கோவிலில் வழிபடும் முறை: தெரிந்து கொள்ள வேண்டியவை!
- நவக்கிரக மண்டபத்தையும் வலம் வர வேண்டும்.
- கொடி மரத்தின் முன்பாக கீழே விழுந்து வணங்க வேண்டும்.
கோவிலுக்கு சென்று சுவாமியை வழிபடும்போது, பல விதிமுறைகள் இருக்கின்றன. கோவில்கள் அனைத்தும் ஆகம விதிப்படி கட்டப்பட்டது என்பதால் ஆகமவிதிப்படி கடைப்பிடிக்கப்படும் சில நியமங்களை கண்டிப்பாக கடைபிடித்தே ஆக வேண்டும். அதன்படி,
* கோவிலுக்குச் செல்வதற்கு முன் குளித்து, சுத்தமான ஆடைகளை அணிய வேண்டும். உடல் தூய்மையுடன் மனத் தூய்மையும் அவசியம்.
* வெறுங்கையுடன் கோவிலுக்குச் செல்லாமல், பூக்கள், பழங்கள், தேங்காய் அல்லது அபிஷேகப் பொருட்கள் போன்றவற்றை இயன்ற அளவில் எடுத்துச் செல்வது நல்லது.
* கோவிலுக்குள் சென்றதும், முதலில் கோபுர தரிசனம் செய்த பிறகு விநாயகரை வணங்கி செல்ல வேண்டும்.
* கொடிமரம், பலி பீடம், நந்தி ஆகியவற்றை வணங்கிய பிறகே சுவாமி தரிசனம் செய்ய வேண்டும்.
* சுவாமியை தரிசனம் செய்யும்போது, அந்த தெய்வத்துக்குரிய மந்திரம் அல்லது பாடல்களை பாடி வழிபாடு செய்வது நல்லது. பிறகு அம்மன் சன்னதி சென்று அம்பாளை மனதார வணங்க வேண்டும். முருகர், தட்சிணாமூர்த்தி, துர்கை, சண்டிகேஸ்வரர் மற்றும் பரிவார தேவதைகளை வணங்கி பிரகாரத்தை மூன்று முறையாவது வலம் வர வேண்டும். நவக்கிரக மண்டபத்தையும் வலம் வர வேண்டும்.
* திருநீற்றை இரு கைகளாலும் வாங்கி கீழே சிந்தாமல் பூச வேண்டும்.
* கோவில் பிரகாரத்தை வலம் வந்ததும், கொடி மரத்தின் முன்பாக கீழே விழுந்து வணங்க வேண்டும். பின்னர் சிறிது நேரம் மௌனமாக அமர்ந்து அல்லது மனதை ஒருநிலைப்படுத்தி தியானம் செய்த பிறகே கோவிலில் இருந்து செல்ல வேண்டும்.
இந்த வழிமுறைகளைப் பின்பற்றி, முழுமையான பக்தியுடனும், அமைதியான சிந்தனையுடனும் இறைவனை வழிபட்டால், இறையருளைப் பூரணமாகப் பெறலாம்.