தொழில்நுட்பச் செய்திகள்
மே 11 முதல் இதை செய்யவே முடியாது.. கூகுள் எடுக்க இருக்கும் அதிரடி நடவடிக்கை!
கூகுள் நிறுவனம் கால் ரெக்காடிங் சேவையை வழங்கும் மூன்றாம் தரப்பு செயலிகளுக்கான ஆதரவை திரும்ப பெற இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஆண்ட்ராய்டு சாதனங்களில் கால் ரெக்காடிங் சேவையை வழங்கி வரும் மூன்றாம் தரப்பு செயலிகளை நீக்க கூகுள் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இந்த நடவடிக்கை மே 11 ஆம் தேதி முதல் அமலுக்கு வர இருப்பதாகவும் கூறப்படுகிறது. கூகுள் பிளே ஸ்டோரில் மேற்கொள்ளப்பட்டு இருக்கும் புது மாற்றம், ஆண்ட்ராய்டு தளத்தில் கால் ரெக்காடிங் வசதியை நீக்கி விடும்.
இதன் காரணமாக பிளே ஸ்டோரில் உள்ள செயலிகளால், கால் ரெக்காடிங் சேவையை வழங்கும் API-க்களை இயக்க அனுமதிக்கப்பட மாட்டாது. அந்த வகையில், மே 11, 2022 ஆம் தேதி முதல் பில்ட்-இன் கால் ரெக்காடர் வசதி இல்லாத ஆண்ட்ராய்டு சாதனங்களில் பயனர்களால் கால் ரெக்காடிங் அம்சத்தை பயன்படுத்த முடியாது. புதிய மாற்றங்கள் மூன்றாம் தரப்பு கால் ரெக்காடிங் செயலிகளுக்கு மட்டுமே பொருந்தும்.
இது தவிர வழக்கமான கால் ரெக்காடிங் அம்சம் எவ்வித இடையூறும் இன்றி இயங்கும். இதனால், ஸ்மார்ட்போனில் பில்ட்-இன் வாய்ஸ் ரெக்காடர் உள்ள பயனர்களால் தொடர்ந்து இந்த அம்சத்தை இயக்க முடியும். Mi, சில சாம்சங் மற்றும் கூகுள் பிக்சல் ஸ்மார்ட்போன் மாடல்களில் கால் ரெக்காடிங் சேவை தானாக செயல்படுத்தப்பட்டு இருக்கிறது.
சமீப காலங்களில் கூகுள் நிறுவனம் கால் ரெக்காடிங் சேவைகளை ஆண்ட்ராய்டு சாதனங்களில் இருந்து நீக்கும் நடவடிக்கைகளில் ஆர்வம் செலுத்தி வருகிறது. ஆண்ட்ராய்டு 6 தளத்தில் ரியல்-டைம் கால் ரெக்காடிங் வசதியை நிறுத்தியது. பின் ஆண்ட்ராய்டு 10 வெர்ஷனில் மைக்ரோபோன் மூலம் கால் ரெக்காடிங் வசதியை கட்டுப்படுத்தியது.