தொழில்நுட்பம்
செயலிகளுக்கு செக் வைக்கும் ஆண்ட்ராய்டு பி
ஆண்ட்ராய்டு பி இயங்குதளத்தில் பேக்கிரவுண்டில் இயங்கும் செயலிகள் கேமரா மற்றும் மைக்ரோபோன் பயன்படுத்த முடியாது என டெவலப்பர்கள் தெரிவித்துள்ளனர்.
புதுடெல்லி:
ஆண்ட்ராய்டு பி இயங்குதளத்தில் ஸ்மார்ட்போனின் பேக்கிரவுண்டில் இயங்கும் செயலிகள் கேமரா மற்றும் மைக்ரோபோன்களை பயன்படுத்த முடியாது என எக்ஸ்.டி.ஏ. டெவலப்பர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கான குறியீடுகளை சமீபத்தில் கண்டறிந்ததாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
புதிய முடிவு ஆண்ட்ராய்டு இயங்குதளத்தின் பாதுகாப்பை மேலும் பலப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆண்ட்ராய்டு இங்குதள பாதுகாப்பு விவகாரத்தில் அதிக கவனம் செலுத்தி வரும் கூகுள் தீங்கு விளைவிக்கும் செயலிகள் மீது ஒவ்வொரு மாதமும் நடவடிக்கை எடுத்து வருகிறது.
சமீபத்தில் கோஸ்ட்கணட்ரோல் (GhostCtrl) என்ற ஆண்ட்ராய்டு மால்வேர் கண்டறியப்பட்டது. இந்த மால்வேர் ஆடியோ மற்றும் வீடியோக்களை சத்தமில்லாமல் ரெக்கார்டு செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஜனவரி 19-ம் தேதி ஆண்ட்ராய்டு ஓபன் சோர்ஸ் திட்டத்தின் கமிட் குறியீடுகளில் ஆண்ட்ராய்டு பி இயங்குதளத்தில் வழங்கப்பட இருக்கும் பாதுகாப்பு அம்சம் குறித்த குறியீடுகள் இடம்பெற்று இருந்தது.
இந்த அம்சம் பேக்கிரவுண்டில் இயங்கும் செயலிகள் கேமராவை இயக்க முற்படும் பட்சத்தில் பிழை ஏற்படுத்தும் வகையில் கோடிங் செய்யப்பட்டுள்ளது. புதிய பாதுகாப்பு அம்சம் வரவேற்கக்கூடியதாக இருந்தாலும், சில சமயங்களில் சீரழிவை ஏற்படுத்தலாம் என்றும் கூறப்படுகிறது.
ஸ்மார்ட்போனின் கேமரா சத்தமில்லாமல் இயங்குவதை வாடிக்கையாளர்களுக்கு தெரியாமல் செய்ய முடியும் பட்சத்தில், சில ஆண்டி தெஃப்ட் செயலிகள் வாடிக்கையாளர்கள் விரும்பும் போது ஸ்மார்ட்போனினை திருடுவோரின் புகைப்படங்களை செல்ஃபி கேமரா மூலம் படம் பிடித்து கொடுக்கின்றன. ஆண்ட்ராய்டு பி இயங்குதளத்தில் வழங்கப்பட இருக்கும் பாதுகாப்பு அம்சங்கள் இதுபோன்ற ஆப்ஷன்களை பயனற்றதாக்கும்.