தொழில்நுட்பம்
வாட்ஸ்அப்பில் அப்படி செய்தால் சட்டப்படி நடவடிக்கை எடுப்போம்
வாட்ஸ்அப் செயலியில் இனி அப்படி செய்தால் சட்டப்படி நடவடிக்கை எடுப்போம் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
வாட்ஸ்அப் செயலியில் அதிகப்படியான குறுந்தகவல்களை அனுப்பினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். ஃபேஸ்புக்கின் குறுந்தகவல் செயலியான வாட்ஸ்அப் அதிகப்படியான குறுந்தகவல்களை அனுப்பும் தனிநபர் மற்றும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப் போவதாக அறிவித்துள்ளது.
விதிமுறைகளை மீறும் வாடிக்கையாளர்களை வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்த விடாமல் அவர்கள் மீது தடை விதிக்க முடியும். இந்நிலையில், விதிகளை மீறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க இருப்பதாக வாட்ஸ்அப் தற்சமயம் அறிவித்துள்ளது.
தானியங்கி முறையில் குறுந்தகவல் அனுப்புவது மற்றும் அதிகப்படியான குறுந்தகவல்களை அனுப்புவோர் மற்றும் இவ்வாறு செய்ய உதவுவோர் சட்டப்படி நடவடிக்கைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். தற்சமயம் அறிவிப்பு வெளியாகி இருக்கும் நிலையில், டிசம்பர் 7 ஆம் தேதிக்கு பின் விதிகளை மீறுவோர் வாட்ஸ்அப் மூலம் சட்டப்படி நடவடிக்கைகளை சந்திக்க நேரிடும்.
உலகம் முழுக்க பல கோடி பேர் பயன்படுத்தும் செயலியாக வாட்ஸ்அப் இருக்கிறது. இந்தியாவில் மட்டும் சுமார் 25 கோடி பேர் வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்தி வருகின்றனர். வாட்ஸ்அப் செயலி அதிகளவு மற்றும் தானியங்கி முறையில் குறுந்தகவல்களை அனுப்புவதற்காக உருவாக்கப்படவில்லை. இவ்வாறு செய்வது வாட்ஸ்அப் விதிகளுக்கு எதிரானது ஆகும்.
2019, டிசம்பர் 7 ஆம் தேதி முதல் வாட்ஸ்அப் செயலியின் விதிகளை மீறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். வாட்ஸ்அப் விதிகளை மீறும் அக்கவுண்ட்களை கண்டறியும் வழிமுறைகளை மேம்படுத்தி இருக்கிறோம்.
மக்கள் வாட்ஸ்அப் செயலியை கொண்டு வியாபாரங்களுக்கு தொடர்பு கொள்ள நினைத்தனர். இதன் காரணமாகவே வாட்ஸ்அப் பிஸ்னஸ் செயலி துவங்கப்பட்டது. இதுதவிர வாட்ஸ்அப் செயலியில் தொடர்ந்து மாற்றங்கள் மேற்கொள்ளப்படும் என வாட்ஸ்அப் செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.