வழிபாடு

தோஷம் நீக்கும் மச்ச அவதார பெருமாள்

Published On 2026-02-24 11:15 IST   |   Update On 2026-02-24 11:15:00 IST
  • அடுத்த 5 அவதாரங்களும் மனிதனின் படிவளர்ச்சியை விவரிக்கின்றன.
  • மீனராசியின் ராசிஅதிபதி குரு பகவான் ஆவார்.

மச்ச அவதாரப் பெருமாளை வணங்கினால் நினைத்த காரியம் நிறைவேறும் என்பது நம்பிக்கை. உலகில் அதர்மம் அதிகமாகும் பொழுது தர்மத்தினை நிலைநாட்டுவதற்காக திருமால் அவதாரம் எடுக்கிறார். எண்ணற்ற அவதாரங்களை திருமால் எடுத்திருந்தாலும் மச்ச அவதாரம், கூர்ம அவதாரம், வராக அவதாரம், நரசிம்ம அவதாரம், வாமண அவதாரம், பரசுராம அவதாரம், ராம அவதாரம், பலராம அவதாரம், கிருஷ்ண அவதாரம், கல்கி அவதாரம் என்ற 10 அவதாரங்கள் மட்டும் தசவதாரங்கள் என்று பெருமையாக அழைக்கப்படுகின்றன.

இந்த அவதாரங்களை சற்று உற்றுநோக்கும் போது, இதில் ஒளிந்திருக்கும் பரிணாமக் கொள்கையை அறிய இயலும். டார்வினின் பரிணாம வளர்ச்சி கொள்கை உயிரிகளில் இருந்து மனிதன் தோன்றியதோடு நின்று விடுகிறது.

அதன் பிறகு மனிதனின் பரிணாமம் தொடங்குகிறது. தசவதாரத்தின் முதல் 5 அவதாரங்கள் உயிர்களில் இருந்து மனிதனாக மாற்றம் அடைந்ததை விவரிக்கின்றன. அடுத்த 5 அவதாரங்களும் மனிதனின் படிவளர்ச்சியை விவரிக்கின்றன. மச்ச அவதாரம் (மீன் நீர் வாழ்வன) பிரளய காலத்தில் மீனாக திருமால் அவதாரம் எடுத்து வேதங்களை அபகரித்துக் கொண்டு போய் கடலில் ஒளித்து வைத்திருந்த சோமுகாசுரனைக் கொன்று அழித்து வேதங்களை காப்பாற்றியதாக புராணம் கூறுகிறது.

ஜோதிடர்கள் வேதத்தை மறைஎன்றும் கூறுவார்கள். எனவேதான் வேதத்திற்கும், மீன ராசிக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. கால புருஷ ராசியில் பன்னிரெண்டாமிடமாகிய மறைவு ஸ்தானத்தை குறிக்கும் மீன லக்ன ராசிகாரர்கள் வேதத்திலோ அல்லது வேதத்தின் கண்கள் என போற்றப்படும் ேஜாதிடத்திலோ சிறந்து விளங்குவார்கள்.

மீனராசியின் ராசிஅதிபதி குரு பகவான் ஆவார். இது கால புருஷனின் அங்க அமைப்பில் இரண்டு பாதங்களையும் குறிக்கும் நான்காவது உபய ராசியாகும். பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி நட்சத்திரத்தின் 4-ம் பாதங்களும் மீன ராசிக்குரியவையாகும். சம ராசியான இது பகலில் வலுப்பெற்றதாகும். எந்த கிரகத்தாலும் மீன ராசியில் பிறந்தவர்கள் பாதிப்படைவதில்லை. அதிர்ஷ்ட காற்று எப்பொழுதும் இவர்கள் பக்கம் வீசிக் கொண்டே தானிருக்கும். குரு பகவான் மீன லக்னத்தில் பிறந்தவர்களுக்கு லக்னாதிபதி குரு பகவானே பத்தாம் அதிபதியாகவும் இருப்பது சிறப்பாகும். 10-ம் அதிபதி குரு பகவான் ஆட்சி உச்சம்பெற்று பலமாக அமைந்துவிட்டால் செல்வம், செல்வாக்கு, சமுதாயத்தில் கவுரவமான பதவியினை அடையும் யோகம் உண்டாகும். அது மட்டுமின்றி மற்றவர்களுக்கு ஆலோசனை கூறுவதில் வல்லவராகவும் வழி நடத்துவதில் கைதேர்ந்தவர்களாகவும் இருப்பார்கள்.

பேச்சால், வாக்கால் சம்பாதிக்கும் யோகம், ஆசிரியர் பணி, கல்வி நிறுவனங்களில் பணிபுரியக்கூடிய வாய்ப்பு, வங்கிப் பணி போன்றவை சிறப்பாக அமையும். 10-ல் குரு, புதன் சேர்க்கை பெற்றாலும் மேற்கூறிய பலன்களே உண்டாகும். மீனராசி லக்னம் குருவின் ஆதிக்கம் பெற்ற ராசியாகும்.

வேதம் ஓதும் ஆந்தணர்கள் சாஸ்திர பண்டிதர்கள், வேதியர்கள், அர்சகர்கள், ஆசிரியர்கள் ஜோதிடர்கள் இவர்களுக்கெல்லாம் காரக கிரகம் குரு பகவான் ஆகும்.

மீன் சந்திரனின் ஆதிக்கம் பெற்ற நீர்வாழ் உயிரினமாகும். அத்தகைய மீன ராசியில் சந்திரன் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிரவேசிக்கும் தினமே மச்ச அவதார மூர்த்தியான மத்ஸ்ய ஜெயந்தியாகும். அந்த காலக்கட்டம் மீன்களின் இனபெருக்க காலம் என்பது குறிப்பிடத்தக்கது. வேத நாராயண பெருமாள் இந்த மத்ஸ்ய ஜெயந்தி வேதம் நாளில் ஓதும் வேதியர்கள், அந்தணர்கள், ேஜாதிடர்கள், ஆசிரியர்கள் மற்றும் மீனவர்கள் மீனை உண்பவர்கள் அனைவரும் ஆதி திருவரங்கத்தில் உள்ள ரங்கநாத பெருமாளை வணங்க சாபங்களும், தோஷங்களும் நீங்கி உயர்வு ஏற்படும்.

Tags:    

Similar News