தொழில்நுட்பம்
31 ஜி.பி. டேட்டா வழங்கும் பி.எஸ்.என்.எல். புதிய சலுகை
பி.எஸ்.என்.எல். நிறுவன போஸ்ட்பெயிட் பயனர்களுக்கு 31 ஜி.பி. டேட்டா வழங்கும் புதிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. #offer
பி.எஸ்.என்.எல். நிறுவன போஸ்ட்பெயிட் பயனர்களுக்கு புதிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. ரூ.299 விலையில் அறிவிக்கப்பட்டு இருக்கும் புதிய பி.எஸ்.என்.எல். சலுகையில் பயனர்களுக்கு 31 ஜிபி டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்.எம்.எஸ். போன்றவை வழங்கப்படுகிறது.
புதிய பி.எஸ்.என்.எல். சலுகை ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் நிறுவனங்கள் வழங்கி வரும் ரூ.299 போஸ்ட்பெயிட் சலுகைக்கு போட்டியாக அமைகிறது. முன்னதாக பி.எஸ்.என்.எல். நிறுவன பயனர்களுக்கு ஆட்-ஆன் சலுகைகள் அறிவிக்கப்பட்டது. இதில் பயனர்கள் மாதாந்திர டேட்டாவை பயன்படுத்தி முடித்து இருந்தாலும், அதிவேக டேட்டாவை வழங்குகிறது.
பி.எஸ்.என்.எல். ரூ.299 சலுகை முதல் முறையாக பி.எஸ்.என்.எல். சேவையில் இணையும் பயனர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. அந்த வகையில், ஏற்கனவே பி.எஸ்.என்.எல். சலுகையை பயன்படுத்தி வருவோருக்கு புதிய சலுகையை பயன்படுத்த முடியாது. மாதம் 31 ஜிபி டேட்டா வழங்கும் புதிய சலுகையில், அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் மும்பை மற்றும் டெல்லி வட்டாரங்களில் பொருந்தாது.
நிர்ணயிக்கப்பட்ட டேட்டா பயன்படுத்தியதும், டேட்டா வேகம் நொடிக்கு 80 கே.பி.யாக குறைந்து விடும். எனினும் பயனர்கள் கூடுதலாக பயன்படுத்தும் டேட்டாவிற்கு கூடுதல் கட்டணத்தை செலுத்த வேண்டி இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இத்துடன் பயன்படுத்தாமல் இருக்கும் டேட்டாவை அடுத்த மாதத்திற்கு பயன்படுத்தும் வசதி வழங்கப்படவில்லை.
ஜியோ வழங்கும் ரூ.199 போஸ்ட்பெயிட் சலுகையில் பயனர்களுக்கு மாதம் 25 ஜி.பி. டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், 100 எஸ்.எம்.எஸ். மற்றும் ஜியோ செயலிகளை பயன்படுத்துவதற்கான சந்தா உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. இத்துடன் பயனர்கள் கூடுதலாக 500 ஜி.பி. டேட்டாவினை ஜி.பி. ஒன்றுக்கு ரூ.20 கட்டணம் செலுத்தி பெற முடியும்.