தொழில்நுட்பம்

சுரங்க ரெயில் நிலையங்களில் செல்போன் சேவை வசதி ‘ஜியோ’ நிறுவனம் தொடங்கியது

Published On 2018-08-21 15:44 IST   |   Update On 2018-08-21 15:44:00 IST
சென்னை சுரங்க ரெயில் நிலையங்களில் செல்போன் சேவை வசதியை ரிலையன்ஸ் ஜியோ துவங்கி இருக்கிறது. இதுகுறித்த முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். #Jio


மெட்ரோ சுரங்க ரெயில் நிலையங்களில் செல்போன் சேவை வசதியை ‘ஜியோ’ நிறுவனம் தொடங்கியது.

சென்னை மாநகர போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காகவும் விரைவு பயணத்துக்காகவும் மெட்ரோ ரெயில் திட்டம் உருவாக்கப்பட்டது. கோயம்பேடு-ஆலந்தூர், சின்னமலை- விமான நிலையம் வரை உயர் மட்ட பாதை யிலும், திரு மங்கலம்- சென்ட்ரல், சைதாப்பேட்டை- டி.எம்.எஸ். வரை சுரங்கப் பாதையிலம் மெட்ரோ ரெயில் சேவை பயன்படுத்தப்படுகிறது.

சுரங்க ரெயில்களில் பூமிக் கடியில் பயணம் செய்யும் போது பயணிகளுக்கு செல் போன் சேவை கிடைக்காமல் இருந்து வந்தது. இதனால் மெட்ரோ ரெயில் பயணிகள் அவதிப்பட்டு வந்தனர். இதுகுறித்து மெட்ரோ ரெயில் நிர்வாகம் செல்போன் நிறுவனங்களிடம் ஆலோசனை நடத்தியது.

இந்த நிலையில் திருமங்கலம் - நேரு பூங்கா வரையிலான 7.6 கிலோ மீட்டர் தூரம் உள்ள சுரங்க ரெயில் பாதைகளில் முதன் முதலாக பயணிகளுக்கு தடையின்றி செல்போன் சேவையை வழங்குவதற்காக ஜியோ நிறுவனம் நவீன கருவிகளை அமைத்து உள்ளது.

இதன் மூலம் ஜியோ நிறுவன வாடிக்கையாளர்களுக்கு செல்போன் சேவை வசதி தங்கு தடையின்றி கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.



இதுகுறித்து மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

திருமங்கலம்- நேரு பூங்கா வரை உள்ள 7.6 கி.மீட்டர் தூர சுரங்க மெட்ரோ ரெயில் பாதைகளில் பயணிகள் வசதிக்காக ஜியோ நிறுவனம் முதன் முதலில் செல்போன் சேவை வசதியை தொடங்கி உள்ளது.

ஏர்டெல், வோடபோன் உள்பட மற்ற செல்போன் நிறுவனங்களின் சேவை விரைவில் தொடங்கப்பட உள்ளது. நேரு பூங்கா- சென்ட்ரல், சைதாப் பேட்டை- டி.எம்.எஸ். வரை உள்ள சுரங்க மெட்ரோ பாதைகளில் 3 மாதங்களில் செல்போன் சேவை வசதி தொடங்கப்படும்.

இந்த ஆண்டு இறுதியில் டி.எம்.எஸ்.- அரசினர் தோட்டம், சென்ட்ரல்- வண் ணாரப்பேட்டை வழித்தட பாதையில் மெட்ரோ ரெயில் இயக்கப்பட உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News