றி, புதுத்தண்ணீர் நிரப்ப எம்.ஜி.ஆர் உத்தரவிட்டார். அது மட்டும் இல்லாமல் எனக்கு நீச்சல் தெரியாது என்பதால், கீழே பலகையை போட்டு உள்ளே கயிறு போட்டுக்கொடுத்தார்" என்றார்.

    டைரக்டர் கே.பாலசந்தரின் "அரங்கேற்றம்'' என்ற படத்தில் ஜெயசித்ரா நடித்தார்.

    தொடர்ந்து "சொல்லத்தான் நினைக்கிறேன்'' படத்தில் 3-வது தங்கையாக நடித்தார். இந்தப் படத்தில் நடித்தபிறகுதான், ஜெயசித்ராவுக்கு "குணச்சித்திர நடிகை'' என்ற பெயர்கிடைத்தது. "டொட்டடொய்ங்'' என்ற மேனரிசம் அந்தப் படத்தில்தான் வந்தது.

    அந்த படத்தில் நடித்தது பற்றி ஜெயசித்ரா கூறும்போது, "நான் கதாபாத்திரமாக மாறி சிறப்பாக நடித்தேன் என்று பல நடிகைகளிடம் பாலசந்தர் சார் கூறியதாகக் கேள்விப்பட்டேன். அது எனக்கு மிகவும் சந்தேசமாக இருந்தது. அவரது டைரக்ஷனில் நடித்தை பெருமையாக கருதுகிறேன்" என்றார்.

    தேவர் பிலிம்சாரின் "வெள்ளிக்கிழமை விரதம்'' படத்தில் சிவகுமாருக்கு ஜோடியாக நடித்தார். தேவர் பிலிம்ஸ் என்றாலே மிருகங்கள் இருக்கும். இந்த படத்தில் பாம்பை நடிக்க வைத்தார்கள்.

    படத்தில் பாம்பை கண்டாலே சிவகுமாருக்கு பிடிக்காது. திருமணத்தின் போது, பாம்பை ஒரு கட்டிடத்திற்குள் போட்டு தீ வைத்து விடுவார். பாசமான பாம்பு இறந்து விட்டதே என்று ஜெயசித்ரா மயக்கமாகி விடுவார்.

    முதலிரவுக்காக அலங்கரிக்கப்பட்ட அறையில் ஜெயசித்ராவின் மீது பாம்பு ஊர்ந்து சென்று, அவர் முகம் அருகே வருவது போன்ற காட்சி படமாக்கப்பட்டது. அப்போது பாம்பு ஜெயசித்ராவின் முகத்திற்கு நேராக நின்று அவரது உதட்டை தனது நாவால் வருடிவிடும். உடனே கண் விழிக்கும் ஜெயசித்ரா, "தெய்வமே நீ உயிரோடுதான் இருக்கிறாயா?'' என்று வசனம் பேசுவார்.

    இந்த காட்சியை படத்தில் பார்க்கும் போது மெய்சிலிர்க்கும்.

    பாம்புடன் தைரியமாக நடித்தது பற்றி ஜெயசித்ரா கூறியதாவது:-

    நான் மயங்கிக் கிடப்பதுபோல் நடித்தபோது, பாம்பு என் உடல் மீது ஏறி பாம்பு என்முகத்திற்கு நேராய் வந்தது. எனக்கு பயம். அருகே தேவர், "முருகா முருகா'' என்று வணங்கிக்கொண்டு இருந்தார்.

    பாம்பு என் உதட்டை தடவிவிட்டு, படம் எடுத்து நிற்கும். உடனே நான் கண்விழித்து, "தெய்வமே நீ உயிருடன் தான் இருக்கிறாயா'' என்று சந்தோஷத்துடன் வசனம் பேசவேண்டும். அப்படி விழித்து வசனம் பேசும்போது பாம்பு திடீர் என்று எனது நெற்றியில் வேகமாக மோதியது. பாம்பு என்னைக் கடித்து விட்டது என்று நினைத்து பயந்து, வசனம் பேசுவதை நிறுத்தி விட்டேன். ஆனால், பாம்பு கடிக்கவில்லை, என்னை ஆசிர்வாதம் செய்தது. அதை என்றைக்கும் என்னால் மறக்கமுடியாது.

    இந்த காட்சியில் பயப்படாமல் நடித்ததற்காக தேவர் பாராட்டினார். தியேட்டருக்குச் சென்று படத்தைப் பார்த்தேன். அந்தக்காட்சியில் பெண்கள் மத்தியில் கிடைத்த வரவேற்பை கண்கூடாகக் கண்டேன்.

    இவ்வாறு ஜெயசித்ரா கூறினார்.

    1975-ம் ஆண்டு "சினிமாப்பைத்தியம்'' என்ற படத்தில் நடித்தார். "கல்யாணமாம் கல்யாணம்'' என்ற படத்தில் இரட்டை வேடத்தில் நடித்தார்.

    அதேபோல "அக்கரைப்பச்சை'', "கலியுககண்ணன்'', "வண்டிக்காரன்மகன்'', "பணக்காரப்பெண்'', "தேன்சிந்துதே வானம்'' உள்பட பல படங்களில் நடித்தார்.

    டைரக்டர் ஸ்ரீதரின் "இளமை ஊஞ்சலாடுகிறது'' படத்தில் கமல் ஜோடியாக ஜெயசித்ரா நடித்தார். இந்த சமயத்தில், தெலுங்கு படதயாரிப்பாளர் ராமாநாயுடு மூலம் "சோகாடு'' என்ற படம் மூலம் சோபன்பாபுக்கு ஜோடியாக தெலுங்கில் நடிக்கத்தொடங்கினார்.

    ஜெயசித்ராவின் திருமணம் 1983-ல் நடந்தது. கணவர் பெயர் கணேஷ். இவர் தொழில் அதிபர்.
    ×